1/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 22 & 23)

எபிசோட் - 22 (25.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதைக்கு டெக் சதீஷ் சுட்டியை வைத்துத்தான் செயல்பட வேண்டியுள்ளது. இசைதமிழுக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு அவரது பென்ணின் மாமியார் வந்திருக்கிறார். தன் பிள்ளையுடன் சண்டை போட்டுக் கொண்டு பிறந்த வீட்டிற்கு வந்து தங்கியிருந்த தனது பெண்ணுக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி அவளது புக்ககத்தில் கொண்டு வந்து விட்டதற்காக நன்றி கூறவே அவர் வந்திருக்கிறார். இரு சம்பந்திகளும் ஒருவரை ஒருவர் சிலாகித்து பேசிக் கொள்கின்றனர். பேச்சுவாக்கில் நல்ல வேளையாக சம்பந்தி மாமி சீக்கிரமே வந்திருக்கிறார். 15 நிமிடங்கள் தாமதமாக அவர் வந்திருந்தாலும் தானும் தன் மனைவியின் பிரதோஷத்துக்காக சிவன் கோவில்லுக்கு போயிருந்திருப்பார்கள் என வேம்பு கூறுகிறார்.

பிரதோஷம் என்றால் என்ன என சோவின் நண்பர் கேட்க, அதன் மகிமைகளை விளக்குகிறார் சோ. பாற்கடலை அமுதத்துக்காகக் கடையும்போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டதாகவும் அதை சிவபெருமான் உட்கொண்டு தனது தொண்டையுடன் நிறுத்திக் கொண்டதால் உலகம் பிழைத்தது என்பதையும் சோ விளக்குகிறார். அவ்வாறு விஷத்தை உட்கொண்ட நேரம் சந்தியா வேளை என்றும் கூறுகிறார். அந்த நேரத்தில் சிவபெருமான் நந்திதேவரின் கொம்புகளுக்கிடையில் நின்று கொண்டு நடனம் ஆடுவதாக ஒரு ஐதீகம். பிரதோஷ காலத்தில் கோவில் தெய்வங்களை பிரதட்சிணமாகவும் அப்பிரதிட்சணமாகவும் சுற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். விநாயகருக்கு ஒரு சுற்று, சூரியனுக்கு இரண்டு சுற்றுகள், சிவனுக்கு மூன்று சுற்றுகள் மற்றும் விஷ்ணு & அம்பிகைக்கு நான்கு சுற்றுகள் சுற்ற வேண்டும் என்ற கணக்கும் உண்டு.

பை தி வே லட்சுமி நரசிம்மர் கோவிலில் கொண்டாடப்படும் பிரதோஷம் நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை கொன்ற நேரம் எனக் கருதப்படுவதாக என் வீட்டம்மா கூறினார்.

சாரியாரின் பிள்ளை பாச்சாவுக்கு அவன் மாமனார் ஆடியோ கேசட் கடை வைத்து கொடுத்துள்ளார். அவனும் அவன் மனைவியும் கடையில் வியாபாரத்தைக் கவனிக்கின்றனர்.

நீலகண்டன் பாச்சாவின் மாமனார் நடேச முதலியாரை பேங்கின் வாடிக்கையாளர் சந்திப்புக்கு வருமாறு அழைக்கிறார். பிறகு பேச்சு பாகவதர் சமீபத்தில் நடத்திய காலட்சேபம் பற்றி பேச்சு வருகிறது. அது பிரமாதமாக இருந்தது என முதலியார் கூற, அதில் என்ன விசேஷம் என சோவ் இன் நண்பர் கேட்கிறார்.

சோ அவர்கள் பௌராணிகர்கள் பற்றி பேசுகிறார். அவர்கள் சொல்வதில் அவர்களுக்கே நம்பிக்கை இருப்பது மிக உத்தமமான விஷயம் என்றும், அம்மாதிரியானவரது காலட்சேபம் கேட்பது நல்ல பலன்களைத் தரும் எனவும் அவர் கூறுகிறார். பிறகு வேதங்கள், புராணங்கள் மற்றும் காப்பியங்களுக்கிடையே உள்ள துல்லியமான வேறுபாடுகளையும் விளக்குகிறார்.

பாகவதர் கொடுத்த பிரசங்கங்களின் ஆடியோ சிடி ஏதேனும் கிடைக்குமா என பார்க்க அப்போதைக்கு அப்படி ஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. நீலகண்டனும் முதலியாரும் ஆவன செய்து பாகவதரது சிடிக்களை வெளியிட முடிவு செய்கின்றனர். அவற்றில் வரும் லாபத்தை பாகவதருக்கே தரலாம் எனவும் முடிவு செய்கின்றனர்.

கோவிலுக்கு வந்திருக்கும் பாகவதரிடம் பலர் வந்து அவரது காலட்சேப நிகழ்ச்சியை சிலாகிக்கின்றனர். இங்கே அவரது வீட்டுக்கு நீலகண்டன் பாகவதரை பார்க்க வருகிறார். அவரது மூத்த மகன் சிவராமன், மருமகள் ராஜி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அவர்களது மகன் ராமசுப்புவையும் பார்க்கிறார். லௌகீக விஷயங்களை பேசிக் கொள்கின்றனர். ராஜி நீலகண்டனிடம் முன்னொரு முறை தான் தனது மாமனார் பற்றி நீலகண்டனிடம் கூறியது பற்றி குறிப்பிட்டு, அது குறித்து தான் வெட்கப்படுவதாகக் கூறுகிறாள். நீலகண்டனும் தனது தரப்பிலிருந்து தான் அதே தருணத்தில் பாகவதர் பற்றி ராஜியிடம் தப்பாக பேசியதற்காக வருந்துகிறார். நீலக்ண்டன் வந்திருப்பதாக பாகவதரிடம் சொல்லிவிட்டு வருமாறு சிவராமன் தனது தம்பியை அனுப்புகிறான்.

கோவிலில் சிங்காரம் பாகவதரிடம் வந்து நாதன் அவருக்கு கொடுக்கச் சொன்னதாகக் கூறி ஒரு கடிதத்தைத் தருகிறான். பாகவதர் அதை பிரித்துப் படிக்கிறார். சிங்காரம் அவரிடம் கோவிலுக்கு வெளியே அவரது இரண்டாம் மகன் அவருக்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறான்.

கோசாலையில் அசோக் சாம்புவின் பசுவுக்கு கீரைக்கட்டை கொடுக்க வருகிறான். அங்கு வேம்பு சாஸ்திரிகளை பார்த்து பேசுகிறான். சாத்வீக குணமுடைய பசுவுடன் பழகினால் மனிதருக்கும் சாத்வீக குணம் வரும் என அசோக் கூற, வேம்பு சாஸ்திரிகளும் முதலில் சாதுவுடன் காலம் கழித்த ஒரு கிளி சத் விஷயங்களையே பேசிக் கொண்டிருந்ததாகவும், பிறகு அதே கிளி கசாப்பு கடைக்காரனிடம் போக, வெட்டு, குத்து என்றெல்லாம் பேச அரம்பித்ததாகவும் இக்கதையை ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதாகவும் கூறுகிறார்.

இது பற்றி தனது நண்பருடன் பேசும் சோ அவர்கள் ஆதி சங்கரர் வாது புரிவதற்காக மண்டனமிகிரரைத் தேடிச்செல்ல அவர் வீட்டைக் காட்டுமாறு தெருவில் தான் சந்திக்கும் சிறுமிகளிடம் கேட்க, அவர்கள் எந்த வீட்டு வாசலில் கிளிகள் ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டு விவாதம் புரிகின்றனவோ அந்த வீடுதான் மண்டன மிகிரரின் வீடு எனக் கூறுவதையும் எடுத்துரைக்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 23 (26.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இங்கும் முதல் சுட்டி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்தால் போடுகிறேன்.
அசோக் வேம்பு சாஸ்திரிகளின் பேச்சு தொடருகிறது. அசோக் அம்மாதிரி ஆனதற்காக அவனது தாயார் தன்னை குற்றம் சாட்டுவதாகக் கூறும் வேம்பு சாஸ்திரிகள் அசோக் திரும்ப தன் வீட்டுக்கே செல்ல வேண்டும் எனக்கேட்டுக் கொள்ள அவன் மரியாதையுடன் மறுக்கிறான். தான் தனக்குள்ளேயே வர்ணரீதியான பிராமணனை தேடும்படி கடவுளே வேம்பு சாஸ்திரிகள் மூலமாகத் தனக்கு கூறியதாகவே தான் அதை கருதுவதையும் அசோக் குறிப்பிடுகிறான்.

பிறகு பேச்சை மாற்றி அந்த கோசாலைக்கு நிதி உதவி பெறவேண்டி தாங்கள் செய்யக்கூடிய காரியங்கள் பற்றி பேசுகிறான்.

பாகவதர் வீட்டுக்கு வந்த நீலகண்டன் அவரது காலட்சேபத்தை புகழ்ந்து பேசுகிறார். அவரும் நாதனும் தனக்கு இது சம்பந்தமாகக் கடிதம் எழுதியதை குறிப்பிடுகிறார். பிறகு நீலகண்டன் பாகவதருடன் அவரது உபன்யாசங்களை சிடியாகத் தொகுக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவரது அனுமதியை கேட்டு பெறுகிறார். பணம் முதல் போடுவது நடேச முதலியார் என்றும் வரும் லாபத்தை பாகவதரும் முதலியாரும் சரிபாதியாக எடுத்து கொள்வது என்று பேசி முடிவு செய்யப்படுகிறது.

உமா வீட்டில் அவளது பிரசவம் பற்றி பேசுகிறார்கள். அடுத்த நாள் காலையில் குழந்தை பிறக்கும் என்றிருக்க, அன்று சூர்ய கிரகணம் ஆயிற்றே என எல்லோரும் கவலைப்படுகிறார்கள்.

கிரகணத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா என சோவின் நண்பர் கேட்க, அதனால் பிரச்சினை இல்லை என சோ அவர்கள் தான் விசாரித்து அறிந்த விஷயமாகக் கூறுகிறார். ஆனால் கிரகண சமயத்தில் உடலுறவு நடக்காது பார்த்துக் கொள்தல் நலம் எனவும் அபிப்பிராயப்படுகிறார்.

உமா வீட்டில் ஆஸ்பத்திரிக்கு சென்று கிரகணத்தின்போது குழந்தை பிறக்காமலிருக்க என்ன வழி எனப் பார்க்கிறார்கள்.

கிருபாவின் மாமனார் ஜட்ஜ் வீட்டில் நாதன் வந்து பேசுகிறார். அங்கு அவரிடம் ஜட்ஜின் மனைவி அசோக் பிட்சை எடுப்பது பற்றி பேச அவர் மனம் நொந்து அங்கிருந்து செல்கிறார். ஜட்ஜ் தன் மனைவியிடம் இங்கிதமின்றி பேசியதற்காக கோபித்துக் கொள்கிறார்.

ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க வேண்டிய லேடி டாக்டர் கிரகணத்துக்கு முன்னாலேயே சிசேரியன் செய்து விடலாமா என கேட்க அது பற்றியும் உமாவின் புக்ககத்திலும் பிறந்த வீட்டிலும் ஆலோசனை நடக்கிறது.

அப்போது மட்டும் குழந்தைக்கு ஒன்றும் ஆகாதா என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் பகவான் இச்சை என்று இருப்பதை பாஸ்கராச்சாரியார் லீலாவதி விஷயத்தை உதாரணமாக எடுத்து கூறுகிறார்.

உமா தான் அசோக்கிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்கிறாள். சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு போன் போட்டு அசோக்கை டெலிஃபோனுக்கு வரவழைக்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

NAGARAJAN said...

Dear Mr Raghavan,

The video coming in www.techsatish.net is coming without advertisement, that also in two parts. I am in Nigeria and I have just watched Enge Brahmanan-2 Episode No.24.
You pl use to give the link from techsatish.net

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது