6/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 93 & 94)

எபிசோடு - 93 (31.05.2010) சுட்டி - 2
யயாதி பற்றிய கேள்விக்கு சோ புன்னகை பூக்கிறார். யயாதியை பற்றி இதுவரை சொல்லாத விவரங்களையும் கூறுகிறார். ஒரு கதையை எங்கே முடிக்கிறோமோ அப்போது வெவ்வேறு பாத்திரங்களுக்குள்ள இமேஜ் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். ஆனால் நிஜ வாழ்வில் கதை அப்படியே முடிவடைவதில்ல. மேலும், சூழ்நிலைக்கேற்ப ஒருவன் நடந்து கொள்வதால் அவனைப் பற்றிய கருத்தும் சில சமயம் தலைகீழாகவும் மாறிவிடுகிறது. அதுதான் யயாதியின் விஷயத்திலும் நடக்கிறது. ஆயினும் அவன் மொத்தத்தில் ரொம்ப தர்மிஷ்டன் என சோ முடிக்கிறார்.

சாம்பு வேம்பு சாஸ்திரிகளுக்கு வீடு வாங்கித் தருமாறு அசோக் சொன்ன யோசனையை ஏற்ற நாதனிடம், இதை அவர்களிடமும் கூற வேண்டும் எனக்கேட்க, நாதன் அவர்கள் அப்போது கோவிலுக்கு போயிருப்பதை அறிந்து கொண்டு அசோக்கையே அனுப்புகிறார். அசோக் கோவிலுக்கு கிளம்பிப் போக பின்னாலேயே அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வரும் காதம்பரியை அவன் கவனிக்காமல் போய் விடுகிறான்.

ஷாப்பிங்கிற்கு கிளம்பும் வசுமதி அவளையும் கூடவே அழைத்து செல்கிறாள். காதம்பரி முதலில் மறுத்தாலும் வசுமதி கேட்பதாக இல்லை. கோவிலில் வைத்து சாம்பு மற்றும் வேம்பு சாஸ்திரிகளிடம் அசோக் வீட்டு விஷயத்தைக் கூற இருவருமே நன்றியுணர்ச்சியில் மனம் நெகிழ்கின்றனர்.

ஷாப்பிங்கிலிருந்து திரும்ப வரும் காதம்பரி அசோக் திரும்ப வந்திருப்பானோ எனத் தயங்க, வசுமதியோ அசோக் கோவிலுக்குப் போனால் சன்னிதி சன்னிதியாக நின்றுவிட்டுத்தான் வருவான் என்றும், அதிலும் மௌனகுரு தட்சிணாமூர்த்தி சன்னிதியருகில் ரொம்ப நேரம் நிற்பான் எனவும் கூறுகிறாள்.

அது என்ன தட்சிணாமூர்த்தி கதை என சோவின் நண்பர் கேட்க, சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக இளவயது குருவாக தன்னை விட வயோதிகர்களுக்கு மௌனம் மூலமாகவே பாடம் எடுப்பதைக் கூறுகிறார். தட்சிணாமூர்த்தியிலிருந்துன் ஆரம்பித்து, குரு பரம்பரை வரிசையை குறிப்பிட்டு விட்டு, இது ஸ்மார்த்த சம்பிரதாயருக்கு உரியது எனவும், அது போல மற்ற சம்பிரதாயங்களில் அதனதற்கான வெவ்வேறு குரு பரம்பரைகள் உண்டு எனவும் கூறுகிறார்.

வீட்டினுள் வந்து பார்த்தால் அசோக் ஹாலில் அமர்ந்திருக்கிறான். சங்கடப்படும் வசுமதி அங்கிருந்து பைய நழுவ, காதம்பரியுடன் பேசுகிறான். அவள் காரில் போனது பற்றி குறைகூற, அவளோ அவன் முன்னாலெல்லாம் சைக்கியாட்ரிஸ்டை பார்க்கப் போன போதெல்லாம் காரில்தானே போனான் என கேட்கிறாள். அப்போதெல்லாம் தான் வர்ணரீதியான பிராமணனை தேடிக் கொண்டிருந்ததகவும் ஆனால் இப்போது தானே வர்ணரீதியான பிராமணனாக்க வாழ் முயற்சிப்பதாகவும் ஆகவேதான் இந்த மாற்றம் என்று கூறுகிறான். காதம்பரி ஷாப்பிங்கில் வசுமதி தனக்கு வாங்கித் தந்த 15000 ரூபாய்க்கான புடவையையும் 55000 ரூபாய் மதிப்புள்ள நெக்லசையும் குறிப்பிடுகிறாள். மானத்தைக்காக்க நூல் புடவையே போதும் எனவும், பட்டுப்புடவை அனாவசியம் என்றும் அசோக் கூற, அப்படியானால் பட்டுவியாபாரிகள் எல்லாம் இழுத்துமூடிக்கொண்டு போக வேண்டியதுதானா என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 94 (01.06.2010) சுட்டி - 2
சோ அசோக் மட்டுமல்ல, மகாபெரியவாளே பட்டு கூடாது என கூறியிருப்பதை எடுத்துரைக்கிறார். பலபட்டுப்பூச்சிகளை கொன்றே பட்டுப்புடவைகள் நெய்யப்படுவதால் அதை ஒதுக்கக் கூறுகிறார் அவர் எனவும் சோ கூறுகிறார். அதே சமயம் அசோக் சொல்லும் எளிமைகள் பிராமணனுக்கு மட்டுமே என சோ தெளிவுபடுத்துகிறார். ராமாயணத்தில் கூட சீதை ராமரைப்போல மரவுரி அணியத் தேவையில்லை என வசிஷ்டர் குறிப்பிட்டதாக அவர் மேலும் கூறுகிறார். அசோக் சொல்வதை எல்லோரும் செய்ய வேண்டியதில்லையாதலால் பட்டு வியாபாரிகள் கவலை கொள்ள வேண்டாம் என சோ முடிக்கிறார்.

நூல் புடவையை விட ஆதிகாலவாசிகள் மாதிரி இலை தழைகளை அணிந்தால் இன்னும் பணம் மிச்சப்படுத்தலாம் என காதம்பரி கூற, எளிமையாக இரு என்று தான் கூறுவதை எதிர்த்து அவள் செய்யும் விதண்டாவாதமே என அசோக் பதில் கூறுகிறான். பிறகு அவளது செய்கைக்காக அன்று அவன் உண்ணப்போவதில்லை என அவன் கூறிவிட, காதம்பரி புடவையையும் நகையையும் மாமியாரிடமே ஒப்படைத்து விடுகிறாள். அசோக்குக்கு தான் பெண்டாட்டி இல்லை என்றும் தர்மபத்தினியே என்றும் அவள் வருத்தத்துடன் கூற, வசுமதி திகைக்கிறாள்.

சாம்பு மற்றும் வேம்பு சாஸ்திரிகளிடம் அசோக் வீட்டுப் பத்திரத்தை ஒப்படைக்கிறான். அவர்கள் நாதனுக்கு மிகவும் நன்றி கூறுகின்றன்றனர். வீட்டுக்கு திரும்பும் அசோக் நாதனிடம் தகவல் தருகிறான். அவரது தர்ம சிந்தனையை சிலாகித்து தன் மேல் வைத்த பாசத்தில் ஒரு பகுதியையாவது கடவுள் மேல் வைக்கச் சொல்கிறான். அது தன்னால் ஆகாத காரியம் என நாதன் கூறுகிறார். பிறகு சாஸ்திரிகளுக்கு வீடு தந்ததில் வசுமதிக்கு தன் மேல் கோபம் என நாதன் கூற, தான் அம்மாவை சமாதானப்படுத்துவதாக அசோக் கூறுகிறான். ஆனால் காதம்பரியே அவனை அதற்காக கோபிக்கிறாள். அசோக் அவள் சொல்வதை லட்சியம் செய்யவில்லை. அவள் கோபித்து கொண்டு சாப்பிடப்போவதில்லை எனக்கூற அவன் அவளை அப்படியே விட்டு விடுகிறான். காதம்பரி திகைக்கிறாள்.

சாம்பு வேம்பு வீட்டினர் நாதனின் தர்மகுணம் பற்றிப் பேசுகின்றனர். இங்கே நாதன் வீட்டில் சாம்பு பூஜைக்காக வர காதம்பரி வசுமதி கொடுக்கும் தைரியத்தில் அவருடன் குத்தலாகப் பேசுகிறாள். அவர் வீட்டை ஒத்துக் கொண்டிருக்கக்கூடாது என கூற, சாம்பு திகைக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது