இது ஒரு மீள்பதிவு. ராமாயணத்து காட்சிகளை ஒன்றுபடுத்துவதற்காகவும், இந்த இடுகை வகைப் படுத்தப்படுவதற்காகவும் இங்கு அதை கொண்டுவர துணிந்தேன். மீள்பதிவு செய்யப்படும்போது மாறுதல்கள் செய்வதும் சகஜமே. இப்போது இடுகைக்கு செல்வோம்.
ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.
அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.
"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.
ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன். கிளாக்ஸோ பேபி போன்ற தோற்றத்தில் சிவன் அம்சமாக இருக்கிறார். அதே ராமானந்த் சாகர் எடுத்த கிருஷ்ணர் தொடரிலும் அதே நடிகர் அதே ரோலில் வந்தார்.
அந்த வீடியோ காட்சி இதோ:
பரமசிவன், பார்வதியைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் நாடோடி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் நான் படித்தது நினைவுக்கு வருகிறது. வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது. தன் மனைவியைத் தேடி ராமர் காட்டில் "சீதே, சீதே" என்று பிரலாபித்தவாறு அலைகிறார். செடி, கொடிகள், மான்கள், புலி, சிங்கங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு செல்கிறார். ஐயனின் துயரம் கண்டு பஞ்சபூதங்களும் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிவன் ராமரைப் பரம்பொருளாக வணங்க, பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம் திடீரென வந்தது. பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார். ராமரோ அவரைக் கண்டதும் வணங்கி "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பார்வதி அவர்களே, சிவன் அவர்களை விசாரித்ததாகக் கூறவும்" என்று கூறுகிறார்.
இன்னும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்நாடு: தேர்தல் 2026
-
தமிழ்நாடு தேர்தல் அரசியலில், மூன்றாம் தரப்பு ஒன்று 15% வாக்கு வங்கியை
எட்டுவது அல்லது எட்டுவதற்கான வாய்ப்புகள் ஏன் ஒரு "அரசியல் புயலாகக்"
கருதப்படுகிறது?...
5 days ago
