10/31/2010

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை - ஜெயமோகனின் பதிவு

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை என்ற கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதில்களும் அவற்றின் நீட்சியும் சுவாரசியமானவை.

ஜெயமோகன் ஒரு தமாஷான ஒப்பிடுதலுடன் ஆரம்பிக்கிறார்.

நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’

கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’

ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது.

வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’

இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’

ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’

இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டீர்கள்தானே? தமிழ்க்கவிதை தமிழில் மட்டும் அமைந்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவருக்கும் அது புரிந்துவிடும் அல்லவா? ஓர் அகராதியை வைத்துக்கொண்டு அதை எவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

அப்படியானால் தமிழ்க்கவிதை எதில் அமைந்திருக்கிறது? தமிழ் மொழிக்குள் நுண்மையாக அமைந்துள்ள இன்னொரு குறியீட்டு மொழியில் அமைந்துள்ளது. அதை மீமொழி [meta language] என்று நவீன மொழியியலில் சொல்கிறார்கள். அது மொழியின் இரண்டாவது அடுக்கு. இப்படி பல அடுக்குகளை உருவாக்கிக்கொண்டுதான் எந்தமொழியும் செயல்பட முடியும். நம்மை அறியாமலேயே இப்படி பல அடுக்குகள் நம் மொழியில் உள்ளன.

மொழியையே குறியீட்டுஒழுங்கு [symbolic order] என்று மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். ஒர் ஒலிக்குறிப்பு ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை சுட்டிக்காட்டுவதுதான் மொழியின் ஒழுங்கு இல்லையா? படி என்றதுமே உங்களுக்கு ஒரு பொருள் நினைவுக்கு வருகிறது. படி என்ற ஒலி அந்த பொருளுக்கான ஒலி அடையாளம். இறங்குதல் என்ற ஒலி ஒரு செயலுக்கான ஒலிக்குறியீடு.

இரண்டையும் இணைத்து படி இறங்குதல் என்று சொன்னால் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இதுதான் மொழியின் செயல்பாட்டுக்கான அடிப்படை. இவ்வாறு நாம் மொழிக்குறியீடுகளை இணைத்து இணைத்து மொழி என்ற அமைப்பை விரிவாக்கிக்கொண்டே செல்கிறோம். இதைத்தான் பேச்சு என்றும் எழுத்து என்றும் சொல்கிறோம். இதையே மொழியின் முதல் குறியீட்டு ஒழுங்கு என்கிறோம்.

மொழிக்குள் இன்னொரு குறியீட்டு ஒழுங்கு இருக்க முடியும். படி என்ற பொருளையே இன்னொன்றுக்கு குறியீடாக ஆக்க முடியும் அல்லவா? அப்போது படி என்னும்போது அது அந்தபொருளைச் சுட்டிக்காட்டி கூடவே அந்தப்பொருள் எதற்கு குறியீடோ அதையும் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?

ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.


ஒரே கவிதை பலருக்கு பல எண்ணங்களைத் தருகிறது.

உதாரணத்துக்கு பிரமிளின் இக்கவிதையை பாருங்கள்.

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது.


இக்கவிதையை நான் முதன்முதலாக சமீபத்தில் 1979-ல் கேட்டேன். அல்லயன்ஸ் ஃப்ரான்சேஸ் ஸ்ரீராம் அவர்கள் எனக்கு இதை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அக்கவிதையின் வரிகளுக்குள் போவதற்குள் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன்.

ஸ்ரீராம் அவர்கள் இக்கவிதையை 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து Henri Quiqueré என்னும் பிரெஞ்சுக்காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ழாக் ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:

"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"


பிரமிளின் இக்கவிதையை பதிவர் ரோசாவசந்த் தனது ஒரு பதிவில் குறிப்பிட்டதற்கு பின்னூட்டமாக நான் ஸ்ரீராம் செய்ததை எழுத, ரோசாவின் பதிலையும் ஒரு காரணத்துடனேயே இங்கே தருகிறேன்.

இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?)

அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரியமானது.

பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.


இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.


அதற்கு நான் ஒரு திடுக்கிடலுடன் எழுதியது:

மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05-2005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.

ஸ்ரீராம் (நீங்கள் சொன்ன அதே ஸ்ரீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு ஸ்ரீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கப்பட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.

"pages vides" என்பதற்கு பதில் "pages inépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை கூறியதற்கு சிறீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.


மீண்டும் ரோசா வசந்த்:

விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.

மேலே உள்ளதையெல்லாம் நான் எழுதிய முக்கியக் காரணமே, ஒரே விஷயம் - அது சிறியதோ அல்லது பெரியதோ - எவ்வாறு வெவ்வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டவே.

ஜெயமோகனது அப்பதிவிலிருந்து மேலும் சில வரிகள்:

ஏன் அந்தப்பெரியவருக்கு மரபான கவிதை புரிகிறது? அவர் உரைகள் மூலம் ஆசிரியர்கள் மூலம் மரபுக்கவிதையின் மீமொழியை கற்றிருக்கிறார். நவீனக் கவிதையின் மீமொழியை அவர் கற்கவில்லை. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எனக்கு பாட்டு தெரியுமே ஆகவே நான் ஏன் பரதம் ஆடமுடியாது என்று கேட்கிரார். நண்பர்களே, அவை இரண்டும் வேறு வேறு.

மரபுஇலக்கிய வாசிப்புக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உள்ளது, அதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எப்போதுமே நம் மரபு இலக்கிய வாசகர்கள் சொல்லும் சில வரிகள் உண்டு. ‘இந்தப் படைப்பில் சொல்லவந்ததை தெள்ளத்தெளிவாக வெள்ளிடைமலையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’

இதே நோக்கில்தான் நம் கல்வித்துறை இலக்கியம் கற்றுக்கொடுக்கிறது. ‘இந்தக்கவிதையின் திரண்ட பொருள் யாது, நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விளக்குக’

இந்த மனநிலை கவிதையை, இலக்கியத்தை அறிவதற்கு மிகமிக எதிரானது. ஒரு ஆக்கத்தில் ஆசிரியர் ‘சொல்லவந்த கருத்து’ என்ன என்று தேடுவதும் அதை அவர் ‘ஐயம்திரிபற’ சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும்தான் உண்மையில் நவீன இலக்கியத்தில் இருந்தே மரபான வாசகர்களை பிரிக்கிறது.


பிரமிளின் அக்கவிதையையே எடுத்து கொள்ளுங்கள். எனது முதல் பரிச்சயமே அதன் பிரெஞ்சு வடிவத்திலிருந்துதான். பிறகுதான் தமிழ் மூலத்துக்கு வந்தேன். ரோசாவசந்த் நான் கூறியதை முதலில் பிரமிள் காப்பி அடித்திருப்பார் என்ற மாதிரி புரிந்து கொண்டார். இல்லை என நான் விளக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சுக்காரருக்கோ முதல் பார்வையில் அது ப்ரெவரின் கவிதையாக பட்டுள்ளது.

பிரமிளுக்கும் ப்ரெவருக்கும் என்ன சம்பந்தம்? இருப்பினும் ஒரு தளத்தில் ஒன்றுபட்டது நான் சொன்ன இடத்தில்தான். ஒரு விதத்தில் பார்த்தால் இலக்கியம் என்பதே பல பார்வைகளின் கூட்டுவினை என்றும் எனக்கு படுகிறது.

மீண்டும் ஜெயமோகன்:

முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.

ஆகவே பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான அழகியல் உத்தி. தெள்ளத்தெளிவாக இருப்பது இலக்கியத்தின் பலவீனம். நீதிநூல்கள் தெளிவாக இருக்கலாம். ஆனால் அதை இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடாது. கொன்றை வேந்தன் வாசிப்பது போல பிரமிள் புதுக்கவிதையை வாசித்தால் ‘என்ன இது ஒண்ணுமே புரியலை, என்னதான் சொல்லவரார்?’ என்ற குழப்பமே எஞ்சும்

வில்லியம் எம்ப்சன் என்ற விமர்சகர் ஏழுவகை பொருள்மயக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த பொருள்மயக்கங்கள் இலக்கியத்துக்கு ஆழத்தையும் அழகையும் அளிப்பவை. இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள நூல் அது.

பொருள்மயக்கம் என்பது இன்றுள்ல ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிரது இந்தக்குறள்.

ஆகவே பொருள்மயக்கம் எப்போதும் இலக்கியத்தில் உள்ளது. அதுவே அதன் வழி. ஆனால் மரபிலக்கியம் உரைகள் உரைகள்மீது உரைகள் என எழுதப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே பலர் பொருள்மயக்கம் பற்றி யோசிக்காமலேயே மரபிலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் சிக்கலாக இருக்கிரது, காரணம் இங்கே உரை இல்லை. பொருள்மயக்கம் முகத்தில் அறைகிறது.


பிரமிளின் அக்கவிதை பற்றி சில ஞாபகங்களை புதுப்பித்துக் கொள்ள இப்போதுதான் ஸ்ரீராம் அவர்களுடன் தொலைபேசினேன். அவரும் மேலும் புது விஷயங்களை தந்தார். அவரும் François Gros என்னும் பிரெஞ்சுக்காரருமாக சேர்ந்து பிரமிளின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதையையும் சேர்த்து இன்னும் பல கவிதைகள் ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், பதிப்புக்காக அப்புத்தகம் காத்திருக்கிறது என்றும் கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/29/2010

பதிவுலகை விட்டு டோண்டு ராகவன் விலகுவானா?

இப்பதிவு நான் முன்பு இட்ட டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா என்னும் பதிவின் தொடர்ச்சியாக வைத்து கொள்ளலாம். இப்போது இங்கு ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்றால் கோவி கண்ணன் இட்ட வலையுலக நோய் என்னும் பதிவில்தான் அதைத் தேட வேண்டும்.

அப்பதிவில் பல பதிவர்கள் வலையுலகி விட்டு போகப்போவதாக இடுகைகள் இடுவது தேவையற்ற ஃபிலிம் காட்டுவது என்பதை குறித்து இவ்வாறு கூறுகிறார்.

40 இடுகைகளும் 40 பிந்தொடர்வோர்கள் கிடைத்துவிட்டால் எதாவது பிரச்சனையை காரணம் காட்டி நான் வலைப்பதிவில் இருந்து விலகுகிறேன் என்று படம் காட்டுவது வலைப்பதிவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. ஒருவேளை வலைபதிவில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்து காட்சிப் படுத்தும் மனநிலையில் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறியப்பட்ட எழுத்தாளர்கள் சாரு, ஜெமோ மற்றும் ஞானி இவர்கள்தான் இவ்வாறு வார இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்து சிறு பிரச்சனையைக் காரணம் காட்டி நான் இனிமேல் இங்கு எழுதமாட்டேன் என்று ஸ்டண்ட் அடிப்பார்கள். வலைப்பதிவு வார இதழ் கிடையாது, எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம் என்றாலும் 'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி விலகுவது எழுத்தில் தாங்கள் வைத்திருந்த ஆர்வத்தை தாங்களே குழி தோண்டி புதைப்பதாகும். ஒரு சிலரை காரணம் காட்டி விலகுவது என்பது அந்த ஒருசிலருக்காகத்தான் இவர்கள் எழுதி வந்ததாக பலர் நினைக்கும் படி செய்துவிடுவதை இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை ?
==============================================================================================
40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.


அந்த இடுகையில் குசும்பன் அவர்களது பின்னூட்டம், கோவியின் பதிலுடன்:
கோவி.கண்ணன்
// குசும்பன் said...
அண்ணே அப்படி போகிறேன் இனி எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு இதுவரை எழுதாமல் இருக்கிறவங்க ஒருத்தர் பேராவது சொல்லமுடியுமா?:)))// திருவாளர் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் சார் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் (இதற்கு தனி இடுகை போட்டாலும் போடுவார் :)


சரியாத்தான் சொன்னார் கோவி கண்ணன். இதோ உடனேயே பதிவு போட்டு விடுகிறேன்.

2004 டிசம்பரில் நேசமுடன் வெங்கடேஷ் நன்றி சுனாமி என்னும் பதிவை எழுதியதற்காக எல்லோரும் அவரை கடுமையாகவே சாடினார்கள். அதன் பிறகு சில நாட்கள் பீச்சில் நடந்த பதிவர் சந்திப்பில் அவர் தான் பதிவுகள் போடுவதை நிறுத்தியதாகக் கூற அப்போது நான் அவரிடம் இதற்கெல்லாம் மனம் தலரலாகாது என்று ஆலோசனை சொன்னேன். நான் நவம்பர் 2004-ல் பதிவுலகுக்கு வரும் முன்னரே பா.ராகவன் அவரது வலைத்தளத்த்தை வசைகள் காரணமாக மூடி விட்டிருந்தார்.

அப்போதிலிருந்து யாரேனும் ஒருவர் அடிக்கடி இந்த விஷயத்தை கையிலெடுப்பது வழக்கமாகி விட்டது.

எனது இப்பதிவுக்கு காரணமாக நான் குறிப்பிட்ட கோவி கண்ணனே கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டிருக்காது என்ற பதிவை இட்டு பதிவுலகை விட்டு ஓராண்டுக்கு விலகுவதாக கூறினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அச்சமயம் அவருக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. போலி டோண்டு மூர்த்தி விவகாரம் கடைசி நிலையை அணுகிக் கொண்டிருந்தது. அப்பதிவை போட்டு சில நாட்களுக்குள் அவர் திரும்பி வந்து விட்டார். அதை கிண்டலடித்து நான் உலகை வெறுத்த சாமியார் என்னும் தலைப்பில் பதிவு இட்டிருந்தேன்.

அதெல்லாம் பழைய கதை. அதன் பிறகு நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

நானே போவது இல்லை என்பதை அறிந்ததாலோ என்னவோ சிலர் என்னை அனுப்ப இனிஷியேட்டிவ் எடுத்தனர் :)))))).

மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்குமாறு குழலி பதிவே போட்டார். அதே காலகட்டத்தில் என்னை தமிழ்மணத்திலிருந்து நீக்கவில்லை என்பதற்காக ஓசை செல்லா ரமணியனுக்கு தனி மடல் பதிவு எழுதினார். அதைத் தொடர்ந்த பதிவுதான் விடைபெறுகிறேன் நண்பர்களே.
ஆனால் என்ன ஆச்சரியம்? ஓரிரு நாட்களுக்குள்ளேயே வெற்றிகரமாக திரும்ப ஓடி வந்து விட்டார் அன்பின் சூழ்ச்சியால். :))))

இதன் நடுவில் சுகுணா திவாகர், வளர்மதி விவகாரம் வேறு. சுகுணாவை போக வேண்டாம் என்று சொன்னவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே கூறிவிடுகிறேன்.

இம்மாதிரி பலர் பல முறை செய்து விட்டதால் ஒவ்வொரு முறையும் ஏற்கனவேயே அதைப் பார்த்த உணர்ச்சிதான் வருகிறது (déjà vu).

தமிழ்மணத்தை விட்டு விலக்ப்போவதில்லை என்ற என்னுடைய பதிவிலிருந்து சில வரிகள் இங்கே:

இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.

பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?

ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question.

அதே வரிகள்தான் நான் வலைப்பூ உலகத்தை விட்டு விலகும் சாத்தியக்கூறே இல்லை என்பதை விளக்குகின்றன.

இப்பதிவை போட இன்ஸ்பிரேஷனை அளித்த கோவி கண்ணன் எனக்கு நண்பேண்டா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/28/2010

இந்த உதாரையெல்லாம் வேறே யாரிடமாவது வச்சுக்குங்க வால்பையன்

வால் பையனின் உளறல்கள் இங்கே.

//எங்கள் பதிவில் வரவேற்புக்கு முன் பதிவர் சந்திப்பு போல நடந்தலாம் என்று படித்தவுடன் முடிவு செய்திருப்பார், நடுவில் அமர்ந்து ஏற்கனவே பலமுறை கேட்டு காது புளித்து போன இஸ்ரேல் கதையை திரும்ப சொல்லி எல்லோரையும் வெறுபேத்தலாம் என, ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது டோண்டுவுக்கு பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!//
கண்டுபிடிச்சாரப்பா கொலம்பஸ். பதிவர் சந்திப்புக்கு கூப்பிட்டது நீங்கள். நீங்களே அங்கில்லாமல் அப்பீட் ஆனது எந்த வித மரியாதை? பதிவர் சந்திப்புன்னு சொன்னதாலத்தானே அங்கு நான் வந்ததே!

//மணமகளின் தாய்மாமன் வாசலில் ராஜனை வரவேற்றபோது சட்டென்று டோண்டுவின் மூக்கு (வேற ஆளா இருந்திருந்தா மூக்குக்கு பதில் வேற ஒரு நல்ல வார்த்தை வந்திருக்கும்) வேர்த்திருக்கும், வைதீகமுறைப்படி கல்யாணம் ஆதலால் நிச்சயமாக சைவம் தான் இருக்கும், நான்வெஜ்ஜுக்கு வேலை *இல்லை என்ற கோவம் வரவாய்ப்பில்லை, நாலு எலும்புதுண்டு கடிப்பதற்காக டோண்டு இவ்ளோ தூரம் வரக்கூடிய ஆள் இல்லை, அவை நங்கநலூரிலேயே கிடைக்கும், ஆகையால் அதை ஓரம் கட்டுவோம்!//
ஓக்கே, ஓரம் கட்டிடுவோம்

//அன்னைக்கு என்னை நடுத்தெருவுல நிக்க வச்சு நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்டில்லடா என்று உள்ளிருந்த டூண்டு (அதாம்பா, மல்டிபள் பர்சனால்டி, முரளி மனோகர் இன்னபிற அனானி மாதிரி) முழித்து கொண்டிருப்பான், வைதீக முறைப்படி என்பதால் ராஜனுக்கு பார்பனீய புத்தி இருக்குமா என பார்க்க மண்டபத்தின் வாடகை கேட்டிருக்கிறார்!, ராஜனுக்கு சொல்ல விருப்பமில்லையோ அல்லது நல்லா கேட்டுட்டு சொல்லலாம் என நினைத்தாரோ தெரியல, எல்லாம் பொண்ணு வீடுதான் பாத்துகிறாங்கன்னு சொல்லியிருக்கார்!//
இது என்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்க்கும் முடிச்சு? முரளி மனோகர் இங்கே எங்கிருந்து வந்தான்? நிற்க. சிந்தாதிரிப் பேட்டையில் நகரின் நடுவில் இருந்த அந்த மண்டபத்துக்கு எவ்வளவு வாடகை என்பதை அறியத்தான் ஆசைப்பட்டேன். வேறொன்றுமில்லை. தன் தாய்மாமன் பார்த்துக் கொள்கிறார், அவரிடம் கேட்டுச் சொல்கிறேன் எனக்கூறியிருந்தால் மேட்டர் முடிந்திருக்கும். ஆனால் அவரே பெண்வீட்டார் பொறுப்பு அது என்பது போன்ற விட்டேத்தியான பதில் கொடுத்தது என்னை யோசிக்க வைத்ததே நிஜம். ஆமாம் அது என்ன பார்ப்பனீய புத்தி? என்னமோ மத்த ஜாதிக்காரங்க எல்லாம் வரதட்சணையே வாங்காதது போன்ற பில்ட் அப்?

//கவனிக்க, ராஜனுக்கு சொந்த ஊர் சென்னையில்லை, ராஜனுக்கு பெற்றோர் இல்லையே தவிர சித்தப்பா, மாமா என வேறு யாராவது ஒருவர் செலவு பொறுப்பை ஏற்றிருக்கலாம், ஆனால் தாம்(பார்பனீயர்கள்) பெண் வீட்டில் தானம் (பிச்சைனும் சொல்லலாம்) வாங்கி மணம் முடிப்பது போல் ராஜனும் செய்வது போல் பதிவில் கோடிட்டு விட்டார்!, அதற்காக அவரை தப்பு சொல்ல முடியாது, அவராடாவிட்டாலும், அவரது பூணுல் ஆடித்தானே ஆகும்!//
நானும் ராஜன் கண்டிப்பாக செலவை சரிசமமாக பங்கிட்டு கொண்டிருப்பார் என நம்புகிறேன் என்றுதானே கூறினேன்? ஆனால் இதை இப்போது இப்படி எடுத்துக் கொண்டு ஆடுவதைப் பார்த்தால் அப்படியில்லை போலிருக்கு. நான் இப்போது வெளிப்படையாகக் கேட்டு விட்டதால் வேறுவழியின்றி ஒரு பொய்யை நிஜமாக்க பாதி செலவை பங்கேற்க வேண்டியது போல தோன்றுகிறது. அப்படியென்றால் என் மேல் பட்ட எரிச்சல் புரிந்து கொள்ளக் கூடியதே.

//அப்பவே நிச்சயம் அங்கிருப்பவர்களிடம் விசாரித்திருப்பார், முகூர்த்தநேரம் என்ன, அய்யர் உண்டா என்று, இருந்தும் என்னிடம் போன் பண்ணி கேட்க காரணம், வால்பையன் பொய் சொல்ல மாட்டான், சொன்னதை இல்லை என்று மறுக்கும் அடிப்படை நேர்மையற்றவன் இல்லை என்பது டோண்டுவுக்கே தெரியும்!, அதனால் வால்பையனிடம் போனில் கேட்டு ”உறுதி”(அப்ப ஏற்கனவே தெரியும் தானே) செய்தேன் என எழுதியிருந்தார்!//
சம்பிரதாயத் திருமணம் என்பதை நானே புரிந்து கொண்டேன் என்றுதான் எழுதியிருந்தேன். அதையும் கேட்டிருக்க மாட்டேன். எனது சாதாரணமான முதல் பதிவில் வந்த விநாயகர் ஃபோட்டோவை வைத்துக் கொண்டு, பிறகு கல்யாணப் பத்திரிகையிலேயே முகூர்த்தத்தை அறிவித்தது பற்றியும் கேள்விகள் வந்தும் நான் ரியேக்ட் செய்யாமல்தான் இருந்தேன். ஆனால் நிலைமை தீவிரமானதால் தன்னிலை விளக்கமும் தந்தேன்.

//அதை அங்கே வைத்தே கேட்கலாம், ஆனால் பாப்பான் புத்தி பாவாடைக்குள் என்பதை நிரூபிக்க வேண்டாமா!?, எங்களூரில் ”சில” பெண்கள் வேலையில்லாத நேரங்களில் கோள்மூட்டி விடுவார்கள், ஒரு பெண்ணுடன் சண்டை இருக்கும், ஆனா நேரடியாக சண்டையிட முடியாது, அதற்கு பதில் வேறொரு பெண்ணை கோர்த்து விடுவது, எப்படினா!//
வால்பையனுக்கு எப்போதும் கவட்டை கோமணம் ஆகியவற்றில்தான் கவனம் இருக்கும். மற்றவர்களையும் அப்படியே எடை போடுகிறார்.

//அவரது பதிவின் பின்னூட்டத்தில் வால்பையனும், கும்மியும் ராஜனுக்கு ஊக்கமளித்தற்காக பாராட்டுகிறேன் என சொறிதல் வேறு, நிஜமாலுமே சொல்றேன், அப்பட்டமான பாப்பான் புத்தியை இப்போ தான் பாக்குறேன், எவனாயிருந்தாலும் எதிர்த்து நிக்கிற எங்களுக்கே இவ்ளோ டகால்டி கொடுக்குற பாப்பானுங்க, ஒன்றும் அறியா பாமர மக்கள் மத்தியில் எவ்ளோ சேட்டை பண்ணியிருப்பானுங்க! கொஞ்சம் சீரியஸாவே அதை அணுகனும், சமூக அழுகல் பார்பனீயம், அதை வெட்டி எடுக்கனும் மொதல்ல!//
உண்மையாகவே பாராட்டினேன். ஆனால் அவர்களுக்கே தாங்கள் செய்த செயல் கேவலமாகப் பட்டிருக்கிறது. ஏனெனில் வேறு யாரும் அவ்வாறு அச்சந்தர்ப்பத்தில் செய்திருந்தால் என்னவெல்லாம் சொல்லி ஆடியிருப்பார்கள் என்பதை தமிழ்மணமே அறியும். இனிமேல் எதிர்காலத்தில் அப்படி பண்ணமுடியாது போயிற்றே என்ற எரிச்சலுக்கு நான் என்ன செய்யமுடியும்?


//எனகென்னவோ டோண்டு கையில் கிட்டார் கொடுத்தால் நவீனநாரதர் போல் இருப்பார்னு தோணுது! சரி மேட்டருக்கு வாங்க, நான் சொல்லியிருப்பதை அப்படியெல்லாம் இல்ல, நான் ரொம்போ நல்லவன் என டோண்டு விடும் அறிக்கையை நான் தம்மாதூண்டு அளவும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, பொய் சொல்லிவிட்டு பின் மந்திரம் சொல்லி பாவத்தை கழிக்கும் பாப்பான் வகையறா டோண்டு, அதில் எழவு பெருமை வேற!//
வால்பையன் நம்பினால் தேவலையா, நம்பாவிட்டால் தேவலையா?

//ஆக டோண்டு உண்மையை தான் சொல்லுவார் என நம்பிக்கையில்லா பட்சத்தில் ராஜனின் திருமணத்தை சர்ச்சைகுள்ளாக்க வேண்டும், இவனுங்க ரெண்டு பேரும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி கொள்வார்கள், ராஜனை நிம்மதியான மணவாழ்க்கை வாழவிடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இதை செய்திருப்பார் என அகில உலக பாப்பான்கள் சங்கள் முடிவு செய்கிறது, இதற்காக டோண்டுவுக்கு பாராட்டு விழாவெல்லாம் நடக்கப்போவுது, பரிசாக ஹாரிபாட்டர் புத்தகம் (எத்தனை வருசமா அதையே படிப்பார், புத்தகத்தில் பாதி பக்கத்தை காணோம், ரொம்ப பசித்திருக்குமோ படிக்கும் போது) வாங்கிச்செல்லவும்!//
ஹாரி பாட்டர் புத்தகம் படிக்கவும் அடிப்படை அறிவு தேவைப்படும். அது இல்லாதவர்கள் எல்லாம் ஏன் அது பற்றிப் பேச வேண்டும்? மேலும், ராஜனுக்கு நிம்மதியான மணவாழ்க்கை ஏன் கிடையாது தீர்மானிக்க வேண்டும்? அப்படிக்கூட புரிதல் இல்லாதவர்களா மணமக்கள்? மணமகளின் தந்தை மாற்றுத் திறனாளி என ஏன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்? யார் கேட்டார்கள் இவர்களை அது பற்றி?

//நான் தான் சொல்லியிருக்கேனே அங்கேயே, முதலில் சொந்த பெயரில் வந்து பாராட்டுவது பின் அனானியாக வந்து பார்பனீய புத்தியை காட்டுவது, அவாளுக்கு அது கைவந்த கலையாச்சே!//
இம்மாதிரி பதிவை எழுத வேண்டும். இருக்கும் நிலையில் சரியாக மாட்டிக் கொண்டதால், இம்மாதிரி தாங்களே என் பதிவில் அனானிகளாக வந்து கும்மி அடித்து விட்டு பதிவு போடுபவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா?

//ஒருநாள் செந்தழல்ரவிக்கு போன் செய்திருந்த போது உங்கள் மனைவி என்ன சாதி என கேட்டிருக்கிறார், ரவியும் எதேச்சையாக அவர் பிறப்பால் பார்பன குடும்பம் தான் என சொல்லியிருக்கிரார், இது வேறு யாருக்கும் தெரியாது, ஆனால் மறுநாளே போலி டோண்டுவிடமிருந்து ரவியையும் அவரது மனைவியையும் திட்டி பதிவு/பின்னூட்டம் வருகிறது!
சொல்லுங்கள் யார் எட்டப்பன்!
(ரவி போனில் பகிர்ந்து கொண்டது)//
அவதூறு ஆறுமுகத்துக்கு ஏற்கனவேயே கிசுகிசு ஏதும் இன்றி நேரடியாகவே அட்டாக் பதில் இது பற்றியும் மற்ற அவதூறுகள் பற்றியும் கூறியாகி விட்டது. போய் பார்த்துக் கொள்ளவும்.

கடைசியாக ஒரு வார்த்தை. எல்லோரையும் பற்றியும் தாறுமாறாக எழுதினால் இதுதான் நடக்கும். ஊரெல்லாம் அவனவன் காத்திருப்பான். உதாரணத்துக்கு முகம்மது பற்றி முன்னால் அசிங்கமாக எழுதியதற்காக வந்த எதிர்வினையாக இந்த நிகழ்வைப் பற்றி வந்தப் பதிவுக்கு போய் அதில் பதில் கூறவெல்லாம் வால்பையனுக்கு தில் இல்லை. என்னிடமா உதார் காட்டுகிறார்? இந்த உதாரையெல்லாம் வேற யாரிடமாவது வச்சுக்குங்க வால்பையன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நஜ்மா பீவி, ஷேர் அலியின் பிரச்சினை - அதன் தொடர்ச்சி

இப்பதிவை போட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதை ஏன் மீள்பதிவு செய்ய நினைக்கிறாய் என்கிறான் முரளி மனோகர். ஏனெனில் அதே விஷயம் மறுபடியும் இப்போது நடந்து பெரிய பிரச்சினையாக கத்தார் நாட்டில் செல்கிறது என அறிகிறேன். இது பற்றி ஹிந்துவில் இன்றுதான் படித்தேன்.

முதலில் மீள்பதிவாக்கப்படும் எனது இப்பதிவை படித்து விடுவோம்:

நான் சாதாரணமாக டிஸ்க்ளைமர் எல்லாம் போடுவதில்லை. ஆனால் இப்பதிவுக்கு அது தேவை. மாற்று மதத்தினரின் மதநம்பிக்கையை நான் இங்கு கேள்வியெல்லாம் கேட்கவில்லை. அதை சம்பந்தப்பட்ட மதத்தினரே பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் நான் இங்கே பேச இருப்பது ஒரு தம்பதியினரைப் பற்றியும் அவர்களது இப்போதைய பிரச்சினை பற்றி மட்டுமே.

ஒரிஸ்ஸாவில் பட்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் காண்டாபானியா. அதில் வசிப்பவர்கள் நஜ்மா பீவியும் அவரது கணவர் ஷேர் அலியும். ஜூலை 5, 2003-ல் குடிபோதையில் ஷேர் அலி மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறியுள்ளார். அடுத்த நாள் இருவருமே அதை மறந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர, அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நஜ்மா இன்னொருவரை மணந்து அவர் இவரை தலாக் சொல்லி, பிறகுதான் அவர் ஷேர் அலியைத் திருமணம் செய்து கொள்ள முடியும் எனக் கூறுகிறார்கள். இசுலாமியத் திருமணச் சட்டமும் அவர்கள் கூறுவது போலத்தான் உள்ளது.

இப்போது அவர்கள் தனியாக பக்கத்து கிராமங்களில் வாழ்கிறார்கள். விஷயம் சுப்ரீம் கோர்ட் வரை போய் விட்டது. சுப்ரீம் கோர்ட் அவர்கள் சேர்ந்து வாழ தடையேதும் இல்லை எனக் கூறிவிட்டது. கோர்ட்டின் வாக்கியங்களில்: "இந்த ஜோடியை தனியே வாழுமாறு கட்டாயப்படுத்த யாருக்குமே உரிமை இல்லை. இது ஒரு மதசார்பற்ற நாடு. எல்லா சமூகத்தினரும், ஹிந்துக்கள், இசுலாமியர் அல்லது வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்."

நஜ்மா பீவியும் ஷேர் அலியும் அரசு நிர்வாகம் இப்போது தலையிட்டு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு நிர்வாகமோ தயங்குகிறது. இவர்களது போல ஏற்கனவே 50 கேஸ்கள் உள்ளன என்றும் எல்லோரும் பாத்குகாப்பு கேட்டால் தாங்கள் என்ன செய்வது என்பதுதான் நிர்வாகத்தின் நிலைப்பாடு.

இப்போது டோண்டு ராகவன். முத்தலாக் என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய முறை இல்லை என்று படித்ததாகத்தான் ஞாபகம். அம்முறையில் கூறப்பட்ட தலாக்கை மட்டும் இந்த ஊர் பெரியவர்கள் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?இப்போது சுப்ரீம் கோர்ட் வரை வந்துள்ள இந்த விவகாரம் உள்மதப் பிரச்சினை என்று விட்டுவிட வேண்டுமா? அதே போல இம்ரானா வழக்கு என்னவாயிற்று என்று யாராவது கூற முடியுமா?

எனக்கு சில சந்தேகங்கள். பாதிக்கப்பட்ட தம்பதியர் மதம் மாறினால் என்ன செய்ய முடியும், இந்து மதத்தில் இருதார திருமணங்கள் தடை என்றதும் பலர் இசுலாமிய மதத்துக்கு மாறியது போல? இக்கேள்வியை இங்கு வைப்பதுகூட இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தம்பதியருக்காகவே.

இத்தருணத்தில் கட்டை பஞ்சாயத்துகளை பற்றியும் பேச வேண்டியுள்ளது. இது மதங்களை மீறியது. ஊர்க்கட்டுப்பாடு என்ற போர்வையில் தனிப்பட்டவர் வாழ்க்கையில் தலையிடுவது பல பஞ்சாயத்துகளின் வழக்கமாகப் போயிற்று. பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 800 ரூபாய் அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட பெண் போலிஸுக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடும் விதித்ததாக ஒரு பதிவு நேற்று பார்த்தேன். மேல் விபரம் ஞாபகம் இல்லாததால் சுட்டி தர இயலவில்லை. எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதைக்கூட பஞ்சாயத்தில் பலசமயம் கூறுகிறார்கள்.

மறுபடியும் கூறுவேன், இப்பதிவை போடுவது சம்பந்தப்பட்ட தம்பதியினர் நியாயம் பெற வேண்டும் என்பதற்காகவே.


மீண்டும் டோண்டு ராகவன். மேலே குறிப்பிடப்பட்ட தம்பதியருக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதை அறிய இணையத்தில் தேடினால் அது கிடைக்கவில்லை. அது நடந்தது மதசார்பற்ற நாடான இந்தியாவில். ஆனால் மேலே உள்ள ஹிந்துவின் கட்டுரையில் நடந்ததோ கத்தார் நாட்டில்.

அக்கட்டுரையை இங்கே ஆங்கிலத்திக்லேயே இடுகிறேன்.

Talaq joke , while chatting with his wife on the net, may cost youth his marriage

Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.

The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.

The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband's fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.

In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn't know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.

Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was “haraam” for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through ‘halalah,' if she wanted to return to her husband.

“Halalah” is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband again.The wife would be required to complete the ‘ iddat' (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the ‘ iddat' period again before she could re-marry her former husband, it stated. During ‘ iddat' a woman is supposed to stay away from celebrations and socialising. “When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became ‘haraam' for you, whether you are aware of the commandment or not,” the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the ‘Shariyat' talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI


மத அமைப்பை விடுங்கள். அதனிடமிருந்து வேறு எந்த முடிவையும் பெற இயலாது. இந்த கொழுப்பெடுத்த இளைஞன் மெனக்கெட்டு ஏன் அதனிடம் விளக்கம் கேட்க வேண்டும்? இதைத்தான் சொந்தச் செலவில் சூன்யம் எனச் சொல்வார்கள் போலும்.

ஆனால் அதே சமயம் என்னால் இன்னொன்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லையே. இப்படியா ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மதம் தலையிடும்? நான் அந்த இளைஞனாக இருந்திருதால் என்ன செய்திருப்பேன்?

1. முதலில் தலாக் போன்ற வார்த்தைகளை விளையாட்டுக்கும் தனிப்பட்ட கடிதங்களில் கூட பயன்படுத்தியிருக்க மாட்டேன்.
2. அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் வெளியில் போய் உளற மாட்டேன், அதுவும் மத அமைப்பிடம் மூச்சு கூட விட்டிருக்க மாட்டேன்.
3. அப்படியே செய்தாலும் ஃபட்வாவை அலட்சியம் செய்திருப்பேன். தேவையானால் மனைவியை அழைத்துக் கொண்டு வேறு நாட்டுக்கு சென்றிருப்பேன், மதம் மாறியிருப்பேன். (கத்தாரிலிருந்து கொண்டு இதை செய்தால் சங்குதாண்டி).

அது இருக்கட்டும், இந்தியா தனக்கு வேண்டாம் என கத்தாருக்கே ஓடிப்போன அந்த சில்லுண்டிப் பயல் இந்த விஷயத்துக்கு என்ன எதிர்வினை கொடுப்பான் என்பதை அறிய ஆவல். தனிமனித சுதந்திரத்துக்கு அவன் ஆதரவு இருக்குமா?

பாதிக்கபட்டவருக்காக இந்த கத்தார் செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்று என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 5. கிருஷ்ணன் பொம்மை

வி.எஸ். திருமலை அவர்களது சிறுகதை தொகுப்பின் தலைப்பே இக்கதைக்கும் தலைப்பாகும். நேராகவே கதைக்கு போய் விடுகிறேன். ஓவர் டு திருமலை.

நான் அதற்குமுன் காந்தி நகருக்குள் சென்றதே கிடையாது. அன்று வெயிலில் நான் என் நண்பன் ஒருவனுடைய வீட்டைத் தேடித் தேடி அலுத்துப் போனேன். கடைசியில் அந்தக் காரியத்தைக் கைவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு திருபி நடக்கும்பொழுது ஒரு வீட்டின் வாசலில் நின்ற ஒரு குழந்தை என் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்ததும் என் மார்பு படபடத்தது. நெருங்க நெருங்க என் வியப்பு அதிகரித்தது. ‘அப்படியும் இருக்கக்கூடுமோ’ என்று தோன்றியது.

கமலாவின் குழந்தைதான் அவள். அதில் சிறிதளவேனும் சந்தேகமே இல்லை. என் கண்கள் மட்டுமா சாட்சியம் கூறின? என் சமுசயம்தான் அலறிற்றே!

அருகில் சென்றேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். வேறு ஒருவரும் தென்படவில்லை.

அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவள் என்னைப் பார்த்து நெடுநாள் பழக்கமானவள் போல் முறுவலித்தாள். போக்கிரி! அன்று காலேஜில் முதல் சந்திப்பின்போது சிரித்தாளே கமலா, அதே சிரிப்பு. இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டிருந்தாள் குழந்தை. அவளுடைய கையில் ஒரு பந்து இருந்தது.

வேறு யாரேனும் ஒருவரது குழந்தையாக இருந்தால்! தயங்கினேன். அவள் கமலாவின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மறுபடியும் ஓங்கியது.

உலோபி போல் நான் என் மனத்துள் புதைத்து வைத்திருந்த கமலாவின் பல்வேறு தோற்ற ஞாபகப் படங்களைப் புரட்டிப் பார்த்தேன். எதிரே நின்ற குழந்தையின் தோற்றத்துடன் ஒப்பிட்டேன்.

கன்னங்களில் அதே குழிவு. தலைமயிர் சிறிது செம்பட்டையாக இருந்தது. சிறிய அழகிய மோவாய்க் கட்டை.

“உள்ளே வாங்கோ மாமா”.

குழந்தையின் பேச்சும் கமலாவின் இன்னிசைக் குரலையே எதிரொலித்தது.

இதற்குள் குழந்தையின் தகப்பனாரோ, “மைதிலி! வெயிலில் என்ன விளையாட்டு என அதட்டிக் கொண்டே வெளியே வந்தார்.

“மன்னிக்கவும், ஈஸ்வரி பாங்க் கோபாலன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?” என்று கேட்டேன்.

“அப்படி ஒருவரும் இந்தத் தெருவில் இருப்பதாகத் தெரியவில்லையே” என்று அவர் புருவங்களை நெரித்தார்.

“ஒரு டம்ளர் ஜலம் கொடுக்க முடியுமா, தயவு செய்து?” என்றேன் கைகுட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு.

“வெயிலில் நிற்பானேன்?” என்றார் அவர்.

சரி, குழந்தையின் அம்மாவைப் பார்த்து விடலாம் என ஆவலுடன் அவரைத் தொடர்ந்தேன்.வாயிற்படியைத் தாண்டியவுடன் இருந்த ரேழியில் செருப்பை விட்டுவிட்டு அதற்கப்புறம் இருந்த ஹாலுக்குள் நுழைந்தேன். கமலாவைத் தேடிய என் கண்கள் ஏமாற்றமடைந்தன. உள்ளே உட்கார்ந்திருந்த பெண்மணியிடம் குழந்தை மைதிலி, “அம்மா!” என்று அழைத்தவாறு ஓடினாள்.

“பார்வதி, ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வருகிறாயா?” என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் அந்த ஸ்திரீ உள்ளே சென்று விட்டாள்.

என்ன மடத்தனம்! கமலாவின் குழந்தை அவள், கமலாவையே சந்தித்து விடுவோம் என்றெல்லாம் எண்ணித் தவித்தேனே!

கமலா எங்கிருக்கிறாளோ? சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் கடைசியாகக் கமலாவைப் பார்த்த தினம் ஞாபகத்துக்கு வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கு அவள் வந்திருந்தாள். யுத்தம் என்றால் எப்படி இருக்கும் என்று பார்த்து விடலாமே என்று உற்சாகத்துடன் நான் ஆகாயப்படையில் சேர்ந்துவிட்டேன். அம்பாலா பயிற்சிக் கலாசாலைக்கு நான் போனபொழுதுதான் என்னை வழியனுப்ப அவள் வந்திருந்தாள்.

ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்குள் பேச்சே இல்லை. இருவர் மனத்திலும் ஆயிரம் எண்ணங்களும் கேள்விகளும் இரைச்சலிட்டன. வெளியே மனிதர் சந்தடி எங்கள் மனநிலையைப் பிரதிபலித்தது. உள்ளத்தில் இருந்த வருத்தத்தையும் குழப்பத்தையும் மறைத்து சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி வார்த்தையாடினோம். ரயில் நகர ஆரம்பித்தது. நான் ஜன்னல் வழியே அவளைப் பார்த்து நின்றேன். அவள் உருவம் பின்னுக்குச் சென்று கொண்டே இருந்தது. பிளாட்பாரத்தில் இருந்த மற்ற கும்பலுடன் கலந்தது. என் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.

டெல்லியிலிருந்து அவளுக்கு நான் தந்தத்தில் கடைந்தெடுத்த கிருஷ்ணன் பொம்மை ஒன்றை அனுப்பினேன், என் நினைவுப் பொருளாக. அதன் கூட ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். “நான் மரணத்துடன் வாழப்போகிறேன். என் வேலையில் நான் காலனின் முகத்தை எப்போதும் காணலாம். நாளைக்கு இருப்பது நிச்சயமற்ற, அபாயம் நிறைந்த விமானியாகிய நான் ஏன் உன் வாழ்வில் குறுக்கிட வேண்டும்? என்னை மறந்துவிடு” என்று எழுதியிருந்தேன். வேறு யாரோ ஒருத்திமேல் காதல் கொண்டேன் என்றும் அவள் எண்ணீயிருக்கலாம். மூன்று வருடங்கள் கழித்து நான் மறுபடியும் லீவில் சென்னை வந்தேன். ஆனால் கமலாவைக் காணமுடியவில்லை. அவளைப் பற்றித் தகவல் கூட ஒன்றும் அகப்படவில்லை. தேடியதெல்லாம் வீண். பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள் என்றுகூடக் கவலைப்படாத இந்தக் காலத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்த ஊருக்கு மாற்றிப் போனார்கள் என்றா சொல்லப் போகிறார்கள்?

எதிரே ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்தாள் அந்த வீட்டுக்காரி. என் சிந்தனைத் தொடர் அறுந்தது. தலையை நிமிர்த்தி அந்த அம்மாளைப் பார்த்தேன். கமலா எங்கே? எதிரே நின்றவள் எங்கே?

“மிகவும் வந்தனம்” என்று சொல்லிவிட்டு ரேழிக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டபொழுது கீழே கிடந்த பொம்மையைப் பார்த்தேன். குனிந்து அதை எடுத்தேன்.

நான் கமலாவுக்கு அனுப்பிய தந்தக் கிருஷ்ணன்! யோசியாமல் அதை என் பையில் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன்.

பத்து வருஷங்களின் சின்னங்கள் மஞ்சளாகப் போயிருந்த அந்த தந்தப் பொம்மையின் மீது காணப்பட்டன. ஒருகை உடைந்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. உடலில் பல கீரல்கள்.

அந்தப் பொம்மை அங்கே எப்படி வந்தது? அதை வைத்துக் கொண்டு மைதிலி விளையாடியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வளவு கீறல்கள் எப்படி வந்தன? ஒருகால் மதிலி கமலாவின் குழந்தைதானோ என்னவோ? இம்மாதிரி என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

மைதிலி, கமலாவின் குழந்தையாகவேதான் இருந்தால் எனக்கென்ன? கடந்த பத்து வருஷங்களில் கமலாவின் வாழ்விலும் உள்ளப்பாட்டிலும் எவ்வளவு மாறுதல்களோ? அறுந்த நட்பை மீண்டும் ஒட்டவைக்க முடியுமா? மறுபடியும் அவள் வாழ்க்கையில் நான் எப்படி பிரவேசிக்க முடியும்?

ஆறு நாட்கள் என் ஆவலை அடக்கி வைத்திருந்தேன். பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். எப்படியாகிலும் கமலாவைப் பற்றிய விவரங்களை அறிய வேண்டும் என்கிற ஆசை அதிகரித்தது.

தந்தக் கிருஷ்ணனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற சாக்கை வைத்துக் கொண்டு மறுபடியும் ஒரு வாரம் கழித்து காந்தி நகருக்கு சென்றேன்.

பொழுது சாய்ந்து விட்டது. நான் அந்த வீட்டை நெருங்கிய பொழுது ஒரு டாக்டர் வெளியே வந்து காரில் போகக் கண்டேன். மைதிலிக்கு உடம்பு சரியில்லையோ என்று நினைத்துக்கொண்டே கதவைத் தட்டினேன். கதவு தாழிடவில்லை. உள்ளே நுழைந்தேன்.

ரேழியில் கமலா நின்று கொண்டிருந்தாள். “கமலா!” என்று கூவினேன்.

அவள் பதிலில் பத்து வருஷத்திற்கப்புறம் ஏற்படும் சந்திப்பின் வியப்பையோ, ஆர்வத்தையோ காணோம்.

“நல்ல வேலை செய்தாய், முரளி! குழந்தையின் பொம்மையையா திருடுவது?” என்று என்னைக் கமலா கடிந்தாள்.

மாறாத இளமையைப் பெற்றவளா அவள்? அவள் முகத்தில் காலத்தின் அடிச்சுவடுகளைக்கூட காணோமே! வயது ஆனதாகத் தெரியவில்லையே!

“இதோ!” என்று தந்தக் கிருஷ்ணனை நீட்டினேன். கமலா அதை வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைக் காணாத ஏக்கம், மைதிலியை ஜுரத்தில் கொண்டு வந்து விட்டது. பாவம், தவிக்கிறாள்! நல்ல வேளையாய்த் திருப்பிக் கொண்டு வந்தாயே. ஓடு, கொண்டுபோய் கொடு. அவளுக்கு உடம்பு சரியாகி விடும்”.

“உன் குழந்தையா மைதிலி!”

“பார்த்தால் தெரியவில்லை உனக்கு?”

“பின் ஏன் பார்வதியை அம்மா என்று அழைக்கிறாள் அவள்?” என்று கேட்டேன்.

கமலா சிரித்தாள். வெண்கல மணியின் சுத்த நாதம் போல் கேட்டது, அந்தச் சிரிப்பொலி. “பார்வதிதான் மைதிலிக்கு இப்பொழுது அம்மா. என் ஞாபகம் கூடக் கிடையாது குழந்தைக்கு... என் மீது மைதிலி காட்ட வேண்டிய பாசம் எல்லாம் அந்தப் பொம்மையின் மீது திரும்பி விட்டது.”

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கமலா மேலும் சொன்னாள்: “நீ என் வாழ்விலிருந்து மறையும் முன் கொடுத்த அன்பளிப்பை என் பெண்ணுக்கு, அவளிடம் நிரந்தரமாக விடை பெறுமுன் கொடுத்தேன்... நான் அந்தக் கிருஷ்ணனை எவ்வளவு மதித்தேனோ, அதைவிட அதிகமாக மைதிலி நேசிக்கிறாள்!”

காலடிச் சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மறுபடி கமலாவை நோக்கிய போது அவளைக் காணவில்லை. அவள் நின்ற இடம் சூன்யமாக இருந்தது.

“ஸார்” என்று குரல் கொடுத்தேன். உள்ளே சென்றேன். ஹாலில் மைதிலி கட்டிலின் மீது அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தாள் ஜுர வேகத்தில்.

அவள் தகப்பனார் அருகே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்.

“போன வாரம் இந்தப் பொம்மையை வாசலில் கண்டெடுத்தேன். ஒரு வேளை உங்கள் குழந்தையின்...”

என்னை இடைமறித்து அவர் “மைதிலி, இதோ பார்! கண்ணைத் திற அம்மா! உன் கிருஷ்ணன் அகப்பட்டுவிட்டது” என்று கத்தினார்.

குழந்தை “அம்மா பொம்மை” என்று அதைக் கையில் வாங்கிக் கொண்டது. இரண்டே நிமிஷத்தில் நிம்மதியாக அயர்ந்து தூங்கவும் ஆரம்பித்தது.

சுவரில் மாட்டப்பட்டிருந்த கமலாவின் படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அன்றே அதைக் கவனிக்காமல் போனேனே!

என் பார்வையைக் குறித்த அவர் என் சந்தேகத்தைத் தாமாகவே நிவர்த்தி செய்தார்.

“தாயில்லாக் குழந்தை ஸார்! அந்தப் படத்தில் இருப்பவள்தான் தாய் - என் முதல் தாரம். நான் கொடுத்து வைக்கவில்லை. அவள் போய் நான்கு வருஷங்களாச்சு”.

அவர் அதைச் சொல்லும்பொழுது தொண்டையை அடைத்துக் கொண்டது. எத்தனையோ இன்ப நாட்களின் துன்ப நினைவுகள் ஏக காலத்தில் அவரைத் தாக்குகின்றன என்று ஊகித்தேன்.

என் கண்களில் தூசியோ ஏதோ விழுந்து விட்டது. கைக்குட்டையை எடுத்து ஒற்றிக் கொண்டேன்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 3

இது ஒரு மீள்பதிவு. ராமாயணத்து காட்சிகளை ஒன்றுபடுத்துவதற்காகவும், இந்த இடுகை வகைப் படுத்தப்படுவதற்காகவும் இங்கு அதை கொண்டுவர துணிந்தேன். மீள்பதிவு செய்யப்படும்போது மாறுதல்கள் செய்வதும் சகஜமே. இப்போது இடுகைக்கு செல்வோம்.

ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.

அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன். கிளாக்ஸோ பேபி போன்ற தோற்றத்தில் சிவன் அம்சமாக இருக்கிறார். அதே ராமானந்த் சாகர் எடுத்த கிருஷ்ணர் தொடரிலும் அதே நடிகர் அதே ரோலில் வந்தார்.

அந்த வீடியோ காட்சி இதோ:


பரமசிவன், பார்வதியைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் நாடோடி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் நான் படித்தது நினைவுக்கு வருகிறது. வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது. தன் மனைவியைத் தேடி ராமர் காட்டில் "சீதே, சீதே" என்று பிரலாபித்தவாறு அலைகிறார். செடி, கொடிகள், மான்கள், புலி, சிங்கங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு செல்கிறார். ஐயனின் துயரம் கண்டு பஞ்சபூதங்களும் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிவன் ராமரைப் பரம்பொருளாக வணங்க, பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம் திடீரென வந்தது. பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார். ராமரோ அவரைக் கண்டதும் வணங்கி "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பார்வதி அவர்களே, சிவன் அவர்களை விசாரித்ததாகக் கூறவும்" என்று கூறுகிறார்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/26/2010

ராஜன் திருமணம் பற்றிய விவாதம்

நான் பதிவர் சந்திப்புக்குத்தான் சென்றேன், கூடவே திருமணம் வரவேற்பு என்பதை போனசாகத்தான் பார்த்தேன். முதலில் பதிவு எதுவும் போடுவதாகவே இல்லை, ஏனெனில் ரொம்ப நேரத்துக்கு நான் மட்டும்தான் யாருமில்லாத கடையில் டீ ஆற்றும் மனநிலையில் இருந்தேன். லக்கிலுக் மற்றும் அதிஷா சிறிது நேரம் கழித்து வந்தனர், அதில் அதிஷா உடனேயே சென்று விட்டார்.

பலரும் கேட்டனர், பதிவு எப்போது வரும் என. அவர்களிடமும் நான் பிடி கொடுத்து எதுவும் கூறவில்லை. ஏனெனில் நான் சொன்னது போல பதிவர் சந்திப்பு என்ற ஒரு விஷயம் சீரியசாக நடக்கவே இல்லை. இருப்பினும் வீட்டுக்கு வந்து ரிகார்டுக்காக ஒரு பதிவு போட்டு அதற்குள் கும்மி எனக்கு அனுப்பியிருந்த படங்களையும் போட்டேன். அது ராஜன் அவர்களது பகுத்தறிவு எண்ணங்கள் சம்பந்தமாக பல பின்னூட்டங்களுக்கு இடம் கொடுக்கவே எனது தன்னிலை விளக்கத்தையும் பின்வருமாறு தந்தேன்.

ராஜன் சம்பந்தமான பகுத்தறிவு கேள்விகளை கமெண்ட் ஏதும் இல்லாமல் விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஏனெனில் நான் மண்டபத்திற்கு சென்றதுமே சம்பிரதாயத் திருமணம்தான் அது என்பதை உணர்ந்து கொண்டேன். வால்பையன் மற்றும் ராஜன் எனக்கு நண்பர்கள், ஆகவே நான் அவர்களை இது சம்பந்தமாக தோண்டித் துருவி கேள்விகள் எல்லாம் கேட்கவில்லை.

வால்பையனுக்கு ஃபோன் போட்டு கேட்டதற்கு அவர் அடுத்த நாள் திருமண முகூர்த்தம் சமயத்தில் ஐயரால், ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திர உச்சாடனங்களுடன், எல்லா சம்பிரதாயங்களுடனும் நடந்ததை உறுதி செய்தார்.

ராஜனின் தாய் தந்தை இப்போது உயிருடன் இல்லை. மணமகள் அவரது பெற்றோருக்கு ஒரே பெண். இது காதல் திருமணம். பெண்ணின் தந்தையின் விருப்பத்துக்கு ராஜன் மதிப்பளித்தார் என்பதுதான் நிஜம்.

ராஜன் பெரியவர்களது விருப்பத்துக்கு பணிந்து போனது எனக்கு பிடித்தது. அவ்வளவே. அவர் வயதில் மிகவும் சிறியவர். மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார். அவருக்கும் அவர் மனைவிக்கும் என் ஆசிகள்.


பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நான் அந்த கமெண்டுகளை மாடரேட் செய்து தடுத்திருக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார். அதை நான் ஏற்பதற்கில்லை. தனது நம்பிக்கைகளை, நாத்திகக் கொள்கைகளை இவ்வளவு வெளிப்படையாக, முக தாட்சண்யம் பார்க்காமல் பல தளங்களில் பேசி வருபவர், தானும் சமயம் வந்தால் அம்மாதிரி சங்கடமான கேள்விகளை எதிர்க்கொள்ள வேண்டும்தானே. அவர்கள் என்ன சிறு குழந்தைகளா? அதை அவரோ வால்பையனோ என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதே நிஜம்.

ராஜன் திருமணம் நடந்த மண்டபம் சிந்தாதிரிப் பேட்டையில் உள்ளது. நகரின் எல்லா பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களும் அருகில் உள்ள அண்ணாசாலையிலிருந்தே கிடைக்கும். அந்த மண்டபத்தின் வாடகை எவ்வளவு என அவரிடம் கேட்டதற்கு அவர் அதெல்லாம் பெண் வீட்டார் ஏற்பாடு, தனக்குத் தெரியாது எனக்கூறிவிட்டார். சற்றே அதிர்ந்து போனேன். காதல் திருமணம் புரிபவர் திருமணச்செலவில் பாதியை ஏற்பதுதானே சரியாக இருக்கும்?

அடுத்த நாள் வால்பையனிடம் இது பற்றி போனில் கேட்டபோது, அவர் திருமணச்செலவை இரு தரப்பினரும் சரி பாதியாக பங்கேற்பதையும் உறுதி செய்தார். நான் கேட்ட நேரத்தில் ராஜனுக்கு அந்த வாடகை எவ்வளவு எனத் தெரிந்திருக்காது இருந்திருக்கலாம். இன்னேரத்துக்கு அதை அறிந்து, அச்செலவையும், மற்றச் செலவுகளையும் இரு தரப்பினரும் சரிசமமாகவே பங்கேற்றிருப்பார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஆனால் எல்லோருமே ராஜன் மாதிரி இருப்பதில்லையே. காதல் என்றெல்லாம் அமர்க்களப்படும். கிட்டிமுட்டி திருமணப் பேச்சு என்று வந்ததும் மாப்பிள்ளைப் பையன் சமர்த்தாக தன் பெற்றோருக்கு அப்போது மட்டும் அடங்கிய பிள்ளையாகப் போய் விடுவான். பிள்ளைவீட்டார் விடாது பட்டியல் போடுவார்கள். அது இங்கு நடக்கவில்லை என நம்புகிறேன்.

பை தி வே, சம்பிரதாய திருமணத்தில் தாலி கட்டினால் மட்டும் போதாது, சப்தபதி சடங்கும் நடந்திருக்க வேண்டும். அந்த மந்திரங்களை அவதானித்தால் பலர் ஆச்சரியப்படுவது திண்ணம்.
அதை இங்கே தருகிறேன்.

மணமகன் மணமகளிடம் சொல்வது:
ஸகா! சப்தபதா! பவ ஸாக்யோவ்! சப்தபதா! பாபூவா!
என்னுடன் ஏழு அடிகள் எடுத்து வைத்து நீ என் சிறந்த தோழி ஆவாய்.

ஸக்யம் தே கமே யம் ஸக்யாத் தே மாயோஷம் ஸகயன் மே!
நாம் இணைவது தெய்வத்தின் ஆணையாகக் கருதுவதால், இந்த பந்தத்தில் இருந்து நான் என்றும் விடுபடமாட்டேன்.

மாயோஷ்ட சமயாவ சமயாவ சங்கல்பாவஹை சம்ப்ரியோவ்
அன்போடும் பாசத்தோடும் இணைந்து நாம் எல்லாச் செயல்களையும் இணைந்தே செய்வோம்

ரோசிஷ்ணு சுமனஸ்யமநோவ் இஷாமூர்ஜம் அபி ஸ்வசாநோவ்
நாம் எண்ணத்தாலும் செயலாலும் நண்பர்களாக இருப்போம். நம் கடமைகளையும் கர்மாக்களையும் இணைந்தே செய்வோம்

மனக்ஹும்சி சம்வ்ரதாஸ் ஸ்மு சித்தானி ஆகாரம் சத்வமாசி
நீ பாடல் எனில் நான் இசையாக இருக்கிறேன், நீ இசை எனில் நான் பாடலாக இருக்கிறேன்.

அமூஹம் அமூஹமாஸ்மி ஸா த்வம் த்யோவ்றஹம்
நான் ஆகாசமாக இருக்கிறேன் நீ பூமியாக இருக்கிறாய்

பருத்திவீ தவம் ரேதோ அஹம் ரேதோ பிருத்வம் மனோஹமஸ்மி
நான் செயலின் ஆதாரமாக இருக்கிறேன் நீ செலுத்தும் ஆற்றலாக இருக்கிறாய்

வாக் தவம் ஸாமா ஹம் அஸ்மி ருக்த்வம் சாமாம்
நான் எண்ணங்களாக இருக்கிறேன் நீ அதைச் சொல்லும் வாக்காக இருக்கிறாய்

அனுவ்ரதா பாவ பும்சே பும்சே புத்ராய வேத்தவை
நீ வார்த்தைகளாக இருக்கிறாய் நான் அதன் பொருளாக (அர்த்தம்) இருக்கிறேன்

ஸ்ரீயை புத்ராய வேத்தவை ஏஹி ஸூந்ரூரூதே||
நீ உன் அன்பான வார்த்தைகளால் என் வாழ்நாட்களை நிரப்பு, என் ஆற்றலாய் இருந்து நம் வாழ்வை மகிழ்ச்சியால் செழிக்கச் செய்வாயாக, நம் குடும்பம் குழந்தைகளால் செழித்து வளர உதவுவாயாக.
============================================
மணமகள் மணமகனிடம் சொல்வது:
முதலடி: ஏகமிஷே விஷ்ணுத்வ அன்வேது
தெய்வ சாட்சியாக எடுத்து வைக்கும் முதல் அடி

இரண்டாவதடி: த்வே ஊர்ஜ்வே விஷ்ணுத்வ அன்வேது
உனக்கும் நம் சந்ததிகளுக்கும் அளவில்லாத உணவுகளைக் கொடுக்க கடமைப்படுகிறேன். உனக்கு அளவில்லாத ஆற்றலும் ஆரோக்கியமும் அளிக்க உறுதிகொள்கிறேன்

மூன்றாமடி: த்ரீணீ வ்ருத்தவ விஷ்ணுத்வ அன்வேது
வேதங்களில் சொன்னபடி உன் வாழ்நாள் முழுதும் உன் கடமைகளை பூர்த்தி செய்ய நான் துணையிருக்க கடமைப்படுகிறேன். உன் விரதங்களை(கடமை) அனுஷ்டிக்க துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்

நாலாமடி: சத்வாரி மாயோ விஷ்ணுத்வ அன்வேது
நீ வாழ்நாள் முழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய கடமைப்படுகிறேன்.உனக்கு மகிழ்ச்சியைத் தருவேனென உறுதிகொள்கிறேன்

ஐந்தாமடி: பஞ்ச பசுப்ய: விஷ்ணுத்வ அன்வேது
நீ உன் வீட்டில் வளர்க்கும் செல்லபிராணிகளுக்கும், பசுக்களுக்கும், பயிர்களுக்கும் பாதுகாப்பாயிருந்து அவை பெருகி வளம் கொழிக்கச் செய்யவும் துணையிருக்க கடமைப்படுகிறேன். நீ பராமரிக்கும் செல்லப்பிராணிகள், பசுக்கள் போன்றவை பெருகத் துணையிருப்பேனென உறுதிகொள்கிறேன்.

ஆறாமடி: சத்ரு துப்யா: விஷ்ணுத்வ அன்வேது
மழை வெயில் பனி போன்ற எல்லா காலங்களிலும் நீயும் நம் சந்ததியினரும் பாதுகாப்பாக இருக்கத் துணையிருக்க கடமைப்படுகிறேன்.உனக்கு துன்பம் வராமல், எல்லா காலங்களிலும் காப்பேன் என உறுதிகொள்கிறேன்.

ஏழாமடி: சப்த சப்தப்யா: விஷ்ணுத்வ அன்வேது
அக்னி வளர்த்து நீ செய்யும் செயல்கள் வெற்றிபெற துணையிருக்கவும், உனக்கு இடைஞ்சல்கள், தீங்கு நேராமல் காக்கும்படி கடமைப்படுகிறேன்.நீ அக்னி வளர்த்து செய்யும் செயல்கள் எல்லாவற்றிற்கும் இடைஞ்சலில்லாமல் பார்த்துக் கொள்வேன் என உறுதிகொள்கிறேன்.
========================================
இருவரும் சொல்வது
========================================

ஓம் ஏகோ விஷ்ணுஜர்கத்ஸ்வரம், வ்யாஸம் யேன சராசரம்! ஹ்ருதயே யஸ்ததோ யஸ்ய! தஸ்ய ஸாக்ஷி ப்ரதீயதாம்!

மணமகன் சொல்வது: என் இணையே! நம் ஹ்ருதயபூர்வ அன்பினால் இணைந்து இந்த முதல் காலடி எடுத்து வைக்கிறோம். நீ நம் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகளைச் சமைப்பாயாக. என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் உன் துணையையும் வேண்டுகிறேன். நீ நம் குடும்ப மேன்மைக்கு உதவியாய் இருப்பாயாக. நீயும் நம் சந்ததிகளும் மகிழ்வுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிய செல்வ-நலன்களுக்காக உழைத்து உங்களைப் பேணுவேன் என்று உறுதி கூறுகிறேன். நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் இஷ ஏகபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயுது புத்ரான் வின்தாவஹை! பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்டய:

மணமகள் சொல்வது: உன்னிடம் நானும் அன்பினால் பணிந்து இணைகிறேன். நீ உன் வீட்டின் பொறுப்புக்கள் அனைத்தையும் என்னிடம் அளித்துவிடு. உனக்கான உணவை நானே தருகிறேன். நீ நம் குடும்பத்திற்காக ஈட்டிவரும் செல்வங்களை பேணி வளர்த்து செழிக்கச் செய்கிறேன் என்று உறுதி கூறுகிறேன். நம் குழந்தைகளும் நாமும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்க பார்த்துக்கொள்ளும்படி நீ என்னைப் பேணுவாயாக.

ஓம் ஜீவாத்மா பரமாத்மா ச, ப்ருத்வி ஆகாஷமேவ ச! சூர்யசந்த்ரத்வயேமர்த்தயே, தஸ்ய சாக்ஷி ப்ரதீயதாம்!!

அன்பே! ஜீவனும் ஆத்மாவும் போல என்னில் இரண்டரக் கலந்த நீ, என்னோடு இரண்டாமடி எடுத்து வைத்து விட்டாய். பூமி ஆகாசத்தை நிரப்பி, ஆகாசத்தின் இருப்பைக் குறிப்பது போல, என் இதயத்தை உன் அன்பின் ஆற்றலால் நிரப்பி உறுதியாக்கு. உன் மகிழ்ச்சியாலேயே என் இதயம் உறுதியாகும்.அப்போதுதான் நானும் மகிழ்ந்திருப்பேன். நாம் இணைந்து நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவாயாக.

ஓம் ஊர்ஜே த்விபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

என் அன்பே! நீ துக்கமடைந்திருக்கும்போது, உன் இதயத்தை என் அன்பின் ஆற்றலால் நிரப்புவேன். நீ சந்தோஷமாயிருக்கும்போது நானும் மகிழ்ந்திருப்பேன். உன்னை என் அன்பான வார்த்தைகளால் மகிழ்வுறச் செய்வேன் என்று உறுதிகொள்கிறேன். நம் குடும்பத்தையும் குழந்தைகளையும் உன் மனைவியாக உன்னோடு இணைந்து காப்பேன் என்று உறுதிகூறுகிறேன்.

ஒம் த்ரிகுணாஷ்ச த்ரிதேவாஷ்ச, த்ரிசக்தி: சத்பராயண:!! லோகத்ரயே த்ரிஸந்த்யாயா: தஸ்ய ஸாக்ஷீ ப்ரதீயதாம்!

அன்பே! இப்போது என்னோடு மூன்றடிகள் நடந்துவிட்டாய். மங்களங்கள் நிறைந்த உன் கரங்களைப் பற்றிய எனக்கு இந்தப் புண்ணியத்தால் செல்வச் செழிப்பு நிறைந்து வளம் பெருகப்போகிறது. இன்றிலிருந்து உன்னைத் தவிர மற்ற பெண்கள் அனைவருமே என் தாய்கும் சகோதரிக்கும் ஒப்பாகக் கருதுவேன். நம் குழந்தைகளுக்கு கல்விச்செல்வத்தை நாம் இணைந்து அளிக்கலாம் கல்வி செல்வம் பெருகி அவர்கள் நீடூழி வாழட்டும்.

ஓம் ராயஸ்போஷாய த்ரிபதீ பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வானயு புத்ரான் வின்தாவஹை, பஹூம்ஸ்தே ஸந்து ஜரதஷ்ட்ய:!!

அன்பே! என் ஹ்ருதயபூர்வமாய் உன்னை விரும்புகிறேன், என் கணவனாக வரித்து உன் நலனையே குறித்திருப்பேன். மற்ற ஆண்கள் அனைவருமே என் தந்தைக்கும் சகோதரனுக்கும் ஒப்பாகக் கருதுவேன். நீயே என் மகிழ்ச்சியாக இருக்கிறாய்.

ஓம் சதுர்முகஸ்த்தோ ப்ரம்மா, சத்வாரோ வேதஸம்பவா: சதுர்யுகா: ப்ரவதந்த்ரே தேஷாம் சாக்ஷீ ப்ரதீயதாம்!!

அன்பே! என் பூர்வபுண்ணியங்களின் பலனாகவே உன்னோடு இந்த நான்காம் அடி எடுத்து வைக்கிறேன். என் வாழ்வில் சர்வமங்களங்கள் உன்னோடு வருகின்றது. நீ எனக்கு கர்மாக்கள் செய்யும் தகுதியுடைய புண்ணியத்தை தருகிறாய். நமக்கு செரிந்த அறிவும், பணிவும், மேன்மையும் கூடிய மக்கட்செல்வம் உண்டாகட்டும். அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துவோம்.

மாயோ பவாய சதுஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

உன் வாழ்க்கை புஷ்பங்களிலிருந்து வீசும் நறுமணம் போல மணம் வீசட்டும். மணமாலையில் கோர்க்கப்பட்ட பூக்கள் போல உன்னோடு இணைந்தும், குழைத்து வைத்த சந்தனத்தினைப் போல உன் அன்பால் நெகிழ்ந்தும் இருக்கிறேன்.

ஓம் பஞ்ச்சமே பஞ்ச்சபூதானாம், பஞ்ச்சப்ராணை: பராயணா:! தத்ர தர்ஷணிபுண்யானாம் சாக்ஷிண: ப்ராணபஞ்சதா:

அன்பே, இப்போது என்னோடு ஐந்தாம் அடியையும் எடுத்து வைத்து என் வாழ்வை சிறப்பானதாக்கினாய், அர்த்தமுள்ளதாக்கினாய். உனக்கு தெய்வத்தின் அருள் என்றும் இருக்கட்டும். நம் சந்ததிகள் நீடூழி வாழட்டும்.

ஓம் ப்ரஜாப்யாம் பஞ்சபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே நான் உனது துக்கங்களிலும் சந்தோஷங்களிலும் பங்கு கொள்கிறேன். உன் அளவில்லாத அன்பு கண்டு உன் மீது மதிப்பும் நம்பிக்கையும் கூடுகிறது. இந்த அன்பைப் பெற நான் எதுவும் செய்வேன்.

ஓம் ஷஷ்டே து ஷட்க்ருதூணாம் ச, ஷண்முக: ஸ்வாமிகார்த்திக: ! ஷட்ரஸா யத்ர ஜாயந்தே, கார்த்திகேயாஷ்ச சாக்ஷிண:!!

அன்பே! ஆறாம் அடியெடுத்து என்னோடு நடந்து என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பினாய். நம் பந்தத்தால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் விளையட்டும்.

க்ருதுப்ய: ஷட்ஷ்பதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! நீ தர்மானுஷட்டான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நானும் அதில் பங்கேற்று உனக்கு துணையாயிருப்பேன். நம் குடும்பத்திற்கு தேவையான செல்வச் செழிப்புக்களை மிகுதியாக்க துணையிருப்பேன். தெய்வ காரியங்களிலும், நம் மகிழ்ச்சிக்காக நீ செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் எப்போதும் துணையிருப்பேன்.

ஓம் சப்தமே ஸாகராஷ்சைவ ஸப்ததீபா: ஸபவர்த்தா:! ஏஷாம் ஸப்தஷிர்பதநீநாம் தேஷாமாதஷர்சாக்ஷிண:!!

அன்பே! இந்த ஏழாம் அடியோடு நம் பந்தம் பிரிக்கவியலாததாக பிணைந்தது. நம் அன்பும் நட்பும் தெய்வீகமானது. தெய்வமே ஏற்படுத்திய பந்தம்தான் இது. நீ முழுமையாக எனதானாய், நான் முழுமையாக உனதானேன். என் வாழ்க்கையை உன் கையில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை போகும் திசையை நீயே தீர்மானிப்பாயாக.

ஸகே சப்தபதி பவ ஸா மாமனுவ்ரதா பவ! விஷ்ணுஸ்த்வாநயது புத்ரான் வின்தாவஹை பஹூம்ஸதே ஸந்து ஜரதஷ்டய:!!

அன்பே! தெய்வத்தின் ஆணையாலும், புண்ணிய புத்தகங்களான வேதங்களில் குறித்த வண்ணமும் கர்மங்களைச் செய்து நாம் இணைந்தோம். நான் உனது மனைவியானேன். நாம் செய்த சத்தியப் பிரமாணங்கள் அனைத்துமே மனதால் செய்தவை. நாம் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்போம். இந்தத் திருமணம் நம் வாழ்நாள் முடியும் வரை நீடித்திருக்கட்டும்.


ஓக்கே ராஜன், திருமண மண்டபத்துக்கு வாடகை எவ்வளவு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/25/2010

தபால்காரர்கள், மறைந்து வரும் ஒரு பிரிவினர்

இன்றைய அவசர உலகில் தபால்காரர்கள் கிட்டத்தட்ட பார்க்க முடியாத உயிரினங்கள் ஆகிவிட்டனர் என்பது விசனத்துக்குரியதே. அதுவும் கிராமங்களில் அவர்களது வரவை எதிர்பார்க்கும் மக்களின் மகிழ்ச்சி எல்லாமே பழங்கதையாகப் போய் விட்டன.

மற்ற நாடுகள் பற்றித் தெரியாது, ஆனால் இந்தியாவில் மொழி பேதமின்றி எல்லா ஊர்களிலும் அவர்களது சேவை போற்றப்பட்டதெல்லாம் இப்போது கனவு போலத்தான் இருக்கிறது. (குறைந்த பட்சம் சென்னை போன்ற பெரிய நகரங்களில்).

முதலில் பல்கோன் கீ சாவோன் மே (இமைகளின் நிழலில்) என்னும் ஹிந்திப் படத்தில் இந்தக் காட்சியில் ராஜேஷ் கன்னா தபால்காரனாக வந்து அமர்க்களப்படுத்துவதை கீழே உள்ள வீடியோவில் கண்டு களியுங்கள். இப்படம் சமீபத்தில் 1977-ல் வெளி வந்தது.



தமிழில் கிட்டத்தட்ட அதே மூடில் ஒரு பாட்டு, சமீபத்தில் 1966-ல் வெளி வந்த கௌரி கல்யாணம் என்னும் படத்தில் ஜெயசங்கர், “ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது” எனப் பாடிக்கொண்டே உலா வருகிறார் தன் சைக்கிளில். அப்பாடலின் வீடியோ கிடைக்க மாட்டேன் என்கிறது, பாடல் வரிகளையாவது பார்ப்போம், ஆக்கம் கண்ணதாசன்.

ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது,- வாழ்வை
இணைக்கும் பாலம் இது !
தாயைப் பிரிந்த பிள்ளை என்றாலும்,
தாரம் பிரிந்த கணவன் என்றாலும்,
உடன் பிறந்தோரின் பிரிவென்ற போதும்
பிரிவுத் துயரை பேசிடும் கடிதம் ! ( ஒருவர் )

காலம் என்னும் தெய்வமகள்
கலங்க வைப்பாள் - சிரிக்க வைப்பாள் !
எந்த்ந்த முறையில் என்ன என்ன கதையோ,
எந்தெந்த முகத்தில் என்ன என்ன வருமோ ,
சுகமும் வரலாம் , துன்பமும் வரலாம்,
இறைவன் அருளால் நலமே வருக ! ( ஒருவர் )

கன்னியரே காலம் வரும் ,
காதலரின் தூது வரும் !
பிள்ளை அனுப்பும் வெள்ளிப் பணம் நூறு,
அன்னை முகத்தில் ஆனந்தம் பாரு !
மகனை நினைத்து மயங்கும் மனமே,
விரைவில் வருவான் முருகன் அருள்வான் ! ( ஒருவர் )

அதன் வீடியோ எப்படி இருக்கும்? அதை அறிய மேலே உள்ள ஹிந்திப்பட வீடியோவையே பார்த்தால் போதுமானது. ராஜேஷ் கன்னா இடத்தில் ஜெயசங்கரை கற்பனை செய்து கொள்ளலாம். அப்படியே பொருந்தும்.

போகிற போக்கில் மால்குடி தினங்கள் புகழ் ஆர்.கே. நாராயணனது கற்பனை எப்படி என்பதை இந்த வீடியோவில் பாருங்களேன். தபால்காரர் எவ்வாறு கிராம மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுகிறார் என்பதை மனதைக் கொள்ளை கொள்ளூம் முறையில் ஆர்.கே.என். சித்தரிக்கிறார்.




மனித மனங்களின் சலனங்கள், ஆசாபாசங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள மொழியும் ஒரு தடையாகுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் சேர்க்கை: கௌரி கல்யாணம் பாட்டின் வீடியோ இங்கே.

Yes Minister & Yes Prime Minister - திரைக்குப் பின்னால் நடந்த விஷயங்கள்

டோண்டு ராகவனுக்கு யெஸ் மினிஸ்டர் மற்றும் யெஸ் பிரைம் மினிஸ்டர் பிடிக்கும் என்னும் உண்மையை டைம் வார இதழிலேயே போடுவார்கள் என்றால் மிகையாகாது.

எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 24.10.2010 பதிவில் வந்த வீடியோவை மீண்டும் இப்போது போட்டதில் இந்த அருமையான வீடியோவை எம்பெட் செய்ய முடிந்தது. முதலில் அதை கீழே பார்க்கவும்.


ஆனானப்பட்ட மார்கரெட் தாட்சரே அதில் உள்ளே நுழைய ஆசைப்பட்டுள்ளார். அவரையும் எப்படி சமாளித்தார்கள் என்பதையும் அந்த வீடியோ அழகாகக் காட்டுகிறது.

இசுலாமியர்கள் அளித்த ஒரு பார்ட்டியில் மதுவகைகள் கிடைக்காது என்பதற்காக பிரிட்டிஷ் தூதுக்குழுவினர் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை காட்டும் எபிசோட் நிஜமாகவே நடந்த நிகழ்ச்சி எனக்கூறி நம்மையெல்க்லாம் அசர வைக்கிறார்கள்.

சீரியல் ஆரம்பிக்கும் சமயத்தில் பிரிட்டனில் பொது தேர்தல் நடக்கவிருந்தது (சமீபத்தில் 1979-ல்). அப்போது சீரியலை வெளியிட்டால் அரசியல் பிரச்சினைகள் வரலாம் என்பதால் அதை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இது போன்று பல சுவாரசியமான தகவல்கள் வந்துள்ளன இந்த வீடியோவில்.

போகிற போக்கில் இந்த வீடியோ க்ளிப்பிங்கையும் பார்க்கவும், ஹாக்கர் வெற்றி பெறும் மிககுறைந்த தருணங்களில் இது முக்கிய இடத்தை வகிக்கிறது என டோண்டு ராகவன் கூறுகிறான். அதில் இஸ்ரவேலர்களின் பங்கு கணிசமாக உள்ளது என்பதை போகிற போக்கில் ஒரு தகவலாக சொல்கிறேன்.


அதானே இஸ்ரேல் வருது இல்ல இந்த எபிசோடுல, டோண்டு ராகவனுக்கு பிடிக்காம இருக்குமா எனக்கூறும் முரளி மனோகரை நான் மறுத்துப் பேச மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/24/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 24.10.2010

ஆனால் ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தர்
ஜூலியஸ் சீசரை ப்ரூட்டஸ் கூட்டாளிகள் கொன்றாயிற்று. “நீயுமா ப்ரூட்டஸ்” என நொந்த வண்ணம் சீசரும் பிராணனை விட்டாயிற்று. பிறகு மக்களுடன் ப்ரூட்டஸ் பேசி, தன்னிலை விளக்கம் கொடுத்தாயிற்று.

ஆனால் பின்னால் வரும் ஆண்டனி வேறொரு பிரசங்கம் ஆற்றி, மக்களை ப்ருட்டஸ் % கூட்டாளிகளுக்கு எதிராக மாற்றுவான். அவ்வாறு செய்யும் போது, “ப்ரூட்டஸ் நெம்பவுமே நியாயஸ்தன்” என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவான். முதலில் சாதாரணமாக புகழ்ச்சியாகத் தோன்றும் இதே வாக்கியம் பிற்பாடு அதுவே குற்றச்சாட்டாக மாறும். ஷேக்ஸ்பியரின் மாஸ்டர்பீசான ஜூலியஸ் சீசர் நாடகத்தின் முக்கியத் தருணம் இது.

காங்கிரஸ் கூட்டங்களில் இம்மாதிரி பொடி வைத்து பேசுவதில் சத்தியமூர்த்தி தேர்ந்தவர். ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு வேட்பாளரை அவர் முதலில் மகானுபாவர் என சித்தரித்தார். பிறகு அந்த வேட்பாளருக்கு எதிராக ஒவ்வொரு விஷயமாகக் கூறி, “இப்படித்தான் அவர், அந்த மகானுபாவர்” எனக்கூறி முத்தாய்ப்பு வைப்பார். பிறகு ஒரு தருணத்தில், புது விஷயம் கூறி, “இப்படித்தான் அவர்...” எனக் கூறிக் கொண்டே சோடா எடுத்து குடிக்க, கூட்டத்தினர் “அந்த மகானுபாவர்” என முடிப்பார்கள்.

பால் எட்டிங்க்டன் நடித்த யெஸ் மினிஸ்டர் சீரியலில் வரும் ஒரு எபிசோடின் கடைசி காட்சி கீழே தரப்பட்டுள்ளது. அதில் பிபிசி-யை பயங்கரமாகவே கலாய்த்திருப்பார்கள். அதில் பிபிசியின் தலைவர் பிபிசி அரசால் கட்டுப்படுத்தப்படலாகாது எனக் கூறிக் கொண்டே உண்மையிலேயே மினிஸ்டரும் அவர் செக்ரட்டரியும் தரும் அழுத்தத்துக்கு பணிந்து போதல் மேலே சொன்ன ப்ரூட்டஸ்/சத்திய மூர்த்தி உதாரணங்களுக்கு இன்னொரு எடுத்துக் காட்டாகும். எஞ்சாய்!



குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜகாவின் தொடர்ந்த வெற்றி மழை
இது சம்பந்தமாக நான் போட்ட முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
பிஜேபியை குறை கூறுவதையே வேலையாக வைத்திருக்கும் ஹிந்துவும் வேண்டாவெறுப்பாக இதை ஒத்துக் கொள்ள வேண்டி வந்தது. இம்முறை காங்கிரசாலும் ஓட்டுப் பதிவில் தில்லுமுல்லு என்ற பல்லவியைக் கூட பாட முடியவில்லை என ஹிண்டு மேலும் கூறுகிறது. இப்போ என்ன செய்யலாம்? இத்தாலிய சோனியா காந்திக்கு தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார் காங்கிரஸ் தலைவர் பட்டேல் அவர்கள். வேறு வழியில்லை அவருக்கு. தேர்தல் கமிஷனரே காங்கிரஸ் மாவட்ட கட்சித் தலைவர் ரேஞ்சுக்கு செயல்படும் சினோரியோவில் இந்தக் குற்றச்சாட்டை வெட்கமேயில்லாமல் முன்னால் வைக்க காங்கிரசால்தான் முடியும்.

தினத்தந்தியில் சிந்துபாத் கதை
அதற்கு முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். ஒரு தொழிலதிபர் ஒரு கூட்டத்தில் பேச வேண்டிய கட்டாயம். அவர் தனது செக்ரட்டரியிடம் தனது பேச்சை எழுதித் தரச் சொல்கிறார். ஐந்து நிமிடத்துக்கான பேச்சு என்று வேறு கூறுகிறார். அவ்வாறே பேச்சு எழுதப்பட்டு தரப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் தொழிலதிபர் தனது செக்ரட்டரியை கூப்பிட்டு திட்டுகிறார், “என்னய்யா சொதப்பிட்டே. ஐந்து நிமிடத்துக்கு உரை எழுதித் தரச்சொன்னால் 15 நிமிடத்துக்கான உரை எழுதினாய்” என்று. செக்ரட்டரி பணிவுடன் கூறுகிறார், “சார் நான் ஐந்து நிமிடத்துக்குத்தான் உரை எழுதினேன், அதை 1+2 என தட்டச்சிட்டேன், அதாவது ஒரு ஒரிஜினல், இரண்டு கார்பன் காப்பிகள். பியூன் தவறுதலாக எல்லாவற்றையும் சேர்த்து பின் போட்டு விட்டான் போல. நீங்கள் அந்த பேச்சை மூன்று முறை படித்து விட்டீர்கள்”.

இது வெறும் கற்பனை எனக் கூறுபவர்கள் மேலே படிக்கவும். சமீபத்தில் 1997-ஆம் ஆண்டு நான் தில்லியில் ஒரு வாடிக்கையாளர் அலுவலகத்தில் பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்காக சென்றேன். என்னிடம் ஒரு பெரிய கோப்பைத் தந்தார்கள் (காகிதக் கோப்பு, மென் கோப்பு அல்ல). நானும் அதை வேகமாக புரட்டிப் பார்த்து, எத்தனை பக்கங்கள் உள்ளன என்பதை துரிதமாக எண்ணி ஒரு டிபிகல் பக்கத்தில் எவ்வளவு வரிகள் என்பதெல்லாம் அவதானித்து, அது இரண்டு நாட்களுக்கான வேலை, கிட்டத்தட்ட 16 மணி நேரம் பிடிக்கும், எனது ஒரு மணிக்கான சேவை 375 என்னும் கணக்கில் 16 மணி நேரத்துக்கு 6000 ரூபாய்கள் பிடிக்கும் என்றேன்.

வாடிக்கையாளர் என்னிடம் மொத்தம் 3000 ரூபாய்தான் தருவேன், இஷ்டமிருந்தால் செய், முடிந்தால், சீக்கிரமே ஒரு நாளைக்குள்ளேயே அதை முடித்து பணம் பெறலாம் என்றும் அதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும் கூறினார். நானும் சரி எனக்கூறி அடுத்த நாள் அவரது அலுவலகம் சென்றேன். விறுவிறென பக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. மதியம் இரண்டு மணியளவில் உணவு கொடுத்தார்கள். அதன் பிறகு பக்கங்களை புரட்டினால் ஆரம்பப் பக்கமே மீண்டும் வந்தது. மேலும் சோதித்ததில் மொத்த கோப்பே அவ்வளவுத்தான். ஒரிஜினல் மற்றும் டூப்ளிகேட் இரண்டு என்னும் கணக்கில் எல்லாமே சேர்ந்து பைண்ட் செய்யப்பட்டிருந்தன.

இப்போதுதான் தமாஷ் ஆரம்பித்தது. இது பற்றி எந்த ஐடியாவும் இல்லாதிருந்த வாடிக்கையாளர் நான் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலையை முடிப்பேன் எனக் கேட்க, நான் புத்தர் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வேலை முடிந்தது எனக்கூறி நடந்ததை விளக்க, அவரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. ஆனால் என்ன செய்வது அவரே ஒத்துக் கொண்டபடி எனக்கு 3000 தர வேண்டியிருந்தது. இதை ஏன் நான் நேற்றே கூறவில்லை என அவர் கவுண்டமணி பாணியில் கேட்க, நான் செந்தில் மாதிரி, “அண்ணே நேற்றைக்கு நான் வெறுமனே பேப்பர்களைத்தான் எண்ணினேன், படித்துப் பார்க்க நேரமெல்லாம் இல்லை” என்று கூற அவ்ர் மேலும் மெர்சலானார்.

இதெல்லாம் இங்கே ஏன் பெரிசு என முரளி மனோகர் கேட்கிறான். அதுதான் கன்னித்தீவின் மகிமை. சில நாட்களுக்கு முன்னால் எதேச்சையாக பார்த்தேன். அதில் அரசகுமாரி லைலாவை முதலில் சிறையெடுப்பது காட்டப்படுகிறது. இந்தக் காட்சியை சமீபத்தில் 1960-லிருந்து பல முறை பார்த்த ஞாபகம் வேறு வந்தது. ஆகவே என்ன நடக்கிறதென்றால், அதே கதையை திரும்பத் திரும்பப் போடுகிறார்கள். வாசகர்கள் யார் பார்ப்பார்கள் என்ற தெனாவெட்டுதான், வேறென்ன?

நீங்களே நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்? பொறுமையாக படிப்பீர்களா அத்தொடரை. இருப்பினும் அது வருகிறது என்றால், தினத்தந்தி வாசகர்கள் தத்திகள்தான் என நிர்வாகமே நினைக்கிறது. உதாரணத்துக்கு ஒரு அத்தொடரில் நாளைக்கான வாசகங்கள்.

1. சிந்துபாத் நிமிர்ந்து பார்க்கிறான்.
2. மந்திரவாதி நிற்கிறான், சிரித்துக் கொண்டு.
3. ஆ, நீயா என்கிறான் சிந்துபாத்
(தொடரும்).

ஆகவே லைலா சிறைபிடிக்கப்படும் காட்சி திரும்பவும் வர கண்டிப்பாக 10 ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை எந்த வாசகர் தொடர்ச்சியாக படிப்பார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2010

சென்னை பதிவர் சந்திப்பு - 20.10.2010 - ராஜன் திருமண வரவேற்பு

சென்னை சிந்தாதிரி பேட்டை காமாட்சி மீனாட்சி மகாலில் 20.10.2010 மாலை 7 மணி அளவில் நடைபெறவிருக்கும் பதிவர் ராஜனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒரு பதிவர் சந்திப்பாகவும் மாற்றலாம் என வால்பையன் மற்றும் கே.ஆர்.பி. செந்தில் ஆகியோர் பதிவு போட்டிருந்தனர். நாமும் சரி, பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு வெகுநாட்களாயிற்றே என மனதில் வைத்து அதற்கு சென்றேன்.

ஏழு மணிக்கு ஆரம்பிக்க இருந்தது வரவேற்பு நிகழ்ச்சி. 6 மணிக்கே அங்கு சென்றால் பதிவர்களுடன் பேசலாம் என்ற என் எண்ணம் பொய்த்தது. நான் மண்டபத்துக்கு சென்றபோது பதிவர்கள் யாருமே இல்லை. வால் பையனுக்கு போன் போட்டு கேட்டால் அவர் எல்லிஸ் ரோடில் ரூம் போட்டிருப்பதாகவும், பலர் அங்கு வந்திருப்பதாகவும் கூறினார். நான் அவரிடம் கண்டிப்பாகக் கூறினேன், எல்லோரையும் அழைத்துக் கொண்டு உடனே வருமாறு. நல்ல வேளையாக கையில் ஹாரி பாட்டர் நாவல் இருந்ததோ பிழைத்தேனோ. சற்று நேரம் கழித்து அதிஷாவும் லக்கிலுக்கும் வந்தனர். கல்யாண மாப்பிள்ளை ராஜனும் வந்து எங்களுடன் சிறிது நேரம் பேசினார்.

லக்கிலுக்கிடம் நான் எனது எந்திரன் பதிவில் கேட்ட சந்தேகத்தை அவரிடமும் கேட்டேன். அதாவது, “என் மனதுக்கு ரொம்ப நாட்களாகவே ரொம்பப் புதிராக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வேலன் மற்றும் வெற்றிவேலில் ஹவுஸ்ஃபுல் ஆவதை விடுங்கள். ஒரு ஷோவுக்கு சமயத்தில் 20 பேர் கூடத் தேறுவதில்லை. அதெப்படி அவற்றை நடத்துவது கட்டுப்படியாகிறது? அந்த காம்ப்ளெக்ஸின் முதலாளியிடம் 7 தியேட்டர்கள் மேல் இருக்கின்றனவாம். மனிதர் எப்படி சமாளிக்கிறார்”?

அவரும் தியேட்டர்களது உண்மை நிலவரத்தைக் கூறினார். சென்னையில் கணிசமான அளவில் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அது முழுவது க்ஷீணிக்காமல் இருக்கவே பல வரிகள் நீக்கப்பட்டன. டிக்கெட்டு விலைகளையும் மார்க்கெட் நிலவரம் போல முதல் ஓரிரு வாரங்களுக்கு வைக்க அனுமதி தரப்பட்டது போன்ற விஷயங்களை விளக்கினார்.

மண்டபத்தின் உள்ளே மெல்லிச்சை கச்சேரி ரொம்ப சவுண்டாக இருந்ததால், எல்லோரும் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தோம். வரும் 2011 தேர்தலில் திமுகவுக்கு தனியாகவே சாதாரண பெரும்பான்மை கிட்டும் என லக்கிலுக் ப்ரெடிக்ட் செய்தார். பிறகு மற்ற பதிவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அப்துல்லா, பலாபட்டறை சங்கர், உண்மை தமிழன், கும்மி, சிரிப்பு போலீஸ் ரமேஷ், ஜாக்கி சேகர், மங்குனி அமைச்சர் ஆகியோர் வந்து சில நேரம் கழித்து வால் பையன் வந்தார். பேசிக் கொண்டே இருந்ததில் மணி ஏழரையைத் தாண்ட, எல்லோரும் மறுபடி உள்ளே சென்றோம்.

மணமக்களுக்கு வாழ்த்துக் கூறுவதற்காக பலர் வரிசையில் நின்றனர். அவர்களிடையே ருத்திரனும் இருந்தார். அவரிடம் சென்று பேசினேன். பதிவு பின்னூட்டங்களில் நான் அவருக்கு தெரிவித்த எதிர்ப்பை அவர் பெர்சனாக எடுக்கலாகாது எனக் கூறியதும் அவரும் அதை புன்னகையுடன் ஆமோதித்தார். அவருடன் அதை க்ளாரிஃபை செய்து கொண்டது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. எங்கள் இருவரையும் சேர்த்து கும்மி அவர்கள் போட்டோ எடுக்க அதை கண்டிப்பாக எனக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவரும் அதையும் மர்ற போட்டோக்களையும் மின்னஞ்சலில் அனுப்பினார். அவை கீழே.


(ருத்ரனுடன் நான்)


(இடமிருந்து வலம்: வால்பையன், ருத்ரன், மணமகள், ராஜன், நான்)



ருத்ரனிடம் அவர் டாக்டர் ஷாலினியுடன் சேர்ந்து மாடரேட் செய்த Good touch, bad touch விவாதத்தை நினைவு கூர்ந்து அதில் நான் வெறுமனே சுருக்கமாக கூறிய ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டேன். அதாவது பிறப்புறுப்பைத் தொடும்போது ஆண் குழந்தையானாலும் சரி, பெண் குழந்தையானாலும் சரி அதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். ஆகவே பாலியல் ரீதியாக தன்னைத் தொடுபவர்களை குழந்தையும் அனுமதிக்கிறது, வெளியிலும் சொல்வதில்லை. இம்மாதிரியான நிகழ்வுகள்தான் அதிக ஆபத்தை விளைவிக்கும். அதை குழந்தையின் பெற்றோர் உணர்ந்து குழந்தையுடன் பக்குவமாகப் பேசவேண்டும்.

இரவு விருந்து நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட 9 மணி வாக்கில் விடை பெற்று சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/19/2010

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மோடியின் அபார வெற்றி

மொத்தமுள்ள ஆறு நகராட்சிகள் உட்பட, 558 இடங்களுக்கு 2,100 பேர் போட்டியிட்டனர். இதில், பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், பவநகர் உள்ளிட்ட ஆறு நகராட்சிகளை பா.ஜ., கைப்பற்றியது. ஜாம்நகரில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மோடி அவர்கள் தன்னடக்கம் காரணமாக பாஜகவின் வெற்றி எனக்கூறினாலும் உண்மையில் இது மோடியின் தனிப்பட்ட வெற்றிதான்.

80 % வோட்டுகளுக்கு மேல் பெற்று, அவர் பல நகராட்சிகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றதில் குஜராத் இசுலாமியர்களின் பங்கும் உண்டு. பொறுக்குமா நம்மூர் ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு? இலவச டிவி இல்லை, இலவச வாயு இணைப்புகள் இல்லை, புடவைகள் வேட்டிகள் தானமாகத் தரப்பட்டதாகத் தெரியவில்லை. பின்னே இந்த மனிதரிடம் எந்த மந்திரக்கோல் உள்ளது என அவனவன் தலையைப் பிய்த்துக் கொள்வதாகக் கேள்வி.

சில வீடியோ காட்சிகள்:


மோடி விரோத என்டிடிவியில் காங்கிரஸ் தலைவரது புலம்பல் கீழே:


வெவ்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக பெற்ற வெற்றிகளின் விவரங்கள் இங்கே.



அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2010

செய்வினை, சூன்யம் வைத்தல் ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு ஒரு மரண அடி

பதிவர் வெங்கட் அவர்களின் பதிவுகளை படித்து ரொம்ப நாட்களாயிற்றே என அவற்றை ஸ்க்ரோல் செய்தபோது பில்லி சூனியம் போட்டி பற்றிய தொலைக்காட்சியின் விவரம் அடங்கிய இப்பதிவு கிடைத்தது.

அதிலிருந்து இந்த உரலுக்கும் சுட்டி கிடைத்தது.

வீடியோ வேண்டும் என்றால் தங்களுக்கு எழுதுமாறு மின்னஞ்சல் முகவரியும் தந்திருந்தார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று யூட்யூப்பில் முயற்சி செய்து இந்த வீடியோவை எம்பெட் செய்ய முடிந்தது. அதன் பிற பகுதிகளை சம்பந்தப்பட்ட வீடியோ பக்கத்திலிருந்தே செல்லலாம்.



பில்லி, சூனியம் எல்லாம் 99% ஏமாற்றுவேலைதான் என்பதை எத்தனை முறை சொன்னாலும் நம் ஜனங்கள் புரிந்து கொள்வதே இல்லை.

அதே போல கடவுளுக்கும் நமக்கும் இடையில் தேவையின்றி குருக்களை வரவிடுவதால் பிரச்சினைகள்தான் முளைக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளல் அவசியம். அதற்காக குரு என்பவரே வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் குருவைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். சித்து வேலைகள் செய்து பிரமிக்கச் செய்பவர்கள் ஒருபோதும் சரியான குருவாக ஆக முடியாது.

புட்டபர்த்தி சாய்பாபா கையில் விபூதி வரவழைக்கும் வித்தையை டி.சி. சர்க்கார் போன்ற பல மந்திரவாதிகள் செய்து காண்பித்தும் நம் மக்களின் அறியாமையை என்னவென்று சொல்வது. மக்களை விடுங்கள், பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த மந்திரிகளும் அவரிடமிருந்து மோதிரம் பெற போட்டி போட்டதை என்னவென்று கூறுவது?

சாயிபாபா சம்பந்தப்பட்ட வீடியோவை யூட்யூப்பில் அடையாளம் காட்டிய ரஹீம் கஸாலி அவர்களுக்கு நன்றி:



அன்புடன்,
டோண்டு ராகவன்

10/15/2010

எதையோ தேடினால் எதுவோ கிடைக்கிறது, அதுதான் வாழ்க்கை

இன்று குமுதம் சினேகிதி வந்தது. அதில் வழமையாக நான் படிக்கும், இந்திரா சவுந்தரராஜனின் “ரங்கநதி” தொடர்கதை காணவில்லை. சரி ஆசிரியருக்கு ஃபோன் போட்டுக் கேட்கலாம் என நினைத்தால், சினேகிதியில் தரப்பட்ட எண்ணில் யாருமே ஃபோனை எடுக்கவில்லை (ஒரு வேளை காலை 10 மணிக்கு அப்புறம்தான் வருவார்களோ). சரி கூகளிட்டு லோகநாயகி அவர்களின் வேறு எண் கிடைக்குமா எனப்பார்த்தால் அவருக்கும் குமுதம் தலைமை நிருபர் திருவேங்கிமலை சரவணனுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் எழுந்த பிரச்சினை பற்றிய கட்டுரை வந்தது.

அப்பிரச்சினை என்னவாயிற்று என்பதைப் பார்க்க திருவேங்கிமலை சரவணன் பற்றி கூகளிட்டால் வை.மு.கோதநாயகி அம்மாள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதியதை அவர் குமுதத்தில் எழுதியதை பதிவர் BSubra எழுதிய பதிவு கிடைத்தது.

சரி, கிடைத்தவரை லாபம். வை.மு.கோ. பற்றி எனது பதிவிலும் போடுகிறேன்.

நன்றி குமுதம் மற்றும் BSubra.

குமுதம்
மறக்க முடியாத மங்கைகள்
‘நாவல் அரசி’ வை மு கோதை நாயகி
திருவேங்கிமலை சரவணன்

அந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. காரணம் அவள் பள்ளிக்கூடம் பக்கமே போனதில்லை.

ஆனாலும் அவள் ஒரு கதை எழுதினாள். அதைப் படித்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் மயங்கிப் போனார்கள். படிப்பவர்களைக் கட்டிப்போடும் வசீகரம் அந்த எழுத்தில் இருந்ததைக் கண்டு எழுத்துலகமே பிரமித்தது. அவள் எழுதிய துப்பறியும் கதைகளைப் படித்து பெண்கள் அதிர்ந்தார்கள். அந்தப் பெண்ணின் பெயர் வை.மு.கோதைநாயகி.

எழுதப் படிக்கத் தெரியாத வை.மு.கோதைநாயகியால் எப்படி இப்படியரு நாவலை எழுத முடிந்தது?

இருபதாம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற பெண் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர் வை.மு.கோதைநாயகி. நமது இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், நாவலாசிரியர் சமூகநல ஊழியர், பத்திரிகை ஆசிரியர் இப்படி பல முகங்கள் வை.மு.கோதைநாயகிக்கு உண்டு. அவர் எழுதிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். எழுதியதைப் போலவே வாழ்ந்தும் காட்டியவர். பொதுவாழ்வில் மட்டுமல்லாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் கடைபிடித்தவர்.

செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூர்தான் கோதைநாயகியின் சொந்த ஊர். வெங்கடாச்சாரி_பட்டம்மாள் தம்பதியருக்கு 1.12.1901_ல் மகளாகப் பிறந்தவர். வைணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் சின்ன வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டவர்.

சிறுவயதிலே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலம். அதனால் ஐந்து வயதான கோதை நாயகியை ஒன்பது வயது சிறுவன் வை.மு.பார்த்தசாரதிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

சிறுவயதிலேயே மற்றவர்கள் ரசிக்கும் அளவிற்கு கதைகளைக் கூறும் திறன் கோதைநாயகிக்கு இருந்தது. மனைவியின் கதை சொல்லும் திறனைக் கண்ட கணவர் பார்த்தசாரதி, அவருக்கு புராணம், மந்திரங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆரம்ப காலத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பழைய கதைகளைச் சொல்லி வந்தார். இவர் கதை சொல்லும் அழகைக் கண்டு, பெரியவர்களும் வந்து உட்கார்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர்.

விக்கிரமாதித்தன் கதையிலிருந்து தெனாலிராமன் கதை வரை எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்துவிட்டார். குழந்தைகளுக்கு இனி புதிய புதிய கதைகளாக எதைச் சொல்வது என்று யோசித்து, அவராக கற்பனை செய்து, மிக அழகழகான கதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் இவருக்குக் கதை எழுதும் ஆசையே வந்தது.

பெண் என்பதால் பள்ளி செல்வது மறுக்கப்பட்ட காலம் அது. அதனால் கோதைநாயகி பள்ளிக்கூடம் போகவில்லை. அதனால் அவருக்கு எழுதப் படிக்கவும் தெரியாது.

ஆனால், வீட்டில் எப்போதும், திருவாய்மொழி, பாசுரங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவை அவரது மனத்தில் நீங்காமல் குடிகொண்டதால் தமிழ்நடை அவருக்கு சரளமாக வரத் தொடங்கியது. ஆனால் அவரால் எழுதமுடியாது. இவர் சொல்லச்சொல்ல எழுதச் சொன்னார். அப்படி அவர் சொல்லி பட்டம்மாள் எழுதி உருவானதுதான் ‘இந்திரமோகனா’ என்ற முதல் நாவல்.

கதை எழுதத் தொடங்கியதும் கோதைநாயகிக்குப் புதிது புதிதாக கதைகள் எழுதும் ஆற்றல் வரவேண்டும் என்பதற்காக, அவரது கணவர் கோதைநாயகியைப் பல நாடகங்களுக்கு அழைத்துச் சென்றார். பெண்கள் நாடகம் பார்க்க வராத காலமாக இருந்தும், துணிந்து மனைவியை நாடகங்களுக்கு அழைத்துப் போனார். அதன் விளைவு கோதைநாயகி தானே ஒரு நாடகத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டார். தன் தோழி பட்டமாளிடம் சொல்லச்சொல்லி, அந்த நாடகத்தை எழுதி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும் படிக்கவும் கற்கத் தொடங்கினார்.

அந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவது என்பது பலரால் ஜீரணிக்க முடியாத விஷயங்களாக இருந்தன. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணுக்கு இப்படிப்பட்ட அதிகப் பிரசிங்கித்தனமான வேலைகள் எதற்கு என்று பெண்களே எண்ணிய காலம் அது.

இந்த இரண்டு வேலைகளையும் கோதைநாயகி துணிந்து செய்தார். அதனால் அவர் தெருவில் நடந்து போகும்போது, அவர் மீது காறி உமிழ்ந்தவர்கள் ஏராளம். அதை கோதை நாயகி ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து எழுதினார்.

‘ஜகன்மோகினி’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பலர் பலத்த எதிர்ப்பு காட்டினர் என்றாலும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பத்திரிகைதான் நல்ல வழி என்று பின்வாங்க மறுத்தார்.

அவருக்குத் தெரிந்த பலரே ‘ஜெகன்மோகினி’ பத்திரிகையைக் கொளுத்தினர். இன்னும் சிலர் அவர் கண்ணெதிரிலேயே கொளுத்தி அவர்மீது வீசினர். இதைக் கண்டு கோதைநாயகி அஞ்சவில்லை. தைரியத்தோடு எதிர்கொண்டார். அதுதான் அவர் பிற்காலத்தில் செய்த சீர்திருத்தங்களுக்கு மூலகாரணமாக இருந்தது. ‘‘கொளுத்துவதற்காகவாவது என் பத்திரிகையை வாங்குகிறார்களே, அந்த வகையில் சந்தோசம்தான்’’ என்று சிரித்துக்கொண்டே மற்றவர்களிடம் சொன்னார்.

எழுத்துலகில் கோதைநாயகி பெற்ற பெரிய புகழைக் கண்டு பலர் பொறாமை கொண்டனர். ஆனால் சுத்தானந்த பாரதி அவரை ‘நாவல் ராணி’ என்று பாராட்டினார்.

தமிழ்நாட்டில் ‘ஜகன்மோகினி’ முன்னணிப் பத்திரிகைகளுள் ஒன்றாக முன்னேறியது. கோதை நாயகியின் பல நாவல்கள் ஜகன்மோகினி மூலம்தான் தமிழ் உலகம் பெற்றது. இந்து, முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசபக்தி, மதுவிலக்கு, விதவை திருமணம் ஆகியவற்றை நாவல்கள் மூலம் வலியுறுத்தி எழுதினார்.

தமிழ் நாவலின் தொடக்க காலத்தில்தான் கோதைநாயகி வாழ்ந்ததும் எழுதியதும். தனது படைப்புகளைப் படிப்பவர்கள் மனதைக் கொள்ளைகொள்ளும் வசீகரம் அவரது எழுத்தில் இருந்தது. ஒவ்வொரு நாவல்களும் ஒவ்வொருவிதமாக இருக்கும். அவர் எழுதிய 115 நாவல்களும் 1115 விதங்களில் இருந்தன. யாருக்கும் கைவராத இயல்பு இது.

கோதைநாயகியின் கதைகளை முதலில் வடுவூர் துரைசாமி ஐயங்கார் தமது ‘மனோரஞ்சனி’ இதழில் வெளியிட்டு ஊக்கம் தந்தார். 1925_ல் கோதைநாயகி பொறுப்பில் ‘ஜகன்மோகினி’ என்ற இதழ் வெளிவரத் தொடங்கியது. அதில் அவரது நாவல்கள் தொடர்ந்து பிரசுரமாக, அதன் சர்குலேஷன் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. சக்கைபோடுபோட்டு வடுவூரார் நடத்தி வந்த ‘மனேரஞ்சனி’ தேக்கநிலையை அடைந்து இதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘‘நான்தான் வை.மு. கோதை நாயகிக்காக வைதேகி நாவலை எழுதிக் கொடுத்தேன். இனிமேல் வைதேகி ஜகன்மோகினியில் தொடராது’’ என்று ‘மனோரஞ்சனி’யில் வடுவூரார் குறிப்பிட்டு இருந்தார். வாசகர்கள் இதை நம்பவில்லை. அதற்கு ஏற்றாற்போல் வைதேகி ஜகன்மோகினியில் தொடர்ந்து வந்து ஏராளமான வாசகர்களைப் பெற்றார் கோதை நாயகி.

அந்தக் காலத்தில் கோதை நாயகி மேடை ஏறினால், அவர் பேச்சைக் கேட்க மாபெரும் கூட்டம் கூடும். பேசும்போது இடையிடையே குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி கூட்டத்தை ஆடாமல் அசையாமல் உட்கார வைக்கும் திறன் அவரிடமிருந்தது.

கர்நாடாக இசையில் வை.மு.கோவுக்கு இருந்த ஆற்றல் அளவிடற்கரியது. அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. அவர் பாடியதோடு மட்டுமல்லாமல் பல இளம் இசைக்கலைஞர்களையும் ஊக்குவிக்கத் தொடங்கினார். அந்த வரிசையில் முதலிடம் பெற்றவர்தான் டி.கே. பட்டம்மாள்.

எழுத்துலகிலும் இசை உலகிலும் இந்தளவிற்கு ஒருசேரப் புகழ் பெற்றவர் யாருமே இல்லை.

ஒருமுறை வேலூரில் ராஜாஜி தலைமையில் பேசும் வாய்ப்பு கோதைக்குக் கிடைத்தது. ராஜாஜியை முதன்முதலாக அப்போதுதான் சந்திக்கிறார். மடைதிறந்த வெள்ளம் போல் அவர் பேசும்பேச்சைக் கேட்டு மயங்கியவர், ‘‘இனிமேல் நான் பேசும் இடங்களில் எல்லாம் நீயும் வந்து பேசு’’ என்று ராஜாஜி அன்பாக உத்தரவிட்டார். அதன்பிறகு ராஜாஜி பேசிய பின்னர் கோதை பேசுவது என்று பல இடங்களில் நடந்தேறியது.

1932_இல் ‘லோதியன் கமிஷன்’க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கோதையை வேலூர் சிறையில் அடைத்தார்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற முதல் பெண் எழுத்தாளர் இவர்தான். ஒரு எழுத்தாளர் என்ற முறையில் சிறையில் இருந்த காலத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒவ்வொரு கைதியையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட காரணங்களைக் கேட்டு அவற்றை நாவலாக எழுதத் தொடங்கினார். சிறைக்கைதிகளை வன்முறை பாதையிலிருந்து திசை திருப்பி காந்திய பாதைக்குக் கொண்டு செல்ல முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

சிறையில் இருந்தபோது எழுதிய நாவல்தான் ‘சோதனையின் கொடுமை’. ராஜாஜி இதைப் படித்துவிட்டுப் பாராட்டினார்.

லட்சக்கணக்கான வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த கோதையின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன.

ராஜமோஹன், தியாகக்கொடி, நளினசேகரன், சித்தி. போன்ற படங்கள் அவற்றில் சில.

திருமணத்திற்குப்பின் ‘நடிக்கமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது.

ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், 38 வயதிலேயே விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. இந்தத் துக்கத்தின் விளைவு மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது.

துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளர். 115 நாவல்களை எழுதி தமிழ் இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவர். மேடைப் பேச்சால் கூட்டம் கூட்டியவர். இசையால் பலரை கட்டிப் போட்டவர் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தத் தேசத்திற்கு சுதந்திரம் வேண்டி போராடி சிறை சென்ற தியாகி என்று பல சாதனைகள் அவர் பெயரை உச்சரிக்கச் செய்து கொண்டே இருக்கின்றன.


நன்றி :திருப்பூர் கிருஷ்ணன் கோதை நாகையின் இலக்கியப் பாதை

இப்போது டோண்டு ராகவன். மேலே உள்ள கட்டுரையில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பொறாமை பற்றியும் புது தகவல் ஒன்று கிடைத்தது. ஆனால் ஆச்சரியமாக இல்லை. தான் ஆதரவளித்த ஒரு நபர் தன்னையும் மீறி வளர்வது பலருக்கு பிடிக்கத்தான் இல்லை. அவர் எப்போதும் தன்னைவிட கீழான நிலையில்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களது வெளியிடப்படாத ஆசை என்றே தோன்றுகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். லோகநாயகி அளித்த புகாரின் ஸ்டேட்டஸ் இப்போது என்ன? யாருக்காவது தெரியுமா? தரிஞ்சா சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/14/2010

இந்த இசுலாமியர்களை நம்பவே முடியாது!!! - ஒரு மொக்கைப் பதிவு

இதைச் சொல்வது இந்திய அரசு.

முதலில் மத்தியப் பொதுப்பணித் துறை மற்றும் ஐ.டி.பி.எல்.-ல் வேலை செய்த போது ஒவ்வொரு ஆண்டு திசம்பர் மாதவாக்கில் அடுத்த ஆண்டுக்கான விடுமுறை லிஸ்டு வரும். அதை வைத்துக் கொண்டு எனது சக ஜூனியர் இஞ்சினியர் மீனாட்சி சுந்தரம் தான் அடுத்த ஆண்டு எடுக்க வேண்டிய ஏர்ண்ட் வீவுகளை வகை படுத்திகொள்வார். அவ்வப்போது அவரிடமிருந்து ஐயோ என்னும் சப்தம் எழும். அது முக்கால்வாசி இம்மாதிரியாக இருக்கும்.

அதைச் சொல்லும் முன்னால் லீவை ப்ரெஃபிக்ஸ்/சஃபிக்ஸ் செய்வது பற்றியும் குறிப்பிட வேண்டும். உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 1981 அக்டோபர் ஆறாம் தேதி ஐ.டி.பி.எல்-லில் சேருவதற்காக ஆஜர் ஆனபோது அன்றைய தினம் ரெஸ்ட்ரிக்டட் விடுமுறை. அடுத்து ஐந்து நாட்கள் விடுமுறை. சென்னையிலிருந்து தில்லிக்கு வந்ததும் அன்று காலைதான். நான் ஜாயினிங் ரிப்போர்ட் தந்தபோது அலுவலக அதிகாரி என்னிடம் அடுத்த ஐந்து நாட்கள் விடுமுறைகள், ஜாயின் செய்த தினமும் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் அலுவலகம் காலியாகத்தான் இருந்தது. ஆகவே நான் ஜாயின் செய்தவுடனேயே விடுமுறை வருவதால் நான் அதிர்ஷ்டம் செய்தவன் எனக் குறிப்பிட, அதிர்ஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை, நான் இதைத் தெரிந்து கொண்டதாலேயே அவசரம் அவசரமாக அன்றே ஜாயின் செய்தேன், என்ன இருந்தாலும் மத்தியப் பொதுப்பணித் துறையில் கொட்டை போட்டவனல்லவா என பணிவுடன் அவரிடம் கூறினேன்.

இதில் விஷயம் என்னவென்றால் நான் வேலைக்கு சேர்ந்த தினத்தையும் சேர்த்து ஆறு நாட்களை முதலில் ப்ரெஃபிக்ஸ் செய்து, பிறகு ஆறு நாட்கள் லீவ் எடுத்தால் கடைசியில் வரும் ஞாயிறையும் சஃபிக்ஸ் செய்தால் மொத்தம் 12 நாட்கள் லீவில் இருக்கலாம்.

இப்போது மீனாட்சி சுந்தரத்திடம் திரும்பச் செல்வோம். அவர் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். இரண்டாம் சனிக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக் கிழமை ஒரு இசுலாமிய புனித தினத்துக்காக விடுமுறை அறிவித்திருக்கிறார். வியாழன் மற்றும் புதன் கிழமைகள் ஹிந்துப் பண்டிகைகளுக்காக விடுமுறை. மனிதா பாவம் புதன், வியாழன், வெள்ளீ, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை சஃபிக்ஸோ அல்லது ப்ரெஃபிக்ஸோ ஒருவித நிச்சயத்தன்மையுடன் செய்ய இயலாத நிலை.

ஏன்? வெள்ளிக்கிழமையன்று குறிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு மேல் ஒரு நட்சத்திரக் குறியீடு கொடுத்திருப்பார்கள். கீழே அதற்கான அடிக்குறிப்பாக “இசுலாமிய பண்டிகைகள் சந்திரனின் குறிப்பிட்டப் பிறை தெரிவதை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அது ஒரு தினம் முந்தியோ அல்லது பிந்தியோ அரும் வாய்ப்பு உள்ளது” என்று குறிக்கப்பட்டிருக்கும். அதை வைத்துக் கொண்டுதான் மீனாட்சி சுந்தரம் புலம்புவார். “சே, இந்த முசல்மான்களை நம்பவே கூடாதப்பா” என்பார். அதையேதான் இந்திய அரசும் சற்றே நாசுக்காக சொல்கிறது என்பது அவர் துணிபு.

நானும் பல ஆண்டுகளாகப் பார்த்திருக்கிறேன். செவ்வாய், புதன், வியாழன்களில் இசுலாமிய விடுமுறைகள் குறிக்கப்பட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் திங்கள் அல்லது வெள்ளி என்றால் அவை முறையே ஞாயிறு அல்லது சனிக்கிழமைகளுக்கு மாறக்க்கூடாது என வேண்டிக் கொள்பவர்கள் மீனாட்சி சுந்தரனார்கள்.

இதை வங்கிகளும் கூறுகின்றன.

வங்கியில் பிக்ஸட் டிபாசிட் தன் சொந்தப் பெயரில் மட்டும் போட்டிருப்பவர் திடீரென மரணமடைய நேர்ந்தால் அவர் வாரிசுதாரர் அதைத் தன் பெயருக்கு மாற்ற ஒரு படிவம் நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்டத் தொகை வரை வங்கியே அதை ஏற்கலாம். அதற்கு மேல் என்றால்தான் கோர்ட்டிலிருந்து வாரிசு சான்றிதழும் பெற வேண்டும். ஆனால் அப்படிவத்தில் இன்னொரு வரியும் சேர்த்திருப்பார்கள். அதாகப்பட்டது இறந்தவர் இசுலாமியராக இருந்தால் என்னத் தொகையானாலும் சரி வாரிசு சான்றிதழை வற்புறுத்த வேண்டும். ஏனெனில் இசுலாமிய வாரிசுச் சட்டம் மிகச் சிக்கலான ஷரத்துகளை தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே வங்கி அதிகாரிகள் அங்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.

இது சம்பந்தமாக ஒரு திசைதிருப்பல்.

நீதியரசர் அமரர் எம். சீனுவாசன் (ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் தீர்ப்பை வழங்கியவர்) என்னிடம் இது பற்றிப் பேசும்போது குறிப்பிட்டார்.

அதாகப்பட்டது இசுலாமியச் சட்டம், ஹிந்து சட்டம் என்றெல்லாம் சட்டக் கல்லூரிகளில் பாடம் வைத்திருப்பார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஹிந்து சட்டத்துக்கான தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர் ஷ்ம்சுத்தீன் என்னும் மாணவர், இசுலாமியச் சட்டத்தேர்வில் முதலாவதாக வந்தது ராகவாச்சாரி.

திசை திருப்பல் முடிந்தது.

இசுலாமியரை இந்த விஷயத்தில் நம்பலாகாது என மொக்கைப் பதிவு போடும், சென்னை புதுக்கல்லூரியில் படித்த டோண்டு ராகவனோ நபியில்லாமல் டோண்டு இல்லை என்று கூறுபவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/08/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 4. மாயக் குதிரை

ஏற்கனவேயே நான் சொன்னதுதான். அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார்.

திருமலை சாரின் இச்சிறுகதை பற்றி நான் கூறுவதைவிட நீங்களே படித்துக் கொள்வது நலம். எனக்கு மிகவும் பிடித்த கதை.

“நான் மகா மகா துரதிஷ்டக்காரன் சார் !” என்று கூறிய வண்ணம் கணேசய்யர் என் வீட்டுக்குள் நுழைந்தார். என்னிடம் கடன் கேட்க வரும்போதெல்லாம் அவர் அப்படி தமது துரதிர்ஷ்டத்தை நொந்துக் கொண்டு வருவார்; இல்லாவிட்டால் அவரிடம் எனக்கு அனுதாபம் உண்டாகாது என்பது அவருடைய அபிப்பிராயம்.

“நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மைதான் சார்!... நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தால், இந்த நிமிடம் உங்களுக்குக் கடன் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாமல் போகுமா?” என்று நான் பதில் சொன்னேன்.

“ஒரு ஐந்து ரூபாய் கூடவா இல்லை?” என அதிர்ச்சியடைந்து கேட்டார்.

“ஆமாம் சார்! என்ன செய்வது? ஒரு ரூபாய் கூட இல்லை!”

நான் மட்டும் ஒரு விஷயத்தில் சற்று அவசரப்படாமல் நிதானமாக யோசனை செய்திருந்தால், இப்போது நான் உங்களிடம் இப்படிக் கடன் கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது சார்! சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! ஆனால் உண்மையில் அது மாதிரி, போன திங்கட்கிழமையன்று என் வீட்டில் நடந்தது”.

“எது மாதிரி சார் நடந்தது?”

“நான் ஒரு பெரிய லட்சாதிபதியாக மாறியிருக்க வேண்டும்”.

“லட்சாதிபதியாகவா! அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம்தான் ! ஆனால் அவ்வளவும் உண்மை!”

“விஷயத்தை சற்று விளங்கும்படிதான் சொல்லுங்களேன்!”

கணேசய்யர் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “போன திங்கட்கிழமை சாயங்காலம் ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து, ‘மாயக் குதிரை உங்களுக்கு வேணுமா?’ என்று ஒரு குதிரை பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டுக் கேட்டான். “மாயக் குதிரை என்றால், மாயவித்தையெல்லாம் அது செய்யுமா? என்று நான் கேட்டேன்.

”மாயக் குதிரையாவது மண்ணாங்கட்டியாவது” சார்!... அவனை நீங்கள் நம்பி விட்டீர்களா என்ன?”

“அவனை முதலில் நம்பவில்லை. நம்பாமல்தான் அவன் குதிரையின் மாய சக்திகளைப் பற்றிக் கேட்டேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“அவனிடமிருந்த மாயக் குதிரை நாம் வேண்டும் வரம் எதுவானாலும், அப்படியே கொடுத்து விடுமாம். ஆனால் இரண்டே தடவைகள்தான் அதை வரம் கேட்கலாமாம். அப்புறம் அதன் சக்தி மறைந்து விடுமாம்!”

“ஆச்சரியமாக இருக்கிறதே! ... நீங்கள் அதை விலை கொடுத்து வாங்கினீர்களாக்கும்?...”

“முழு விலையையும் கொடுத்து விடுவேனா? ... முன் பணமாக ஐந்தே ரூபாய்தான் கொடுத்தேன். அதன் சக்தி நிரூபிக்கப்பட்ட பின் அவன் கேட்ட இருபது ரூபாயைத் தருவதாகச் சொன்னேன். சரிதான் என அவன் போய் விட்டான்”.

“இப்படிக்கூட ஒருவர் அசட்டுக் காரியம் செய்வார்களா சார்?... போயும் போயும் ஒரு குடுகுடுப்பைக்காரன் வார்த்தையை நம்பலாமா?”

“முதலில் நான் நம்பத்தான் சார் இல்லை! ஆனால் அதை நம்பும்படி என் மனைவிதான் எனக்கு யோசனை சொன்னாள். ‘எல்லோருமே மோசக்காரர்களாக இருப்பார்களா என்ன? இவன் கொண்டு வந்திருக்கும் குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த மாதிரி அதிசயம் முன்பு ஒரு முறை நடந்திருப்பதாக என் தாத்தா சொல்லியிருக்கிறார்’ என்று அவள் பிடிவாதமாகச் சொன்னதன்பேரில், நான் அந்தப் பொம்மையை வாங்கி விட்டேன்.

“அப்புறம்?”

“உண்மையிலேயே அந்த குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருந்தது என்பது அன்று இரவுக்குள்ளாகவே தெளிவாகி விட்டது எங்களுக்கு”!

“என்ன! மாய சக்தியா! நிஜமாகவா?”

“நிஜமாகத்தான் சார், நிஜமாகத்தான்! அந்தக் குதிரை சாதாரண குதிரை இல்லை. மகா மாயாவிக் குதிரை”.

“அப்படி என்ன மாயா சக்தி இருந்தது அதனிடத்தில்?”

“நாம் கேட்கும் வரத்தைக் கொடுக்கும் சக்தி அதனிடம் இருந்தது சார்”!

“அப்படியா?”

ஆமாம், குடுகுடுப்பைக்காரன் அந்தக் குதிரையை கொடுத்துவிட்டுப் போன அரை மணி நேரத்திற்கெல்லாம், முதல் வரத்தைக் கேட்டு விட்டேன். வரம் கேட்டு இருபத்திரண்டு மணி நேரம் ஆவதற்குள் அதன்படி நடந்து விடும் என்று சொல்லியிருந்தான். ஆனால், கேட்டு நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே நான் கேட்ட வரம் அப்படியே பலித்து விட்டது...!”

“என்ன வரம் கேட்டீர்கள்?...”

“அதில்தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன்! மெள்ள நிதானமாக யோசித்து வரம் கேட்டிருக்க வேண்டும். என் மனைவி சொன்ன யோசனைகளையெல்லாம் கூட லட்சியம் செய்யாமல் ஒரு அழகான மோட்டார் கார் வேண்டும் என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டேன்! ஆபீசுக்குப் போக ரொம்ப சௌகரியமாக இருக்குமே என்று அவ்வாறு கேட்கத் தோன்றிற்று!”

“அது கிடக்கட்டும்; நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மோட்டார் கார் கிடைத்ததா என்ன?”

“பேஷாகக் கிடைத்தது”

“கிடைத்ததா? எப்படி கிடைத்தது? வானத்திலிருந்து வந்து குதித்ததா?”

“இல்லை! ...இரவு பத்து மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி என்னைத் தட்டி எழுப்பி, ‘வாசலில் ஏதோ மோட்டார் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. சீக்கிரம் போய் பாருங்கள்!’ என்று சொன்னாள். அப்படியே நான் எழுந்திருந்து போய் வாசலில் பார்த்தேன்! அங்கே நிஜமாகவே வெகு அழகான பச்சை நிற மோட்டார் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.. அதன் பக்கத்தில் இருந்த ஒரு ஆசாமி ‘இந்த மோட்டார் கார் உங்களுடையதுதான்’ என்று கூறிவிட்டு சட்டென்று இருட்டில் எங்கோ மறைந்து விட்டான்”.

“அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம் என்றுதானே அப்போதிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்?”

“ஆமாம், அந்த மோட்டார் நிஜமாகவே ஓடக்கூடியதுதானா?”

“அதே சந்தேகம்தான் என் மனைவிக்கும் உண்டாயிற்று. உடனே அவளைக் காரில் ஏறச்சொல்லி, நானே அதை ஓட்டிக் கொண்டு போனேன், பரீட்சித்துப் பார்ப்பதற்காக”.

“நன்றாக ஓடிற்றோ?”

“அதிவேகமாக ஓடியது. ஆனால், அது ஓடிய வேகத்தில் ஒரு புளீய மரத்தின் மேல் மோதிக் கொண்டது”.

“ஐயையோ,... அப்புறம்?”

“அந்த இடத்தில் என் மனைவி காயமடைந்து, அந்த இடத்திலேயே இறந்து விட்டாள்!”

“ஐயையோ, நிஜமாகவா?”

“பொய்யா சொல்வேன்?... பாக்கி சமாசாரத்தையும் கேளுங்கள்! நல்ல வேளையாக அப்போது மாயக் குதிரையின் சக்தி சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனே அதைக் கையில் எடுத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன்”.

“மனைவி பிழைத்து எழுந்திருக்க வேண்டுமென்றா?...”

“பிழைத்து எழுந்திருந்தால், தேகமெல்லாம் காயங்கள் இருக்குமே சார்! விகாரமாகவல்லவா இருக்கும் பார்ப்பதற்கு?...”

“காயங்களும் மறைய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே?”

“கேட்பதற்கு ஒரே ஒரு வரம்தானே சார் பாக்கியிருந்தது.?

“அட ராமா!... சரி, அப்புறம் என்னதான் செய்தீர்கள்?”

“நடந்ததெல்லாம் ஒரு கனவாகப் போய்விடட்டும்’ என்று நான் வரம் கேட்டேன்! அப்படியே அதுவும் பலித்து விட்டது.”

“எப்படி?”

“யாரோ என்னைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. ‘அடேடே இதுவரை கண்டதெல்லாம் கனவுதானா!” என்று நான் உடனே விழித்துக் கொண்டேன். குதிரையும் மறைந்து போய் விட்டது”.

“எல்லாம் விசித்திரமாக இருக்கிறது சார்!”

“விசித்திரம்தான்! நான் மட்டும் அவசரப்பட்டு ஒரு மோட்டார் காருக்கு ஆசைப்படாதிருந்தால் விபத்தே நேர்ந்திருக்காது. இரண்டாவது வரத்தை அநியாயமாக வீணாக்கியிருக்க வேண்டாம். நான் ஒரு கோடீஸ்வரனாக வேண்டும் எனக்கேட்டிருக்கலாம்! அவசரப்பட்டு விட்டதால் எல்லாம் எல்லாம் வெறும் கனவாகி விட்டது! அதனால்தான் இப்போது உங்களிடம் கடன் கேட்கும் நிலைமைக்கு நான் வந்திருக்கிறேன்”.

கணேசய்யர் கூறிமுடிந்ததும், “கதை பேஷாக இருக்கிறதே சார்! இதை எந்தப் புத்தகத்திலாவது படித்தீர்களா?” என்று நான் அவரைக் கேட்டேன்! நான் கேட்டதுதான் தாமதம், அவர் சட்டென்று எழுந்திருந்து, “இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே புத்தகத்தில் படித்தாகி விட்டதா?” என்று முணுத்த வண்ணம் நடையைக் கட்டி விட்டார்!


அன்புடன்,
டோண்டு ராகவன்







 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது