2/04/2013

ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((

திண்ணையில் வந்த இக்கட்டுரையைப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்:

5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை செய்த சவுதி இஸ்லாமிய பிரச்சாரகர் விடுதலை

லாமியா அல் காம்தி என்ற 5 வயது குழந்தை டிசம்பர் 25 ஆம் தேதி 2011இல் பலவிதமான காயங்களுடனும், நசுக்கப்பட்ட தலையுடனும், உடைக்கப்பட்ட நெஞ்செலும்பு, இடது கை, உடலெங்கும் காயங்களும் சூடுகளும் போன்ற பலவிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்குழந்தை அக்டோபர் 22 ஆம் தேதி 2012இல் மரணமடைந்தது.

இந்த குழந்தையின் தந்தை பாயன் அல் காமிதி என்பவர் இஸ்லாமிய பிரச்சாரகர். இவர் முஸ்லீம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்து இஸ்லாமை விளக்குபவர். இவர் கம்பிகளாலும், குச்சிகளாலும் இந்த குழந்தையை சித்ரவதை செய்ததை ஒப்புகொண்டிருக்கிறார் என்று Women to Drive என்ற சவுதி பெண்கள் குழு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தந்தை லாமியாவின் கன்னித்தன்மையை சந்தேகித்தார் என்றும், அந்த குழந்தையை ஒரு மருத்துவர் மூலம் பரிசோதித்தார் என்றும் தெரிவித்திருக்கிறது இந்த குழு.

ராண்டா அல் கலீப் என்ற மருத்துவமனை சமூகசேவகி இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர். அந்த குழந்தையின் முதுகு உடைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த குழந்தை உடலெங்கும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

”அந்த குழந்தையின் மலத்துவாரம் கிழிக்கப்பட்டு பிறகு அதனை சூடு வைத்து மூட முயற்சிக்கப்பட்டிருக்கிறது” என்றும் அந்த குழந்தையின் தாயார் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

தந்தை இதுவரை சிறையில் இருந்த காலமே அவருக்கு தகுந்த தண்டனை என்றும், அவர் அந்த குழந்தைக்காக ரத்தப்பணத்தை அந்த குழந்தையின் தாயிடம் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே இஸ்லாமிய நீதி என்றும் நீதிபதி  தீர்ப்பு அளித்திருப்பதை பெண்கள் உரிமை குழு எதிர்க்கிறது.

மனல் அல் ஷரிப் உட்பட மூன்று சவுதி பெண்கள் உரிமை போராட்டக்காரர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்திருக்கிறார்கள்.  
ஒரு தந்தை தன் குழந்தைகளை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்க முடியாது, ஒரு கணவன் தன் மனைவியை கொன்றதற்கு மரண தண்டனை கொடுக்கமுடியாது என்ற இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக வைத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
நன்றி: திண்ணை

இச்செய்திக்கு சுவனப்பிரியர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்? இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியும் இசுலாமிய மதச்சட்டத்தின்படித்தான் செய்ததாகக் கூறிக் கொள்வார்.

பதிவர் நந்தவனத்தான் அவர்களது பின்னூட்டம் இதே விஷயம் பற்றிய இன்னொரு பதிவில் இதோ. அது எனது கருத்துமாக இருப்பதாலேயே அதையும் இங்கே இடுகிறேன்.

குழந்தையை வன்கொடுமை செய்யபவர்களை கொன்றுவிட வேண்டும் என்பதுதான் எமது கருத்து. அல்லது குறைந்த பட்சம் ஆயுட்சிறை அளிக்கவேண்டும். ஏனெனில் இக்குற்றவாளிகள் மனநோயாளிகள். இவர்களை சில வருடம் சிறையில் வைத்துவிட்டால் வெளியில் வந்து அதையே திரும்ப செய்வார்கள். இவர்களை திருத்தவே இயலாது.

ஆனால் அப்படிப்பட்ட குற்றவாளி, அதிலும் சொந்த மகளை வன்புணர்வு செய்ததோடு மட்டுமல்லாது அவளை சித்திரவதை செய்த ஒருவனை தண்டிக்காமல் விட ஆண்டவன் ஒரு சட்டம் போட்டிருக்கிறான் என்றால் திருவள்ளுவர் மாதிரி 'கெடுக உலகு இயற்றியான்' எனத் தோன்றுகிறது (அவன் இருந்தால்).

இதை பீ மாதிரியான மதத்தலைவனுக ஆதரிப்பானுக அடத்தூ! பிறரின் அப்பா மகள் உறவை ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள், அந்த சிந்தனை எங்கிருந்து வருகிறது என்பது இப்போதுதானே புரிகிறது. இவனுகளுக்கு பிள்ளையாக பிறந்த பெண்களை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது
.

ஒரு 17 வயதுப் பெண் குழந்தைக்கு உணவளிக்கும் தவற்றைச் செய்ததற்காக அவள் தலையை வெட்டிய சவுதி அரசு இப்போது பல்லிளித்துக் க்ண்டு நிற்கிறது.

கொலைகாரப் பாவி


கொலையுண்ட மலர் பிணமாகவும் உயிரோடு இருந்த் போதும்


அதே திண்ணைக் கட்டுரையில் வந்த இன்னொரு செய்தி:

பெண்மகவைக் கொல்லும் தந்தைகளுக்கு எதிரான குரானின் போதனைக்கும் எதிராக இந்த தீர்ப்பு செல்கிறது. ஹதிஸ் “குழந்தையின் சாவுக்கு தந்தைக்கு  மரண தண்டனை கிடையாது” என்ற ஹதீஸின் அடிப்படையில் இந்த தீர்ப்பு சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பின் நீண்டகால விளைவை கணக்கில் எடுத்துகொள்ளாமல், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுஹைலியா ஜைனுலபிதின் என்ற மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர் கூறுவதன் படி, தன் மகளை சித்ரவதை செய்து கொன்ற ஒரே ஒரு தந்தைக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதே போல, தன் மனைவியை கொன்ற கணவன்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்கிறார்.  இதற்கு இரண்டு உதாரணங்களை தருகிறார்.  தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனுக்கு ஐந்து ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது. இன்னொரு வழக்கில் தன் மனைவியை தன் காரின் பின்புறத்திக் கட்டி அவள் சாகும் வரை வண்டி யோட்டி கொன்ற கணவனுக்கு 12 வருட தண்டனை வழங்கப்பட்டது.

ஆண் கார்டியன்களுக்கு தங்கள் பாதுகாப்பில் உள்ளவர்களை கொல்வதற்கு இந்த தண்டனைகள்தான் கிடைத்தால், ஏன் இப்படிப்பட்ட தீச்செயல்கள் தொடராது? இந்த ஆண் கார்டியன்கள் தங்களது பாதுகாப்பில் உள்ள  பெண் குழந்தைகளை  சட்டப்பூர்வமாக விற்க அனுமதி பெறுகிறார்கள். குழந்தைகளை முக்கியமாக பெண் குழந்தைகளை காப்பாற்ற சட்டங்களே இல்லை.  ஷூரா கவுன்ஸிலில் குழந்தை பாதுகாப்பு சட்டம் என்று பிரேரணை செய்யப்பட்டபோது, குழந்தை என்று யாரை வரையறுப்பது என்று சிக்கல் வந்ததால், குழந்தை திருமணத்தை கூட தடை செய்யமுடியவில்லை.  தன் பெண் குழந்தைகளுக்கான கஸ்டடியை பெற முடியாததால், தந்தைகளால் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்குழந்தைகளின் கதைகள் ஏராளமாக இருக்கின்றன.

கணவனால் அடிக்கப்பட்ட பெண் போலீசுக்கு போனால் என்ன நடக்கும் என்று  ஒரு பெண் சமூக சேவகி விவரித்தார்.  அந்த போலீஸ் உடனே  Commission for the Promotion of Virtue and Prevention of Vice (CPVPV) அமைப்பையும், அந்த பெண்ணின் ஆண் கார்டியனையும் கூப்பிடும். பெரும்பாலான நேரங்களில் அந்த ஆண்கார்டியனே அந்த பெண்ணை அவலத்துக்கு ஆளாக்குபவர். ஆகவே அந்த பெண்ணை சுற்றி, மத குருக்களும், போலீஸும், அந்த பெண்ணை அடிப்பவரும் சுற்றி நிற்பார்கள். அந்த பெண்ணையும் அந்த ஆண்கார்டியனையும் சேர்த்து வைப்பதுதான் அங்கிருப்பவர்களின் பணி.  நான்கு மணி நேரம் அந்த பெண்ணை அந்த ஆணுக்கு அடங்கிப்போக வற்புறுத்துவார்கள். அதன் பின்னரும் அந்த பெண் பிடிவாதமாக இருந்தால்தான் பாதுகாப்பு வழங்கப்படும்.

தன் மகளையும் தன் மனைவியையும் வன்முறைக்குள்ளாக்கிய ஆணுக்கு தண்டனை வழங்கப்பட்ட வரலாறே இல்லை.  சில நேரங்களில் சிலமணிநேரம் சிறை தண்டனை, இல்லையென்றால், இனி செய்யமாட்டேன் என்று எழுதித்தர வேண்டும். அவ்வளவுதான்.

இந்த ஆண் கார்டியன் அமைப்பு பெண்களை ராணிகளாக வைத்திருக்கிறது என்று இதற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள் கூறுகிறார்கள். 
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/

அடத்தூ, ஈனப்பிறவிகளா!

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

2/02/2013

சோ அவர்களும் விஸ்வரூபமும்

கோவி கண்ணன் அவர்களது இது பற்றிய இப்பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுவது:
”விஸ்வரூபம் குறித்த சோ வின் உணர்வுகளாக நீங்கள் எழுதியிருப்பவை பொறுப்பான, பண்பான விமர்சன ரகத்தில் சேரும். ஆனாலும் அதில் எனக்கு ஏற்பு இல்லை. படத்தில் தவறாக ஏதும் சொல்லப் படாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு புறப்பட்டது உண்மை. அந்த எதிர்ப்பை மீடியா ஊதிவிட்டதும் உண்மை. அந்நிலையில் படம் வெளிவந்திருந்தால் கலவரங்கள் வந்திருக்கலாம். அப்போது சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் படத்தை ஒத்தி வைக்கிற வேலையை அரசாங்கம் செய்தது. அது அவசியம். அதைச் செய்யத்தான் வேண்டும். அதனால்தான் சோ அதைச் சரியென்று சொல்லியிருக்கிறார்- இது என் புரிதல்”.

எனது புரிதலும் இதுதான். ஆனால் இந்த விஷயத்தில் நான் சோ சொன்னதுடன் ஒத்துப் போகவில்லை என்ப்தையும் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் சோ அவ்ர்களது கருத்துடன் ஒத்துப்போகாது இருக்கும் இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் சற்று மேலும் யோசித்ததில் இப்போது சோ கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறதுதான். இருந்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது. ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்தில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் காட்டப்படும் ஆதரவுகளால் அவருக்கு பொருள் நட்டம் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

இதில் இசுலாமிய அவதூறு ஏதும் இல்லை என நான் புரிந்து கொண்டதும் உண்மைதான் என்பதை கோவி கன்ணன் அவர்களது மேலே சுட்டப்பட்ட பதிவு உறுதி செய்தது குறித்தும் சந்தோஷமே.

சீக்கிரம் தடைகளெல்லாம் நீங்கி இங்கும் விவரூபம் எழட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/28/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 28.01.2013

பட்டுக்கோட்டைக்கு வழி என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தமிழ் இலக்கணத்தை சீர்யசாகவே சொல்லிக் கொடுப்பதுண்டு. அதில் “விடை வழு (பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்) என்பது அடங்கும். அதற்கு சிறந்த உதாரணங்கள் நம்ம தமிழ் ஓவியாவின் கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே என்றால் அது மிகையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது லேட்டஸ்ட் பதிவையே நோக்கலாம்.

அப்பதிவிலிருந்து:
”ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.

இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.

அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது”.

இதைத்தான் self fulfilling prophecy எனச் சொல்வார்கள். புலி வருது கதையைப்போல எனவும் கூறலாம். இப்பார்ப்பனனை விடுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் தன் புது மனைவி கோவிலுக்குச் செல்லும்போது தன் நண்பர்களிடம் அவள் ஊருக்கு புதிதாக வந்த தாசி எனக்கூறி அவளை கேலி செய்ய வைத்தாராம். பெரியவர் வாக்கு பலித்திருக்குமோ?

நிற்க. இதில் விடை வழு எங்கிருந்து வருகிறது எனக் கேட்கிறீர்களா? அப்ப்திவுக்கு 16 பின்னூட்டங்கள், ஒன்றுகூட பதிவுடன் சம்பந்தப்பட்டதில்லை என்பத்தான் விசேஷம். இந்த மனிதரது கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலுமே இந்த நிலைதான், அதாவது காபி பேஸ்ட் விவகாரங்கள்..

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இம்மாதிரி எல்லாம் கேனத்தனமான விடைகள் வருமா என வியந்ததுண்டு. இப்போது அவ்வியப்பு போயே போயிந்தி.

விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.

மதுரா விஜயம்:.
வெள்ளீயன்று மதுரை வந்தேன், இன்று {திங்கட்கிழமை) சென்னைக்கு செல்கிறேன். நான் மதுரையில் இருந்தவரை குருட்டு  அதிர்ஷ்டம், பவர்கட் லேது.

சனியன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை தரிசிக்கச் சென்ற நேரத்தில் பவர் கட் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று காலை எட்டு மணிவாக்கில் கிளம்பும்வரை அது இல்லாமலிருந்தால் அதிர்ஷ்டம்தேன்.

அப்டேட் (18.06 மணி, 28.01.2013)
 சென்னை வந்தாகி விட்டது. காலை 10.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினேன். நோ பவர்கட். சந்தோஷமாக இருந்தது.

தென்றலாக வந்த புதிர்:
மிருதுவாக இப்புதிர் தோன்றியது.
ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்.


அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2013

எப்போதுமே மூலமொழியில்தான் படிப்பேன் என இருக்க முடியுமா?

எனக்கு, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்திருப்பதால் அம்மொழியில் உள்ள புத்தகங்களை அந்தந்த மொழியிலேயே படிப்பதுதான் நல்லது என இருப்பேன். ஆனால் இது எப்போதுமே வேலைக்காகாது.

ஆர்.கே. நாராயணனின் Swamy and friends நாவலை நான் முதன்முதலாக ஸ்வாமியும் சினேகிதர்களும் என்னும் தலைப்பில் படித்தபோது அது மொழிபெயர்ப்பு என்பது எனக்குத் தெரியாது. பிறகு ஆங்கிலத்தில் அதை கண்டபோது அதை படிக்க ஆவல் எழவில்லை. ஏனெனில் தமிழில்தான் அக்கதை பாந்தமாக இருந்தது.

அதே போல அருந்ததி ராயின் God of small things ஆங்கில மூலத்தில் படித்தபோது தமிழ் அல்லது மலையாளத்தில்தான் அது அதிக பாந்தமாக இருந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் தவிர்க்க இயலவில்லை.

ஹாரி பாட்டர் நாவல்களை ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய மொழிபெயர்ப்புகளிலும் நான் படித்தது நானே ஒரு மொழிபெயர்ப்பாளன் என்பதற்காகவும் அந்த மூன்று மொழிகளிலுமே அவை பாந்தமாகவே இருக்கும் என்பதாலும்தான். அவை விதி விலக்குகள்.

இதையெல்லாம் இப்போது இங்கே கூற காரணம் என்னவென்றால் இப்போதுதான் பி.ஏ. கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை படித்து முடித்தேன். அதே போல சில மாதங்களுக்கு முன்னால் புலிநகக் கொன்றையைத்தான் படித்தேனே தவிர அதன் ஆங்கில மூலத்தைப் (Tiger claw tree) படிக்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழில்தான் அவை அதிகப் பாந்தமாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

புத்தகக் கண்காட்சியில் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி மற்றும் அக்கிரகாரத்தில் பெரியார் வாங்கினேன். இரண்டையுமே ஒரே மூச்சில் படித்து விட்டேன்.

ச்ரி,  இப்போது கலங்கிய நதியை பார்ப்போம். அதன் கரு ஒரு ஆள் கடத்தல் பற்றியது. அது உண்மை நிகழ்ச்சி, அதில் பி.ஏ.கிருஷ்ணனும் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்டிருந்திருக்கிறார் என்பதை அக்கிரகாரத்தில் பெரியார் கட்டுரை தொகுப்பில் பார்த்தேன். ஆகவே கலங்கிய நதியை ஈடுபாட்டுடன் படித்தேன்.

நம்ம ஜெயமோகனின் வார்த்தைகளில், “இரு வலுவான உவமைகள் வழியாக ரமேஷ் சந்திரனின் அந்த எண்ணம் நாவலில் பதிவாகிறது. ஒன்று, பறவைகள் கூட்டம்கூட்டமாகத் தற்கொலைசெய்துகொள்ளும் ஜதிங்காவின் சித்தரிப்பு. விளக்கமுடியாத ஏதோ காரணத்தால் பறவைகள் அங்கேவந்து உயிர்விட்டுக்கொண்டே இருக்கின்றன. இரண்டாவது உவமை ஆந்திராவில் சிம்மாசலத்தின் கிருஷ்ணன் கோயிலுக்குக் காணிக்கையாக்கப்படும் கன்றுகள் உடனே கசாப்புக்கடைகளுக்கு விற்கப்படுதல். கடவுளின் காணிக்கையாகச் சென்று அவ்வழியே மரணம் நோக்கிச் செல்கின்றன அவை”.

இந்த நிகழ்வுகளை நாவலில் படித்தபோது அன்றிரவு தூக்கம் தொலைத்தேன். மனதில் தாளமுடியாத சோகம். கன்றுகளின் விஷயம் என்னை விக்கி விக்கி அழச்செய்தது.  ஏனெனில் நான்தான் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் ஆயிற்றே. இப்படியெல்லாம்கூடவா கொடுமை நடக்கிறது?

ஒரு கதையில் இன்னொரு கதை, நாவலுக்கான விமரிசனம் வேறு கதாபாத்திரங்கள் வாயிலாக என அட்டகாசமாக கதை செல்கிறது. இதைத்தான் லீனியர் எடிட்டிங் என்பார்களோ [டவுட்டு :))]

பை தி வே, வாங்கிய வேறு புத்தகங்கள், இலவசக் கொத்தனாரின் ஜாலியா இலக்கணம், மற்றும் இந்திரா பார்த்தசாரதியின் வேர்ப்பற்று ஆகியவை. இரண்டாவதை படித்தாயிற்று.இலக்கண புத்தகம் நிதானமாக பார்க்க வேண்டியது..

அவற்றைப் பற்றி பிறகு பார்ப்போமா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/19/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 19.01.2013

சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு
சிலுக்கு செயலாக இருந்தபோது நான் படித்தது, இங்கு இற்றைப்படுத்தப்படுகிறது..

பாற்கடலில் எம்பெருமான் பள்ளி கொண்டுள்ளார் பாம்பணையின் மேல். அவர் காலை பிடித்தவாறு லக்ஷ்மி. பிரும்மதேவன் சூழ தேவர்கள் வருகின்றனர்.

தேவர்கள்: பிரபோ அபயம் நாடி இங்கு நாங்கள் வந்தோம்.

மகாவிஷ்ணு: வாருங்கள் தேவர்களே, என்ன விஷயம்?

தே: பூலோகத்தில் கலி ரொம்பவும் முற்றியாகி விட்டது பிரபோ. நீங்கள் சொன்ன சம்பவாமி யுகே யுகே கான்சப்ட் படி நீங்கள் இன்னொரு அவதாரம் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

: (திடுக்கிட்டு): என்ன பூலோகமா, அது இன்னுமா இருக்கிறது?

தே: இப்படிச் சொன்னால் எப்படி பிரபோ, நீங்கள் அறியாததா?

: ஓக்கே, ஓக்கே டென்ஷன் வேண்டாம். எனது முகநூலில் ஸ்டேடஸ் பார்க்க மிஸ் ஆகிவிட்டது. இப்போ கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், பிறகு பார்க்கலாமே

தேவர்கள் இதை எதிர்த்து கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.

- மகாவிஷ்ணு அண்ணாச்சி, உங்க வாக்குறுதி என்னாச்சி?
- தூங்கியது போதும் அண்ணாச்சி, காரியம் வேணும் அண்ணாச்சி!
- சம்பவாமி யுகே, யுகே, பூலோகத்துள் நீங்கள் புகே, புகே.

இவ்வாறாக பலர் பல கோஷங்கள் போட, ஒருவர் மட்டும் “சிலுக்கு, சிலுக்கு, சிலுக்கு! வராட்டா ஆகும் பொடுகு பொடுகு, பொடுகு!” என கத்திக் கொண்டே நடனமாடுகிறார்.

பிறகு மகாவிஷ்ணு வாக்களிக்கிறார் என வைத்துக் கொளுவோம். ஆனால் அவருக்கு கடைசி கோஷம் குறித்து மண்டை காய்கிறது. அச்சமயம் அப்பக்கம் “நாராயண, நாராயண” எனக் கூறிக்கொண்டே வ்ரும் நாரதர் விஷ்ணுவுக்கு விளக்குகிறார். ”பிரபோ, இதுதான் இப்போ பூலோகத்தில் ஃபேஷன். எல்லாத்திலேயும் சிலுக்கை இழுப்பதுதான் அது”. சிலுக்கு பற்றி மேலும் கூற, மகாவிஷ்ணு சிந்தையில் ஆழ்கிறார்.

அப்போது லக்ஷ்மிதேவி கேட்கிறார், “பிரபோ என்ன யோசனை”?

மகாவிஷ்ணு கூறுகிறார், ”சிலுக்கு சிலுக்கு காலை நல்லா அமுக்கு, அமுக்கு”.

“யூ டூ”? என கோபிக்கிறார் மகாலட்சுமி.

பிறகு மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து, எல்லோரையும் நல்லவர்களாக்கிவிட, நாட்டில் இனிஷியேட்டிவ் எடுப்பவர்கள் இல்லாமல் போகிறார்கள், எல்லாமே பக்தி பஜனை கூடங்களாகின்றன என்றெல்லாம் கதை போகிறது..

கதையின் நீதி யாது எனக் கேட்டால் கெட்டதும் முக்கியம் என்றே வருகிறது. நீங்களே சொல்லுங்கள், வில்லன், வில்லி இல்லாமல் கதை போகுமா?

சோ அவர்கள் அதிமுக பக்கமே அதிகமாகச் சாய்கிறார் 
இப்போதிருக்கும் நிலைமையில் வேறு என்ன செய்ய முடியும்? நான்கு பிள்ளைகளில் நல்லவன் யாரென ஒரு தகப்பனைக் கேட்க அவனோ, கூரைமேல் தீப்பந்தத்துடன் நிற்பவனே நல்லவன் எனக் கூறுவதாக ஒரு கதையும் உண்டு.

நான் ஏற்கனவேயே கூறியது போல, ”மோதி மாதிரி எல்லோரும் இருப்பதில்லையே, ஆகவே அவர் மாதிரி ஒருவர் நமக்கு முதல்வராக கிடைக்காதவரை ஜெயலலிதாவா, கருணாநிதியா என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருவரும் தேறவில்லை எனக்கூற ஐந்து நிமிட்ங்கள் கூட ஆகாது. ஆனால் அவ்வாறு இருப்பது காரியத்துக்காகாது.

இதைத்தான் சோ பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி வருகிறார். அவரது செயல்பாடுகளும் இம்மாதிரித்தான்.

மேலும் ஜெவுக்கு செம்பு அடிப்பதால் அவருக்கு என்ன லாபம்? தன் சுய தேவைகளுக்காக சோ அவர்கள் யாரிடமும் இதுவரை கையேந்தியதில்லையே. அதை நாம் மறக்கக் கூடாது”.

Form 26 AS:
வரவர இந்த வருமானவரித்துறையின் லொள்ளுக்கு அளவில்லாமல் போயிற்று. சில பணவரவுகளுக்கு முதலிலேயே வரி பிடித்தம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டியது பணம் தருபவரது கடமை. இதை TDS (Tax deduction at source) என்பார்கள். நமக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் தருவார்கள். அதுதான் படிவம் 16 ஏ. பல கம்பெனிகள் இங்குதான் அழும்பு செய்யும். வரியை பிடிப்பார்கள், ஆனால் கருவூலத்தில் அதை செலுத்த சரியான நேரத்தில் மாட்டார்கள். படிவம் எண் 16 ஏ தராமல் நம்மைத் தொங்கலில் விடுவார்கள். அதை வாங்குவதற்குள் நமது தாலி அறுந்து போகும்.

அதற்குத்தான் அரசு படிவம் 26 ஏஎஸ் கொண்டு வந்தது. அதை நாம் இணையத்தில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கென் பல வழிமுறைகள் உண்டு. திடீரென அதிலும் குழப்பம் வந்தது. அக்டோபர் 31, 2012-க்கு பிறகு இப்படிவத்தில் இற்றைப்படுத்தலே இல்லை. முட்டி மோதி விசாரித்ததில் அப்படிவத்தின் தளம் மாற்றப்பட்டது எனத் தெரிகிறது. (சொல்லவே இல்லை!)  புதிய தளத்தில் மறுபடி பதிய வேண்டும். நேற்று கிட்டத்தட்ட 3 மணி நேரம் மன்றாடிய பின்னர்தான் அதுவும் நடந்தது.

எனது கேள்வி இதுதான். படிப்பறிவு பெற்ற நாமே இப்பாடுபடும்போது, மற்றவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோருமே வரி ஆலோசகர்களை நியமித்துக் கொள்ள இயலுமா?

மானிய விலையில் வருடத்துக்கு 9 கேஸ் சிலிண்டர்கள் எனச் சலுகை உயர்வு:
நிலைமையில் தெளிவு இல்லை. ஒரே கெடுபிடிதான். இத்தனைக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். தற்சமயம் வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 398 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை சுமார் 890 ரூபாய்கள்.

என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை.

இண்டேனுக்கு அரசு அளிக்கும் த்கையும் திருப்திகரமாக இல்லை.ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திரச் சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு என்ன வழி? எனக்குத் தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை மொத்தமாக ஒழியுங்கள், அல்லது கணிசமாகக் குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு அரசு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

இவ்விஷயத்தில் இந்திய உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை  மோதி பதவிக்கு வந்த சமயத்தில் குஜராத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழக அரசு வழ்ங்கும் மின்சாரம் போல எப்போதாவதுதான் வந்தது.

மோதி ஒரே ஒரு ப்ரபோசலை வைத்தார், பணம் கட்டுங்கள் 24 மணிநேர மின்சாரம் என்று. அவர்களும் ஒத்து கொண்டனர். குஜராத் இப்போது விவசாயத் துறையில் அமோகமாக முன்னேறியுள்ளது என்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

அதே மாதிரி சமீபத்தில் 1952-ல் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவியேற்ற ராஜாஜி அவர்கள் செய்த முதல் காரியம் ரேஷன் முறையை விலக்கிக் கொண்டதே. அதனால் பல பொருள் விரயங்கள் தடுக்கப்பட்டு, நாடு முழுவதிலும் அது அமுலுக்கு வந்தது. 1964 வரை ரேஷன் முறை இல்லாமல்தான் இருந்தது. அவ்வாண்டு ரேஷன் மீண்டும் வந்ததிலிருந்து இன்றுவரை நிலைமை விரயங்களுடன் அப்படியே உள்ளது. நமக்கெல்லாம் இன்னொரு ராஜாஜி அல்லது மோதி தேவை.

ஆக, சப்சிடி சிலிண்டர்களது எண்ணிக்கை வருடத்துக்கு 6 என கட்டுப்படுத்தியது நல்ல, சரியான ஸ்டெப்தான். ஆனால் வழமையான ஓட்டுப் பொறுக்கும் அரசியலால் இப்போது அது ஆண்டுக்கு 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் தொடர்கின்றன..  இப்போதைய நிலவரப்படி சப்சிடி சிலிண்டர்களை வினியோகிப்பது 6/9 குழப்பத்தால் நிறுத்தப்பட்டுள்ளது என அறிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்



.


-

1/16/2013

துக்ளக் 43-வது ஆண்டுவிழா





இந்த ஆண்டும் இந்தச் சந்திப்புக்கு செல்ல உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றெல்லாம் கூற மாட்டேன், என் வீட்டம்மா மற்றும் என் மகள் அனுமதிக்கவில்லை, அதே சமயம் நானும் அவ்வளவு பிடிவாதமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 14-ஆம் தேதி இரவு கத்தாரிலிருந்து நண்பர் கிருஷ்ணன் தொடர்பு கொண்டு,  மீட்டிங்கிற்கான வீடியோ இணைப்பு தேவையா எனக் கேட்க, நானும் ஆமாம் எனக்கூற, அவரும் அதை அன்புடன் தந்ததில், இப்போதுதான் பார்த்து முடித்தேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

ஸ்வெட்டர், குல்லா சகிதம் சோ வருகை தர கரகோஷம். தனக்கு உடல்நிலை சரியில்லை என பில்ட் அப் கொடுத்ததாக கூறிக்கொண்டு அனுதாப  ஓட் பெற்று விட்டதாகவும். ஆனால் ஆக்சுவலாக உடல்நிலை அவ்வளவு மோசம் இல்லை எனவும் கூறி கலகலப்பூட்டினார். தன்னை உட்கார்ந்து பேசுமாறு ஆலோசனை தரப்பட்டதாகவும் கூறினார். ஆனால் நின்ற வண்ணம்தான் பேசினார்.

முதலில் பொங்கல் வாழ்த்து, பிறகு துக்ளக் குழுவினரின் அறிமுகம், அட்டெண்டர்களை கூட அறிமுகம் செய்வித்தார் வழக்கம்போல. அதுதான் சோ.

பிறகு பார்வையாளர்கள் பேச அழைக்கப்பட்டனர்.

1. சத்யநாராயணன், தர்மபுரி:
குஜராத்தில் மோதி ஜெயிப்பதை துக்ளக் சரியாகவே ப்ரெடிக்ட் செய்தது, மோதி தான் செய்த சேவையின் பலத்தில் மீண்டும் மீண்டும் ஜெயிக்கிறார், மற்ற முதல்வர்கள் ஏன் அவ்வாறு ஜெயிக்கக்கூடாது?

ஒழுங்கீனங்கள் அதிகரித்து விட்டன, அதற்கு தண்டனைகள் அதிகம் இல்லாததே காரணம்.

சோ அவர்கள் தண்டனை வேண்டும் என்பதை ஒத்துக் கொண்டார், கூடவே மோதி நல்ல முதலமைச்சர் என்பதையும்.

2. மோகன், தேனி:
பாக்ஸ்தான் இவ்வளவு வாலாட்டியும் மத்திய அரசு ஏன் அமைதியாக இருக்கிறது? இஸ்ரேல் மாதிரி பாய வேண்டாமா?

சோ: மத்திய அரசு மட்டுமல்ல பத்திரிகைகளும் பாக்கிஸ்தான் விஷயத்தை அடக்கி வாசிக்கின்றன. இஸ்ரேல் செய்வது மாதிரி செய்ய வேண்டும். அமெரிக்காவிடம் நட்பு வலுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இவ்வளவு பணியக்கூடாது.

3. அப்துல் ரஹ்மான்:
அரசு மதுக்கடைகளில் லாபம் பார்க்கிறது.  அந்த வருமானத்தில் சலுகைகள் தருவது, குழந்தையின் ரத்தத்தை விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவது போன்றது.

இப்போது சோ: பூரண மதுவிலக்கு பிராக்டிகல் இல்லை. வருமானத்தைச் சரியாக செலவு செய்வதில்தான் கவனம் வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு இருந்தாலும் அங்கும் கள்ளச் சாராயம் உண்டு.

தீமை என்றால் காப்பி, டீ கூட தீமைதான். அதிகமாக உணவு உண்பதே தீமைதான்.

அப்துல் ரஹ்மானின் இன்னொரு கேள்வி சோ ஏன் ஆன்மீகம் சம்பந்தமாக அதிகம் எழுதக்கூடாது என்பதே. அதற்கான பலம் தன்னிடம் இல்லை எனக்கூறி, காலட்சேபம் செய்பவர்கள் பலரது பெயர்களை கூறினார், அந்த அளவுக்கு தனக்குத் தகுதி இல்லை எனவும் கூறினார்.

4. அவினாசி வேலுச்சாமி:
 விவசாயிகள் வேறு தொழில் செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் கூறுவதை கண்டிக்க வேண்டும். அவரிடமும் அம்மாவிடமும் சொல்லி விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என சோ அவர்களை கேட்டுக் கொண்டார்.

“எங்கம்மா மேலேதான் இருக்காங்க” என ஜோக் அடித்தார் சோ. மன்மோகன் பர்றி பேசும்போது விவசாயிகள் அத்தொழிலை விட்டால் என்ன செய்வது? வேறு வேலை இல்லையே? எல்லோரும் இவர் மாதிரி பிரதம மந்திரி ஆக முடியாது அல்லவா எனக் கிண்டலடித்தார்.

வாசகர் சொன்னதை துக்ளக்கில் பாக்ஸ் மேட்டராக போடுவதாகவும் சொன்னார்.

5. மாலதி சுந்தர், வேளச்சேரி:
பெண்கள் மேல் நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரம் பற்றி குறிப்பிட்டு, பெண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை மீடியாக்கள் சரியாக வலியுறுத்துவதில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்.

சோ: அப்படிச் சொன்னால் பழங்காலம்னு சொல்லிடுவாங்க. ஆனால் பழங்காலத்தில் பெண்களுக்கு மரியாதை தரப்பட்டது. மனுஸ்மிருதியும் அதை வலியுறுத்துகிறது.

இம்மாதிரி குற்றங்களுக்கு தண்டனை அதிகம் தர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார். நல்ல வேளையாக சிதம்பரம் ஹோம் மினிஸ்டர் இல்லை என சந்தோஷப்பட்டுக் கொண்டார், இல்லாவிட்டால் வடேராவுக்கு சப்பை கட்டு கட்டியது போல இங்கும் பேசியிருக்கக் கூடும் என கேலியாகக் கூறினார்.

மற்றப்படி புள்ளிவிவரங்களை பார்த்தால் இந்திய இளைஞர்கள் இவ்விஷயத்தில் அவ்வளவு மோசமில்லை..

அச்சமயம் அக்பருதீன் ஒவைசி என்பவர் 15 நிமிடங்களுக்குள் இந்துக்கள் அத்தனை பேரையும் கொல்ல முடியும் என பேசியது பற்றி சோவுக்கு ஆடியன்ஸ் தரப்பிலிருந்து கேள்வி வந்தது.

அது அயோக்கியத்தனம், தண்டிக்கப்பட வேண்டியது என்றர். ஆனால் மீடியா அதை அடக்கி வாசிக்கிறது. இதையே ராமகோபாலன் கூறியிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும் என பட்டியலிட்டு காட்டினார். இப்போது உண்மை கூற வேண்டுமானால் இம்மாதிரி அடக்கி வாசித்து மத்திய அரசு இசுலாமியரைத்தான் கேவலப்ப்டுத்துகிறது. பெரும்பான்மை இசுலாமியர் அக்பருதீன் ஒவைசி கூறியதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஓவைசி சொன்னது என்ன என கேட்பவர்கள் நண்பர் அருண் அம்பி போட்டிருக்கும் இடுகையை பார்க்க வேண்டுகிறேன்.

6. ராமகிருஷ்ணன், மாடம்பாக்கம்:
ஸ்டாலினை கருணாநிதி வாரிசாக அறிவித்தார், துக்ளக்குக்கு வாரிசை சோ அவர்கள் எப்போது அறிவிப்பார்?

தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என ஆகிவிட்ட பிறகு அதிமுக இதை எப்படி ஈடுகட்டும்?

சோ அவர்கள் அதற்கு பதிலளிக்கையில்: கருணாநிதி அப்போது கூறியதையே எப்போதும் கூற மாட்டார், தானும் கருணாநிதியும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி, வாரிசு எல்லாம் கூறமாட்டோமாக்கும்.

மற்றப்படி தேமுதிக பற்றி கவலைப்படும் வேலை இப்போது திமுகாவுக்குத்தான்.

7. பிரபு, சென்னை:
அரசின் அலட்சியத்தால் விபத்துக்ள் ஏற்படும்போது நஷ்ட ஈடு கேட்டால் கிடைக்குமா?.

சோ: அதை நிரூபணம் செய்தால் கண்டிப்பாக கிடைக்கும்.

8. ஜான்சன், கோவை:
பிரதமர் பதவி மியூசிகல் சேர் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. இதை சரி செய்ய வேண்டாமா? மோதிதான் பிரதமராக வரவேண்டும் என்பதை சோ எடுத்துக் கூற வேண்டும்.

பாஜகவும் தமிழகத்தில் வளர்கிறது. அதையும் குறிப்பிட வேண்டும்.

சோ: மோதி பிரதமர் ஆக வேண்டும்தானே , ஆக்கி விடுகிறேன். ஆனால் அவரை பாஜகாவிலேயே பலர் எதிர்க்கின்றனர். ஒரு தலைவருக்கு அத்தாரிட்டி ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளைப் பார்க்கலாம்.

ஆனால் பாஜகாவில் மோதியை தேர்ந்தெடுக்க பயப்படும் காரணமே அவருடைய ஆளுமைதான். அவரை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்க முடியாது என்பதாலேயே அவரை முன்னிறுத்த பலர் தயங்குகின்ற்னர்.

9. அஃப்சல் மாலிக்:
திமுக் சங்கரமடம் இல்லை என அழகிரி கூறினாரே எனக் கேட்க, அவ்வாறு கூறியது கருணநிதிதான் என சோ அவர்கள் கூறினார்.

உண்மைதான், சங்கர மடத்தில் திமுக ரேஞ்சுக்கு குடும்ப உறுப்பினர்களை வாரிசாகக் கொண்டு வரமுடியாதுதான் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் என சிரிக்காமல் கூறினார்.

10. மகாதேவன், காரைக்குடி:
வால்மார்ட் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதில் தவறு இலை என்றும், இந்த விஷயத்தில் தான் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொ கூறினார் (”I disagree with Gurumurthi with all pleasure”!)

11. எஸ். கிருஷ்ணமூர்த்தி, சித்தூர்:
இலங்கை பற்றி தொடர் கட்டுரை எழுத வேண்டும், ரஜனிகாந்த் தேசீய நதிகள் இணைப்பு பற்றி பாடுபட வேண்டும் ஆகிய விஷயங்களை இவர் தொட்டார்.

சோ: ராஜீவ், ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை குலைத்தன் மூலம் புலிகளும், அவரது தமிழக ஆதரவாளர்களும் தீங்குதான் விளைவித்தனர். அது பற்றி வேணது ஏற்கனவேயே எழுதி விட்டாயிற்று.

12. ஸ்ரீனிவாசன்:
வைகோ மூன்று விஷயங்களை நல்லபடி செய்கிறார். ராமதாஸ் ஜாதி பற்றி பேசுவதையும் 75% மக்கள் மனத்தளவில் ஒப்புக் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தர மாட்டேன் என்கிறார்கள். சோ ஏன் ஆதரவு த்ரக்கூடாது?

சொ: வைக்கோ செய்வது எனக்குத் தெரிந்து நடைபயணம்தான், நல்ல உடற்பயிற்சி சர்க்கரை வியாதிக்கு நல்லது. என்னிடம் ஒருவர் தான் செய்யும் உடற்பயிற்சி பற்றி பெருமை அடித்துக் கொண்டதாகவும், அவரிடம் ஒன்று உடலை வளர்க்கலாம், இல்லாவிட்டால் மூலியை வள்ர்க்கலாம் என்ற ரேஞ்சுக்கு பேசி அவரையும் என் வழிக்கு கொண்டு வந்தேன்.

ராமதாஸ் தலித்துகளை குறிவைத்து தாக்குவதை கண்டிக்கிறேன். ஆண்டாண்டு காலமாக தலித்துகள் கொடுமை செய்யப்பட்டதை மறுக்கவியலாது.

13. பொன்னுசாமி, ஆவடி:
திமுக ஆட்சியில் இருந்த குறைகள் அதிமுக ஆட்சியில் மறையவில்லை.

அதை சோ அவர்கள் மறுத்தார். புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் போலீஸ் ஸ்ட்ரேஷனில் கட்சி ஆட்கள் நுழைவதில்லை, கட்டைப் பஞ்சாயத்து குறைந்து விட்டது, ரொடியிசம் இல்லை. குற்றங்களும் குறையும் என நம்புகிறேன்.

14. குணசேகரன், ராயப்பேட்டை:
 மோடியை உயர்த்த நிதிஷ்குமாரை மட்டம் தட்டுகிறார்  சோ. குஜராத்துக்கு டீமை அனுப்புவதுபோல பீஹாருக்கும் அனுப்பலாமே.
ஜெ அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரவில்லை.

சோ தனது பதிலில் ஜெ கல்விக்கு முக்கியத்துவம் தருவதை உதாரணங்களுடன் விளக்கினார். பீஹாருக்கு டீம் அனுப்புவது நல்ல யோசனை என்றும் அவ்வாறே செய்யலாம். நிதிஷ் குமாரை வேண்டுமென்று மட்டம் த்ட்டவிலை.

15. கோபால கிருஷ்ணன், ஈரோடு:
 மோடிக்கு தனி மெஜாரிடி இருபதால் குஜராத்தில் செயல்பட முடிகிறது, ஆனால் மத்தியில் கூட்டணி ஆட்சிதான் என ஆன பிறகு, கூட்டணி நிர்ப்பந்தங்களை அவரால் சமாளிக்க இயலுமா?

சோ அவர்கள் இங்கு ஒரு தவறு செய்துள்ளார், இன்றைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் தரவில்லை?,

சோ: இவர் ஒருவர்தான் பொங்கல் தினம் புத்தாண்டாக இருந்தது என்பதை ஞாபகம் வைத்துள்ளார்.

மோதி இப்போதே குஜராத்தில் தனது கட்சியிலேயே ப்ல தரப்பு மக்களை சமாளித்து கூட்டணி ஆட்சிதான் நடத்துகிறார். கண்டிப்பாக மத்தியிலும் அவரால் சமாளிக்க இயலும், எங்குமே கூட்டணிதான்.

இப்போது சோவின் பேச்சு:
ஜெ அவர்களை நான் எல்லா விஷயங்களிலும் ஆதரிக்கவில்லை. தான் அவருடன் கருத்து மாறுபடுவதையும் பல உதாரணங்களுடன் விளக்கினார். அதே சமயம் ஜெ செய்த நல்ல விஷயங்களையும் பட்டியலிட்டார். தான் பேசுவது நமது எம்ஜிஆர் பத்திரிகை ரேஞ்சுக்கு இருப்பதாக சிலர் கூறுவதை குறிப்பிட்ட அவர் அப்படியாவது அப்பத்திரிகைக்கு வரும் விளம்பரங்கள் போல தமது பத்திரிகைக்கும் வந்தால் நன்றாக இருக்குமே என விசனப்பட்டார். பிறகு தான் ஜெய்லலிதாவை ஆதரிப்பதன் காரணமே திமுக மீண்டும் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

முதல் மந்திரியை சுலபமாக பார்க்க முடியவில்லை என சிலர் கூறுவதற்கு, ஏன் அவர் எல்லோரையும் பார்க்க வேண்டும்? அவர் என்ன கருணாநிதியா அவர் முதல் மந்திரியாக இருந்தபோது  வேறு வேலை இல்லாமல் இருந்தது போல?

ஜெ பல தரப்பினரை பார்த்து தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றுகிறார். காற்றுவழி மற்றும் நீர்வழி மின்சாரம் தட்டுப்பாட்டிற்கு இயற்கைதான் காரணம். வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் தருவிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தர மறுக்கிறது. பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் பவர் தருவோம், தமிழகத்துக்கு இல்லை என்ற ரேஞ்சில் மத்திய அரசு நடந்து கொள்கிறது.

போர்க்கால அடிப்படையில் ஜெ செயல் புரிஇறார், சீக்கிரமே நிலைமை சீர் அடையும் என நம்புகிறேன். எது எப்படியாயினும் திமுக மீண்டும் பத்விக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காகவே தான் அதிமுக அரசை அனுசரித்து போகிறேன்.

இப்போது நடக்கவிருப்பது பாராளுமன்ற தேர்தல், அங்கு அதிமுக நல்ல பலத்துடன் வெற்றிபெறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி எக்ஸ்போஸ் செய்யப்பட வேண்டும்.

அத்தருணத்தில் ப. சிதம்பரம் அவர்களது உளறல்களையும் அவர் கண்டித்தார். கருணாநிதியுடன் பழகும் தோஷத்தால் இவரும் அவர் மாதிரியே பேசுகிறார்.

குஜராத்தில் தாங்கள்தான் ஜெயிச்சோம் என ப.சிதம்பரம் கூறுவதையும் சோ கிண்டலடித்தார். பிரதமரோ எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டால் தனது வேலை முடிந்தது என நினைக்கிறார். ஒரு காலத்தில் நல்ல பெயருடன் அறியப்பட்ட அவர் இப்போது ஐயோ பாவம் ரேஞ்சுக்கு வந்து விட்டார்.

பாஜகாவில் பலரும் தன்னைத்தாமே தலைவர் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வதில்தான் சிக்கலே இருக்கிறது. அத்வானி அவர்கள் முன்மொழிந்து மோதி பிரதமராக ஆவன செய்ய வேண்டும்.

மாநில அளவில் திமுக என்ன செய்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். தமிழகத்தில் விளக்கு எரிந்தால் தன் வீட்டில் இருள் வரும் என கருணாநிதி நினைக்கிறார்.

ஜெ மத்திய அரசுடன் சமாதானமாக போக வேண்டும் என்று கூறுபவர்களிடம் ஒரு ஒத்துழைப்பையும் தர மறுப்பவர்களிடம் எவ்வாறு சமாதானமாக போக இயலும் என கேட்டார். அவர் தைரியமாக சண்டைபோட வேண்டிய இடங்களில் போடுவதால்தான் அவர் அரசு நிலைத்து நிற்கிறது.

இப்போ டெசோ பற்றி சோ பேச ஆரம்பிக்க ஆடியன்சில் ஒரே சிரிப்பு. கருணாநிதி எவ்வாறு அது பற்றி மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதை சோ அபிநயித்துக் காட்டினார்.

வெளிநாடுகளில் சட்டத்துக்கு இருக்கும் மரியாதை இங்கு இல்லாததன் காரணமே தண்டனைகள் குறைவாக இருப்பதுதான்.

காங்கிரஸில் ஊழல் பேர்வழிகள் அதிகம் பாஜகாவில் நேர்மையாளர்கள் அதிகம் மோதி பிரத்மராக வாய்ப்புகள் அதிகம்.

கடைசியில் பாஜகா அதிமுக கூட்டணி வருமா என ஆடியன்சிலிருந்து கேள்விவர, “என்னை ஏன் கேட்கிறீர்கள், அவங்களைக் கேளுங்க என ஆடியன்சையே சுட்டிக்காட்டினார் (அங்கு பாஜக காரர்கள் இருந்திருப்பார்கள் என நான், டோண்டு, நினைக்கிறேன், :)))

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக நல்ல பலம் பெற வேண்டும், காங்கிரஸ் தோற்க வேண்டும், திமுக மீண்டும் வரக்கூடாது என மறுபடியும் கூறி சோ அவர்கள் தனது உரையை முடித்துக் கொண்டார்

நேரில் பார்த்ததை எழுதாமல் இம்மாதிரி வீடியோவை பார்த்து எழுதியதை அழுகினி ஆட்டம் ஆடியது போல உணர்கிறேன். இருந்தாலும் என்ன செய்வது வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்


                                  

  



 

1/03/2013

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.01.2013

சோ அவர்களது கேள்வி பதில்களில் சில 

சில கேள்வி பதில்களுடன் எனது சேர்க்கையும் சில சமயம் இருக்கும். கண்டுக்காதீங்க.

1. கே: குஜராத் தேர்தல் வெற்றி நரேந்திர மோதி என்ற தனிமனிதருடையதா? இல்லை பாரதீய ஜனதாக் கட்சியுடையதா?
ப: ஒரு தனி மனிதர் மாநில அளவில் இப்படிப்பட்ட வெற்றியை பெற்று விட முடியது.அதே போல ஒரு கட்சியும் கூட, மக்களிடையே நம்பிக்கையை பெற்ற ஒரு மனிதனின் தலைமயில் இயங்கும்போதுதான் இப்படிப்பட்ட வெற்றிகளைப் பெற முடிகிறது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்: பாரதிய ஜனதா ஒரு மோட்டார் கார். அதை ஓட்டிச் சென்றவர் நரேந்திர மோதி. இரண்டுமே அபாரமாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.  

2. கே. குஜராத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நரேந்திர மோதி தனது அரசியல் எதிரியான கேசுபாய் படேலை சந்தித்து ஆசி பெற்றுள்ள அரசியல் நாகரிகம் பற்றி?
ப: இதில் அரசியல் நகரிகமும் இருக்கிறது, அரசியல் விவேகமும் இருக்கிறது. கேசுபாய் படேலை நம்பி ஓட்டளித்த படேல் சமூகத்தினர் மீண்டும் அத்தவற்றைச் செய்யாமலிருக்க இந்தப் பெருந்தன்மையான நடவடிக்கை உதவும் அல்லவா?
டோண்டு ராகவன் சேர்ப்பது: பிறகு பத்திரிகையாளர்களுடன் பேசிய கேசுபாய் படேல் தான் அல்பத்திலும் அல்பம் என்பதை நிரூபித்துள்ளார். அதுவும் மோதிக்குத்தான் பலம் சேர்க்கிறது.

3. கே: குஜராத் ஒன்றும் இந்தியா அல்ல என நரேந்திர மோதியின் வெற்றி குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளதே?
ப்: காங்கிரஸ்காரர்களுக்கு மோதி மேல் வரும் கோபத்தில் குஜராத் இந்தியாவிலேயே இல்லை என்று கூட சொல்லத் தயாராகி விடுவார்கள் போலிருக்கிறதே.
டோண்டு ராகவன் சேர்ப்பது: அப்படியாவது ஆறுதல் பெறட்டும் காங்கிரஸ்.

4. கே: எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என பாரத் ஈய ஜனதா முடிவெடுத்திருப்பது பயத்தினால்தானே?
ப: இப்போதைக்கு சுயமரியாதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலாட்சி கவிழ்ந்துவிடும். ஆகையால் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஆட்சி தொடர வழி செய்வ்அது என்று பாஜக த்லை தீர்மானித்திருப்பது புரிகிறது
டோண்டு ராகவன் சேர்ப்பது: இது நிச்சயம் பாஜகவுக்கு இழிவுதான்.

ஆனந்த விகடன் செய்யும் கூத்து (இதழ் 09.01.13)
லேட்டஸ்ட் விகடன் முதல் கட்டுர்ஃபை ஆணாதிக்கத்தை எதிர்த்து முழக்கமிடுகிறது. அடுத்த கட்டுரையோ நயனதாரா யாருக்கு என சீப்பாக இரு சகோதர்களுக்கிடையே நடக்கும் போட்டியை பற்றி எழுதுகிறது. இக்கட்டுரையின் டைட்டில் ஆணாதிக்கத்துக்கு சரியான சான்று.

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மாத இதழ்
அமெரிக்காவிலிருந்து திரும்பிய எனது மைத்துனி எனக்கு இதன் இரண்டு மாத இதழ்களைத் தந்தார். தூள் கிளப்புகிறது. அக்டோபர் 2012 இதழில் நம்ம பழமைபேசியின் கவிதை அமர்க்களம். அதை இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்








1/02/2013

ஒன்று இரண்டு என வரிசைப்படுத்தப்பட்ட பத்துக் கட்டளைகள் சுஜாதாவிடமிருந்து

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!) என மின்னஞ்சல் அனுப்பியுள்ளான் என கணினி குரு முகுந்தன். பலருக்கு (முக்கியமாக இளைய சமுதாயத்துக்கு இவற்றில் பல புத்தாண்டுக்கான புது தீர்மானங்களாகக் கூட இருக்கலாம்.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/01/2013

எல்லோருக்கும் 2013-க்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேற்று நடந்தது போல இருக்கிறது, Y2K பிரச்சினை இல்லாமல் போன ஜனவரி 1, 2000 ஆண்டு. அதன் பிறகு பல விஷயங்கள் நடந்தன என்றாலும் இப்பதிவுக்கு 2012-ல் நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும்.  இருந்தாலும்  Y2K பற்றிய பதிவை முதலில் பார்த்து விடுவோமா. ஓவர் டு Y2K.

புது தில்லி, திசம்பர் 31, வருடம் 1999, இரவு 10.30 மணி. All India Radio வெளிநாட்டு ஒலிபரப்பு சேவை. நானும் போஸ் அவர்களும் காரில் சென்று இறங்கி, நியூஸ் ரூமுக்கு சென்றோம். அன்று பிரெஞ்சு செய்திகள் எழுதி படிக்க வேண்டியது என் முறை. அன்று இரவு ஒன்பது மணிவாக்கில் படிக்கப்பட்ட ஆங்கில செய்திகளின் பக்கங்கள் அங்கு எனக்கு கொடுக்கப்பட்டன.

முதல் செய்தியே Y2K பற்றித்தான். உலகமே வருடம் 2000-த்தை ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தது. அது வரை கணினியில் வருடங்களை இரு எண்களிலேயே குறிப்பிட்டு வந்தனர். உதாரணத்துக்கு 1999 வருடத்தை 99 என்று குறித்தனர். அறுபதுகளில் கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்த போது தேதிகளை குறிப்பிடும்போது 1960 என்பதற்கு பதிலாக 60 என்றே குறிப்பிட்டு வந்தனர். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. 2000 ஆண்டு நெருங்க நெருங்க பயம் ஆரம்பித்தது. அப்போதைய நிலவரப்படி வருடம் 2000 வெறுமனே 00 என்று ஆகிவிடும். அதைக் கணினி ஏற்பாடுகள் எவ்வாறு புரிந்து கொள்ளும் என்பதில்தான் குழப்பமே. அதை 1900 என்றுதான் புரிந்து கொள்ளும் என்று பலரும் நினைத்தனர். அவ்வாறின்றி 2000 என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் வருடங்களை நான்கு எண்களில் குறிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இருக்கும் எல்லா தகவல் கோப்புகளிலும் அதை 2000-க்குள் செய்து விட முடியுமா என்பதுதான் பிரச்சினைக்குரிய கேள்வி.

அப்போது கணினி பற்றி என் அறிவு பூஜ்யம். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இதைத் தீர்ப்பதில்தான் இந்தியர்களின் மென்பொருள் திறமை உலகுக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக பல கட்டுரைகள். ஒன்றிரண்டை நான் பிரெஞ்சிலிருந்தும் ஜெர்மனிலிருந்தும் மொழிபெயர்த்ததில் எனக்கு செம துட்டு வேறு.

இப்போது ரேடியோ செய்திக்கு திரும்ப வருவோம். 9 மணி ஆங்கில செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பிரச்சினையின்றி 2000 ஆண்டுக்குள் நுழைந்தன, இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் அந்த கோட்டை கடக்கும் என்று செய்திகள் வாசிக்கப்பட்டன. அந்த செய்திதான் என்னிடம் மொழிபெயர்க்க கொடுக்கப்பட்டது.

ஆனால் நான் செய்தி வாசித்தபோது மணி விடியற்காலை 1.20. வெற்றிக் களிப்புடன் முதல் தலைப்பு செய்தியாக இந்தியா வெற்றிகரமாக 2000 ஆண்டிற்குள் பிரவேசம் செய்தது என்று படித்து, பிறகு விரிவான செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதலில் அப்பிரச்சினையை வெற்றிகரமாக தாண்டினர் என்று படித்தேன். செய்தியை முடித்து விட்டு இன்னொரு அறிவிப்பாளர் செய்தி விமரிசனம் படிக்கும்போது அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் கட்டுப்பாடு அதிகாரி வேகமாக வந்து என்னிடம் எனக்கு தரப்பட்ட ஆங்கிலச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்தேனா என்று கேட்க, அவரிடம் நான் செய்த மாறுதலைக் கூறினேன். நான் மேலும் கூறினேன்: "நாம் ஏற்கனவே 2000 ஆண்டில் பிரவேசித்து விட்டோம். எல்லாம் நல்லபடியாகத்தானே ஓடுகின்றன" என்று கூற அவரும் பாராட்டினார். இரவு 12.15-க்கு ஹிந்தி செய்தி வாசித்தவர் தனக்கு கொடுத்ததை அப்படியே மொழிபெயர்த்தார் என்பதைக் கூறிவிட்டு, நான் செய்த மாறுதலை ஆதரித்தார். ஆக அகில இந்திய வானொலியில் இந்த செய்தியை முதலில் கொடுத்தது நானே என நினைக்கிறேன்.

இப்போதும் Y2K பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதில் நான் தெளிவாக இல்லை. யாரேனும் மென்பொருள் நிபுணர்கள் கூறினால் நலமாக இருக்கும். அல்லது பிரச்சினை முதலிலிருந்தே இல்லையா? எல்லாமே கற்பனைதானா?

சரி, நிகழ்காலத்துக்கு வருவோம்.

2012 எப்படி இருந்தது? என்னைப் பொருத்தவரைக்கும் அது எனது புற்றுநோயால் நிரப்பப்பட்டது. லட்சக்கணக்கில் பணச்செலவு வேறு. இருப்பினும் என் வீட்டம்மாவின் அன்பான கவனிப்பில் என்னை சுதாரித்துக்கொள்ள முடிந்தது 

மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வர, செலவழித்த தொகையை மீண்டும் சம்பாதிக்க முடிந்தது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்தது. சென்னைக்கு வரவிருக்கும் மெட்ரோ ரயில் இஞ்சினுக்கான முகப்புக் கண்ணாடியின் ஸ்பெசிஃபிகேஷன்களை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த வேலை எனக்கு நிறைவைத் தந்தது. மொத்தத்தில் 2012-ஆம் ஆண்டு தொழில்முறையில் நம்பிக்கை அளித்தது என்றுதான் கூற வேண்டும்.

பொதுவாகப் பார்த்தால் குஜராத்தில் மோதி அவர்கள் வெற்றி பெற்றது மனதுக்கு நிறைவைத் தந்தது.

அதே சமயம் உடல்நிலை ஒத்துழைக்காதலால் துக்ளக் ஆண்டு நிறைவு கூட்டத்துக்கு போக இயலவில்லை. வெளியூர் சென்று செய்யவேண்டியிருந்த ஜெர்மன் துபாஷி வேலையும் செய்ய இயலவில்லை. புத்தகக் கண்காட்சிக்கும் செல்ல முடியவில்லை. இவையெல்லாம் குறைகளே, இருந்தாலும் வேறு வழியில்லைதானே.


இன்று 2013-ஆம் ஆண்டு ஆரம்பம். நல்லபடியாகவே இருக்கும் என்னும் நம்பிக்கையுடன் வலைப்பூ நண்பர்கள் எல்லோருக்கும் டோண்டு ராகவனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது