1/30/2007

புது பிளாக்கரில் பிரச்சினை

புது பிளாக்கருக்கு என்னை வலுக்கட்டாயமாக பிளாக்கர் இழுத்து வந்து விட்டது. நல்ல வேளையாக புது பிளாக்கரில் தமிழமண இணைப்பு கூட கிடைத்துள்ளது.

ஆனால் ஒரே ஒரு கஷ்டம். முந்தைய பிளாக் பதிவை எடிட் செய்ய இயலவில்லை. எடிட் செய்து விட்டு பப்லிஷ் பட்டனை அழுத்தினால் இந்த எர்ரர் மெசேஜ் வருகிறது.

ERROR
URL should end in a valid domain extension, such as .com or .net

இதற்கு என்ன அர்த்தம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

யார் சாதிப் பெயரை யார் எடுப்பது?

சமீபத்தில் 1978-ல் தமிழக அரசு இரண்டு கோமாளி வேலைகளை செய்தது. முதலாவது பழைய நம்பர் புது நம்பர் குழப்பங்கள். அது பற்றி இன்னொரு பதிவில். இப்பதிவில் இரண்டாவதைப் பார்ப்போம்.

தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை எடுத்ததுதான் இரண்டாவது விஷயம். ஒரு அறிவிப்பில்லை, ஒரு விவாதம் இல்லை. திடீரென செய்யப்பட்டது அது.

உதாரணத்துக்கு நான் திருவல்லிக்கேணியில் இருந்தபோது வெங்கடாசல செட்டித் தெருவில் இருந்தேன். அதே திருவல்லிக்கேணியில் வெங்கடாசல முதலித் தெரு, வெங்கடாசல நாயக்கன் தெரு என்னும் பெயரிலும் தெருக்கள் உண்டு. . இந்தக் கோமாளித்தனமான அரசு ஆணையால் எல்லாமே வெங்கடாசல தெரு ஆயின. அதனால் எவ்வளவு குழப்பங்கள்? தபால் ஊழியர்கள் எவ்வாறு கடிதங்களை தெருவாரியாக பிரிப்பார்கள் என்றெல்லாம் சிறிது கூட யோசனை இல்லாது செய்த வேலை அது. குறைந்த பட்சம் வெங்கடாசல தெரு 1, 2, 3 என்றாவது பிரித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை.

சைதாப்பேட்டையில் இருந்த ஐயங்கார் தெரு வெறுமனே தெரு என்று ஆயிற்று. ஆஹா, என்ன அறிவு, புல்லரிக்கிறது ஐயா. தி.நகரில் மதிப்புக்குரிய நானா சாஹேப் பெயரில் இருந்த தெரு நானா தெரு என்று ஆயிற்று. சாஹேப் என்பது சாதிப் பெயர் என்பது அவர்கள் துணிபு போலும். அது இருக்கட்டும் நானா என்பது உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் Émile Zola அவர்கள் உருவாக்கிய ஒரு விலைமாதுவின் பெயர். இப்போது நானா தெரு எந்த எண்ணத்தை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?

அதெல்லாம் விடுங்கள், நான் இங்கு குறிப்பிட நினைப்பது ஒன்றே ஒன்றுதான். வெங்கடாசல செட்டியார், வெங்கடாசல முதலியார், வெங்கடாசல நாயக்கர், காசி செட்டியார் ஆகியோர் தத்தம் தொண்டுகளால் நல்ல பெயர் பெற்றவர்கள். டாக்டர் ஏ.எல். லட்சுமணசாமி முதலியார் 27 ஆண்டுகள் மதறாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். பிள்ளைப்பேறு பற்றி அவர் எழுதிய மருத்துவ நூல் இன்னும் பாடபுத்தகமாக மருத்துவ மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அது Mudaliyaar's book" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதையும் வெறுமனே புத்தகம் என்றே கூறிவிடலாமா? அவரது இரட்டை சகோதரர் சர் ஆற்காட் ராமசாமி முதலியார். அவர் பெயரில்தான் SRM deemed University இருக்கிறது என நினைக்கிறேன். அதில் இருக்கும் M-ஐ எடுத்துவிடுவோமா?

இப்போது எனது கேள்வி. ஏற்கனவே இருக்கும் தெருக்களின் பெயரில் இருந்து சாதிப் பெயரை நீக்குவது சம்பந்தப்பட்டவர்களை அவமதிப்பதாகாதா? அதுவும் நானாத் தெரு?

சாதிப் பெயர்களை வைத்துக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவு. அதன் ஒரு உபயோகத்தை இங்கு கூறிவிடுகிறேன். தமிழ் நாட்டை விட்டு வெளியில் சென்றாலே surname என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய பெயர் N.ராகவன் என்றால், "N" என்பதை விரிவாக்க சொல்கிறார்கள். நரசிம்மன் என்று கூறினால் நரசிம்மன் ராகவன் என்று எழுதிக் கொள்கிறார்கள். பிறகு அதையே R.நரசிம்மன் என்று கூறிவிடுகிறார்கள். அது என் தந்தையின் பெயர் என்று அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்க வேண்டியுள்ளது. வெளி நாட்டுக்கு போனாலோ கேட்கவே வேண்டாம். அதுவே நான் ஐயங்கார் என்ற என் சாதிப் பெயரை போட்டுக் கொண்டால் பிரச்சினையே இருந்திருக்காது. N.R. Iyengar என்று நிம்மதியாகப் போட்டுக் கொண்டிருக்கலாம். வருமான வரிப் படிவங்களில் வரும் குழப்பத்தை நாம் எல்லோருமே உணர்ந்துள்ளோம்.

இன்னொரு விஷயம். இந்த சாதிப் பெயரை சேர்க்கும் முறை தமிழ் நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் உண்டு. தேவ கௌடா, பாபா சாஹேப் அம்பேத்கர், முலாயம் சிங் யாதவ், ஜவஹர்லால் நேரு, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, வல்லபாய் பட்டேல், இத்யாதி, இத்யாதி. எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இன்னும் பட்டேல் மார்க, ஜவஹர்லா நேரு சாலை, மகாத்மா காந்தி ரோட் என்றெல்லாம் தமிழகத் தெருக்களில் வைத்துக் கொண்டுள்ளோம்?

ஆக, ஒவ்வொரு முறையும் நாம்தான் கோமாளி ஆக்கப்படுகிறோம். அதெல்லாம் இருந்தும் தமிழ் வலைப்பூக்களில் சாதிப் பெயருக்கு எதிராகச் செய்யப்படும் அகண்ட பஜனை காதைத் துளைக்கிறது. சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம். ஜாதி சங்கங்கள் ஏன் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால் அது அவர் சொந்த விஷயம் என்று திருவாய் மலர்கின்றனர் சிலர்.

சமீபத்தில் 1972-ல் பம்பாயில் இருந்தேன். என் மாமா பிள்ளை என்னிடம் "என்ன டோண்டு, பேசாமல் மஹாராஷ்ட்ரா பெண்ணை மணந்து புரட்சி பண்ணுவதுதானே" என்று பொழுது போகாமல் அறிவுறை கூறினான். அவன் மணந்தது என்னவோ ஐயங்கார் பெண்ணைத்தான். அதை சுட்டிக் காட்டிய நான், ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்துமாறு கூறினேன். எனக்காகவே ஒரு ஐயங்கார் பெண் (என் மனைவி) ஊரில் இருந்ததும் நான் கூறியதற்கு காரணம்.

கலப்புத் திருமணத்தால் வரும் பிரச்சினைகள் எத்தனை? அதை இன்னொரு பதிவில் பார்ப்போம். இப்பதிவுக்கு திரும்புவோம். சாதிப் பெயரை போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். மற்றவர்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்

1/22/2007

மெரினா பீச்

இது ஒரு மீள்பதிவு.

இந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று நான் சமீபத்தில் 1955-ல் ஐந்தாம் வகுப்பில் படித்திருக்கிறேன். இதை யார் கூறியது என்று நான் எங்கள் ஆசிரியர் திரு ரங்கா ராவ் அவர்களைக் கேட்க அவர் என்னை அடித்துப் போட்டு வகுப்புக்கு வெளியில் அனுப்பினார். ஆனால் கடைசி வரை அதைக் கூறியது யார் என்றுக் கூறவேயில்லை. வேறு யாரும் இது வரை இதற்கான விடையை எனக்கு கூறவில்லை. ஆனாலும் இப்போதும் கூட யாராவது இந்த மெரினா பீச் உலகிலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

நேற்றுக் கூட என் மருமாளிடம் நான் இதைக் கூறியதும் அவள் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டாள். ஹூம் காலம் கலிகாலமடா சாமி. நாங்கள் எல்லாம் சின்னவர்களாக இருந்தப் போது பெரியவர்களிடம் இம்மாதிரியெல்லாம் ஏடாகூடமாக கேள்வி கேட்கவே மாட்டோமாக்கும்!!!!

நிற்க. ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது இம்மாதிரி ஏதாவதைக் கூறி விட, நமக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதையே நாம் பிடித்துக் கொண்டு விடுகிறோம். உதாரணமாக அறுபதுகளின் முடிவில் ஐ.டி.பி.எல்.லின் சாதனை பற்றி ஒரு தருணத்தில் கூறப் பட்டது: "மற்றப் பெரிய மருத்துவக் கம்பெனிகள் பலப் பத்தாண்டுகளில் சாதித்ததை ஐ.டி.பி. எல் வெறும் பத்து வருடங்களிலேயே சாதித்து விட்டது." இதை நான் எண்பதுகளில் எத்தனை முறை பிரெஞ்சில் மொழி பெயக்க வேண்டியிருந்தது என்பது இப்போது என் நினைவில் இல்லை. உண்மை என்னவென்றால் அப்போதே இந்த நிறுவனம் தள்ளாடத் தொடங்கி விட்டது. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலேயே அதன் முடிவு எல்லார் கண்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. இருப்பினும் மேலே கூறியதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர் நிர்வாகத்தினர்.

அதன் வீழ்ச்சி ஒரு சோகக் கதை. ஆனாலும் இப்போதுப் பின்னோக்கிப் பார்க்கும்போது இந்த நிலை தவிர்த்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. இதைப் பற்றி இன்னொரு பதிவில் போட்டுள்ளேன்.

அதே போல நொடித்துப் போன பழைய பணக்காரர்கள் வீட்டில் ஒரு மாதிரியான பிரமை இன்னும் இருக்கும். வெறும் பெருங்காய வாசனை என்று கூறுவார்கள். அவர்களால் தாங்கள் ஏழைகளாகி விட்டதைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஆகவே பழம் பெருமை பேசி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். அவர்களைப் பார்த்தாலே மனம் கனமாகி விடும். பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல என்ற சொலவடை இவர்களுக்காகவே ஏற்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2

இதன் முந்தையப் பதிவு இங்கே.

எனக்கு நினைவிருந்த வரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் அவர் மட்டுமே பேசுவார். இல்லை, குமரி அனந்தன் சமீபத்தில் 70/71-ல் சோ மீட்டிங்கில் பேசியிருக்கிறார் என்று ஓகை அவர்கள் கூறியிருக்கிறார். நான் தில்லியில் இருந்த 20 வருடங்களில் இம்மாதிரி ஏதாவது நடந்ததா என்பதை யாராவது கூறினால் நலமாக இருக்கும்.

சோ பேசிய விஷயங்கள் என்னால் முடிந்த வரை கொடுத்தேன். இப்போது துக்ளக்கில் முதல் பகுதி வந்துள்ளது. ஏறக்குறைய நான் கூறியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. மகிழ்ச்சி. இப்போது அதவானிஜி அவர்கள் பேசியதை எழுதுவேன்.

அத்வானி அவர்கள் ஒருவித பிரமிப்புடன் அமர்ந்திருந்தார். தமிழ் புரியாவிட்டாலும் மக்கள் உணர்ச்சிகள் அவருக்கு புரிந்தன. என்ன இருந்தாலும் மக்கள் தலைவர் அல்லவா அவர். பார்த்தாலே மரியாதை உணர்வை பார்ப்பவரிடம் உருவாக்கும் ராஜ கம்பீரம் அவருடையது. என்ன இருந்தாலும் பாஜக ஆதரவாளன் டோண்டு ராகவன் அவ்வாறுதானே கூறுவான் என்பவர்களுக்கு நான் தரும் பதில் ஆம் என்பதே.

மேலும், குருமூர்த்தி வேறு அவர் அருகில் அமர்ந்து என்னுடைய வேலையை திறமையுடன் செய்து கொண்டிருந்தாரே. ஆகவே அவர் சோ கூறியதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

அத்வானிஜி பேச எழுந்தார். அவையில் நிசப்தம், அவர் என்ன கூறப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்புடன். அதற்கு முன்னால் ஒன்று கூறி விடுகிறேன். சோ அவர்கள் பேசி முடிந்ததுமே அரங்குக்கு வெளியில் சிலர் செல்ல ஆரம்பித்து விட்டிருந்தனர். அவர்களுக்கு என்ன வேலையோ என்னவோ.

தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களுடன் அத்வானிஜி தன் கணீர் குரலில் பேச ஆரம்பித்தார். சோ அவர்கள் அளவுக்கு தன்னிடம் கம்யூனிகேஷன் திறமை இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டார். சோ அவர்களை தனக்கு பல ஆண்டுகளாக பல பரிமாணங்களில் தெரியும் என்றும் ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது இப்போதுதான் தனக்குத் தெரியவந்து அதிசயப்பட்டதாகவும் கூறினார்.

இந்த மகத்தான கூட்டத்துக்கு தான் அழைக்கப்பட்டதற்கும், பேச வாய்ப்பு பெற்றது பற்றியும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் இவ்வளவு பத்திரிகைகள் உள்ளன, ஆனால் துக்ளக் ரேஞ்சுக்கு வருடா வருடம் மீட்டிங் நடத்தி, வாசகர்களை பகிரங்கமாகக் கேள்விகள் கேட்க வைத்து அதற்கு பதிலையும் உடனுக்குடன், சுவையாக கூறும் இம்மாதிரியான சூப்பர் மீட்டிங்குகளை எந்த பத்திரிகையும் நடத்தவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அரங்கமே கைத்தட்டலால் நிரம்பியது. தானும் பத்திரிகையாளர் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். மக்கள் கூட்டம் அரங்கத்தில் ரொம்பி வழிந்து, வெளியேயும் ஸ்க்ரீன்கள் போட்டு அசத்தியதையும் அவர் பிரமிப்புடன் குறிப்பிட்டார்.

அறிவாளிகளின் ஒரு இயக்கத்தில் சோ அவர்கள் தேச ஒற்றுமை, தேசப்பற்று மற்றும் சிறந்த கோட்பாடுகளின் அடிப்படையில் சோ அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் பற்றி பேசுகையில் இது விவசாயிகள் சம்பந்தப்பட்டதால் நாடுமுழுதும் வெவ்வேறு ரூபங்களில் நடைபெறுவதாகக் கூறினார். பிஹு, மகரசங்கராந்தி, லோடி ஆகிய பெயர்கள் இப்பண்டிகைக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். மகிழ்ச்சி கலந்த பக்தியுடன் இப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார் (gaiety with piety). குஜராத்தில் இது காற்றாடி விடும் நிகழ்ச்சியாகவும் உள்ளது என்பதையும் கூறினார்.

பிறகு குஜராத் பற்றி பேசுகையில் சோ அவர்கள் மோதி அரசை பற்றி கூறியதை அவரும் உறுதி செய்தார். ஒவ்வொரு கிராமத்தில் தடங்கலில்லாத மின்சாரம் தருவது குஜராத் மாநிலம் மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார் (Jyotirgram villages). குஜராத் அரசை மட்டம்தட்ட மத்திய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். அன்னிய செலாவணி மூலதனம் குஜராத்தில்தான் அதிகம் ஏனெனில் அங்கு கட்டுமான வசதிகள் மிக அருமையான முறையில் பராமரிக்கப் படுகின்றன என்றும் அவர் கூறினார். மனது இருந்தால் அரசு என்னென்ன செய்ய இயலும் என்பதை குஜராத் அரசு காட்டி வருவதாகவும் அவர் கூறினார்.

சோ அவர்கள் பேசியதில் ஒரு விஷயம் என் பதிவில் குறிப்பிடாமல் போயிற்று. அதாவது அமெரிக்காவுடன் நாம் இப்போது கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தம் காலத்தின் கட்டாயம் என்றும், பிஜேபி ஆட்சியில் இருந்திருந்தாலும் அதில் கையெழுத்தீட்டிருக்குமென்று சோ அவர்கள் கூறியிருந்தார். இப்போது பிஜேபி அதை குறைகூறுவது ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில்தான் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதை திட்டவட்டமாக மறுத்தார் அத்வானிஜி. NPT ஒப்பந்தத்தில் தேவையான பாதுகாப்பு இன்றி கையெழுத்திட பிஜேபி மறுத்ததை அவர் சுட்டிக் காட்டினார். கையெழுத்து போட்டிருந்தால் போக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்த முடியாது போயிருந்திருக்கும் என்றும் அவர் கூறினார். போக்ரான் சோதனையை அக்காலக் கட்டத்தில் எதிர்த்தவர் மன்மோகன் சிங்க் என்பதையும் அத்வானிஜி சுட்டிக் காட்டினார். அதே போல தன் கட்சி ஆட்சியில் லாஹூர் பஸ் பயணம் தோல்வியடைந்ததையும் அவர் ஒப்பு கொண்டார்.

இந்த சமயம் எனது மொபைல் "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" பாட்டை ஒலிக்க ஆரம்பித்தது. எடுத்துப் பார்த்தால் அயர்லாந்து வாடிக்கையாளர் பேசினார். ஏதோ கோப்பை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளதாகவும், ஞாயிற்றுக் கிழமை என்பதை மறந்து உடனடியாக வந்து செய்து தர வேண்டும் என்று வேண்டுகோள்விட 1000க்கும் மேல் ஓடிக்கொண்டிருக்கும் எனது கார்களில் ஒன்றை பிடித்து வீடு செல்ல வேண்டியதாயிற்று (வாடகைக் கார்கள் எல்லாம் என் கார்கள் அல்லவா)?

ஆனால், இந்த களேபரத்தின் நடுவிலும் அரங்குக்கு வெளியில் அலயன்ஸ் பதிப்பகத்தார் போட்டிருந்த ஸ்டாலில் சோ புத்தகம் ஒன்றை வாங்க மறக்கவில்லை. (அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்னும் அப்புத்தகத்தை வைத்து சோ பற்றிய பதிவுகள் இன்னும் சில போடப் போவதையும் இங்கே கூறிவிடுகிறேன்)

அத்வானிஜியின் பேச்சு முழு விவரம் துக்ளக்கில் வரும். அதுவரை பொறுக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2007

மாநகராட்சி மறுதேர்தல்

நான் இட்ட இந்தப் பதிவிலும், அதையே எக்ஸ்டண்ட் செய்த இன்னொரு பதிவிலும் எழுதியதை மீண்டும் பாருங்கள். ஒரு நல்ல கூட்டணி அமைத்திருந்த நிலையில் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தலைத் தேவையின்றி கேலிக் கூத்தாக்கியதற்கு முதல்வர் கருணாநிதிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிரும்மாஸ்திரத்தை தாம்புக் கயிறு கட்டி சொதப்பி விட்டார்.

இப்போது இவராகவே முன் வந்து 99 வார்டுகளில் தங்கள் கூட்டணி கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு செய்ததைப்பார்த்தால், எனது இப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட, விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்த துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்பா பையனிடம் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்க, பையன், தான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் அதை அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் முன்னாலேயே தானே அப்பாவிடம் அதைக் கூறச் செய்வதுதான் மனசாட்சி என்கிறான்.

அதாவது ஒரு நீதிபதி மட்டும்தான் ஊழல் என்றாராம் இன்னொருவர் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டாராம். என்ன ஜல்லி பாருங்கள். இன்னொருவர் டெக்னிகலான காரணத்துக்காக வழக்கைத் தள்ளுபடி செய்தார் அவ்வளவே. இன்னும் மூன்றாவது நீதிபதி வரவிருக்கிறாராம், அப்பீல் வேறு இருக்கிறதாம், இருந்தாலும் ராஜினாமா செய்கிறாராம். அடாடா என்ன பெருந்தன்மை. கண்ணேறுதான் கழிக்க வேண்டும். மூன்றாம் நீதிபதி என்ன கூறுவார் என்பதை ஊகிக்க பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. ஆகவே வேக வேகமாக மனசாட்சி வேலை செய்து விட்டது. இந்த அழகில் 98 பேர்தான் ராஜினாமா செய்தனர். ஒருவர் பெப்பே காட்டி விட்டார்.

அதிலும் எப்படிப்பட்ட மனசாட்சி பாருங்கள். தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டு விட்டு பிறகு துளிகூட வெட்கமேயில்லாது தன் கட்சி மட்டும் ஆட்சியமைத்து, அவசரம் அவசரமாக அத்தனை துறைகளுக்கும் அமைச்சர்களை போட்டு, அவர்களில் தன் மகனையும் போட்டு என்றெல்லாம் நடந்து கொண்டவர் இப்போது ராஜினாமா செய்ய மட்டும் கூட்டணி என்று உதார் விடுவது எதில் சேர்த்தி? கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ணும்போது தனக்கு பாயசம் வேண்டாம் (சர்க்கரை நோயாளி) அடுத்த இலைகளுக்கும் சேர்த்து வேண்டாம் என்று கூறுவது போல இல்லை?

நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். சம்ப்ந்தப்பட்ட தமிழக தேர்தல் அதிகாரி, கடமை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் எல்லோர் மேலும் நடவடிக்கை தேவை.

கருணாநிதி அவர்களது ஆட்சி காலத்தில் சமீபத்தில் 1972-ல் மஸ்டர் ரோல் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியையே கலைக்க வேண்டியதாயிற்று. அதற்கு பிறகு முறையான உள்ளாட்சித் தேர்தல் வர பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2001, 2006 இவ்விரு ஆண்டுகளிலுமே நடந்தவற்றுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே பொறுப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/14/2007

துக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்

இம்முறை இக்கூட்டம் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டத்துக்கு மாலை 4.30-க்கு சென்றும் அரங்கத்தினுள்ளே இடம் கிடைக்கவில்லை. வெளியே ஹாலில் பல ஸ்க்ரீன்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நானும் ஒரு ஸ்க்ரீனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து கொண்டேன். கீழே உட்கார்ந்து ரொம்ப நாட்கள் ஆகியிருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன செய்வது மீட்டிங்கை அதற்காக மிஸ் செய்ய இயலுமா? கையில் காத்திருப்புக்கு என்றே கொண்டு சென்ற டெர்ரி ப்ராட்செட்டின் நாவல் கை கொடுத்தது.

மாலை 6.25 வாக்கில் வெங்கைய நாயுடு, ரஜனிகாந்த், எல்.கே. அத்வானி, எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி ஆகியோர் வந்து முதல் வரிசையில் அமர்ந்தனர். சரியாக 6.30-க்கு சோ மீட்டிங்கை எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆரம்பித்து வைத்தார். முதலில் துக்ளக்கில் வேலை செய்பவர்கள் அறிமுகம். உதயசங்கர், சுந்தரம், மதலை, சத்யா, பர்க்கத் அலி, சுவாமிநாதன், தோஸ்த், துர்வாசர், இதயா, ஷண்முகம், ராமமூர்த்தி, வசந்தன் பெருமாள், ரா.கி. ரங்கராஜன் ஆகியோரை தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்தினார். குருமூர்த்தி அவர்களை பற்றி பேசும்போது பல பெரிய இடத்தொடர்புகள் இருந்தாலும் அவற்றிலிருந்து எந்த சுயலாபத்துக்கான விஷயங்களையும் அவர் பெற முயற்சி செய்ததில்லை என கூறினார். தன்னைப் போலவே இந்த விஷயத்தில் இருக்கும் குருமூர்த்தியை சோவுக்கு பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.

பிறகு வாசகர்களை பேச அழைத்தார். இந்த இடத்தில் ஒன்று கூறவேண்டும். கையில் நோட்புக்கும் பேனாவும் எடுத்துச் சென்றாலும் அசௌகரியமான முறையில் உட்கார நேர்ந்ததாலும், ஒலிபெருக்கி மக்கர் செய்ததாலும், சுற்றியிருந்தவர்கள் பல சமயம் கைதட்டி ஆரவாரம் செய்ததாலும் சிலவற்றை சரியாகக் கேட்க இயலவில்லை. ஆகவே எனது நோட்ஸ், மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் துணையோடு பதிவிடுகிறேன். பிறகு துக்ளக்கில் ரிப்போர்ட் வரும்போது ஏதெனும் முரண்பாடுகள் இருந்தால், துக்ளக் வெர்ஷனே சரியானதாக இருக்கும் என எடுத்துக் கொள்ளவும்.

ரமேஷ் என்னும் வாசகர் பேசும்போது வாக்கு வங்கி அரசியலைப் பற்றி சோ அவர்களின் கருத்தைக் கேட்டார். இலவசங்கள் நீண்ட காலத் திட்டங்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லையே என்றும் கூறினார். பல கோவில் நிலங்களில் உள்ள பல இந்து குத்தகைக்காரர்கள் குத்தகை பணத்தைத் தராது இழுக்கடித்தபோது இசுலாமிய குத்தகைக்காரர்கள் மட்டும் ஒழுங்காகப் பணம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதே வாசகர் அத்வானிஜியிடம் பாஜக என்ன செய்ய திட்டம் வைத்துள்ளது என்ரு கேட்டார். இத்தனை ஆண்டுகள் துக்ளக்கின் இதழ்கKளை டிவிடியில் தர முடியுமா என்றும் கேட்டார்.

இதற்கு பதிலாக சோ பேசுகையில் இலவசம் என்பதை ஒரேயடியாக மறுக்க முடியாது என்பதை கூறினார். உதாரணத்துக்கு காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் அவர்கள் சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்தபோது தான் முதலில் அது பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் காலப்போக்கில் எதனை பேருடைய வாழ்க்கையில் அது ஒளி கொண்டு வந்தது என்பதைப் பார்க்கையில் தன் கருத்தை அதிட்டத்தைப் பொருத்த வரை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் டிவி, கேஸ் இணைப்பு என்று இழுத்ததும் அரங்கத்தின் உள்ளிலும் வெளியேயும் ஒரே சிரிப்பு. டிவிடி விஷயத்தை கவனிப்பதாக்க் கூறினார்.

அடுத்து பேசியது கும்மிடிப்பூண்டியிலிருந்து பாலகிருஷ்ணன். ஆனால் அவர் என்ன பேசினார் என்பதை இரைச்சலில் கேட்க இயலவில்லை. ரங்கநாதன் என்பவர் பேசும்போது பெரியார் படம் வெற்றி பெற்றால் ஆத்திகத்துக்கு பங்கம் வருமா என்று கேட்டார். டி.எம்.கே ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமா என்றும் கேட்டார். ரஜனிகாந்த அரசியலில் நுழையாத பட்சத்தில் நதி இணைப்புகள் பற்றி ஏதேனும் ஃபாரம் உருவாக்கி வேலை செய்வாரா என்றும் கேட்டார். துக்ளக் மீட்டிங்கை நேரு ஸ்டேடியத்தில் வைத்து கொள்ளலாமே என்றும் ஆலோசனை கூறினார்.

அதற்கு பதிலளித்த சோ நிச்சயமாக தனது கூட்டங்களுக்கு நேரு ஸ்டேடியம் எல்லாம் தரமாட்டார்கள் என்று அபிப்பிராயப்பட்டார். தான் கலந்து கொள்வதாக இருந்த கார்பரேஷன் எலெக்ஷன் பற்றிய மீட்டிங்கையே தடை செய்து விட்டார்கள் என்பதையும் நினைவூட்டினார். திமுக ஆட்சி முழு 5 ஆண்டுகளும் இருக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்டார். அப்போதுதான் அவர்கள் முழு சுயரூபமும் தெரியவரும் என்றும் கூறினார். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க உடைக்க தெருவுக்கு நான்கு பிள்ளையார் கோவில்கள் உருவாயின. ராஜாஜி கூட பெரியாரை இன்னொரு ஆழ்வாராக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டதையும் சோ அவர்கள் எடுத்து காட்டினார். அதையெல்லாம் பார்க்கும்போது இப்படம் வெற்றியடைவதால் ஆத்திகத்துக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறினார்.

அழகப்பன் என்பவர் ஹிந்து மகாசமுத்திரம் ஆரம்பமே நன்றாக இருந்தது, ஆயினும் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்று கருத்து கூறினார். துக்ளக்கில் பல புது விஷயங்கள் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலே அவர் கூறியது காதில் விழவில்லை. சோ அவர்கள் பதிலளிக்கும்போது இதற்கு மேல் ஹிந்துமகாசமுத்திரத்தை எளிமைப்படுத்த இயலாது என்று கூறினார்.

இன்னும் சிலர் பேசினர், ஆனால் என்னால் குறிப்பெடுக்க இயலவில்லை.

பிறகு சோ பேசினார். சதாம் பற்றி பேசுகையில் அவரை சரியான முறையில் விசாரித்துத்தான் தீர்ப்பு கூறப்பட்டது எனக் கூறினார். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பாவ்லா காட்டியது சதாம் ஹுசேன் மட்டுமே. அதன் பலனை அவர் அனுபவித்தார் என்று கூறினார். ஷியா பெரும்பான்மை மக்களை அவர் துன்புறுத்தியதற்கு கிடைத்த பரிசே தூக்கு தண்டனை என்றும் கூறினார். இப்போது தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது என்றும் கூறினார். சோவியத் யூனியன் பலமுறைகள் அடாவடி செய்த போது இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பிறகு தமிழ் நாட்டு அரசியலுக்கு வந்தார். மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா குறிப்பிடுவதை பற்றிப் பேசும்போது அவர் உண்மையைத்தானே கூறுகிறார் என்று கேட்டார். கூட்டணி ஆட்சி அமைக்காது வெளியிலிருந்து ஆதரவு பெற்றால் அது மைனாரிட்டி ஆட்சியல்லாது வேறென்ன என்றும் கேட்டார். திடீரென நடுவில் ஒரு பாட்டை எடுத்து விட்டார். சும்மா சொல்லப்படாது, நன்றாகவே பாடினார். பிறகு சீரியஸாக தனக்கப்புறம் கர்னாடக இசையை சோதான் காக்க வேண்டும் என்று செம்மங்குடி தன்னிடம் கூறியதாக சோ சொன்னார். ஒரே சிரிப்பு. இதுவே அண்ணா தன்னிடம் இதைக் கூறினார் அதைக்கூறினார் என்று யாராவது கூறும்போது நம்பத் தயாராக இருப்பவர்கள் தான் சொன்னபோது மட்டும் ஏன் சிரிக்க வேண்டும் என்று கேட்டு மேலும் சிரிப்பு மூட்டினார்.

தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தில் நன்றாகச் செயல்படுகிறது, ஆனால் தீவிரவாதிகள் விஷயத்தில் கோட்டை விடுகிறது என்று கூறினார். அதே போல க்வாட்ரோக்கி சோனியாவுக்கு வேண்டியவர் என்பதற்காக மட்டுமே போஃபோர்ஸ் விஷயத்தில் அரசு குளறுபடி செய்தது என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திலும் புலிகளுக்கு கலைஞர் பரிவு காட்டுவது கவலைகுரியது என்றும் கூறினார்.

நல்லமுறையில் ஆட்சி செய்வது குஜராத்தில் மோடி மட்டுமே என்று கூறினார். அதை மட்டம்தட்ட மத்திய அரசு செய்யும் முயற்சிகளையும் சோ சுட்டிக் காட்டினார். மோடி மேல் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்றும் கூறினார். கோத்ரா விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் லட்சணத்தைப் பற்றியும் பேசினார். இது பற்றி துக்ளக்கில் விரிவாக வரும் அதில் பார்க்கலாம், ஏனெனில் எனக்கு சரியாக குறிப்பு எடுக்க முடியாமல் போயிற்று.

பிறகு பிஜேபியினர் சோர்வை விட்டு விட்டு உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். அஃப்சல் விஷயாத்தில் தேவையற்ற சர்ச்சை வருவதை கண்டித்தார். மூன்றாம் அணி வர வாய்ப்பு அதிகம் இல்லை எனக் கூறினார். அவர் தொட்ட வேறு விஷயங்கள்: சினிமாக்களுக்கு தமிழ்ப்பெயர், கார்ப்பரேஷன் தேர்தல், சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புக்கள், அப்போது நேரக்கூடிய அரசியல் திருப்பங்கள் ஆகியவை.

இப்போதுதான் ஒரு அதிசயம் நடைபெற்றது. சாதாரணமாக ஆண்டுவிழா கூட்டங்களில் சோ மட்டும்தான் பேசுவார். ஆனால் இம்முறை அத்வானிஜியும் பேசினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/06/2007

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 4

இந்த வரிசையில் வந்த முதல் மூன்று பதிவுகள்:
1)
2)
3)

என் தமக்கையார் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். என் தமக்கை அப்போது பாட்டு கிளாசுக்காக சாதகம் செய்து கொண்டிருந்தார். ஒரு கீர்த்தனையை பாடினார். உறவினர் அது என்ன ராகம் என்று கேட்க அவர் ராகத்தின் பெயர் டக்கா என்று கூறினார். உடனே அந்த உறவினர் ரொம்ப சீரியஸாக இம்மாதிரி ஊர்பேர் தெரியாத ராகமெல்லாம் ஏன் பாட வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டார். எல்லோருக்கும் தெரிந்த ராகங்களான காம்போதி, கல்யாணி, தோடி ஆகிய ராகங்களே பாடினால் போதும் என்று உபதேசம் வேறு.

இந்த அழகில் அவர் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்தான். இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றிப் பேசுகையில் ஒரு வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருகிறது. சீட்டாட்டம் பற்றி ஒன்றுமே அறியாது, மும்முரமாக ஆடிக் கொண்டிருந்தவர் கையிலிருந்து சீட்டைப் பிடுங்கி கீழே போட்டு அவர் எல்லா பணத்தையும் இழந்ததும், "சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி ஜகஜம் என்று வேறு பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகுதான் தனக்கு சீட்டுக் கட்டுகளில் எவ்வளவு கார்டுகள் இருக்கும் என்பது கூடத் தெரியாது என்பதை தோற்றவரிடம் கூறி நன்கு உதை வாங்குகிறார்.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அது கண்டிப்பாக அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். என் தமக்கை விஷயத்தில் அவர் அந்த உறவினர் கூறியதை லட்சியமே செய்யவில்லை. அவர் பாட்டுக்கு தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது பாட்டு ஆசிரியர் கூறியதையும் கடைபிடித்து சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

இவ்வாறு விஷயம் புரியாது அட்வைஸ் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தாங்கள் செய்ய நினைப்பதை விவாதிக்காமல் தவிர்ப்பதே நலம். அது சற்று கடினம்தான். ஏனெனில் அவ்வாறு அட்வைஸ் செய்பவர்கள் தாங்கள் தவறான கருத்தை கூறுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களே அதை முழுமையாக நம்புபவர்கள். அதுவும் ஒன்றுமே தெரியாதவன் யாரோ எங்கோ வேறு சூழ்நிலையில் எழுதியதை படித்து கருத்து கூறும்போது தான் கூறுவதில் உறுதியாக இருக்கும் மன்னர்கள் (அல்லது மன்னிகள்).

இதைத்தான் "The certainty of the ignorant" என்று கூறுவார்கள்.

இன்னும் ஆபத்தானவர்கள், தங்களுக்கு நிறைய கைவைத்தியம் தெரியும் என நம்பி மற்றவர்கள் மேல் அதைத் திணிப்பவர்கள். உங்களுக்கு நான் கூறியது புரியாவிட்டால் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்.

மேலும் கூறுவேன்.

இணைய நாடோடியுடன் சந்திப்பு


நேற்று காலை வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது இணைய நாடோடி செல்ல துரை என்னை சந்திக்க விரும்புவதாக நண்பர் மா.சிவகுமார் அவரகளிடமிருந்து செல் பேசியில் அழைப்பு வந்தது. நானும் அவரை சந்திக்க எண்ணியிருந்தேன். ஆகவே சிவகுமார் அவர்களிடம் செல்லத் துரை அவர்கள் என்னுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ள சொன்னேன். அதே போல சில நிமிடங்களில் அவரும் என்னை அழைத்தார். அப்போது வேலை எவ்வளவு நேரம் எடுக்கும் எனத் தெரியாததால் மறுபடியும் மாலை வேலை முடிந்ததும் பேசுவதாகக் கூறினேன்.

வேலை முடிய மாலை 5 ஆகி விட்டது. பிறகு செல் பேசியில் செல்லா அவர்களுடன் பேச முயற்சித்தால் செல் அணைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வந்தது (அவர் செல்லில் அப்போது சார்ஜ் தீர்ந்து விட்டிருந்தது என்பதை செல்லா நேரில் பேசும்போது தெளிவுபடுத்தினார்). ஆகவே மாசிவகுமார் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர் இரவு 8 மணியளவில் செல்லா அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருவதாக சொன்னார். நானும் வருவதாகக் கூறினேன். சிறிது நேரம் கழித்து செல்லா அவர்களிடமும் பேசி இதை கன்ஃபர்ம் செய்தேன்.

எக்மோரில் உள்ள அவர் அறைக்கு சென்றபோது மாலை மணி 7.30. சிவகுமார் அவர்கள் இன்னும் வந்திருக்கவில்லை. முதல் முறையாக சந்திக்கும்போது செல்லா அவர்களுடன் வெகு நாள் பழகியது போன்ற உணர்வு. மனிதர் துறுதுறுவென்று இருக்கிறார். செல்பேசி காமெரா இயங்கி கொண்டே இருந்தது. ஏற்கனவே எடுத்த படங்களை மின்னஞ்சல் மூலம் தனது தளத்துக்கு அனுப்பிவிட்டதாக அவர் கூறியது ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. அவ்வளவு வேகம் அவருக்கு. பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த இடத்தில் சற்றே திசை திருப்பலுக்கு மன்னிக்கவும்.

சமீபத்தில் 1964-ல் தனுஷ்கோடி புயல் முடிந்த சமயத்தில் குமுதத்தில் ஒரு கதை வந்தது. அதில் அறிஞர் அண்ணா, பெரியார், ராஜாஜி, காமராஜ் மற்றும் கதாசிரியர் ஒரு தனித்தீவில் மாட்டிக் கொண்டதாக அதில் இருக்கும். அதில் எல்லோரும் கொள்ளைக்காரர்களிடம் மாட்டிக் கொள்ள ஒரே கலாட்டா. பிறகு ராஜாஜி அவர்கள் ஒரு உபாயம் கண்டுபிடித்து, காமராஜ் மற்றும் அண்ணாவுக்கு கூற, அதன்படி போலீஸை வரவழைத்து கொள்ளையர்களைப் பிடிப்பதாகக் கதை போகிறது. அது பற்றி பிறகு. அக்கதையில் ஒரு இடத்தில் திடீரென அண்ணாவின் கை உயர்ந்து அவரால் கையை கீழே இறக்க இயலாது போக, எல்லோரும் திகைக்க, கொள்ளையர் தலைவன் மட்டும் கண்டு கொள்கிறான், அண்ணா அவர்கள் சீட்டாட்டம் ஆடும் பழக்கத்தில் அடிக்கடி டிக்ளேர் செய்வதற்காக கையை உயர்த்துவார் என்று. அதன்படி எல்லோரும் சீட்டாட ஆரம்பித்து என்று கதை மேலே செல்லும்.

இக்கதையை டோண்டு ராகவன் இங்கு ஏன் கூறவேண்டும், சமீபத்தில் 1964 என்றெல்லாம் இல்லாமல் அவனுக்கு எழுத வராதா என்று எல்லோரும் டென்ஷனுடன் குழம்பும் முன்னால் இங்கே விளக்கி விடுகிறேன். செல்லா அவர்கள் எப்போதும் இடது கையை முன்னால் உயர்த்தி வைத்துக் கொள்கிறார். அதுவும் பழக்கம் காரணமாகத்தான் என்பதற்கு இப்பதிவின் துவக்கத்தில் உள்ள போட்டோவே சான்று.

மாலை 8 மணிக்கு மேல் சிவகுமார் வந்து சேர்ந்து கொண்டார். பேச்சு பல விஷயங்களைத் தொட்டுச் சென்றது. செல்லாவும் சிவகுமாரும் பல ஆண்டுகளாக ஒருவர் இன்னொருவருக்கு பரிச்சயம், ஆகவே பேச நிறைய விஷயங்கள் இருந்ததில் ஆச்சரியமே இல்லை. ஆனால் அப்போதுதான் நேரில் சந்தித்த எனக்கும் செல்லா அவர்களிடம் நிறைய விஷயங்களைப் பற்றி பேச முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. Putting a man at ease என்பது அவருக்கு இயற்கையாக வருகிறது. மா.சிவகுமாரைப் பற்றிக் கூறவே வேண்டாம். நிறைய நேர்மறை எண்ணக் கருத்துக்களை உடையவர். அவர்கள் இருவருடன் ஒருசேர பேச முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

அரசியல் பற்றி நான் என்ன எழுதினாலும் அதை படித்து விடுவதாக செல்லா கூறினார். அவருடன் தேதிக்கு கிழமை கூறுவது, எனது வாழ்வில் சந்தித்த ஹைப்பர் லிங்க்குகள் ஆகியவற்றைப் பற்றி நான் போட்டிருந்த இடுகைகளைப் பற்றி நான் கூறியதை ஆர்வத்துடன் கேட்டார்.

செல்லா அவர்கள் அப்போது எடுக்கும் போட்டோக்களை அவர் பக்கத்திலிருந்து நகலெடுத்து எனது வலைப்பூவில் ஒட்ட அவர் அனுமதியும் பெற்றேன். இப்போது போட்டோக்கள்.


மா.சிவகுமார், டோண்டு

செல்லா, டோண்டு

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது