4/17/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 51, 52 & 53

பகுதி - 51 (13.04.2009):
நாதன் தன் வீட்டு கேட் அருகில் பாகவதருக்காக பொறுமையின்றி காத்திருக்கிறார். வசுமதி அதற்காக அவருடன் வாதம் செய்கிறாள். அதற்குள் பாகவதர் வந்துவிட, அவரை இருவருமே வரவேற்று உள்ளே அழைத்து செல்கின்றனர். நாதன் பாகவதருக்கு தான் அனுப்பிய கடிதம் பற்றி பேச ஆரம்பிக்கிறார். அசோக் செய்த புண்ணியத்தால்தான் பாம்பு அவனைத் தீண்டவில்லை என அவர் கூற, பாகவதரோ பாம்பு வந்ததே அசோக் செய்த புண்ணியமே என ஏன் கூறக்கூடாது என கேட்கிறார்.

பேசாமல் அசோக்கை சன்னியாசியாக்கி விடலாமா என நாதன் கேட்க, சன்னியாசம் என்பது தானே வரவேண்டியது என்றும், பழம் பழுத்தவுடன் தானே விழுவது போல எனக் கூறுகிறார்.

பழம் பழுத்தால் விழவேண்டியதுதான் என்பதில் என்ன புதுமை என சோவின் நண்பர் கேட்க, பல தெரியாத விஷயங்களை இவ்வாறுதான் கூறி விளக்க முடியும் என சோ கூறி, கூடவே மேலும் சொல்கிறார், “இம்மாதிரி விஷயங்களை மோட்சத்துக்குத்தான் சாதாரணமாக கூறுவார்கள்” என்றும் கூறுகிறார். மோட்சத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றியும் பேசுகிறார்.

நாதனுடன் மேலே பேசும்போது அசோக் ரமண மகரிஷி ஆசிரமத்து விஷயங்களை பற்றி கூறியது சம்பந்தமாக நாதன் பாகவதரிடம் கூற, அவரோ சித்தபுருஷர்கள் ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கு புலி ரூபத்தில் வந்தது போலவே, அசோக்கிடம் வந்த பாம்பும் ஏன் ஒரு சித்த புருஷனாக இருக்கக்கூடாது என கேட்கிறார். அதே சித்த புருஷனே தன் ரூபத்தில் வந்து அசோக்கிடம் பேசியிருக்கலாம் என்றும், திருவண்ணாமலையில் அசோக்கை சந்தித்த பைராகியாகவும் இருந்திருக்கலாம் என்றும், அசோக்கின் ஜாதகம் அடங்கிய சுவட்டினை தட்டிப் பறித்த சூறாவளிக் காற்றாகவும் இருந்திருக்கலாம் எனவும் கூறுகிறார். (பை தி வே, அவ்வாறு வந்தது நாரத மகரிஷியே என்பதை அவரே சிவபெருமானிடம் கூறியதைக் கேட்டுள்ளோம் நாம் என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்). எது எப்படியானாலும் அசோக் ஒரு தெய்வப்பிறவி என்பதில் சந்தேகமில்லை எனவும் பாகவதர் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் பெண்ணின் திருமணத்துக்காக வரும் ஜாதகங்களை அவர் குடும்பம் ஆய்வு செய்கிறது. ஒவ்வொரு ஜாதகமாக ஆராயப்பட்டு ஒவ்வொரு காரணத்துக்காக ரிஜக்ட் செய்யப்படுகிறது. ஐயர்களுக்கும் பிரிவுகளான வடமா, பிருகசரணம், அஷ்ட சஹஸ்ரம் மற்றும் வாத்திமா பிரிவுகள் எவ்வாறு உண்டாயின என சோ அவர்கள் விளக்குகிறார்.

வழியில் பாகவதரை சந்தித்த நீலகண்டனின் மனைவி பர்வதம் அவரை தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க அவரும் வருகிறார். நீலகண்டன் பாகவதர் பற்றி பல கடுமையான சொற்கள் கூறியதற்கு பர்வதம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க, பாகவதர் அதையெல்லாம் தான் மனதில் வைத்து கொள்ளவில்லை எனக் கூறிவிடுகிறார். தன் கணவன் இம்மாதிரி நாத்திகனாக இருப்பதற்காக வருந்தும் பர்வதத்திடம் பாகவதர் நாத்திக வாதம் என்பது அனாதி காலமாக இருப்பதையும் கூறுகிறார்.

சோ அவர்களும் இதை தன் நண்பரிடம் உறுதிபடுத்துகிறார். ஜாபாலி முனிவர் பேசிய சார்வாக வாதங்கள் மிகக்கடுமையாகவே ஆத்திகரை சாடியதை அவர் எடுத்து கூருகிறார். ஆக இவையெல்லாம் ஏற்கனவேயே இருந்து வரும் வாதங்களே, இவற்றையெல்லாம் எந்த பகுத்தறிவு வாதியும் கண்டு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

பகுதி - 52 (15.04.2009):
பாகவதர் மற்றும் பர்வதத்தின் பேச்சு தொடர்கிறது. துர்யோதனாதிகள் எல்லா யுகங்களில்மே இருந்து வந்துள்ளனர். ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆண்டவனது அருளை அவர்கள் பார்க்க மறுப்பதில் கடவுளின் குற்றமேதும் இல்லை எனவும் பாகவதர் கூறுகிறார். அதே நேரத்தில் விஞ்ஞானம் என்ற பெயரில் என்ன கூறினாலும் அதே பகுத்தறிவுவாதிகள் நம்பத் தயாராக இருந்துள்ளனர் என்றும் பாகவதர் கூறுகிறார்.

இப்போது சீனில் வரும் சோ பாகவதர் கூறியதை உறுதிப்படுத்துகிறார். அமெரிக்கா சந்திரனில் மனிதனை இறக்கியது குறித்து பல புத்திசாலித்தனமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதில்களும் அளிக்கப்பட்டன என்பது வேறு விஷயம், ஆனால் அதே சமயம் விஞ்ஞானம் என மயங்காது கேள்வி கேட்பதற்கே மிகுந்த பகுத்தறிவு தேவைப்படும் என்றும், அவ்வாறு கேள்வி கேட்டவர்களில் நமது பகுத்தறிவுவாதிகள் யாரும் இல்லையெனவும் சோ சுட்டிக்காட்டினார். விஞ்ஞானம் பற்றி ஒன்றும் தெரியாது, ஆனால் அது சொல்வதை நம்புகிறார்கள். அதே சமயம் ஜோசியம் பற்றியும் ஒன்றும் தெரியாது, இருந்தாலும் அதை நம்ப மாட்டேன் என்பது என்ன பகுத்தறிவுவாதம் எனவும் சோ கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் எல்லாமே கேள்விகள் ரூபத்திலேயே வருகின்றன. அருச்சுனனே கிருஷ்ணனிடம் பெரிய வார்த்தைகள் எல்லாம் போட்டு தன்னை குழப்ப வேண்டாம் என கூறிவிடுகிறான் என்பதையும் சோ கூறுகிறார்.

சீன் மீண்டும் நீலகண்டன் வீட்டுக்கு செல்கிறது. பகவானே சங்கு சக்கிரம் ஏற்று வந்தால்தான் தன் கணவர் நம்புவாரா என பர்வதம் கேட்க, கொள்ளைக்காரனாக இருந்த வேடனே பிற்காலத்தில் வால்மீகியாக மாறியது போல நீலகண்டனும் மாறுவார் என தனது நம்பிக்கையை பாகவதர் தெரிவிக்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரும் அவர் மனைவியும் வேம்பு சாஸ்திரிகளும் இந்த கர்மபூமியாம் பாரதவர்ஷத்தை விட்டு செல்ல தமக்கு மனமில்லை என்பதை பல உதாரணங்களுடன் விளக்குகின்றனர். அதுவும் தாங்கள் குடியிருக்கும் திருமயிலையின் பெருமைகளை ஒவ்வொருவராக கூறுகின்றனர். ஏதோ கச்சேரியில் தனி ஆவர்த்தனம் பார்த்து, கேட்ட எஃபெக்ட்.

சோ அவர்களும் தன் பங்குக்கு இந்த மயிலையில் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம் பற்றி பேசுகிறார். அரவம் தீண்டியதால் மரணமுற்ற பூம்பாவாய் என்னும் பெண்ணை உயிர்ப்பிக்க அவர் பாடிய பாசுரங்களில் ஒன்றை இங்கு கூறுகிறார்.

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

அசோக் காதில் ஒரு பசுமாடு கத்தும் ஒலி கேட்டு கீழே ஓடி வருகிறான். தெருவில் ஒருவன் பசு ஒன்றை கயிற்றால் கட்டி அழைத்து சென்று கொண்டிருக்கிறான். பசுவைப் பார்த்து அசோக் குழப்பத்துடன் கேட்கிறான், “நீ நந்தினிதானே” என்று. மாட்டுக்காரன் திகைக்கிறான். இந்த நிகழ்ச்சியை பார்த்த சமையற்கார மாமி பதறிப்போய் நாதன் மற்றும் வசுமதியிடம் இது பற்றி கூற, அவர்கள் அசோக்கை இது சம்பந்தமாக கேட்கின்றனர். அவனோ தான் பசுவிடம் கேள்வி கேட்டதை உறுதி செய்கிறான். அவள் நந்தினியா என தான் கேட்டதாகவும் கூறிவிட்டு, அவள் நந்தினியாக இருந்திருந்தால் தன்னிடம் பேசியிருப்பாள் எனவும் சொல்கிறான். “யார் அந்த நந்தினி, உன் சினேகிதியா” என நாதன் கேட்க, இவனுக்கு ஃப்ரெண்டே கிடையாது, இதிலே கேர்ள் ஃபிரெண்ட் என்ங்கேயிருந்து வந்தா என வசுமதி நொடிக்க, அசோக்கோ அஷ்டவசுக்கள் பற்றி ஏதோ முணுமுணுக்கிறான்.

“யார் சார் அஷ்டவசுக்கள், ஒரே கஷ்டமா இருக்கே எனக் கூறுகிறார்”? என சோவின் நண்பர் கேட்கிறார்.

பகுதி - 53 (15.04.2009):
உண்மை கூறப்போனால் கஷ்டம் தீரத்தான் வசுக்களை பிரார்த்திக்கிறார்கள் என சோ புன்னகையுடன் பதிலளிக்கிறார். மேலும் கூறுவதாவது. தட்சனின் மகள் வசு தர்மதேவதையை மணக்கிறாள். அவளுக்கு எட்டு பிள்ளைகள். அவர்களுக்கு அஷ்டவசுக்கள் என பெயர். வசிஷ்டரிடம் காததேனுவை நிகர்த்த பசு ஒன்று இருந்தது. அதற்கு பெயர் சுரபி அல்லது நந்தினி. அப்பசுவை அஷ்டவசுக்கள் திருட அவர்களுக்கு மானிட உலகில் பிறக்கும்படி சாபம் வர, அவர்களில் ஒருவரான பிரபாசன் என்பவர் மட்டுமே பீஷ்மராக நீண்ட காலம் பூமியில் இருந்தது பற்றி சுருக்கமாகக் கூறுகிறார். (இதே நந்தினியை வைத்துத்தான் கௌசிகன் என்னும் அரசனுக்கும் வசிஷ்டருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அரசன் தாக்க அவன் நந்தினி மற்றும் வசிஷ்டரால் அனாயாசமாக முறியடிக்கப்பட, தானும் பிரும்மரிஷி ஆக நிச்சயித்து பல சறுக்கல்களுக்கு பிறகு அதே அரசனான கௌசிகன் பிரும்மரிஷி விஸ்வாமித்திரராக ஆவதையும் இங்கு சோ கூறுகிறார்).

இங்கு நாதனிடம் அசோக் அதே கதையை (அஷ்டவசுக்கள் நந்தினியைத் திருடியது) உணர்ச்சியுடன் கூறும்போது பாதியில் உணர்ச்சி பிரவாகத்தில் மூழ்கி, அதைத் தாங்காமல் மயக்கம் அடைகிறான்.

நீலகண்டன் வீட்டில் பர்வதம் தன் மகன் ராம்ஜியிடம் பாகவதர் தங்கள் வீட்டுக்கு வந்து போனதை கூறவேண்டாம் என கேட்டுகொள்ள, அவனும் அப்பா வரும் நேரத்தில் இருக்கவேண்டாம் என வெளியில் செல்ல முயல வசமாக நீலகண்டனிடம் மாட்டி கொள்கிறான். கடைசியில் பார்த்தால் நீலகண்டனுக்கு ஏற்கனவேயே விஷயம் நாதன் மூலமாக தெரிந்திருக்கிறது. சுவாரசியமான சண்டையாக உருவெடுக்கும், வேடிக்கை பார்க்கலாம் என ஆவலுடன் காத்திருந்த உமா செல்லமாக இது சம்பந்தமாக தனது ஏமாற்றத்தைத் தெரிவிக்கிறாள்).

பாகவதர், வால்மீகி முதலில் கொள்ளையராக இருந்து பிறகு மகரிஷியானதாகச் சொன்ன கதையைச் சொன்னது பற்றி பர்வதத்தின் வாயால் கூறக்கேட்டு, நீலகண்டனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. அப்போ தான் தற்சமயம் கொள்ளைக்காரனா என ஆவேசப்படுகிறார். “கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்கோன்னா, நீங்க வால்மீகியா மாறி ராமாயணம் போன்ற காவியம் எழுதுவேள்” என பர்வதம் கூறி அவரை இன்னும் டென்ஷனாக்குகிறாள். நமக்கோ டென்ஷன் குறைந்து சற்றே புன்னகையை வரவழைத்த இடம் இது.

கிருபா வீட்டிற்கு வரும் வேம்பு சாஸ்திரிகள் கிருபாவின் ஆஃபீசிலேயே வேலை செய்யும் கிரி என்பவனை பற்றி விசாரிக்கிறார். தன் மகள் ஜயந்திக்கு அவனைப் பார்க்க இருப்பதாகக் கூற, கிருபா அவனுக்கு முழு சிபாரிசு செய்கிறான். ஜயந்திக்கு மிகவும் பொருத்தமானவன் என்று வேறு கூறுகிறான். தான் வந்து கிரியை பற்றி விசாரித்த விஷயத்தை அவனிடம் கூற வேண்டாம் என வேம்பு சாஸ்திரிகள் கிருபாவை வேண்டி கொள்ள, அவன் சிரித்து கொண்டே அப்படியே கூறினாலும் வேம்பு அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் தான் கிரியிடம் கூறப்போவதாக சொல்கிறான்.

அசோக் தூங்கி கொண்டிருக்க, உபநிஷதம், புராணங்கள், வாசிஷ்ட யோகம் போன்ற அவனது பலபுத்தகங்களை வசுமதி வெளியில் தூக்கி எறிகிறாள். அவற்றாலேயே அவன் கெட்டுப் போவதாக எண்ணி அவள் கோபப்பட்டதால் வந்த விளைவு அது. அசோக் அதற்காக அவளிடம் வாக்குவாதம் செய்கிறான். எப்படி அதிக பணம் உள்ளது லட்சுமி கடாட்சம் எனக் கருதப்படுகிரதோ, அதே போல இந்த புத்தகங்கள் எல்லாம் சரஸ்வதி கடாட்சம் எனக் கூறுகிறான். பிறகு புத்தகங்களை திரும்ப எடுத்து செல்கிறான். வசுமதியும் அவனுக்கு உதவி செய்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Anonymous said...

கேள்விகள்:

எம்.கண்ணன்.

1. சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து போன் செய்த நண்பர், மதுரையில் இரண்டு கண்டெயினர் லாரிகளில் வைடமின் 'ப' வந்து இறங்கி நின்றுகொண்டிருப்பதாகவும், இது அங்குள்ள வருமானவரி அலுவலகத்திற்கும் தெரியும் என்றும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆட்டம் கிளோஸ் என்பதால் மௌனமாக உள்ளனர் என்றார். ஒரு கண்டெயினரில் சுமாராக எவ்வளவு இருக்கும் ? எங்கிருந்து வரும் இவ்வளவு ?

2. நாகர்கோவில், நெல்லை, சங்கரன் கோவில், தூத்துக்குடி என எல்லா மேடைகளிலும் ஜெ. ஒரே பேப்பரையே திரும்பப்படித்து பேசுகிறாரே ? அவருக்கே போரடிக்கவில்லையா ? அதே வார்த்தைகள், சொற்றொடர்கள், கேள்விகள். மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி ? ஏன் இந்தக் கத்தல் கத்துகிறார் ? துளிக்கூட ஒரு நகைச்சுவையோ, மக்களை தொண்டர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பேச்சு இல்லையே ?

3. தயாநிதி மாறன் - வைரமுத்து - காபி வித் அனு - விஜய் டிவி பார்த்தீர்களா ? மிகவும் இயல்பாகவும், நன்றாகவும் இருந்தது.

4. கவுதம் வாசுதேவ மேனன் - இவரின் 'வேட்டையாடு விளையாடு' படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. இவரை நம்பி எப்படி க்ளவுட் நயன் பிக்சர்ஸ் என அழகிரியின் மகன் தயாநிதி படக் கம்பெனியை ஆரம்பித்து படம் வெளியிட்டார் ? வாரணம் ஆயிரம் - அதுவும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியான ஸ்லோ மூவிங் படம். சைக்கோத்தனம், மனப் பிறழ்வு, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் - இதைத்தான் இவரால் எடுக்க முடியுமா ?
சைக்கோத்தனமான த்ரில்லர் ஒன்று எடுக்கப் போகிறாராமே ?

5. கருணாநிதியின் பிரபாகரன் பற்றிய பல்டி பற்றி தங்கள் கருத்து என்ன ? NDTVயில் பேட்டியில் அவர் சொன்னது முழுவதும் பதிவாகியிருக்கிறதே ? ஒளிபரப்பினரே ? பின்பு எப்படி பல்டி அடிக்கிறார் ?

6. காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம் பட நாயகி 'காஞ்சனா' பற்றி உங்கள் கருத்து - சுமார் 4- 5 வரிகளில் ? அவரின் தற்போதைய தோற்றத்தை ஜெயா டிவியில் பார்த்தீரா ? (திரும்பிப் பார்க்கிறேன்)

7. தற்போதைய டாப் 10 வலைப்பதிவர்கள் யார் யார் ? உங்கள் ரேட்டிங்கில் ? ஏன் ?

8. சுஜாதாவின் இளவல் போல எழுதும் இரா.முருகனை விகடன், குமுதத்தில் ஏன் பயன் படுத்திக்கொள்வதில்லை ? குங்குமத்தில் 'அற்ப விஷயம்' என்ற வாரப் பத்தி எழுதுகிறார்). லக்கிலுக் சொன்னது போல் இலக்கியவாதி என முத்திரை குத்திவிட்டனரோ ?

9. எந்த நாளிதழின் தேர்தல் கவரேஜ் நன்றாக இருக்கிறது ? த ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினகரன், தினமலர், தினமணி, தினத்தந்தி, மாலை மலர் ? டைம்ஸ் ஆப் இண்டியா, டெக்கான் கிரோனிகிள் ?

10. சன் டிவியில் இன்னமும் ஜெயலலிதா பேச்செல்லாம் ஒளிபரப்புகிறார்களே ? டபுள் கேமா ?

dondu(#11168674346665545885) said...

@Mr. Kannan
Sorry Mr. Kannan. I am out of station till Thursday. Hence I have already completed and preset the Q & A for 23.04.2009 at 5 AM on that day. They will be automatically published. These questions of yours are being carried over to 30.04.2009.

Regards,
Dondu N. Raghavan

Krishnan said...

1. Do you read Justice Krishna Iyer's articles in The Hindu ? If so, your comments on his writing style please.

2. Can Chiranjeevi do a NTR in Andhra Pradesh this time ?

3. Comedian Janakaraj is no longer seen on screen nowadays, any idea of his whereabouts ?

dondu(#11168674346665545885) said...

@Mr. Krishnan
Sorry Mr. Kannan. I am out of station till Thursday. Hence I have already completed and preset the Q & A for 23.04.2009 at 5 AM on that day. They will be automatically published. These questions of yours are being carried over to 30.04.2009.

Regards,
Dondu N. Raghavan

RV said...

அன்புள்ள டோண்டு சார்,

உங்களிடம் ஒரு உதவி வேண்டி வந்திருக்கிறேன். இந்த பதிவை பாருங்கள்.

http://koottanchoru.wordpress.com/2009/04/21/சேதுராமனுக்கு-ஜே/

அரசு செய்ய வேண்டியதை சேதுராமன் என்ற நண்பர் ஏறக்குறைய தனி ஒருவராக செய்து கொண்டிருக்கிறார். இணைய தளத்தில் நாள் reach உள்ள நீங்களும் இதைப் பற்றி எழுதினால் ஒரு வேலை அரசின் செய்முறை மாறுமோ என்று எனக்கு ஒரு நப்பாசை. கால தாமதம் ஆகி விட்டதுதான். இது topical news இல்லைதான். ஆனால் தனி ஒருவர் இதை எல்லாம் தேடி கண்டுபிடிக்க தாமதம் ஆவது இயற்கைதானே! நீங்களும் இதைப் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது