6/10/2012

என் அப்பன் ராமபிரான் தவறு செய்திருப்பானா - 1

முரளி மனோகர் - என்ன டோண்டு, திடீரென என்னை ஏன் கூப்பிட்டே?

டோண்டு ராகவன் - இப்பதிவை இட்டு விட்டு வெறுமனே உட்காரச் சொல்கிறாயா? சட்டுபுட்டென்று காரியத்தைத் துவக்க வேண்டாமா?

முரளி - இதானே வாணாங்கறது. நீயே முடிவு செய்துட்டுத்தானே என்னைக் கூப்பிடறே?

டோண்டு- அது எப்படி உனக்குத் தெரியும்?

முரளி - நானும் நீயும் ஒண்ணுங்கறதை அப்பப்போ மறந்துடறியே?

டோண்டு - அப்போ ஓக்கேதானே, நாடக ரூபமாகவே போட்டுடுவோம்.

=====================================================================

காலம்:
திரேதா யுகம், ராவண வதம் முடிந்து சில மாதங்கள் ஆகியுள்ளன.

இடம்:
அயோத்தியின் சரயு நதிக்கரையில் தென்மேற்கு கோடியில் உள்ள வண்ணான் துறை அருகே அவன் வீடு.

பாத்திரங்கள்:
வண்ணான், கழுதை, வண்ணாத்தி, வாடிக்கையாளன் ஒருவன்

வண்ணான் சின்னான் சிடுசிடுவென இருக்கிறான். வாடிக்கையாளன் வந்த நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும்.

வாடிக்கையாளன்: என்ன சின்னான், என் துணியெல்லாம் தயாரா?

வண்ணான்: யோவ், காலங்கார்த்தாலே வ்ந்து தொந்திரவு பண்ணறியே. நேத்திக்கே என் வீட்டுக்காரி கிட்டே கொடுத்து அனுப்பிச்சேனே. கிடைக்கல்லியா?

வாடிக்கையாளன்: அடேடே நேத்திக்கா, நாங்கள் யாருமே வீட்டில் இல்லையே. கிராம அதிகாரி கூப்பிட்டனுப்பியிருந்தார் அவர் வீட்டு விசேஷத்துக்கு. அங்கே போய் விட்டோம்.

வண்ணான்: இரு பார்க்கிறேன். உள்ளே பல கூறுகளாக துணிமணிகள் கல் பலகை மேல் அடுக்கப்பட்டு இருக்கின்றன.

வண்ணான்: இதோ இருக்கே, எடுத்திட்டுப் போ.

வாடிக்கையாளன் செல்கிறான்.

வண்ணான் (தனக்குள்): எங்கே இவள். காலைலேருந்து பார்க்கல்லையே.

இவ்வாறு அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி வெளியேயிருந்து வீட்டுக்குள் வருகிறாள்.

வண்ணான் (திடுக்கிட்டு): எங்கே போயிருந்தே, இப்போ வரே?

வண்ணாத்தி: நேத்திக்கு நீ எங்கே காணும்? வழ்க்கம் போல குடிக்கப் போயிட்டையா? என் அம்மாவுக்கு உடம்புக்கு சுகமில்லைன்னு த்கவல் வந்தது. உன் கிட்டே சொலிட்டுப் போலாம்னா உன்னை காணோம். ஆகவே பக்கத்து வீட்டில் சொல்லிட்டுப் போனேனே. அங்கே கேக்கலையா? ஹூம், எங்கே கேட்டிருப்பே, குடி போதையிலே இருந்துருப்பே. கவுந்தடிச்சு படுத்துட்டு கொஞ்ச நேரம் முன்னாலதான் எழுந்திருப்பே.

தன் மனைவி சொன்னதில் முழு உண்மை இருந்ததால் வண்ன்ணானுக்கு ஒரே கோபம்.

வண்ணான்: அது சரி, உன் அம்மா வீடு பக்கத்துலேதானே இருக்கு, போனோமா வந்தோமான்னு இல்லாம இதென்ன சாவகாசமா வரே? ரொம்பத்தான் திமிர் உனக்கு.

அவன் பேச, அவள் எதிர்ப் பேச்சு பேச சண்டை முற்றுகிறது. அண்டை வீட்டார் தரும் புகார் பேரில் அவர்கள் கிராம அதிகாரி முன்னால் நிறுத்தப்படுகிறார்கள்.

கிராம அதிகாரி: என்னடா சின்னான், ஒன்னோட இதே ரோதனையா போச்சு. இப்போ என்ன விவகாரம்.

அதற்குள் கோபம் தலைக்கேறியதில் சின்னானுக்கு தான் என்ன பேசுகிறோம் என்பதே புரிவதில்லை.

வண்ணான்: இந்தப் பெண் எனக்கு வேண்டாம், பேசாம எங்களை அத்து விட்டுடுங்க.

மனைவி: அப்படியே செய்யுங்க, இந்த ஆளோட ஒரே ரோதனையாப் போச்சு. குடிச்சுட்டு கண்மண் தெரியாம நடந்துக்கிறான். ஆளை விடுங்க என்னோட அம்மா வீட்டுக்கே போறேன். அங்கே போய் இன்னோரு கல்யாணம் செஞ்சுக்கிட்டு வாழ்ந்து காட்டறேன்.

இருவரையும் சமாதானப்படுத்த எல்லோரும் முயல்கின்றனர். வண்ணான் இப்போது பேசுகிறான்.

வண்ணான்: என்னை என்ன வெக்கங்கெட்டவன்னு நினைச்சீங்களா? எனக்குத் தெரியாம வெளியே போய் ராத்தங்கின மனைவியை வச்சுக்க நான் என்ன கூறு கெட்டவனா நம்ம ராசாவைப் போல?

வண்ணாத்தி (சீறுகிறாள்): சும்மா பசப்பாதே அய்யா, யாரை ராசான்னு சொல்லறே? பொண்டாட்டியைக் கூட காப்பாத்த முடியாதவரையா?

ஊரே திகைக்கிறது. அங்கிருந்த ஒற்றர் தலைவன் இந்த விஷயம் பற்றி எழுத்து மூலம் மந்திரி சுமந்திரருக்கு ஓலை எழுதி அனுப்புகிறான்.

அரச நிந்தனைக்காக வண்ணனும் வண்ணாத்தியும் ஊர் காராகிருகத்தில் அடைக்கப்படுகின்றனர்.அவர்கள் மேல் விசாரணை செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது