நான் திரும்ப பதிவு போட முனைவதில் மிக அதிகமாக மகிழ்ச்சி அடைந்தவன் முரளிமனோகர்தான். “உடனடியாக நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவு ஒன்று வேண்டும் பெரிசு எனக் கேட்டான். ஆகவே இப்பதிவு.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
சமீபத்தில் 1966-ல் காஞ்சீபுரம் பிரும்மோத்சவம் காண சின்னக்காஞ்சீபுரம் சென்றிருந்தேன். எங்கள் வீட்டுக்கார மாமா
W.P.K. ஐயங்கார் என்னை தன் குடும்பத்தாருடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். அவரது ஷட்டகர் ஜீயப்பையங்கார் வீட்டில் சன்னிதித் தெருவில் தங்கியிருந்தோம். தான் எங்கு சென்றாலும் என்னையும் கூடவே அழைத்துச் செல்வார் அவர். எங்கள் இருவரையும் ஒருசேர பார்த்ததில் உள்ளூர்க்காரர்கள் அதிர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. இல்லையா பின்னே, தென்கலை நாமக்காரரும் வடகலை நாமக்காரரும் (அடியேன்) ஒன்றாக உலா போவது ஆச்சரியம்தானே. சாதாரண சமயங்களில் உயிர்த்தோழர்களாக இருப்பினும் பிரும்மோத்சவ சமயத்தில் மட்டும் வடகலையாரும் தென்கலையாரும் கீழே இருப்பதுபோல ஒன்றாக சேரமாட்டார்கள் என எங்கள் வீட்டுக்கார மாமா கூறியுள்ளார். பை தி வே இவ்வளவு ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்தாலும் நான் வீட்டுக்கார மாமா என குறிப்பது அவரைத்தான்.


அதை விடுங்கள். பதிவில் இனி நாமங்கள் வராது. நான் கூற வந்தது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் பற்றித்தான். திருப்பாவை பற்றிய அவரது உபன்யாசங்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல ஞானஸ்தர். அவரை அண்ணா என்றும் குறிப்பிடுவார்கள். அவர் பற்றி இன்று வெளியான துகள்க்கில் சாரு நிவேதிதா எழுதியுள்ளார் (30.03.2011, பக்கம் 16-17). வாங்கி படிக்கவும், சுவாரசியமாகவே உள்ளது. அவர்தான் உண்மையான பேரறிஞர் அண்ணா என சாரு கூறுவதும் ஏற்கத் தக்கதே. [அவர் கூறியது, “தமிழில் எல்லா சொற்களுமே அவற்றின் உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டன. பெர்னாட் ஷாவைப் படித்திருந்ததால் ‘தென்னகத்து பெர்னார்ட் ஷா’ என்ற பட்டம், ஆங்கிலம் அறிந்ததால் ‘அறிஞர்’ பட்டம்’].
30.03.2011 தேதியிட்ட துக்ளக்
மன்மோகன் சிங் பற்றி சில வரிகள்.
1. அன்றைய பாராளுமன்றத்தில் நடந்ததை, இன்றைய பாராளுமன்றத்தில் கவனிக்க முடியாது - என்றும் கூறியிருக்கிறார். உண்மைதான். ஆனால் இன்றைய பிரதமரின் புகழ்பெற்ற ‘நேர்மை’ அன்றே என்ன கதி ஆகியது என்பதை இன்றாவது அறிந்து கொள்ள மக்கள் கடமைப்பட்டவர்கள்.
2. [மன்மோகன் சிங் பெயரளவுக்கு மட்டுமே பிரதமர் என விக்கி லீக்ஸ் கூறியதற்கு பதில்]: விக்கிலீக்ஸ் ரகசியத் தகவல்களைத்தானே வெளியிடும்? இதில் என்ன ரகசியம் இருக்குது?
டோண்டுவின் கேள்வி. எதுவுமே தமக்குத் தெரியாது என வெட்கமில்லாமலேயே கூறுகிறாரே, சோறுதானே சாப்பிடுகிறார்?
96 வயது வரை வாழவேண்டும் மாமா
என் அத்தைப் பிள்ளையும் பிற்காலத்தில் என் மைத்துனனாகவும் தங்கையின் கணவனாகவும் வரவிருந்த ஸ்ரீதரனும் நானும் என் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவன் சொன்னதுதான் மேலே உள்ளது. எங்கள் இருவருக்கும் அப்போதைய வயது 12. அவன் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட என் தந்தை அது மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டினார்.
அவர் கூறியதாவது, “உன் சமகாலத்தவர் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள். உன் நினைவுகளை உனக்கு ஈடாகப் பகிர்ந்து கொள்ளவும் ஆட்கள் கிடைக்காது. அது ஒருவித சித்திரவதையே”.
இந்திரா பார்த்தசாரதி அவர்களது ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் கடைசி காட்சியில் அவரது தனிமை மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தனை உறவினர்களைக் கொன்று வெற்றி பெற்ற அவருக்கு கடைசியில் அத்தனையும் வியர்த்தமே எனத் தோன்றுவதாக எனக்குப் பட்டது. ஏனெனில் அவர் வெற்றியை ஒரு புரிதலோடு ஏற்றுக் கொண்டு அட்மைர் செய்யவோ, பொறாமைப்படவோ யாருமே இல்லை என்பதுதான் நிஜம். He was just left alone and only an ignored man knows what this means.
பாண்டவ குமாரர்களை அவர்கள் தூங்கும்போது கொன்ற அசுவத்தாமனுக்கு அவன் இறப்பின்றி காலகாலத்துக்கும் பூமியில் அலைய வேண்டும் என்பதே பெரிய சாபமாக கிருஷ்ணர் தருகிறார். அதற்கு அவன் பதறுகிறான், புலம்புகிறான். ஆனால் பலன் ஏதுமில்லை. பல ஆண்டுகளாகத் திரியும் அவன் தனது கடந்தகால கசப்பான நினைவுகளுடனேயேதான் வளைவர வேண்டும். கூடவே புதிதாக அவனது செயல்பாடுகள் குறித்து சீறலோடு கேட்பவர்களையும் சமாளிக்க வேண்டும். ஆகவே என்ன செய்திருப்பான் என்றால் ஆட்டமேட்டிக்காக கிருஷ்ணர் சொன்னது போல் பூமியில் இங்குமங்கும் அலைய வேண்டும். அதுவும் தான் யார் என்பதை சட்டெனக் கூற முடியாத நிலை. யாருமே அவனது செயலை மறக்கத் தயாராக இல்லை என்பதுதானே அவனைப் பொருத்தவரை நிஜம்?
இங்கு ஸ்ரீதரன் விஷயத்துக்கு வருவோம். நீண்ட நாள் வாழ்வதின் வியர்த்தங்களை எடுத்துக் கூறிய என் தந்தை அவரது 67-ஆம் வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்? ஸ்ரீதரன்? 53 வயதுகூட நிரம்பாத நிலையில் எங்களை தவிக்க விட்டுச் சென்றான். உறவினன் பல வகையில் எனக்கு என்பதைவிட அவன் என்னுடைய சிறந்த நண்பன் என்பதுதான் நிஜம்.
நான்? இப்போதும் எங்களது பல பொது நினைவுகளை என்னால் பலருடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்களில் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் இருந்த மாதவராவ் என்னும் பையனை வம்புச்சண்டைக்கிழுத்து அடிப்பது. ஸ்ரீதரன் அவன் மரணத்துக்கு சில மாதங்கள் முன்னால் கூட நானும் அவனும் அதைச் சொல்லிச் சொல்லி சிரித்து மாளவில்லை. அவன் மனைவி (என் தங்கை) “ ரெண்டு பேரும் துஷ்டப்பசங்களாகத்தான் இருந்திருக்கீங்க” என நொடித்தாள்.
இனி எனக்கு என்ன வாய்த்திருக்கிறதோ தெரியவில்லை.
ஒரு வேளை 96 வயது வரை வாழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? இளைஞ்ர்களை அதிகம் நண்பர்களாகப் பெற்றுச் செல்வதுதான் ஒரே வழி. செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. யார் கண்டது, நான் ஏற்கனவே சொன்னதுபோல 2078-லும் உயிரோடு இருந்து, நான் பதிவிடும்போது சமீபத்தில் 2008-ல் என எழுத, அப்போதைய மடிப்பாக்க ஆஸ்தான பதிவர், “நம்ம கொள்ளுத் தாத்தா அடிக்கடி சொன்னது போலவே இந்த மாதிரி ஆள் ஒருத்தர் நிஜமாகவே இருந்திருக்கிறார் போலிருக்கே” எனப் புழுங்கலாம்.
கிரிக்கெட் மேட்சில் இந்தியா வெற்றி
நானும்
கிரிக்கெட் பார்க்கும் விஷயத்தில் எங்கள் வீட்டுக்கார மாமா W.P.K. அய்யங்காரைப் போலத்தான்.
அவர் பம்பாயில் பல ஆண்டுகள் ரயில்வேயில் வேலை செய்துவிட்டு ரிடையர் ஆனவர். அவருக்கு பம்பாய் டீமை பிடிக்காது. அந்த டீம் இந்திய கிரிக்கெட் டீமை ரொம்பத்தான் ஆளுமை செய்கிறது என்பது அவர் எண்ணம். ஆகவே கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டி மேலும் அவருக்கு சுத்தமாக நல்ல அபிப்பிராயம் கிடையாது.
அறுபதுகளில் ஒரு சமயம் மேற்கிந்தியத் தீவுக்கு இந்திய கிரிக்கெட் டீம் சென்றது. டீம் உறுப்பினர்களை செலக்ட் செய்து ரேடியோவில் அறிவித்தார்கள். அச்சமயம் W.P.K. ஐயங்கார் அவர்கள் வீட்டில் இல்லை. வந்ததும் வராததுமாக என்னை அழைத்து கேட்டார்:
"என்ன டோண்டு, கிரிக்கெட் டீமை சொல்லிட்டாங்களா?"
நான்: "ஆயிற்று மாமா"
அவர்: "வெங்கடராகவன் டீமில் இருக்கானா?"
நான்: "இல்லை மாமா."
அவர்: "உருப்படாதுன்னா, நம்ம டீமுக்கு அஞ்சு மேட்சிலும் உதைதான்".
மேலே பேச விருப்பமின்றி அவர் சென்றார். ஆனால் அந்தோ, அவர் கூறியது அப்படியே பலித்தது. நன்றாக வேண்டும் இந்தியாவுக்கு என்றுதான் எனக்கும் அவருக்கும் அப்போது தோன்றியது.
நல்லதுக்கு காலம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அதை விடுங்கள். நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை இந்தியா ஆடும்போது பார்த்தேன். ட்விட்டரில் இந்தியர்கள் கோட்டை விடும்போது
பாரா, மாயவரத்தான், போன்றவர்களது எதிர்வினைகளையும் பார்த்தேன். மாயவரத்தான் மடிக்கணினியுடன் ஆஜராகியிருந்திருக்கிறார். ஆகவே பந்துக்கு பந்து கீச்சுகள் அவரது கணினியிலிருந்து வந்த வண்ணம் இருந்தன.
ஆனால் நான் மேட்சை முழுமையாக பார்த்ததாகக் கூற முடியாது. முந்தானை முடிச்சு, நாதஸ்வரம், தங்கம், தென்றல் ஆகிய சீரியல்கள் மிஸ் பண்ண முடியாத கட்டங்களில் உள்ளன. இருப்பினும் மேட்சையும் அவ்வப்போது விளம்ப்ர சீரியல்களின் இடைவேளைகளில் பார்த்தேன் என வைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியில் நானும் மடிக்கணினியுடன் டிவி முன்னால் ஆஜர் ஆனேன். மற்றவர்களைப் போலவே உடனுக்குடன் கமெண்ட் போடுவதும் நன்றாகவேதான் உள்ளது.
கடைசியில் இந்தியா வெற்றி பெற்றது என்பது இதற்குள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்