கேணி சந்திப்புகளை ஞாநி அவர்கள் 8 மாதங்களாக நடத்தி வருகிறார். நேற்று ஒன்பதாம் கூட்டம் என அவர் சொன்னார். நான் போக வேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைத்து ஏதோ காரணத்தால் அது தள்ளிபோடப்பட்டுக் கொண்டே வந்தது.
14.02.2010 மதியம் 03.30-க்கு துவங்கும் கூட்டத்தில் ஜெயமோகன் முக்கிய விருந்தாளியாக பேசுவார் என அறிந்ததுமே என் மனதில் அதை புத்தகக் குறி இட்டு வைத்து கொண்டேன். அதே தினம் மாலை 05.30 மணியளவில் கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரனுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. இரண்டுமே கேகே நகரில் நடந்ததால் பிரச்சினை இல்லை. என்ன, ஜெயமோகன் மீட்டிங் மாலை ஆறரைக்குத்தான் முடியும். ஆக கேபிள் சங்கர் நிகழ்ச்சிக்கு நான் ஒரு மணி நேரம் தாமதமாகப் போகப்போவது முதலிலிலேயே வரையறுக்கப்பட்டு விட்டது.
எனது கார் ஞாநியின் வீட்டை அடைந்தபோது மணி சரியாக 03.30. அவர் வீட்டுக்கான வழியை நான் சரவணபவன் ஹோட்டல் அருகில் ஒருவரிடம் அழகிரிசாமி தெரு பற்றி கேட்டதற்கு அவர் 39-ஆம் நம்பர்தானே என திருப்பிக் கேட்டார். ஏற்கனவே யாராவது அவரிடம் கேட்டார்களா என்பதற்கு அவர் நான் இக்கேள்வியை அவரிடம் கேட்கும் 11-வது நபர் என்றார்.
நான் உள்ளே சென்றபோது கேணிக்கருகில் இருந்த நாற்காலிகள் பாதிக்கு மேல் நிரம்பியிருந்தன. சில நிமிடங்களில் ஞாநியும் ஜெயமோகனும் வந்து கூட்டத்தை துவக்கினர். நம்மால் ஏன் விவாதம் செய்ய மிடிவதில்லை என்பது பற்றி ஜெயமோகன் பேசுவார் என ஞாநி குறிப்பிட்டார். அவர் பேசி முடித்ததும் பார்வையாளர்கள் கேள்வி கேட்கலாம் எனவும் கூறினார்.
முதலில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு விடுகிறேன். நான் கையில் நோட்டு புத்தகம் எதையும் எடுத்து செல்லவில்லை. ஆகவே வழக்கமாக நான் செய்யும் குறிப்புகளை எழுதிக் கொள்வதையும் செய்யவில்லை. இங்கு எழுதப் போவது முற்றிலும் எனது நினைவிலிருந்தே வருபவை. எனவே சில விஷயங்கள் விட்டுப் போகலாம், சரியான வரிசையில் வராது போகலாம். எப்படியும் ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில் எழுதப்போகிறார். ஞாநியும் எழுதுவார், ஆனால் அவர் தளத்துள் போவது சில முயற்சிகளை தேவையாக்கும். பார்ப்போம்.
ஜெயமோகன் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை என்பதில் இருந்து அவர் துவங்கினார். பழங்காலங்களில் விவாதத்துக்கு புதிதாக வருபவரிடம் அமைப்பாளர்கள் அவர் எந்த சந்தஸ்-ல் பேசப் போகிறார்கள் என கேட்பார்களாம். இந்த இடத்தில் சந்தஸ் என்பதை சொற்களின் அர்த்தத்தை கூறுவதாக புரிந்து கொண்டேன். சில கலைச்சொற்களை எந்த அர்த்தத்தில் பிரயோகம் செய்வது என்பதை definition of terms/concepts என பல அறிவியல் கட்டுரைகளில் முதலிலேயே எழுதி விடுவார்கள் என்பதை நான் மொழிபெயர்ப்பு செய்த ஜெர்மன்/பிரெஞ்சு/ஆங்கில எழுத்துக்களில் பார்த்தவன் என்ற முறையில் ஜெயமோகன் சொன்னது புரிந்தது.
ஒருவர் தன் கருத்தைக் கூறும்போது சில terms of reference வைத்திருப்பார். அதனுள் அவர் கூறியதை மறுப்பதுதான் சரியான விவாதத்துக்கு வழிவகுக்கும். அதை விடுத்து tangential ஆக கேள்விகளை எழுப்புவது திசை திருப்பல்களாகத்தான் இருக்கும். அது குறித்து பல உதாரணங்கள் தந்தார். தான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன ஒன்றை திரித்து சிலர் எழுத, அது அப்படியில்லை எனச் சொல்லிச் சொல்லியே தன் நாட்கள் கடப்பதாகவும் அவர் கூறினார். செங்கல் மேல் செங்கல் அடுக்குவதுபோல அவர் விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார். அவை எல்லாவற்றையும் இங்கே தர இயலவில்லை.
(frame of reference - என்று ஜெயமோகன் சொல்லியதாக சுட்டிக்காட்டிய கிருஷ்ண பிரபுவுக்கு நன்றி. அதை குறிப்பிட்ட பிறகு தான் உபயோகிக்கும் கலை சொற்களை எனத் பொருளில் கூறுகிறார் வாதத்தை வைப்பவர் என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியம் என்றும் அவர் உடனேயே கூறியதால் நான் சற்றே குழம்பிவிட்டேன் என நினைக்கிறேன்).
பேச்சுவாக்கில் என்னை உதாரணமாக வைத்து சொன்ன ஒன்று நினைவில் இருக்கிறது. டோண்டு ராகவன் ஒரு விஷயம் பற்றி ஒரு கட்டுரை எழுதினால், அதில் உள்ள விஷயத்தை ஆங்கிலப்படுத்தி கூகளிட்டு பார்த்தால் நூறுக்கும் மேலான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கலாம், அவற்றை பார்த்து டோண்டு ராகவன் தவறாகக் கூறினார் என்பதை கட்டுரையின் கருப்பொருளை பற்றி அடிப்படை புரிதல் இல்லாதவர் கூட கூறிட இயலும் என அவர் குறிப்பிட்டார். (இதை கேட்டு நான் புன்னகை செய்தேன். ஏனெனில் இதை நான் ஏற்கனவே அனுபவித்தவன்). இவையெல்லாமே பேசியவரின் terms of reference-ஐ அலட்சியம் செய்து வெளியிலிருந்து கேள்வியை கேட்பதால்தான் வருகிறது என்றார். அப்போது விவாதம் குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் அனுபவத்தைத்தான் தருகிறது. ஆகவே நம்மால் விவாதிக்க முடியவில்லை என்பதை நிலைநாட்டினார்.
பிறகு ஞாநி அவர்கள் எழுந்து கேள்விகளை கேட்கலாம் என சொல்ல, முதல் கேள்வியை நான் கேட்டேன். ஜெயமோகனிடம் ஒரு முறை அவர் பதிவுகளில் பின்னூட்டமிட ஏன் ஏற்பாடு இல்லை என கேட்டதற்கு அவர் முக்கால்வசி பின்னூட்டங்கள் வசைகளாக இருப்பதாலேயே அவற்றை தவிர்ப்பதாக அவர் கூறியிருந்தார். அப்போதெல்லாம் அவரிடம் பின்னூட்டங்களை மின்னஞ்சல்களாகத்தான் அனுப்பவியலும். ஆனால் இப்போது பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் இருக்கிறது. பின்னூட்டங்களும் வருகின்றன. தற்சமயம் ஒரு பதிவில் சராசரியாக வசைகளின் சதவிகிதம் என்ன எனக் கேட்டேன்.
அவர் பதிலில் வசைகளின் சதவிகிதம் என்ன என்பதை அவர் கூறாவிட்டாலும், ஒரு நல்ல பின்னூட்டத்துக்கு மாறாக நான்கு வசைகள் வருவதாக அவர் கூறினார். ஆகவே வசைகளின் சதவிகிதம் 80% என குன்சாக நான் மனத்தில் குறித்து கொண்டேன். தனது பதிவுகளுக்கு வரும் மட்டுறுத்தல்களை தன்னையும் சேர்த்து நான்கு பேர் செய்வதாகவும், உலகில் வேவேறு இடங்களில் அவர்கள் வசிப்பதால் மட்டுறுத்தல் உடனுக்குடன் நடைபெறுவதாகவும் கூறினார். மற்ற மூவரில் ஒருவர் சிறில் அலெக்ஸ். மற்ற இருவர் பெயர்களையும் குறிப்பிட்டார், நான் மறந்து விட்டேன்.
சில குடும்பங்கள் தவிர பெரும்பாலும் விவாதங்கள் குடும்ப அளவிலேயே ஊக்குவிக்கப் படுவதில்லை என ஒருவர் கேள்வியெழுப்ப, அதை ஏற்றார் ஜெயமோகன். ஒரு சிறுவன் எட்டாவது படிக்கும் தருணத்தில்தான் உண்மையிலேயே தனது சுற்றுப்புறத்தை அவதானிக்கிறான், சகமாணவனுடன் அஜீத் பெரியவரா விஜய் பெரியவரா என்பது பற்றி வீவதிப்பதே அவனைப் பொருத்தவரை துவக்கம் என்றும் கூறினார்.
விவாதம் என வரும்போது எதிராளி எவ்வளவு பெரியவர் என்றெல்லாம் பார்த்து கொண்டிருக்க இயலாது என்றார். தான் சுந்தர ராமசாமியுடன் விவதித்தபோது அதையே ஒரு கண்டனத்துக்கிரிய செயலாக சிலர் கருதியதையும் அவர் குறிப்பிட்டார். சுந்தர ராமசாமி எவ்வளவு பெரிய மனிதர், அவருக்கு சமமாக தன்னைக் கருதிக் கொள்வதா என பொருள்படவும் அவரிடம் சிலர் சொன்னதையும் குறிப்பிட்டார்.
ராஜன்குறை (பெயரை சரியாக சொல்லி திருத்தியதற்கு நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்) என்பவர் ஜெயமோகன் அவரது கட்டுரைகளில் ஒரு extreme நிலைக்கு சென்று விடுகிறார். அதை விடுத்து எல்லா பார்வை கோணங்களையும் அவர் எழுத வேண்டும் என தான் கருதுவதாக அவர் சொன்னார். சில உதாரணங்களும் தந்தார். ஜெயமோகனும் அவருக்கு பாயிண்ட் பை பாயிண்ட் பதில்களை கொடுத்தார்.
இன்னும் சில கேள்விகள் வந்தன. நான் ஏற்கனவேயே கூறியபடி நினைவிலிருந்துதான் கூறுகிறேன். ஆகவே எல்லா கேள்விகளையும் இங்கு கவர் செய்ய இயலவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இப்பதிவை பார்க்கும்போது பின்னூட்டமாக தத்தம் கேள்விகளையும் அவற்றுக்கு ஜெயமோகன் அளித்த பதில்களையும் கூறினால் இப்பதிவு முழுமை பெறும்.
பார்வையாளர்களில் ஒருவராக ஞாநியும் ஒரு கேள்வி கேட்டார். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை ஜெயமோகன் குறைத்து மதிப்பிட்டதாக அவர் கூறினார். அதை ஜெயமோகன் மறுத்தார். வைக்கம் போராட்டமே பெரியார் அவர்கள் ஆரம்பித்ததாகவும் அவரே அதை நடத்தியதாகவும் தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் பிரச்சாரத்துக்கு பதிலாகவே உண்மையில் நடந்தது என்ன என்பதை தான் எழுதியதாகவும், பெரியாரின் பங்களிப்பை மறைக்கவில்லை என்பதையும் விளக்கினார். தனது கருத்துக்களை மறுத்து தமிழச்சி எழுதியது எல்லாமே பெரியாரை கோட் செய்துதான் வருகிறது. நடுநிலை ஊடகங்களை அடிப்படையாக வைக்கவில்லை என்றும் அவர் கூறினார். கேரளாவில் அக்காலக் கட்டத்தில் வந்த விவரங்களை பார்த்தால் திராவிட இயக்கங்கள் கூறும் ரேஞ்சில் பெரியாரின் பங்களிப்பு இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதுவும் இந்த விஷயங்கள் தமிழக கல்விக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ள விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். மேலும் வைக்கம் பற்றி தான் எழுதியது காந்தியை பற்றிய சில புரிதல் குறைவுகளை களையும் நோக்கம்தான் கொண்டது என்றும், அதில் பெரியார் காந்தி சநாதனவாதிகளிடம் விலைபோய் விட்டார் என கூறியதை மறுக்க முனைந்தபோது பெரியாரின் உண்மையான் பங்களிப்பு இவ்வளவுதான், அதற்கு மேல் இல்லை என காட்டவே அவரைப் பற்றி எழுதியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விவாதத்தின்போது நான் எழுந்து நின்று, வைக்கத்துக்கு பிறகு பெரியார் தமிழகத்தில் ஆலயப் பிரவேச போராட்டம் ஒன்றுமே தலைமை தாங்கி நடத்தவில்லை, இரட்டைக் குவளை பிரச்சினைக்கும் எந்த போராட்டமும் நடத்தியதாகத் தெரியவில்லை. அவர் செய்த ஒரே போராட்டம் பிராமணாள் ஹோட்டல் என பெயர்ப்பலகைகளில் இருந்ததி தார் பூசி அழிக்க முயன்றது மட்டுமே என்பதை கூறினேன்.
(அவ்வப்போது பிள்ளையார் பொம்மைகளை உடைப்பது, ராமர் படத்துக்கு செருப்புமாலைகள் போடுவது ஆகிய அவரது மற்ற பொழுதுபோக்கு செயல்களை நான் நேரமின்மை கருதி கூறாமல் விட்டுவிட்டேன், இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்).
கீழ்வெண்மணியில் 44 தலித்துகளை உயிரோடு கொளுத்திய பண்ணையார் கோபால கிருஷ்ண நாயுடுவின் பெயரைக்கூட கூறாது, அந்த நிகழ்ச்சி கம்யூனிஸ்டுகளால் துவக்கப்பட்ட கூலி உயர்வு போராட்டம் என கொச்சை படுத்தினார் என்றும், ஒரு நாயுடுவின் செயலை ஒரு பலீஜா நாயுடு பூசி மொழுகியதாகவும்தான் நான் இதை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டேன்.
தலித்துகளுக்கு என தனிப்பட்ட முறையில் ஏதும் செய்யவில்லை எனவும், அவர் கவலை எல்லாம் பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரின் நலன் பற்றி மட்டுமே என நான் குறிப்பிட்டேன். நான் கூறியதற்கு எதிர்வினை இல்லாதது நேற்றைய விவாதப் பொருளுக்குள் அதுவராததால் மட்டுமே என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றும் நான் கூறிவிடுகிறேன்.
காந்தி அம்பேத்கர், காந்தி பெரியார் ஆகிய விவாதங்கள் போது சம்பந்தப்பட்டவர் இடையே எழுந்த பிரச்சினைகள் தர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே என்றும், அவர்றை ஜெயமோகன் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த பிரச்சினையாக கூறியதாக (காந்தி தர்மத்தின் தரப்பு) ராஜன் துரை மீண்டும் கேள்வியெழுப்ப, அதையும் வாதங்களுடன் மறுத்தார் ஜெயமோகன்.
இவ்வாறே நிகழ்ச்சிகள் சுவாரசியமாக போக மணி ஆறரை ஆனதே உணரமுடியவில்லை. ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10% விற்பனைக் கழிவு உண்டு எனவும் ஞாநி அறிவித்தார். எனக்கும் புத்தகம் வாங்க ஆசைதான். ஆனால் கேபிள் சங்கர் பரிசல்காரன் புத்தக வெளியீட்டுக்கு போக வேண்டியிருந்தது. ஆகவே அங்கு சென்றேன்.
அங்கு சென்று இருவரது புத்தகங்களையும், கூடவே கீழே உள்ள புத்தகக் கடையில் நர்சிம் எழுதிய அய்யனார் கம்மா புத்தகத்தையும் வாங்கினேன். மற்றப்படி நிகழ்ச்சிக்கு வெகு நேரம் கழித்து போனதால் சரியாக கவனிக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து ஆரம்பித்திருந்தால் இரு சந்திப்புகளுக்கும் நல்ல முறையில் சென்றிருக்கலாம் என நினைக்கிறேன். இது என் சொந்த கருத்து மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்