7/30/2005

அன்புமணி அவர்கள் நல்ல தந்தை

அன்புமணி அவர்கள் நான் ஏற்கனவே கூறியபடி ஒரு நல்லத் தந்தை என்பதை நிரூபிக்கிறார். மிகத் தெளிவாகவே சிந்தித்துள்ளார். தமிழ் வாழ்க என்பதெல்லாம் இளிச்சவாய் தொண்டர்களுக்குத்தான். தனக்கல்ல என்பதை அவர் செயலில் கூறி விட்டார். வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இது அவர்களுக்கு வேண்டாத வேலை என்றுதான் நினைக்கிறேன்.

மிக மிருதுவான வார்த்தைகளை எழுதும் என் நண்பர் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கு கீழ்கண்ட விளக்கம் தன் பதிவில் கொடுத்தார். அதாவது தில்லியில் செயல்படும் D.T.E.A. பள்ளிகள் தரம் வாய்ந்தது இல்லையாம், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.

அதற்கப்புறம் இன்னொரு உண்மையும் வெளிப்பட்டது. அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்தானாமே? இதற்கு என்ன சப்பை கட்டு க்ட்டப் போகிறார் அதே நண்பர் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

மறுபடி கூறுவேன். அன்புமணி தன் பெண்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தது யதார்தத்தை உணர்ந்து செய்தது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் தயவு செய்து தமிழக மக்களுக்கு இது சம்பந்தமாக அறிவுரைகள் கூறாது இருத்தல் நலம்.

அவரோ அவர் தந்தையோ அவ்வாறு அறிவுரை கூறாது இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அப்புறம் அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? ஆகவே தொண்டர்களே, (இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்) உங்கள் தலைவர்கள் கூறும் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ரசியுங்கள். போராட்டம் ஏதேனும் தலைமை செய்தால் அதில் உங்களுக்கு ஏதாவது (பிரியாணியாவது) கிடைக்குமா என்று பாருங்கள். முடிந்தால் வீட்டுக்கு பார்சல் கட்டிக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவரவர் வேலைகளை கவனியுங்கள். இதை செய்யாது பிறகு அழுது புலம்பாதீர்கள். இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

ஜோ/Joe said...

டோண்டு ஐயா,
உங்களுக்கு பிடித்த துக்ளக்-கின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள அன்புமணியின் துணைவியாரின் கடிதத்தை படியுங்கள் .அதோடு அதற்கு தலைப்பு கொடுத்திருக்கும் விதத்தில் சோ(மாரி)த்தனத்தை கொஞ்சம் கவனியுங்கள்.நன்றி!

dondu(#11168674346665545885) said...

தலைப்பில் என்ன தவறை கண்டீர்கள் ஜோ அவர்களே?
"மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்" என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.

சொல்லப்போனால் அன்பு மணி அவர்கள் செய்தது தவறே இல்லை. நான் கூறுவது என்னவென்றால் இதில் மட்டும் தொண்டர்கள் தங்கள் தலைவனைப் பின்பற்ற வேண்டும், அதாவது அவரவர் நலனைப் பார்த்து கொள்ள வேண்டும். அது கூடாது என்று அன்புமணி நினைத்தால் கண்டிக்க வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

//"மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்" என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர்.//

தெய்வமே! கால கொஞ்சம் காட்டுங்க.

மாயவரத்தான் said...

//தெய்வமே! கால கொஞ்சம் காட்டுங்க.//

ஜோ... இந்த டயலாக் நீங்க இடம் மாறி சொல்லிட்டீங்க... ஆக்சுவலா இதை நீங்க ராமதாஸ் & அன்புமணியிடம் சொல்ல வேண்டிய டயலாக்.

dondu(#11168674346665545885) said...

//தெய்வமே! கால கொஞ்சம் காட்டுங்க.//
பக்தா, பக்தி மனதில் இருந்தால் போதும். ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

வணக்கம் டோண்டு அய்யா, இந்த பதிவு தொடர்பான சில விளக்கங்கள் இங்கே

நன்றி

dondu(#11168674346665545885) said...

நன்றி குழலி, அப்பதிவுக்கு பின்னூட்டமிட்டுவிட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போது துக்ளக்கில் வெளியிட்டுள்ள செய்தியைப் பார்ப்போம். தில்லி தமிழ் கழகப் பள்ளி ஆண், பெண் இருபாலரும் படிக்கும் பள்ளி, ஆகவே அவர்களை பெண்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம் என்கிறார் அன்புமணி அவர்களின் மனைவி.

ஆனாலும் தமிழ் படிக்க விசேஷ அனுமதி பெற்றார்களாம். லோதி எஸ்டேட்டில் உள்ள தமிழ்பள்ளியில் தமிழ் வகுப்புக்கு மட்டும் செல்வார்களாம். இப்போது மட்டும் அதே பள்ளிக்கு செல்லலாமா?

இதில் பல விஷயங்கள் புலப்படுகின்றன. தான் மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை வைத்து தன் குழந்தைகளுக்கு சலுகை பெற்றிருக்கிறார் மந்திரி. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இது கூட ஒரு கண் துடைப்பே என்றுதான் படுகிறது. சர்ச்சை கிளம்பி இவ்வளவு நாட்களுக்கு பிறகு இந்த செய்தி வருவது அதன் நம்பகத்தன்மையை குலைக்கிறது.

ஜயா டி.வி.யில் வெளியான பேட்டியில் மேட்டர் டே பள்ளியில் தமிழ் கற்று தருகிறார்கள் என்று சான்றிதழ் பெற்று தரட்டுமா என்று எரிச்சலுடன் நிருபரைக் கேட்டார் அன்புமணி அவர்கள். உடனே ஜயா டி.வி. நிருபர் அதே பள்ளியில் இருந்த மற்ற குழந்தைகளை பேட்டியெடுக்க, தமிழ் அப்பள்ளியில் கிடையாது என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டனர்.

இதுதான் ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறுவதோ?

ஆகவே கட்சித் தொண்டர்களே, அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள். ஓட்டு அரசியல் பண்ணும் தலைவர்களின் கோமாளித்தனத்தை ரசிப்பதோடு விட்டு விடுங்கள். இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//தான் மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை வைத்து தன் குழந்தைகளுக்கு சலுகை பெற்றிருக்கிறார் மந்திரி. இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.//

இதைப் பற்றி அன்புமணியின் துணைவியார் கூறியுள்ளார், அன்புமணி கடிதம் எழுதியதற்கு இனங்க என்று, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அந்த பள்ளி நிர்வாகத்தின் விருப்பம், மந்திரி என்ற சிறப்பு அந்தஸ்தை கண்டீர், ஒரு கிறித்துவ மிஷினரி பள்ளியில் கடலூரில் நான் படிக்கும் போது இந்தி பாடம் மொழி வகுப்பாக இல்லை, சில மாணவர்கள் தமிழுக்கு பதில் இந்தி படிக்க வேண்டுமென கூறிய போது இந்திக்காக தனியாக ஆசிரியர் அமர்த்த இயலாது, வேண்டுமென்றால் இந்தி படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தி ஆசிரியருக்கான பாதி செலவை ஏற்றுக்கொண்டால் அனுமதிக்கின்றோம் என்றனர்(சில ஆண்டுகளுக்கு முன்), அதை ஏற்றுக்கொண்ட சில பெற்றோர்களின் ஏற்பாட்டில் இந்தி ஒரு மொழிப்பாடமாக சிலரால் படிக்கப்பட்டு வருகின்றது. இது என் வீட்டருகில் இருக்கும் மாணவன்(சிறுவன்) ஒருவனால் தெரியவந்தது ஏனெனில் அவனும் அங்கே இந்தி தான் படித்தான், இது மாதிரியான சில அனுமதிகள் மந்திரிக்கு மட்டுமல்ல நிர்வாகம் அனுமதிதால் அனைவருக்கும் கிடைக்கும்....

மற்றுமொரு உதாரணம், எங்கள் கல்லூரி இறுதியாண்டில் விருப்ப பாடமாக AI (Artificial Intelligence) படிக்க எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் சிலர் விரும்பினர் அதற்கு ஆசிரியர் இல்லை என்பதால் நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று அனுமதியளித்தனர், இதே கதைதான் mechatronics விருப்ப பாடமாக படிக்க விரும்பிய சில இயந்திரவியல் துறை மாணவர்களுக்கும் அனுமதியளித்தது என் கல்லூரி நிர்வாகம்.

இவர்களெல்லாம் மந்திரியின் மகன்களா?

மற்ற பிரபலங்களின் குழந்தைகள் DTEA பள்ளியில் படித்தால் அன்புமணி குழந்தைகளும் அங்கே படிக்க வேண்டும் என்பதன் நியாயமென்ன?

dondu(#11168674346665545885) said...

"மற்ற பிரபலங்களின் குழந்தைகள் DTEA பள்ளியில் படித்தால் அன்புமணி குழந்தைகளும் அங்கே படிக்க வேண்டும் என்பதன் நியாயமென்ன?"

DTEA பள்ளியில் தரக்குறைவு என்று கூறியதற்கானதுக்கான பதில்தான் இது. இப்பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்கு தமிழிலேயே எல்லா பாடங்களும். ஆகவே நலிந்த வகுப்பினரின் குழந்தைகள் அங்கு படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ஐந்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். ஒரு சிலர் மேலே படிக்கிறார்கள்.

அதனாலேயே இப்பள்ளியின் தரம் குறைந்ததென்று கூறி சில ஸ்னாப்பிஸ்டுகள் தங்கள் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பு வரை வேறு பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அதுவே உண்மை. குழலி அவர்களே, உங்களிடம் அப்பள்ளிகளின் தரத்தைக் குறை கூறிய நண்பர் கூட இதைத்தான் உங்களிடம் காரணமாகக் கூரியிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் தமிழ் சூழலில் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.

அச்சூழலில் தன் குழந்தைகளை படிக்க வைக்காத மந்திரியோ அவர் தந்தையோ தமிழகத்தில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஜல்லியடிப்பது பற்றித்தான் என் பதிவு.

அதில் கூட நான் தெளிவாகத்தான் எழுதினேன். ஜல்லியடிக்காதீர்கள் என்று நான் அன்புமணி அவர்களிடமோ அல்லது அவர் தந்தையிடமோ கேட்கவில்லை. ஜல்லியடிக்காவிட்டால் அவர்கள் பிழைப்பு அரோஹரா என்பது தெரிந்ததுதானே.

அந்த ஜல்லியடிப்பில் மயங்காதீர்கள் என்று தொண்டர்களுக்கு எடுத்துரைதேன். இப்போதும் எடுத்துரைப்பேன்.

அன்பு மணி அவர்கள் போன்று ஒரு நல்ல தந்தையாக இருங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். ஒருவர் கேட்டாலும் அது எனக்கு போதும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதற்கப்புறம் இன்னொரு உண்மையும் வெளிப்பட்டது. அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்தானாமே? இதற்கு என்ன சப்பை கட்டு க்ட்டப் போகிறார் அதே நண்பர் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்."

இன்னும் அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் குழலி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

யாத்ரீகன் said...

காரணங்களால்.. சப்பைக்கட்டும் ஆட்கள் இருப்பதைக்காட்டிலும்.. அதை நடுநிலமை.. என்று கூறுவதுதான்.. வேதனை தருகின்றது..

அவர்கள் பல நல்ல காரியங்களையே செய்து இருக்கட்டும், அது தெரியாமல்.. பலரால் அதிகம் விமர்சிக்கபடுவதனால் கோபப்படுங்கள் , ஆனால்.. அவர்கள் செய்வதையெல்லாம்.. சரி என்று நியாயம் கற்ப்பிக்காதீர்கள்...

dondu(#11168674346665545885) said...

"காரணங்களால்.. சப்பைக்கட்டும் ஆட்கள் இருப்பதைக்காட்டிலும்.. அதை நடுநிலமை.. என்று கூறுவதுதான்.. வேதனை தருகின்றது."

செந்தில் அவர்களே, இந்த வாக்கியத்தை விளக்க முடியுமா? உங்கள் நிலைபாடு புரியவில்லை. தயவு செய்து விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

என்னார் அவர்கள் பதிவில் ராமதாசு அவர்கள் பிரெஸ் மீட்டில் வைத்து பேசியது வந்திருக்கிறது.

பார்க்க: http://merkondar.blogspot.com/2005/08/vs.html

இதற்கு பா.ம.க. ஆதரவாளர்களின் பதிலை அறிய ஆவலாக உள்ளேன்.

ஆகவே கட்சித் தொண்டர்களே, அன்புமணி அவர்கள் போல நல்ல தந்தையாக இருங்கள். ஓட்டு அரசியல் பண்ணும் தலைவர்களின் கோமாளித்தனத்தை ரசிப்பதோடு விட்டு விடுங்கள். இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

வாசகர் கடிதங்களுக்கும் இது உங்கள் இடத்திற்கும் டீ கடை பெஞ்சிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான், எமக்கு தான் அதற்கெல்லாம் நேரமில்லை...

மந்திரி பதவியை வைத்து சலுகை வாங்கினார் என்று குற்றம் சாட்டினீர் தகுந்த பதில் கொடுத்தவுடன் அதை விட்டு விட்டு வேறு கேள்வி,

நிருபரிடம் கடுமையாக நடந்திருந்தால் அதை கண்டிக்க வேண்டியது தான் நிதானமாக பதில் சொல்லவில்லையென்றால் தன் பக்கம் நியாயமே இருந்தாலும் அது வேறு விதமாக திரிக்கப்படும் என்பதில் உண்மை உள்ளது. அதை வலைப்பதிவுகளிலும் பார்த்துள்ளோம், அதை மருத்துவரும் அன்புமணியும் கடைபிடிக்காதது தவறுதான், என்ன செய்வது அவர்களுக்கு நடிக்கத் தெரியவில்லை.

நாக்கில் தேன் தடவுவது போல பேசும் அய்யோக்கியத் தனம் தெரியவில்லை...
அது ஒரு மிகப் பெரிய பலவீனம் அவருக்கு, என்ன செய்வது மற்றவர்களுக்கெல்லாம் செய்தி கொடுக்க வேண்டுமே...

அடுத்ததாக இந்த பத்திரிக்கைகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது கேள்வி கேட்க? எத்தனை பத்திரிக்கைகள் நடுநிலையாக நடக்கின்றன...

தினம் தினம் மருத்துவரையும் பாமக வையும் காழ்ப்புணர்ச்சியோடு கேவலமாக விமர்சிக்கும் பத்திரிக்கைகளுக்கு என்ன மரியாதை தரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்?

//ஓட்டு அரசியல் பண்ணும் தலைவர்களின் கோமாளித்தனத்தை ரசிப்பதோடு விட்டு விடுங்கள். இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்.
//
ஆனாலும் உங்களுக்கு அரசியல் தொண்டர்கள் மேல் உள்ள பாசம் அதிகம், இதே மாதிரி ஏமாறும் வேறு சிலரிடம் இந்த பாசம் இல்லை, அவர்களுக்கெல்லாம் உங்கள் ஆலோசனை இல்லையா?

dondu(#11168674346665545885) said...

"என்ன செய்வது அவர்களுக்கு நடிக்கத் தெரியவில்லை."

அல்ல. தன் பொய் வெளி வந்ததனால் வந்த ஆத்திரமே அது. நான் மறுபடி கூறுவேன், தன்னால் செய்ய முடியாததை ஊராரைச் செய்யச் சொல்லி ஜல்லியடித்து, தேவையானால் படப் பெட்டியை அபகரித்து போனால் உண்மை அவர்களை ஒரு நாள் காலரைப் பிடித்து கேட்கும். அதுவே நடந்தது.

அன்புமணி அவர்களின் குழந்தைகள் தமிழுக்காக செல்வது அதே DTEA பள்ளிக்குத்தானே? தமிழ் மீடியத்தில் நான்காம் வகுப்பு வரை பாடம் சொல்லும் அப்பள்ளியை விடுத்து மேட்டர்டே ஒன்றில்தான் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை சொன்னால் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமோ? அப்படித்தான் கேள்விகள் கேட்பார்கள்.

"மந்திரி பதவியை வைத்து சலுகை வாங்கினார் என்று குற்றம் சாட்டினீர் தகுந்த பதில் கொடுத்தவுடன் அதை விட்டு விட்டு வேறு கேள்வி"
இந்த அனுமதி வாங்கிய விஷயமே ஒரு டேமேஜ் லிமிட் செய்யும் பயிற்சியாகத்தான் எனக்கு படுகிறது. ஆகவே நோ கமன்ட்ஸ்.

"ஆனாலும் உங்களுக்கு அரசியல் தொண்டர்கள் மேல் உள்ள பாசம் அதிகம், இதே மாதிரி ஏமாறும் வேறு சிலரிடம் இந்த பாசம் இல்லை, அவர்களுக்கெல்லாம் உங்கள் ஆலோசனை இல்லையா?"
கண்டிப்பாக உண்டு. அதற்கான பதிவும் போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்.

குழலி / Kuzhali said...

"ஆனாலும் உங்களுக்கு அரசியல் தொண்டர்கள் மேல் உள்ள பாசம் அதிகம், இதே மாதிரி ஏமாறும் வேறு சிலரிடம் இந்த பாசம் இல்லை, அவர்களுக்கெல்லாம் உங்கள் ஆலோசனை இல்லையா?"
கண்டிப்பாக உண்டு. அதற்கான பதிவும் போடுவேன்.

மிக்க நன்றி அய்யா, மிக தாமதமாக இருந்தாலும் பதிவு வந்தால் நிச்சயம் பாராட்டுகின்றோம்...

நன்றி

dondu(#11168674346665545885) said...

"முதலில் நீங்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று தவறான பொருள்படும் படியான பதிவெழுதியதிற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு பிறகு தார்மீக உரிமையோடு கேள்வி கேட்கலாம் அது வரை இது ஒரு ஜல்லியடிப்பு தான்."

வெளிப்படையாக சொல்ல வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறிப் பார்த்தேன். புரியவில்லை உங்களுக்கு. இப்போது தெளிவாகவே கூறி விடுகிறேன். அவர் குழந்தைகள் தமிழ் படிப்பதாகக் இப்போது கூறுவதை நான் நம்பவில்லை அவ்வளவுதான். அந்த நம்பிக்கை வந்தால் பார்க்கலாம்.

நீங்கள் நம்புவதாகத் தோன்றுகிறது. நீங்களும் இது தெரியாமல் அதே எண்ணத்தில் முன்பு வேறு விதமாக பதிலளித்தீர்கள் என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே எனக்கு தோன்றுகிறது. ஆகவே வருத்தம் தெரிவிக்க இயலாது. மன்னிக்கவும்.

ஆனால் அன்புமணி அவர்கள் ஒரு நல்ல தந்தை என்பதில் ஒரு மாற்றமும் இல்லை என்பதை நானும் ஒரு தந்தை என்ற நிலையில் திரும்பக் கூறுவேன். அவர் தொண்டர்களும் அவர் மாதிரியே ப்ராக்டிகலாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

அது சரி, ராமதாசு அவ்ர்கள் நிருபரை அவமதித்ததற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறுவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

குழலி / Kuzhali said...

//வெளிப்படையாக சொல்ல வேண்டாம் என்று மறைமுகமாகக் கூறிப் பார்த்தேன். புரியவில்லை உங்களுக்கு. இப்போது தெளிவாகவே கூறி விடுகிறேன். அவர் குழந்தைகள் தமிழ் படிப்பதாகக் இப்போது கூறுவதை நான் நம்பவில்லை அவ்வளவுதான். அந்த நம்பிக்கை வந்தால் பார்க்கலாம்.
//

நன்றி ஏற்கனவே நான் ஒரு முறை சொன்னது தான், இந்த கண்ணோட்டத்தில் இருக்கும் போது நான் பதிலளிப்பதும் பேசுவதும் வீண்தான் என்று தற்போது மிக நன்றாகவே புரிகின்றது...

இனி ஏதேனும் தயவு செய்து கேள்விகளை கேட்டாலும் பதில் சொல்வது எனக்கு நேர விரயம் என்பதால் இது வரை என் போன்ற கத்துக்குட்டிக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்லி, கேள்விகேட்ட உங்களுக்கு நன்றி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது