4/11/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 48, 49 & 50

பகுதி - 48 (08.04.2009):
பாகவதர் நாதன் வீட்டிலிருந்து விலகி செல்கிறார். இப்போது நாதன் தனது அபரித கோபத்தை நீலகண்டன் மேல் காட்டுகிறார். பாகவதரை யாரென்று நினைத்தாய், அவர் எனக்குக் குரு, தகப்பன் போன்றவர் என்றெல்லாம் அவர் உரத்த குரலில் கூற, நீலகண்டன் திக்குமுக்காடி போகிறார். தான் அசோக்கின் நன்மையை உத்தேசித்து மட்டும் அம்மாதிரி பாகவதரை கடுமையாக சாடியதாக கூறுகிறார். ஆனால் நாதன் அதை ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை. நீலகண்டனை தனது தம்பி போல நினைத்ததாகவும், இப்போது அவர் தனது மனத்திலிருந்து விலகி விட்டதாகவும், ஆகவே let us part as friends எனக் கூறிவிடுகிறார்.

வசுமதி மிகவும் பாடுபட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துகிறாள். கடைசியில் ஒரு மாதிரி யுத்த நிறுத்தம் வருகிறது. இனிமேல் பாகவதரை அம்மாதிரி பேசக்கூடாது என்று எச்சரிக்கிறார் நாதன்.

நீலகண்டன் வீட்டில் மேலே நடந்தவை பற்றி காரசார விவாதம் நடக்கிறது. அவரது மகன் நாதன் தன் தந்தையை அவமானப்படுத்தியதை சீரணிக்க முடியாமல் வார்த்தைகளை விடுகிறான். நீலகண்டன் தனது தவற்றை உணர்ந்ததாலேயே நாதனிடம் சரண்டர் ஆனதாகக் கூறுகிறார். அதே மூச்சில் தன்னை நாதன் திட்டியதையும் எண்ணி குமைகிறார். இனிமேல் நாதன் வீட்டுப் பக்கமே போகப்போவதில்லை என சூள் உரைக்கிறார். ஒரேயடியாகப் போய் விழவும் வேண்டாம், இப்படி ஒட்டு மொத்தமாக கத்தரிக்கவும் வேண்டாம், இது என்ன வச்சாக் குடுமி சரச்சா மொட்டைன்னு இருக்கிறது என பர்வதம் நொடிக்கிறாள். எது எப்படியானாலும் தானும் அசோக்கும் நட்பாக இருப்பதாகவும் பெரியவர்களது மனவேற்றுமை தங்களை பாதிக்காது என்ற ரேஞ்சில் உமா பேச, பர்வதம் விழிக்கிறாள்.

வேம்பு சாஸ்திரி வீட்டுக்கு ஒரு என்.ஆர்.ஐ. பெண்மணி வந்து அமெரிக்காவில் ஒரு புரோகிதர் தேவையென்றும் நல்ல சம்பளம், இருக்க வீடு, கார் வசதி எல்லாம் தனியென்றும், அதற்கு சாம்பு சாஸ்திரியை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு போகிறார். வேம்புவின் மனைவிக்கு தன் கணவரே அந்த வேலையை எடுத்து கொள்ளலாமே என நப்பாசை. ஆனால் அதற்கெல்லாம் வேம்பு இடம் தராது சாம்பு வீட்டிற்கு சென்று அவரிடம் விஷயத்தை கூறுகிறார். சாம்பு அதை மனப்பூர்வமாக வரவேற்க, அவர் மனைவிக்கோ ஒரே அதிர்ச்சி. “நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்” என அவர் அதிர்ச்சி அடைய, அவரோ என்ன செய்வது ஊரைச்சுற்றிக் கடன். அமெரிக்கா போனால் அதெல்லாம் தீருமல்லவா என நியாயப்படுத்துகிறார்.

இப்போது சோ அவர்கள் சீனுக்கு வருகிறார். நியாயமாக நடந்து வாழ்பவர்களுக்கு இந்தக் கடன் தொல்லை சர்வ சாதாரணமாக இருக்கும் எனக்கூறி, பாரதியாரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். தனக்கு ஊரெல்லாம் கடன், வாழ்க்கையை நிம்மதியாக நடத்தயியலவில்லை. பிறகு எப்படி கவிதையெல்லாம் எழுதுவது என்றெல்லாம் புலம்பி, பராசக்தி தனக்கு உதவி செய்யாவிடில் தான் நாத்திகனாக மாறிவிடப்போவதாக அவர் உரிமையுடன் அன்னை சக்தியையே மிரட்டுகிறார் பாரதியார்.

மீண்டு காட்சி சாம்பு வீட்டிற்கு செல்கிறது. சாம்புவின் மனைவி செல்லம்மாள், இத்தனை நாள் கட்டிக் காத்த சாம்புவின் நல்ல பெயர் இந்த ஒரு செயலால் பாதிக்கப்படும் என அஞ்சுகிறார். தனக்கு ஆதர்ச வாழ்க்கை வாழும் சாம்புதான் பிரியம் என சுட்டிக் காட்டுகிறாள். சாம்பு இப்போது தன் மனைவியிடம் தனக்கும் அதே கருத்துத்தான் என்றும், அவளுடைய கருத்தை அறியவே அவ்வாறு பேசியதாகவும் கூறுகிறார். விவேகானந்தர் வெளிநாட்டுக்கு போனது இந்து மதத்தைப் பரப்ப, ஆனால் தான் போனால் அது தன் வசதியைப் பெருக்கிக் கொள்ள மட்டுமே எனக் கூறுகிறார். பிறகு வேம்புவிடம் தான் வரவியலாது என்பதைக் கூறுகிறார். வேம்பு தன் பங்குக்கு தானும் சாம்புவிடமிருந்து இப்பதிலையே எதிர்ப்பார்த்ததாகவும், சாம்பு நிஜமாகவே மாமனிதர் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். பார்ப்பனர் கடல் கடப்பதற்கில்லை எனவும் சாம்பு கூறுகிறார்.

பார்ப்பனர் கடல் கடக்கக்கூடாதா என்று சோவின் நண்பர் வியப்புடன் கேட்க, உண்மை சொல்ல வேண்டும் என்றால் அது ஆமாம் என்கிறார் சோ. அதற்கான காரணங்களையும் விளக்குகிறார். பார்ப்பனருக்கென விதிக்கப்பட்ட கர்மாக்கள் நிலத்தின் மேல்தான் செய்ய வேண்டும், அதுவும் பாரத வர்ஷத்தில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்னும் பலரால் பாவிக்கப்படுகின்றன. அந்தப் பலரில் சாம்புவும் ஒருவர். மற்றப்படி பெயரளவில் மட்டுமே பார்ப்பனராக இருப்பவர்கள் (தன்னையும் இதில் சேர்க்கிறார் சோ) இம்மாதிரி கட்டுப்பாடுகளை பாவிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன் மனைவி பர்வதம், மற்றும் சமையற்கார மாமி இருக்கிறார்கள். வசுமதி வெளியே போயிருக்கிறாள். அசோக் அங்கு வர, பர்வதம் நாதன் வீட்டில் தன் கணவருக்கும் பாகவதருக்கும் இடையில் நடந்த வாக்குவாதங்களைப் பற்றிக் கூற, அதனால்தான் சில நாட்களாக பாகவதர் வரவில்லையா என திகைக்கிறான் அசோக்.

பகுதி - 49 (09.04.2009):
பாகவதர் பற்றி நீலகண்டன் ஏன் தப்பாகப் பேச வேண்டும் என அசோக் திகைக்கிறான். பர்வதத்தின் எதிரிலேயே பாகவதர் நம்பருக்கு ஃபோன் போட்டு அவரிடம் நடந்ததது என்னவென கேட்க, பாகவதரும் கூறுகிறார். அவர் பெரிய மனது பண்ணி வீட்டுக்கு வர வேண்டும் என கேட்டு கொள்கிறான். பர்வதத்துக்கு திகைப்பு. தங்கள் இருகுடும்பத்தினருக்கிடையே இருக்கக் கூடிய நல்லுறவை விட பாகவதர் முக்கியமா எனக் கேட்கிறாள். பாகவதர் நாதனை பணம் காய்ச்சி மரமாகத்தான் பார்க்கிறார் எனவும் குற்றம் சாட்டுகிறாள். அசோக்குக்காகத்தான் தன் கணவர் பாகவதருடன் சண்டை போட்டதாகவும் ஆகவே நடந்தவை எல்லாவற்றுக்கும் அசோக்தான் காரணம் எனக்கூறிவிட்டு கோபத்துடன் அப்பால் செல்கிறாள். நாதனிடம் அசோக் வந்து எப்படியாவது பாகவதரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும் என அவரிடம் கூறுகிறான்.

அரசியல்வாதி வையாபுரி தான் ஓட்டிய காரில் ஒரு வயதானவர் அடிப்பட்டு மரணிக்க, போலீசிடம் தனது கையாள் சிங்காரத்தை சரணடையச் செய்கிறார். அவனும் அதை மனமின்றி செய்கிறான்.

உமாவும் அசோக்கும் பேசுகின்றனர். தனது அன்னை சார்பில் உமா அசோக்கிடம் மன்னிப்பு கேட்க, அதையெல்லாம் அவள் இன்னமும் நினைத்து மனம் குழம்ப வேண்டாம் என அசோக் கூறுகிறான். இதை விளக்க ஒரு குருவின் கதையையும் கூறுகிறான். ஆற்றைக் கடக்க உதவி செய்யும் நோக்கத்தோடு ஒரு இளம்பெண்ணை அந்த குரு தன் தோளில் சுமந்து சென்று அக்கரையில் விட்டுவிட்டு மேலே செல்கிறார். அதை பற்றி நெடுநேரம் சீடர்கள் விவாதிக்க, தான் அப்பெண்ணை எப்போதோ இறக்கி வைத்தாகி விட்டது, அவர்கள் மட்டும் ஏன் அவளை இன்னும் தம் மனதில் சுமக்க வேண்டுமென கேட்கிறார். எல்லாமே தன்னால்தான் என உமா கூறுகிறாள். ராமகிருஷ்ணர் சம்பவம் பற்றி தான் கூறவே இவ்வாறு ஆகிவிட்டது என்கிறாள். இவற்றையெல்லாம் வேறுவிதமாக பார்க்குமாறு அசோக் கூறுகிறான். பாகவதரை நீலகண்டன் சாடியது, பாகவதர் வருத்தப்பட்டது, பர்வதம் மாமி தன்னுடன் பேசியது ஆகிய எல்லா விஷயங்களிலிருந்தும் பல பாடம் கற்று கொள்ளலாம். இவ்வாழ்வே ஒரு மாயை என்பது புரியும் எனக் கூறுகிறான்.

அப்படியென்றால் எல்லாமே பொய்யா என நண்பர் கேட்க, சோ அப்படி இல்லை எனக் கூறுகிறார். மாயை என்பதை பல உதாரணங்களுடன் விளக்குகிறார். இருட்டில் ஒரு கயிற்றைப் பார்க்கிறோம், அது பாம்பு என ஒரு நிமிடத்துக்கு மனம் மயங்குகிறது. கிளிஞ்சல் சூரிய வெளிச்சத்தில் வெள்ளியாக தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கையில் அது கிளிஞ்சல்தான் எனத் தெளிகிறோம். பல விஷயங்கள் உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல, அவை மித்யை என்கிறார் சோ அவர்கள்.

[இங்கு டோண்டு ராகவன் தரப்பில் சில வார்த்தைகள். நம் வாழ்வின் பலகட்டங்களில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம். பல பிரச்சினைகள் அவை வந்தபோது மிகப் பெரியதாகத் தென்பட்டன. இப்போது பல ஆண்டுகள் கழித்து அப்பிரச்சினைகளை முந்தையச் சுற்றுச் சூழலுடன் சேர்த்து பார்க்கையில் அவை அவ்வளவு பிரம்மாண்டமாகத் தோன்றுவதில்லை என்பதே நிஜம். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. காலம் ஆக ஆக பின்னோக்கிப் பார்க்கும்போது அப்போதெல்லாம் வாழ்க்கை ரொம்ப நிதானமாகப் போனது போல சில சமயம் தோன்றும். காரணம் என்னவென்றால், அப்போது நடந்த விஷயங்கள் நமக்கு இப்போது புதுமையாக ஒன்றும் கூறுவதில்லை. அவை எவ்வாறு டெவலப் ஆயின என்பது நமக்கு முழுதும் தெரிந்து விடுகிறது].

உமா அசோக் பேச்சு தொடர்கிறது. தன்னை வைத்து பலவிஷயங்கள் நடக்கின்றன, ஆனாலும் ஒவ்வொருவரும் அவற்றை ஒவ்வொரு விதமாகத்தான் பார்க்கின்றனர் என அசோக் கூறுகிறான். உண்மையைப் பார்க்க விடாமல் நமது ஐம்புலன்களே தடுக்கின்றன என உமா கூறுவதை அசோக்கும் ஆமோதித்து மேலும் விளக்கங்கள் தருகிறான்.

பகுதி - 50 (10.04.2009):
அசோக் தோட்டத்தில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கிறான். அங்கு செடிகளுக்கு நீர்பாய்ச்சும் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி அவனிடம் அவன் என்ன படிக்கிறான் என கேட்கிறாள். ரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றி படிப்பதாக அசோக் கூறுகிறான். அவர் ஆஸ்ரமத்துக்கு புலி சிங்கங்கள் எல்லாம் வருவதையும், அவை சித்த புருஷர்கள் என ரமண மகரிஷி கூறியதாகவும் அசோக் கூறுகிறான். இதே போல விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது அவரருகில் புலி ஒன்று வந்ததையும், அவர் தனக்குள் இருக்கும் இறைவனே புலிக்குள்ளும் இருப்பதாகவும், ஆகவே எது நடந்தாலும் அது கடவுள் சித்தமே என தெளிந்து தியானத்தில் ஆழ்ந்து அரை மணி நேரம் கழித்து கண்விழித்து பார்க்கையில் புலி காணாமல் போனதையும் கூறுகிறான். இதையெல்லாம் யார் நேரே பார்த்தது என அசிரத்தையாக பேசிய மாமி திடீரென உறைந்து போகிறாள். ஏனெனில் சரசரவென்று வந்த நாகம் ஒன்று அசோக் மேலே ஏறி படம் எடுத்து நிற்கிறது. கைகால் உதற மாமி உள்ளே ஓடி நாதனையும் வசுமதியையும் அழைத்து வர, வந்து பார்த்தால் பாம்பு இல்லை. அசோக்கோ பாம்பு வந்ததா என ஆச்சரியமாகக் கேட்கிறான்.

பாகவதர் வீட்டில் நீலகண்டனுக்கும் பாகவதருக்கும் நடந்த வாக்குவாதம் பற்றி பேசுகிறார்கள். அவர் மனைவி ஜானகி ஆறுதல் சொல்கிறாள். இனிமேலும் நாதன் வீட்டிற்கு போய் தன் மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் என ஆலோசனை கூறுகிறாள். அவர் பையனும் அதை ஆமோதிக்கிறான். அப்போது நாதனிடமிருந்து கூரியர் வருகிறது. அசோக்கிடம் பாம்பு வந்த விஷயம் அதில் கூறப்பட்டுள்ளது. இம்மாதிரி அனுபவங்களெல்லாம் உயர்தர ரிஷிகள் போன்ற சித்தபுருஷர்களுக்குத்தான் நடக்கும் என பாகவதர் கூறுகிறார். அப்படியென்றால் பாம்பாட்டிகளெல்லாம் சித்த புருஷர்களா என அவர் மகன் இடக்காக கேள்வி கேட்க, பாம்பாட்டிகள் பாம்பின் பல்லைப் பிடுங்கி விட்டே அதனுடன் நட்பு பாராட்டுகின்றனர். ஆனால் அசோக் விஷயத்தில் பாம்புக்கு பல் இருந்திருக்கிறது என பாகவதர் கூறுகிறார். இப்படியே போனால் அசோக் சன்னியாசியாகி விடுவானோ என அவர் மனைவி அச்சப்பட, காவி மாட்டிண்டாத்தான் சந்நியாசியா என பாகவதர் கேட்கிறார். “அப்போ காவிமாட்டிண்டவா எல்லோருமே சன்னியாசி இல்லையா” என பையன் கேட்கிறான்.

பையன் நல்லா கேள்வி கேட்டதாக சோவின் நண்பர் கூறுகிறார். அதுவும் இந்த காலத்தில் அறிவை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும் நண்பர் கூற, இம்மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்க அறிவு ஒன்றும் தேவையில்லை என சோ கூறுகிறார். இம்மாதிரியான கேள்விகள் மிகப்பழையவை. ஆதி சங்கரரே வெறுமனே மழித்தலோ நீட்டலோ செய்து காவி உடுத்துபவர்களை கேலி செய்கிறார். நாத்திக வாதம் என்றாலும் அதுவும் ஆதிகாலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.

பாகவதர் தன் பையனிடம் சுவாமி விவேகானந்தர் நிஜமாக சன்னியாசம் வாங்கிய கதையை கூறுகிறார். ஒரு அரசவையில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட, அதில் பாட ஒரு தாசியைக் கூப்பிட்டிருந்தார்கள். தாசி வந்ததால் இவர் தன் அறையிலேயே தங்கிவிட, அந்த தாசி அதையறிந்து மனம் வருந்தி நரசி மேத்தாவின் பாடல் ஒன்றை பாடுகிறாள்.

வெறுமனே அழுதால் செய்த பாவம் மறையுமா என சோவின் நண்பர் கேட்க, கண்டிப்பாக அழியும் என்கிறார் சோ அவகள். ஒரு சன்னியாசியும் ஒரு தாசியும் ஒரே ஊரில் வசித்து வந்தனர். சன்னியாசி தாசியின் நடத்தையை மானிட்டர் செய்ய, தாசியோ இந்த சன்னியாசி மாதிரி தான் கடவுள் பக்தியுடன் இல்லையென விசனிக்கிறாள். இருவருமே இறந்த பிறகு, தாசி சொர்க்கம் செல்ல, சன்னியாசி நரகம் செல்கிறார். அவரவர் மனத்தால் வாழ்ந்த வாழ்க்கையே சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவதை நிர்ணையிக்கிறது என சன்னியாசிக்கு உணர்த்தப்படுகிறது.

தாசியின் பாடலைக் கேட்டு மனம் மாறிய விவேகானந்தர் அவளை வந்து ஆசீர்வதித்திருக்கிறார். அப்போதுதான் தான் உண்மையான சன்னியாசியானதாக அவர் எழுதியுள்ளார், எனக் கூறுகிறார் பாகவதர்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Gokul R said...

Hi Dondu,

This comment is not pertaining to this particular post but a general one because I am not able to find your email id.Forward me the same to gokul.bits@gmail.com

One kind suggestion...Instead of posting the review of "Engae Brahmanan" week by week,Can you please provide us,your readers and fans, A series on "the Dravidian Movement in Tamilnadu".I guess you lived contemporary to that period-60s and 70s.It will be a great treasure for young generation like us to know how the political scenario looked like during that period and how the Dravidian parties were able to get a pulse of the people.

Anonymous said...

இந்த கேள்விகளுக்கு பதில் கூறவும்.

* முன்பெல்லாம் பயணம், யாத்திரை போகிறவர்கள், தாகம் தீர்க்க கையோடு ஒரு கூஜாவில் தண்ணீர் கொண்டு போவர்... இப்போது யாரும் கூஜா பயன்படுத்துவது இல்லையே, ஏன்?


* முன்பெல்லாம் எழுத்தாளர், கவிஞர் என்றால், அவர்கள் ஜிப்பாதான் அணிவர்; இப்போது ஜிப்பா அணிவதில்லையே, ஏன்?

* முன்பெல்லாம், "பாத்திரத்திற்கு பெயர் வெட்டறது...' என்று கூவியபடி ஒருவர் தெருவுக்குத் தெரு வருவார்; இப்போது அப்படி யாரையும் காணோமே, ஏன்?

* முன்பெல்லாம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளிக் கூட வாசலிலும் ஒரு கிழவி, அழுகியும், அழுகாத சின்னச் சின்ன மாம்பழங்களை வைத்து, ஈ ஓட்டிக் கொண்டே விற்றுக் கொண்டிருப்பாளே... அந்த மாதிரி கிழவிகளே இப்போது காணோமே, ஏன்?

* முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு பெரியவர்கள் வரும் போது, பட்டு சரிகை வைத்த அங்கவஸ்திரம் போட்டு வருவர்; இப்போது அப்படி யாரும் அணிந்து வருவதில்லையே, ஏன்?


* முன்பெல்லாம் சாயங்கால வேளையில் வீட்டு வெளிச் சுவரில் உள்ள மாடத்தில் விளக்கேற்றி வைப்பர்; இப்போது செய்வதில்லையே, ஏன்?

* முன்பெல்லாம் சினிமாவில் கதாநாயகனும், வில்லனும் சண்டை போட, முடிவில் ஜீப்பில் போலீஸ் வந்து திபுதிபுவென்று இறங்குவரே... இப்போது, அப்படி வருவதில்லையே, ஏன்?

கேள்விகள் -by- அந்துமணி (தினமலர் வாரமலர்)
http://www.dinamalar.com/weeklys/vmalarnewsdetail.asp?news_id=495&dt=04-14-09

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது