10/24/2005

சரி செய்ய முடியாத தருணங்கள்

காசி அவர்களின் பதிவு ஒன்றை படித்ததிலிருந்தே மனம் பாரமாக உள்ளது. யாருடனும் தேவைக்கதிமாக சண்டை போடக் கூடாது என்று கூற மனம் விழைகிறது. சண்டையை பற்றி மட்டும் நான் இங்கு பேசப்போவதில்லை. சில விஷயங்கள் நிரந்தரமாகவே சரி செய்ய முடியாத நிலைக்கு போய் விடுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு பேசுவேன்

ராஜாஜி அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவர் மனைவி மரணப் படுக்கையில். பல மணி நேரங்கள் அவரது தலை ராஜாஜி அவர்கள் மடியில் இருந்திருக்கிறது. அவருக்கு கால் மரத்துப்போனதால் சற்றே மனைவியின் தலையை உயர்த்தி தலையணை மேல் வைக்கிறார். அது வரை நினைவில்லாமல் படுத்திருந்த மனைவி கண் விழித்துப் பார்த்து, "ஏன், நான் உங்களுக்கு பாரமாகி விட்டேனா?" என்று கேட்கிறார். ராஜாஜி அவர்கள் பதிலளிக்கும் முன்னரே அவர் மறுபடி நினைவிழந்து, சிறிது நேரத்தில் நினைவு வராமலேயே இறந்து விடுகிறார். இப்போது ராஜாஜி அவர்கள்தான் பாவம் அல்லவா? யாரிடம் போய் அவர் இதைக் கூறுவார்? இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகள் தன் உள்ளேயே வைத்து புழுங்கியிருக்கிறார். ஒரு நாள் தன் நண்பர் (காஸா சுப்பாராவ் என்று நினைவு) ஒருவரிடம் இந்த நிகழ்ச்சியை கூறுகிறார்.

தமிழ் படம் "பிராப்தம்". சிவாஜி, சாவித்திரி நடித்தது. இப்படம் "மிலன்" என்ற பெயரில் ஹிந்தியிலும், "மூக மனசுலு" என்று தெலுங்கிலும் வந்து போடு போடு என்று போட்டது. தமிழ் படம் வெற்றியடையவில்லை.

இப்படத்தில் ஒரு காட்சி. சிவாஜி, சாவித்திரி ஒரு பிறவியில் ஒன்று சேர முடியாமல் இறந்து விடுகிறார்கள். மறு பிறவியெடுத்து, திருமணம் புரிந்து தாங்கள் முந்தையப் பிறவியில் வசித்த இடத்திற்கே வருகிறார்கள். அங்கு இரண்டாம் கதாநாயகி சந்திரகலாவைப் பார்க்கிறார்கள். அவள் முந்தைய பிறவியில் சிவாஜையை காதலித்தவர். சிவாஜி சாவித்திரி இறந்ததும் அவர்கள் சமாதிக்கருகில் ஆண்டுகணக்காக உட்கர்ந்திருக்கிறார். சிவாஜி அவரை இப்போது பார்க்கும்போது அவர் தொண்டுக்கிழவி. பூர்வ ஜன்ம நினைவு சிவாஜிக்கு வர, அவர் சந்திரகலா அருகில் ஓடி தன்னையும் சாவித்திரியையும் அறிமுகப்படுத்த முயல்கிறார். ஆனால் அச்சமயம் பார்த்து சந்திரகலா இறந்து விடுகிறார். இவ்வளவு ஆண்டுகள் சோகத்தில் இருந்த சந்திரகலாவின் துக்கம் பெரிதா அல்லது அவரை சோகத்திலிருந்து மீட்கச் செய்த முயற்சி வெற்றியடையாமல் போனதில் சிவாஜி அடைந்த துக்கம் அதிகமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி செய்ய முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று.

டாக்டர் சாமுவெல் ஜான்ஸன் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அதை பற்றி இங்கு பாருங்கள். இந்த நிகழ்ச்சியை நான் என்னுடைய பத்தாம் வகுப்புக்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் சமீபத்தில் 1960-ல் படித்தேன்.

இப்போது காசி அவர்களின் பதிவுக்கு திரும்ப வருகிறேன். இதில் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் சோகமும் என்னை விட்டு அகலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2005

இரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

நான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் 34 மற்றும் 35 பக்கங்களில் வெளியான இரு சாட்டையடிகளுக்கும் இடையே உள்ளத் தொடர்பைக் கண்டதால் இப்பதிவு.

முதல் சாட்டையடி இதோ. மும்பை வாழ் தமிழர்கள் சிலர் மறைந்தத் தமிழகத் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மும்பை மாநகர காவல் துறையின் அனுமதி வேண்டி சிலர் அருகிலுள்ள ஏரியா காவல் நிலத்தை அணுகியுள்ளனர். அங்குள்ள இன்ஸ்பெக்டர் தன்னிடம் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார். முடிவில் வெளியான விஷயம் என்னவென்றால் வந்திருந்த ஒருவருக்கும் தன் சொந்தத் தாய் தந்தையின் பிறந்த நாட்கள் தெரியவில்லை.

அவர்கள் நாணமடையும் அளவுக்கு அவர் அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். அதாவது சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தப் பெற்றோருக்கு அனுப்பாமல் சம்பத்தமேயில்லாத தலைவனின் பிறந்த நாளுக்கு செலவழிப்பது வீண் செலவே. அவர்களும் தாங்கள் திருந்தியதாகக் கூறியுள்ளனர்.

இப்போது இரண்டாம் சாட்டையடி. தில்லியில் இருக்கும் டாக்டர் அன்புமணியின் இரு குழந்தைகளும் "மேட்டர் டே" என்னும் ஆங்கில - இந்திப் பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது. இவ்வளவிற்கும் தில்லித் தமிழ் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கு நடத்துகிறது. இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில - இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி. அவர் தந்தை என்னவோ இங்கு எல்லாம் தமிழ் என்றிருக்கிறார். இந்த சாட்டையடியில் கூறப்படாத ஒரு உண்மையை இங்கே கூறுகிறேன் "தில்லி தமிழ் கல்விக் கழகம்" ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நல்ல தரமானக் கல்வி. ஆனாலும் மேட்டுத் தமிழ்க்குடியினர் ஆறாவதிலிருந்துதான் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதற்கானக் காரணம் பிறகு.

முதலில் ஃபீஸ் பற்றி. அங்கத்தினர் கட்டணம் மாதத்துக்கு ரூ. 20. குழந்தையின் படிப்புக்காக மாதம் அறுபது பைசாக்கள் மட்டுமே! இதில் இன்னொரு சமாசாரம். அங்கத்தினர் கட்டணம் ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டும். அதாவது ஒருவரூகு ஒன்றுக்கு மேற்பட்டக் குழந்தைகள் இருந்தால் மற்றக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அறுபது பைசாக்கள் செலுத்தினால் போதும். இந்த நிலை என் பெண் படிக்கும்போது (1988-ல்) இருந்தது. இப்போது சிறிது உயர்ந்திருக்கலாம்.

ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்.

அன்புமணி அவர்களின் விவகாரத்துக்கு வருவோம். முதல் சாட்டையடியில் இன்ஸ்பெக்டர் கூறியது என்ன? உங்கள் பெற்றோர்களை மதியுங்கள், தலைவன் மூன்றாம் மனிதனே. அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்காமலேயே அன்புமணி அவர்கள் இம்மாதிரி யோசித்திருக்க வேண்டும். "தமிழ் உணர்வு எல்லாம் மற்றவருக்கே. என் பிள்ளைகள் எதிர்காலம் எனக்கு முக்கியம்." நல்ல ப்ராக்டிகலான முடிவு என்றுதான் கூற வேண்டும்.

இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? "வேலையற்றுப் போய் தலைவர்கள் தங்கள் அரசியல் எதிர் காலங்களுக்காகத் துவக்கும் போராட்டங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்". அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்.

இன்னும் ஒரு படி மேலே செல்வேன். அன்புமணி அவர்களை இங்கு நான் குறை கூற வரவில்லை. அவர் தான் ஒரு நல்ல தந்தை என்பதை நிரூபித்துள்ளார். அவர் வழியில் செல்வதே அவர் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதுதான். நல்லது யார் செய்தாலும் அதை பின்பற்றுவது நல்லதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2005

மழை, புயலுடன் கடந்த வாரம்

கடந்த ஒரு வாரமாக மழை, புயலாக இருந்தது. மழை மிகுந்த ஒரு பகலில் மனநெகிழ்வை அளித்த ஒரு காரியத்தை என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் செய்தார். அன்று அதை லைவ் ஆகப் பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.

அதே சமயம் என்னுடைய சில பதிவுகளும் புயலென பின்னூட்டங்களை சந்தித்தன. ஒரு சிலர் தவிர எல்லோரும் கண்ணியமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்ப்பு வரும் என்று தெரிந்தாலும் அப்பதிவுகளை நான் இட்டதால் அதிகம் பாதிக்கப்படவில்லை. தரக்குறைவான பின்னூட்டங்களை ஏற்கனவே எதிர்கொண்டவன் என்பதால் இம்முறை பாதிப்பு அவ்வளவு இல்லை.

எனக்கு நட்சத்திர வாய்ப்பை இரண்டாம் முறையாய் தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு - குறிப்பாக மதி மற்றும் காசி அவர்களுக்கு - என் நன்றி உரித்தாகுக. இவ்வார நட்சத்திரம் சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை

"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"

இந்த இனிய பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலில் இப்போது கேட்டாலும் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும். கவியரசு அவர்களை பற்றிய நினைவுகள் நம் நெஞ்சில் கிளர்ந்தெழும். படம் "கருப்புப் பணம்". ஆனால் இப்பதிவு அப்பாடலை பற்றியல்ல. தனியுடைமை ப்ற்றி இங்கு நான் எழுதப் போகிறேன்.

உலகமயமாக்கலால் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நல்ல மற்றும் கெட்ட பாதிப்புகள் இரண்டும் உண்டு. நிஜமாகவே வல்லான் பொருள் குவிக்கும் காலம்தான் இது. இதை இரு வகையில் நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒன்று, இதை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதலாம், உங்களுக்கு நேரம் இருந்தால். இல்லையேல் நீங்களும் வல்லானாக மாற வேண்டியதுதான்.

தொண்ணூறுகளுக்கு முன்னால் நம் நாட்டு நடப்பு எப்படியிருந்தது? தொலைபேசி இணைப்புக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது? வெஸ்பா ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு காத்திருந்த ஆண்டுகள் எத்தனை? தூர்தர்ஷன் தவிர வேறு சேனல்கள் இருந்தனவா? ஒரு தலைவர் மண்டையைப் போட்டால் சோக இசை நாள் முழுக்க அல்லவா பார்த்து, கேட்டு அவதிப்பட வேண்டியிருந்தது? இப்போது? மற்ற சேனல்கள் இருக்கும் நிலையில் தூர்தர்ஷன் அவ்வாறு செய்ய இயலுமா?

வல்லான் தன் திறமையால் பொருள் குவித்தால் ஏழைகள் கஷ்டப்படுவார்களா? என்ன வாதம் இது? இவ்வாறு சொல்லித்தான் சோஷலிச இந்தியாவில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. விளைவு? பெர்மிட் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டும் பொருள் ஈட்டினர். இதைத்தான் தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ராஜ் என்று கூறினார். அந்த மாமனிதர் கூறியது இப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கிறது.

ஜூலை 1991. ஸ்ரீராம் க்ரூப் கம்பெனி ஒன்றுக்கு நான் பிரெஞ்சு துபாஷியாக சென்றிருந்தேன். அதில் கம்பெனி தரப்பிலிருந்து அவர்கள் தயாரிக்க போகும் ஒரு பொருளுக்கான மார்க்கெட் மதிப்பீட்டை வந்திருந்த பிரெஞ்சுக்காரருக்காக மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அரசு வெளிதேச வியாபாரிகளின் போட்டியிலிருந்து தங்கள் பொருளுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு ஒன்று சுட்டப்பட்டிருந்தது. பன்னாட்டு போட்டி வந்தால் சங்குதான் என்ற இழையும் கூறாமலே விளங்கியது.

இதனால் என்ன ஆயிற்று? நுகர்வோர்கள் தரம் குறைந்த பொருளையே வாங்க வேண்டியிருந்தது. மாருதி கார் வருவதற்கு முன்னால் இந்தியச் சாலைகளில் ஃபியட், அம்பாஸடர், ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் தவிர வேறு கார்களை காண முடிந்ததா? அதிலும் ஸ்டாண்டர்ட் மோட்டார் திவாலாக, இரு வகை கார்கள் மட்டுமே சாலைகளில் ஆட்சி செலுத்தின. இப்போது? கூறவும் வேண்டுமோ?

உற்பத்தி பெருக்கத்தால் என்ன நடந்தது? வேலை வாய்ப்பு பெருகியது. பல வல்லான்கள் உருவாயினர். இப்போது கூட எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது.

பதிவை முடிக்கும் முன்னர் ஒரு விஷயத்தை எழுதி விடுகிறேன். வல்லான்தான் முன்னேற முடியும் என்றால் உங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சட்டையில் ரூபாயுடன் வர முடியாது, வல்லான் ஒருவனால் பறிக்கப்படும் என்று பொருள் வருமாறு ஒரு நண்பர் பலமுறை எழுதியுள்ளார். அவருக்கு நான் கூறும் பதில் இதுதான். அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ஓரிரு முறை வெற்றி பெற்றாலும் மாட்டிக் கொள்வதும் உறுதியே. இது நிரந்தர போராட்டம். அதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அப்பாடலை எழுதிய கண்ணதாசனே வல்லான்தானே. அவர் காலத்தில் அவரை மிஞ்சி இன்னொரு கவிஞன் வர இயலவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியுமா? வாய்ப்பை சமமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று செயல்பட முடியுமா? அபத்தமாக இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/16/2005

பம்பாய் நினைவுகள் - 3

மூன்றரை வருடங்கள்தான் பம்பாயில் இருந்தேன். ஆனால் என் வாழ்வின் போக்கை அவை முற்றிலும் மாற்றி விட்டன. அந்த மாற்றங்களில் முக்கியமானது என் எண்ணப்போக்கில் நிகழ்ந்த மாறுதல். 25 வயது வரை சென்னையிலேயே இருந்து பழக்கப்பட்டவன் நான். ஐந்து வருடங்கள் பொறியியல் கல்லூரியில் படித்தபோதும் டே ஸ்காலராகத்தான் இருந்தேன். பெற்றோர் பராமரிப்பில் இருந்து பழகி விட்டிருந்தேன். முதலில் பம்பாய்க்கு சென்றபோது கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஆனால் சில நாட்களிலேயே பம்பாய் பழகிவிட்டது. எனக்கு ஹிந்தி ஏற்கனவே நன்றாக தெரியுமாதலால் ஒரு பிரச்சினையும் இல்லை. அது தவிர தங்கியது மாதுங்காவில். இன்னொரு மாம்பலம் என்றே கூறலாம்.

இருந்தாலும் முதலில் வேண்டாவெறுப்பாகத்தான் சென்னையை விட்டு பம்பாய் சென்றேன். என்னுடைய முதல் போஸ்டிங் அந்த நகரில்தான். முக்கியமாக ஜெர்மன் புத்தகங்கள் படிக்கக் கிடைக்குமா என்ற சஞ்சலம். பம்பாய் மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்குச் சென்று நூலகத்தில் உறுப்பினராகச் சேர விண்ணப்பத் தாள் கேட்டேன். இங்கு நூலகம் ஒன்றும் கிடையாது என்றுத் திட்டவட்டமாகக் கூறப் பட்டது. ஆனால் ஒரு அறையில் பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். என்ன செய்வது என்று ஒரு நிமிடம் திகைத்தேன். பிறகு பம்பாயில் உள்ள மேற்கு ஜெர்மனியின் துணைத் தூதருக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதினேன். மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நடந்ததைக் கூறி கான்ஸுலேட்டில் ஏதாவது நூலகம் உள்ளதா என்றுக் கேட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் பதில் வந்தது. அக்கடிதத்தில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நூலகம் இல்லை என்பதைக் கேட்டதில் அதிர்ச்சி அடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு உடனே மேக்ஸ் ம்யுல்லர் பவன் செல்லுமாறு எனக்கு ஆலோசனை கூறப்பட்டது. அங்கு சென்றால் இம்முறை வரவேற்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. என்னிடம் 10 ரூபாய் பெற்றுக் கொண்டு நூலக அட்டை வழஙப்பட்டது. அட்டை எண் 2. எண் 1 டைரக்டருடையது.

பிறகுதான் தெரிந்துக் கொண்டேன், டைரக்டர் கான்ஸுலேட்டுக்கு அழைக்கப்பட்டுக் கண்டனம் செய்யப்பட்டார் என்று. விஷயம் என்னவென்றால் ஜெர்மன் அரசிடமிருந்து நிதியுதவியைப் பெற்று நூலகத்துக்காக வாங்கும் புத்தகங்கள் டைரக்டர், அவர் குடும்பத்தினர் மற்றும் இதர அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கப்பட்டன என்று. நான் எப்போது சென்றாலும் எனக்குத் தாராளமாகப் புத்தகம் படிக்கக் கொடுக்கப்பட்டது.

கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும். நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருக்கிறோம். அது தவறு. தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழுதும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் திட்டாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்காவிட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

இன்னொரு அதிசயம் என்னையே பிரமிக்கவைத்த என் ஞாபகசக்தி.

வருடம் 1972. பம்பாயில் விநாயக சதுர்த்தி தினம். பல பொது இடங்களில் இலவச சினிமா காட்சிகள் காண்பிக்கப்படும். மாதுங்காவில் ஒரு இடத்தில் "சபாஷ் மீனா" படம் போட்டார்கள்.
இப்படத்தை நான் முதலில் 1958-ல் சென்னையில் ஒரு முறை பார்த்ததோடு சரி. கடந்த 14 வருடங்களில் அப்படத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ஆனால் என்ன ஆச்சரியம்! காட்சிகள் ஒவ்வொன்றாகத் திரைக்கு ஒவ்வொரு காட்சியும் வருவதற்கு சில நொடிகள் முன்னால் அதற்குரிய வசனங்கள் தாமாகவே என் நினைவுக்கு வந்தன. சிவாஜியும் மற்றவர்களும் வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவர்களின் வசனங்களை நான் கூற ஆரம்பித்தேன். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.

பம்பாயில் நான் இருக்க, என் தந்தை தனியாக சென்னையில். என் தாயார் 1960-லியே இறந்துவிட்டார். அதைக் காரணம் காட்டி சென்னைக்கு விருப்ப மாற்றல் வேண்டி விண்ணப்பித்தேன். கடவுள் அருளால் 1974-ல் கிடைத்தது. அதற்கு சிலநாட்கள் முன்னால்தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வேலையில் சேர்ந்து ஒரே வாரத்தில் மாற்றல் உத்தரவு வந்தது ஒரு கல்யாணப் பரிசாகவே எனக்குப்பட்டது. விரும்பி பெற்ற மாறுதல் ஆதலால் மாற்றல் பயணப்படிகள் கிடையாது, ஆனால் எங்கள் S.E. கண்ணன் அவர்கள் அவர்கள் ஜாயினிங்க் டைம் கொடுத்தார். அதற்காக நன்றிசொன்னபோது அவர் "முடிந்திருந்தால் மாற்றல் பயணப்படிகள் கூட அளித்திருப்பேன், ஆனால் மாற்றல்கள் அப்போது தடையிலிருந்ததால் அதை செய்ய இயலவில்லை" என்று கூறினார். இதே கண்ணன் அவர்கள் நான் 1981-ல் ஐ.டி.பி.எல்லில் சேருவதற்காக மத்திய பொதுப்பணி துறையிலிருந்து விலகியபோதும் அரிய உதவி செய்தார். அது பற்றி பிறகு.

Back to Bombay. மாதுங்காவில் இருந்த துரை லெண்டிங் லைப்ரரி எனக்கு நிரம்பப் பிடிக்கும். அதன் உரிமையாளர் துரைக்கு என்னிடம் ஒரு அபிமானம். ஒரு முறை எதிர் நடைபாதையில் சென்று கொண்டிருந்த என்னை ஆள் விட்டனுப்பிக் கூப்பிட்டார். என்னடாவென்று பார்த்தால் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell-லின் புத்தகம் அவரிடம் புதிதாக வந்திருந்தது! நானும் அங்கு பலவகைப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

சீரியஸ் புத்தகங்கள், வேடிக்கை புத்தகங்கள், காமிக்ஸ் (ஆர்ச்சி காமிக்ஸ், டாட், லோட்டா, காஸ்பர், வெண்டி த குட் விட்ச், ரிச்சி ரிச் முதலியன, அவற்றைக் கட்டுக் கட்டாக எடுத்துப் போய் படிப்பேன்.). திடீரென்று ஒரு நாள் துரையிடம் போய் "ரொம்ப போர் அடிக்கிறது துரை, சரோஜாதேவி புத்தகம் ஏதாவது இருக்கிறதா" என்று கேட்டால் கூட அசர மாட்டார். தமிழிலும், ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலத்திலும் அம்மாதிரி புத்தகங்கள் ஏராளம். என்ன, "உங்களை புரிஞ்சுக்கவே முடியல சார்" என்று கூறிக் கொண்டே கேட்டப் புத்தகங்களை எடுத்துக் கொடுப்பார், அவ்வளவுதான்.

என்னுடைய பதிவுகளில் வாழ்க்கையில் எனக்கு நடந்த ஹைப்பலிங்குகளை பற்றி எழுதியுள்ளேன். அவற்றில் ஒன்று பம்பாயில் நடந்தது. அதை இங்கு சுருக்கமாக மறுபதிவு செய்கிறேன்.

1972-ல் ஒரு நாள் எங்கள் அலுவலக கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.

உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் T.P. கிருஷ்ணமாச்சாரியா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதுதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."

போன வருடம் பம்பாய்க்கு ஒரு செமினார் சம்பந்தமாக சென்றேன். இரண்டே நாட்கள்தான் தங்கினேன். வாய்ப்பு கிடைத்ததும் மாதுங்கா சென்றேன். நான் தங்கியிருந்த கட்டிடம் இடிக்கப்படும் நிலையில் இருந்தது. இன்னேரத்துக்கு அது புதிய கட்டிடமாக உருவாகியிருக்கும். இருப்பினும் என் நினைவுகள் பழைய கட்டிடத்தில்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: இப்பதிவின் சில பகுதிகள் வெவ்வேறு நேரங்களில் என்னால் எழுதப்பட்டவை. இருந்தாலும் அவற்றிற்கு சுட்டி கொடுப்பதற்கு பதில் இப்பதிவில் சிறிய மாறுதல்களுடன் புகுத்தியுள்ளேன். இதில் எனக்கு சந்தோஷமே. ஏனெனில் பம்பாய் நினைவுகள் மறுபடி என்னுள் கிளர்ந்து எழுந்தன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/15/2005

ஆண், பெண் கற்புநிலை - 3

இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன். பதிவு-2-ல் ஒருவர் பின்னூட்டமிட்டது போல் வேறு பெண்கள் யாரும் இப்பதிவுக்கு பின்னூட்டமிடவில்லைதான். ஏன் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

ஜனத்தொகையில் பாதிக்கு பெண்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் சரிசமமாக இல்லை என்பதால் பாதிக்கப்படுபவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். ஆண்களுக்கு தற்போதைய நிலை சௌகரியமாக இருக்கிறது என்பதால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. எல்லா பெண்களும் அவ்வாறு செய்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும்? நல்ல நிலைமையில் இருக்கும் பெண் ஒருவர் ஏன் தேவையில்லாது ரிஸ்க் எடுக்கப் போகிறார்? மாட்டிக் கொண்டால் அவர்களுக்குத்தானே கஷ்டம்?

பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்.

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.

நான் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் SITA சட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அது இப்போது என் வலைப்பூவில் காணவில்லை. ஆனாலும் நல்ல வேளையாக என் வந்தகட்டில் சேமித்து வைத்திருந்ததால் அதை இங்கு மறுபடியும் இடுகிறேன். பதிவின் தலைப்பு:
"யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India"

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
# posted by Dondu @ 8:55 PM, 1/9/2005"

இவ்வளவு சீரியசான பதிவுக்கு வந்த கருத்துக்களை பாருங்கள்.


2 comments
Comments:
இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?
# posted by Radhakrishnan : 4:19 AM

அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 11:16 AM
இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?
# posted by Raviaa : 8:46 PM

ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.

அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 12:43 PM"

இப்போதைக்கு நான் கூற நினைப்பது இவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/14/2005

ஆண், பெண் கற்பு நிலை - 2

உடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன்னை பெருக்கிக் கொள்வதற்கான உந்துதல். ஆகவே அது தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்கள். திருமணத்தை துறந்து சன்னியாசிகளாக போகிறவர்களில் பலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபடுவது இதனால்தான். இது எல்லா மதத்தினாருக்கும் பொருந்தும்.

இதிலும் ஆண்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை. இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் பெண்கள் பாடுதான் திண்டாட்டம். கருவுறுவது அவர்களே. ஆண் ஓடிவிடுவான். மாட்டிக் கொண்டு அவமானப்படுவது இவர்களே. சில சமயம் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வரை அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

இந்த அழகில் ஊடகங்கள் வேறு பாடாய் படுத்துகின்றன. சில உதாரணங்கள் இங்கு கூறலாம். எழுபதுகளில் "இளமை ஊஞ்சலாடுகிறது" என்ற தலைப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. அதில் ஜயசித்திரா ஒரு விதவையாக வருவார். அவர் கூறிய வசனம் ஒன்றில் இவ்வாறு வரும். "பலர் என்னை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் எல்லோரும் என் உடலையே விரும்பினார்கள். ஆகவே நான் மறுத்து விட்டேன்." என்ன அபத்தமான கற்பனை இந்த வசனத்தை எழுதியவருக்கு. விதவை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆனால் உடல் உறவுக்காக அல்ல என்று கூற ஆசைப்படுகிறாரா? அதே போல "மன்மத லீலை" என்னும் படத்தில் ஜயப்பிரதா கமலிடம் கூறுகிறார்: "நான் உடல் ஊனமுற்ற போர்வீரனை கல்யாணம் செய்து கொண்டேன். அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. ஆக, நான் செக்ஸுக்காக கல்யாணம் செய்து கொள்ளவில்லை." இதில் என்ன பெருமையோ. செக்ஸையே தப்பு என்றெல்லாம் எழுதுவார்கள். அதெல்லாம் பெண்களுக்குத்தான் ஆண் கதாபாத்திரங்களுக்கு ஒன்றுக்கு மேல் துணை வைப்பார்கள்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/13/2005

வரதட்சிணை பற்றிய வெளிப்படையான எண்ணங்கள்

"எழுபதுகளில் காத்தாடி ராமமூர்த்தி தயாரித்து நடித்த "டௌரி கல்யாணமே வைபோகமே" என்ற நாடகம் அரங்கேறியது. அதில் அவர் தன் தங்கையின் கல்யாணத்தை நடத்தி முடிக்க நாய் படாத பாடு படுவார். கடைசி காட்சியில் அவர் தம்பிக்கு பெண்பார்க்கும் முறை வரும்போது அவரும் அவர் மனைவியும் தெம்பாக வரதட்சிணை கேட்க ஆரம்பிப்பார்கள்.

பழைய விகடன் ஜோக் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. போன வருடம் ராமசாமி வரதட்சிணையை எதிர்த்துப் பேசினான் ஆனால் இந்த வருடம் ஆதரித்துப் பேசினான். இதைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒருவர் இன்னொருவரிடம் இது ஏன் என்று கேட்க, அவர் பதில் கொடுக்கிறார்: "போன வருடம் ராமசாமி தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடினான், இந்த வருடம் அவன் மகனுக்காக பெண் தேடுகிறான், அவ்வளவுதான்."

அதாவது நிலைமைக்கு ஏற்றவாறு வரதட்சிணைக்கு ஆதரவோ எதிர்ப்போ ஏற்படுகிறது. இதை கருப்பு வெள்ளை என பேதம் கொண்டு பார்க்க இயலாது. இது ஒரு இடியாப்பச் சிக்கல். எப்படி என்று பார்ப்போம்.

என்னுடைய கற்பு பற்றிய பதிவில் பெண்ணிடம் எதிர்ப்பார்க்கப்படும் கற்பின் அளவு ஆணிடம் எதிர்ப்பார்ப்பதில்லை என்று பார்த்தோம். திருமணம் இல்லாமலே ஆண் தன் காம இச்சையை தணித்துக் கொள்ளலாம். அது வெளியே தெரிய வந்தாலும் ஆம்பிள்ளைனா இப்படி அப்படித்தான் இருப்பான் என்று கூறி விடுவார்கள். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் பெண் என்ன செய்வாள்? அவள் உடல் உறவை திருமணம் என்ற போர்வையின் கீழ்தான் பெற முடியும். ஆகவே பெண்ணுக்கு திருமணம் அதிக அவசியம் ஆகிறது. கேட்க கசப்பாயிருந்தாலும் இதுதான் உண்மை நிலை. வரதட்சணைக்கு இதுவே முக்கியக் காரணம். இதில் சரி தவறு என்பதையெல்லா பார்க்க இயலாது.

சரியோ தவறோ நாம் யதார்த்தத்தை எதிர்த்து போராடுவது கடினம். என் நண்பர் வரதட்சணையே வேண்டாம் என்று கூறினார். அவர் நல்ல வேலையில் இருந்தார். உடனேயே பெண்வீட்டாருக்கு சந்தேகம் வந்தது. பையனிடம் ஏதோ கோளாறு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்காகவே வரதட்சணை கேட்கிறார்கள் சிலர். இதன் தீர்வு என்ன?

யோசிக்க வேண்டியதுதான். சேர்ந்து யோசிப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2005

மழை மிகுந்த பகலில் மனம் மகிழ்வில்

கவுசல்யாவை தெரியும்தானே. நுழைவுத் தேர்வில் 98.5% மார்க் எடுத்து ஸ்டான்லி மெடிகலில் சேர்ந்துள்ளார். பொருளாதார வசதி குறைவால் கஷ்டப்படுபவர். அந்தியூரைச் சேர்ந்த தைரியப்பெண். அவரைப் பற்றி டெக்கான் க்ரானிகலில் படித்த நம் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் அவருக்காக தமிழ்மனத்தில் உதவி கேட்டு தன் வலைப்பூவில் பதிவு போட்டார். நல்ல மனம் படைத்தவர்கள் நிதியளித்தனர். அவ்வாறு சேர்ந்த நிதியை இன்று அவரிடம் பாலா அவர்கள் டெக்கான் க்ரானிகல் அலுவலகத்தில் வைத்து செக்காக சேர்ப்பித்தார்.

நேற்று என்னுடன் பாலா அவர்கள் தொலைபேசினார். குறிப்பிட்ட அந்த நேரத்தில் நானும் அந்த இடத்துக்கு வரமுடியுமா எனக் கேட்டார். நானும் சம்மதித்தேன். இன்று நாங்கள் இருவரும் அங்கு சென்றோம். ஒரே மழை. 100 அடி சாலையிலிருந்து பத்திரிகை அலுவலகம் செல்லும் சாலை தண்ணீரில் மிதந்தது.

டெக்கான் க்ரானிகல் அலுவலகத்தில் திரு பகவான் சிங் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். ரொம்ப சுவாரசியமான விஷயங்களைக் கூறினார். அலுவலகத்தில் வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது. இத்தனை பேர் பாடுபட்டால் ஒரு பத்திரிகை வெளி வருகிறது.

மழை காரணமாக கௌசல்யா வருவதற்கு சற்றே தாமதமாயிற்று. நல்ல படிப்புக்களை உடைய அப்பெண்ணை பார்க்க மனம் நிறைந்தது. அப்பெண்ணுக்கு எல்லாம் வல்ல என் அப்பன் மகரநெடுங்குழைகாதனிடம் பிரார்த்தனை செய்தேன். தமிழ் மீடியத்தில் படித்த பெண். சற்றே தடுமாறுகிறார் ஆங்கிலப் பாடங்களால். ஆனாலும் சமாளித்து வருகிறார். அவருடைய ஆங்கில அடிப்படையை பலப்படுத்த பகவான் சிங் அவர்கள் மின்ட் பகுதியில் ஒரு டியூட்டர் தேடி வருகிறார். அம்முயற்சியும் வெற்றிபெற வேண்டும்.

இப்போதுதான் திரும்பினேன். இதை தட்டச்சு செய்யும்போது வெளியில் பலத்த மழை. இம்முறையாவது மழை பொய்க்காமல் நன்கு பெய்ய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பம்பாய் நினைவுகள் - 2

சென்னையில் படிப்பு முடிந்து ஒரு வருடம் வேலையில்லாமல் இருந்தேன். ஜெர்மன் படித்து வந்ததால் மனம் ரொம்ப அலைபாயவில்லை. அப்போதெல்லாம் இஞ்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு. எங்கள் நம்பிக்கை தமிழ்நாடு மின்வாரியம்தான். இளநிலை பொறியாளர் பதவிதான் எங்கள் குறி.

மேக்ஸ்ம்யுல்லர் பவன் அப்போது அண்ணா சாலையில் இருந்தது. பக்கத்திலேயே பிரிட்டிஷ் கௌன்ஸில், அமெரிக்க நூலகம் மற்றும் தேவநேயப் பாவாணர் நூலகம். பிரெஞ்சு நூலகமும் அதே பகுதியில்தான் ஆனால் அப்போது என் பிரெஞ்சு தொடர்பு இன்னும் உருவாகவில்லை. இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், மின்வாரிய அலுவலகம் கூட இந்த இடத்திற்கு அருகிலேயே இருந்தது. ஆகவே என் ஆசையெல்லாம் இங்கு வேலையில் சேர்ந்து எல்லா நூலகங்களுக்கும் தாராளமாக விசிட் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் மின்வாரியத்தில் வேலை கிடைக்கவில்லை. பம்பாயில்தான் வேலை கிடைத்தது.

ஆனால் என்ன வேடிக்கை பாருங்கள். என் அலுவலகம் இருந்தது நியூ மரைன்லைன்ஸில். அமெரிக்கன் லைப்ரரி எதிர் பில்டிங்கில். பிரிட்டிஷ் கௌன்ஸில் ஐந்து நிமிட நடை தூரத்தில். மேக்ஸ் ம்யுல்லர் பவனும் எதிர் பில்டிங்கில். ஆசை தீர எல்லா நூலகங்களுக்கும் செல்வேன். அதாவது, பகவான் என் ஆசையை நிறைவேற்றினார், ஆனால் வேறு ஒரு நகரத்தில். அது சரி தானம் கொடுத்த மாட்டின் பாலையா பிடித்து பார்ப்பது. கிடைப்பதை வைத்து சந்தோஷப்பட வேண்டியதுதான் டோண்டு.

நான் ரொம்ப நியாய மனப்பான்மை கொண்டவன். பத்து மணி ஆபீசுக்கு பத்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டு, கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு மாதுங்காவில் வண்டி பிடித்து 11.45 அளவில் ஆபீஸ் போய் சேருவேன். லேட்டாக போனதுக்கு ஈடு செய்வதற்காக மாலை சற்று சீக்கிரமே கிளம்பி விடுவேன். என்ன காதில் புகையெல்லாம் வருகிறதா? எங்கள் அலுவலகத்தில் 8 இளம்பொறியாளர்கள். எல்லோரும் ஒரே கேபினில்தான். எல்லாம் இளவட்டங்கள். கொட்டம்தான். வேலையெல்லாம் ரொம்ப இல்லை. அதனால்தான் நாங்கள் இஷ்டப்பட்டபடி போய் வர முடிந்தது.

பம்பாயில் மழைக்காலம் என்றாலே தொல்லைதான். அப்படிப் பேய்மழை பெய்யும். இதிலும் கஷ்டம் என்னவென்றால் ஹைடைட் இருக்கும்போது மழைபெய்தால் கடல்நீரும் சாக்கடைகள் வழியாக ஊருக்குள் வந்துவிடும். எல்லா தெருக்களும் தண்ணீரில் மிதக்கும். அப்படிப்பட்ட தினத்திற்கென்று நான் ஒரு ரொட்டீன் வைத்திருந்தேன். அதாவது, விடிகாலை 7 மணிக்கு கழுத்தை நீட்டி ஜன்னல் வழியாக பார்ப்பது. மழை நன்றாகப் பெய்துகொண்டிருந்தால் மறுபடி படுக்கையில் முடங்க வேண்டியது. சிறிது நேர கோழித்தூக்கத்திற்குப் பிறகு 9 மணியளவில் எழுந்து காலைக் கடன்களை முடிப்பது. அதற்குள் மற்ற அசடுகள் எல்லாம் அரக்க பரக்க குளித்து ஆபீஸுக்கு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கும். பாத்ரூம் காலியாக இருக்கும். ஆனந்தமாக கீஸர் போட்டுக் குளித்து விடுவேன். அதற்குள் வேலைக்காரன் டோண்டு (உண்மையாகவே அதுதான் அவன் பெயர், நம்புங்கள்) ஜிம்கானாவிலிருந்து பிளாஸ்கில் காப்பி வாங்கி வைத்திருப்பான். அதை குடித்து விட்டு சிறிது நேரம் பால்கனியிலிருந்து மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். 11.30 மணியளவில் கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டு விட்டு, பக்கத்து அரோரா தியேட்டரில் மார்ணிங் ஷோ. பிறகு ரூமுக்கு வந்து ஆனந்த தூக்கம்தான்.

காலையில் போன அசடுகள் மணிக்கணக்காக பயணம் செய்து அலுவலகம் செல்லும்போது பிற்பகலாயிருக்கும். அரை மணியிலேயே கிளம்பி அதே மாதிரி மணிக்கணக்கில் பயணம் செய்து ஜலதோஷத்துடன் திரும்புவார்கள், மாலை 7 மணி வாக்கில். நான் பிரெஷ்ஷாக ரூமிலேயே இருந்ததைப் பார்த்து வயிறெரிவார்கள்.

மூன்றரை வருடம் போனதே தெரியவில்லை. மற்ற பம்பாய் நினைவுகளை பின்வரும் பதிவுகளில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/11/2005

ஆண், பெண் கற்பு நிலை - 1

கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் வைப்போம் எனப் பாடினான் முண்டாசுக் கவிஞன். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மை நிலை? இதைப் பற்றி இங்கு பார்ப்போமா.

ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடுகின்றனர். குழந்தை உண்டானால் பெண்தான் சுமக்க வேண்டும். ஆண் ஓடிவிடுவான், அவளுக்குத்தான் கஷ்டம். இதுதான் உண்மை நிலை. இதற்காகவே பெண்ணை ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார்கள். சமூகத்தில் கன்னித் தாய்கள் பெறும் அவமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்தது. ஆகவே கர்ணர்கள் கூடையில் வைத்து நதியில் விடப்பட்டனர். அக்குழந்தைகள் பெற்ற அவமானமோ அதற்கும் மேல். கர்ணனின் கதையே இதற்கும் சாட்சி. இந்த பயமும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதற்கு ஒரு முக்கியக் காரணமே.

ஆண் பெண் உடற்கூறுகளே இந்த நிலைக்கு மூல காரணம். விந்துவை அளிப்பதுடன் ஆணின் வேலை முடிந்து விடுகிறது. பெண்ணுக்கோ அப்போதுதான் எல்லாமெ ஆரம்பம் ஆகிறது. மனித நாகரிகம் வருவதற்கு முன்னால் தந்தை என்ற கான்சப்டே இருந்திராது. அதேபோல அப்போதெல்லாம் கன்னித்தாய் என்று பழிப்பவர்களும் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் கல்யாணம் என்பதே நாகரிகத்தின் அறிகுறிதான். கருவானதும் குழந்தை பெற்று பேணுவது பெண்ணின் வேலையாகவே இருந்தது. அது காரியத்துக்கு ஆகாது என்பதாலேயே குடும்பம், தந்தை என்றெல்லாம் உருவாயின. பகுத்தறிவை பெற்ற மனித இனத்துக்கு மான அவமான எண்ணங்கள் உண்டாயின. தன் மனைவி, தன் பிள்ளை என்ற எண்ணங்களும் உண்டாயின. ஆணை கட்டுப்படுத்துவதற்காக பெண் பல விலைகளை தர வேண்டியதாயிற்று. அவன் தந்தை என்ற கடமையை நிறைவேற்றவேண்டுமென்றால் அவன் மனைவி அவனுக்கு மட்டும் என்ற என்ணம் வேரூன்ற வேண்டும். ஆகவே பெண்ணுக்கு பல கட்டுப்பாடுகள் வந்தன. உண்மையாய் இருந்தால் மட்டும் போதாது, உண்மையாக இருப்பது போன்ற தோற்றமும் தேவைப்பட்டது.

ஆகவேதான் ஆண் எப்படியிருந்தாலும் பெண் மட்டும் கற்புடையவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. இதை பெண்கள் கூட அதிகம் வலியுறுத்தினர். அதே நேரத்தில் மனித இனம் தழைக்க வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கம் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இப்போது நம்மிடம் இருக்கும் அதிக ஜனத்தொகை என்பது மனிதவரலாற்றில் புதியது. இருப்பினும் இப்போது கூட பல ஐரோப்பிய தேசங்களில் ஜனத்தொகை குறைந்து அரசுகள் கூப்பாடு போடுவதையும் நாம் பார்க்கிறோமே. திடீரென்று பெரிய விபத்து ஏற்பட்டு மனிதர்கள் பல்லாயிரக்கணக்கில் அழிந்தால் அப்போது நம் மனநிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆகவே இப்போதைய உண்மைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பார்க்கலாம்.

"ஜாலியான பிரும்மச்சாரியாக இருப்பது எப்படி" என்றெல்லாம் புத்தகங்கள் ஆணுக்காக வந்தால் "கணவன் பெறுவதற்கான வழிகள்" என்று பெண்ணுக்கான புத்தகங்கள் வருகின்றன. பல பெண்களுடன் ஆண் உறவு வைத்தால் அவனுக்கு மச்சம் என்றெல்லாம் பேசுகின்றனர். அதே சமயம் பெண்ணுக்கு ஒன்றுக்கு மேல் ஆண் நண்பர்கள் இருந்தால் அவளுக்கு பெயர் அளிப்பதில் மற்ற பெண்களே முன்னால் நிற்கின்றனர்.

ஆனால் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுதான். தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை. அதற்குள் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏறிவிடுகிறது. ஏறினால் ஏறிவிட்டுப் போகட்டும். உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது? அடுத்த பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/10/2005

பம்பாய் நினைவுகள் - 1

என்னைப் பொருத்தவரை அது பம்பாய்தான். மும்பை அல்ல. வருடம் 1971, ஜனவரி. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தயவால் மத்தியப் பொதுப்பணி துறையில் இளநிலை மின்பொறியாளராக நியமனம் செய்யப்பட்டேன். முதல் வேலை பம்பாயில். சம்பளம் ரூபாய் 540. அக்காலத்தில் அது பெரிய தொகை. மாதுங்கா கிங்க்ஸ் சர்க்கிளில் ஒரு அறையில் ஒரு கட்டில் வாடகைக்கு. மாதம் ரூபாய் 70. கன்ஸர்ன்ஸில் சாப்பாடு மாதம் ரூபாய் 72. அப்பாவுக்கு மாதம் அனுப்பியது ரூபாய் 100, மற்றச் செலவுகள் கிட்டத்தட்ட ரூபாய் 100, சேமித்தது ரூபாய் 200.

காப்பி 30 பைசா, ஒரு பிளேட் இட்டலி 40 பைசா என்ற ரேஞ்சில்தான் விலைகள். எங்கள் கேன்டீனில் மதிய உணவு 95 பைசா. பட்டினி எல்லாம் கிடக்கவில்லை. நன்றாக வாழ்க்கையை அனுபவித்தேன். பார்த்த சினிமாக்களுக்கு குறைவில்லை. ஞாயிறு காலைகளில் அரோரா சினிமாவில் தமிழ்ப்படம் போடுவார்கள். பிரிட்டிஷ் கௌன்சில், மேக்ஸ்ம்யுல்லர் பவன் மற்றும் அமெரிக்க நூலகங்களில் உறுப்பினர். ஆகவே படிக்கக் கிடைத்த புத்தகங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா தமிழ்ப்பத்திரிகைகளும் தாராளமாகக் கிடைக்கும். நான் இருந்த அபார்ட்மென்டில் என்னையும் சேர்த்து 10 பேர். அதில் என் வயதுக்காரர்கள் மூவர், வீரராகவன், ஜயகுமார் மற்றும் சுந்தரம். நாங்கள் நால்வர் சேர்ந்து அடித்த கொட்டங்களுக்கு அளவேயில்லை.

பம்பாய் ஓர் அற்புத நகரம். இங்கு அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள். நன்றாக முன்னுக்கு வரலாம் அல்லது கெட்டுச் சீரழியலாம். என் நல்ல வேளை எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

மத்தியப் பொதுப்பணி துறையில் நான் ப்ளானிங்கில் இருந்தேன். வேலைக்கான மதிப்பீடுகள் தயாரிப்பது, எங்கள் சர்க்கிள் அலுவலகத்தின் கீழ் இயங்கும் டிவிஷன் மற்றும் சப்-டிவிஷன் அலுவலகங்களிலிருந்து வரும் மதிப்பீடுகளை பரிசீலிப்பது போன்ற வேலைகள்தான். டென்ஷன் இல்லாத காலை 10-லிருந்து மாலை 5 மணி வரையான வேலை.

பின்னணித் தகவல்கள் போதுமான அளவு கொடுத்தாகி விட்டது. பம்பாயில் இருந்தபோது பல பாடங்கள் கற்றேன். அவற்றில் மற்றவர்களுக்கு உபயோகமானவை என்று நான் கருதும் சிலவற்றை தேர்ந்தெடுத்து தருவேன். மற்றவை அடுத்த பதிவுகளில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இரண்டாம் முறையாக நட்சத்திரம்

போன வருடம் நான் வலைப்பதிவாளராக வந்து ஒருமாதம் கூட ஆகாத நிலையில் என்னை அவ்வார நட்சத்திரமாக ஆக்கும் உத்தேசத்தை எனக்கு பத்ரி அவர்கள் தொலைபேசி மூலம் அறிவித்தார். அப்போது பம்பாயிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு அவர் சாதாரணமாக நான் பதிவுகள் போடுவதையே செய்தால் போதும் என்று கூறினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேலைப்பளுவால் சரியானபடி பதிவுகள் போட இயலவில்லை. அந்த ஒரு வாரம் வெகுவேகமாகச் சென்று விட்டது. நான் நட்சத்திரமாக இருந்தேன் என்பதை உணர்வதற்குமுன் பறந்து விட்டது. வேறு ஒருவரும் அதை உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

போன மாதம் மதி அவர்களிடமிருந்து அக்டோபரில் ஒரு வாரம் நட்சத்திரமாக இருக்க முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் வந்தபோது அவரிடம் நான் போன தடவை மாதிரி சொதப்பாமல் இருக்க முயற்சிப்பேன் என்று கூறினேன். பார்ப்போம் என்னால் அது முடிகிறதா என்று. தயக்கமாகத்தான் இருக்கிறது, ஏனெனில் எனக்கு முன்னால் நட்சத்திரமாக வந்த தருமி அவர்களின் superb performance-க்குப் பிறகு வருவது பிரகாசிப்பது மிகக் கடினமே. இருந்தாலும் பாரத்தை உள்ளம் கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் மேல் போடுவேன்.

1971 ஜனவரியிலிருந்து 1974 ஜூலை வரை பம்பாய் வாசம். பல சுவாரசியமான அனுபவங்கள், அவற்றைப் பற்றி எழுத ஆசை. ஆணுக்கும் பெண்ணுக்கும் விதிக்கப்பட்ட கற்பு நெறிகளையும் பேசுவேன். வரதட்சணை பிரச்சினையை நான் காணும் கோணத்திலிருந்து அலசுவேன். உலகமயமாக்கலால் எனக்கு என்ன பயன் என்பதை பற்றியும் பேசுவேன். இன்னும் பலவற்றையும் பற்றிப் பேசி பிறாண்டுவேன்.

ஜூட்டா? நான் ரெடி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/07/2005

இக்கேள்விகளை முயற்சி செய்யலாமா?

என்னுடைய முந்தைய கேள்விகளில் இரண்டுக்கு பதில் வரவில்லை ஆதலால் அவற்றை இங்கு முதல் இரண்டு கேள்விகளாக கேரி ஓவர் செய்கிறேன்.

1. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

2. டொனால்ட் டக் கார்ட்டூனில் வால்ட் டிஸ்னி செய்த பொருள் குற்றம் என்ன? (குற்றத்துக்கு குறைத்துக்கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் என்று அவர் கேட்கக்கூட இல்லை).

3. நான் கிழே குறிப்பிடுவது என்ன? ஒரு க்ளூ தருகிறேன். இதற்கு ஆங்கில அறிவு தேவை.
வில்லியம் சித்திரை
வில்லியம் வைகாசி
வில்லியம் ஆனி
வில்லியம் ஆடி

4. கீழே உள்ள மூன்று 10-களில் ஒரே ஒரு நேர்க் கோட்டைப் போட்டு அவற்றை 9.50 ஆக ஆக்க முடியுமா?
10 10 10

5. அப்பா பையனிடம் என்ன பிறந்த நாள் பரிசு வேண்டும் எனக் கேட்க, பையன் இவ்வாறு எழுதிக் காண்பிக்கிறான்: S U I T. அப்பா உடனே கோபத்துடன் அதெல்லாம் கட்டுப்பிடி ஆகாது என்று கூறிவிடுகிறார். பையன் கேட்டது என்ன?

6. கீழ்க்கண்ட வரிசையில் அடுத்து வரும் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் என்ன?: A E F H I K L M ? ?

7. இந்த சமன்பாடு சரி என்று கூறுவது கோயின்சாமி. 8 + 8 = 91. எப்படி சரியாகும்?

8. கோவலன், கண்ணகி மற்றும் கவுந்தி அடிகள் மதுரையை நோக்கிச் செல்லும் பாதையில் கீழ்க்கண்டவர்களை எதிர் கொள்கின்றனர். இரண்டு ஆண்கள், ஒவ்வொரு ஆணுக்கும் இரு மனைவியர், ஒவ்வொரு மனைவிக்கும் நான்கு குழந்தைகள். அவர்களுடன் சேர்த்து டோண்டு ராகவனையும் சந்திக்கின்றனர். இப்போது மதுரையை நோக்கிச் செல்வது எத்தனை பேர்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது