3/31/2006

டோண்டுவின் இரண்டாம் திருமணம்

திருமணம் என்றாலே இனிய நினைவுகள்தானே. அதுவும் இரண்டாம் திருமணம் என்பது த்ரில்தான். எனக்கு இரண்டாம் திருமணம் நாளைக்கு. பெண்? கடந்த 53 ஆண்டுகளாகக் காதலிக்கும் அதே பெண்தான். சமீபத்தில் 1974-ல் நடந்த எங்கள் முதல் கல்யாணம் நேற்றுத்தான் நடந்தது போல இருக்க, இப்போது இரண்டாம் முறையாக அவள் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன்.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேற்பார்வை? கல்யாணப் பெண்தான். நடத்துவது? என் பெண்ணும் மாப்பிள்ளையும்தான்.

இதற்குள் பலருக்கு என்ன விஷயம் என்று புரிதிருக்க வேண்டும். எங்கள் பக்கத்தவர் இதை சஷ்டியப்தபூர்த்தி என்பார்கள். அறுபதாம் ஆண்டு நிறைவு விழா என்றும் கூறலாம். சிலர் மணி விழா என்பார்கள். எதுவானால் என்ன கடந்த பார்த்திப ஆண்டு பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு ஏப்ரல் 1 சஷ்டியப்தபூர்த்தி.

இருவரும் பிழைத்துக் கிடந்தால் இருபது ஆண்டுகள் கழித்து மூன்றாம் திருமணம். சதாபிஷேகம் என்று அதை கூறுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின் குறிப்பு: ஒரு முறைதான் பப்ளிஷ் பட்டனை அழுத்தினாலும் இரண்டு முறை பதிவு வந்து விட்டது. அவற்றில் ஒன்றை நீக்க வேண்டியதாயிற்று.

3/26/2006

தலித் அதிகாரிகளும், தமிழக அரசும்

என்.டி மணி அவர்களின் இந்தப் பதிவில் சிவா என்பவர் தன்னுடையப் பின்னூட்டத்தில் (பின்னூட்ட எண் 258) இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். அவர் தங்கிலீஷில் கொடுத்ததைத் தமிழில் தருவேன்:

"டோண்டு ஐயா,
நீர் என்ன சொல்ல வரீர் என்றே எமக்குப் புரியவில்லை ஐயா!!!?
சந்தர்ப்பவசமாக நீர் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் இதையே பேசிக் கொண்டு இருப்பிரா என எண்ணிப் பாரும்.
சிவா"

சிவா அவர்களே, நான் தலித்தாகப் பிறந்திருந்தால் என்ன பேசிக் கொண்டிருப்பேன் என்றா கேட்கிறீர்கள்? பேசுவதை விடுங்கள். என்ன செய்திருப்பேன் என இரண்டு பதிவில் கூறியிருக்கிறேன். முதல் பதிவு இரட்டை டம்ளர் முறை பற்றியது. அதில் நான் தலித்தாகப் பிறந்திருந்தால் என்று கூறவில்லைதான், இருப்பினும் அதுதான் அப்பதிவின் அடிப்படை அர்த்தம், ஏனெனில் பின்னூட்டங்கள் எல்லாம் என்னுடைய அனுபவத்திலிருந்தே கூறப்பட்டவை. ஆனால் இந்தப் பதிவில் அதை நான் வெளிப்படையாகவே கூறிவிட்டேன். அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னாலேயே போட்டப் பதிவு அது. இன்னொரு விஷயம் என்னவென்றால் அப்போதும் இப்பதிவு வந்ததற்கு திரு தங்கமணியால் நாராயணன் அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டமேயாகும். இப்போது இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுவதற்கும் அதே தங்கமணி அவர்களின் மேலே சுட்டியப் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டமே காரணம்.

நானே மெதுவாக என்னுடைய பல பழைய பதிவுகளை தற்சமயம் இற்றைப்படுத்தி வருகிறேன். அதற்கு முக்கியக் காரணம் அவற்றை வகைபடுத்துவதேயாகும். இப்பதிவு இற்றைப்படுத்தப்படுவதற்கு நீங்கள் தூண்டுகோலாயிருந்ததற்கு உங்களுக்கு என் நன்றி. இப்பதிவை அப்போதிடப்பட்டிருந்தப் பின்னூட்டங்களுடனேயே மீள்பதிவு இங்கு செய்கிறேன் என்பதையும் கூறிவிடுகிறேன்.

இப்போது இற்றைப்படுத்தப்பட்டப் பதிவின் ஒரிஜினலுக்குப் போவோமா?

"தலித் அதிகாரிகளும், தமிழக அரசும்" என்றத் தலைப்பில் நாராயணன் அவர்கள் ஒரு பதிவு கொடுத்துள்ளார். அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. இதை நான் என் தனிப் பதிப்பாகவும் இங்கிடுவதற்கு காரணம் அங்கு நான் இட்டது பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று போய் விடக்கூடாது என்பதற்குத்தான். இப்போது பின்னூட்டத்துக்குச் செல்வோமா?

என்.டி. மணி அவர்கள் எழுதுகிறார்: "நாராயணன், இவர்கள் ஏன் அரசிடமிருந்து வேலையை எதிர்பார்க்கவேண்டும்? டீ கடை, இட்லிகடை அல்லது ஏதாவது கைத்தொழில் செய்து சுயமரியாதையோடு வாழக்கூடாதா?" இதை மதி கந்தசாமி அவர்கள் வேறு வழிமொழிந்திருக்கிறார்.

புரிகிறது. இப்போது தலித் அதிகாரிகளின் பிரச்சினையைப் பார்ப்போம். ஒவ்வொரு பிரச்சினையையும் அதன் சூழ்நிலைக்கேற்பத்தான் கையாள வேண்டும். இரட்டை டம்ளர் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சொன்ன யோசனை அம்முறையைக் கடைபிடிக்கும் கடைகளைப் புறக்கணிப்பதேயாகும். அதற்கு நாமே டீக்கடை வைப்பது ஒரு முதல் படியே.

ஏற்கனவே ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்முறை தேவையில்லை. அவர்களுக்கு ஏற்ற முறையை மனப்பூர்வமாகக் கூறுவேன். அதற்கு முன் ஒரு சிறிய ஆனால் நான் சொல்லவிருப்பதை இன்னும் தெளிவாக்கும் சிறு டைவர்ஷன்.

சமீபத்தில் 1973-ல் "விக்டோரியா நம்பர் 203" என்றத் தலைப்பில் இந்திப் படம் ஒன்று வந்தது. அதில் ஒரு சீன். அஷோக் குமார் மற்றும் ப்ரான் கைகால் கட்டிப் போடப்பட்டு படகில் கிடப்பார்கள். பிரான் அஷோக் குமாரின் விஸ்கி பாட்டிலை வாயினால் கௌவி போட்டின் சைடில் மோதி உடைப்பார். பிறகு வாயில் கௌவியபடி வைத்திருக்கும் பாட்டில் துண்டால் அஷோக் குமாரின் கைகட்டுகளை அறுத்து விடுவார். விடுதலையான அஷோக் குமார் இப்போது பிரானைக் காப்பாற்ற அதே மாதிரி பாட்டில் துண்டை வாயில் கௌவிக் கொண்டு பிரானின் கைகட்டை அறுக்க முயற்சிப்பார். பிரான் அவரைத் திட்டுவார். "உன் கைகள்தான் சுதந்திரமாக உள்ளனவே, பிறகு ஏன் வாயில் கௌவிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாய்" என்று.

இப்போதுதான் கைகள் சுதந்திரமாகி விட்டனவே, டீக்கடை யோசனை இவர்களுக்கில்லை. நான் அவ்வாறு காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் அதிகாரி என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள்.

முதலில் காத்திருப்பில் வைத்திருப்பது என்ன என்பதைப் பற்றி நான் புரிந்துக் கொண்டதைக் கூறி விடுகிறேன். தவறு இருந்தால் திருத்தவும். அதாவது போஸ்டிங் கொடுக்க மாட்டார்கள், வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். சம்பளம் தாமதமில்லாமல் மாதா மாதம் கொடுப்பார்கள் அல்லவா? அவ்வாறு காத்திருக்கும் காலத்தை லீவாகக் கணக்கெடுத்துக் கொள்ள் மாட்டார்கள்தானே? இந்த அனுமானத்தில் யோசனை கூறுகிறேன். தவறு என்றால் சரியான சட்ட நிலைமையைக் கூறுங்கள். அதற்கேற்ப யோசனையை மாற்றித் தருகிறேன்.

நான் ஏற்கனவே கூறியது போல அவ்வாறு பாதிக்கப்பட்ட தலித் அதிகாரி. முதலில் ஹாய்யாக ஓய்வெடுப்பேன். அதே சமயம் நான் செய்ய வேண்டியவற்றையும் திட்டமிடுவேன். கூட்டங்களுக்குப் போவது வேலை ஒழுங்கு விதிகளுக்கு முரணானதா? சரி பரவாயில்லை. மீட்டிங்கில் நம்மவர்கள் என்னென பேச வேண்டும் என்பதை பின்னணியிலிருந்து வியூகம் அமைத்துக் கூறுவேன். கையில் எழுத்து வேலை இருந்தால் அதைப் பார்ப்பேன். அரசு உத்தியோகத்திலிருந்துக் கொண்டே அதை செய்ய அனுமதி கிடைக்கும்தானே? ஆகவே இது செய்ய முடிந்ததே. வேறு பொழுதுபோக்குகளை மேற்கொள்வேன். இது ரொம்ப முக்கியம். காத்திருக்கச் செய்து என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் அரசுக்கு அந்த வேலையை எளிதாக்க மாட்டேன். அதற்கு பதில் நான் ரிலேக்ஸ்டாக இருந்து அரசு யந்திரத்தை வெறுப்பேற்றுவேன். இது ஒரு யுத்தம். என் கையில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்துவேன். எவ்வளவு நாட்கள்தான் காத்திருப்பில் வைத்திருக்க முடியும்? ஒரு வருடம்? 12 மாத சம்பளம் பெற்று அரசு எனக்காக வேறு செலவுகள் செய்ய வைப்பேன். உறவினர் கல்யாணங்களுக்கு செல்ல விடுமுறை எடுக்கத் தேவையில்லை. நான் கூறிய யோசனைகள் விளையாட்டுக்கல்ல. மனப்பூர்வமாகவே கூறியது. என்னைத் தேவையில்லாமல் சீண்டி என்னைக் கட்டாயக் காத்திருப்பில் வைப்பவர்களை இவ்வாறு எதிர்க்கொள்வதில் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை என்பதையும் கூறுவேன்.

டீக்கடை யோசனை சொன்ன போது நானே டீக்கடை நடத்தியதைப் பற்றிக் கூறினேன் அல்லவா? இப்போதும் நான் மேலே சொன்ன யோசனைகளும் ஒரு சமயம் என்னாலேயே கடைபிடிக்கப்பட்டவையே. எப்படி என்று விளக்குகிறேன். திடீரென்று என்னை ஐ.டி.பி.எல். தலைமையகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றி விட்டார்கள். அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் சைட் பிஸினஸை செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் மொழி பெயர்ப்பு வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.

ஆகவே தலித் ஐ.ஏ.எஸ். நண்பர்களே, உற்சாகம் பெறுங்கள். சோர்வடையாதீர்கள். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே மர்றவர்கள் உங்களை டிஸ்டர்ப் செய்ய முடியும். அதுவும் அரசில் முதல் வகுப்பு அதிகாரிகள் நீங்கள். அதன் நெளிவுசுளிவுகளை அறிந்தவர்கள். ஆல் தி பெஸ்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/25/2006

பாமினி என்னும் லொள்ளு எழுத்துரு

இத்தனை நாளாக நானாயிற்று இகலப்பையாயிற்று என்று இருந்து விட்டேன். ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ர்ப்பு வேலைகள் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் ஒருங்குறி எழுத்தில்தான் கோப்புகளைக் கேட்பார்கள். தஸ்கி கேட்டாலும் சமாளிக்க முடியும். Alt 1, Alt 2 மற்றும் Alt 3 என்ரு போட்டு டாகிள் செய்து கொள்ளலாம்.

ஆனால் இப்போது ஒரு வாடிக்கையாளர் வந்து பாமினியில் தட்டச்சு செய்யச் சொல்கிறார். அதையும் சுரதா பெட்டியின் தயவில்தான் செய்கிறேன். ஆனால், கோப்பிலிருந்து வாக்கியம் வாக்கியமாக இந்தப் பெட்டிக்கு கொண்டு வந்து தமிழில் தட்டச்சு செய்து அதை நகல் எடுத்து மறுபடியும் கோப்புக்குத் திரும்பிச் சென்று ஒட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

அதுவும் நேற்று இரவு நடந்ததுதான் கொடுமை. நம்முடைய நேரத்துக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் பின்னால் வாடிக்கையாளர் ஊரில் நேரம். அவருக்கு நம் நேரப்படி இன்று விடியற்காலை 3 மணிக்கு தமிழில் மொழிபெயர்த்த 6 கோப்புக்களைத் தர வேண்டியதிருந்தது. நான் மூச்சு பிடித்து வேலை செய்து நேற்று இரவு 11 மணியளவில் 6 கோப்புகளையும் அனுப்பினேன். 10 நிமிடத்துக்குள் அவரிடமிருந்து மின்னஞ்சல் சீறி வந்தது. பாதிக்கு மேல் படிக்க முடியவில்லையாம். அவர் கேட்ட பாமினி எழுத்துருவில்தானே கொடுத்தேன். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நல்ல வேளையாக அவரே என்ன பிரச்சினை என்று தெரியப்படுத்தினார். அதாவது சரியாகத் தெரியாத இடங்களில் எழுத்துருவின் பெயரைப் பார்த்தால் அது Bamini-க்கு பதில் Baamini என்று காட்டுகிறதாம். பிறகுதான் முழித்துக் கொண்டு கண்ட்ரோல் பேனலைத் திறந்து எழுத்துரு பக்கத்தில் பார்த்தால் Bamini மற்றும் Baamini இரண்டுமே இருக்கின்றன.

ஆனால் word கோப்பில் எழுத்துரு காட்டும் இடத்தில் க்ளிக் செய்து ட்ராப் டௌன் லிஸ்டைப் பார்த்தால் எல்லா எழுத்துருக்களையும் அழகாக Arial TimesRoman, TSCu_Paranar என்றெல்லாம் தெளிவாகப் போட்டிருக்க Bamini மட்டும் டீயயஅலெ என்றும் Baamini டீயயலெ என்பது போலவும் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை க்ளிக் செய்தால் முறையே Bamini அல்லது Baamini என்று சமர்த்தாக வருகின்றன. அதில்தான் நான் மயங்கி தவறு செய்தது. சிலவற்றுக்கு Bamini-யையும் பெரும்பானவற்றுக்கு Baamini என்றும் தேர்ந்தெடுத்து நகலிட்டிருக்கிறேன், ஏனெனில் நான் இரண்டையுமே பாமினி என்றே படித்திருக்கிறேன். அதிகப்படியான a என் உணர்வுக்குப் புலப்படவில்லை. மேலும், என்னுடையக் கணினியில் இரண்டு எழுத்துருக்களும் உள்ளனவாதலால் எனக்கு படிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் Bamini மட்டும் வைத்திருந்த வாடிக்கையாளர்தான் Baamini செலக்ட் செய்யப்பட்டிருந்த இடங்களில் படிக்க முடியாமல் பேய் முழி முழித்திருக்கிறார்.

பரணர் ஒருங்குறி எழுத்தில் என்ன சௌகரியம் என்றால் அது ஆங்கிலத்தையும் சப்போர்ட் செய்கிறது. ஆகவே ஆங்கிலக் கோப்புகளை முதலில் ஒட்டு மொத்தமாக பரணர் எழுத்துருவுக்கு மாற்றி விடுவேன். இகலப்பை வைத்து தட்டச்சு செய்தால் வழுக்கிக் கொண்டு வேலை ஓடும். ஆனால் பாமினி அந்த பாச்சா பலிக்காது. ஆங்கில எழுத்துக்கள் டீயயஅலெ ரேஞ்சில் குழப்பமாகி விடும். ஆகவே சுரதா பெட்டியிலிருந்து நகலெடுத்து வந்து மொழிபெயர்ப்புக்கான கோப்பிற்கு வந்து மாற்ற வேண்டிய வாக்கியத்தை மட்டும் எழுத்துரு மாற்ற வேண்டியிருக்கிறது. அதுவும் தமிழ் மொழிபெயர்ப்பில் நடுவில் ஆங்கில வார்த்தையை அப்படியே போட வேண்டுமென்றால் தொலைந்தேன். துண்டு துண்டாக பதிக்க வேண்டிய வேலை.

ஆகவே நேற்றைய பிரச்சினையைத் தீர்க்க Baamini காட்டும் இடத்திலெல்லாம் ஒவ்வொன்றாகப் போய் Bamini-க்கு மாற்ற வேண்டியிருந்தது. 11 பக்கங்களுக்கு மேல் வேலை. எல்லாவற்றையும் முடித்து, ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து 6 கோப்புகளையும் அனுப்பும்போது மணி விடியற்காலை 2.30. ஆனால் வாடிக்கையாளர் நல்லவர். பத்து நிமிடத்துக்குள் பதில் அனுப்பி, இப்போது நிலைமை ஓக்கே என்று கூறிவிட்டார். படுக்கும்போது 3 மணியாகி விட்டது. சிவா அவர்களின் பின்னூட்டங்கள் வேறு வந்து கொண்டிருந்தன. உற்சாகமாக அவற்றுக்கும் பதில் அளித்தேன் என்பதையும் இப்பதிவில் சொல்லி வைக்கிறேன். அவருக்கு என் நன்றி.

பாமினி விஷயத்தில் மேலும் சில இம்ஸைகள். சுரதா மாற்றியின் மேல் பெட்டியில் கமா அடித்தால் கீழ்ப் பெட்டியில் இ வருகிறது. அதே போல / அடித்தால் ஃ வருகிறது, சதுர அடைப்புகள் அடித்தால் முறையே ஜ மற்றும் ஸ வருகின்றன. செமிகோலன் அடித்தால் ஷெ வருகிறது. ரொம்பக் கொடுமைடா சாமி. ஆகவே கமா முதலியவற்றுக்கு மட்டும் ஏரியல் போன்ற எழுத்துருக்கள் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்போது என் சக வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

1. பாமினியை சுரதா எழுத்துரு மாற்றியில் அடிக்கும்போது கமா எல்லாம் கீழ்ப்பெட்டியில் வர என்ன செய்ய வேண்டும்?
2. இகலப்பை மாதிரி ஏதேனும் மென்பொருள் பாமினியை சம்பந்தப்பட்ட கோப்புகளில் நேரடியாக (பவர்பாயிண்ட், எக்ஸெல் ஆகியவை) அடிக்கத் தோதாக கிடைக்குமா? ஆங்கிலத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டிய இடங்களில் அப்படியே அவற்றைத் தொடாமல் தட்டச்சு செய்து காரியம் செய்து கொள்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/21/2006

IDPL நினைவுகள் - 5

ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மூலம் ஒன்று கற்கலாம். அதாவது ஒரு நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்று. அதற்காக ஐ.டி.பி.எல்லின் உயர் அதிகாரிகளை குற்றம் சொல்வதாக நினைத்து விடாதீர்கள். அதிகாரிகளில் பலர் மிகத் திறமைசாலிகள். ஆனால் ஐ.டி.பி.எல்லை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மினிஸ்ட்ரியின் செயல்கள் அது நல்ல முறையில் செயல்பட முடியாமல் தடுத்துவிட்டது.

உதாரணத்துக்கு ஐ.டி.பி.எல்லுக்கு சொந்தமான கார்களில் ஒன்று மினிஸ்ட்ரி அதிகாரிகள் வசமே இருந்தது. அதன் உபயோகத்தின் மேல் ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதன் செலவுகள் மட்டும் ஐ.டி.பி.எல் தலையில். அதன் ஓட்டுனர் ஐ.டி.பி.எல்லில் சம்பளம் பெற்றார். அது மட்டுமன்றி ஐ.டி.பி.எல்லில் வேலை செய்த எழுத்தர்கள் நான்கைந்து பேர் மினிஸ்ட்ரியிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டனர். அவர்கள் சம்பளமும் ஐ.டி.பி.எல். பொறுப்பிலேயே. அதே போல மினிஸ்ட்ரியில் இருந்த ஜாயிண்ட் செக்ரெடரி வீட்டில் வாஷிங்க் மெஷின் வேலை செய்யவில்லையென்றால் எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு நான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நாங்கள் சென்ற காரை அந்த அதிகாரியின் வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க எடுத்து சென்றனர், ஏனெனில் அங்கு கிலோவுக்கு அரை ரூபாய் மலிவாம். எங்கு அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

அல்ஜீரிய வேலையைப் பற்றியும் எழுதியிருந்தேன். தோல் பதனிடும் தொழிற்சாலையில் வரும் கழிவு நீரை சுத்தம் செய்யும் ப்ளாண்டை நிறுவும் வேலைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் தருமாறு ஐ.டி.பி.எல். என்னும மருந்துக் கம்பெனிக்கு அரசியல் ரீதியான நிர்ப்பந்தம். நல்ல வேளையாக அல்ஜீரியாவிலேயே எதோ அரசு கவிழ்ப்பு நடந்து எங்களுக்கு அந்த வேலை கிடைக்கவில்லையோ பிழைத்தோமோ. ஆனால் அதற்குள் ஒரு கணிசமான தொகையும் செலவழிக்கப்பட்டிருந்தது. அத்தனையும் எள்ளுதான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல 1980களின் தொடக்கத்திலேயே ஐ.டி.பி.எல்லின் சரிவு நிதானமாக ஆரம்பித்தது. அதெல்லாம் இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலைமை மோசம் என்பதை நான் 1990-ல் ஐ.டி.பி.எல். ரிஷிகேஷுக்கு துபாஷி வேலையாய் சென்றபோது உணர்ந்தேன். அதற்கான சில அறிகுறிகள். டௌன்ஷிப்பில் விளையாடிய குழந்தைகள் பெரும்பான்மையினர் வேலை செய்பவர்களின் குழந்தைகள் அல்ல, பேரக் குழந்தைகள். அதாவது வேலை செய்பவர்களின் சராசரி வயது 40-க்கும் மேல். புது ஆள் சேர்ப்பு பல வருடங்களாக நடைபெறாததன் விளைவுதான் இது. வருடா வருடம் பலர் ஓய்வு பெற்று சென்றனர். ஆனால் அதனால் விளைந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. தெரு விளக்குகளில் பாதிக்கு மேல் பல்புகள் இல்லை. தெருக்களின் பராமரிப்பும் மோசம். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் கூடி நின்று வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலைக்கு வந்த பிரெஞ்சுக்காரர் கேட்ட அளவுக்கு மூலப் பொருள்கள் கிடைப்பதில் தாமதம். இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.

1992-ல் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. டைனமிக்காக வேலை செய்யக் கூடியவர்களில் முக்கால்வாசிப்பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர். தினசரி உற்பத்திக்கு தேவையான பணம் கிடைப்பதில் சுணக்கம். க்ரெடிட்டில் மருந்துப் பொருட்கள் பெற்ற அரசு மருத்துவமனைகள் பில்கள் செட்டில் செய்வதில் ஆமை வேகம் காட்டினர். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு கொடுத்துவந்த பட்ஜெட் ஆதரவு சுருங்கிப் போயிற்று. ஒரு நிதி ஆண்டில் 19 கோடி ரூபாய் அரசு ஒதுக்க, அது போதாது என்று தலைமை நிர்வாகி பெரிய நோட் போட்டார், அதை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் விழித்துக் கொண்டு உண்மையில் ஒதுக்கியது 19 கோடி அல்ல 19 லட்சமே என்று கண்டுபிடித்து எங்கள் தலைமை அதிககரியை நோக அடித்தனர் என்றெல்லாம் வதந்திகள் பரவின. 1993 வாக்கில் இன்னொரு செய்தி அடிப்பட்டது. அதாவது அந்த ஆண்டு முடிவதற்குள் ரிஷிகேஷிலிருந்து கணிசமான மின்னியல் அதிகாரிகள் ஓய்வு பெறப்போவதால் எங்களில் அனேகம்பேரை அந்த ப்ளாண்டுக்கு மாற்றப் போவதாக அறிந்தேன். அப்போதுதான் நான் விழித்துக் கொண்டு என்னுடைய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். நல்ல வேளையாக ரிலீவும் செய்யப்பட்டேன். சிறிது தாமதித்திருந்தாலும் காரியம் கெட்டிருக்கும். ஏனெனில் எனக்கப்புறம் என் துறையில் வேலை செய்தவர்களுக்கு விருப்ப ஓய்வு மறுக்கப்பட்டது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி எனக்கு மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/20/2006

புதிர்கள் பத்து - 3

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும். முதல் 5 கேள்விகள் புதிர்கள் பத்து - 2லிருந்து கேரி ஓவர் ஆனவை.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காக அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

6. For a change, two puzzles in English. A plane has three wheels and flies. What has got four wheels and flies?

7. A man arrives in a town on Friday. He leaves town after two days again on Friday. How come?

8. 29 வயதே ஆன கிருஷ்ணமூர்த்தி எப்போதும் விமானத்தில் முதல் வகுப்பில்தான் பயணம் செய்வார். அவர் பேசுவதை எல்லா முக்கியப் பிரமுகர்களும் காதுகொடுத்து கேட்பார்கள். பயணம் முடிந்து அவர் தங்குவது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான். ஒரு வணிகத்தையும் எங்கும் முடிக்காமல் அவர் மறுபடி பயணம் செய்வார். என்ன நடக்கிறது இங்கே. ஆனாலும் யாரிடமிருந்தும் அவர் எதுவும் தானமாகப் பெறுவதில்லை. தேவையுமில்லை. அவர் ஜோஸ்யரும் இல்லை, கன்ஸல்டண்டும் இல்லை.

9. நீச்சல் உடையில் 3 பெண்கள் நிற்கின்றனர். அதில் ஒருத்திக்கு சந்தோஷம் மற்ற இருவருக்கும் துக்கம். ஆனால் சந்தோஷமானவள் அழுகிறாள், மற்ற இருவரும் புன்னகை புரிகின்றனர். என்ன நடக்கிறது இங்கே?

10. உலகில் 1000 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொருவருடைய இடது கையிலும் கட்டை விரலைச் சேர்த்து ஐந்து விரல்கள். எல்லாருடைய இடது கை விரல்களையும் ஒன்றாகப் பெருக்கினால் வரும் எண்ணை எழுத முடியுமா? என்ன எண் வரும்? (கேள்வி முழுமையாக்கப்பட்டது, ஏனெனில் நான் கேட்டது அரைகுறை விடையை வரவழைக்கக் கூடியது.)

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/19/2006

நாட்டாமை அவர்களுக்கு என் நன்றி

இன்று நாட்டாமை அவர்களிடமிருந்து ராஜாஜி குறித்த இந்த செய்திக் குறிப்பின் நகல் மின்னஞ்சலில் வந்தது.

இன்றைய தினமலர் வாரமலரில் அந்துமணி பா.கே.ப பகுதியில் இந்த செய்தியை பார்த்தாக எழுதியிருந்தார். இதை தன்னால் திறம்பட எழுத முடியாது (இது ஒத்துக் கொள்வதற்கு இல்லை) என்றும், நான் இதை எழுதினால் மிகவும் நல்ல பதிவாக சொல்வேன் (அப்படியெல்லாம் இல்லை) என்று தோன்றியதாலும் அதை எனக்கு அனுப்புவதாகக் கூறி, 'தங்கள் நாட்டாமை' என்று கையெழுத்திட்டிருந்தார் அவர்.

அவர் குறிப்பிட்டிருந்ததை நான் முன்னர் ஒரு முறை படித்திருக்கிறேன். இருப்பினும் எனக்கு இத்தனை நாள் அது நினைவுக்கு வரவில்லை. தினமலர் வாரமலரை இன்று இணையத்தில் தேடினால் நாட்டாமை அவர்கள் குறிப்பிட்டிருந்த இந்த செய்தி கிடைக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று கடைக்கு போய் வாங்கிப் பார்த்தால் இன்ற தினமலரை வாங்கிப் பார்த்தால் அதில் இருந்தது. அருமையான விஷயத்தை எனக்கு நினைவுபடுத்தியதற்கு நாட்டாமை அவர்களுக்கு என் நன்றி. தினமலர் அந்து மணி அவர்களுக்கும் என் நன்றி. இப்போது செய்திக் குறிப்புக்கு போவோமா?

அந்து மணியின் வார்த்தைகளில்:

அந்த போலீஸ் உயர் அதிகாரி பழைய காலத்து மனிதராதலால் தமக்குத் தெரிந்த, ராஜாஜி காலத்து போலீஸ் கதை ஒன்றைக் கூறினார்.

"ராஜாஜி முதலமைச்சரா இருந்த சமயம்பா... படித்த தலித் இளைஞர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க பெருமுயற்சி எடுத்துக் கொள்வார்... வகுப்பு வாரியாக அரசு வேலை தர வேண்டும் என்று விதி இருக்கிறது இல்லையா?

"ஆனா... அப்போ படிச்ச தலித் இளைஞர்கள் போதுமான அளவு இல்ல... 'அந்த உத்தியோகத்துக்கு தகுந்த தலித் அபேட்சகர் இல்ல'ன்னு காரணம் காட்டி, மேல் ஜாதிகாரர்களுக்கு அந்த உத்யோகத்தை கொடுத்துடறது வழக்கம். "ஒரு சமயம் எங்க டிபார்ட்மென்ட்ல டெப்டி சூப்ரண்டன்ட் வேலைக்கு தலித் வகுப்பின் உரிமை வந்தது. வழக்கம் போல் படித்த தலித் இளைஞர் ஒருவரும் இல்லை என்று, ஒரு மேல் ஜாதி இந்துவுக்கு வேலை கொடுக்க சிபாரிசு வந்தது.

"விடுவாரா ராஜாஜி! கில்லாடி மனுஷராச்சே... மேல் ஜாதிக்காரருக்காக வந்த சிபாரிசை ஒத்துக்காம, அப்போ சபாநாயகரா இருந்த சிவஷண்முகம் பிள்ளை மற்றும் சில தலித் தலைவர்களை கூப்பிட்டனுப்பினார்... அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, தகுதியான ஆளை கூட்டி வரும்படி பணித்தார்.

"தலித் தலைவர்கள் பி.ஏ., பாஸ் செய்த ஒரு தலித் இளைஞரை கூட்டி வந்தனர். அந்த இளைஞனை தமது அலுவலகத்திற்கு கூட்டி வரச் சொன்னார் ராஜாஜி. பின்னர், அங்கேயே அவ்விளைஞனை பரீட்சை செய்யும்படி சொன்னார். சிவஷண்முகம் பிள்ளையையும் தன் அருகிலேயே இருக்கும்படி செய்தார் ராஜாஜி. "பரீட்சை முடிந்தவுடன் ராஜாஜியிடம், "மற்ற தகுதியெல்லாம் இருக்கு. ஆனால், ஆள் ரொம்பவும் மெலிவா இருக்கிறார்... போலீஸ் உத்யோகத்திற்கு ஆள் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும்...' என்றார் போலீஸ் மேலதிகாரி.

"உடனே ராஜாஜி, "இவர் ஏழை தலித் இளைஞர். இதுவரை சரியான சாப்பாடே அவருக்கு கிடைத்திருக்காது. ஆகையால், இப்படி மெலிந்திருக்கிறார்... உத்யோகத்தை கொடுத்தால், சந்தோஷத்திலேயே சீக்கிரம் பருத்து விடுவார்!' என்று சொல்லி, அந்த தலித் இளைஞனுக்கு வேலை கொடுத்தார்.

"ராஜாஜி சொன்னது போலவே தான் நடந்தது. உத்யோகம் ஏற்றுக்கொண்ட ஆறு மாதத்திற்குள் கட்டிப்பிடிக்க முடியாதபடி பருத்து போய் விட்டார் அவ்விளைஞர். மிகத் திறமையான போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னாளில் சென்னை நகர போலீஸ் கமிஷனராகவும் ஆகி விட்டார் அவ்விளைஞர். அவர் வேறு யாருமல்ல... சிங்கார வேலு தான்...' என்று முடித்தார். விஷயத்தைக் கேட்டதும் புல்லரித்து விட்டது. (நன்றி: தினமலர், மார்ச் 19.2006 இதழுடன் இணைந்துள்ள வார மலர், பக்கம் 8)

இப்போது மறுபடியும் டோண்டு:

இம்மாதிரி பெருந்தன்மையான நடத்தைகளுக்கு ராஜாஜி அவர்கள் பிரசித்தி பெற்றவர். என்ன இருந்தாலும் மகாத்மா காந்தி அவர்களின் சம்பந்தி அல்லவா?

மீண்டும் என் நன்றி நாட்டாமை அவர்களுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/15/2006

நீங்கள் பூனையா எலியா?

நம் எல்லோருடைய மனத்திலும் ஒரு குழந்தை உண்டு என்பதை மறுக்க முடியாது. இப்போது கூட பார்க்குக்குப் போனால், ஊஞ்சலில் ஆட மனம் துடிக்கிறது. சிறு வயதில் நான் அதில் ரொம்ப தேர்ச்சி பெற்றவன். ஒருவர் மட்டும் ஆடும் ஊஞ்சலில் உயரே சென்று பீச் முழுவதையும் பார்க்கும் மகிழ்ச்சி இப்போதும் என் மனதில் ரீங்காரமிடுகிறது.

எனது நிறைவேறாத ஒரு ஆசை சக்கரம் ஓட்டுவது. பழைய சைக்கிள் சக்கரத்தின் ரிம்மை வைத்து என் நண்பர்கள் அலட்டுவார்கள். அந்த ரிம் க்ரூவில் ஒரு குச்சியை கொடுத்து தெருத் தெருவாக ஓடும் ஒரு சிறுவனின் மகிழ்ச்சியை முன்னால் நம்ம தல அஜீத் கூட ரேஸ் காரில் பெற முடியாது என்பது என் உறுதியான எண்ணம். இது எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை. என் அப்பாவிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இப்போது ரிம் கிடைக்கும், ஆனால் அதை வைத்துக் கொண்டு ஓடினால் பக்கத்து, எதிர் வீட்டு மாமாக்கள் "என்ன ராகவையங்கார் ஸ்வாமி, இளமை திரும்புகிறதா" என்று கோட்டா பண்ணுவார்களே!

என்னை மாதிரி பலருக்கும் இம்மாதிரி ஆசைகள் உண்டு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. சருக்கு மரத்தில் விளையாட ஆசைப்படாதவரும் உண்டோ? ஆனால், வருந்த வேண்டாம். நம்மைப் போன்றவர்களுக்குத்தான் கணினி விளையாட்டுகள் வந்துள்ளனவே.

இன்று எனது இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் அனுப்பிய மின்னஞ்சலில் டாம் மற்றும் ஜெர்ரி விளையாட்டு வருகிறது. டாம் ஆக இருக்கிறீர்களா அல்லது ஜெர்ரி ஆக இருப்பீர்களா என்பதை நீங்களே மாறி மாறி முடிவு செய்து கொள்ளலாம். பார்க்க:

நான் இரண்டாகவும் இருந்து பார்த்தேன். எலிக்குட்டியை க்ளிக் செய்யும் ஸ்பீட் போதவில்லை. என் பக்கத்து வீட்டு குட்டிப்பையன் அனாயாசமாக விளையாடினான். இன்னும் உழைத்து என் ஸ்கோரை மேம்படுத்த வேண்டும். நீங்களும் விளையாடிப் பாருங்கள். ஜெர்ரியாக என்னுடைய அதிகப்படி ஸ்கோர் 260, டாம் ஆக 210. அவ்வளவுதான்.

என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியத்துக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து உருவாக்கிய என் மற்ற பதிவுகள் பின் வருமாறு:

துணைவியின் பிரிவு

மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்

இருவழி ஒக்குஞ்சொல்

முதல் வேலை

மறக்காமல் உங்கள் ஸ்கோர்களையும் கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/08/2006

இரட்டை டம்ளர் முறை

இப்பதிவை போன வருடம் இதே மாதம் 28-ஆம் தேதி இட்டேன். அதன் பிறகு காவேரியில் நிரம்பத் தண்ணீர் போய் விட்டது. தமிழ்மணத்தில் பல புது முகங்கள் வந்து விட்டன. இருப்பினும் இப்பதிவில் கூறப்பட்ட பிரச்சினை அப்படியே இருக்கிறது. இதை இங்கு மீள் பதிவு செய்வதன் நோக்கம் இப்போதாவது ஏதாவது நல்ல விஷயம் நடக்காதா என்பதே. இப்பதிவு வந்தபோது வந்த பெரும்பான்மையானப் பின்னூட்டங்கள் எதிர்மறையாகவே இருந்தன. மீள்பதிவில் ஒரிஜினல் பின்னூட்டங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன. என்னுடைய ஆசை என்னவென்றால், திருமா போன்ற தலைவர்கள் தேர்தல் வரும் இச்சமயத்தில் நான் கூறிய யோசனையை செயல்படுத்திப் பார்க்கலாம். ஏதேனும் ஓரிடத்தில் தனி டீக்கடை வந்தால்கூட நல்லதுதான். தேர்தல் நேரத்தில் தலித்துகளை விரோதித்துக் கொள்ள யாவரும் தயங்குவர். இதுவே திட்டத்தை ஆரம்பிக்க ஒரு நல்ல தருணம்.

இப்போது பதிவுக்கு போகலாமா?

இரட்டை தம்ளர் கொடுமையும் மற்றக் கொடுமைகளும் தலித்துகளுக்கு இன்னமும் பல கிராமங்களில் நடக்கின்றன என்பது தமிழர் ஒவ்வொருவருக்கும் அவமானம் என்றே கருதப்பட வேண்டும். இந்த அவமானம் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.

இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் தரப்பிலிருந்தே ஏதாவது செய்ய முடியுமா? உதாரணத்துக்கு அம்மாதிரி இரட்டை தம்ளர் கடைகளில் டீ வாங்காமல் தவிர்த்தல். பொருளாதார பகிஷ்காரம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் அல்லவா? முடியுமா என்று தைரியமில்லாமல் பார்ப்பதை விட முடிய வேண்டும் என்று உறுதியுடன் இருக்க வேண்டாமா? அவர்களே தங்கள் குடியிருப்பில் ஒரு சிறு டீக்கடை அமைத்துக் கொண்டு அங்குதான் டீ குடிப்பது என்றுக் கட்டுப்பாட்டுடன் இருந்தால் என்ன நடக்கும்? மற்றவர்கள் தங்களுக்காக ஏதேனும் செய்வார்கள் என்று எதிர்ப் பார்ப்பதை விட்டு விட்டு எங்காவது ஒரு இடத்தில் துவங்கி வெற்றி பெற்றால் அதுவே அரசின் பல சட்டங்களை விட அதிகப் பாதுகாப்பு தரும் என நம்புகிறேன். இட ஒதுக்கீடு பெற்று முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுத்தாலே கணிசமானத் தொகை வருமே. அவர்களின் பிரதிநிதிகள் இம்மாதிரி யோசிக்க ஆரம்பித்தாலே ஒரு உத்வேகம் பிறக்காதா?

1947 களில் பாகிஸ்தானில் இந்துக்கள் கொல்லப்பட்டு அவர்கள் சாரி சாரியாக வெளியேறிய போது அவ்வரசாங்கத்துக்கு முன் ஒரு பெரிய பிரச்சினை எழுந்தது. அதாவது சுத்திகரிப்புத் தொழிலாளிகளும் வெளியேறத் துவங்க ஊர்களே நாற்றமெடுக்க ஆரம்பித்தன. அரசாங்கம் விழித்துக் கொண்டு அவர்களுக்கு விதி விலக்கு அளித்துப் பாதுகாப்பு கொடுத்தது என்று "நள்ளிரவில் சுதந்திரம்" என்றப் புத்தகத்தில் படித்துள்ளேன். பாதிக்கப்படுபவர் எல்லோரும் படிப்படியாக நகரங்களுக்குக் குடி பெயர ஆரம்பித்தால் பிரச்சினைக்கு ஒரு நியாயம் பிறக்கும் எனத் தோன்றுகிறது. இரட்டை டம்ளர் முறை இன்னும் இருக்கும் ஊர்களில் இதைப் பரீட்சார்த்தமாகத் துவங்கலாம். இதற்கான உந்துதல் பாதிக்கப்பட்டவரிடமிருந்தே வந்தால் பலன் அதிகமாக இருக்கும்.

மதம் மாறினால் பிரச்சினைத் தீரும் என்றால் அவ்வாறும் செய்யலாம். ஆனால் பல இடங்களில் புது மதத்திலும் அவர்கள் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்றுதான் தோன்றுகிறது. மதம் மாறிய தலித்துகளும் இட ஒதுக்கீடு கேட்பதிலிருந்து இந்த முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது.

இவ்வளவு வருடங்கள் அரசாங்கமோ அல்லது நல்ல மனம் படைத்த மேல் சாதிக்காரரோ ஏதாவது செய்வர் என்று இருந்ததுப் போதும். தன் கையே தனக்குதவி என்று ஒரு துவக்கம் செய்தால், தானே மற்றவர்கள் சேர்ந்துக் கொள்வர். இம்மாதிரி பாதிக்கப் பட்டவர்களே செய்யத் துவங்கி வெற்றி பெற்றதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன. ஒரு புது தேசமே உருவாயிற்று. அதுவும் இரண்டாயிரம் வருடஙள் ஒடுக்கபட்ட நிலையில் வீறு கொண்டெழுந்து இது நிறைவேற்றப் பட்டது.

காமராஜ் அவர்கள் முதல் மந்திரியாக இருந்தப் போது சென்னை ரிசர்வ் பேங்க் அருகில் ரயில்வே சுரங்கப் பாதைக்கானத் திட்டம் ஏன் நடைபெறக் கூடாது என்பதற்கு அதிகாரிகள் பக்கம் பக்கமாகக் குறிப்புகள் எழுதினர். அவை எல்லாவற்றையும் நிராகரித்து அவர் கூறினார் "உங்களைத் திட்டம் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்குத்தான் கூப்பிட்டிருக்கேண்ணேன். அது நிறைவேற வேண்டுமா வேண்டாமா என்பது அரசியல் முடிவுண்ணேன். அதற்குத்தான் நானும் என் மந்திரிகளும் இருக்கோம்ணேன். உங்களுக்கு அந்த முடிவெடுப்பது வேண்டாத வேலைண்ணேன். போய் திட்டத்தை எவ்வாறு நிறைவேத்தலாம்னு குறிப்பு எழுதுங்கண்ணேன்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகக் கூற அவ்வாறே செய்யப்பட்டது.

ஒடுக்கப்பட்டவர்களே, ஆக்க பூர்வமாக வீறு கொண்டெழுங்கள். இட ஒதுக்கீட்டை உபயோகித்துப் படித்து முன்னுக்கு வந்த உங்களில் சிலரின் உயர்வு அவர்தம் முயற்சியிலேயே உருவாயிற்று. அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்களும் ஏதாவது செய்யுங்கள். எப்படியாவது பிள்ளைகளைப் படிக்கச் செய்யுங்கள். தீர்வு பெரும்பாலும் உங்கள் கையிலேயே உள்ளது.

உயிர்ப் பிரச்சினையாக இது இருக்கும் போது தேவையற்ற மற்ற விஷயங்களைப் பிடித்துத் தொங்காமல் இருப்பதே இப்போது முக்கியம் என்று நான் கூறுகிறேன். நீங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/07/2006

கொள்கை வேட்டி என்றால் அண்ணாவுக்கும் வேட்டியில்லை

வைக்கோ அவர்கள் பதவி என்னும் துண்டுக்காக கொள்கை வேட்டியை இழந்தார் என சிலர் குரல் கொடுத்துள்ளனர். அவர் மட்டுமா? பெற்றால் திராவிடநாடு, இல்லையெனில் சுடுகாடு என்று பொருள்பட கோஷம் இட்டவர் அண்ணா அவர்கள். யாருமே திராவிட நாடு கேட்கவில்லை என்றாலும் தான் மட்டும் காஞ்சியில் ஒரு வீட்டின் திண்ணையில் இருந்தவாறு கேட்டுக் கொண்டிருக்க போவதாக முழங்கியவர் அவர். ஆனால் என்ன ஆயிற்று? தனி நாடு கேட்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம் அவ்வாறு கேட்கும் கட்சியின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வந்த உடனேயே அவர் அவசர அவசரமாக அக்கொள்கையை தியாகம் செய்தார், பதவி என்னும் மேல் துண்டுக்காகாக. அவரது அருமைத் தம்பிமார்கள் மட்டும் வேறு எப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இப்போது வைக்கோ என்ன செய்து விட்டார் என்று இவ்வளவு எதிர்வினைகள்? அவரை ஒரு பெரிய பீடத்தில் ஏன் நிறுத்த வேண்டும்? அவரும் ஒரு அரசியல்வாதியே. தன் கட்சியின் நலனுக்காக அவர் செய்து கொள்ள வேண்டிய சமரசத்தை அவரே தீர்மானித்துக் கொள்வார். அவர் நெற்றியில் என்ன தியாகி என்று எழுதியா ஒட்டியிருக்கிறது? அவருடைய உழைப்பு மட்டும் வேண்டும் ஆனால் அவர் கட்சிக்கு மிகக் குறைவாக அதுவும் அடாசு தொகுதிகளைத்தான் தருவோம் என சுயநலத்தை மனதில் கொண்டு கருணாநிதி அவர்கள் செயல்படும்போது வைக்கோ இவ்வாறு செய்ததுதான் சரி. அதுவும் கடைசி வரை எல்லோரையும் சஸ்பென்சில் வைத்து கடுக்காய் கொடுத்ததும் சரியே. எந்த அறிவிப்பை எப்போது வெளியிட வேண்டும் என்று அவருக்கு தெரியாதா என்ன?

இப்போது தமிழக வாக்காளர்களுக்கு முன்னால் இரு சாத்தியக்கூறுகள் உள்ளன. திமுக அல்லது அஇஅதிமுக. நம் முன்னால் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை தீவிரவாதம். அதை உறுதியாக எதிர்ப்பது ஜெ மட்டுமே. கருணாநிதி அவர்கள் அல்ல. அரசு ஊழியர்கள் ப்ளேக்மெயில் செய்ய இயலாத வண்ணம் நிலைமையை சமாளித்தவர் ஜெ அவர்களே. மழை நீர் சேமிப்புத் திட்டத்தை இரும்புக்கரம் கொண்டு செயலாக்கியவரும் அவரே. கருணாநிதி அவர்களால் அவ்வாறு நிச்சயம் செயல்பட்டிருக்க முடியாது. சொதப்பியிருப்பார்.

மேலும் இப்போது சுமங்கலி கேபிள் விஷன் செய்யும் அடாவடிகள் திமுக ஜெயித்தால் அதிகமாவதற்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு. ஜெயும் பல தவறுகள் செய்துள்ளார் என்பதையும் மறுக்க இயலாது. ஆனாலும் மத்தியில் இருக்கும் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் மாநில அளவில் செக் வைக்க தற்போது அவரால்தான் முடியும்.

சோ அவர்கள் துக்ளக் 36-வது ஆண்டு விழா கூட்டத்தில் இது சம்பந்தமாக கூறியதை அப்படியே வழிமொழிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/04/2006

IDPL நினைவுகள் - 4

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

திடீரென 1990-ல் ஒரு பிரெஞ்சுக்காரர் ரிஷிகேஷில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து 21 நாட்கள் டேரா போட, அவருக்காக துபாஷி வேலை செய்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளை விடாமல் செய்து வந்ததால் அந்த வேலையை இடது கை விளையாட்டாகச் செய்தேன். எங்கள் தலைமை நிர்வாகிக்கு ஒரே ஆச்சரியம். அவர் என்னிடம் "ராகவன், இங்கு கிட்டத்ததட்ட 8 வருடங்களாக பெரிய அளவில் பிரெஞ்சுவேலை எதுவும் வரவில்லை, இருப்பினும் நீங்கள் நேற்றுத்தான் விட்டது போல எப்படி சமாளித்தீர்கள்?" எனக்கேட்டார். அவரிடம் உண்மையையா கூற முடியும்? வேறு மாதிரி சமாளித்தேன். "ஐயா இது சைக்கிள் விடுவதைப் போலத்தான். பல ஆண்டுகள் சைக்கிளையே தொடாவிட்டாலும் பேலன்ஸ் செய்வது எப்படி மறந்துப் போகும்?"

இந்த இடத்தில் சைட் பிசினஸ் செய்வதைப் பற்றி என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிப் பேராசியர்களாகவோ அல்லது ஏதாவது கம்பெனிகளுக்கு முழு நேர மருத்துவப் பணிக்கோ போகும் போது. தனி ப்ராக்டீசில் ஈடுபடக் கூடாது என்று விதி உண்டு. ஆனால் அதற்குப் பதில் அவர்களுக்கு அம்மாதிரி தனித் தொழில் செய்யாததற்கான ஈட்டுத் தொகை சம்பளத்துடன் வழங்கப்படும். அதே போல ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்றும் விதி இருப்பதாக அறிகிறேன். இங்கு இதற்காக ஏதும் ஈட்டுத்தொகை வழங்கப் படுவதாகத் தெரியவில்லை. எது எப்படியாயினும் அதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை.

சில வேலைகளில் நிறைய மிகுதி நேரம் கிடைக்கிறது. நான் வேலைப் பார்த்த நிறுவனத்தில் தினப்படி வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம். பிறகு என்ன செய்வது? எல்லோருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருக்கும் என்றுக் கூற இயலாது. 90 சதவிகிதத்துக்கும் மேலான அளவில் அவ்வாறு ஓய்வு நேரம் அதிகம் உள்ளவர்கள் பேசிப் பேசியே அலுவலக வம்புகளுக்கு வழி வகுக்கின்றனர். ஆனால் திறமையுள்ள சிலர் அலுவலக வேலைக்கு ஒரு பங்கமும் வாராது மற்ற வேலைகள் செய்துப் பொருள் ஈட்டுகின்றனர்.

எனக்குக் கீழே ஒரு மெக்கானிக் பணி புரிந்தார். ஏர் கண்டிஷன் தொழில் நுட்பத்தில் திறமை அதிகம் அவருக்கு. கம்பெனி வேலைகளை உடனுக்குடன் முடித்துப் பிறகு தன் சொந்தத் தொழிலையும் கவனிப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். (அப்போதுதானே வெளி வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும்). அவரிடம் கம்பெனி வேலையிருந்தால் அதற்குத்தான் முதலுரிமை என்று இருப்பார். வெகு வேகமாக அந்த வேலையை முடித்து வேறு வேலையில் ஈடுபடுவார். எனக்குத் தெரியும் அவர் இம்மாதிரி வெளி வேலைகளை எடுத்துச் செய்கிறார் என்று. அதனால் என்ன? வெளி வேலை எதையும் செய்யாது அதே சமயம் கம்பெனி வேலையையும் சொதப்பும் மற்ற மெக்கானிக்குகளை விட அவர் பல மடங்கு மேலானவர்.

நான் மட்டும் என்ன? நான் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் நான் பாட்டுக்கு வெளி மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்து வந்தேன். ஆகவே 12 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு எடுக்கும் சமயம் ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்காக வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தனர்.

இதனால் கூறப்படும் நீதி யாது?

பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். முழு நேர வேலையும் சைட் பிசினெஸும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாது இருக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தெரியக் கூடாது. தேவையற்ற அச்சுறுத்தல்கள்தான் அதன் பலன். அதே மாதிரி வெளி வேலைகளைப் பற்றி உங்கள் கம்பெனியில் மூச்சு விடக் கூடாது. யாருடனும் சண்டைப் போடக் கூடாது. அதெல்லாம் வம்பு பேசுபவர்களின் உரிமை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். இதனால் கிடைக்கும் நல்லப் பெயர் ஒரு தனி போனஸ்.

அது சரி, நான் இவ்வாறு செய்தது யாருக்குமே தெரியாமல் போயிற்றா என்ற கேள்வி உங்கள் மனதில் கண்டிப்பாக எழும். பலருக்குத் தெரியும். அவர்களில் பலர் என்னைப் போலவே செயல்பட்டவர்கள். மனைவி பெயரில் இன்ஷூரன்ஸ் ஏஜென்சி எடுப்பது, யூ.டி.ஐ. பாண்டுகளுக்கான புரோக்கர் வேலை எல்லாம் செய்தனர். தனிப்பட்ட விரோதம் இருந்தால் ஒழிய யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் கூறினேன், எல்லோருடனும் சுமுகமாகப் பழக வேண்டுமென்று.

என்னுடைய மொழிபெயர்ர்ப்புகளை தட்டச்சு செய்ய இரு டைப்பிஸ்டுகளின் சேவையை பெற்றுக் கொண்டேன். அவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு இவ்வளவு எனக் கணக்கு போட்டு கைமேல் காசு அளித்ததால் எனக்காக வேலை செய்ய அவர்கள் இருவரிடையேயும் நல்லப் போட்டி. அவர்களிடம் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன். ஐ.டி.பி.எல் வேலைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். அதில் எந்த சுணக்கமும் காட்டலாகாது. அவர்களும் அவ்வாறே செய்ததில் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கும் திருப்தியே. ஒரு டைப்பிஸ்டின் மேலதிகாரி என்னிடம் ஒரு முறை வெளிப்படையாகவே கூறினார், "நீங்கள் அவளுக்கு வேலை கொடுப்பதால் நான் கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுகிறாள், நன்றி" என்று.

பதிவை முடிக்குமுன் ஒரு சிறு தமாஷ். எனக்கு இஞ்சினியராக 23 வருடங்கள், ஜெர்மன் மொழிப் பெயர்ப்பாளனாக 31 வருடங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாக 28 வருடங்கள் அனுபவம் ஆக மொத்த அனுபவம் 82 வருடங்கள் ஆனால் என் வயது 60-க்கும் கீழேதான் என்று ஒரு புது வாடிக்கையாளரிடம் கூறுவேன். அவர் வியப்புடன் இது எவ்வாறு சாத்தியம் என்றுக் கேட்டால், "ஓவர்டைம்" என்பேன் சிரிக்காமல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/03/2006

புகார் கடிதங்கள் எழுதுவது பற்றி - 2

புகார் கடிதங்கள் பற்றி நான் ஏற்கனவே இட்ட இந்தப் பதிவில் சுவாரசியமான பின்னூட்டங்கள் வந்திருந்தன. "புகாரை கேட்டு பதில் வந்தால் பரவாயில்லை.ஆட்டோ வரும் நிலை அல்லவா தற்போது இருக்கிறது?" என்று நாட்டாமை அவர்கள் கேட்டிருந்தார். பல நேரங்களில் அது உண்மையே. அதற்கு சில அடாவடி காரியங்கள் செய்ய வேண்டும். அதைப் பற்றிப் பிறகு.

ஒருவரிடம் நாம் ஒரு காரியம் செய்து தருமாறு கேட்கிறோம். அதை எப்படிக் கேட்பது? அந்தக் காரியத்தை நமக்கு செய்து தருவதில் சம்பந்தப்பட்ட ஆளுடைய நலனும் அடங்கியிருக்கிறது என்பதை தெளிவுபட அவருக்கு காட்டுவது ஒரு நல்ல வழி என்று டேல் கார்னகி 1930களிலேயே கூறிவிட்டார்.

இதற்கு உதாரணமாக நான் எழுதிய ஒரு புகார் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். எழுபதுகளில் ஒரு நாள் எக்மோரில் பஸ் பிடித்து தியாகராய நகர் சென்றேன். பஸ்ஸில் ஏறி, முன்னால் ஒரு வரிசையில் சீட் காலியாக இருக்க அதில் போய் உட்கார்ந்தேன். டிக்கட் வாங்க கண்டக்டர் எங்கே என்றுபார்த்தால் அவர் பின்னால் தன் சீட்டில் உட்கார்ந்து பாக்கு மென்றுக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் கண்டக்டர்கள் பஸ்ஸில் முன்னும் பின்னும் சென்று டிக்கட் தரவேண்டும் என்பது அவர்கள் கடமைகளில் ஒன்றாக இருந்தது. கண்டக்டரிடம் நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு டிக்கட் தருமாறு குரல் கொடுக்க அவர் என்னைக் கண்டுகொள்ளாமல் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று முறை கேட்டும் அவர் அசைவதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை கேட்ட போது அலட்சியமாக அவர் என்னிடம் வேண்டுமென்றால் அவர் இடத்திற்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். எழுந்து சென்றால் சீட் பறிபோய்விடும் என்ற நிலை, ஏனெனில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். நிலைமை சற்று மோசமாயிற்று. என் பக்கத்தில் இருந்தவர் என்னிடம் அந்த குறிப்பிட்ட கண்டக்டர் அப்படித்தான் எல்லோரிடமும் நடந்து கொள்கிறார் என்று கூறிவருத்தப்பட்டார். நான் ஒன்று செய்தேன், டிக்கட் வாங்கவில்லை. கண்டக்டரிடம் அவர் வந்துதான் தர வேண்டும் என்றுகூறி அமர்ந்து விட்டேன். அவரும் வர மறுத்து விட்டார். அதற்குள் தி.நகர் பாண்டிபஜார் நிறுத்தம் வர, டிக்கட் வாங்காமலேயே இறங்கிவிட்டேன். நடுவில் செக்கிங்க் வந்திருந்தால் என் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும். பத்து ரூபாய் அபராதம் கட்ட வரவேண்டியிருந்திருக்கும். இருந்தாலும் அந்த ரிஸ்கை தெரிந்தே எடுத்தேன்.

இப்போது செய்ததுதான் உச்சக் கட்டம். டிக்கட்டின் விலை வெறும் 25 பைசா மட்டுமே. நேரே தி.நகர் தலைமை தபால் நிலையம் சென்று 50 பைசாவுக்கு ஒரு போஸ்டல் ஆர்டர் வாங்கினேன். அதை க்ராஸ் செய்து பல்லவன் போக்குவரத்துக் கழகம் பெயரை நிரப்பினேன். பல்லவன் தலைமை அலுவலகத்துக்கு புகார் கடிதத்துடன் போஸ்டல் ஆர்டரையும் இணைத்தேன். புகார் கடிதத்தில் நடந்தது நடந்தபடி கூறினேன். கண்டக்டருக்கும் எனக்கும் இது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆனதை வருத்தத்துடன் குறிப்பிட்டுவிட்டு, என் செயலுக்கு மன்னிப்பு கேட்டு, டிக்கட் விலை 25 பைசா அபாராதம் 25 பைசா என்றக் கணக்கில் போஸ்டல் ஆர்டர் அனுப்புவதாக குறிப்பிட்டேன். பஸ் ரூட் எண், நிகழ்ச்சி நடந்த நேரம் எல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தக் கண்டக்டரை எழுத்துமூலம் கண்டித்ததாகக் கூறப்பட்டிருந்தது. எனக்கு நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் கண்டக்டரின் செயலால் ஒருவர் டிக்கெட் வாங்காமல் சென்றார், இதையே பலரிடமும் செய்திருந்தால் பல்லவனுக்கு வரும் நட்டம் என்னவாயிருக்கும் என்ற ரேஞ்சில்தான் நான் அதைக் குறிப்பிடாமல் இருந்தாலும் நிர்வாகத்தினரின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். ஆக, என் புகார் மேல் நடவடிக்கை எடுப்பது பல்லவனின் நலனுக்கு ஏற்புடையதே.

இப்போது நாட்டாமை அவர்கள் கூறியதற்கு வருவோம். மேலே கூறிய நிகழ்ச்சி இப்போது நடந்திருந்தால் நான் முந்தைய மாதிரி நடந்து கொண்டிருக்கமாட்டேன். அப்போது இளவயசு, விளைவுகளைப் பற்றி ரொம்ப கவலைப்படவில்லை. இப்போது அப்படியா? இப்போது என் பெயர் விலாசம் குறிப்பிடாமல் போஸ்டல் ஆர்டரை அனுப்பி, அதே கடிதத்தை எழுதியிருப்பேன். மொட்டைக் கடுதாசிகளுக்கு அவ்வளவு மரியாதை இல்லையென்றாலும், தங்கள் வருமானம் போகிறது என்று நிறுவனம் நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்.

இந்த இடத்தில் என் நண்பர் அரோரா அவ்ர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் சென்னைக்கு டூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் பஸ்ஸில் அவர் பர்ஸை ஜேப்படி செய்துவிட்டார்கள். அவர் குய்யோ முறையோ என ஊரைக் கூட்டி தன் பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய்கள் வரை வைத்திருந்ததாகக் கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார், நானும் அவர் ஹிந்தியில் கூறியதை தமிழில் மொழிபெயர்த்து கூற பஸ்ஸில் ஒரே கலாட்டா.

பஸ்ஸிலிருந்து இறங்கி அவர் தில்லி திரும்பச் செல்வதற்காக சென்ட்ரல் சென்றார். நானும் அவர் கூடவே சென்று போலீஸ் புகார் கொடுக்கச் சொன்னதற்கு, அவர் சிரித்துக் கொண்டே, பர்ஸில் ரூபாய் ஒன்றும் இல்லை என்றும் சில பில்கள் மட்டும் இருந்ததாகவும் கூறி, பணம் தன் உள்பையில் பத்திரமாக இருந்ததாகக் கூற, எனக்கு ஒரே திகைப்பு. ஏன் அவ்வாறு பஸ்ஸில் கத்தினார் என்று கேட்டப்போது ஜேப்படி செய்பவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கும், சக ஜேப்படித் திருடர்களுக்கும் பங்கு தர வேண்டியிருக்கும் என்றும், அவர் பர்ஸை கொள்ளையடித்த அந்த அப்பன் பெயர் தெரியாத பயல் பத்தாயிரம் ரூபாய்க்கேற்ப போலீஸ் மாமூலைக் கொடுத்து சாகட்டும் என்று கூறிவிட்டு ரயிலேறினார். அவர் வெளியூர்க்காரர், அவர் வீட்டுக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பமுடியாது அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

3/01/2006

வாழ்க்கை அற்புதமயமானது

இந்த வார நட்சத்திரமான நிலாப்பெண்ணின் இப்பதிவு என்னை என்னுடைய இந்தப் பதிவை மறுவெளியீடு செய்யவைத்துவிட்டது.

வருடம் 1998. அப்போது டில்லியில் இருந்தேன். ப்ரிட்டிஷ் கவுன்ஸில் நூலகத்திலிருந்து மொழிபெயர்ப்புக் கலை பற்றி ஒரு புத்தகம் படிப்பதற்காக எடுத்து வந்தேன். அச்சமயம் எனக்கு 23 வருடங்கள் மொழி பெயர்ப்பு அனுபவம் இருந்தது. புத்தகத்தை படிக்கப் படிக்கத் தலை சுற்ற ஆரம்பித்தது. ஆசிரியர் எழுதுகிறார்: "மொழிபெயர்ப்பாளர்களுக்கு இன்றியமையாதத் தேவை ஒரு நல்லக் கணினி".
நான் வியந்தது: "கணினியா? அது எதற்கு?" அது வரை என் மொழிபெயர்ப்புகள் எல்லாம் கையாலேயே எழுதப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் விரும்பினால் சாதாரண டைப்ரைட்டரில் தட்டச்சு செய்விப்பேன், அவ்வளவுதான்.

மேலே ஆசிரியர் கூறுகிறார்: "மூலப் பிரதியைப் பார்த்ததும் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரின் விரல்கள் தன்னைப்போலவே விசைப்பலகையில் பறக்க ஆரம்பிக்கும்."
பெருமூச்சு விடுவதை விட வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு.

வருடம் 2002. சென்னைக்கு வந்து 7 மாதங்கள் ஆகி விட்டிருந்தன. அது வரை கணினி வாங்காமல் பஜனை செய்துவந்த நான் கணினி வாங்க வேண்டியக் கட்டாயம் வந்தது. தட்டுத் தடுமாறி கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். எடுத்த எடுப்பில் ஒரு எக்ஸெல் கோப்பு வந்தது. ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. என் நண்பன் உதவியுடன் செய்து முடித்தேன். அதன் பிறகு என்னவென்றால் இத்தனை வருடம் கணினி இல்லாமல் எப்படிக் காலம் கழித்தேன் என்று பிரமிப்பாக உள்ளது. இப்பதிவை சற்றே மாற்றியமைக்கும்போது என் விரல்கள் தட்டச்சுப் பலகையில் தன்னைப்போல நடனம் செய்கின்றன என்பதைப் பார்க்கும்போது மனது பூரிக்கிறது.

கணினியைத் தொடும்போது எனக்கு வயது 56. தினம் ஒரு புதிய பாடம் கற்றதில் 30 வயது குறைந்துப் போனது என் மனதில். நான்காண்டுகளுக்குப் பிறகும், 60 வயதை தொடப்போகும் இந்த நிலையிலும் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். இதைத்தான் பெரிசுகள் அடிக்கும் லூட்டி என்று பலரும் தமிழ்மணத்தில் அலுப்புடன் என்னைப்பற்றியும், ஜோசஃப், தருமி, ஞானவெட்டியான் மற்றும் என்னார் அவர்கள் பற்றியும் கூறுகிறார்கள் என்பதையும் சந்தோஷத்துடன் பார்க்கிறேன்.

தமிழ் வலைப்பூ பதிக்க ஆரம்பித்ததில் மனமே ஜிவ்வென்று வானை நோக்கிப் பறக்கிறது. தமிழில் தட்டச்சு செய்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது? சவலைக் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்ததுப் போல் உள்ளது. தாய் மொழியின் சுகமே தனிதான். இவ்வளவு மாதங்கள் பிறகு இன்றைக்கும் அதே பிரமிப்புதான்.

இணையத்தின் உதவியும் இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் நான் கார்களில் பொருத்தப்படும் ரேடியோ ஆம்ப்ளிஃபையர்கள் சம்பந்தமாக ஒரு operating manual-ஐ ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட வணிகப் பெயரைத் தாங்கிய கருவி அது.

இந்த இடத்தில் நான் மொழி பெயர்ப்பு எவ்வாறு செய்கிறேன் என்பதையும் விளக்க வேண்டியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் கோப்பை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்புவர். அதை என் வன்தகட்டில் இறக்கிக் கொண்டு "இப்படிச் சேமி" நகல் எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக் கோப்புகளையும் இரண்டு தனி ஜன்னல்களில் திறந்துக் கொள்கிறேன். அவ்விரண்டையும் ஒன்றின் மேலொன்றாய் அடுக்கிக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இரு கோப்புகளும் ஒரு மொழியிலேயே இருக்கும். கீழே இருக்கும் கோப்பைப் படித்துக் கொண்டே மேலே இருக்கும் கோப்பில் தேவையான மொழிக்கு மாற்றுகிறேன். அவ்வளவுதான். எல்லாம் முடிந்தப் பிறகு என் வசம் இரண்டுக் கோப்புகள் ஒரே கட்டமைப்பில், ஒரே பக்க எண்களுடன் இருக்கும். எல்லா விதத்திலும் ஒன்று போலவே இருக்கும், ஆனால் மொழிதான் வேறு. ப்ரின்ட் அவுட்டா? மூச். தேவையே இல்லை. வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல்லில் மொழிபெயர்ப்பை அனுப்ப வேண்டியதுதான்.

ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை என்னைப் போன்றவர்கள் நேரடி மொழி பெயர்ப்பு என்று கூறுவோம். அதாவது வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்கோ அல்லது அதன் ஈடான மொழிக்கோ (ஆங்கிலம்) மொழி பெயர்ப்பதுதான் அது. அதுவே ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கொ அல்லது பிரெஞ்சுக்கோ மொழி பெயர்ப்பது ரிவர்ஸ் மொழி பெயர்ப்பு என்று ஆகிவிடும். இது உலகளாவிய நிலை. ஜெர்மனை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு நிலைமை நான் எனக்கு கூறிக் கொண்டதற்கு தலைகீழ் ஆகும்.

மொழிபெயர்ப்பு உலகில் இப்போதைய நிலை என்னவென்றால் முடிந்த வரை வேறு மொழியிலிருந்து தாய்மொழிக்குத்தான் மொழி பெயர்க்க வேண்டும், ரிவர்ஸ் மொழிபெயர்ப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனாலும் நான் பலமுறை அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.

இப்போது நான் மேலே குறிப்பிட்ட வேலைக்கு வருவோம். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாக்கியத்தை பிரெஞ்சில் எழுதியதும் அது சரியா, அதாவது பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒத்துக் கொள்வார்களா என்று பார்ப்பது முக்கியம். இல்லாவிட்டால் வாக்கியம் இலக்கண சுத்தமாக இருந்தாலும் அதற்கு உயிர் இருக்காது என்பதே உண்மை. அதற்காக இந்த இடத்தில் நான் பிரெஞ்சு கூகிளை திறந்து வைத்துக் கொண்டேன். நான் மொழி பெயர்த்த ஒரு பிரெஞ்சு வாக்கியத்தை தேடு பெட்டியில் போட்டு க்ளிக் செய்தேன். கிட்டத்தட்ட 10 hits கிடைத்தன. அதாவது நான் எழுதிய வாக்கியம் ஒத்துக் கொள்ளக் கூடியதே. ஆனால் இங்கு இன்னொரு சோதனை முக்கியம். அந்த வாக்கியம் வரும் தளங்கள் பிரெஞ்சுத் தளங்களாக இருக்க வேண்டும். ஆங்கிலத் தளங்களாக இருந்தால் அவையும் என்னைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்த வேலையையே குறிக்கும். அவ்வளவு சிலாக்கியமானதாக அவற்றைக் கருத முடியாது. ஆகவே தளம் தளமாக அதையும் பார்க்க வேண்டியிருந்தது. என்ன ஆச்சரியம் அவற்றில் ஒன்று நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த கம்பெனியின் ஆம்ப்ளிபையரைப் பற்றியதே. ஆனால் என்ன பொருளின் நம்பரில் சிறிது மாற்றம் அவ்வளவே. மற்றப்படி பத்திகள் எல்லாம் அப்படியே இருந்தன. தளமும் பிரெஞ்சுத் தளமே.

பிறகு என்ன, வேலை சுலபம்தானே. அந்த சுட்டியில் குறிப்பிட்டிருந்த கட்டுரையை அப்படியே ஒரு word கோப்பில் நகலெடுத்துக் கொண்டு, நம்பர்களை மட்டும் தேவைக்கெற்ப மாற்றியதில் என் வேலைக்கான மொழிபெயர்ப்பு தயார். மூன்று நாள் எடுத்திருக்க வேண்டிய வேலை இப்போது ஒரே நாளில் முடிந்தது. சம்பந்தப்பட்ட கட்டுரை பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டவரால் செய்யப்பட்டிருந்ததுதான் இன்னும் உபயோகமான விஷயம். வாடிக்கையாளருக்கும் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி.

முன்பெல்லாம் பல நூலகங்களுக்கெல்லாம் சென்று பல நாட்கள் படிக்க வேண்டியிருந்தது. இப்போது இதையெல்லாம் வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது. இதற்கு கூகிள் மற்றும் இணையம் உதவுகின்றன.


இம்மாதிரி தமிழ்மணத்தில் பதிவுகள் போட்டு, பின்னூட்டங்கள் இட்டு என்று சுவாரசியமாக காலம் கழிக்கும்போது வாடிக்கையாளர் அனுப்பும் கோப்புகளைத் தாங்கி வரும் மின்னஞ்சல்கள் பற்றிய அறிவிப்பு கூகிள்டாக் கொப்புளத்தில் மேலே எழும்புகின்றன. உடனே தமிழ்மண வேலையை சற்றே ஆறப்போட்டு அந்த வேலைகளைச் செய்து திருப்பி அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் பெறும் சந்தோஷம் அவர் எனக்கு மேலும் வேலைகள் அனுப்புவதில் முடிகிறது.

வாழ்க்கை அற்புதம். ஒவ்வொரு நொடியும் அனுபவிக்க அனுபவிக்க, என் மனம் மிக உவகை கொள்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பென்ஷன் கிடைத்தது எப்படி

நான் ஐ.டி.பி.எல். பற்றிய இப்பதிவில் CPWD பென்ஷன் கிடைத்ததை பற்றி கோடி காட்டியிருந்தேன். அது கிடைத்ததே ஒரு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம்தான்.

ஆகஸ்ட் 1980-ல் ஐ.டி.பி.எல். பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்காக ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. அதில் வெறும் தபால் பெட்டி எண் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று வெறுமனே ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தேன். சாதாரணமாக முறையான வழி மூலமாக (through proper channel) அனுப்பவேண்டிய விண்ணப்பம் நேரடியாக அனுப்பப்பட்டது. ஆனால் அரசு துறையில் வேலை செய்பவர்கள் வேறு வேலைகளுக்கு விண்ணப்பம் மேலே கூறியபடித்தான் அனுப்பவேண்டும். அதுவும் வருடத்திற்கு இரு விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்ப இயலும். எனக்கு என்னவோ இந்த வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லை. ஆகவே இதற்காக விண்ணப்பம் அனுப்புவதற்கு இருந்த இரு வாய்ப்புகளில் ஒன்றை இழக்க நான் விரும்பவில்லை. ஆகவே நடப்பது நடக்கட்டும் என நேரடியாகவே விண்ணப்பம் அனுப்பினேன்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நேர்க்காணலுக்கான அழைப்பு ஐ.டி.பி.எல்லிடமிருந்து வந்தது. அப்போதுதான் இது ஐ.டி.பி.எல். கொடுத்த விளம்பரம் என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில் நான் நேரடியாக விண்ணப்பித்திருந்ததால் CPWD-யிடமிருந்து ஆட்சேபம் இல்லல என்றக் கடிதம் பெற்றுவர வேண்டும் என்றும், அதன்றி நேர்க்காணல் நடக்காது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இங்குதான் நான் ஒரு வேலை செய்தேன். எங்கள் S.E.-க்கு No objection letter கேட்டு அனுப்பிய விண்ணப்பத்தில் நான் ஏன் நேரடியாக வேலைக்கான விண்ணப்பம் அனுப்பலாயிற்று என்பதன் உண்மைக் காரணத்தை (மேலே கூறியது) அப்படியே கூறினேன். மேலும் No objection letter தரும்போது நான் through proper channel மூலம் வின்ணப்பம் அனுப்பியதாகக் கருதப்பட்டு லியன் வைத்துக்கொள்ளும் உரிமையும் கேட்டிருந்தேன்.

அப்போது எஸ்.இ. திரு. கண்ணன் அவர்கள். அவர் என்னைக் கூட்டியனுப்பி முதலில் நேரடியாக விண்ணப்பம் அனுப்பியதற்கு நன்றாகக் காய்ச்சினார். நான் ஒன்றே ஒன்றுதான் கூறினேன். "சார், நான் செய்தது தவறே, இருப்பினும் அதற்கானக் காரணத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டேன். என் கோரிக்கையை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கையில். எனக்கு மே 13 தில்லியில் நேர்க்காணல். மே 10-க்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் டிக்கட் புக் செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி அளிக்காத பட்சத்தில் அதை உடனடியாகக் கூறிவிட்டால், என்னுடைய டிக்கட் ரத்து செய்யும் கட்டணம் குறையும்" என்று கூற அவர் சிரித்துவிட்டார். உடனே சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்: "சரி போன வருட ரிக்கார்டைப் பார்ப்பேன். நீங்கள் விண்ணப்பம் செய்ய இரண்டு சான்ஸ்களையும் பயன்படுத்தியிருந்தால் பொய் கூறியதற்காக உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இல்லையென்றால் நீங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" எனக்கூறி விட்டார். அவ்வாறே செய்யவும் செய்தார். நான் through proper channel விண்ணப்பம் அனுப்பியதாக post facto ஒப்புதல் கொடுத்தார். உண்மை கூறியதற்கு கைமேல் நல்ல பலன்!

இதெல்லாவற்றையும் நான் கதையாக எழுதியிருந்தால் அதீத கற்பனை என்று பல விஷயம் தெரிந்தவர்கள் கூறியிருப்பார்கள். அப்படித்தான் ஆஃபீஸ் சூபரிண்டெண்டண்ட் திரு சிதம்பரம் அவர்களுக்கும் மனது ஆறவேயில்லை. அதெப்படி through proper channel முறையின்றி அனுப்பிய விண்ணப்பத்திற்கு post facto ஒப்புதல் கொடுக்கப் போயிற்று என்று அங்கலாய்த்தார். அப்படியே கண்ணன் அவர்கள் அறைக்கு சென்று அவ்வாறே கூறினார். அவர் சிதம்பரத்திடம் ஒரே கேள்விதான் கேட்டார்: "எஸ்.இ. நீங்களா அல்லது நானா" என்று, சிதம்பரம் அவர்கள் "நீங்கள்தான் சார்" என்று கூற அவரிடம் "உங்கள் சீட்டுக்கு சென்று உங்கள் வேலையைப் பாருங்கள்" என்று கடுமையாகக் கூறிவிட்டார்.

இதனால் என்ன ஆயிற்று என்றால், நான் ஐ.டி.பி.எல்லிலேயே இருக்கிறேன் என எழுதிக் கொடுத்ததும் நான் CPWD-யில் வேலை செய்த பத்து வருடத்துக்கு கணக்கிட்டு pro rata பென்ஷன் கொடுத்தார்கள். அங்கு என் கணக்கில் இருந்த 78 நாள் earned leave ஐ.டி.பி.எல்லுக்கு மாற்றப்பட்டது. CPWD பென்ஷன் இப்போதும் கிடைத்து வருகிறது. நான் CPWD-யை விட்டப்போது என் சம்பளம் 1100 ரூபாய்கள், இப்போது பென்ஷன் 2000 ரூபாய்களுக்கும் மேல். எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்தேன்.

ஐ.டி.பி.எல்லில் நான் பெற்ற வேறு அனுபங்கள் பற்றி வரும் பதிவுகளில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது