6/13/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 92 & 93

பகுதி - 92 (11.06.2009)
ரமேஷின் ஜாதகக் கணிப்பை யதேச்சையாகப் பார்த்த உமா பதட்டத்துடன் அசோக்குக்கு ஃபோன் செய்கிறாள். அசோக்கிடம் சூழ்நிலையை விளக்கி ரமேஷின் ஜாதகத்தைப் பார்த்ததை கூறுகிறாள். கல்யாணத்துக்கு பிறகு அதைப் பார்த்து என்ன பயன் என அசோக் நிதானமாகக் கேட்கிறான். ரமேஷுக்கு தண்ணீரில் கண்டம் எனப் போட்டிருக்கிறது என அவள் பதறுகிறாள். So what என்கிறான் அசோக். அதனால்தான் அவன் தனது பதிவு திருமணத்தில் சாட்சிக் கையெழுத்து போட மறுத்தானா எனவும் அவள் கேட்கிறாள். அப்படியெல்லாம் இல்லை, தனக்கு உள்ளிருந்து வந்த வழிக்காட்டலே அதற்குக் காரணம் என மறுபடியும் கூறும் அசோக் நடப்பது நடந்தே தீரும், எதற்கும் உமா தனது ஆத்துக்காரரிடம் தினமும் மிருத்யுஞ்ச ஜபம் செய்யுமாறு கூறச் சொல்கிறான்.

நாதன் James Hardley Chase எழுதிய No orchids for Miss Blandish என்னும் நாவலை சுவாரசியமாக படித்து கொண்டிருக்கிறார். அப்பக்கமாக வரும் வசுமதி அந்த நாவலைப் பற்றி விசாரிக்கிறாள். ஒரு கோடீஸ்வரர் தனது சொத்தை தன் ஒரே பெண்ணுக்கு எழுதி வைத்து, அவள் மைனர் ஆதலால் அவள் வயதுக்கு வரும்வரை சொத்து நிர்வாகத்துக்காக அறங்காவலர்களை நியமிக்க, அவர்கள் எல்லோருமாக சேர்ந்து அப்பெண்ணை மனநலம் குன்றியவள் என நாடகமாடி, மெண்டல் அசைலத்தில் சேர்த்து விட, பத்து ஆண்டுகள் கழித்து அப்பெண் தப்பிக்க என கதையை தான் படித்த அளவுக்கு நாதன் விளக்குகிறார்.

வசுமதிக்கு இப்போது தனது மகன் தங்களுக்கு பிறகு இவ்வளவு பெரிய சொத்தை எப்படி நிர்வகிக்கப் போகிறான் என்ற கவலை வந்து, நாதனிடம் கூற அவருக்கும் அதே கவலைதான் என தெரிகிறது. அவர் அசோக்கைக் கூப்பிட்டு தங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அவனால் இவ்வளவு பெரிய சொத்தை சமாளிக்க இயலுமா எனக் கேட்க, அவன் இயலும் எனக் கூறிவிடுகிறான். தங்களுக்கு ஏதேனும் ஆகிவிடும் என்பதை கேட்ட பிறகு கூட அவனுக்கு பதட்டம் வரவில்லையா என அவர் திகைப்புடன் கேட்க, தான் பதட்டப்பட்டால் மட்டும் அவர்களுக்கு நடக்கவிருப்பது நடக்காமல் நின்று விடுமா என அசோக் நிதானமாக கேட்கிறான். “நாங்கள் செத்தால் கூட நீ அழமாட்டாய் போலிருக்கே” என வசுமதி பொருமுகிறாள்.

“அந்தம்மா கேட்பது நியாயமாகத்தானே இருக்கு” என சோவின் நண்பர் கேட்கிறார். “அசோக் ஞானப் பாதையில் செல்கிறான். அவனை மாதிரி இருப்பவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என சோ கூறுகிறார். கண்ணன் கீதையில் கூறியதாக அவர் மேலும் பேசுகிறார். அழப்படாதவர்கள், அழப்பட தகுதியில்லாதவர்கள் ஆகியோருக்கெல்லாம் அழுது என்ன பயன்? ஆத்மா அழிவில்லாதது. நைந்த உடைகளை களைந்து நாம் புது ஆடை உடுத்தும்போது நாம் எப்படி வருந்துவதில்லையோ, அதே போலத்தான் ஆத்மாவும் ஓருடலை விட்டு இன்னோர் உடலுக்கு செல்லும்போது வருந்துவதில்லை.

“எங்களுக்கு பிறகு நீ சொத்தை எவ்வாறு நிர்வகிப்பாய்”? என நாதன் வெளிப்படையாகவே கேட்க, அத்தனை சொத்தையும் முதலில் விற்றுவிட்டு, தனது ஜீவனத்துக்காக சிறுதொகையை ஒதுக்கி வைத்து கொண்டு, மீதி பணத்தை வங்கியில் போட்டு, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் ஒரு வேதபாடசாலை ஸ்தாபிக்கப் போவதாக கூறி விட்டு, அசோக் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான்.

That Nathan and Vasumathi are indignant, can only be an understatement!

சோபனா தனது டூ வீலரில் வர, வழியில் ஜயந்தியுடன் தற்செயலான சந்திப்பு நிகழ்கிறது. தங்கள் வீட்டுக்கு வருமாறு ஜயந்தி அவளை அழைக்க, அவள் வீடுவரை வரும் சோபனா அவர்கள் வீட்டிற்குள் தான் வந்தால் தனது தந்தை நடேச முதலியார் கோபிப்பார் என தயங்கி வர மறுத்து அப்பால் செல்கிறாள். பிறகு மனம் மாறி வீட்டுக்குள் வருகிறாள். மைத்துனரின் மகள் தங்கள் வீடு தேடி வந்தது பற்றி ஜயந்தியின் மாமியார் ஸ்ரீமதி மகிழ்ச்சி தெரிவிக்கிறாள். தங்கள் மகனது திருமணத்துக்கு சோபனாவும் பார்வதியுமாவது வந்திருக்கலாம் என ஆதங்கப்படும் சிகாமணியிடம் சோபனா தானும் பார்வதியும் கல்யாணத்துக்கு வந்து, தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே சாப்பிட்டுப் போனதை தெரிவிக்கிறாள். சிகாமணிக்கு மகிழ்ச்சி. அவள் விடை பெற்று செல்லும்போது ஜயந்தி அன்புடன் தனது குட்டி நாத்தனாரை கட்டியணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்ப, சோபனா நெகிழ்ச்சியுடன் செல்கிறாள்.

சங்கர வேதபாடசாலையில் அசோக்கும் சாம்பு சாஸ்திரிகளும் பேசுகின்றனர். தான் உதவி செய்யும் பையனின் ஹாஸ்டல் கட்டணத்தை இப்போதுதான் கட்டிவிட்டு வருவதாக சாம்பு சாஸ்திரிகள் கூறுகிறார். “யார் உபயம்”? என அசோக் கேட்க, தனது சம்பந்திதான் (பிரியாவின் தந்தை) எனக் கூறுகிறார். மேலும் தான் அசோக்கிடம் வேதபாடசாலை பற்றிக் கூறியதற்காக தன்னை நாதன் கண்டித்தார் எனவும் கூறுகிறார். நல்ல காரியத்துக்கு உதவ தனது பெற்றோருக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை என அசோக் கூறிவிடுகிறான். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல வக்கற்ற தான் வேதபாடசாலை எல்லாம் கட்ட ஆசைப்பட்டிருக்கக் கூடாதோ என சாம்பு அவர்கள் குழம்புகிறார். கடவுளே பலரது கனவில் வந்து இந்த இடத்தில் கோவிலைக் கட்டு என ஆணையிட்டு அதே மாதிரி கோவில்களும் கட்டப்பட்டுள்ளதில்லையா என அசோக் கேட்கிறான். அன்னை தெரசா தனது ஆஸ்ரமத்தை கல்கத்தாவில் நிறுவுகையில் அவரிடம் ஐந்து ரூபாய்கள் மட்டுமே இருந்தன என அசோக் கூறுகிறான்.

பேசிக்கொண்டே இருக்கையில் திடீரென அவன் வேத பாடசாலையில் தரையில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை கண்டெடுத்து சாம்பு சாஸ்திரிகளிடம் தருகிறான். இதையே அனானிமஸ் என்னும் பெயர் போட்டு அவர் கொடுத்ததாக முதல் வரவு என வைத்துக் கொள்ள சொல்கிறான். எல்லோரிடமும் டொனேஷன் கேட்கலாம் எனவும் கூறுகிறான். இது தன்னைப் போலவே பரவும் எனவும் கூறுகிறான். சாம்பு சாஸ்திரிகள் மெய்சிலிர்த்து நிற்கிறார்.

நாதனைப் பார்க்க சாம்பு சாஸ்திரிகளின் சம்பந்தியான ஜட்ஜ் ஜகன்னாதன் வருகிறார். ஒரு புது வேதபாடசாலை ஆரம்பிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப் பட்டுள்ளது எனவும், அது சாம்பு சாஸ்திரிகளின் கனவு என்றும், எல்லா முயற்சிக்கும் அடிநாதமாக அசோக்கின் முயற்சி இருக்கிறது என கூற, நாதன் திடுக்கிடுகிறார். இதெல்லாம் அவன் சக்திக்கு மீறிய செயல் என தான் கருதுவதாக நாதன் முனகுகிறார். ஆரம்ப சூரத்தனத்தில் தொடங்கிவிட்டு பாதியில் நிறுத்துவது அபக்கியாதியைத் தானே கொண்டுவரும் எனவும் அவர் எடுத்துரைக்கிறார். ஜட்ஜ் ஜன்னாதனோ அப்படியெல்லாம் இல்லை, வேலைகள் எல்லாம் விறுவிறென நடக்கின்றன என்றும், இந்த வேதபாடசாலை தன்னைத் தானே தத்தெடுத்துக் கொண்டுவிட்டது எனவும், இதுவரை எற்கனவேயே அறுபது லட்சத்துக்கும் மேல் வசூலாகி விட்டது என்றும் கூற நாதன் நிஜமாகவே திடுக்கிடுகிறார்.

அசோக்கின் தந்தையே முதல் டோனராக இருக்கட்டும் எனத் தான் கருதியதாகவும், அம்மாதிரி நன்கொடையெல்லாம் தன் தந்தை தரமாட்டார் என திட்டவட்டமாக கூறியதாலேயே அவரை முதலில் தான் அணுகவில்லை என ஜட்ஜ் கூற நாதனின் சங்கடம் அதிகரிக்கிறது. அப்படியெல்லாம் இல்லை தான் ஏற்கனவே பல சமூக காரியங்களுக்கு உதவி செய்ததுண்டு எனக் கூற, அதெல்லாம் சமூக காரியங்கள், ஆனால் இது தெய்வ காரியம் என நாதனிடம் ஜட்ஜ் கூறுகிறார்.

பலர் ஏற்கனவே கணிசமான தொகைகள் தந்து விட்டதாகவும், நாதனின் போட்டியாளர் ஷாம் சுந்தரே ஐந்து லட்சம் கொடுத்து, இதுவரைக்கும் மிக அதிகம் பணம் கொடுத்த டோனராக திகழ்கிறார் என்றும் கூற, போயும் போயும் ஷாம் சுந்தரே ஐந்து லட்சம் கொடுத்தாரா, அப்படியென்றால் தன் பெயருக்கு ஆறு லட்சம் எழுதிக் கொள்ளுமாறு நாதன் கூற, ஜட்ஜோ ஐந்தே போதுமே என முதலில் தயங்க காரணம் கேட்கிறார் நாதன். எது எப்படியானாலும் தான் கொடுத்ததை நாதன் மிஞ்சக்கூடாது என ஷாம் சுந்தர் தன்னிடம் கேட்டு கொண்டதை அவர் கூற, அதெல்லாம் முடியாது என நாதன் கூறி ஆறு லட்சமே தருவதாகக் கூறி, கூடிய சீக்கிரம் செக் அனுப்புவதாகக் கூறுகிறார். (இதைத்தான் போட்டு வாங்கறது எனக் கூறுவது முரளிமனோகர்).

ஜட்ஜ் அந்தண்டை போனதும் வசுமதி வந்து நாதன் ஆறு லட்சம் கொடுப்பதை எதிர்த்து குய்யோ முறையோ என கூச்சல் போடுகிறாள். வேதத்தை காக்கும் காரியம் என நாதன் சமாதானம் செய்ய, அப்படியென்றால் அசோக் அவ்வளவு கெஞ்சியபோதே ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எதிர்நோக்க இயலாமல் சங்கடத்துடன் அப்பால் செல்கிறார். வசுமதியின் பொருமல் தொடர்கிறது. ஆறு லட்சம் ரூபாய்களுக்கு எவ்வளவு சவரனுக்கு தங்க நகைகள் வாங்கலாம் என நினைக்கும் முகபாவம் அப்போது தென்படுவதாக எனக்குத் தோன்றியது. :)))

பகுதி - 93 (12.06.2009)
சாரியார் வீட்டுக்கு வையாபுரியின் மகன் பெருமாள் வருகிறான். அவன் தனது மகன் என்ற எண்ணத்தில் அவர் வாஞ்சையாக வரவேற்கிறார். வழக்கமே இல்லாமல் அவனை தன்னுடன் ஊஞ்சலில் உட்கார வைக்கிறார். அப்போது அருகில் வரும் மூளை வளர்ச்சி குன்றிய அவரது மகன் பாச்சாவை அவர் அதட்டி விரட்டுகிறார். பெருமாள் சோபனாவை தான் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள்ள நிச்சயம் செய்திருப்பதாகக் கூற அதெல்லாம் வேண்டாம் என அவர் தடுக்கிறார். ஜாதி விட்டு ஜாதியில் திருமணம் வேண்டாம் எனக் கூறுகிறார். என்ன சார் இப்படி மாறிட்டீங்க என பெருமாள் ஆச்சரியத்துடன் கேட்க, நான் மாறவில்லை, நீதான் பிறந்தபோதே மாறிப் போனாய் என மனதுக்குள் புலம்புகிறார். அவரது மனக்குழப்பங்கள் இப்போது வெளிப்படையாகவே தெரிகின்றன.

நீலகண்டனிடம் அசோக் வேதபாடசாலைக்காக நன்கொடை கேட்க அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். வேறு ஏதாவது ஊனமுற்றவர்களுக்கு உதவி, ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கு உதவி, முதியோர்க்குதவி போன்றவற்றுக்கு வேண்டுமானால் உதவி செய்யலாம், இம்மாதிரி வேத விஷயங்களுக்கு தான் செய்ய மாட்டேன் என கூறுகிறார்.

“நீலகண்டன் நம்ம ஆள் சார், அவர் சொன்னவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்பது நியாயம்தானே” என சோவின் நண்பர் அடுக்க, “அவர்களுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டாம் என யாரும் சொல்லவே இல்லையே” என சோ ஆரம்பிக்கிறார். அவற்றை செய்வது இந்து தர்மத்தில் ஊறியுள்ளது. ஆனால் வேத மந்திரங்களும், யாகங்களும் கூட மக்களுக்கு உதவி செய்கின்றன.

சட்டென கட்சி மாறும் நண்பர் உடனே “ஹோமத்தில் வரும் புகை கூடத்தான் உடலுக்கு நல்லது என கேள்விப்பட்டிருக்கிறேன்” எனக் கூற, இம்மாதிரி ரேஷனலைசேஷன்கள் கூட ஏற்கத்தக்கவையில்லை என சோ கூறி, அவர் கட்சி மாறுவதைத் தடுக்கிறார். நம்பிக்கை என்பது ஒன்று இருக்க வேண்டும் இல்லாவிடில் இருக்கக் கூடாது. இம்மாதிரி விளக்கங்கள் எல்லாம் உண்மையான நம்பிக்கையை பலவீனப்படுத்துவதிலேயே முடிவடைகின்றன என்பது தனது சொந்தக் கருத்து எனவும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் அசோக் என்ன கூறினாலும் ஒத்துக் கொள்வதில்லை. ஆகவே அசோக் அப்பால் செல்கிறான். பர்வதம் தனது இரு கைவளையல்களை கழற்றித் தர அசோக் முதலில் மறுக்கிறான். பிறகு பர்வதம் வற்புறுத்த அவற்றை வாங்கிக் கொண்டு, அவளுக்கு அமோக நன்மைகள் விளையும் என அசோக் வாழ்த்துகிறான். பிறகு உமா பற்றி விசாரிக்கிறான். அவள் ஆத்துக்காரர் தன்னுடன் அவ்வப்போது பேசுவதாகவும், மிகவும் நல்ல மனிதர் அவர் என்றும் பேசுகிறான்.

வேதபாடசாலையில் அசோக் அங்குள்ள மாணவர்களிடம் பேசி நன்கொடை வசூல் செய்கிறான். அப்போது வையாபுரியுடன் அங்கு வரும் சிங்காரம் அசோக்கை வையாபுரி பார்க்க விரும்புவதாகக் கூற, அசோக்கும் வருகிறான். அவனுக்கு எதிராக தான் கையெழுத்து வேட்டையாடியது குறித்து வெட்கப்படுவதாக வையாபுரி கூற, அதெல்லாம் முடிந்து போன கதை என அசோக் கூறுகிறான். பிறகு அவன் வேதபாடசாலை விஷயத்தில் இவ்வாறு எல்லோரையும் நன்கொடை கேட்டு அலைவதை தன்னிடம் கூறி நாதன் வருத்தப்பட்டதாகவும், தன்னையும் அவன் அவ்வாறே அணுகக்கூடும் எனக் கூறியதாகவும் சொன்ன வையாபுரி ஆனால் இது வரை அவன் தன்னை அணுகவேயில்லை என்று வியக்கிறார். தான் நன்கொடை தர தீர்மானித்திருப்பதாகவும் ஒரு லட்சம் தன் பெயருக்கு அசோக் எழுதிக் கொள்கிறானா என்றும் கேட்கிறார். ஒரு பைசா கூட தான் அவரிடமிருந்து வாங்குவதாக இல்லை என மிருதுவாக ஆனால் அதெ சமயம் உறுதியாக அசோக் மறுக்கிறான். ஏன் என வையாபுரி கேட்டதற்கு அவரது பணம் பாவ வழியில் சம்பாதிக்கப்பட்டது, அதை நல்ல காரியங்களுக்காக நன்கொடையாகக் கூட வாங்கக்கூடாது என்பதை தெரிவிக்கிறான். நாய் விற்ற காசு குலைக்குமா என்ற வையாபுரியின் கேள்விக்கு, கண்டிப்பாக குலைக்கும் ஆனல் அந்த சத்தம் பலருக்கு கேட்காது என்கிறான். மேலும், அவரிடம் இருக்கும் அடியாட்களுக்கு ஏதேனும் கொடுக்க அப்பணத்தை உபயோகிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து விலகுகிறான். இதுதான் சாக்கு என சிங்காரம் தங்களை போன்றவர்களுக்கு அவர் ஏதாவது தருவாரா என அவரைக் கேட்டு வெறுப்பேற்றுகிறான்.

உமா தன் கணவன் ரமேஷுடன் இணையம் மூலம் பேசுகிறாள். ரமேஷ் வாரயிறுதிக்கு நண்பர்களுடன் ஃப்ளோரிடா போகப் போவதாக கூறுகிறான். பிறகு பேச்சுவாக்கில் அசோக்கிடம் தான் பலமுறை பேசியதாகவும், அவனால் தான் கவரப்பட்டதாகவும் கூறுகிறான். உமா முதலில் அசோக்கை மட்டம் தட்டுவது போல பேச ஆரம்பிக்கிறாள். பிறகு ரமேஷ் தன் கருத்தில் நிலையாக இருப்பது கண்டு சுதாரித்து கொள்கிறாள். அசோக் தனக்கு ஒரு மந்திரத்தை கற்றுத் தந்ததாகக் கூற, மிருத்யுஞ்ச ஜபம்தானே என கேட்கும் உமா ரமேஷுக்கு இருக்கும் தண்ணீரில் கண்டம் குறித்து கவலை தெரிவிக்கிறாள். அவன் கடலில் குளிக்கச் செல்லக் கூடாது என அன்புக் கட்டளை போட, அவனும் ஒத்துக் கொள்கிறான்.


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Anonymous said...

1.அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு விட்டதா?
2.பின் எப்படி ஜெனரல் மோட்டார் போன்ற பெரிய நிறுவனம் கூட?
3.உங்கள் பாஜகவில் என்ன புதுக் குழப்பம்?
4.இனி காங்கிரசுக்கு ஒரே ஆனந்தக் கொண்டாட்டம் தானா?
5.தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் போலுள்ளதே?

வன்பாக்கம் விஜயராகவன் said...

சோ சொல்கிறாற்போல் No orchids for Miss Blandish வின் கதை சுருக்கம் வந்துள்ளது.

ஆனால் அது தவறு என நினைக்கிறேன். அந்த கதையை 30 வருடம் முன் படித்தேன். அதில் ஒரு பெண்ணை ஒரு களவர் கேங்க் கடத்தி கொண்டு போய் விடுகிறார்கள்.ீன்னொரு கேங்க் அவர்களிடமிருந்து அவர்களை கொன்று அப்பெண்ணை கடத்தி விடுகிறது. கடைசியில் போலீசார் எல்லோரையும் சுடுகிறார்கள்.

இந்த கதை Grissom Gang என்ற பிலிமாக வந்தது.

என் நினைவுகள் சரிதான். விகியே (தமிழ் விகி அல்ல) ஊர்ஜிதம்.

http://en.wikipedia.org/wiki/Grissom_Gang


விஜயராகவன்

Anonymous said...

unga commenta inoru sitela pathen sir from there i got ur site irunthalum rombave parati irukinga sir orginal link they copied this video from this site only
http://www.techsatish.net/2009/06/15/enge-bramanan-15-06-09/

Tc

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது