7/22/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.07.2010

வினவுக்கு உடல்நலம் சரியில்லை போலிருக்கிறதே
முரளி மனோகர் காலையிலிருந்தே ஏதோ யோசனையில் இருந்தான், ஜெண்டில்மேன் படத்தில் டீயை வைத்துக் கொண்டு திருட்டு முழியுடன் செந்தில் யோசனை செய்யும் பாவனையில். அம்மாதிரி அவன் இருந்தாலே சற்றே வில்லங்கம் வரும் என்பதை அறிந்தாலும் ஆவல் என்று ஒன்று இருக்கிறதே. ஆகவே என்னப்பா சமாச்சாரம் என கேட்டேன்.

அதற்கு அவன், “ஒன்றுமில்லை பெரிசு, நம்ப வினவுக்கு உடம்புக்கு முடியல்லியோன்னு ஒரு சம்சயம்” என்றான். “ஏண்டா பாவி அந்தாள்தான் உலகபிரச்சினையெல்லாம் தலைமேல் சுமந்து கொண்டு பதிவுகள் போட்டு வருகிறாரே என்றேன் நான். உடனே அவன் பேச ஆரம்பித்தான்.

வினவின் இந்தப் பதிவில் சச்சினை போட்டு இந்த சாத்து சாத்தியிருக்காரே அதை பார்த்ததும்தான் எனக்கு இந்த யோசனை வந்தது என்றான். நான் சொடேல் என அவனுக்கு கவுண்டமணி உதை அளித்துவிட்டு, “ஏண்டா நாயே இதனாலெல்லாம் அவருக்கு உடல்நலம் சரியில்லைன்னு சொல்லிடறதா. அவர் மனநலம் இல்லாதவர்னு வேணா சொல்லு, ஏற்கனவே தெரிந்த அந்த விஷயத்தை இந்தப் பதிவு இன்னும் ஊர்ஜிதப்படுத்தறது என்றேன்.

கவலையுடன் முரளிமனோகர் பேச ஆரம்பித்தான். அதில்லை பெரிசு, முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டாரே என்பதுதான் எனது யோசனை என்றான். மேலும் சொன்னான், சச்சின் பார்ப்பனர் ஆயிற்றே. பார்ப்பனீயம் பற்றி வினவு பேசவேயில்லையே, அதனால்தான் அவர் உடம்புக்கு கோளாறோ என தோன்றுகிறது என்றான்.

பயல் வில்லங்கமாத்தான் யோசிக்கிறான்.

ஞாநியியின் லேட்டஸ்ட் ஓ பக்க எண்ணங்கள் (குமுதம் 28.07.2010 தேதியிட்டது)
செங்கல்பட்டில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மராமத்து வேலைகள் நகராட்சி கூட்டம் தனிமனித மனவேற்றுமைகளால் பல மாதங்கள் கூட்டப்படாமையால் நிதி ஒதுக்கீடு இல்லாது தவிக்கின்றன. மக்கள்தான் தம் சக்தியை காட்டி கூட்டத்தை நடத்தச் செய்ய வேண்டும் என்ற நியாயமான யோசனை.

ரூபாய்க்கான சின்னம் ஹிந்தி எழுத்தின் அடிப்படையில் வடிவமைத்தது மாஜி திமுக எம்.எல்.ஏ. யின் மகனாம். அது சரி கருணாநிதியின் பேரன் ஹிந்தியில் புலமை பெற்று மந்திரியாகும்போது இது என்ன பிரமாதம்?

கடற்கரை நிலத்தை மோசடி பார்ட்டியிடமிருந்து வாங்கியது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். அதில் கணிசமான பகுதி கடல்தானாம். இச்செய்தியை பார்த்ததும் எனக்கு ஹிந்து உயர்நிலை பள்ளீயில் ஆசிரியராக வேலை பார்த்த எவரெஸ்ட் (உண்மைப் பெயர் ஸ்ரீனிவாசாசார்லு) நினைவுக்கு வருகிறார். பரீட்சை பேப்பரை திருத்திக் கொண்டிருந்தார். மேப் ரீடிங் கேள்விக்கு அந்த மாணவன் அளித்த பதில்களுக்கு பூஜ்ய மதிப்பெண்கள் தந்தார். கொஞ்சம் கருணைகாட்டக் கூடாதா என அவரிடம் கேட்டதற்கு, இமயமலையை வங்காள விரிகுடாவாக காட்டினால் என்ன செய்வது என பதில் கேள்வி கேட்டார். ஒருவேளை அந்த மாணவன்தான் இப்போது அம்மாதிரி வங்கக் கடலையே நிலமாக காண்பித்து விற்றிருப்பானோ. அல்லது அவன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் உயர் பதவியில் இருக்கிறானா? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தலித் மேம்பாட்டு துறையிலிருந்துதான் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக செலவழித்து வந்திருக்கிறது மத்திய அரசு என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் என்ன வாழுகிறதாம்? கிராமப்புற வளர்ச்சிக்காக இருந்த நிதிதான் இலவச டிவியாக உருவெடுத்ததாம். அவர்கள் அப்பன் வீட்டுப் பணமா இம்மாதிரின் செலவு செய்ய?

கோவி கண்ணன் கேட்ட கேள்வி
போன பஞ்சாமிர்தத்தில் நான் துகள்க்கிலிருந்து ஜூவிக்கு ஏன் மாறினேன் என கோவி கண்ணன் கேட்டிருந்தார். ஏனெனில் நேற்று துக்ளக் வரவில்லை. இன்று வெளியான 28.07.2010 தேதியிட்ட துக்ளக்கிலிருந்து சில விஷயங்கள் இங்கே.

ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கண்டனம் முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி வந்துள்ளது.

கர்நாடகாவில் குவாட்ரோக்கி பணத்தை ரிலீஸ் செய்து புகழடைந்த கவர்னர் கேவலமான முறையில் காங்கிரசுக்கு ஏஜெண்டாக செயல்படுவது குறித்து தலையங்கம். ரெட்டி சகோதரர்கள் விஷயத்தில் தெரிவது பனிப்பாறையின் வெளியே தெரியும் 10% பகுதிதான் (tip of the iceberg) என்பது மட்டும் புரிகிறது.

இட ஒதுக்கீடு விஷயத்தில் 17 ஆண்டுகளாக தீர்ப்பு தராது இழுக்கடித்து பிறகு மேட்டரை தமிழக அரசுக்கே திருப்பியனுப்பிய உச்சநீதி மன்றத்தின் செயலும் இந்த இதழில் வழக்குரைஞர் விஜயனின் கட்டுரையில் வெளிவந்துள்ளது. இது பொறுப்பை தட்டிக் கழிக்கும் வேலை என சோவும் தனது கேள்வி பதிலில் சுட்டிக் காட்டியுள்ளார்.

கேள்வி பதிலில் குஜராத் போலீசாரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது பெண் தீவிரவாதியே, மனித வெடிகுண்டாக வர இருந்தவர் என அமெரிக்காவில் பிடிபட்ட ஹெட்லி இப்போது கூறிவிட, அது வரை மோடி அரசை கண்டனம் செய்த பத்திரிகைகள் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சோ அவர்கள் எழுதிவரும் ஹிந்து மகாசமுத்திரத்தில் துளசிதாசர் பற்றி ஒரு அதிசய நிகழ்ச்சி பற்றி படித்தேன். அது பற்றிக் கூறும் முன்னால் அவரது பின்புலனையும் கூறுவேன்.

ராமாயணம் எழுதும் முன்னால் சாதாரணமானா ஆசாபாசங்களுடன் வாழ்ந்தவர் அவர். மனைவி மேல் அதிக அளவு பிரியம் வைத்திருந்த அவர் தன் மனைவி பிறந்த வீட்டுக்கு சென்றபோது அவளது பிரிவை சகியாது ஒரு இருண்ட இரவில் அவளைக் காண புறப்படுகிறார். வெள்ளத்தில் இருந்த ஒரு நதியை கடக்க படகு கிடைக்காது, நதியில் மிதந்த பல மரக்கட்டைகள் மீது ஒன்றன்மீது ஒன்றாகத் தாவி, அக்கரையை அடைந்து, மனைவியின் பிறந்தகத் தோட்டத்தில் இருந்த ஆலமர விழுதை பிடித்து மனைவி மாடியில் இருக்கும் அறைக்கு செல்கிறார். அடுத்த நாள்தான் அவருக்கு தெரிந்தது தான் ஏறிவந்த ஆலம் விழுது ஒரு பாம்பு என்றும், நதியில் இருந்த மரக்கட்டைகள் முதலைகள் என்றும். இதையறிந்த அவரது மனைவியும் பதட்டமும் கோபமும் அடைந்தாள். கேவலம் மனிதப் பிறவியான என் மேல் இவ்வளவு கண்மூடித்தனமான ஆசை வைத்ததற்கு ராமபிரான் மேல் பக்தி வைத்திருந்திருக்கலாமே என அவரை சாடுகிறாள்.

அவளது கோபத்தால் மாறினார் அவர், உலகுக்கு அற்புதமான ராமாயணம் கிடைத்தது. அவரது ஹனுமான் சாலிஸா (நாற்பது பாடல்கள்) அதற்கு சளைத்ததா என்ன?

இப்போது துக்ளக்கில் எழுதிய விஷயத்துக்கு வருவோம். பல மகான்கள் பர்றி பிரியதாசர் என்பவர் ஓர் அருமையான நூல் இயற்றினார். அவரே அதை பக்தர்களுக்கு படித்துக் காட்ட வேண்டும் என துளசிதாசர் அவரை வேண்ட, அப்போதுதான் மகான்கள் வரிசையில் தான் துளசிதாசரை சேர்க்காது விட்டதை உணர்ந்து வருந்துகிறார். இருப்பினும் மனதில் ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தன் நூலை பிரித்து படிக்கத் துவங்குகிறார். என்ன அதிசயம், முதல் சரித்திரமே துளசிதாசர் பற்றித்தான். அப்போதுதான் அவருக்கு புரிகிறது, அதை ராமபிரானே எழுதியிருக்க வேண்டுமென.

ஜெய் ஸ்ரீராம். வந்ததுதான் வந்தீர்கள், அனுமனின் புகழ்பாடும் அம்ருத்வாணியையும் கேட்டுவிடுங்களேன்.

எங்கே பிராமணன்
இப்போதும் மனம் ஆறவில்லை, இந்த தொடர் முடிவு பெற்ற விதம் சரியேயில்லை. பாதிக் கதையில் பாத்திரங்களை தொங்க விட்டார் சோ அவர்கள். அவரை இதுவிஷயமாக சாடி நானே பதிவிடுவேன் என்பதை யாரேனும் முதலில் சொல்லியிருந்தால் நம்பியிருக்கக்கூட மாட்டேன். முதலில் அதிலிருந்து சில வரிகள்:

“எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்”.


அது பற்றி இங்கு ஏன் எனக் கேட்கிறான் முரளி மனோகர். இந்த சீரியலில் எல்லா எபிசோடுகளிலும் சோ அவர்கள் தன் நண்பருடன் வந்து கதை போக்குக்கு ஏற்ப விளக்கங்கள் அளித்துள்ளார். இந்த சீரியலின் முக்கிய ஆகர்ஷணமே இதுதான். அவற்றை தொகுத்து இன்னொரு தொடர் எழுதப்போவதாக சோ கூறியுள்ளார். நல்ல செய்திதானே. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்துக்கான விஷயங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். கூடவே தமிழ் ஓவியா, சங்கமித்திரன், அருள், வால்பையன், வஜ்ரா ஆகியோரின் பின்னூட்டங்களும் வரும். ஜாலி.

உத்தபுரச்சுவர் (தலைப்புதான் ஹைப்பர் லிங்)
புரையோடிய புண்ணாகப் போய் விட்டது இப்பிரச்சினை. பிளைமார்களுக்கும் தலித்துகளுக்கும் நடக்கும் பிரச்சினையில் தலித்துகளுக்கு ஆதரவாகப் பேச கம்யூனிஸ்டுகள் மற்றும் பெரியார் தி.க. தவிர வேறு யாரும் சீரியசாக வருவதாகத் தெரியவில்லை. அரசு இயந்திரமோ பிள்ளைமார்களுக்குத்தான் சாதகமாகத்தான் நடந்து வருகிறது.

அதெல்லாம் விடுங்கள், இப்பிரச்சினை பற்றி பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த புகழ் பெற்ற அந்த இரு பதிவர்கள் கள்ள மௌனம் சாதிப்பதாக நான் ஓரிடத்தில் கருத்து கூற, அப்படியெல்லாம் இல்லை என அவர்களின் நண்பரான பார்ப்பன பதிவர் ஒருவர் கூறினார். பெயர்களை நான் இங்கே வேண்டுமென்றே தவிர்க்கிறேன். நான் சொன்னது தவறு என்றால் சுட்டிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நிரூபிக்கட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

ராம்ஜி_யாஹூ said...

பஞ்சாமிர்தம் வார இதழாக இருந்தது, இப்போது தினசரியாக மாறி விட்டது போல, நன்றிகள்.
சோவிற்கு பிறகு துக்ளக் எப்படி இருக்கும், உங்கள் கணிப்பு enna

அருள் said...

// //துக்ளக்: ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிகையை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு கண்டனம் முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி வந்துள்ளது.// //

அப்படியே இந்துத்வ பயங்கரவாதம் பற்றி எழுதியதற்காகத்தான் இந்தியா டுடே தாக்கப்பட்டது என்பதால் - இந்துத்வ பயங்கரவாதம் பற்றி சோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? என்று சொல்லுங்களேன்.

// //இட ஒதுக்கீடு விஷயத்தில் 17 ஆண்டுகளாக தீர்ப்பு தராது இழுக்கடித்து பிறகு மேட்டரை தமிழக அரசுக்கே திருப்பியனுப்பிய உச்சநீதி மன்றத்தின் செயலும் இந்த இதழில் வழக்குரைஞர் விஜயனின் கட்டுரையில் வெளிவந்துள்ளது. இது பொறுப்பை தட்டிக் கழிக்கும் வேலை என சோவும் தனது கேள்வி பதிலில் சுட்டிக் காட்டியுள்ளார்.// //

அய்யோ பாவம்.

"69% இடஒதுக்கீடு செல்லாது" என்று சொல்லாவிட்டால் - அதற்கு பொறுப்பை தட்டிக்கழிப்பது என்று பெயரா?

'குறங்கு பிடிக்க அது பிள்ளையார் ஆனது' மாதிரி (விஜயன் பிடிக்க முயன்றது குறங்குதானே), இப்போ தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு 69% அய் தாண்ட நீதிமன்ற தீர்ப்பே வழிவகுத்தால் போல தெரிகிறதே?

Anonymous said...

உன்னால் முடியும் தம்பி , தம்பிக்கு எந்த ஊரு இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னா ?

இந்தக் கேள்விக்கு அருள் பதில் சொல்லக் வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி நன்றி

Anonymous said...

அருள்,
இட ஒதுக்கீட்டை தடுப்பது பார்ப்பனர்கள்தான் என்று மூச்சுக்கு முன்னூறுதரம் கூறும் அருள் அவர்களே கீழே கொடுக்கபட்டுள்ள செய்திபற்றி உங்கள் கருத்தென்ன என்றும் கூறிவிடுங்கள்.

"கடந்த 13ம் தேதியன்று உச்சிநீதிமன்றம் 69 வீத இடஒதுக்கீடு தொடர்பில் மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இது தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். என வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சி.என். ராமமூர்த்தி நிருபர்களிடம் தெரிவித்தார்.
1993ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது இதெற்கென தனி சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். இதை 9வது அட்டவணையில் சேர்க்கவும் செய்து இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்ந்து வரலாறு படைத்த பெருமையுடையவர்
இதனால் இந்தியாவிற்கு கலங்கரை விளக்கமாகவும், வாழும் பெரியாராகவும் திகழ்கிறார் ஜெயலலிதா என அவர் மேலும் தெரிவித்தார்."

ஜெயலலிதா பார்ப்பனர் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

அருள் said...

Anonymous said...

// //ஜெயலலிதா பார்ப்பனர் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.// //

1993ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது தனி சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். இதை 9வது அட்டவணையில் சேர்க்கவும் செய்தார். ஜெயலலிதா பார்ப்பனர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

அந்த போற்றத்தக்க செயலுக்காகத்தான் ஆசிரியர் வீரமணி அவருக்கு "சமூகநீதிகாத்த வீராங்கனை" என்று பாரட்டி பட்டம் கொடுத்தார்.

உங்களுக்கு ஒரு செய்தி:

வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு அறிக்கையின் சில பிரிவுகளை முதன்முதலாக அமல்படுத்த காரணமாக இருந்தவ்ர் பி.எஸ்.கிருஷ்ணன். வி.பி.சிங்கின் செயலாலராக இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் தான் மண்டல் குழு அறிக்கையை செயல்படுத்தும் வரலாற்று சிறப்புமிக்க உத்தரவில் கையொப்பமிட்டவர்.

பிறகு, அர்ஜுன் சிங் அவர்கள் மண்டல் குழு அடிப்படையில் 2007இல் கல்வியில் வேலை வாய்ப்பை அமலாக்கியபோது, அவருக்கு ஆலோசகராக இருந்தவர் இதே பி.எஸ். கிருஷ்ணன் தான்.

ஆந்திரபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற பல மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான விஷயங்களில் இன்றும் ஆலோசகர் இவர்தான். இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசாங்கத்திற்கு ஆலோசனை தருவதும் இவரே.

இந்திய அரசியல் அமைப்பை திருத்துவதற்கான குழுவில் இடஒதுக்கீடு, சமூகநீதி குறித்த மிக புரட்சிகரமான பரிந்துரைகளை (http://lawmin.nic.in/ncrwc/finalreport/v1ch10.htm) உருவாக்கியவரும் இவரே.

மொத்தத்தில் இந்திய வரலாற்றில், ஓBC இடஒதுக்கீட்டில் மிகமிக முக்கிய பங்காற்றியவர் பி.எஸ்.கிருஷ்ணன் தான்.

இப்படிப்பட்ட போற்றுதலுக்குறியவர் பி.எஸ்.கிருஷ்ணன் ஒரு பார்ப்பனர்.

Anonymous said...

அருள்,
ரொம்ப சரி. அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்று சரியாகவே ஊகித்து அதற்கு பதிலையும் தயார் செய்து வைத்திருப்பீர்கள். அதையும் வெளியிட்டுவிடுங்களேன். நன்றி.

அதே அனானி

அருள் said...

விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. விதிவிலக்குகள் ஒருபோதும் விதிகள் ஆகாது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது