12/07/2008

எனக்கொரு மகன் பிறப்பான்

சமீபத்தில் 1965-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த “பணம் படைத்தவன்” என்னும் படத்தில் வந்தது இப்பாடல். எம்.ஜி.ஆர் படங்களில் வழமையாக இருக்கும் மொக்கையை விட அதிகமான மொக்கையை உள்ளடக்கிய படம் இது. எம்.ஜி.ஆர். நடித்தார் என்ற ஒரு காரணத்துக்காகவே சுமாராக வசூல் தந்த படம். ஆனால் இப்பதிவு அது பற்றியில்லை. பொறு முரளி மனோஹர்! பாடல் இவ்வாறு ஆரம்பிக்கிறது.

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

அதாவது, குழந்தையே இன்னும் பிறக்கவில்லையாம், ஆனால் அதை எவ்வாறு சுயமரியாதையின்றி வளர்க்க வேண்டும் என்ற அக்கறை மட்டும் இப்பாட்டில் தெரிகிறது. இது தமிழகத்தின் சுயமரியாதை பேசும் கட்சியினரின் சாபக்கேடு. தனக்கொரு பாதையை வகுக்காமல் தலைவன் வழியிலே நடக்கும்படி அறிவுறை.

”கடலென புறப்பட்டு வா உடன்பிறப்பே/ரத்தத்தின் ரத்தமே” என்றெல்லாம் உசுப்பி விடுவார்கள், உள்ளூர் ஏஜெண்டுகள் தங்களுக்கு தரும் நிதியில் பாதிக்கு மேல் தத்தம் பெரிய மற்றும் சிறிய வீடுகளுக்கு ரூட் விட்டுக் கொண்டது போக மீதமுள்ள பணத்தில் ஏமாளி தொண்டர்களை பிடித்து லாரியில் ஏற்றி, பிரியாணி மற்றும் ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசையைக் காட்டி ஊர்வலங்களுக்கு அழைத்து வருகின்றனர். கடலெனத் திரண்டு வருமாறு அழைப்பு விடுத்த தலைவர்கள் சௌகரியமாக காலை உணவு, பகல் உணவு வெட்டி விட்டு, மாலை டீ அருந்தியபின்னர் சாவகாசமாக கார்களில் ஏறி வர, அதுவரை காலையிலிருந்து வெய்யிலில் வாடி நிற்கும் ஏமாளி தொண்டர்களை காரில் செல்லும்போதே பார்வையிட்டு கையசைத்து செல்கின்றனர். அவ்வப்போது நடுநடுவே தம் உதவியாளரிடம் அன்று இரவு விருந்துக்கு வரப்போகும் தொழிலதிபரிடமிருந்து வரவேண்டிய காணிக்கைப் பணம் வந்ததா என வினவிக் கொள்கின்றனர். ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து முன்கூட்டியே எடுத்து வந்திருக்கும் உருட்டுக் கட்டை வினியோகங்கள் சரிவர நடக்கின்றனவா என்றும் நிச்சயம் செய்து கொள்கின்றனர். அப்படியே அரசால் தாம் கைது செய்யப்பட்டால் தீக்குளிக்கப் போகும் தொண்டர்கள் யார் என்பதையும் தீர்மானித்து கொள்கின்றனர் (தீக்குளிக்கப் போகும் விஷயம் அந்தத் தொண்டர்களுக்கே தெரியாது என்பது வேறு விஷயம்).

இப்போது இப்பதிவின் நோக்கத்துக்கு வருகிறேன். தொண்டர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் அடிபடுவார்கள் தலைவரின் மகன்/மகள் மந்திரியாவார்கள். இதில் உங்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை, இழப்புகள்தான்.

சமீபத்தில் 1966-ல் விகடனில் ஒரு சிறுகதை படித்தேன். ஒரு சாதாரண நிலையில் உள்ள சிறுவன், படிக்க வைக்கவில்லை அவனை. அவனது தினசரி இயல்பு வாழ்க்கை பற்றிய கதை அது. காலையில் எழுந்ததும் போஸ்டர் ஒட்ட செல்கிறான். 20 போஸ்டர்கள் ஆளும் கட்சியினருக்காக, 20 போஸ்டர்கள் எதிர்க் கட்சியினருக்காக. தனித்தனி பண்டல்கள். தனித் தனி கூலி. அவன் போஸ்டர் ஒட்டும்போது பக்கத்திலேயே போஸ்டர் ஒட்டும் சம்பந்தப்பட்ட இளிச்சவாய் தொண்டர்கள் கையில் ஆளுக்கு 100 போஸ்டர்களுக்கு மேல். கூலி டீக்குக் காட காணாது. இருந்தாலும் கட்சிக் கொள்கைக்காக இலவசமாக உழைக்கக்கூட அவர்கள் தயார் என்னும் நிலையில் அவர்களுக்கே தாங்கள் வஞ்சிக்கப்படுவது தெரியவில்லை.

நம் கதாநாயகன் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாது தன் வேலையை முடித்து விட்டு கறாராக போஸ்டர் ஒட்டிஅதற்கான கூலியை வாங்கிக் கொண்டு நகர்கிறான். மிகத் திறமையாகவும் வேகமாகவும் அவன் அந்த வேலையை செய்வதால் அவன் காசு வாங்கினாலும் அவனைப் பற்றி நல்ல மதிப்பு கட்சிகளின் மேலிடங்களில்.

காலை உணவுக்கு பின்னால் அவன் தட்டி எழுதும் வேலைக்கு செல்கிறான். இதுவும் பணத்துக்குத்தான். மாலை எங்காவது ஊர்வலம் செல்லவேண்டுமென்றால் கைமேல் காசு, வாயில் பிரியாணி இல்லாது எதையும் ஒத்து கொள்வதில்லை. காலப்போக்கில் தனக்கென கோஷ்டி உருவாக்கி கொண்டு ஆள் சேர்த்து கொடுக்கும் வேலையும் செய்கிறான். இவனைப் போல தனது நலன் எது என புரிந்து செயல்படும் சிறுவர்கள்தான் பிற்காலத்தில் உலகையே ஜெயிப்பார்கள் என கதையை முடிக்கிறார்கள்.

அதுவும் உண்மைதான். இப்போதிருக்கும் தலைவர்களில் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் முன்னேற்றத்துக்கு அவர்கள் சாமர்த்தியமே காரணம். ஆனால் தாங்கள் பதவிக்கு வந்து முன்னேறியதும் தமது தொண்டர்கள் இந்த விஷயத்தில் தம்மைக் கொள்ளக்கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனர். ரயில்வே தண்டவாளத்தில் இவர்களுடன் சேர்ந்து தலை கொடுத்தவர்களில் அப்படியே தொண்டர் நிலையிலேயே இருந்து மறைந்தவர்கள் அனேகம். அவர்களிலும் சரியான தருணத்தில் தன்னுணர்வு பெற்று அரசியலே சாக்கடை, தம் குடும்பத்தையே கவனிப்போம் என புத்திசாலித்தனமாக நகர்ந்த சிலரது இடத்துக்கு அவர்களைவிட பன்மடங்கு அதிக எண்ணிக்கையிலுள்ள இளிச்சவாயர்கள் வந்து சேர்வதால் அது வெளியில் தெரிவதில்லை.

ஹிந்தி எதிர்ப்புக்காக தன்னையே கொளுத்திக் கொண்ட சிங்கத்தமிழன் சின்னசாமியின் பெயரைச் சொல்லியே திமுக பதவிக்கு வந்தது. அது வளர்ந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என கிளர்ந்து நிற்கிறது. அந்த சிங்கத்தமிழன் சின்னசாமியின் குடும்பம் பட்ட கஷ்டங்களை நினைவில் இப்போது அவரது குடும்பத்தினர் (அவர்கள் இன்னமும் உயிருடன் இருந்தால்) தவிர வேறு யார் நினைவு கூறுவார்? வைக்கோவை திமுகவிலிருந்து விலக்கிய மொக்கையிலும் மொக்கையான காரணத்துக்காக தீக்குளித்த மடத்தொண்டர்களை பற்றி சிறிதும் எண்ணி கூச்சம் கொள்ளாது அவர் மறுபடியும் கருணாநிதியிடம் உறவு கொள்கிறார். (பிறகு அவர் நன்றாக அவமானப்பட்டபோது நல்லா வேணும் இவருக்கு என்றுதான் தோன்றியதே தவிர பரிதாபமெல்லாம் வரவில்லை என்பது வேறு விஷயம்).

எந்தக் கட்சியானாலும் சரி தந்து நலனை பேணிக் கொள்ளாமல் இருக்காதீர்கள் என்றுதான் எல்லா கட்சிகளிலும் உள்ள அடிமட்டத் தொண்டர்களுக்கு நான் கூறுவேன். இவ்வாறு தன்னலம் பேணுவதில் நிகரற்று விளங்கும் உங்கள் கட்சித் தலைவர்களையே நீங்களும் இந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்பதுதான் எனது ஆலோசனை.

கட்சி என்றுமட்டும் இல்லை. எல்லா இடங்களிலும் நான் சொல்வது பொருந்தும். ஒரு பத்திரிகையாளர், அவர் பெயர் இங்கு வேண்டாம். அவர் நான் இப்பதிவில் குறிப்பிட்ட புத்தகத்தின் தமிழாக்கம் வேண்டும் என விருப்பத்தை எனது நண்பர்கள் மூலம் தெரிவித்ததால் அவரை சந்திக்க முடிவு செய்தேன். சந்தித்தேன். அவர் என்னவென்றால் சாதாரணமாக கமிட்மெண்ட் ஒன்றும் இல்லாது சிறிது நேரம் ஒப்புக்கு இப்புத்தகத்தைப் பற்றி பேசிவிட்டு, தேர்தல் சம்பந்தமாக தான் தயாரித்துவரும் தரவுதளத்தின் டேட்டா எண்ட்ரி வேலையை என் தலையில் கட்டப் பார்த்தார். நானா சிக்குவேன். ஆளைவிடுங்கள் சாமி நேரம் இல்லை எனக் கூறி வழுக்கி வந்து விட்டேன். பிறகு நான் இது பற்றி அவரிடம் எனக்கு இவரது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்த நண்பரிடம் பேசியபோது அவர் தன்னிடமும் இம்மாதிரி வேலை வாங்கியதாகவும் பணம் தரவேண்டும் என்ற நிலை வரும்போது சாக்குப்போக்கு சொல்வதாகவும் கூறினார். நல்ல வேளை நான் தப்பித்தேன் என நினைத்து கொண்டேன். இந்த டேட்டா எண்ட்ரி விஷயத்தால் தான் என்னவோ பெரிய சேவை செய்யப் போவதாக வேறு அவர் கூறிக் கொண்டார். ஆனால் அது உண்மையில்லை. அத்தகவல்கள் அவரது எழுத்து வேலையில் பலவகையில் உபயோகமாக இருக்கப்போகின்றவை. அதில் பணமும் சம்பாதிக்கப் போவதாக இருக்கும். நடுவில் தன்னார்வத்தால் வரும் இளிச்சவாயர்களிடம் ஓசியில் வேலை பெறுவது மட்டுமே குறிக்கோள்.

இப்பதிவை முடிப்பதற்கு முன்னால் ஒரு இசைக்குழுவில் நான் முதலில் கூறிய பாட்டால் பிளவு ஏற்பட்டதைப் பற்றிய துணுக்கை கூறிவிடுகிறேன்.

கேள்வி: ராமு-சோமு இசை இரட்டையர்கள் ஏன் பிரிந்தனர்?

பதில்: ஒரு மெல்லிசைக் கச்சேரி. அதில் ராமு சோமு ஆகிய இருவருமே கையில் கிடார் வைத்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.
ராமு பாடுகிறான் “எனக்கொரு மகன் பிறப்பான்”
சோமு தொடர்கிறான் “அவன் என்னைப் போலவே இருப்பான்”.
ராமு துரத்த, சோமு ஓட என்ற எண்டர்டெயின்மெண்ட் இப்போது ஆரம்பம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

வால்பையன் said...

கட்சியினாலே அடுத்தவன் காசுல மங்களம் பாடுரது தானே

தேவன் மாயம் said...

நானா சிக்குவேன். ஆளைவிடுங்கள் சாமி நேரம் இல்லை எனக் கூறி வழுக்கி வந்து விட்டேன். பிறகு நான் இது பற்றி அவரிடம் எனக்கு இவரது அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தந்த நண்பரிடம் பேசியபோது அவர் தன்னிடமும் இம்மாதிரி வேலை வாங்கியதாகவும் பணம் தரவேண்டும் என்ற நிலை வரும்போது சாக்குப்போக்கு சொல்வதாகவும்

உன்மையிலேயே நீர் கில்லாடிதான்..
.

வெற்றி said...

தாங்கள் கூறிய அத்துனையும் அருமையோ அருமை.தங்களுக்கு எத்தனை அனுபவங்கள்.படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது.தங்களின் நடு நிலை,தற்போது பிரபலமாக இருக்கும் தினப் பத்திரிக்கை ஆகட்டும்,வாரப் பத்திரிக்கை ஆகட்டும்,காண முடிவதில்லை.
தங்களின் எண்ணங்களை பலரை அடைந்து பயன் பெறட்டும்.

வெற்றி said...

//அதாவது, குழந்தையே இன்னும் பிறக்கவில்லையாம், ஆனால் அதை எவ்வாறு சுயமரியாதையின்றி வளர்க்க வேண்டும் என்ற அக்கறை மட்டும் இப்பாட்டில் தெரிகிறது. இது தமிழகத்தின் சுயமரியாதை பேசும் கட்சியினரின் சாபக்கேடு. தனக்கொரு பாதையை வகுக்காமல் தலைவன் வழியிலே நடக்கும்படி அறிவுறை.//

நெத்தியடி.

//அவ்வப்போது நடுநடுவே தம் உதவியாளரிடம் அன்று இரவு விருந்துக்கு வரப்போகும் தொழிலதிபரிடமிருந்து வரவேண்டிய காணிக்கைப் பணம் வந்ததா என வினவிக் கொள்கின்றனர்.//

சரவெடி.

// அப்படியே அரசால் தாம் கைது செய்யப்பட்டால் தீக்குளிக்கப் போகும் தொண்டர்கள் யார் என்பதையும் தீர்மானித்து கொள்கின்றனர் (தீக்குளிக்கப் போகும் விஷயம் அந்தத் தொண்டர்களுக்கே தெரியாது என்பது வேறு விஷயம்). //

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

dondu(#11168674346665545885) said...

//தங்களுக்கு எத்தனை அனுபவங்கள்.படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது.//
என்னை விடுங்கள், பலர் சொல்வதுபோல நான் பொருளாதார வசதிகளுடன் பிறந்தவன். அது ஒன்றும் இல்லாது நீங்கள் அடைந்த மேம்பாடு அல்லவா பிரமிப்புக்குரியது.

எப்போதெல்லாம் நீங்கள் பதிவிடுகிறீர்களோ அது உடனே எனது பிளாக் ரோலரில் தெரிய உடனே அங்கு ஆஜர் ஆகி விடுகிறேனே.

வாழ்க்கையையே முரட்டு வைத்தியமாக கொண்டு செல்கிறீர்கள்.

அனேக ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar's Spot said...

//தொண்டர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். தொண்டர்கள் அடிபடுவார்கள் தலைவரின் மகன்/மகள் மந்திரியாவார்கள். இதில் உங்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை, இழப்புகள்தான்.//


மிக சரியான வரிகள்

enRenRum-anbudan.BALA said...

தலைப்பைப் பார்த்து விட்டு 'என்னமோ நல்ல சமாச்சாரம்' என்று பதிவைத் திறந்தால், உங்களது (usual) 'சாடல்' பதிவு, அப்பீட் ஆகிக் கொள்கிறேன் ;-)

Anonymous said...

த‌ன‌து த‌லைவ‌ன், ஆட்டு ம‌ந்தை தொண்ட‌னுக்கு பிரியாணி கொடுத்து ப‌ல‌ ஆயிர‌ம் கோடி ச‌ம்பாதிப்ப‌து, பிர‌ச்சினை வ‌ந்த்தால் நான் கீழ்சாதிதானே என‌ ஒப்பாரி வைப்ப‌து, கட்சியை குடும்ப‌சொத்தாக்குவ‌து, ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளில் தெளிவ‌ற்ற‌ இர‌ட்டை நிலை வைத்திருப்ப‌து, தீவிர‌வாதத்தை எதிர்க்க‌ தில் இல்லாது 'ம‌த‌சார்பின்மை' பேசுவ‌து, நிருப‌ர் கேட்கும் கேள்விக‌ட்கு நேரிடையாக‌ ப‌தில் சொல்லாது அவ‌ரையே திட்டுவ‌து, வ‌ல்க‌ராக‌ பேசுவ‌து...

இவை அனைத்தும் தெரிந்த்தும், அவ‌ருக்கு ஜால்ரா போடும் உம‌து 'ந‌ண்ப‌ர்' பூத் ஏஜ‌ன்ட் போன்ற‌ ப‌டித்த‌வ‌ர்க‌ள் என்ன‌ ம‌ன‌ நிலையில் அவ்வாறு ந‌ட‌க்கிறார்க‌ள்?

அவ‌ரைத்தான் கேட்க‌வேண்டும் என‌ திரும்ப‌ திரும்ப‌ சொல்ல‌வேண்டாம். சும்மா உள‌ உளாட்டிக்காக‌வாது சொல்லுங்க‌ள்.


விக்ர‌ம்

Anonymous said...

வகுப்புவாதப்பொதுவுடமை (communal socialism) பேசும் கட்சிகளின் கலாச்சாரத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

இந்தக் கட்சித்தொண்டர்கள் சொல்லித் திருந்தும் பக்குவம் இல்லாதவர்கள் (உதாரணம் XXXXX போன்ற மெத்தப்படித்த கட்சித்தொண்டர்கள்). பட்டால் கூட திருந்துவார்களா என்பது சந்தேகமே!

Opponent to Communism

Anonymous said...

//கேள்வி: ராமு-சோமு இசை இரட்டையர்கள் ஏன் பிரிந்தனர்?

பதில்: ஒரு மெல்லிசைக் கச்சேரி. அதில் ராமு சோமு ஆகிய இருவருமே கையில் கிடார் வைத்து பாடிக் கொண்டிருக்கின்றனர்.
ராமு பாடுகிறான் “எனக்கொரு மகன் பிறப்பான்”
சோமு தொடர்கிறான் “அவன் என்னைப் போலவே இருப்பான்”.
ராமு துரத்த, சோமு ஓட என்ற எண்டர்டெயின்மெண்ட் இப்போது ஆரம்பம்.//


இது கற்பனையா

நிகழ்காலத் தொடர்பு உள்ள கிசு கிசுவா

குருவாயுரப்பனுக்கே வெளிச்சம்.

Anonymous said...

எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு தகவல்:-



(எனக்கொரு மகன் பிறப்பான் )

இந்த பாடலை எழுதிய வாலியிடம் ஒரு முறை "நீங்கள் ,நான் ஆணையிட்டால் என்று எழுதினீர்கள் ,அதன் போலவே நான் இன்று முதலமைச்சராகி என் ஆணைகள் நடக்கின்றன ,ஆனால் நீங்கள் எனக்கொரு மகன் பிறப்பான் என்று எழுதினீர்கள், அது நடக்காமலேயே போய் விட்டது"என்று வருந்தினாராம் எம்.ஜி.ஆர்.

Anonymous said...

//இந்தக் கட்சித்தொண்டர்கள் சொல்லித் திருந்தும் பக்குவம் இல்லாதவர்கள் (உதாரணம் XXXXX போன்ற மெத்தப்படித்த கட்சித்தொண்டர்கள்). பட்டால் கூட திருந்துவார்களா என்பது சந்தேகமே!
//

இதில் நிஜ‌ தொண்ட‌ர்க‌ள் 10% இருக்க‌லாம். மீதி 90% பிரியாணி தொண்ட‌ர்க‌ள்தான். த‌லைவ‌னின் ஏஜ‌ன்ட் (ஆள் சேர்க்கும் ஏஜ‌ன்ட்) த‌ரும் பிரியாணி, சாராய‌ம், டீ, ஊர் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு போன்ற‌வ‌ற்றால் சேரும் கூட்ட‌ம்தான் அதிக‌ம். எந்த‌ க‌ட்சி கூப்பிட்டாலும் இந்த் ஜென்ம‌ங்க‌ள் போகும். ஆட்டு ம‌ந்த்தை போன்று லாரியில் சென்று வாழ்க‌ ஒழிக‌ கோஷ‌ம் போட்டு மானாடு ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளில் அங்கேயே 'எல்லாம்' போய் அசிங்க‌ம் செய்து திரும்புவார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேசுக‌ள் ஓட்டு போட்டு ஜெயிக்கும் த‌லைவ‌ரின் ல‌ட்ச‌ண‌ம் எப்ப‌டி இருக்கும்?!! அப்ப‌டித்த்தான் இருக்கும்!!!

இதில் ப‌டித்த‌வ‌க‌ளே (பூத் எஜ‌ன்ட் போன்ற‌வ‌ர்க‌ள்) இப்ப‌டி என்றால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை என்ன‌ சொல்வ‌து?

விக்ர‌ம்

Anonymous said...

Anonymous said...
//இந்தக் கட்சித்தொண்டர்கள் சொல்லித் திருந்தும் பக்குவம் இல்லாதவர்கள் (உதாரணம் XXXXX போன்ற மெத்தப்படித்த கட்சித்தொண்டர்கள்). பட்டால் கூட திருந்துவார்களா என்பது சந்தேகமே!
//

இதில் நிஜ‌ தொண்ட‌ர்க‌ள் 10% இருக்க‌லாம். மீதி 90% பிரியாணி தொண்ட‌ர்க‌ள்தான். த‌லைவ‌னின் ஏஜ‌ன்ட் (ஆள் சேர்க்கும் ஏஜ‌ன்ட்) த‌ரும் பிரியாணி, சாராய‌ம், டீ, ஊர் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு போன்ற‌வ‌ற்றால் சேரும் கூட்ட‌ம்தான் அதிக‌ம். எந்த‌ க‌ட்சி கூப்பிட்டாலும் இந்த் ஜென்ம‌ங்க‌ள் போகும். ஆட்டு ம‌ந்த்தை போன்று லாரியில் சென்று வாழ்க‌ ஒழிக‌ கோஷ‌ம் போட்டு மானாடு ந‌ட‌க்கும் இட‌ங்க‌ளில் அங்கேயே 'எல்லாம்' போய் அசிங்க‌ம் செய்து திரும்புவார்க‌ள். இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேசுக‌ள் ஓட்டு போட்டு ஜெயிக்கும் த‌லைவ‌ரின் ல‌ட்ச‌ண‌ம் எப்ப‌டி இருக்கும்?!! அப்ப‌டித்த்தான் இருக்கும்!!!

இதில் ப‌டித்த‌வ‌க‌ளே (பூத் எஜ‌ன்ட் போன்ற‌வ‌ர்க‌ள்) இப்ப‌டி என்றால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை என்ன‌ சொல்வ‌து?

விக்ர‌ம்




மற்ற கொள்கை இல்லாக் கட்சித் தொண்டர்கள் என்றால் நீங்கள் சொல்வது சரி.
ஆனால் பொது உடைமை கட்சித் தொண்டர்கள் அப்படியல்ல.

100 % கொள்கை மறவர்கள்
100 % குணக் குன்றுகள்
100 % நேர்மையாளர்கள்
100 % உழைப்பாளிகள்

ஆனால் தலைவர்கள் தான் !

போயும் போய் ஆதிக்க உணர்வினை மொத்தக் குத்தகை எடுத்துள்ள,பெரிய முதலாளி அம்மையாரிடம் சில சீட் களுக்காக
பராம்பரியக் கட்சிகளை அடமானம் வைக்கின்றனரே!

வாழவந்தான் said...

ரா.பார்திபனின் 'இவன்' திரைப்படத்தில் வரும்...
'மக்கள் மந்திரிச்சு விட்ட மாதிரி இருக்கிற் வரைக்கும் தான் நீங்க(அரசியல்வாதிகள்) மந்திரியா இருக்க முடியும்'
இந்த வரிகள் தான் நினைவுக்கு வருது

மதிபாலா said...

நல்ல தேவையான பதிவு.

ஏற்றிவிடும் ஏணியாகவே இருந்து பழகிப் போனவன் தமிழன்..

ஆனால் , அத்தகைய நிலை சுயமரியாதைக் கட்சிகளில் மட்டும் இல்லை.காவிக் கட்சியிலும் இருக்கிறது. அதற்கு காரணம் , கட்சி வேறுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளும் சுயநலக் கூட்டமாய் மாறிப் போனதுதான்.

ஆனாலும் ஊறுகாய் மாதிரி நடுநிலையைத் தொட்டுக் கொண்டு திராவிடக் கட்சிகளின் பால் சாடும் தொழில்நுட்பத்தை ஆர்.எஸ்.எஸ் காரர்களே உங்களிடம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அய்யா.....!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது