11/30/2007

மனதிருந்தால் மார்க்கமுண்டு

என் கணினி குரு முகுந்தனிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதை கீழே தமிழாக்கித் தந்துள்ளேன்.

"இது எப்படி இருக்கு?

தந்தை: "நான் சொல்லும் பெண்ணைத்தான் நீ கட்ட வேண்டும்"
மகன்: "எனது மனைவியை நானே தேர்ந்தெடுத்து கொள்வேன்!"
Father: "நான் சொல்லும் பெண் பில் கேட்ஸின் மகளாயிற்றே."
Son: "ஓ அப்படியா, ... சரிப்பா. நீங்கள் சொல்லற மாதிரி நடந்து கொள்வேன்"

இப்போது - தந்தை பில் கேட்ஸிடம் செல்கிறார்.
தந்தை: "உங்கள் பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் கொண்டு வந்துள்ளேன்."
பில் கேட்ஸ்: "ஆனால் என் பெண் இன்னும் சிறுமிதான். கல்யாண வயதில்லை அவளுக்கு!"
தந்தை: "ஆனால் நான் சொல்லும் வரன் உலக வங்கியின் வைஸ் பிரசிடெண்ட்."
பில் கேட்ஸ்: "ஓ, அப்படீன்னாக்க... சரி"

கடைசியில் தந்தை உலக வங்கியின் பிரசிடண்டை காணச் செல்கிறார்.
தந்தை: "வைஸ் பிரசிடண்டாக வருவதற்கு ஒரு அருமையான இளைஞன் தயார்."
பிரசிடெண்ட்: "சரியாப்போச்சு. இருக்கற வைஸ் பிரசிடண்டுகளே எதேஷ்டம்!"
தந்தை: "ஆனால் நான் சிபாரிசு செய்பவன் பில் கேட்ஸின் மாப்பிள்ளையாச்சே."
பிரசிடெண்ட்: "ஓ, அப்படீன்னா...சரி"

இப்படித்தான் பிசினஸ் செய்யோணும்!!

நீதி: உங்க கிட்டே ஒண்ணுமேயில்லேன்னாலும் நீங்கள் முயன்றால் எதை வேண்டுமானாலும் பெறலாம். ஆனாக்க அதற்கு நேர்மறை எண்ணங்கள் அவசியம்.

நாம் என்னவாகவும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்க வேண்டும்....பிறகு..... அதைத் திட்டமிட வேண்டும்....நிறைவேற்ற வேண்டும்.....

பகல் கனவோ இரவுக் கனவோ, அவற்றால் பலன் என்ன?
முயற்சி...முயற்சி....துவக்கு...துவக்கு .துவக்கு.......
வெற்றிதான் கிடைக்கும் ...நல்ல விளைவுகள்தான் கிட்டும்.....
முயற்சித்துத்தான் பாருங்களேன்…"

சற்று ஓவர் கற்பனைதான், வெறுங்கை முழம் போடும் வேலைதான். இல்லையென்று சொல்லவில்லை. இருப்பினும் கதையின் நீதி நன்றாக உள்ளது. நான் முன்பொருமுறை சொன்ன கதையின் நீதியை விட நன்றாகவே உள்ளது.

டால்ஸ்டாய் கதை ஒன்று. ஒரு போர்வீரன் போர்முனையிலிருந்து வீட்டுக்கு திரும்புகிறான். நீண்ட பயணம். ரொம்ப தூரம் நடக்க வேண்டும், ஊர் ஊராக. சாப்பாட்டு வேளையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த பெண்மணியிடம் தன்னிடம் ஒரு அதிசயக்கல் இருப்பதாகவும் அதை வைத்து நல்ல சூப் தயாரிக்க முடியும் என்றும் கூறுகிறான். அவளும் சரியென்று உள்ளே அனுமதிக்கிறாள். அடுப்பை பற்ற வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைக்கிறான். பாதியளவு தண்ணீர் விடுகிறான். சிறிது உப்பையும் போட்டு விட்டு, பெண்மணியிடம் பேச்சு கொடுக்கிறான். சற்று வெங்காயம் இருந்தால் அவன் தயாரிக்கும் சூப் இன்னும் சூப்பராக இருக்கும் எனக் கூற அவளும் கறிகாய் கூடையை எடுத்து வருகிறாள். விறுவிறுவென வெங்காயத்தை உரித்து அரிந்து பாத்திரத்தில் இட்டு கலக்குகிறான். பிறகு "அடேடே கொத்தமல்லியும் இருக்கிறதே" என்று அதையும் சேர்க்கிறான். பேசிக் கொண்டேயிருக்கையில் அப்பெண்மணி ஏற்கனவே வேக வைத்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு வாசனை அறையில் நிறைகிறது. அவளிடம் கேட்டு ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கையும் உதிர்த்து சூப்பில் போடுகிறான். சூப் தயார். பெண்மணிக்கு சந்தோஷம். போர் வீரனோ அவளுக்கு அக்கல்லைப் பரிசாகத் தந்து விட்டு தன் வழியே செல்கிறான். அடுத்த ஊருக்கு செல்லும் முன்னால் இதே மாதிரி இன்னொரு கல்லித் தேர்ந்தெடுக்கிறான். அடுத்த ஊரில் இதே மாதிரி இன்னொரு வீட்டின் கதவைத் தட்டுகிறான்.

இதுவும் ஓவராக இருக்கிறது என்று நினைப்பவருக்கு எனது அனுபவத்தையும் கூறுவேன்.

சமீபத்தில் 1971-ல் பம்பாயில் வசித்த போது ஒரு திங்கள் கிழமை காலை 10 மணியளவில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கிராஸ் செய்ததற்காக ஸ்க்வாடிடம் மாட்டிக் கொண்டேன். என்னையும் இன்னும் பத்து பேரையும் ரயில்வே மேஜிட்ரேட்டிடம் அழைத்து சென்று அவர் முன்னால் நிறுத்தினர். அவரும் எனக்கு ஐந்து ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று நாள் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு வழங்கினார். என் பாக்கெட்டில் இருந்தது வெறும் 95 பைசாக்கள் மட்டுமே. கூடவே சீசன் டிக்கெட் அவ்வளவே. என் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து யாராவது நண்பரை வரவழைக்கலாம் என்றால் அதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது கனக் ராய் என்னும் ஒருவர் என்னை அணுகினார். ஐந்து ரூபாயை தான் எனக்கு அளிப்பதாகவும் நான் வெளியில் சென்றதும் அவர் தந்த போன் எண்ணில் பேசி அவர் மாட்டிக் கொண்டிருப்பதைக் கூற வேண்டும் என கேட்டு கொண்டார். அத்தனை பேரையும் விட்டு என்னை ஏன் தொடர்பு கொண்டார் எனத் தெரியவில்லை. அவருக்கு எத்தனை அபராதம் என்று கேட்க அவர் தான் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஏறியதால் 15 ரூபாய் அபராதம் என்றும், தன்னிடம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்ததால் வெளியே செல்ல இயலவில்லை என்றும் கூறினார்.

அதே போல வெளியில் வந்து நேரே அலுவலகம் சென்றேன். எனது மேஜை இழுப்பறையில் இருந்த 15 ரூபாயை எடுத்து திரும்ப கனக் ராய் இருந்த இடத்துக்கு வந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் ஆவலுடன் நான் தொலைபேசியில் செய்தி அனுப்பினேனா எனக் கேட்டார். நான் அவரிடம் 15 ரூபாயைக் கொடுத்து பேசாமல் வெளியில் வந்து விடுமாறு கூறினேன். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொண்டார். அவர் என்னிடம் கொடுத்திருந்த அவர் பெயர் முகவரி அடங்கிய சீட்டை அவரிடமே திருப்பித் தந்தேன். நான் அவருக்கு எனது முகவரி அடங்கிய சீட்டைக் கொடுத்து பாக்கி பத்து ரூபாயை மணியார்டர் செய்யுமாறு கூறிவிட்டு வந்து விட்டேன். இரண்டே நாளில் மணியார்டர் வந்தது, "நன்றியுடன் கனக் ராய்" என்று.

காலத்தினால் எனக்கு கனக் ராய் செய்த உதவி ஞாலத்திலும் மாணப் பெரிது. அதற்கு எதிர் மரியாதையே அவரை முழுக்க நம்பியது. அவரும் எனது நம்பிக்கையை காப்பாற்றினார். பிறகு அவரை நான் எப்போதுமே பார்க்கவில்லை. இருப்பினும் அவர் என் நினைவில் எப்போதும் இருப்பார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/23/2007

ஒலிம்பிக் போட்டிகளை இன்னும் எப்படி விறுவிறுப்பாக மாற்றலாம்?

நான் பாட்டுக்கு தேமேனென்று என் கணினியின் முன்னால் அமர்ந்து ஆணிபிடுங்கிக் கொண்டிருந்தேன். அப்போது தனது அலுவலகத்தில் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்த எனது கணினி குரு முகுந்தன் இப்படங்களை அனுப்பியுள்ளான். இவனைப் பற்றியும் இவனது தம்பியைப் பற்றியும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

நேற்றுத்தான் குழந்தை முகுந்தனை தட்டாமாலை சுற்றியது போல இருக்கிறது (சமீபத்தில் 1981-ல்). இப்போது என்னடாவென்றால் இவனுக்கும் திருமணம் ஆகி மனைவி வந்து விட்டாள். நாட்கள் எவ்வளவு வேகமாகப் போகின்றன?

இந்த ஒலிம்பிக் விளையாட்டு படங்களைப் பார்த்ததும் இப்பதிவு போட தூண்டுதல் ஏற்பட்டது. கூகளிட்டு பார்த்தால் இதே படங்கள் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. யாம் பெற்ற இன்பம் பெறுக தமிழ் வலைப்பதிவு உலகமும்.

கத்திச் சண்டை

லாங்க் ஜம்ப்

டைவிங்

ஸ்கீயிங் மற்றும் ஷூட்டிங்

கம்பி விளையாட்டு

வேக ஓட்டம்

மல்யுத்தம்

ரிலே ரேஸ்

கத்திச் சண்டை

படகுப் போட்டி

ஹை ஜம்ப்

குண்டு வீசுதல்

மேலே குறிப்பிட்டவற்றுள் மல் யுத்தம் ஏற்கனவே ரோமானியர்களால் செயல்படுத்தப்பட்டது. அப்போது எல்லா போட்டிகளும் இம்மாதிரி உயிருடன் விளையாடுவதாகவே இருக்கும்.

யார் கண்டது, இம்மாதிரி விளையாட்டுகள் வந்தாலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தேவை நல்ல மொழியறிவு

அருமை நண்பர் சந்திரசேகரன் அவர்கள் இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் ஸ்ரீனிவாச ராகவன் என்பவரது கட்டுரையை சுட்டியிருந்தார்.

அதை என்னால் இயன்ற அளவு தமிழில் சுருக்கி தருகிறேன். இப்போது வரும் வரிகளில் தன்னிலை ஒருமையில் வருவது ஸ்ரீனிவாசராகவன் அவர்களே.

இந்த வார ஆரம்பத்தில் நான் பம்பாய் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு பட்டறையில் பங்கு கொண்டேன். இதற்கு ஏற்பாடு செய்தது அயராது உழைக்கும் பத்மபிரகாஷ் அவர்கள். முன்பு அவர் Economic and Political Weekly-ல் இருந்தார். இப்போது பம்பாய் பல்கலைகழகத்தில் இருக்கிறார்.

பட்டறையின் நோக்கம் அதில் பங்கேற்பவர்களுக்கு எழுதுவதற்கான அடிப்படை விதிகளை போதிப்பதாகும். பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் PhD அல்லது MPhil மாணவர்கள். அவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கும் கட்டத்தில் உள்ளனர்.

நான் பேசும்போது எனது வழக்கமான அறிவுரைகளை எடுத்து வீசினேன். முதலாவதாக, ஒரு வாக்கியத்தில் சுமார் 15 சொற்கள் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். இரண்டாவதாக காற்புள்ளிகளாகப் போட்டு சுழற்றி சுழற்றி எழுதும் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களைப் பார்த்து கொண்டாலே முக்கால்வாசி பிரச்சினைகள் தீரும்.

மூன்றாவது விதி கூட உண்டு: என்ன சொல்ல வேண்டும் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றாக எழுதுவதற்கும் இங்கு சொன்னதற்கும் என்ன சம்பந்தம்? உண்டு.

எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வது இப்போது இந்தியாவில் எல்லோருக்குமே - நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அல்லது கம்பெனி நிர்வாகிகள் என்று யாராக இருந்தாலும் - தேவை என்பதுதான் நிஜம். வெறுமனே மாணவர்களுக்கு மட்டுமல்ல. ஆகவே அதை வளர்க்கும் எந்தப் பாடத்திட்டமும் பின்பற்றத் தகுந்ததே.

ஏனெனில் கடந்த 30 ஆண்டுகளாக கற்றறிந்தவர்களில் 99% பேர்களுக்கு எழுதுவது எப்படி என்பது சொல்லித் தரப்படவில்லை. இதற்கு முக்கியக் காரணமே CBSE தேர்வு முறைகளே.

1970களின் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதும் திறமையை வளர்ப்பது அவ்வளவு முக்கியமேயில்லை என்று CBSE தீர்மானித்தது. ஆகவே, கட்டுரை எழுதுவதைக் கட்டாயமாக்கிய பழைய பிரிட்டிஷ் கல்விமுறை மாற்றப்பட்டது.

அதன் இடத்தில் சிறுகேள்விகள் கேட்கும் பழக்கம் வந்தது. மாநிலக் கல்வி போர்டுகளும் இந்த வழக்கத்தை நகல் செய்தன. தரத்தில் கீழ்நோக்கிப் போக எல்லோருமே எண்பதுகளில் போட்டி போட ஆரம்பித்தனர். பதில்கள் இன்னும் சுருங்கின.

ஆனால் ISC போர்டு மட்டும் இப்போக்கை எதிர்த்தது. இது பற்றி என்னிடம் ஒரு தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு கல்லூரி ஆசிரியை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

முதல் வீட்டுப்பாடத்தை மாணவ மாணவிகள் பூர்த்தி செய்து அளித்த உடனேயே அவருக்கு யார் CBSE-ல் படித்தது யார் அல்லது ISC-ல் படித்தது யார் என்பது புரிந்து விடுமாம். பிந்தையவரின் தரம் உயர்ந்தது.

எழுதும் திறமை பொதுவாக குறைந்ததுடன் இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. அதுதான் இலக்கணம் கற்பிக்கத் தவறுதல் ஆகும். முக்கியமாக எங்கு the போடுவது, எங்கு a அல்லது an போடுவது, எந்தெந்த வேற்றுமை உருபுகளை எங்கெங்கு பயன்படுத்துவது என்ற அடிப்படை அறிவே நிறைய பேரிடம் இல்லை. மற்ற இலக்கண விதிகளைப் பற்றி கூறவே வேண்டாம்.

மற்ற சமூக அறிவியல் பிரிவுகள் எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் பொருளாதாரப் பிரிவில் நன்றாக எழுதக் கூடியவர்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரிய இடைவெளி வந்து விட்டது. பொருளாதாரம் நன்கு தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு பொருளாதாரம் தெரியாது. இரண்டும் தெரிந்தவர்கள் கிட்டத்தட்ட லேது என்றாகி விட்டது.

ஆக, ஆய்வுக் கட்டுஇரைகள் பல கிட்டத்தட்ட புரிந்து கொள்ளவே முடியாத அள்வுக்கு போய்விட்டன. நான் இங்கு குறிப்பிடுவது தெளிவான இலக்கண விதிகளுக்குட்பட்ட எழுத்துகளே ஆகும். ஏதோ எழுதினோமா டாக்டரேட் பெற்றோமா என்ற விட்டேத்தியான மனப்பான்மை வளர்ந்து விட்டது

இதனால் நல்ல பிழைதிருத்துபவர்களது தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களுக்கு அதிகச் சம்பளம் தரவும் தயாராக பலர் இல்லை. ஏனெனில் அக்கட்டுரைகளை படிப்பவர்களது ஆங்கில அறிவும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்வது போல இல்லை. ஆகவே நிலைமை அப்படியே உள்ளது. ஆகவே முன்னே பின்னே இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். பல துறைகளில் இருந்து கட்டுரைகளை நான் மொழிபெயர்ப்பதால், இக்குறை எல்லாத் துறைகளிலும் உண்டு என்பதை அறிவேன். முன்னாலெல்லாம் பொறியியல் நிபுணர்கள் மட்டும் ஆங்கிலத்தில் வீக் என்று இருக்கும். அதனாலேயே இரு துறைகளிலும் போதிய அளவு திறமையுடைய என்னால் நல்ல மொழிபெயர்ப்பாளனாக வரமுடிந்தது என்பதை இங்கே சந்தடிச் சாக்கில் போட்டு வைக்கிறேன். ஸ்ரீனிவாச ராகவன் அவர்களுக்கு இன்னொன்றும் கூற ஆசைப்படுவேன். இம்மாதிரி எழுதும் திறமை குறைவது ஆங்கிலத்துக்கு மட்டும் உரித்தானது அல்ல. மற்ற மொழிகளிலும் அவ்வாறே. நான் இந்த விஷயத்தில் குறிப்பிடும் மொழிகள் ஃபிரெஞ்சு மற்றும் ஜெர்மன். மற்ற மொழிகளிலும் இவ்வாறுதான் இருக்கும் என்பதை நான் சுலபமாக ஊகிக்க முடியும்.

சமீபத்தில் 1982-ல் Greven என்ற மகானுபாவர் ஜெர்மனில் பிதற்றியதை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அந்த வேலை இன்ஸ்டாக்கிற்கு வந்ததுமே, மொழிபெயர்ப்புத் துறையின் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்வாமி அவர்கள் என்னையழைத்து, பாதிக்கும் மேற்பட்ட பக்கங்களை மொழிபெயர்ப்புக்காக என்னிடம் அளித்தார். மீதி பாதி வேலை இன்ஸ்டாக்கில் உள்ள முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் மூவரிடம் கொடுக்கப்பட்டது. 12 நாட்களில் வேலை முடிய வேண்டும். கட்டுரை ஆசிரியரோ எவ்வளவு அபத்தமான இலக்கணப் பிழைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார். பன்மை எழுவாய் ஆனால் ஒருமை பயனிலை என்றெல்லாம் தூள் கிளப்பினார். ஒரு பெரிய வாக்கியத்தில் எழுவாய், செயப்படுபொருள் எல்லாம் இட்டு பயனிலையையே மறந்தார் அப்பெருந்தகை. "Who manufactured this fellow" என்ற கேள்வியே எழுப்பப்பட்டது. இங்கு இதை ஏன் கூறுகிறேன் என்றால், இப்பிரச்சினை எல்லா மொழிகளுக்கும் உண்டு.

ஏன் தமிழையே எடுத்து கொள்ளுங்கள். "ஒவ்வொரு பூக்களுமே" என்று அபத்தமாக எழுதுபவர்கள் இல்லையா? "பிழைகள் மலிந்து விட்டது" என்று ஒன்றின்பால் பலவின்பால் தெரியாது எழுதுபவர்கள் இல்லையா?

சமீபத்தில் 1958-59-ல் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, எங்கள் வகுப்பாசிரியர் ஜெயராம ஐயங்கார் நினைவுக்கு வருகிறார். ஆங்கில இலக்கணத்துக்கு என்று சிறப்பு வகுப்புகள் எடுத்தவர் அவர் ஒருவர் மட்டும்தான் இருப்பார். கல்லூரி அளவில் வரும் ஆங்கில சொல்லிலக்கணத்தையே கற்பித்தார்.

உதாரணத்துக்கு, Rama killed the evil Ravana என்னும் ஆங்கில வாக்கியத்தில்
Rama: Subject, proper noun, third person singular.
killed: Past tense of the verb "to kill", predicate, action belonging to the subject Rama.
the: definite article denoting the object Ravan
evil: adjective, qualifying the object Ravana
Ravana: Obbject, proper noun, third person singular.

என்று போர்டில் எழுதி படங்கள் எல்லாம் போட்டு காட்டினார். மேலே கூறியதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவை எனது மறதிக்குறைவாலேயெ என்பதை முன்கூட்டியே கூறி விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/20/2007

எல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா?

கர்னாடகாவில் ஒரு கேவலமான அரசியல் குதிரை பேரம் நடந்து முடிந்தது. அது வெற்றி பெறவில்லை என்ற ஒரு எண்ணம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட 3 கட்சிகளுமே, அதாவது பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ், கேவலமாக நடந்து கொண்டன. ஆயினும் கேவலத்திலும் கேவலமாக நடந்து கொண்டது பா.ஜ.க. மட்டுமே.

தேவ கௌடா தன் கட்சி முதலில் செய்த ஒப்பந்தத்தை மீறியபோதே சுதாரித்திருக்க வேண்டும். அவர்களிடம் அதற்கு மேல் அரசியல் நாகரிகம் எதிர்ப்பார்த்திருக்கக் கூடாது. பிறகு அவரே வந்து பேசும்போதாவது மறுத்திருக்க வேண்டும். அந்த மனிதர் நம்பிக்கை துரோகம் செய்வதில் வல்லவர் என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த புத்தியும் இல்லாததால் பா.ஜ.க. அவமானப்பட்டு நிற்கிறது. நன்றாக வேண்டும் அதற்கு என்றுதான் கூறத் தோன்றுகிறது.

இம்மாதிரி குதிரை வியாபாரங்கள் நடப்பது இது முதல் தடவை அல்ல. குதிரை வியாபாரத்திலும் சில விதிகள் உண்டு. சம்பந்தப்பட்ட எல்லோருமே சந்தர்ப்பவாதிகளாயினும் இம்மாதிரி வார்த்தை மீறுபவர்கள் முதற்கண் தமது நலனுக்கே விரோதமாக நடக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாதவர்கள் இப்படித்தான் படவேண்டும்.

மேலும் அவமானப்படாது (பட்டதே மிக அதிகம்) போனதற்காக பா.ஜ.க. நன்றியுணர்ச்சிதான் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த 19 மாதங்களில் அந்த தேவகௌடா கோமாளித்தனமாக நிபந்தனைகள் என்னவெல்லாம் போட்டு படுத்தியிருப்பாரோ தெரியாது.

இதில் என்ன கொடுமை என்றால் பா.ஜ.க.வுக்கு இம்மாதிரி ஏமாறுவதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதாவிடம் கேவலப்பட்டதை மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. அப்படித்தான் 1996-க்கு அப்புறம் நடந்த தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணியில் இருந்த ஜெயலலிதா குடியரசுத்தலைவரிடம் பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவு தருவதில் இல்லாத அழும்பெல்லாம் செய்தார். அவர்களே வெறுத்து போய் வேண்டாம் மந்திரி சபை அமைத்தல் என்று கைவிட்ட நிலையில் தனது தூதுவர்களை அனுப்பி இன்னொரு முறை தன்னைக் கேட்டால் தான் ஆதரவு தருவதாகக் கூற அதையும் இவர்கள் நம்பினர். அடுத்த 13 மாதங்களுக்கு ஒரே டார்ச்சர். பிறகு சோனியா காந்தி மற்றும் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோருடன் சேர்ந்து மந்திரி சபையைக் கவிழ்த்தார்.

இந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. கூட இருக்கும் வரை கபர்தார் எல்லாம் செய்யவில்லை. ஜெயலலிதாவிடம் பட்டும் புத்தி வராமல் மீண்டும் அவருடன் கூட்டு வைத்தது பா.ஜ.க. அவர் பா.ஜ.க. கட்சி சார்பில் திருநாவுக்கரசு நிற்கக் கூடாது என்றெல்லாம் தலையிட்டு செய்த அமர்க்களத்தையெல்லாம் பொறுத்த பின்னரும் எலெக்ஷனில் பிளாங்கி அடித்தது.

இப்போது கர்நாடகா விவகாரம். புத்தியே வராதா இவர்களுக்கு?

1979-லிருந்தே இம்மாதிரி கவிழ்ப்பு வேலைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டன. முதலில் அதைத் துவக்கி வைத்தது இந்திரா காந்தி. போயும் போயும் அவரை நம்பிய சரண்சிங்கைத்தான் சொல்ல வேண்டும். எடியூரப்பாவுக்கு இப்போது ஆனது போலவே சரண்சிங்குக்கும் நடந்தது. பதவி மோகம் வேண்டாம் என்று அரசியல்வாதியிடம் கூறவியலாதுதான். ஆனால் புத்தி வேண்டும் அல்லவா. அடுத்து சில மூவ்களைக் கூடப் பார்க்க வேண்டாமா, சொந்த நலனுக்காகவாவது?

இம்மாதிரி நிலையில் இருந்த எல்லோரிலும் சிறப்பாகச் செயல்பட்டு தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டவர் சந்திரசேகர் மட்டுமே. அவருக்கு அளித்த ஆதரவை ராஜீவ் திடீரென விலக்கிக் கொள்ள, மனிதர் அயரவில்லையே. ஒரு நிமிடம் கூட ராஜீவைக் கெஞ்சவில்லை. வேறு குதிரைப் பேரமும் செய்யவில்லை. நேராகப் போய் தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார் குடியரசுத் தலைவரிடம். பிறகு இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ராஜீவ் காந்தியே சந்திரசேகருக்கு பல தூதுகளள அனுப்பி ராஜினாமாவை வாபஸ் வாங்கச் செய்ய முயற்சித்தார். ஆனால் மனிதர் பிடிகொடுக்கவேயில்லை.

சந்திரசேகருக்கு முன்னாலும் சரி அப்புறமும் சரி அவரளவுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு மேன்மையாகச் செயல்பட்ட யாருமே இல்லை.

என்ன செய்வது, எல்லோருமே சந்திரசேகர் ஆக முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ் நாடகப் பேராசிரியர், பம்மல் சம்பந்த முதலியார்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் 1873-ல் பிறந்த பம்மல் சம்பந்த முதலியார் பல துறைகளில் ஈடுபட்ட சாதனையாளர். அவர் அதிகம் பேசப்படுவது நாடகத் துறை சம்பந்தமாகவே.

பம்மல் அவர் சொந்த ஊர். ஆனால் அவர் அதிகம் வசித்தது சென்னையில்தான்.

சென்னை நகரவாழ்க்கை இவருடைய பல்துறை வளர்ச்சிக்கு பயனாக இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். தொடர்ந்து ஆங்கிலக் கல்வியுடன் கூடிய நவீன கல்வி கேள்வியிலும் சிறப்புற்று விளங்கினார். மாநிலக் கல்லூரியில் பிஏ படித்து பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவிலும் சேர்ந்து படித்தார்.

பின்னர் வழக்கறிஞராக வேண்டி சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். சிறந்த வழக்கறிஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார். சிறுவழக்கு நீதிமன்றதின் நீதிபதியானார். நீதிக்கும் நேர்மைக்கும் தான் வழங்கும் தீர்ப்புகள் முன்மாதிரியாக அமைய வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டார்.

"என்னுடைய பதினெட்டாவது வயதுக்கு முன், யாராவது ஒரு ஜோசியன் 'நீ தமிழ் நாடக ஆசிரியனாகப் போகிறாய்' என்று கூறியிருப்பானாயின், அதை நானும் நம்பியிருக்க மாட்டேன், என்னை நன்றாயறிந்த எனது வாலிப நண்பர்களும் நம்பியிருக்க மாட்டார்கள். அதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு மிகவும் அருகாமையில் பல வருடங்களுக்கு முன் ஒரு கூத்துக் கொட்டகையிருந்தபோதிலும், சென்னை பட்டணத்தில் அடிக்கடி பல இடங்களிலும் தமிழ் நாடகங்கள் போடப்பட்டபோதிலும், அதுவரையில் ஒரு தமிழ் நாடகத்தையாவது நான் ஐந்து நிமிஷம் பார்த்தவனன்று. நான் தமிழ் நாடகங்களைப் பாராமலிருந்தது மாத்திரமன்று; அவைகளின் மீது அதிக வெறுப்புடையவனாகவுமிருந்தேன்."

இந்த அளவுக்கு தமிழ் நாடகங்களில் ஆரம்பத்தில் வெறுப்புற்றிருந்தார் அவர். பிறகு வெறுப்பு நீங்கி தமிழ் நாடகங்கள் மீது விருப்பம் உண்டாகி, தமிழ் நாடக வரலாற்றின் போக்கில் திசை திருப்பங்களை, புதிய வளங்களை ஏற்படுத்தி மறுமலர்ச்சி உருவாகக் காரணமாகயிருந்தார்.

ஆங்கிலேய வழித் தாக்கத்தினால் உருவான மாற்றங்களைத் தமிழ் அரங்கக் கலை உள்வாங்கத் தொடங்கிற்று. 'பார்ஸி தியேட்டர்' மேடை நாடக மரபில் புதிய செழுமைப் பாங்குகளைக் கொண்டு வந்து சேர்த்தது. இக் காலத்தில் தமிழ் நாடக மரபை, கால மாற்றத்தின் அசை வேகத்துக்கு ஏற்ப மாற்றியமைத்து வளர்ச்சிக்குத் தளம் அமைத்துச் சென்றவர்களுள், அந்த மரபின் வழியே திருப்புமுனையாக வந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடகத்தின் நிலை மிகவும் கவலைப்படக்கூடியதாகவேயிருந்தது. கற்றவர்களால் நாடகக்கலை வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்தது. நடிகர்களைக் கூத்தாடிகள் என ஏளனமாக நோக்கும் பார்வையே பரவலாகயிருந்தது. இந்தக் காலகட்டத்தில் பட்டதாரிகள், நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என கற்றோர் குழாம் நாடகத்தில் ஈடுபாடு கொண்டு நடிகர்களாக நடிப்புத் திறனில் வெளிப்பட்டு நாடகத்துக்குப் புத்துணர்வும் புதுப்பொலிவும் ஏற்படக்கூடிய சூழலைப் பம்மல் கொண்டு வந்தார்.

நகரம் சார்ந்த கற்றோர் குழாம் நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டு தொழிற்படும் போக்கு உருவாவதற்கு அடிப்படையான தளத்தை உருவாக்கிக் கொடுத்தவர். இதிகாச நாடகங்களையும் புராண நாடகங்களையும் நடத்தி வந்த தொழிற்முறை நாடகக் குழுவினரின் போக்கையும் மாற்றினார். சபா நாடகங்கள் என்னும் போக்கில் புதுத் திருப்பம் ஏற்படுத்தினார். 1891-ஆம் ஆண்டில் 'சுகுண விலாச சபா' என்ற பயில் முறைக் குழுவைத் தோற்றுவித்து சுமார் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதியும் தயாரித்தும் தாமே நடித்தும் நாடகக் கலைக்குப் புது ஊற்றை வழங்கிச் சென்றார். ஆங்கில நாடகங்களையும் வட மொழி நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை மேடைகளில் நடித்தும் தமிழ் நாடகத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார். ஆங்கில நாடகங்களின் அமைப்பைப் பின்பற்றி உரைநடையில் நாடகங்களை அமைத்தார்.

அந் நாட்களில் தமிழ் நாடகங்கள் விடிய விடிய நடப்பதுண்டு. இந்நிலையை மாற்றித் தமிழ் மேடை நாடகங்களை மூன்று மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கால எச்சரிக்கையை முன்னிறுத்தினார். இவ்வாறு நாடகத்திற்குரிய கால எல்லையை வரைமுறை செய்தவர்.

தனது நாடக அனுபவங்களை ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். நல்ல சுவாரசியமான புத்தகம் அது. முதலாம் ஆண்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு தனது நாட சபாவின் முழு பிராக்ரஸ் ரிப்போர்ட் கொடுத்துள்ளார் அவர். எந்தெந்த ஊரில் நாடகம் நடத்தினர், எவ்வளவு வசூல் ஆயிற்று என்பதையெல்லாம் விவரமாக எழுதினார். அக்கால வாழ்க்கை முறையையும் அதிலிருந்து அறியலாம்.

அதே போல நாடகத்தில் ஒருவர் வசனம் பேசும்போது மற்றவர்கள் அவல் மென்று கொண்டிருக்கக் கூடாது என்று சுவைபட விளக்கினார். ரங்கத்தில் ஆபாசங்கள் என்பது பற்றியும் எழுதினார்.

வளர்ச்சியுற்ற பார்ஸி நாடக மரபின் வருகையினால் பழைய மரபு செல்வாக்கிழந்தது. நாடகம் என்பது ஒரு சமூக நிறுவனமாகத் தோற்றம் பெற்றது. இந்த வளர்ச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் பங்கு முக்கியமானது.

சம்பந்தனாரின் கலைப் பணிகளென: நாடகத்தில் நடிப்பு, நாடகங்களை இயக்குதல், நாடகப் பிரதி உருவாக்கல், நாடக மேடையைச் சீர்திருத்தல், கற்றோர் குழாமை நாடகத்துடன் இணைத்தல் என பல பணிகளைக் குறிப்பிட முடியும். ஆக்கமான சிந்தனை, அயராத உழைப்பு, தொடர்ந்த தேடல், கால மாற்றத்துக்கு ஏற்ப நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படும் பாங்கு இவற்றின் மூலம் பம்மல் நாடகக் கலைக்குப் புத்துயிர்ப்புக் கொடுத்தார்.

பம்மல் இளமையாகயிருந்தபொழுது தலைமைப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் வயது ஏற ஏற அந்தந்தப் பருவத்துக்குத் தக்கவாறு பாத்திரங்களை ஏற்று நடித்தார். அந்த அளவுக்கு நடிப்புக்கலை மீதான ஈடுபாட்டில் அதிகம் அக்கறை செலுத்தினார். தன்னை முதன்மைப்படுத்தும் நிலையில் நடிப்புக்கான நடிகர்களைத் தேர்வு செய்வதில் அதிகம் அக்கறை காட்டாதவர்.

நாடகக் காட்சி அமைப்பில் புதிய நுணுக்கங்களைக் கையாண்டார். பல்வேறு நாடகக் குழுக்களின் நாடகங்களை பம்மல் பார்க்கக்கூடியவர். 'மதராஸ் டிரமாடிக் சொசைட்டி' என்னும் பெயரில் அமைந்த நாடகக் குழு நடத்திய நாடகங்களில் காட்சிகளுக்கு ஏற்பவும் இடங்களுக்கு ஏற்பவும் திரைகளைப் பயன்படுத்தியதைக் கண்ணுற்ற பம்மல், தன்னுடைய நாடகங்களிலும் அதே நுணுக்கங்களைக் கையாண்டார். இதுபோல் பாரசீக நாடகக் குழுவினர் நடத்திய நாடகங்களில் திரைகள், பக்கத் திரைகள், மேல் தொங்கட்டான்கள் முதலியவை புதிய முறையில் அமைந்திருந்தன. அவற்றையும் தனது நாடகங்களில் பம்மல் சிறப்பாகக் கையாண்டார்.

அதுவரையான தமிழ் நாடக மேடை அமைப்பில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இதற்கு பாரசீக நாடகக் குழுவினரின் வருகையே காரணம் எனலாம். அதாவது இதற்கு முன்னர் தமிழ் நாடகங்களில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்குமிடையே இடைவெளி விடப்பட்டிருந்தது. இக்குறை பாரசீகக் குழுவினர் வருகையுடன் களையப்பட்டது.

பம்மல் இத்தகைய நுணுக்கங்களை உள்வாங்கித் தமிழ் நாடக மேடையேற்றத்தில் அதனை இயல்பாகக் கையாண்டார். மேடையில் காட்ட முடியாத சில கடினமான காட்சிகளைத் துணிவாக மேடையேற்றிய தனிச்சிறப்பு பம்மலுக்கே உண்டு என்பர். ஒரே மாதிரியான புராண நாடகங்களையே நடித்து வரும் மரபு காணப்பட்டது. மக்கள் முன்பே அறிந்த கதைகளையே நாடகமாக்கி வந்தனர். இந்நிலைமையைப் போக்க, மாற்றியமைக்கப் பம்மல் பலவிதமான நாடகங்களை எழுதினார். மேல்நாட்டு அமைப்பு முறையில் பலவகையான நாடகங்களை எழுதி மேடையேற்றினார்.

தமிழ் நாடகம் புதுமையாகவும் சிறப்பாகவும் வளர்ச்சியடைய நாடகத்தின் பல்வேறு ஆக்கக்கூறுகள் குறித்த புதிய சிந்தனைக்கும் மாற்றத்திற்கும் உரிய வகையில் முயற்சி செய்தார். தக்க பலன் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு நாடக உருவாக்கத்தையும் திட்டமிட்டு உருக்கொடுத்தார்.

வழக்கறிஞர் ஆவதற்கு முன்பே சம்பந்தனாரின் மனம் நாடகக் கலைமீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது. அவருடைய ஆவலுக்கு உறுதுணையான நண்பர்கள் பலருடைய ஒத்துழைப்புடன் 1891-ம் ஆண்டு ஜூலைத் திங்கள் ஒன்றாம் நாள் சென்னையில் சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவைத் தொடங்கி நாடகங்கள் நடிக்கத் தொடங்கினார். ''ஆந்திர நாடகப் பிதாமகன்'' என்று மிகச் சிறப்பாக அழைக்கப்படும் பல்லாரி வி. கிருஷ்ணமாச்சார்லு என்ற வழக்கறிஞர் சம்பந்தனாரின் நல்ல நண்பர்களில் ஒருவராக விளங்கினார். அவர் நாடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன் அனுபவத்தின் பயனாக சம்பந்தனாருக்கு ஓர் அறிவுரை கூறினார். வழக்கறிஞர் தொழில் சிறப்பாக முன்னேற வேண்டுமானால் நாடகத்தை அப்பால் ஒதுக்கிவிடுவதே முறை என்பதே அவரது கருத்து.

சம்பந்தனார் வழக்கறிஞராக இருந்துகொண்டே தமிழ் நாடகத்துக்கு முதன்மை கொடுத்து உழைக்கவேண்டும் என்று விரும்பினார். வழக்குகளை அதற்குத் தக்கவாறு ஏற்று வாதாடினார். தன்னிடம் வழக்குத் தொடர்பாக வரக்கூடியவர்கள் காலை 9 1/2 மணி முதல் மாலை 5 மணி வரை நெருங்கிப் பேசலாம் என்ற விதியை வகுத்துக் கொண்டார். இந்த நேர எல்லையைக் கடந்து எவரும் அவரிடம் வழக்குகள் பற்றிப் பேச அனுமதிக்கப்படுவதில்லை. மாலை நேரம் நாடகப் பணிக்காக ஒதுக்கப்பட்டது. அவர் சுகுண விலாச சபைக்குச் சென்று கலைக்காகத் தொண்டு செய்யும் நேரத்தில் நீதிமன்றைத்தையும் வழக்குகளையும் பற்றி நினைப்பதே இல்லை.

பம்மலின் சாதனைகளைக் கெளரவிக்கும்விதத்தில் இந்திய அரசு 1959-ல் 'பத்மபூஷன்' விருதை அளித்துப் பாராட்டியது. இவை தவிர சென்னை நாட்டிய சங்கம் பம்மலுக்கு சிறப்புச் செய்தது.

அவர் எழுதிய 100 நாடகங்களில் முக்கியமானவை மனோகரா, புஷ்பவல்லி, அமலாதித்யன் ஆகியவை. புஷ்பவல்லி நாடகத்தை நான் எனது பள்ளியில் போட்ட நாடகமாகப் பார்த்திருக்கிறேன். அவரது நாடகங்களில் பெண்கள் வேடத்தையும் ஆண்களே ஏற்று நடித்தனர். அவர்களில் ரங்கவடிவேலு என்பவர் முக்கியமானவர். லேடி ரங்கா என்றும் அவரை அழைப்பார்கள். அவர் இவருடன்தான் லேடி பார்ட் போடுவார் என்னும் அளவுக்கு அந்த ஜோடி திகழ்ந்தது. லேடி ரங்கா சில ஆண் பாத்திரங்களை ஏற்று நடித்தாலும் அதில் அவ்வளவாக சோபிக்கவில்லை என்றும் இவர் குறிப்பிடுகிறார். சற்றே புருவங்களை உயர்த்த வைத்தன ரங்கவடிவேலு அவர்களை பற்றி இவர் குறிப்பிட்டவை.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக வளர்ச்சியை நோக்கும்பொழுது பம்பல் சம்பந்த முதலியார் என்பவரின் முக்கியத்துவம் தவிர்க்க முடியாதது. பம்பலின் நாடக முயற்சிகள், சிந்தனைகள் தமிழ் நாடக வளர்ச்சி புதுப் பரிமாணம் பெறுவதற்கு தக்க தளம் அமைத்துக் கொடுத்தது.

இத்தகைய சிறப்புக்குரிய பம்மல் 24.9.1964இல் தனது கலைப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

நன்றி:
1. தெ.மதுசூதனன், "தமிழ் நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார்"

2. "தமிழ் நாடகத்தின் தந்தை பம்மல் சம்மந்த முதலியார்", எழுதியது திரு. ஏ.என்.பெருமாள்

3. "நாடகமேடை நினைவுகள்" எழுதியது பம்மல் சம்பந்தம் முதலியார்

11/18/2007

எனது கிரிக்கெட் எண்ணங்கள்

இந்தப் பதிவைப் பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள் வந்தன. மேலே செல்லும் முன்னால் ஒன்றை கூறி விடுகிறேன். கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். சாரண இயக்கத்தில் இருந்த நாட்களில் மாலை வேளைகளில் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நாட்குறிப்பில் எழுதும் சமயம் "இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை" என எழுதுவேன். பல நாட்கள் அவ்வாறே இருந்ததைப் பார்த்து என் அன்னை "நீ ரன் எடுத்தால் மட்டும் எழுது" என்று கூறிவிட, அன்னையின் ஆணையை சிரமேற்கொண்டதில் கிரிக்கெட் ஸ்கோர் விவரம் என் நாட்குறிப்பிலிருந்து மறைந்தது. இதையும் இன்னும் சிலதையும் எனது இப்பதிவில் கூறியுள்ளேன்.

இப்போது மேலே முதலில் குறிப்பிட்டுள்ள பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அம்மாதிரி ஒரே பாலில் இருவர் அவுட் ஆக இயலாது. ஏனெனில் ஒருவர் ரன் அவுட் ஆனதுமே அந்தப் பந்து டெட் பால் ஆகிறது. ஆகவே அதை வைத்து இன்னொரு பேட்ஸ்மேனையும் அவுட் என்று சொல்ல இயலாது. ஆனால் நான் ஐ.டி.பி.எல்.லில் வேலை செய்தபோது எனது நண்பன் ஒரு சினேரியோ கூறினான். அதாவது ஒரே பந்தில் மூவர் அவுட் ஆவது.

"ஒரு நோ பால். அதை அடித்து விட்டு ரன் எடுக்க ஓடிய ஒரு பேட்ஸ்மேன் அவுட். அடுத்த பேட்ஸ்மேன் குறிப்பிட்ட நேரத்துகுள் மைதானத்துக்கு வர இயலாததால் அவர் டைம் அவுட் ஆகிறார். அடுத்து வந்தவர் உடனேயே க்ளீன் போல்ட். நோ பால் எண்ணிக்கையில் சேராததால் ஒரு பந்தில் மூவர் அவுட் என்றான்". நிஜமாகவே நடந்தது என்று சத்தியம் வேறு செய்தான். நானும் இது சம்பந்தமாக மேலும் அறிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு இன்று ஃபோன் செய்தேன். அவர் வெளியில் போயிருந்ததார். பிறகு நம்ம பத்ரியைக் கேட்டேன். அவர் அம்மாதிரி தன் நினைவில் நடந்ததே இல்லை என அடித்து கூறினார். "தியரிட்டிக்கலாக என்ன வேண்டுமானாலும் கூறலாம்தான். 11 பேரையுமே 11 நோ பால்களில் ரன் அவுட் கூட ஆக்கலாமே" என்றும் கூறினார்.

நானும் கூகளில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஆனால் ஒரு சுவாரசியமான செய்தி கிடைத்தது. அதாவது 1981 ஆண்டு வரை அண்டர் ஆர்ம்ஸ் போலிங் விதிக்கு விரோதம் இல்லை. அதை உபயோகித்து ஆஸ்திரேலியா போல் செய்த கடைசி பந்தில் அண்டர் ஆர்ம்ஸ் உபயோகித்து பந்தை தரையோடு உருட்டச் செய்தனராம். அதை நாங்கள் பீயுருட்டல் எனக் குறிப்பிடுவோம். ஏனெனில் கடைசி பந்தில் சிக்ஸர் எடுத்தால் நியூசிலாந்து மேட்சை டை செய்திருக்குமாம். அந்த சிக்சரை தடுக்கவே இந்த உருட்டல்.

சில மேட்சுகள் நினைவில் உள்ளன. சமீபத்தில் 1958-59-ல் மேற்கிந்திய அணிக்கும் இந்திய அணிக்கும் சென்னையில் டெஸ்ட் மேட்ச். அப்போதெல்லாம் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில்தான் மேட்சுகள் நடக்கும். முதலில் ஆடிய மேற்கிந்திய அணி 500 ஆல் அவுட். இந்தியா 222 ஆல் அவுட். ஃபால்லோ ஆன் தராது மேற்கிந்திய அணி ஆடி 168 சொச்சம் ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிறகு இந்தியா 151 ரன்களிலேயே சுருண்டு மகத்தான தோல்வி. இந்தியாவின் கேப்டன் வினூ மன்காட். முதல் இன்னிங்ஸில் கில்க்றிஸ்ட் போட்ட பந்தை மிக அழகாக லேட் கட் செய்து நான்கு ரன்கள். அடுத்த பந்து க்ளீன் போல்ட். இரண்டாம் இன்னிங்ஸில் காயத்தால் அவர் ஆடவில்லை.

புச்சர் செய்த அழும்பால் ரோஹன் கன்ஹாய் 99 ரன்களில் ரன் அவுட் ஆனார். இதெல்லாம் ஏனோ நினைவில் உள்ளன. மற்றப்படி நான் முதலிலேயே கூறியபடி கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். டெண்டுல்கர் 10 கோல் போட மாட்டாரா என்றெல்லாம் அலம்பல் செய்து பின்னூட்டம் போட்டு என்றென்றும் அன்புடன் பாலாவை அவர் கிரிக்கெட் பதிவுகளில் டென்ஷன் ஆக்குவதுடன் சரி.

அன்புடன்,.
டோண்டு ராகவன்

நம்பிக்கை நட்சத்திரம் ரஜனி

ஒரு வேலைக்கான நேர்க்காணலுக்காக பலர் வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நேர்க்காணல் 11 ஆகியும் துவங்கவில்லை. அதற்கான அதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வருகிறார் ஆடி அசைந்து கொண்டு 12 மணிக்கு. கூடவே ஒரு பெண்ணும் வருகிறார். உள்ளே போய் பேசுகின்றனர் இருவரும். எந்த வேலைக்கான நேர்க்காணல் நடக்கவுள்ளதோ அதே வேலைக்காக சிபாரிசுடன் வந்திருக்கிறார் அப்பெண்.

"கவலை வேண்டாம் பிரீத்தி, உனக்குத்தான் அந்த வேலை" என்று சொன்ன அதிகாரி, பியூனை அழைத்து நேர்க்காணல கேன்சல் என்று வெளியில் காத்திருப்பவர்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். எல்லோரும் நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்ப, அவர்களில் ஒரே ஒரு பெண்மணி யாரையும் போக வேண்டாம் எனக் கூறுகிறார். இவ்வளவு நேரம் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்ததற்கு கம்பெனி பொறுப்பேற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு எல்லோரையும் அப்படியே அமரச் செய்கிறார். வெளியில் அந்த அதிகாரியும் அவருடன் உள்ளே சென்ற அப்பெண்ணும் வெளியில் வருகின்றனர். இந்தப் பெண்மணி நேரடியாகவே அப்பெண்ணிடம் "நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க, நோகாமல் வந்த உனக்கு வேலை, இது நியாயமா" எனக்கேட்க, அப்பெண் பேய்முழி முழிக்கிறார்.

இதற்குள் அந்த அதிகாரிக்கு வேண்டாத இன்னொரு ஊழியர் ஓசைப்படாது தலைமை நிர்வாகிக்கு ஃபோன் போட்டு அவரைப் போட்டுக் கொடுக்க, அவரும் துரிதமாக அந்த இடத்துக்கு வருகிறார். அவரிடமும் நியாயம் கேட்கிறார் இப்பெண்மணி. சம்பந்தப்பட்ட அதிகாரி முகத்தில் டன் டன்னாக அசட்டுக்களை. தலைமை நிர்வாகியிடம் அப்பெண்மணி "முறையான நேர்க்காணல்" நடத்துமாறு கேட்டுக் கொள்கிறார். இத்தருணத்தில் தான் வேலை பெறுவது பிரச்சினையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தன்னைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை என கூறி விடுகிறார். பிறகு நடக்க வேண்டியவை நடந்து சரியான தேர்வு நடக்கிறது.

இதைக் கண்ட பொது மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அடுத்து வந்த வாரங்களில் இதே பெண்மணி பல அவதாரங்கள் எடுக்கிறார். அடாவடி செய்யும் டாக்சிக்காரருக்கு பாடம் கற்பிக்கிறார். கேஸ் சிலிண்டர் அளிப்பதில் இருக்கும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்கிறார். போலிச் சாமியாரை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவள் தந்தையை வற்புறுத்தி மணம் செய்ய நினைத்தவன் பக்கத்தில் அவனை விட 20 வயது அதிகம் உள்ள பெண்மணியை உட்கார வைத்து அவனை அவமானப்படுத்துகிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் டொனேஷன் கெடுபிடிகளை அம்பலமாக்குகிறார். வெறும் மலச்சிக்கலுக்கு இல்லாத டெஸ்டுகளையெல்லாம் இவரது மாமியாருக்கு செய்வித்து சம்பந்தப்பட்ட சோதனைச் சாலைகளிடம் கமிஷன் அடித்த டாக்டரை பதம் பார்க்கிறார்.

பிறகு சில மாதங்கள் ஓய்வு. இம்முறை திரும்பவரும்போது அவர் சமாளிக்கும் பிரச்சினைகள் அதிக சிக்கல்களாக ஆகின்றன. அப்போதைக்கப்போது தீர்த்துவைக்க இயலாத அவற்றை தீர்க்க சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். உதாரணத்துக்கு தங்கள் காருக்கு முன்னால் சென்ற கார் ஒருவனை மோதித் தள்ளிவிட்டு விரைவாக சென்றுவிட, இவரும் இவர் கணவரும் அடிப்பட்டவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க படும் கஷ்டங்கள். போலீஸ் வந்து அவரது கணவனையே சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தெரியாத்தனமாக போயும் போயும் இவரிடம் லஞ்சம் கேட்க, அவர் பொங்கியெழுந்து ருத்ரதாண்டவம் ஆடி சம்பந்தப்பட்ட போலீஸ்காரனுக்கு பாடம் கற்பிக்கிறார். ஆனால் இதை செய்ய மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆனால் மொத்தமாக நிகழ்ச்சிகள் நடக்கும் காலக்கட்டமோ சில மணிகளே.

சற்று குழப்பமாகத் தோன்றுகிறதா? நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது சமீபத்தில் 1985-ல் தொலைக்காட்சியில் வந்த "ரஜனி" என்னும் ஹிந்தி சீரியலே. ரஜனியாக வந்து போடுபோடென்று போட்டவர் ப்ரியா டெண்டுல்கர். அவரது கணவராக நடித்தவர் கரண் ராஜ்தான் என்பவர். உண்மை வாழ்க்கையிலும் அவரது கணவர் அவர். இந்த சீரியல் அமோக வெற்றி பெற்றது. ப்ரியாவை எல்லோரும் ரஜனி என்றே அழைத்தனர்.

இந்த சீரியலை எடுத்தவர் பாசு சாட்டர்ஜி என்பவர். இந்த சீரியல் பலரை வேவ்வ்று முறையில் பாதித்தது. அதற்கு ஒரு உதாரணம் நசீருத்தின் ஷா நடித்த ஜல்வா என்னும் திரைப்படம். நசீருத்தின் ஷாவும் அவர் நண்பரும் ஒரு டாக்சியில் ஏறுகிறார்கள். டிரைவருக்கு முன்னால் ஒருவருடைய புகைப்படம். அது யாருடையது என்று யதார்த்தமாகக் கேட்க டாக்சி ட்ரைவர் பொங்கி எழுகிறார். "அது பாசு சாட்டர்ஜியின் படம். ரஜனி சீரியல் எடுத்தவர். டாக்சி டிரைவர்களை ரொம்பவே தாக்கி அதில் ஒரு எபிசோட் வருகிறது. டாக்சி டிரைவர்களின் கஷ்டங்களைப் பற்றி அதில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆகவே அவரை நேரில் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டும்" என்றெல்லாம் அவர் உணர்ச்சி வசப்படுகிறார். இப்போதுதான் வேடிக்கை. இவர்கள் சேர வேண்டிய இடம் வர இறங்கிக் கொள்கின்றனர். அப்போது அப்பக்கம் வந்து டாக்சியில் இன்னொருவர் ஏற யார் என்று பார்த்தால் நிஜமாகவே பாசு சாட்டர்ஜிதான் அது. ஒரு நிமிடம் டாக்ஸி டிரைவர் திகைக்கிறார். நசிருத்தீன்ஷாவும் அவரது நண்பனும் பேச்சு வராமல் தவிக்கின்றனர். அடுத்த காட்சியில் டாக்சி டிரைவர் கையில் செருப்பை எடுத்து கொண்டு பாசு சாட்டர்ஜியைத் துரத்துகிறார். அவர் குதிகால் பிடரியில் பட ஓடுகிறார். அதை நினைத்து நினைத்து நண்பர்கள் சிரிக்கின்றனர்.

இந்த சீரியல் பல விஷயங்களைக் கூறுகிறது. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. கேளுங்கள் தரப்படும், புகார் எப்படி செய்வது என்பதையெல்லாம் சுருக்கமாகக் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவுகள்:
1
2
3

ரஜனி அவர்களோ, நேரடி நடவடிக்கைதான்.

ப்ரியா டெண்டுல்கர் 2002-ல் மாரடைப்பில் காலமானார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/15/2007

இறந்தது அஸ்வத்தாமன், என்னும் யானை

மஹாபாரத யுத்தத்தின் பதினைந்தாம் நாள். அதற்கு முந்தைய தினம் அபிமன்யு சக்ர வியூகத்தில் சென்று அற்புதமாகச் செயல்பட்டான் ஆனால் முடிவில் வஞ்சனையாகக் கொல்லப்பட்டான். அடுத்த நாளாகிய இன்று மாலை சொல்லி வைத்து அருச்சுனன் ஜயத்ரதனை கொன்றான். அதில் மாயோன் பார்த்தசாரதி தனது சக்கரத்தால் சூரியனையே மறைக்கச் செய்து, ஜயதரதனை அஜாக்கிரதையாக இருக்க வைத்து அருச்சுனன் மூலம் அவன் தலையைக் கொய்வித்தான். அது இப்பதிவின் விஷயம் அல்ல. அக்கதை இன்னொரு சமயம்.

முதல் தடவையாக இரவிலும் யுத்தம் தொடர்ந்தது. பீமசேனனின் மகன் கௌரவ சேனையைப் படாதபாடுபடுத்தியதால், கர்ணனின் பொறுமையை சோதித்து அருச்சுனனைக் கொல்ல அவன் வைத்திருந்த சக்தி ஆயுதத்தை அவன் மேல் பிரயோகிக்க வேண்டியிருந்தது. குரு துரோணாச்சாரியார் தன்னை மறந்து யுத்தம் செய்கிறார். அவர் பிரும்மாஸ்திரத்தை எடுத்து விட யோசித்து கொண்டிருக்கிறார்.

இப்போது பார்த்தசாரதியின் அடுத்தத் திட்டம். பீமன் காதோடு ஒரு விஷயம் சொல்ல அவன் விரைந்து சென்று, கௌரவர் சேனையில் இருந்த அஸ்வத்தாமன் என்னும் யானையைக் கொன்று விட்டு பிறகு வெற்றி கோஷத்துடன் துரோணர் இருக்கும் இடத்துக்கு வந்து அவர் காது கேட்க "கொன்றேன் அசுவத்தாமனை" என கொக்கரிக்கின்றான். அஸ்வத்தாமா துரோணரின் ஒரே மகனின் பெயரும் கூட. அவனும் சிறந்த போர்வீரன். இருப்பினும் சொன்னது பீமன் ஆயிற்றே, அவன் பலமும் உலகம் அறிந்ததே என துரோணர் மனம் மயங்குகிறார். அவருக்கு இச்செய்தியை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்.

பொய்யே பேசாத யுதிஷ்டிரனைப் பார்த்து கேட்கிறார் அவர், "எனது மகன் அஸ்வத்தாமா மாண்டானா, கூறு யுதிஷ்டிரா" என்று. யுதிஷ்டிரனோ இறுதலைக் கொள்ளி எறும்பாகிறான். திணறிக் கொண்டே "கூறுகிறான் "அஸ்வத்தாமா ஹதஹ,...குஞ்சரஹ" (இறந்தது அஸ்வத்தாமன் ... என்னும் யானை). இறந்தது அஸ்வத்தாமன் என்பதை உரக்கக் கூறிவிட்டு, தயங்கியவாறு இரண்டாவது பாகத்தைக் கூறும்போது பார்த்தசாரதி தனது பாஞ்சஜன்ய சங்கை எடுத்து ஊத, துரோணருக்கு 'அஸ்வத்தாமன் ஒரு யானை' என்பதே காதில் விழவில்லை. அவர் உடனே யுத்தத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து தியானத்தைத் துவங்குகிறார். அப்போது புயல்போல கிளம்பிய த்ருபத ராஜாவின் மகனும், துரோணரைக் கொல்லவே பிறவி எடுத்த திருஷ்டத்யும்னன் தன் கத்தியை எடுத்து ஆச்சாரியரின் தலையைச் சீவி அவரைக் கொல்கிறான். அதுவும் இப்பதிவின் முக்கிய விஷயம் அல்ல.

இப்போதுதான் இப்பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். யுதிஷ்டிரனின் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் வந்த வினாடியிலேயே அவன் தேர்ச் சக்கரங்கள் பூமியைத் தொட்டனவாம். அதுவரை அவை தரையிலிருந்து நான்கு அங்குலம் உயரத்திலேயே இருந்தனவாம். அவனும் பொய் சொன்ன பிறகு பொய்மை நிறைந்த பூமியின் பகுதியாக அவனும் ஆகிவிட்டான் என வியாசர் அழகாகக் கூறுகிறார்.

அது மட்டுமா, பிற்காலத்தில் சொர்க்கம் செல்ல நேர்ந்த போது ஒரு முகூர்த்த காலம் நரகத்துக்கும் போய் விட்டு வருகிறான். இவ்வளவு பொய் புனைசுருட்டு எல்லாம் செய்து பாரத யுத்தத்துக்கே காரணமாக இருந்த துரியனுக்கு கூட அவ்வளவு வசை சேரவில்லை. ஆனால் யுதிஷ்டிரன் பெற்ற கெட்ட பெயர் மிகப்பெரியது. இதற்கு முக்கியக் காரணமே அவன் பொய் சொல்ல மாட்டான் என்ற மக்களது அசைக்கமுடியாத நம்பிக்கை அசைந்ததே ஆகும்.

இது எனக்கு வாழ்க்கையில் பல முக்கிய விஷயங்களைக் கூறியது. ஒரேயடியாக கடுமையான விரதங்களைக் மேற்கொள்ளவும் வேண்டாம், அவை பங்கப்பட்டால் தேவைக்கு அதிகமாக கெட்டப் பெயரையும் சுமக்க வேண்டாம். நாம் இயல்பாக இருப்பது போல இருப்பதே நலம். யுதிஷ்டிரன் எல்லாம் ஒரே போர். அப்படியெல்லாம் இருந்தால் இவன் ரொம்ப நல்லவண்டா என்று வடிவேலு பெற்ற பெயரைப் பெறுவதோடு உதையும் வாங்க வேண்டியதுதான். என்ன கூறுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/14/2007

பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக

நான் இந்தப் பதிவில் இட்டப் பின்னூட்டம் இதுவரை வெளிவரவில்லை. அது பதிவரின் சாய்ஸ். ஆயினும் அக்கருத்தும் கூறப்பட வேண்டும் என்பதால் நான் அப்பின்னூட்டத்தையே இப்பதிவின் அங்கமாக வைக்கிறேன்.

"வேலைக்காரிகள் முக்கால்வாசி சமயங்களில் தம் குடும்பத்தினரின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர்கள். தன்னைப் போல தன் குழந்தைகள் ஆகக்கூடாது என்னும் ஆசையில் தங்கள் சக்திக்கு மீறி அவர்களைப் படிக்க வைப்பவர்கள். அவர்களை உங்கள் நகைச்சுவைக்கு பாத்திரமாகப் போட்டது நல்ல டேஸ்ட் அல்ல.

மேலும் இம்மாதிரி ஜோக்குகள் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. எங்காவது வேலைக்காரன் ஜோக்ஸ் பார்த்திருக்கிறீர்களா? இவ்வாறு பெண்களுக்கு இழிவு தரும் இம்மாதிரி ஜோக்ஸ்களை பெண்ணான நீங்களே போட்டிருப்பது கொடுமை.

வேறு எங்கிருந்தோ எடுத்து காப்பி பேஸ்ட் போட்டதால் மட்டும் உங்கள் பொறுப்பு மறைந்து விடாது
".

ஆனந்தவிகடன் எனக்கு பிடித்த பத்திரிகை. பல நல்ல விஷயங்கள் அதில் உள்ளன. ஆயினும் அவர்களிடம் எனக்கு பிடிக்காததே இந்த வேலைக்காரிகளை இழிவு செய்யும் ஜோக்குகள்தான். அது சம்பந்தமாக என்னால் பல உதாரணங்கள் காட்ட இயலும். ஆனாலும் அந்த உதாரணங்களையும் ஜோக்காக நினைத்து பலர் மகிழும் அபாயம் இருப்பதால் அவற்றைத் தவிர்க்கிறேன்.

ஒரு சராசரி வேலைக்காரி பல வீடுகளில் வேலை எடுக்கிறார். ஏன்? கிட்டே சென்று பார்த்தால் தன் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்கவே இந்தப் பாடுபடுகிறார் என்பது தெரியவரும். உதாரணமாக என் வீட்டில் வேலை செய்பவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருமே நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர். முதல் தலைமுறையாக அவர்கள் குடும்பத்தில் படிப்பவர்கள் ஆகையால் வீட்டில் வைத்து சொல்லிக் கொடுக்க அவர்களது தாய் தந்தையரால் இயலாது. ஆகவே டியூஷன் வேறு வைக்கின்றனர். இதற்கெல்லாம் பணம்? கூடவே இன்னொரு கொடுமை. வேலைக்காரிகளின் கணவன்மார்கள் சாதாரணமாக தாம் சம்பாதிப்பதையெல்லாம் பெரும்பகுதி குடித்துவிட்டு தொல்லை செய்பவரகள். சமயத்தில் மனைவியிடமே குடிக்க காசு கேட்டு தொந்திரவு செய்பவர்கள்.

காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் நான்கைந்து வீடுகளில் வேலை செய்துவிட்டுத் திரும்ப வீட்டுக்கு வர எப்படியும் 12 மணியாகி விடும். அதற்கப்புறம்தான் சோறு ஆக்குவது, துணிதுவைப்பது எல்லாமே. சில வீடுகளில் இரண்டு வேளையும் செல்ல வேண்டியிருக்கும். அப்போது ஓய்வு எடுக்கக் கூட நேரம் இருக்காது. சிலர் பூக்களை மொத்தமாக வாங்கிவந்து மாலையாகக் கட்டி சம்பாதிக்கிறார்கள். பலரது குழந்தைகள் வேறு அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை எனில் அவர் வேலை செய்யும் வீடுகளுக்கு வந்து அம்மாவுக்கு உதவியாக இருப்பது வேறு நடக்கிறது.

இவ்வளவும் செய்து வருபர்களை குறியாக வைத்து ஜோக்ஸ் போடுவது அவசியம்தானா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/13/2007

மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி தோய்த்து எடுக்கப்படும் தயிர் பாலின் விலையை விட அதிகம். அதே போல தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, மிகுந்து போன மோரை விற்று, வெண்ணையையும் விற்றால் இன்னும் அதிகப் பணம் கிட்டும். அதே வெண்ணையை நெய்யாக்கினால் கிடைக்கும் பணமும் அதைவிட அதிகமே. அதே நெய்யை, இன்னும் பல பொருட்களுடன் சேர்த்து பட்சணம் செய்தால் பிய்த்துக் கொண்டு போகும் என்பதை அடையார் காந்தி நகரில் இரண்டாம் மெயின் ரோட்டில் உள்ள க்ராண்ட்ஸ் இனிப்பகத்தின் முதலாளி நன்கு அறிவார். இந்த ப்ராசஸின் எல்லா காலக் கட்டங்களிலும் வெவ்வேறு பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ?

"இப்போது என்னதான் கூறவருகிறாய்" என்று முரளி மனோஹர் கூச்சலிடுவதால் நான் நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

நான் கூறியது மதிப்புக் கூட்டலாகும். ஒரு சாதாரண நிலத்தில் தொழிற்சாலை கட்டினால், அது லாபம் ஈட்டினால் போட்ட முதல்களுக்கு பல மடங்கு லாபம் வருவதும் இந்த மதிப்புக் கூட்டலால்தான். பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது நம் நாட்டின் பஞ்சை லங்காஷயருக்கு ஏற்றுமதி செய்து ஆடைகளாக நெய்து, மதிப்பைப் பலமடங்கு கூட்டி நம்மூர் மார்க்கெட்டிலேயே விற்று ஒரு சாம்ராஜ்யத்தையே நடத்தினார்கள்.

என்னுடைய உதாரணத்தையே இங்கும் எடுக்கிறேன். நான் பொறியியல் படித்து வேலை தேடும்போது எனது மதிப்பு x என்று வைத்து கொள்வோம். அது வெறுமனே எனக்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியர் வேலை வாங்கிக் கொடுத்தது. பத்து ஆண்டுகள் அதே பதவியில்தான் இருந்தேன். அதன் கடைசி ஆண்டுகளில்தான் பதவி உயர்வுக்கான தேர்வைக் கொண்டு வந்தார்கள். நான் எடுத்த சுயமுடிவு காரணமாக அத்தேர்வை எழுதவில்லை. ஏனெனில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் வரும். எனது தந்தைக்கு ஒரே மகனாகிய நான் சென்னையை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்பதெல்லாம் பை தி வே நிகழ்ச்சிகள். இப்பதிவுக்கு அது வேண்டாம். மதிப்பு கூட்டலுக்கு நான் ஒத்துக் கொள்ளாததால் நான் அதே நிலையில் இருந்தேன். ஆனால் இது நிலையானதல்ல. என் தந்தையின் மரணத்துக்கு பிறகு என்னை சென்னையில் நிறுத்திக் கொள்ள முக்கிய விஷயங்கள் ஒன்றும் இல்லை. அச்சமயம் நான் அறிந்த ஃபிரெஞ்சு மொழி எனக்கு மொழிபெயர்ப்பாளர் வேலை வாங்கிக் கொடுத்தது. நான் அச்சமயம் 425-700 ஸ்கேலில் இருந்தேன். மொழிபெயர்ப்பாளன் மற்றும் பொறியாளனாக நான் சென்ற பதவியின் ஸ்கேல் 700-1300. பயங்கர அளவில் மதிப்பு கூட்டல் அல்லவா? (மதிப்பு 2x)

தில்லியில் பொறியாளர் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலை செய்தபோதுதான் மதிப்புக் கூட்டல் எந்த அளவுக்கு நடந்தது என்பதை நேரிடையாக உணர முடிந்தது. அதாவது பொறியாளர்கள் இருப்பில் குறைவேயில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் இருப்பிலும் அதே கதைதான். பலர் உண்டு. ஆனால் இரண்டு வேலைகளையும் செய்பவர்கள்? தில்லியைப் பொருத்தவரை அச்சமயம் யாருமே இல்லை, என்னைத் தவிர என்றுதான் நினைக்கிறேன். ஆகவே எனது மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. (3x)

வீ.ஆர்.எஸ். வாங்கியதும் நிலை என்ன? எனது மதிப்பை இன்னும் அதிகமாக்கினால்தான் நான் கேட்கும் ரேட்டில் வேலை கிடைக்கும். அதற்கு என்ன செய்யலாம்? மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தரத் தயங்கும் அல்லது தர இயலாத சேவை அளிக்க வேண்டும். அதுதான் வாடிக்கையாளர் இடத்திற்கே சென்று மொழிபெயர்த்து தருவதாகும். (4x)

பிறகு சென்னைக்கு வந்து செட்டில் ஆனபோது அடுத்த மதிப்புக் கூட்டல் நடந்தது. முதல் முறையாக மின்னஞ்சல் முகவரி உருவாக்கி எனது தில்லி வாடிக்கையாளருக்கு சேவை தொடர்ந்து அளித்தேன். ஆக சேவை அளிப்பவர் வசிக்கும் இடம் எங்கிருந்தாலும் அவர் வேறு எல்லா இடங்களிலும் வசிக்கும் வாடிக்கையாளருக்கு சேவை அளிக்க இயலும் என்பதே நிஜமாயிற்று. பிறகு சொந்தக் கணினி வாங்க மதிப்பு இன்னும் கூடியது. தமிழ்ப் பதிவுகள் போடப்போட அதுவரை எடுக்காத தமிழ் மொழிபெயர்ப்புகளும் செய்ய முடிந்தது. ஆக, மதிப்புக் கூட்டல் விடாமல் நடக்கிறது. (5x, 6x...). போதுமா இது? நிச்சயம் போதாது. உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரே இடத்தில் நிலை கொள்வதற்கே ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

"வேறு உதாரணங்கள் கூறு, போதும் உன் சுய அலம்பல்", என்று முரளி மனோஹர் மறுபடியும் கோபிக்கிறான். ஆகவே இதோ மற்ற சில உதாரணங்கள்.

சாதாரணமான குப்பை வாருவதை காண்ட்ராக்ட் எடுத்து விஞ்ஞான முறைப்படி அதைக் கையாண்டு வெற்றி பெற்ற நிறுவனங்கள் இல்லையா. மனிதக் கழிவுகளுக்காக சுலப் சவுச்சாலய் நிறுவி ஓகோ என்றெல்லாம் வந்து விட்டார்களே. எனது இந்தப் பதிவையே பாருங்களேன். எந்த சேவையுமே அதன் மதிப்பு கூட்டப்படும்போது அதன் விலையும் அதிகரித்து நல்ல லாபம் கிட்டுகிறதல்லவா?

எந்தச் சேவையையும் அளிக்கும் விதத்தில் அளித்தால் அதன் மதிப்பு கூடும். உதாரணத்துக்கு கிராமங்களில் நாவிதராக இருந்து சில படி அரிசிகள் பெற்று செல்பவர்கள் நிலைக்கும் பியூட்டி பார்லர்கள் நடத்துபவர்கள் பொருளாதார நிலைக்கும் உள்ள வித்தியாசத்தையே பாருங்கள். அதே போல கிராமத்து வண்ணார்களுக்கும் நகரத்தில் டிரை கிளீனிங் நடத்துபவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தெருவோரம் அமர்ந்து வேலை செய்யும் செருப்பு ரிப்பேர் செய்பவருக்கும் பாட்டா கம்பெனிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு எல்லாமே கூர்ந்து கவனிக்கத் தக்கவை. பல டூத்பிரஷ் கம்பெனிகள் தங்களது பிரஷ்கள் தயாரிப்பை அவுட்சோர்ஸ் செய்கின்றன. குடிசைத் தொழில் அடிப்படையில் செய்யப்படும் பிரஷ்கள் கம்பெனி பிராண்ட் நேம் பெற்றவுடன் அதன் விலை எந்த அளவுக்கு உயர்கிறது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/12/2007

உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்

மகாபாரதம் யுத்தம் முடிந்தது. யுதிஷ்டிரர் மன்னராகிறார். பாண்டவர்கள் தம் மனைவி துரோபதி பின்தொடர,பீஷ்மர் சாய்ந்திருக்கும் அம்புப் படுக்கைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு ஆசியளித்த பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல நல்ல விஷயங்களை உபதேசிக்கிறார். அப்போது துரௌபதி தன்னையும் அறியாது கேலிப் புன்னகை செய்கிறாள்.

பீஷ்மர் தான் கூறுவதை நிறுத்திவிட்டு துரோபதி அவள் ஏன் புன்னகை புரிந்தாள் எனக்கேட்க, அவள் கூறுகிறாள்.

"பிதாமகரே, இத்தனை நல்ல விஷயங்கள் கூறுகிறீர்களே, அவற்றில் ஒன்றுகூட நான் சபையில் மானபங்கம் செய்யப்பட்டபோது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா"?

பீஷ்மர் கோபப்படாது பதிலளிக்கிறார். "அம்மா, அச்சமயம் நான் துரியனின் உப்பைத் தின்று வந்தேன். அதனால் எனது ரத்தத்தில் அவனது கெட்ட எண்ணங்கள்தான் ஆட்சி புரிந்தன. நானும் சும்மா இருந்து விட்டேன். ஆனால் இப்போது அந்த கெட்ட ரத்தத்தை எனது அருமை அருச்சுனனின் பாணங்கள் வெளியேற்றி விட்டன. இப்போது நல்ல புத்தி திரும்பியது".

ஆனால் இந்த இடத்தில் நான் வேறு ஒரு விஷயத்தைப் பார்க்கிறேன். இந்த தர்மசங்கடம் பீஷ்மராகத் தேடிக்கொண்டது. அவரது தந்தை சந்தனு சத்யவதி என்னும் பெண் மேல் ஆசைப்பட, அவளை அவருக்கு மணமுடிக்க வேண்டுமென்றால் அவளுக்கு அவரிடம் பிறக்கும் மகனுக்குத்தான் பட்டம் என்று அவள் தந்தை நிபந்தனை விதிக்கிறார். தனது மகன் தேவவிரதன் இருக்க, இம்மாதிரி தாம் செய்வது தகாது என சந்தனுவும் அரண்மனைக்கு திரும்பிவிடுகிறார். இந்த விஷயத்தை தேவவிரதன் மூன்றாமவர் மூலமாக அறிந்து சத்யவதியின் தந்தையிடம் அவளை தன் தந்தைக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்கிறார். பட்டமும் சத்யவதியின் மகனுக்கே எனக் கூறுகிறார்.

ஆனால் சத்யவதியின் தந்தை ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா. அவர் கூறுகிறார். "இளவரசே, நீங்கள் வாக்கு தவறாதவர். அது எனக்குத் தெரியும். ஆனால் உங்களுக்கு பிறக்கும் மகன்களைப் பற்றி நான் ஏதும் கூற இயலுமா? அவர்கள் பிற்காலத்தில் எதிர்த்தால் என்ன செய்வது"?

இப்போதுதான் தேவவிரதன் கடுமையான சபதம் செய்கிறார், தான் எக்காரணம் கொண்டும் திருமணமே செய்யப்போவதில்லை என்று. வானத்திலிருந்து புஷ்பமாரி பொழிகிறது. பீஷ்மா என்று அவர்க்கு பெயரும் மாறுகிறது. அக்கதை மகாபாரதம் தெரிந்த கிட்டத்தட்ட எல்லோருமே அறிவர். ஆனால் அந்த சபதத்தால் அவருக்கு என்னென்ன தர்மசங்கடங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தால் மலைத்து போவீர்கள். சத்திய்வதியின் புதல்வன் விசித்திரவீர்யனுக்காக பெண்ணெடுக்கப் போன இடத்தில் குளறுபடி ஆரம்பிக்கிறது. அதுபற்றி விரிவாக இன்னொரு முறை கூறுகிறேன். ஆனால் இது சம்பந்தமாக அம்பையின் விரோதம் ஏற்பட்டு அவள் அடுத்த பிறவியில் சிகண்டியாக வந்து அவரது மரணத்துக்கு காரணமாகிறாள். அதுவும் வேறு கதை. இச்சிக்கல் வந்ததன் காரணமே பீஷ்ம பிரதிக்ஞைதான் என்று கூறினால் மிகையாகாது.

விசித்திர வீரியன் வாரிசின்றி இறக்க, சத்யவதியின் தந்தையே தனக்கு பீஷ்மர் செய்து தந்த சத்தியத்திலிருந்து அவரை மீட்டு, அவர் விசித்திர வீர்யனின் விதவைகளை மணம் புரிய வேண்டும் எனக் கேட்க, அப்போதும் மறுப்பது பீஷ்மர் தனக்குத்தானே வைத்து கொண்ட கட்டுப்பாடே. கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.

யுதிஷ்ட்ரர் சூதாடியதும் அவர் செய்த ஒரு பிரதிக்ஞை காரணமே என்பதை எவ்வளவு பேர் அறிவீர்கள்? குல நாசம் ஏற்படப் போகிறது என்று தௌம்ய முனிவர் கூறிவைக்க, உறவினர்கள் என்ன கேட்டாலும் நிறைவேற்றப் போவதாக இவர் சபதம் செய்து தொலைக்க, துரியன் கேட்டுக் கொண்டபடி சூதாட்டம் ஆடத் துவங்க என்றெல்லாம் கதை போகிறது.

மீண்டும் பீஷ்மர். கௌரவ அரசவையில் துரோபதைக்கு அவமானம் செய்தது துரியன். அவனையும் துச்சாசனையும் செவுளில் நாலு அறை விட்டு துரோபதையைக் காத்திருக்கலாம் பீஷ்மர். ஆனால் செய்யாததற்கு காரணம் அத்தினாபுரத்து அரசனுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் கொடுத்த வாக்கு அவரது மூல சபதத்தின் ஒரு பகுதி.

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். யுத்தம் என்று வரும்போது உங்கள் யுக்திகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். "முன்பு நீங்கள் வேறுமாதிரி செய்தீர்களே, இப்போது இம்மாதிரி செய்கிறீர்களே" என்று விஷயம் புரியாதவர்கள்/புரிந்தவர்கள் கேட்டாலும் அதை புறம் தள்ளிப் போகத் தெரிய வேண்டும். முக்கியமாக உங்களை ஒருவரும் டைப்காஸ்ட் (typecast) செய்ய இடம் தரலாகாது.

யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும். நீங்கள் நல்ல முறைகளைப் பிரயோகிப்பது உங்கள் நலனுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மற்றவருக்கு தீமை செய்யலாகாது என்று இருப்பதன் முக்கிய நோக்கமே தனக்கும் அதே நிகழாலாம் என்ற பயமேயாகும்.

முக்கிய நோக்கம் இறுதி வெற்றி. அது வரும் வரைக்கும் நீங்கள் திசை திரும்பலாகாது. நாலு பேர் என்ன கூறுவார்களோ என யோசித்து கொண்டிருந்தால் அதோகதிதான். ஏனெனில் எதிரி அவ்வாறெல்லாம் யோசித்து நேரம் வீணாக்க மாட்டான்.

இதைச் சொன்னதும் நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. டாமும் ஹாரியும் நண்பர்கள். அவர்களது மனைவியரும் தோழிகள். நால்வருமாகச் சேர்ந்து உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஹோட்டலில் இரண்டு அறைகள் ஒவ்வொரு தம்பதிக்கும் புக் செய்துள்ளனர். போன இடத்தில் மழை. நால்வரும் ஹோட்டலுக்கு ஓடி வருகின்றனர். மின்சாரம் வேறு ஃபெயில் ஆக, எங்கும் இருட்டு. தட்டுத் தடுமாறி தத்தம் மனைவியருடன் டாமும் ஹாரியும் அறைகளுக்கு திரும்புகின்றனர். டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். ஐந்து நிமிடம் அதில் செல்ல, பிரார்த்தனை முடியவும் மின்சாரம் திரும்ப வரவும் நேரம் சரியாக உள்ளது. இப்போதுதான் டாமுக்கு தெரிகிறது தன்னுடன் தன்னறையில் வந்தது ஹாரியின் மனைவி என்று. துடிப்பாக கதவை நோக்கி அவன் ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/09/2007

சேமிப்பது சரியா, தவறா?

நான் போன ஆண்டு துவக்கத்தில் இட்ட இந்தப் பதிவைப் பார்க்கவும்.

சில நாட்களுக்கு முன்னால் நண்பர் அதியமான அவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் ஜப்பானியரின் சேமிக்கும் வழக்கத்தையும், அமெரிக்கரின் செலவு செய்யும் வழக்கத்தையும் குறித்து ஒரு பேராசிரியர் எழுதியதை மேற்கோள் காட்டியிருந்தார். அதை நான் கூகளில் தேட, கிடைத்த பல சுட்டிகளில் ஒன்றில் அதைப் பற்றி மேலே அறியலாம்.

14.11.2007 குமுதம் இதழின் இணைப்பில் சுஜாதா அவர்கள் பணத்துடன் தனது அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சிலவரிகள். "என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன். எப்போதும் தேவைக்கு சற்றே குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது. யாராவது வந்து பெரிசாக எதிர்ப்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டி விடலாம்". கடைசி வரி தமாஷ் எஃபக்டுக்காகக் கூறியதாகவே கொள்கிறேன். ஏனெனில் பேங்க் பாஸ் புத்தகத்தை திறந்து காட்டுவது என்பது ஆபத்தை விலைக்கு வாங்குவதாகும். மற்றப்படி சுஜாதா கூறுவதில் விஷயம் உள்ளது.

தாம்தூம் என்று செலவழிப்பவர்கள் சேமிக்கும் வழக்கம் உள்ளவரிடம்தான் கடனுக்கு என்று வந்து நிற்பார்கள். அவர்களை எப்படி எதிர்க் கொள்வது? நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் இருந்தபோது ஒரு பம்ப் ஆப்பரேட்டர் எல்லோரிடமும் கடன் வாங்குவதையே தொழிலாக வைத்திருந்தார். எல்லோரும் அவர் வந்து கடன் கேட்கும்போதே தங்கள் குறைகளைச் சொல்லி மூக்கால் அழுவார்கள். ஆனால் நான் மட்டும் சற்றே வித்தியாசமாக ரியேக்ட் செய்தேன். என்னிடம் கடன் கேட்டபோது சாதாரணக் குரலில் இல்லை எனக் கூற, அவர் "ஏன் சார் உங்களுக்கும் பணக்கஷ்டமா"? எனக் கேட்க, "நான் அதெல்லாம் இல்லை, ஆனால் உனக்குக் கடன் தர விருப்பமே இல்லை" என்று முகத்திலடித்தது போல கூறினேன். அதுவும் எல்லார் முன்னிலையிலும். அதிலிருந்து அவர் என்னிடம் மட்டும் கடன் கேட்பதில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் உதவுவது வேறு, இம்மாதிரி கடன் கொடுத்து ஏமாளியாவது வேறு.

சரி, பதிவுக்கு வருவோம். சேமிப்பது நல்லதா கெட்டதா? மேலே உள்ள உதாரணங்களில் அது கெட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம். மற்றவர் கடன் கேட்கும் பிரச்சினை நிச்சயம் உண்டுதான். அதற்காக நாமும் தாம் தூம் என்று செலவு செய்து விடலாமா? நமக்குத்தானே அது கெடுதல்? கடன் கேட்டால் அதை சமாளிக்க ஆயிரம் வழிகள் உள்ளன. சேமித்து நல்லபடியாக முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக வருமானம் வருமல்லவா? விலைவாசிகள் என்னவோ குறையப்போவதில்லை. செலவுக்கு மேலேயே வருமானம் இருக்குமாறு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கான முறைகளில் ஒன்றுதான் சேமிப்பின் மூலம் நமது பணமே நமக்காக மேலும் பணம் ஈட்டுவதாகும். இன்னொரு வழி செலவுக்கு மேலே வருமானம் ஈட்ட வேண்டியதுதான் என்பதையும் கூறவேண்டுமோ?

அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் (என் மனைவியின் அண்ணன்) வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/08/2007

கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்

கலைஞருக்கு வேண்டியவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள் அவருக்கு இப்போது ஆபத்து விளைவிக்கும் யோசனையை தெரிவித்து வருகின்றனர். அதாவது கலைஞர் அரசை கலைத்து பார்க்கட்டுமே என்று. அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்கள் இதோ.

"ஏன் இந்தக் கொலைவெறி. பாவம் கலைஞர் உங்களைப்போன்ற அவரது ஆதரவாளர்கள் இருக்கும்போது அவருக்கு விரோதிகளே தேவையில்லை.

ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.

1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.

அதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.

இப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள்? பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்?

இம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா"?

அதுவும் அந்த 1991 ஆட்சிக் கலைப்பு சமயத்தில் துக்ளக்கில் வந்த அந்த கார்டூன் இப்போதும் மனதில் நிற்கிறது. அப்போது சுப்பிரமணியம் ஸ்வாமியும் ஜெயலலிதாவும்தான் சேர்ந்து அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் கலைஞரை போட்டு கொடுத்து அவர் ஆட்சியை கலைக்க செய்தனர். முதலில், "சுப்பிரமணிய ஸ்வாமியா யாரது" என்று சீறிய கலைஞர் பிறகு பதறிப்போய் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆதரவை பெற முயன்றதை ஒரு கார்ட்டூனில் துக்ளக் இவ்வாறு காட்டியது. கலைஞர் சுப்பிரமணிய ஸ்வாமியின் வீட்டருகில் நின்று பாடுகிறார். "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய சுவாமி உனைமறந்தார் அந்தோ". அதைப் பார்த்து அக்காலக் கட்டத்தில் நான் விடாது சிரித்த சிரிப்பு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

மேலே சுட்டியிட்ட அதே பதிவில் இசை அவர்களின் பின்னூட்டம் இதோ:

"உணர்ச்சி இருக்குறவங்கள தானே உசுப்பேத்தமுடியும்?? மரக்கட்டைகளையும், மாராப்பு விரித்து மன்றம் பிடித்தவர்களையும் உதைத்தால் கூட ஒரு பயனும் இல்லை. நல்லது நடக்கும் என்று தெரிந்ததால் தான் உசுப்பேற்றுகிறோம் டோண்டு அவர்களே".

அதற்கு எனது பதில்:

"ஆயிரத்தில் ஒரு வார்த்தை இசை அவர்களே. கலைஞர் உணர்ச்சி மிக்கவர்தான். தனது குடும்பத்தினர் மட்டுமே கட்சியில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற பாச உணர்ச்சியில் இருப்பவர். தமிழ் உணர்ச்சிகள் மேலே சொன்ன உணர்ச்சிக்கு எதிராக வந்தால் அவற்றை அதற்காக தியாகம் செய்பவர்.

அவர் ஆட்சியை விட்டு விலகுவார் என நினைக்கிறீர்கள்? அதே சமயம் மன்மோகன் அரசு அவர் ஆட்சியை கலைத்தால் அவர்களுக்கே அது ஆப்புதானே.

இந்த நிலையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னென்று சொல்வது"?

இதனாலெல்லாம் கலைஞர் செய்வது தவறென்று நான் சொல்ல வரவில்லை. அவர் பாட்டுக்கு தேமேனென்று தன் குடும்ப நலனை கவனிக்கிறார். அது பொறுக்காதே ஜனங்களுக்கு. இப்படி உசுப்பேத்தினால் கலைஞர் ராஜினாமா செய்து விடுவாராமா? வேறு ஆளைப் பாருங்கள். ஆனானப்பட்ட அழகிரி விவகாரத்திலேயே அவர் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டார்? இப்போதைக்கு அச்சமயம் கொலை செய்யப்பட்ட 3 தினகரன் ஊழியர்களின் குடும்பத்தினர் தவிர இப்போது யார் அதைப் பற்றி நினைக்கிறார்கள்?

ராமர் குடிகாரன், தெய்வமே இல்லை என்றெல்லாம் கொடிபிடித்த அதே கலைஞர் வட இந்தியாவில் வந்த எதிர்ப்பைப் பார்த்து எவ்வளவு திறமையுடன் தனது பேச்சை மாற்றினார்?

இது சம்பந்தமாக வந்த 31.10.2007 தேதியிட்ட துக்ளக் அட்டைப்பட் கார்டூன் அதை அழகாக காட்டுகிறது. அது இதோ:



இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நியூஸ் செர்வீசில் வந்த இச்செய்தியை இங்கு பார்க்கலாம். எதற்கும் அதில் உள்ளதை இங்கு காப்பி ஏஸ்ட் செய்வதே நலம். திடீரென சுட்டி வேலை செய்யாவிட்டால் என்ன செய்வதாம்?

Ram, Jesus, Mohammed all one and same god: Karunanidhi
Friday October 19 2007 00:00 IST
Express News Service

CHENNAI: In a remarkable reversal Chief Minister M Karunanidhi, who has been in the midst of controversy over his remarks against Lord Ram, on Thursday declared that Ram was as much a god as Jesus and Prophet Mohammed.

Speaking in the Assembly, Karunanidhi asserted that neither he nor his party or government was against Ram.

“As far as we are concerned Rama, Jesus and the Prophet (Mohammed) are one and the same. All are one and the same God. This government has deeply embedded in its heart (the late Chief Minister) CN Annadurai's dictum of ‘One family, One god’ and never intends to wound (the religious feelings of) anyone,” he said.

His declaration came as a part of his fervent plea for implementation of Sethusumudram project. “If necessary name it as Sethu Raman project. All that we need is the implementation of the project, and thereby the progress of Tamil Nadu. We are pressing for the project only for this and not to denigrate Rama.”

The remarks come in the wake of the appeal by actor Rajnikanth two days ago to Karunanidhi to resolve the Ram Setu issue.

In fact, Karunanidhi referred to Rajnikanth's appeal, and said that the actor had pointed out that there was a propaganda in North India that he was Ram-hater.

He also recalled that he had told Rajnikanth that he (Rajnikanth) should tell the ‘Sants and mahants’ that he was did not despise Ram. “We do not have anything against Ram,” he said.

இப்போது சிறு கஷ்டம் வரக்கூடும். ராமரை முதலில் திட்டி விட்டு பிறகு அவரை ஏசு, முஹம்மது போன்றவர்களுடன் ஒன்றாக பட்டியலிட்டதால் அது வரக்கூடும். இப்போதைக்கு வரவில்லை. பரவாயில்லை. கலைஞருக்கு அது நல்லதே.

நான் மறுபடியும் கூறுகிறேன். கலைஞர் அவர்கள் செய்வது தவறே இல்லை. தனது சொந்த நலனை பார்த்து கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/07/2007

மூன்றாம் ஆண்டு நிறைவு

விளையாட்டுப்போல 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அந்த மூன்றாம் ஆண்டின் கடைசி நாள் (07.11.2007). இது 434-வது பதிவு. முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது. முதல் ஆண்டு முடிந்தபோது போட்ட பதிவு 173-வது. இரண்டாம் ஆண்டு நிறைவு பற்றி போட்ட பதிவு 321-வது ஆகும்.

இவை வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. அவற்றுக்கெல்லாம் மேலே எனது அனுபவங்கள் பற்றி எழுத வேண்டும். பெரும்பான்மையானவை நல்ல அனுபவங்களே. மிகச் சில அனுபவங்கள் அவ்வளவு நல்லவை அல்ல. ஆயினும் அவற்றையெல்லாம் மீறித்தான் நான் வந்தேன்.

நான் கெட்ட அனுபவம் எனக் குறிப்பிடுவது போலி டோண்டு என்னும் பெயரில் வந்த மூர்த்தி என்னும் பதிவர் மூலம் வந்தது. உபயோகமில்லாமல் என்னுடன் ஒரு பதிவு விஷயத்தில் போட்ட சண்டைக்காக விஷம் கக்கியவர் அவர். ஒரு மனிதனால் இந்த அளவுக்கு கீழே இறங்க முடியுமா என்று திகைப்பளிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்து கொண்டார் அவர். நல்ல வேளையாக அவர் பல பதிவர்களால் சரியானபடி அடையாளம் காண்பிக்கப்பட்டு அவர் தொல்லை ஒழிந்தது. இந்த விஷயத்தில் நான் நன்றிகூற வேண்டியவர்கள் குழலி, ஓசை செல்லா, செந்தழல் ரவி, சர்வேசன், உண்மைத் தமிழன் ஆகியோர். இதைத் தவிர மீதி எல்லாமே நல்ல அனுபவங்கள்தான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழ்மணம் எனது முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியது. அதற்கு எனது மனப்பூர்வமான நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். இந்த நன்றி தெரிவிக்கும் விஷயத்திலும புதிதாக ஒன்று பார்த்தேன். சில சமயங்களில் நான் மனப்பூர்வமாக தெரிவித்த நன்றியறிவிப்பு பலருக்கு சங்கடம் தந்தது என்பதை அறிய நேர்ந்தது. ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்து கொண்டேன். ஏனெனில் எனது அனுபவங்களில் பல விஷயங்கள் இம்மாதிரி நான்-லீனியராக அமைகின்றன என்பதே அது.

இந்த மூன்றாம் ஆண்டில் பெரும்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அது முடிந்த அன்றைக்கு நான் டப்பாங்குத்து நடனமே போட்டு ஒரு குழந்தையையும் அதன் அம்மாவையும் பயமுறுத்தியதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். தாய்மொழியில் மொழிபெயர்க்கும் ஆனந்தம் செய்துதான் உணரமுடியும். உதாரணத்துக்கு இப்பதிவுக்காக நான ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தபோது சொற்கள் இயந்திரத் துப்பாக்கியிலிருந்து வருவதுபோல வந்தன. கண்களில் நீர் திரையையே மறைத்தது. ஸ்ரீலங்காவிலிருந்து வந்த வாடிக்கையாளர் பற்றிய பதிவும் என்னையறியாத அளவுக்கு வேகமாக வந்தது.

எல்லா பதிவுகளுமே என் குழந்தைகள்தான் என்றாலும் மேலே கூறியது போன்ற சில பதிவுகள் ஏதோ காரணங்களால் என் நினைவில் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆரவாரப் பேய்கள் பற்றியது. இன்னொன்று ஷ்டாஸி பற்றியது.

இந்த ஆண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளிலும் அபார முன்னேற்றம். மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் நான் ப்ளாட்டினம் உறுப்பினராக முடிந்தது அவர்களது இணையப்பக்கங்களை தமிழாக்கம் செய்ததன் மூலமே. அதற்கு தேவையான தமிழில் எழுதும் திறமையே நான் வலைப்பூவுக்கு வந்ததாலேயே வந்தது. முக்கியமாக இகலப்பைக்கு மிக்க நன்றி. நண்பர்களுடன் எதிர்வினை செய்யும்போதும் அதற்கும் மேலாக எதிரியுடன் மோதும்போதும் போட்ட பதிவுகள் இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி அளித்தன என்றால் மிகையாகாது.
இன்னும் பல காலம் இருந்து உங்களையெல்லாம் படுத்த உத்தேசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/05/2007

நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்

மனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர்களிடம் அவர்கள் கைப்பற்றிய எதிரி தேசத்து அரசனின் பொருட்களை கொண்டு வந்து காட்டுமாறு கூறுவான். அவர்கள் கொண்டு வந்து அன்று அரசன் காலடியில் கொட்டியது இரண்டு தினத்தந்தி பேப்பர்கள், ஒரு டார்ச்லைட் மற்றும் சில ட்ரான்சிஸ்டர்கள். அரசன் முதற்கொண்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க, வேகமாக ஸ்க்ரீனை இழுக்க வேண்டியதாயிற்று.

இதே போலத்தான் எனது இப்பதிவில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் தலைப்பில் போடப்பட்ட நாடகத்தில் நடந்ததாக நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஹாம்லெட் நாடகம் போட்டார் (அமலாதித்யன்). அதிலும் இதே போல காலத்துக்கு சம்பந்தமில்லாத பொருள் நாடக மேடையில் தென்பட (ஹாம்லெட்டின் தந்தை அணிந்த ரோலக்ஸ் கைக்கடிகாரமாக இருக்குமோ!), "நான் அமலாதித்யன் என்பதை மறந்து ரங்கத்தில் உருண்டு புரண்டு சிரித்தேன்" என்று கூறுகிறார்.

நான் பார்த்த மராட்டிய நாடகம் ஒன்றில் வில்லன் கதாநாயகியை பலவந்தம் செய்ய அவள் இறக்கிறாள். அப்போது அங்கு வந்த ஹீரோ அதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அப்போது வில்லன், "அவள் என்னுடன் போராடினாள், ஆகவே அவளை நான் கொன்று விட்டேன்" என்று வசனம் கூற வேண்டியவன். திடீரென அவன் இதை மறக்க, சங்கடமான மௌனம் சிறிது நேரத்துக்கு. கீழே விழுந்து கிடந்த பிணம் எழுந்து "நான் அவனுடன் போராடினேன், ஆகவே அவன் என்னைக் கொன்று விட்டான்" என்று கூறி மீண்டும் படுத்து விட்டது. (பை தி வே நான் இதை விகடனுக்கு எழுதி 15 ரூபாய் சன்மானம் சமீபத்தில் 1976-ல் பெற்றேன்).

கல்கி பார்த்த ஒரு நாடகத்தில் கோவலன் சிலம்பை விற்பதற்காக கண்ணகியிடமிருந்து விடைபெற்று செல்கிறான். திடீரென "தேசபந்துதாஸ் பாட்டு" என்று அரங்கத்தில் கூச்சல் எழுப்ப "அங்கதேச வங்கதேச பந்துவை இழந்தனம்" என்று கோவலன் பாட ஒரே கைத்தட்டல். கல்கிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். பிறகுதான் விளங்கியதாம், சில மாதங்களுக்கு முன்னால் இறந்து போன தேசபந்துதாஸ் மரணம் அடைந்தது பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவலன் சிலம்பு விற்கப் போவதையும் மறந்து பிரலாபிக்கிறான் என்று.

நாடகங்களில் இன்னொரு சிரமம் உண்டு. முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். எல்லோரும் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பார்கள். இதை கண்டிக்கும் பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்கள் இதற்கு "அவல் மென்று கொண்டிருப்பது" என்று பெயரிட்டுள்ளார். மற்றவர்கள் ஏதேனும் இயல்பான செய்கைகள் புரிய வேண்டும் என்பார். அதற்கு by-play என்று பெயர்.

எது எப்படியாக இருப்பினும் நாடகம் குறிப்பிடும் காலக்கட்டத்துக்கு இயல்பில்லாத பொருள்கள் வருவதை அதே பம்மல் சம்பந்த முதலியார், அவற்றை தனது "என் நாடக அனுபவங்கள்" என்னும் புத்தகத்தில் "நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்" என்று அழைத்தார்.

நீங்கள் என்ன எதிர்ப்பார்த்து இப்பதிவுக்கு வந்தீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2007

நான் அமெரிக்க ஆதரவாளன்

சமீபத்தில் அறுபதுகளில் டாக்டர் பெஞ்சமின் ஸ்போக் என்பவர் அமெரிக்காவின் வியட்னாம் கொள்கையை விமரிசனம் செய்த போது நான் எரிச்சலை காண்பித்தேன். அதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த என் தந்தை "உன்னைப் போன்ற உண்மை அமெரிக்கர்களுக்கு கோபம் வருவது புரிந்து கொள்ள முடிகிறது" என்று என்னை கிண்டல் செய்தார். கிண்டலாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தது, ஆகவே நான் ஒன்றும் கூறவில்லை. You are more pro-American than an American" என்றும் அவர் என்னை கிண்டலடித்திருக்கிறார். அதிலும் உண்மை இருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்து நான் ஆதரிக்கும் நாடு அமெரிக்காவே. ஏன்?

முதல் காரணம் அது இஸ்ரேலை ஆதரிப்பதாலேயேதான் என்று கூறினால் மிகையாகாது. அதை நான் பலமுறை ஏற்கனவே கூறியதால் இங்கு அதை அப்படியே அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் இது இன்னொரு இஸ்ரேல் ஆதரவு பதிவாகப் போய்விடும் அபாயம் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனாகப் போனது சமீபத்தில் 1967-ல் நடந்த ஆறுநாள் யுத்தத்தின் பிறகுதான். அதற்கு முன்பும் இஸ்ரேலிய ஆதரவாளனே, ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆதரவாளனது அறுபதுகளின் துவக்கத்திலிருந்தேதான். அதற்கு முக்கியக் காரணம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் மிகையாகாது.

அமெரிக்கா எனக்கு பிடிக்கும் முக்கியக் காரணமே அதன் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் மனப்பாங்குதான். கென்னடியின் கொலைக்கு பிறகு பிராட்வேயில் ஒரு நாடகம் வந்து சக்கை போடு போடப்பட்டது. அதில் அப்போதையக் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சனுக்கு அக்கொலையில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக கருத்து கூறி கதை சென்றது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆட்டோக்கள் அணிவகுப்பே வந்திருக்குமே. ஒரு சாதாரண வாட்டர்கேட் விவகாரம் ஒரு ஜனாதிபதியையே துரத்தியது. "சாதாரண" என்ற பெயரெச்சத்தை வேண்டுமென்றே போடுகிறேன். நம்ம ஊர் இந்திரா காந்தி செய்யாததையா நிக்ஸன் செய்து விட்டார்? ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூறினார்: "வாட்டர்கேட்? எங்க ஊரில் நாங்கள் எத்தனை முறை வாட்டர்கேட் செய்யப்பட்டுள்ளோம் தெரியுமா"? சோவியத் யூனியனின் அள்ளக்கையான ப்ளிட்ஸ் கரஞ்சியாவே வாட்டர்கேட் விவகாரத்தின்போது அமெரிக்க பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரத்தை வேண்டா வெறுப்பாக ஒத்து கொண்டார்.

அடுத்து அமெரிக்காவிடம் எனக்கு பிடிப்பது அதன் கம்யூனிச எதிர்ப்பு. இது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிக தீவிரமடைந்தபோது, அதே அமெரிக்கர்கள்தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர். அந்தக்காலக் கட்டத்தில் பாப் ஹோப் ஒரு ஜோக் சொல்லுவார்.

"சென்னட்டர் மெக்கார்த்தி ஒரு பெரிய தீவிர கம்யூனிஸ்டு மெம்பர்கள் அடங்கிய லிஸ்டை கண்டு பிடித்துள்ளார். யாரோ அவருக்கு மாஸ்கோவின் டெலிபோன் டைரக்டரியைத் தந்துவிட்டார்".

பை தி வே இதில் இன்னொரு உள்குத்தும் உண்டு. அதாவது அக்காலக் கட்டத்தில் மாஸ்கோவில் டெலிஃபோன் வசதி பெற கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே அது.

சோவியத் யூனியன் தனது புளுகுப் பிரசாரங்களினால் அங்கு தேனும் பாலும் ஓடுவதாகவும், குற்றங்களே நடப்பதில்லை என மாய பிம்பத்தைத் தந்து நம்மூர் கம்யூனிஸ்டுகளும் அதை முழுதும் நம்பி அங்கு ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றெல்லாம் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலோ நாளெல்லாம் கொலை, கற்பழிப்பு நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்க தலைவர்களை எதிர்த்து செய்திகளும் வந்தன. ஒரு சமயம், ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த கார்த்திகேயன் அவர்களே சுஜாதாவக்கு தந்த நேர்க்காணலில் சோஷலிச நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளிலும் குற்றங்கள் மலிந்துள்ளன என்னும் பொருள்பட பேசினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

ஆனால் இந்த நிலையும் சோவியத் யூனியன் திவாலானதிற்கு காரணங்களில் ஒன்று என்பதை அறிவீர்களா? அதாவது தேனும் பாலும் சோவியத் யூனியனில் ஓடுகின்றன என்னும் புளுகு பிரசாரத்தை அதன் தலைவர்களே நம்பியதுதான் காரணம். நம்மூர் இந்திரா காந்தி அவர்கள்கூட அவசர நிலை சமயத்தில் பத்திரிக்கை தணிக்கைகள் போட்டு எதிர் கருத்துகளை கேட்க விடாமல் செய்து, தான் ஜெயிப்போம் என நம்பி தேர்தலை அறிவித்து மண்ணைக் கவ்வியது இங்கு நடந்ததும் தெரிந்ததே.

மறுபடியும் அமெரிக்கா. முழுக்க முழுக்க திறமைக்கு மதிப்பு தரும் நாடு அது. எப்பொருள் யார் யார் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை கேட்கும் ஆர்வத்தால் நல்ல வேலை செய்பவர்களை ஆதரித்து முன்னேற்றம் கண்டது.

அமெரிக்காவில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியுமா? அமெரிக்கர்களே அதை ஒத்து கொள்ள மாட்டார்களே. தென் மாநிலங்களில் காணப்படும் நிறவெறி, மற்ற நாடுகளை பற்றி அதிக அறிவு இல்லாமை ஆகியவை அங்கு உண்டு. ஆனால் அவையும் அமெரிக்க பத்திரிகைகள் மூலமாகவே நமக்கு தெரிய வருகின்றன என்பதை நாம் சிந்திக்கிறோமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது