1/31/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 24 & 25)

எபிசோட் - 24 (27.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(முதல் சுட்டி சரியாக இல்லை).
கிரகணத்தின்போது குழந்தை பிறப்பதை தவிர்க்க சிசேரியன் செய்து கொள்வதா வேண்டாமா என குழம்பும் உமா வழக்கம்போல அசோக்குக்கு போன் போட்டு ஆலோசனை கேட்க, அவன் No operation, no caesarian" என்று தெளிவுடன் கூறிவிடுகிறான். கடவுள் அனுக்கிரகத்தால் குழந்தை காலை ஐந்தரை மணிக்கு முன்போ அல்லது ஏழரை மணிக்கு அப்புறமோதான் பிறக்கும் என அவன் கூறியதை உமாவும் அவள் கணவனும் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். முன்ஜாக்கிரதையாக முந்தைய நாள் இரவே ஆஸ்பத்திரியில் அவளை சேர்த்து விட்டு இரவு முழுவதும் அவளது பெற்றோர்களும், மாமனார், மாமியார் மற்றும் கணவன் விழித்திருக்கின்றனர். காலை ஏழு மணிக்கு வலி தொடங்கி ஏழு நாற்பதுக்கு, கிரகணம் விட்டு பத்து நிமிடம் கழித்துத்தான் குழந்தை பிறக்கிறது. எல்லோரும் மகிழ்கின்றனர்.

அசோக் ஒரு வீட்டில் பவதி பிக்ஷாந்தேஹி என பிட்சை கேட்க, அப்பக்கம் காரில் வரும் ஜட்ஜ் ஜகன்னாதனின் மகள் பிரியா மற்றும் அவளது சீனியர் அட்வகேட் அனந்தராமன் ஆகியோர் அதை பார்க்கின்றனர். அனந்தராமன் நாதன் கம்பெனிகளுக்கு லீகல் அட்வைசர். பிரியா அசோக்கிடம் அவன் செய்வது உஞ்ச விருத்தித்தானே என கேட்க, இல்லை தான் எடுப்பது பிட்சை என அவன் அவளை திருத்துகிறான்.

சோவின் நண்பர் அவரிடம் இது பற்றி கேட்க அவர் விளக்குகிறார். பிட்சை என்பது பிரம்மச்சாரிக்கு நியமிக்கப்பட்டது. உஞ்சவிருத்தி என்பது சம்சாரம் செய்யும் பிராமணர்கள் செய்ய வேண்டியது. அதாவது வயல்களில் நெர்ல் போர் அடிக்கும்போது கீழே சிந்தும் நெல்மணிகளை சேகரிப்பது, அல்லது நெல் மண்டிகளில் கீழே கிடக்கும் நெல்மணிகளை எடுத்து சமைப்பது ஆகிய கடுமையான நியமங்கள் அவர்களுக்கு உண்டு என்பதையும் சோ விளக்குகிறார்.

அப்பக்கம் வரும் ஒரு பிச்சைக்காரி பசி என தானம் கேட்க, அசோக் தனக்கு கிடைத்த பிட்சையை அப்படியே அவள் பையில் இடுகிறான். பிரியா திகைக்க, ஈவது விலக்கேல் என அவள் கேள்விப்படவில்லையா என அசோக் கேட்கிறான். கூடவே ஏற்பது இகழ்ச்சி என்றும் வருகிறதே என அவள் சீனியர் கேட்க, சோவின் நண்பர் அப்படியா என கேட்கிறார்.

தானம் வாங்குவதில் சில சங்கடங்கள் உண்டு என சோ கூறுகிறார். அதை விளக்கும் வண்ணம் தானம் பெறுபவர் தானம் தருபவரின் பாவத்தையெல்லாம் ஏற்கிறார் என கூறுகிறார். உதாரணத்துக்கு பசுவை தானமாக பெறும் ஒரு புரோகிதர் அதற்கு பிராயச்சித்தமாக லட்சம் முறை காயத்திரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறார். ஆகவே தானம் பெறுவது என்பது சந்தோஷகரமான செயல் அல்ல எனவும் அவர் சொல்கிறார். கல்யாணத்துக்கு வரும் பரிசுகளை வாங்குவதும் தவறா என விடாமல் நண்பர் கேட்க, அதெல்லாம் தானம் அல்ல பேரம், வியாபாரம் என்கிறார் சோ. மொய் எழுதுபவருக்கு எதிர் மொய் எழுத வேண்டிய கட்டாயம் அங்கு உண்டு என்பதையும் அவர் நகைச்சுவையுடன் விளக்குகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 25 (28.01.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(இங்கும் முதல் சுட்டி சரியாக இல்லை. இரண்டாம் சுட்டியிலோ முதல் சில நிமிடங்கள் கவர் ஆகவில்லை).
அசோக் பிரியா பேச்சு தொடர்கிறது. அசோக் செய்த தானத்தை அவள் சிலாகிக்க குருக்ஷேத்திர போர் சமயத்தில் தானம் செய்த ஒரு உஞ்சவிருத்தி பிராமணனின் செயலுக்கு முன்னால் தான் செய்தது மிகவும் அல்பமான செயலே என அவன் கூறிவிடுகிறான்.

இங்கு அசோக் கூறியதில் ஒரு தவறு இருப்பதை சோ எடுத்துரைக்கிறார். அது குருட்சேத்திர போர் நடக்கும் போது நடந்த நிகழ்வு அல்ல, போர் முடிந்தபின்னால்தான் மகாபாரதத்தில் தருமர் செய்யும் யாகத்துக்கு வரும் ஒரு கீரிப்பிள்ளை அக்கதையை கூறுகிறது. தனக்கென இருப்பதையும் அப்படியே தானம் செய்வதுதான் உயர்ந்த செயல் எனவும் அவர் கூறுகிறார். அதே போல தானம் செய்த ரந்தி தேவன் என்னும் அரசனின் கதையையும் அவர் கூறுகிறார்.

சாரியாரின் மகன் பாச்சா நடத்தும் ஆடியோ கேசட் கடைக்கு பாகவதர் வருகிறார். பாச்சாவும் அவர் மனைவியும் அவரை மரியாதையுடன் வரவேற்கின்றனர். கதாகாலட்சேபங்களுக்கான ஆடியோ கேசட்டுகள், டிவிடி ஆகியவற்றின் சந்தைப்படுத்தல் பற்றியும் பேசுகிறார். கிடைக்கக் கூடிய ராயல்டிகள் பற்றியும் கேட்கிறார்.

சாம்பு சாஸ்திரி வீட்டில் உமாவுக்கு குழந்தை நல்லபடியாக பிறந்ததை அவருக்கு அவரது மனைவி மகிழ்ச்சியுடன் கூறுகிறாள். ஆஸ்பத்திரிக்கு போகப் போவதாக கூற, வீட்டில் வந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என சாம்பு சாஸ்திரிகள் சொல்கிறார். மேல் நாட்டிலெல்லாம் இம்மாதிரி தீட்டு எல்லாம் பார்ப்பதில்லையே என சாம்பு அவர்களின் இரண்டாம் மகன் கேள்வி எழுப்ப, அந்த நாடுகள் நம்ம பாரத தேசத்தை விட ஆன்மீக விஷயங்களில் பின்தங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.

நாதனின் அலுவலகத்துக்கு பிரியாவும் அவள் சீனியர் வக்கீலும் வருகின்றனர். பிரியாவின் தந்தை எவ்வளவு பெரிய நீதிபதி, அவரது மகளுக்கு சீனியராக அனந்தராமனை அவர் தேர்ந்தெடுத்ததில் இருந்து அனந்தராமனின் நாணயம் பளிச்சிடுகிறது என நாதன் கூறுகிறார். பேச்சு இப்படியே விரிந்து தொழிலை தர்மத்துடன் செய்ய வேண்டும் என்பதை வக்கீல் எடுத்துரைக்கிறார். ஆனால் இக்கலிகாலத்தில் அதர்மம் அதிகரித்து விட்டது பற்றியும் அவர் கூறுகிறார்.

முந்தைய யுகங்களில் எல்லாம் அதர்மம் இருந்ததே இல்லையா என சோவின் நண்பர் கேட்க, தருமம் நாளாவட்டத்தில் மெதுவாக பலவீனமடைந்து வந்ததை குறிப்பிடுகிறார். கலியுகத்தின் துவக்கத்தில் கலிபுருஷனை கொல்லப் போவதாக பரீட்சித்து என்னும் அரசன் கூற, அவன் தான் தங்குமிடமாக சிலவற்றை அவ்வரசனே கூற வேண்டும் எனக் கேட்டு அவ்வாறே பல இடங்களை பெற்றுக் கொண்டதாக சோ அவர்கள் மேலும் கூறுகிறார்.

பிரியா, வக்கீல் அனந்தராமன், நாதன் ஆகியோரின் பேச்சுக் தொடருகிறது. பாவம் செய்யும் அளவைக் குறைக்க அவ்வப்போது சில தருமங்கள் செய்யலாமே எனவும், அது ஒன்றும் சாத்தியமாகாவிட்டாலும் இன்னுரையாவது கூறலாமே என அவள் திருமூலர் கூறியதை எடுத்துரைக்கிறாள்.

இன்னுரை கூறினால் மட்டும் போதுமா என சோவின் நண்பர் திகைப்புடன் கேட்க, அது மட்டும் போதும் என சொல்லவில்லை, அதையாவது செய் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என சோ எடுத்துரைக்கிறார். திருமூலரின் அது சம்பந்தமான பாட்டையும் தருகிறார். பாட்டும் அதன் பொருளும் பின்வருமாறு.

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே. (திருமந்திரம்)

பொழிப்புரை:
காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது


சாத்திரங்களிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளதா என நண்பர் கேட்க, ஆம் என பதில் அளிக்கிறார் சோ அவர்கள். அதற்கான ஒரு வடமொழி சுலோகமும் சொல்கிறார். பிறகு பாரதியாரின் ஒரு வசன கவிதையும் இதையே வலியுறுத்துவதாக வேறு அவர் கூறுகிறார். அக்கவிதை இதோ:

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது
கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும்
காயும், கனியும் இனியன.
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம்
இனியவை. நீர்வாழ்வனவும் நல்லன.
மனிதார் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.


(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

dondu(#11168674346665545885) said...

தமிழிசிடமிருந்து வந்த மின்னஞ்சல்:
2010/2/1 Tamilish Support


Hi Dondu,

Congrats!

Your story titled 'சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 24 & 25)' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 31st January 2010 09:50:01 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/177861

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

திருமூலர் எந்த ஜாதி? கோனார்ன்லெ கேள்விப்பட்டேன்.

dondu(#11168674346665545885) said...

தெரியாது. அது ரொம்ப முக்கியமான விவரமா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது