10/27/2010

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 3

இது ஒரு மீள்பதிவு. ராமாயணத்து காட்சிகளை ஒன்றுபடுத்துவதற்காகவும், இந்த இடுகை வகைப் படுத்தப்படுவதற்காகவும் இங்கு அதை கொண்டுவர துணிந்தேன். மீள்பதிவு செய்யப்படும்போது மாறுதல்கள் செய்வதும் சகஜமே. இப்போது இடுகைக்கு செல்வோம்.

ராமர் இலங்கை நோக்கிச் செல்லுமுன் சிவனுக்கு பூஜை செய்கிறார். அவருடைய இஷ்ட தெய்வமல்லவா சிவன். ராமரின் பூஜையை சிவனும் பார்வதியும் வானுலகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கீழிருந்த வண்ணம் ராமரும் அவர்களை அவ்வப்போது புன்முறுவலுடன் பார்க்கிறார். பூஜை முடிந்ததும் ராமர் அனுமனிடம் தான் பூஜை செய்த இடம் இனி ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் எனக் கூறுகிறார். அந்தப் பெயரின் காரணம் குறித்து அனுமன் வினவ, ராமர் முதலில் ராமேஸ்வரன் பெயருக்கு பொருள் கூறுகிறார். அதாவது யார் ராமனுக்கு ஈஸ்வரனோ அவனே ராமேஸ்வரன் என்று.

அப்போது சிவன் பார்வதியை நோக்கிக் கூறுகிறார்: "உமா, பார்த்தாயா எவ்வாறு என் பிரபு ராமபிரான் ராமேஸ்வரனின் அர்த்தத்தை சாமர்த்தியமாக மாற்றி விட்டார்" என்று. விஷ்ணுவின் தங்கை பார்வதிக்கு அண்ணன் புகழ் கேட்டு ஒரே பெருமை. இருப்பினும் தெரியாதது போலக் கேட்கிறார்.

"அப்படியா சுவாமி, ராமேஸ்வரன் யார் என்று நீங்கள்தான் கூறுங்களேன்" என்று. அதற்கு சிவன் அவர்கள் கூறுகிறார். "யாருடைய ஈஸ்வரன் ராமனோ அவனே ராமேஸ்வரன்" என்று. உமை அவர்கள் "அப்படியா, உங்கள் இருவரில் யார் கூறுவது சரி" என்று கேட்க, சிவன் "நான்தான், ஏனெனில் நான் கள்ளம் கபடமற்றவன் (போலானாத்) அல்லவா என்று கூற, உமையின் புன்னகை இன்னும் விரிகிறது. சிவனின் திருவிளையாடல்கள் அவருக்கு ஞாபகம் வந்திருக்கும் போல.

ராமர் கீழிருந்து வானத்தை நோக்கி வணங்க, சிவன் வானத்திலிருந்து அவருக்கு பதில் வணக்கம் போடுகிறார். இவை அத்தனையும் ராமானந்த் சாகரால் எடுக்கப்பட்ட ராமாயணத் தொடரில் எண்பதுகளில் நான் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இக்காட்சியை முழுமையாக ரசித்தேன். கிளாக்ஸோ பேபி போன்ற தோற்றத்தில் சிவன் அம்சமாக இருக்கிறார். அதே ராமானந்த் சாகர் எடுத்த கிருஷ்ணர் தொடரிலும் அதே நடிகர் அதே ரோலில் வந்தார்.

அந்த வீடியோ காட்சி இதோ:


பரமசிவன், பார்வதியைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் நாடோடி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் நான் படித்தது நினைவுக்கு வருகிறது. வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது. தன் மனைவியைத் தேடி ராமர் காட்டில் "சீதே, சீதே" என்று பிரலாபித்தவாறு அலைகிறார். செடி, கொடிகள், மான்கள், புலி, சிங்கங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு செல்கிறார். ஐயனின் துயரம் கண்டு பஞ்சபூதங்களும் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன. மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிவன் ராமரைப் பரம்பொருளாக வணங்க, பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம் திடீரென வந்தது. பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார். ராமரோ அவரைக் கண்டதும் வணங்கி "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் பார்வதி அவர்களே, சிவன் அவர்களை விசாரித்ததாகக் கூறவும்" என்று கூறுகிறார்.

இன்னும் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

Bajji(#07096154083685964097) said...

டோண்டு சார் நீங்கள் சொன்ன அந்தக் காட்சியை நானும் பார்த்த நினைவிருக்கிறது. ஆனால் அப்போது நான் teeager, எனக்கு இந்தியும் அவ்வளவாகத் தெரியாது. ஆகவே சிவபெருமான் கொழுக்கு மொழுக்கென்று இருந்தது மட்டும் நன்றாக நினைவுக்கு வருகிறது. என் பாட்டிதான் உத்தேசமாகக் கதையை ஊகித்துக் கூறினார்.

இப்போது டயலாக்குடன் பார்ப்பது ஆனந்தமா இருக்கு.

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

ஹிந்தி புரிந்து பார்த்திருந்தால் அந்த சீரியலை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம் கிருஷ்ணன்.

மஹாபாரதம் சீரியல் வந்த போது தமிழ்நாட்டில் நிறையப் பசங்கள் சீரியல் ஒளிபரப்பும் நேரம் வரும்போது கண்குத்திப் பாம்புகள் போல பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதில் விதுரர் பாத்திரம் பேச ஆரம்பித்ததும்தான் விளையாட்டே ஆரம்பிக்கும். அந்தப் பாத்திரம் பேச ஆரம்பித்தால் அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு வேறு யாரைய்ம் பேச விடாது. எல்லோருக்கும், திருதார்ஷ்டிரனுக்கும் நல்லது சொல்லி விட்டுத்தான் ஓயும் அந்தப் பெரிசு.

போதாத காலமாக கர்ணனாக நடித்த பாத்திரம் அல்லது வேறு ஏதாவது பாத்திரம் "நீங்கள் என்ன கூறுகிறீர்கள், சித்தப்பா?" என்று ஏதாவது கேட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 5 நிமிடங்களுக்கு மேலும் நல்லது சொல்வார் விதுரர்.

இதில் என்ன விளையாட்டு என்கிறீர்களா? அவர் பேசிய டயலாக்கில் "கிந்த்து" அதிகம் வருகிறதா அல்லது "பரந்த்து" அதிகம் வருகிறதா என்பதில்தான் போட்டியே. (உங்கள் காதோடு ஒரு விஷயம் இரண்டுக்கும் ஒரே பொருள்தான், அதாவது "ஆனால்").

கிந்த்து கட்சி ஒரு பக்கம், பரந்த்து கட்சி இன்னொரு பக்கம். அவரவர்கள் தங்கள் கட்சியின் வார்த்தை வரும்போது ஆரவாரத்துடன் எண்ணிக் கொண்டே வருவார்கள், கடைசியில் ஸ்கோர் பார்ப்பார்கள். ஒரே கலாட்டாதான்.

விதுரர் --> விளையாட்டு
:))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

டோண்டு சார்,

நான் பார்த்த அளவில் "பரந்து" என்ற ஒரு வார்த்தையை நீக்கிவிட்டால் மகாபாரதத் தொடரின் நீளம் 35% குறைந்துவிடும்! :-))))

ஹிந்தி எழுதப்படிக்கக் கற்றிருந்த போதும் முழுமையாகப் புரியாது என்றாலும் பார்த்தேன்

ஜடாயு said...

// வால்மீகியில் இது உண்டா எனத் தெரியாது..... பார்வதிக்கு ராமரைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற என்ணம் திடீரென வந்தது. பூவுலகுக்கு வந்து சீதையைப் போல வேடம் தரித்து ராமர் முன்னால் வருகிறார் //

இது துளசிதாசரின் ராம்-சரித்-மானஸ் நூலில் உள்ளது, வால்மீகியில் இல்லை. பல புராணங்களில் உள்ளவற்றைக் கலந்து தான் தனது ராமாயணத்தை எழுதியதாக துளசியே அந்த நூலின் முன்னுரையில் கூறியிருக்கிறார்.

ஒருவகையில், மூல ராமாயணத்தின் அற்புதமான காவிய ரசத்தை இந்தப் பிரசங்கம் மொண்ணையாக்குகிறது. ராமன் தேவியைத் தேடி அலைந்து பட்ட மனிதத் துயரம் எல்லாம் அவனது தெய்வீக லீலையின் அம்சங்கள். அவற்றை அப்படிக் கண்டு அதில் தோய்வதே ஆன்மீக அனுபவம்.

ராமன் மீது பரம்பொருள் தன்மையை வலிந்து ஏற்றுவதற்காகத் துளசி இந்தப் பிரசங்கத்தைச் சேர்த்தார். இதே போல அசோக வனத்தில் சிறையிருந்தது மாயா சீதை, உண்மையான சீதை ராவணன் அவளைத் தூக்க வரும்போதே அக்னிக்குள் பிரவேசித்து விட்டாள் என்றெல்லாம் கூட துளசி ராமாயணத்தில் வருகிறது. இது மொத்த சுந்தர காண்டத்தின் ரசத்தையும் கேலிக்குரியதாக்குகிறது.. ராமாயணத்தையே குழப்படி செய்யும் சமாசாரம்.

துளசிதாசரின் பல பாடல்களில் பக்திரசம் இருக்கிறது. ஆனாலும், அவரது ராமாயணம் கவித்துவ வெறுமையும், குழப்படிகளும் நிறைந்ததாகவே எனக்குத் தோன்றியது.

dondu(#11168674346665545885) said...

"நான் பார்த்த அளவில் "பரந்து" என்ற ஒரு வார்த்தையை நீக்கிவிட்டால் மகாபாரதத் தொடரின் நீளம் 35% குறைந்துவிடும்! :-))))"

பரந்த்துவுடன் கிந்த்துவையும் சேர்த்துக் கொள்ளாவிட்டால் விதுரர் சித்தப்பா கோவிச்சுக்குவாராக்கும்.
:-))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

துளசிதாசரின் மனமும் கிட்டத்தத்ட்ட என்னுடையதைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். என் அப்பன் ராமன் தவறு செய்தான் என்பதை நாங்கள் எப்படி ஒப்புக் கொள்வோம்?

ஒரு விஷயம் தெரியுமா? துளசிதாசருக்கு அவர் மனைவி என்றால் உயிர்.

மனைவி ஒரு முறை தன் தாய் வீட்டிற்கு செல்ல, மனைவியைப் பிரிந்து இருக்கமுடியாத துளசிதாசர் நடுவில் இருக்கும் காட்டாற்று வெள்ளத்தைக்கூடப் பொருட்படுத்தாது நீந்தி சென்று, மனைவியின் வீட்டுத் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தின் விழுதைப் பிடித்துக் கொண்டு ஏறி மாடியில் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறார்.

அடுத்த நாள் காலையில் பார்த்தால், அவர் விழுது என்று நினைத்து, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பாம்பைப் பிடித்து ஏறியிருக்கிறார்.

அவர் மனைவிக்கே இது ஓவர் என்று பட்டதால் அவரிடம் "என் மேல் வைத்த அன்பை ராமன் மேல் வைத்திருந்தால் போகிற வழிக்கு புண்ணியமாகப் போயிருக்குமே" என்று சீறியிருக்கிறார்.

அதன் பிறகுதான் அவர் ராம பக்தரானார். பிறகு ராமாயணம் எழுதினார் என்பட்ர்ஹு அனைவரும் அறிந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"போதாத காலமாக கர்ணனாக நடித்த பாத்திரம் அல்லது வேறு ஏதாவது பாத்திரம் "நீங்கள் என்ன கூறுகிறீர்கள், சித்தப்பா?" என்று ஏதாவது கேட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 5 நிமிடங்களுக்கு மேலும் நல்லது சொல்வார் விதுரர்."

நல்லா வேணும் கேட்டவனுக்கு. அதே போல போயும் போயும் டோண்டு சாரிடம் சோ அல்லது இஸ்ரேலைப் பத்தி யாரும் கேட்டுடாதீங்கப்பான்னுதான் சொல்லணும் போலிருக்கே. அப்படி எல்லாரையும் படுத்தியிருக்கு இந்த பெரிசு.

முரளி மனோஹர்

Iyappan Krishnan said...

////துளசிதாசரின் மனமும் கிட்டத்தத்ட்ட என்னுடையதைப் போலத்தான் இருந்திருக்க வேண்டும். என் அப்பன் ராமன் தவறு செய்தான் என்பதை நாங்கள் எப்படி ஒப்புக் கொள்வோம்?////

http://maraththadi.com/article.asp?id=1148

K.R.அதியமான் said...

Dondu Sir,

In spite of being a bhaktha (and i
prayed with Sundara Ganda Parayanam), one nagging 21st century doubt :

Why didn't Lord Rama resign from his kingship and crown one of his brothers, instead of sending a pregnent Sita devi into a forest,
on hearing a gossip of some stranger ? Lava Kusa story...
If Lord Rama felt that it was his duty and Sita should be exciled for no fault (and in spite of purifying her thru fire), then he
could have resigned and be a good
husband and father..

21the cent values and femisits are
asking similar questions....

Anbudan
Athiyaman

dondu(#11168674346665545885) said...

அதியமான் அவர்களே, இது ரொம்ப டூ மச். இப்படியா நாம் இருவரும் ஒரே மாதிரி சிந்திப்போம்? நான் எனது இன்னொரு பதிவில் November 30, 2005 11:13 AM இட்டப் பின்னூட்டத்தைப் படியுங்கள், பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_30.html
அதே பதிவின் இன்னொரு பின்னூட்டத்தில் கைகேயி பற்றியும் எழுதியுள்ளேன். இரண்டையும் பார்த்து அப்பதிவிலேயே பின்னூடமிடவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

where is your 'Aasthana Vidhushakar' (Arul)? Now a days I read this blog for his funny comments. This article should attract more of his 'cut & paste' work. Perhaps he must be straining himself to select the materials! Hope he is not a fictitious creation by you for increasing the hits!!

dondu(#11168674346665545885) said...

//Hope he is not a fictitious creation by you for increasing the hits!!//
கண்டிப்பாக இல்லை. அருளின் கல்யாணத்துக்கு ஆஸ்தான புரோகிதரே மருத்துவர் ராமதாசு ஐயாதானே.

இந்த உரலுக்குச் செல்லவும்:
http://arulgreen.blogspot.com/2010/10/blog-post_26.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது