4/30/2012

எனக்கும் இசாக் அசிமோவுக்கும் உள்ள ஒற்றுமை - 2

இதன் முந்தையப் பதிவு போட்டு சற்றே  (2000 சொச்சம்) நாட்கள் ஆகி விட்டன. இப்போ என்னவாயிற்று எனக்கேட்கிறான் முரளி மனோகர். பொறு அப்பனே கூறாமலா போகப்போகிறேன். மேலும் நான் வேறு நீ வேறா என்ன?

ஐசக் அசிமோவ் ஒரு டிராமாவுக்கு போயிருக்கிறார் தன் மனைவியுடன். நாடகம் முடிந்ததும் அவர்கள் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அதே ஹோட்டலுக்கு அந்த நாடகக் குழுவினரும் வந்திருந்தனர். அவர்களுடன் பேச வேண்டும் என அசிமோவின் மனைவுக்கு நப்பாசை. “எனது மனைவிக்கு என் பிரசித்தம் மேல் அபார நம்பிக்கை”என விரக்தியுடன் எண்ணிய அசிமோவ் வேறு வழியின்றி தன் மனைவியுடன் சென்று அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பயந்தது போலவே அசிமோவ் என்னும் பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அவர்கள் அறிந்திருக்கவிலை. நான் அசிமோவ் எனக் கூறிக்கொள்ள, அதுக்கு இப்போ என்ன செய்யணுங்கறீங்க என்னும் முகபாவத்தில் இருந்திருக்கின்றனர்.

அசிமோவுக்கு முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஆரம்பித்திருக்கிறது. பேசாமால் பின்வாங்க எண்ணும் போது திடீரென நாடகக் குழுவின் தலைவர் அசிமோவின் மனைவியைப் பார்த்து “ நீ ஜேனட்தானே, இங்கே எங்கே வந்திருக்கே எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார். பிறகுதான் அவரது அத்தையின் நாத்தனார் பெண் ஜேனட் என்பதையும் கூறினார்.

பிறகென்ன, இருவரும் தெரிந்தவர்கள் என்னும் முறையில் ஜேனட்டும் அவரும் பேச ஆரம்பித்தனர். ஜேனட் அசிமோவை தனது கணவர் என அறிமுகப்படுத்த அவரையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி அசிமோவ் எழுதுகிறார், “ஒரு பிரசித்தி பெற்றவரது கணவராக இருப்பதன் அருமையை அறிந்து கொண்டேன்” என.

இப்போ என் கதை. சமீபத்தில் 1981-ல் ஐடிபிஎல்-ல் சேர்ந்த போது எனது மனைவி சென்னையில் இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்தார். எங்கள் ஐடிபிஎல்-ன் அக்கவுண்ட் இந்தியன் வங்கியிலும் இருந்திருக்கிறது. எங்கள் சம்பளங்களை கணக்கில் ஏற்றி எங்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுப்பதற்கெனவே இந்தியன் வங்கியின் விரிவாக்க சேவை கவுண்டர் எங்கள் ஐடிபிஎல் டவுன்ஷிப்பில் இருக்கிறது.

அந்த கவுண்டரின் தலைமை அதிகாரி என் மனைவிக்கு தெரிந்தவர். ஆகவே என் மனைவி சென்னையிலிருந்து ஒரு அக்கவுண்ட் திறக்கும் படிவத்தில் தன் பெயரையும் என் பெயரையும் நிரப்பி என்னிடம் கொடுத்து அனுப்பினார். நானும் குர்காவுனுக்கு வந்ததும் அந்த அதிகாரியைப் போய் பார்த்து அக்கவுண்ட் ஓப்பன் செய்தேன். என் மனைவியின் பெயரும் கையெழுத்தும் இருந்ததால் எனது அக்கவுண்ட் ஸ்டாஃப் அக்கவுண்டாக நிர்ணயிக்கப்பட்டு வட்டியும் அதிகமாகத் தந்தார்கள்.

பிறகு என் மனைவி தில்லிக்கே மாற்றிக் கொண்டு வந்து விட்டார். .எனக்கு ஸ்டாஃப் ஆகவுண்ட் ஸ்டேட்டஸ் கிடைத்ததால் குர்கான் இந்திய வங்கிக் கிளைக்கு நான் எப்போது சென்றாலும் எங்கிருந்தோவெல்லாம் என்னை விஷ் செய்வார்கள். என்னுடன் கூட வந்திருக்கும் சக ஐடிபிஎல் அதிகாரிகளுக்கு அது எப்போதுமே வியப்பைத் தோற்றுவிக்கும்.

இதைத்தான் செலிப்ரட்டியின் கணவனாக இருப்பதில் உள்ள சௌகரியம் என இசாக் அசிமோவைப் போலவே நானும் கூறிக் கொள்கிறேன்..

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Gujaal said...

//
எனது அக்கவுண்ட் ஸ்டாஃப் அக்கவுண்டாக நிர்ணயிக்கப்பட்டு வட்டியும் அதிகமாகத் தந்தார்கள்.//

இது வேறயா?

அரசு நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்யுதோ இல்லியோ தன்னோட ஊழியர்களுக்கு நல்லாவே சேவை செய்யுது!

Cinema Virumbi said...

டோண்டு சார்,

தமிழ்நாட்டின் அந்த நாளைய வடமொழி விற்பன்னர் ஒருவரைப் பற்றிய செவி வழிக் கதை இது:

அறிஞரும் அவர் நண்பரும் குளத்தில் குளித்து விட்டுக் கோயிலை நோக்கிப் போகும்போது இரு பெண்மணிகள் பேசிக்கொள்கிறார்கள்: "அதோ கட்டுக் குடுமியுடன் போகிறாரே அவர் யாருடி?" " உனக்குத் தெரியாதா, அவர்தான் நம்ப ஆச்சாளுடைய அகத்துக்காரர்". அறிஞர் சிரித்துக் கொண்டே நண்பரிடம் சொல்கிறார் " அஸ்மின் க்ராமே ஆச்சாள் பிரசித்தாஹா " (என் கிராமத்தில் ஆச்சாள்தான் பிரசித்தம்!)

நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது