5/05/2009

எங்கே பிராமணன் பகுதி - 64

பகுதி - 64 (05.02.2009):
பாகவதர் வீட்டில் அவர், அவரது மனைவி ஜானகி மற்றும் இரண்டாவது பையன் பேசி கொண்டிருக்கின்றனர். பாகவதர் ராமசுப்புவை தாங்கள் பார்ப்பதற்காக ஹாஸ்டலுக்கு சென்றபோது தாங்கள் எவ்வளவு கெஞ்சியும் அவனைப் பார்க்க வார்டன் தங்களை அனுமதிக்கவில்லை என்பதை அவர் பையனிடம் கூற அவன் மிகவும் கோபப்படுகிறான். ஸ்ரீரங்கம் செல்லும்போது அவர்கள் ராமசுப்புவின் அப்பா அம்மா வீட்டுக்கு செல்லக்கூடாது என்று கூற பாகவதர் அதை மறுத்து பேசுகிறார். தாங்களே ராஜியிடமும் சிவராமனிடமும் இது பற்றி நேரில் கேட்கப் போவதாகவும் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் தனது மனைவியுடன் கிரி வீட்டிற்கு வந்து தட்டு மாற்றுகிறார். கிரியின் தந்தை திருமணத்துக்கு பிறகு கிரி ஜெயந்திக்கு தனிக் குடித்தனம் வைத்து கொடுத்து விடும் தன் எண்ணத்தை கூறுகிறார். அப்போதுதான் தன் மனைவி ஆசைப்பட்டது போல அவன் முழுபிராமணனாக வாழ இயலும் எனவும் கூறுகிறார். வேம்புவோ தன் மகள் மாமியார் மாமனாருக்கு சேவை செய்வதே நல்லது என அபிப்பிராயப்படுகிறார்.

பாகவதர் வீட்டில் பாகவதரும் அவர் மனைவியும் அசோக் பற்றி பேசுகின்றனர். அசோக்குக்கு ஒன்றுமே இல்லை என மனோதத்துவ நிபுணர் கூறிவிட்டதாக பாகவதர் தான் கேள்விப்பட்டதை தன் மனைவியிடம் கூறுகிறார். தன்வந்தரி மனம் வைத்தால் ஒரு வியாதியும் அண்டாது எனவும் கூறுகிறார். அப்போது அங்கு வரும் அவரது இளைய மகன், அசோக்கை வேறு சைக்கியாட்ரிஸ்டிடம் நாதன் அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். அவனை பைத்தியம்னு ஸ்தாபிக்காமல் அவர்கள் விட மாட்டார்கள் போலிருக்கிறது என பாகவதர் வருத்தப்படுகிறார்.

வேம்பு வீட்டிற்கு தனியாக வரும் கிரியின் தந்தை அவரிடம் சீர் செனத்தி எல்லாம் வேண்டும் என்று ஒரு பெரிய லிஸ்டே தருகிறார். தனது ஜாதியிலேயே நல்ல பெண்கள் இருப்பதாகவும், கிரியின் அன்னை பிடிவாதமாக இருந்ததால் மட்டுமே இந்த திருமணத்துக்கு தான் ஒத்து கொண்டதாக வேறு கூறுகிறார். வேம்புவும் அவரது குடும்பத்தினரும் திகைக்கின்றனர். மேலும் தன் மனைவிக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியக்கூடாது என்றும் வேம்புவே இத்தனையும் செய்ததாகத் தோன்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

டாக்டர் ஹம்சாவின் கிளினிக்கில் அவர் நாதனிடம் அசோக்குக்கு எல்லா பிரச்சினைகளும் இருப்பதாகக் கூறுகிறார். அவன் பேசுவது எல்லாம் குழப்ப நிலையிலிருந்து என்றும், விரக்தியாக இருப்பது டிப்ரஷனால் என்றும், பாகவதர் காஞ்சியில் இருக்க, தான் அவரை சென்னையில் பார்த்ததாய் அவன் கூறுவது ஹாலுசினேஷன் என்றும் கூறுகிறார். நாதனிடம் Beautiful mind என்னும் ஆங்கில படம் பற்றி பேசி அதிலிருந்து ஒரு காட்சியை தனது லேப்டாப்பில் போட்டு காட்டுகிறார். அசோக்குக்கு இரண்டு வாரங்களுக்கு மருந்து தந்துவிட்டு பிறகு ஷாக் ட்ரீட்மெண்ட் தரவேண்டும் என்றும் கூறுகிறார். ஷாக் ட்ரீட்மெண்டா என நாதன் தயங்க, அப்படி செய்யாவிட்டால் அசோக் முழுக்க முழுக்க பைத்தியமாகி விடுவான் எனவும் கூறுகிறார். அசோக்கின் இந்த நிலைக்குக் காரணமே அந்த பாகவதர் என்றுதான் என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

நாதனும் அசோக்கும் வீட்டுக்கு திரும்புகின்றனர். நாதன் வசுமதியிடம் நடந்ததை கூறி பாகவதர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என டாக்டர் கூறியதையும் அவளிடம் சொல்ல, வசுமதியோ “டாக்டர் ஃபீஸ் கொடுத்துத்தான் இதை நீங்க தெரிஞ்சுக்கணுமா” என நொடிக்கிறாள். சமையற்கார மாமியிடம் தண்ணீர் கொண்டுவர சொல்கிறாள். நாதன் தன் சட்டைப்பையில் மாத்திரைகள் இருப்பதாகக் கூறி தேட, அவை அங்கு இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவுமில்லை.

“அடேடே மாத்திரை காணாமல் போச்சே, கிடைச்சிருந்தா அசோக் குணமாகியிருப்பானே” என சோவின் நண்பர் அங்கலாய்க்க, அந்த மாத்திரைகள் நல்லதுதான் செய்திருக்கும் என நிச்சயமாக கூற இயலாது என்று கூறுகிறார். பிறகு ஒரு புராணக்கதையும் கூறுகிறார். ஒரு சாமியார், ராஜா ஒருவனிடம் வந்து ஒரு மாங்கொட்டையைத் தருகிறான். அதை விதைத்து மரமாக வளர்க்க வேண்டும் என்றும், அதனுடைய முதல் பழத்தை உண்டால் ராஜா சாவே இல்லாது வாழ்வான் என்று கூறிவிட்டு நிறைய பொருள் பெற்று செல்கிறான். ராஜாவும் மரத்தை ஒரு நதிக்கரை தோட்டத்தில் வைத்து வளர்த்து பாதுகாக்கிறான். ஆனால் முதல் பழம் ஆற்றில் விழுந்து நீரோட்டத்தோடு போகிறது. அங்கு ஆற்றில் மீன் பிடிப்பவன் கையில் அகப்பட அவனும் யதார்த்தமாக அதை உண்டு விடுகிறான். பழம் நீரில் செல்லும்போது பின்னாலேயே ஓடிய வீரர்கள் அம்மனிதனை பிடித்து, ராஜாவிடம் கொண்டு வருகின்றனர். இப்பழத்தின் பின்புலன் தனக்கு தெரியாது என்றும், தெரியாமல் உண்டு விட்டதாகவும் அந்த மனிதன் கூற, ராஜா கோபத்துடன் அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறான். அதுவும் நிறைவேற்றப்படுகிறது.

இப்போது மந்திரி மெதுவாகப் பேசுகிறான். இப்பழத்தை சாப்பிட்டால் சிரஞ்சீவியாகலாம் என சாமியார் சொன்னான், ஆனால் அதை உண்டவனோ ஒரே நாளில் துர்மரணம் அடைந்தான். இதிலிருந்தே சாமியார் ஏமாற்று பேர்வழி என்பது தெரியவில்லையா என அவன் ராஜாவை கேட்கிறான். இந்த மாதிரி கதைகள் நமது கலாசாரத்தில் கொட்டிக் கிடக்கின்றன எனவும் சோ கூறுகிறார்.

கிரி வீட்டில் வேம்பு அவனது தாயாருடன் பேசுகிறார். கிரியும் அருகில் இருக்கிறான். தனது கணவர் ஒன்றுமே செய்ய வேண்டாம் என்றாலும் வேம்பு தன்னிச்சையாக செய்யப் போவதாக தன் கணவர் தனக்கு கூறியதாக கிரியின் அன்னை கூற, வேம்புவோ அதை மறுத்து அவள் கணவர் பொய் சொல்வதாகவும், தன்னிடம் அவர் கண்டிப்பாக பேசி, பெரிய சீர்செனத்தி லிஸ்டே தந்ததாகவும் கூறுகிறார். கிரியின் அன்னை திகைக்கிறாள். தான் மிகவும் சிரமப்பட்டே தனது குடும்பத்தினரை இக்கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும், கிரியின் தந்தை இவ்வாறு பேசிய பிறகு தனக்கு மேலே ப்ரொசீட் செய்ய விருப்பம் இல்லை என்றும், கிரிக்கு வேறு நல்ல பெண் கிடைப்பாள் என்றும் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். கிரியும் அவன் அன்னையும் திகைக்கின்றனர்.

இப்போது டோண்டு ராகவன். திடீரென கதையில் மாற்று கருத்துகள் வீறுகொண்டு எழுகின்றன. முதல் அதிர்ச்சி இரண்டாம் சைக்கியாட்ரிஸ்ட் அசோக் பற்றி கூறியது. ஆனால் யோசித்து பார்க்கையில் அவர் தனது பார்வை கோணத்திலிருந்து பேசியிருக்கிறார். ஆகவே அவரை குற்றம் சொல்ல முடியாது. அதே சமயம் அந்த மாத்திரைகளும் ஒரு கோளாறும் இல்லாது இருக்கும் அசோக்குக்கு ஊறுவிளைவித்திருக்கும் என்பதும் புரிகிறது. அவை எப்படி காணாமல் போயின? நான் ஊகிக்கிறேன் அது நாரதரின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என. மேலே ட்ரீட்மெண்டுகள் எல்லாம் எவ்வாறு செல்லப் போகின்றன என்பதையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்.

இங்கு இதை சோ அவர்கள் வெளிப்படையாக எடுத்து கூறாவிட்டாலும், ஜெயந்தி திருமண விஷயத்தில், சாதி விட்டு வேறு சாதியில் திருமணம் செய்வதின் ஒரு சிக்கல் புலப்படுகிறது. தான் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்ட கணவனையே புரிந்து கொள்ளாது செயல்பட்டிருக்கிறாள் கிரியின் அன்னை. கிரியின் தந்தையும் பேராசை கொண்டவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதே சமயம் தனக்கு விருப்பமில்லாத இத்திருமணத்தை தான் வெளிப்படையாகத் தடுப்பதைவிட, வேம்புவே அதை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியெல்லாம் நடந்து கொண்டார் என எனக்கு தோன்றுகிறது.

ஆனால் இப்பிரச்சினை அவ்வாறு கலப்பு மணம் செய்து கொண்டவர்களது குழந்தைகள் திருமண சமயத்தில் நிச்சயம் வரும், வந்துள்ளன. அன்னையின் சாதிக்காரர்கள் அவள் பிள்ளைக்கு தங்கள் பெண்ணைத்தர யோசிப்பார்கள். தந்தையின் சாதிக்காரர்களும் கிட்டிமுட்டி போனால் அதையே சொல்ல மாட்டார்கள் என்பதிலும் நிச்சயம் இல்லை. மேலும், கலப்பு மணத்தின் முக்கியப் பிரச்சினையே மாறுபட்ட உணவுப் பழக்கங்கள்தான்.

வரதட்சிணை ஒழிய வேண்டுமானால் காதல் கல்யாணம், அதுவும் கலப்பு கல்யாணமே சரி என பிதற்றுபவர்களுக்கு சுற்றும் முற்றும் தமது உறவினர்கள் மத்தியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தாலே எல்லாம் புரியும், புரிய வேண்டும். அதிலும் ஊராருக்கெல்லாம் கலப்பு மணம் செய்வித்து விட்டு, தனது மகன்/மகளுக்கு மட்டும் அவர்களது முறைப்பெண்/முறை மாப்பிள்ளை தேடும் அரசியல்வாதிகளிடம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கென்ன, கலப்பு மணம் செய்வித்துவிட்டு, மயிராச்சுன்னு போயிடுவாங்க. வாழ்நாள் முழுக்க கஷ்டப்படப் போவது யார்?

இது விஷயமாக நான் முன்னொரு சமயம் இட்ட இப்பதிவிலிருந்து போகிறபோக்கில் எழுதிய சில வார்த்தைகள். (பின்னூட்டங்களும் சுவாரசியமாகவே உள்ளன).
சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம்?


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/04/2009

குஜராத் விவசாயத் துறையில் பெற்ற 14% வளர்ச்சியை யாருமே பார்ப்பதாகத் தெரியவில்லை' என்கிறார் மோடி

மோடி நேர்காணலின் முதல் பகுதிக்கான எனது பதிவு இங்கே.

மோடி நேர்காணலின் இரண்டாம் பகுதியையும் அனுப்பிய நண்பர் சந்திரசேகரனுக்கு நன்றி. அது சம்பந்தமாக நான் இட்ட ஆங்கிலப் பதிவை இங்கே காணலாம்.

''எனது குஜராத்தில் 14% வளர்ச்சி விவசாயத் துறையில் 14%, ஆனால் அதை யாருமே அதை பார்ப்பதாகத் தெரியவில்லை'

இந்த நேர்க்காணலின் முதல் பகுதியில் மோடி அவர்கள் மத்தியில் இப்போது நடக்கும் தேர்தலில் தேசீய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும் தான் என்னவோ குஜராத்திலேயே இருக்கப் போவதாக கூறினார், தன்னை பேட்டி கண்ட சாய்சுரேஷ் சிவஸ்வாமி மற்றும் நிகில் லட்சுமணிடம்.

இந்த இரண்டாவது பகுதியில் இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போக்கு பற்றியும், தனது பிரதம மந்திரி அபிலாஷைகள் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும் கூறுகிறார்.

இந்த நாட்டின் முன்னேற்றம் பற்றிய விவாதங்கள் பெருவணிகர்களுக்கு சாதகமாகப் போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சாதாரண மக்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாக உணர்கின்றனரா?
நல்ல கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இதற்கு நான் விடையளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குஜராத்தில் அம்மாநிலத்துக்கான துடிப்பு மிக்க உலகளாவிய முதலீட்டாளர்களது உச்சக்கட்ட மாநாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனவரி 13-14 தேதிகளில் நடத்துகிறேன். அதில் சுமார் 700-800 அரசு அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அந்த மகாநாட்டுக்கு தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரை அழைத்து இந்த மாநிலத்தில் முதலீடு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இதே மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு மாதம் முழுதும் விவசாய விழா ஒன்றையும் நடத்துகிறோம். மண்டை காயும் வெயிலில் ஒவ்வொரு ஆண்டும் மே ஜூன் மாதஙள் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் இந்த அப்பியாசத்தில் ஈடுபடுகின்றனர். விவசாயிகளுடன் விவாதித்து முன்னேற்றங்களுக்கு வழி செய்கின்றனர். முந்தைய பத்தியில் குறிப்பிட்ட இரு தினங்கள் நிகழ்ச்சிகளை கவனிக்கப்பட்ட அளவுக்கு இப்போது கூறப்படும் இரு மாத நிகழ்ச்சி பொது கவனத்தை ஈர்க்கவில்லையே.

இந்த மனநிலையால் என்ன ஆயிற்றென்றால், மன்மோகன் அரசு விவசாய முன்னேற்றத்தை 4 சதவிகிதம் அளவில் குறிவைத்து, 2.5%-ல் சிங்கி அடிக்கிறது. எனது மாநிலமான குஜராத்தில் அபிவிருத்தி 14%, ஆனால் யாரும் அதை கண்டு கொள்வதில்லை.

பெண் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை தந்துள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் திங்கள் 13, 14 மற்றும் 15 தேதிகளில் எனது முழு அரசு அய்ந்திரம் கிராமங்களுக்கு செல்கிறது. விரும்பினால் நீங்களும் வரலாம். முதலமைச்சர், மந்திரிகள், தலைமைச் செயலர், செயலர், IAS அதிகாரிகள், ஆக எல்லோருமே இதில் ஈடுபடுகிறோம். இப்ப இந்த மாநிலத்தில் பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கை 100 சதவிகிதம். இது உங்களுக்கு மக்களுக்கான வேலையாகத் தெரியவில்லையா?

செய்திகளை வணிகரீதியில் பார்ப்பவர்கள் முதலில் சொன்ன இரண்டு நாள் Vibrant Gujarat பற்றிய செய்திகளை மட்டுமே பார்க்கிறார்கள். மற்றவற்றை கோட்டை விடுகிறார்கள்.

அதே போல இங்கு சிரஞ்சீவி திட்டமும் உண்டு. குழந்தைபேற்றில் பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் அது. ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படாது.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற சொலவடை ஒன்று உண்டு. எல்லோருக்கும் அது தெரியும், உங்களுக்கும்தான். இது விஷயமாகவும் அரசு முனைந்து காரியங்கள் செய்துள்ளது. கோர்ட் வேலை செய்யும் நேரம் தினமும் அரை மணி நேரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. கோர்ட் விடுமுறைகளில் ஏழு தினங்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதே கட்டமைப்புகளுடன் மாலை கோர்ட்டுகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

2003-2004-ல் 45 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவற்றுடன் 65 லட்சம் புது வழக்குகள் சேர்ந்துள்ளன. ஆக மொத்தம் ஒரு கோடிக்கும் மேல் வழக்குகள் நிலுவையில். எங்களது முயற்சிகளுக்கு பிறகு நிலுவையில் இப்போது வழக்குகள் 20 லட்சம் மட்டுமே உள்ளன. 2010-ல், குஜராத்துக்கு வயது 50 நிறைந்திருக்கும், ஒரு வழக்கும் நிலுவையில் இருக்கக் கூடாது என்பதே எனது இலக்கு. அதன் பிறகு வழக்குகள் வரவர பைசல் செய்யப்படும்.

நீங்களே கூறுங்கள், சுதந்திரத்துக்கு பிறகு நீதி அளிப்பில் வேறு எங்காவது இவ்வளவு வேலைகள் நடந்துள்ளனவா?

ஆனால் வணிக வியாபாரிகளுக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. இப்போது கூறுங்கள், இந்த நிகழ்வுகள் ஏழைகளுக்கு ஆதரவானதா இல்லையா.

அப்படியில்லை, நாங்கள் குஜராத்தை மட்டும் குறிப்பிட்டு கேட்கவில்லை. பொதுவாகவே இந்தியாவில் முன்னேறம் என்பது வணிகர்களுக்காக மட்டுமே என்னும் தோற்றம் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம்.
இந்த தோற்றம் யார் கண்களிலிருந்து? அவர்கள் யார்? அவர்களது கண்களில்தான் கோளாறாக இருக்குமோ, என்னவோ. நான் உதாரணங்கள் கொடுத்துள்ளேன். அதிகபட்ச வேலைவாய்ப்பு குஜராத்தில் மட்டுமே.

8 கோடி மக்கள் தினசரி வெறும் 20 ரூபாயில் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது முன்னேற்றத்துக்கான வழி என்ன?
அவர்களது வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியர்கள் வேலைக்கு அஞ்சாதவர்கள். குஜராத்தில் இது சம்பந்தமான இயக்கத்தைத் துவக்கியுள்ளோம். அது விவசாயம், கட்டமைப்புகள் சேவை அளிப்புகள் ஆகிய எல்லா துறைகளையும் அரவணைத்து செல்கிறது. இது பேரியக்கமாக உருவாகியுள்ளது.

தேசீய கிராமப்புற வேலை உத்திரவாத திட்டம் (National Rural Employment Guarantee Scheme) தோல்வி அடைந்து விட்டதாகக் கருதுகிறீர்களா?
அது பற்றி நான் கருத்து எதுவும் சொல்லவில்லையே.

அவர்கள் வேலை தருகின்றனரே...
நல்லது, ஆனால் அதிகபட்ச வறுமை இப்போது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து விட்டது.

இதன் காரணம் கிராமவாசிகள் நகரங்களுக்கு செல்வதால் இருக்குமா?
அதனால் இல்லை. எனது குஜராத்தில் ஜ்யோதிகிராம் யோஜனா உள்ளது. ஆகவே கிராமவாசிகள் நகரங்களுக்கு குடிபெயர்வது நின்றுள்ளது. குஜராத்தின் இந்த நிகழ்வு சுவாரசியமானது.

நகரங்களின் வசதிகள் கிராமங்களுக்கு வந்தால், கிராமவாசிகள் ஏன் நகரங்களுக்கு செல்லப் போகிறார்கள்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள UPA தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு கோதுமை ஒரு கிலோ 3 ரூபாய்க்கு தரப் போவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக குஜராத்தில் ஏழைகள் கிலோ 2 ரூபாய் என்னும் விலையில் கோதுமை பெற்று வருகின்றனர்.

இதுதான் காங்கிரசின் லட்சணம். அகலப்பட்டை இணைப்பை நாடு முழுக்க தரப்போவதாக இப்போதுதன் வாக்குறுதி தரப்பட்டுள்ளது. குஜராத்திலோ ஒவ்வொரு கிராமத்திலும் அது ஏற்கனவே செயல்படுகிறது. அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் எவ்வளவு வேற்றுமைகள்!

ஐந்து ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசின் சாதனை என ஒன்றுகூட இல்லை என நினைக்கிறீர்களா?
நான் அப்படிச் சொல்லவில்லை. அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றுதான் கூறுகிறேன். ஒன்றரை கோடி பேருக்கு வேலை அளிக்கப் போவதாகக் கூறினார்கள். செய்தார்களா? விலைகளை குறைக்கப் போவதாக கூறினார்கள். நடந்ததா? வெளிநாட்டு உறவுகளை சீர் அமைக்கப் போவதக சொன்னார்கள். என்ன ஆயிற்று? நேப்பாள் சமாச்சாரம் என்ன? அவர்களிடம் இக்கேள்விகளை எல்லாம் ஏன் கேட்க கூடாது? ஒரு ஜனநாயக நாட்டில் இக்கேள்விகளுக்கெல்லாம் அவர்கள் பதில் தந்தாக வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தம் ஒரு சாதனை இல்லையா?
விஷயம் என்னவென்றால் இந்தியாவிடம் யுரேனியம் இருக்கிறது. அதை ஆய்வு செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது வழக்கம். மன்மோகன் சிங் நிதி மந்திரி என்னும் ஹோதாவில் ஏன் அந்த நிதி ஒதுக்கலை முதலில் நிறுத்தினார்?

பிரதமரானதும் இந்த ஆய்வையே ஏன் அவர் நிறுத்தினார்? பிறகு அதே யுரேனியத்துக்காக வெளி நாடுகளுடன் ஏன் நம் கைகளை கட்டிப்போடும் ஒப்பந்தங்களில் ஏன் கையெழுத்திட வெண்டும்? இதுதான் கேள்வி.

இந்த ஒப்பந்தத்துக்கு பிறகுதான் உலகமே இந்தியாவை அணுசக்தி நாடாக ஒத்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தால் அல்ல, வாஜ்பேயி அமெரிக்காவை எதிர்த்து அணுசோதனைகளை நடத்தியதால்தான். அதை நாம் செய்யாதிருந்தால் நம்மை யார் அணுசக்தியாக ஒத்து கொண்டிருப்பார்கள்?

வாஜ்பேயி மட்டும் அச்சமயம் அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்திருந்தால் நாம் சந்தியில் நின்றிருப்போம். அணுசக்தி. ஆக அத்தருணத்தில் இந்தியத் தலைமை இரும்புக்கரத்துடன் செயல்பட்டதால்தான் அந்த அங்கிக்காரமும் வந்தது. கரும்பு வியாபாரம் எல்லாம் செய்து அது வரவில்லை (This happened when India's leadership showed steel. Not because of some deal).

உலகில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இந்திய இளைஞர்கள் உள்ளனர். இதன் பயன்பாட்டை சார்ந்து அது ஒரு போனசாகவோ டைம்பாம் ஆகவோ உருவாகலாம்.
ஒரு காலத்தில் ஜனத்தொகை ஒரு பிரச்சினையாக கருதப்பட்டது. இப்போது மாறியுள்ள உலகச் சூழ்நிலையில் அதுவே நமது செல்வமாக கருதப்படுகிறது. இதே சாதகமான நிலை சீனாவிலும் உண்டு.

ஆனால் இளைஞர்களுக்கு வேலை இல்லையென்றால், ஒரு பெரிய சமூகக் கலகம் ஏற்பட்டுவிடுமே.
இல்லை, நான் இதை ஏற்கவில்லை. இளைஞர்களிடம் திறமை உண்டு. அவர்களுக்கு தேவை வெறும் சம்பளத்துக்கு வேலை இல்லை. தொழில் வேண்டும், தமது திறமைகளை வளர்த்து கொள்ள. சீனாவில் இதற்காக 80,000 திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்திய அரசோ 600 திட்டங்கள்தான் துவக்கியுள்ளது.

இதைத்தான் நான் பிரதமரை சந்தித்தபோது கேட்டேன், இங்கே என்ன நடக்கிறது என. குஜராத்தில் மட்டும் எனது அரசு 2000 திட்டங்களை துவக்கியுள்ளது. இந்த எண்ணிக்கையை இன்னும் பல நூறுகள் கணக்கில் அதிகரிக்க விரும்புவேன். பொதுத்துறை த்னியார் துறை கூட்டுறவுகளை உருவாக்கவும் ஆசைப்படுவேன்.

நமது இளைஞர்களுக்கு தேவை மதிப்புகளின் அதிகரிப்பு (value-addition), அவர்களால் அதை செய்ய முடியும், செய்கிறார்கள்.

அதே போல உங்களுக்கு வாய்ப்பு வந்தால், நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்பீர்களா?
மிகச் சிறிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் நாட்டின் சக்தியை பெருக்கும் கருவிகளாக உள்ளனர். நானும் அதில் ஓர் அங்கம்.

பிரதம் மந்திரியாகும் ஆசை துளிக்கூட உங்களுக்கு இல்லை என கூறுவீர்களா
நான் செய்ய வேண்டிய வேலை ஒன்று உண்டு. ஆசை என ஒன்றும் இல்லை. நான் எதாகவோ ஆக பிறக்கவில்லை, எதையோ செய்யத்தான் பிறந்தேன்.

யாராகவோ ஆக வேண்டும் என்றெல்லாம் சிறுவனாக இருந்தபோது கூட ஆசைபடவில்லை, இப்போதும் இல்லை, எப்போதுமே இருக்காது.

நான் ஏதாவது நல்லது செய்யும் கனவு காண்கிறேன். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். ஒரு வேலையின் அங்கம் நான், ஆசையின் பகுதி அல்ல.

ஆசை என்னை வழிநடத்தவில்லை, வேலைதான் நடாத்துகிறது.

வேறு என்னவெல்லாம் நரேந்திர மோடியை வழிநடத்துகின்றன?
இந்திய அன்னை மேல் நான் கொண்டுள்ள பக்தியே. அதுவே எனக்கு போதுமானது.

இந்தியா தற்சமயம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
நமது ஜனத்தொகை நூறு கோடிகளை தாண்டி விட்டது. அதை வைத்து நாம் 21ஆம் நூற்றாண்டை நமதாக்கிக் கொள்ளும் வாய்ப்பு வந்திருக்கிறது. மக்களின் சக்திகளை தூண்டி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இயலும். இந்த வாய்ப்பை நழுவவிடலாகாது.

இந்த தேர்தலில் ஏதேனும் போக்குகளை (trends) காண்கிறீர்களா அல்லது எல்லா தேர்தல்களை போலவும் இப்போதும் தனிமனித தாக்குதல்கள் போன்ற போங்குகளையா?
ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. 1952, 1957, 1962 தேர்தல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிலவற்றில் சில மனிதர்களும், சிலவற்றில் ஊடகங்களும் இன்னும் மற்றவற்றில் பிரச்சினைகளும் பிரதானமாக இருந்தன. இம்மாதிரியான பெரிய நிகழ்வில் ஒவ்வொரு முறையும் இவ்வாறு மாறுதல்கள் நேர்வது சகஜமே. .

நீங்கள் தெரிவு செய்ய இயன்றால் இந்த தேர்தலின் பிரதான விஷயமாக எது இருக்க வேண்டும் என விரும்புவீர்கள்?
நமக்கு தேவை பலம் வாய்ந்த அரசு, அதை நடத்த வலிமையுடன் ஆட்சி செய்யும் தலைவர். பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசு. இதெல்லாம் தேசீய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்று நடத்தும் அத்வானிஜியிடம் நான் காண்கிறேன்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் தனிப்போக்கு உண்டு என கூறினீர்கள். இத்தேர்தலில் உங்கள் இளம் தலைவர் வருண் காந்தி அதை மாற்றிவிட்டாரே.
தேர்தல் முடிவுகள் வரட்டும், பொறுங்கள்.

இசுலாமியர் பற்றி வருண் காந்தி சொன்னதுடன் ஒத்து போகிறீர்களா?
உத்தர பிரதேசத்தில் தேர்தலை பார்த்தீர்கள். அங்கு என்ன முடிவு வந்தது என்பதையும் பார்த்தீர்கள். நீங்களே நிலையை அவதானியுங்கள்.

இல்லை, நாங்கள் உங்கள் கருத்தை கேட்கிறோம்.
எனது கருத்து நாட்டுக்கு முக்கியமில்லை. நீங்களே நிலையை அவதானிக்கவும். அதுதான் நல்லது.

ஆனால் வருண் காந்திக்கு இது முதல் தேர்தல்.
ஆரம்பத்திலிருந்தே அவதானியுங்கள் ஐயா.

இந்தியாவில் நீங்கள் போற்றும் தலைவர் யார்
லால் கிருஷ்ண அத்வானி.

வேறு யாராவது?
நீங்கள் ஒரு தலைவரை கேட்டீர்கள். நான் அவர் பெயரைக் கூறிவிட்டேன்.

வேறு யாராவது?
அதற்கு என்னிடம் ஜூன் மாதம் வரவும்.

மாயாவதி?
ஜூன் மாதம்.

கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சி எனக் கருதப்படும் பா.ஜ.க.வில் தலைமையில் சந்துஷ்டி இல்லை, அருண் ஜேட்லி போன்றவர்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன?
நான் குஜராத் சம்பந்தப்பட்ட வேலைகளில் உள்ளேன். அதற்கு வெளியே என்ன நடக்கிறது என்பதில் நான் ஈடுப்படுவதில்லை.

கேள்விக்கு இது பதில் இல்லை.
இல்லையே, ப்தில் தந்துவிட்டேனே. அது உங்களுக்கு பிடிக்கவிலை என்பது வேறுவிஷயம்.

தலைமைக்கான ரோல் மாடலாக நீங்கள் யாரை கருதுகிறீர்கள்? உங்களை இன்ஸ்பைர் செய்வது யார்?
சிறுவயதிலிருந்தெ நான் ஸ்வாமி விவேகானந்தரால் கவரப்பட்டேன். அவர் மாதிரியே செயல்பட விரும்புவேன். வரம்புகளை மீறமாட்டேன்.

அத்வானி பிரதமரானால் அவருக்கு கூறவிரும்பும் அறிவுரை?
அவருக்கு எனது அறிவுரை தேவையில்லை. நாந்தான் அவரிடம் அறிவுரைகளை கேட்டு பெறவேண்டும்.

ரொம்பவுமே பணிவுதான் உங்களுக்கு.
இல்லவே இல்லை, இதுதான் எனது வாழ்வின் யதார்த்தம்.

உங்கள் மானிலத்தை சிறப்பாக ஆட்சி செய்த உங்கள் குரல் தில்லியிலும் எடுபடவேண்டாமா...
அத்வானிஜிக்கு என்னை விட அனுபவம் அதிகம். (அவர் ஏற்ற பதவிகளின் பட்டியல் தருகிறார்).

இதுதான் இந்திய அரசியலின் பிரச்சினை இல்லையா? வயதுக்கும் அனுபவத்துக்கும் அதிக முக்கியத்துவம், இளைமையும், துடிப்பும் திறமையும் புறக்கணிக்கப்படுகின்றன...
இதில் எனது அனுபவத்தை கூறுகிறேன். வேறுவிதமாக எடுத்து கொள்ளாதீர்கள். அதற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள். அதில் பயன் இருக்காது.

இதை நான் ஒரு மாணாக்கனாகக் கூறுகிறேன். இரண்டு பிரதம மந்திரிகளை ஒப்பிடுவோம். நான் ஒப்பிடப்போவது நரசிம்ம ராவ் மற்றும் ராஜீவ் காந்தி.

ராஜீவ் காந்தியிடம் இளமை, துடிப்பு, வெளி நாட்டு அனுபவம், அழகான தோற்றம், முகராசி என எல்லாமே இருந்தன. நரசிம்ம ராவோ பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்த நிலையில் தீவிர அரசியலுக்கு திரும்ப வந்தவர், எல்லா விதங்களிலும் மாறுபட்டவர்.

ஆனால் அவர்தான் ஐந்து ஆண்டுகள் நாட்டை அதிக சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். அவர் மக்கள் தொடர்பிலிருந்து விலகவில்லை. நாட்டுக்கும் நல்லது நடந்தது.

காரணம் மிகவும் எளிதானது. இவ்வளவு பெரிய, பல மொழிகளை உள்ளடக்கிய நாடான இந்தியாவை ஆள மிகுந்த அனுபவசாலியே தேவை. ஆகவே அவர் இதில் வெற்றி பெற்றார்.

இந்திய சரித்திரத்தை பார்த்தால் அவர் மாதிரி இருப்பவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் நரசிம்ம ராவ் அரசுக்கெதிராக லஞ்ச ஊழல் புகார்கள் உண்டே.
போஃபோர்ஸை விடவா? மேலும், அவரை நான் மகான் என்றெல்லாம் சொல்லவில்லை. இவ்விருவரையும் ஒப்பிட்டால் அவர் ஜெயிக்கிறார் என்று மட்டும் கூறினேன்.

இருவரிடமுமே ப்ளஸ்களும் மைனஸ்களும் உண்டு.
ஆனால் நிகர பிளஸ் அவரிடம்தான் உண்டு. யாருமே முழுக்க முழுக்க மைனசுடன் இருக்க முடியாது. நரசிம்ம ராவ் நிகழ்வுகளில் ஆழ்ந்து, அவதானித்து செயல்பட்டார். நாகாலாந்து பிரச்சினைகளையும் சமாளித்தார். ஏனெனில் அவரிடம் அனுபவம், தொலை நோக்கு ஆகியவை இருந்தன. ஆகவே இந்த பெரிய நாட்டை அவர் சமாளிக்க முடிந்தது.

வரும் அக்டோபரில் நீங்கள் முதன் மந்திரியாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இஹ்தனை ஆண்டுகளில் நீங்கள் இந்தியாவிலும், அதன் அரசியலிலும் கண்டுணர்ந்த முக்கிய மாறுதல்கள் என்னென்ன?
முதற்கண், வாஜ்பேயியின் ஆட்சியில்தான் கூட்டணி ஆட்சி மிக அதிக அமைதியுடன் நடைபெற்றாது. அவர் காலத்தில் பல கோரிக்கைகள் - திராவிடஸ்தான், காலிஸ்தான் போன்றவை எழுந்தன. இம்மாதிரியான எதிர்மறையான கோரிக்கைகளை இல்லாமல் செய்தார். அவற்றை நேர்மறையானதாக மாற்றி, நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்றார். வாஜ்பேயி இந்த நாட்டுக்கு பல அரிய சேவைகள் செய்தார் என்பது எனது கருத்து.

இர்னடாவதாக, பயங்கரவாதத்தை சர்வதேச அளவில் விவாதிக்க எல்லோருமே மறுத்த காலத்தில், காஷ்மீர் மட்டும் விவாதிக்கப்பட்டது. ஒருவரும் நாம் சொல்வதை ஏற்கத் தயாராக இல்லை. நாம் இளிச்சவாயர்களாக இருந்தோம். அடல்ஜிதான் காஷ்மீர் பிரச்சினையை பயங்கரவாத பிரச்சினையாக சர்வதேச மன்ற்றங்களில் விவாதிக்க செய்தார். உலக மக்களையும் அவரால் தனது நிலைப்பாட்டிற்கு கொண்டுவர முடிந்தது.

வாஜ்பேயியை இவ்வளவு புகழ்கிறீர்களே, பிறகு அவரது ‘இந்தியா ஒளிர்கிறது’ பிரசாரம் 2004-ல் தோல்வியுற்றது?
இது பற்றி அப்போதே நிறைய விவாதித்தாயிற்று. சொல்ல வேண்டியதெல்லாம் கூறியாயிற்று. ஆகவே நாம் இந்த தேர்தல் பற்றியே பேசுவோம்.

அரசியலில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள்?
நானே இது பற்றி பேசக்கூடாது, பேசினால் தற்பெருமை போலத் தோன்றும். ஆனால் உண்மை கூறவேண்டுமென்றால், நான் அரசியல் கலப்பில்லாத முதல் மந்திரி. அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கு செல்கிறேன். இரவு 11 மணி வரை அங்குதன் இருக்கிறேன். தேர்தல் காலங்களில் மட்டும் நான் 30, 40 நாட்கள் கட்சி வேலையில் ஈடுபடுகிறேன். மற்ற நேரங்களில் அரசியல் கலக்காத முதலமைச்சர். இந்த வெட்டி பாலிடிக்ஸ் பண்ணுவதெல்லாம் எனக்கு பிடிக்காது..

இம்முறை லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் உங்களது விருப்பம்தான் ஜெயித்தது என பேசிக் கொள்கிறார்களே.
எங்களுடையது ஒரு கூட்டுத் தலைமை. ஜனநாயக முறைப்படி இயங்குகிறோம். சுமார் 10,000 கட்சி ஊழியர்களூடன் பேசினோம். மாநிலத்துக்கான குழு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றது. எல்லோருடனும் பேசிய பிறகு நாங்கள் டிக்கெட்டுக்காக விண்ணப்பம் செய்த ஒவ்வொருவருடைய ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்டுகளை அலசினோம்.

பிறகு விண்ணப்பதாரர்களுடம் மானிலத்தில் 17-உறுப்பினர் குழு பேசியது. அடிமட்ட தொண்டர்களுடனும் பேசியது. பிறகு முடிவு முதல் மந்திரிக்கு செல்லாமல் நேரே தில்லிக்கு சென்றது.

தில்லியில் உள்ள 21-உறுப்பினர் குழு மேலும் விவாதித்தது. பிறகு லிஸ்ட் எனக்கு அனுப்பப்பட்டது, நான் அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன். இதுதான் முழு நிகழ்வு.

ஆனால் கவனம் இப்போது நான்கு கறைபட்ட வேட்பாளர்கள் மேல்.
உதாரணம்?

ஒரு உதாரணம் திரு. ராத்தோட்.
முதற்கண், இந்திய சட்டப்படி கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் கிரிமினல்கள் என்றால், எவ்வாறு போட்டி இடுகிறார்கள்? இரண்டாவதாக, அவர் ஒரு காங்கிரஸ் MLA ஆக இருந்தவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் பற்றி ஏதேனும் பப்ளிஷ் செய்யப்பட்டதா, இப்போது மட்டும் ஏன் அதை கிளப்புகிறீர்கள்? உங்கள் கேள்வி உங்களைத்தான் மாட்டுகிறது. என் கட்சியையல்ல.

விஷயம் இவ்வளவுதான். நிலைமை அத்தனை சீரியஸ் என்றால், ஜனநாயகம் பற்றி உங்களுக்கு நிஜமாகவே அக்கறை இருந்தால், முந்தைய முறை அவர் தேர்தலில் நின்றபோது இப்பிரச்சினையை ஏன் எழுப்பவில்லை?

இக்கேள்வியையும் நான் கேட்கவில்லை, நீங்கள்தான் கேட்டீர்கள். இப்போது அதை கேட்பது அரசியல் நோக்கமுடையது.

அவர் பதவியில் உள்ள காங்கிரஸ் MLA. பாஜகவில் சேர்ந்த பிறகுதான் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் எனக்கூற இயலாது. போன ஆண்டு வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள 3,000 ஜோடிகளுக்கு திருமணம் செய்வித்தார்.

அப்போதும் நாங்கள் இது பற்றி எழுதினோமே.
அப்படியா, எனக்கு தெரியாது. அப்படி செய்திருந்தால் நன்றுதான். அவர் மீது ஏதேனும் வழக்கு இருந்தால், அதை எடுத்து காட்டவும். அதற்கு நான் பொறுப்பு. கோர்ட் அவரை விடுவித்து, இருப்பினும் நானே பொறுப்பு என்றால் நீங்கள் எனக்கு அநீதி இழைக்கிறீர்கள்.

நேர்காணலின் அடுத்த பகுதியை தவற விடாதீர்கள். அதில் அவர் கடைசியாக 2002 ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாதம், இரண்டுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றி பேச இருக்கிறார்.


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். மோடியை பல விஷயங்களில் தாம் நினைத்தது போல பேச வைக்க பல முயற்சிகளை பத்திரிகையாளர் செய்தாலும், அவர் எல்லோருக்கும் பெப்பே காட்டுகிறார். 2007-ல் மோடியின் வெற்றிக்கு பிறகு இதே மாதிரி சீண்டல் தொனியில் ராஜ்தீப் சர்தேசாய் கேட்க, அவர் மூக்கை ரவிஷங்கர் பிரசாத் என்னும் பாஜக தலைவர் நன்கு உடைத்தது இப்போது என் நினைவுக்கு வருகிறது. சர்தேசாய்க்கு முகத்தை எங்குபோய் வைத்து கொள்வது எனத் தெரியவில்லை.

நேர்காணலின் முடிவு பகுதியை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

Regards,
Dondu N. Raghavan

5/03/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 03.05.2009

தேவையற்ற சப்சிடிக்களைத் தவிர்க்க வேண்டும்
வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு ஒரு புதிய தலைவலி. ஒவ்வொருவரும் தத்தம் வினியோகஸ்தரிடம் சென்று மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு எல்லா சம்பந்தப்பட்ட ஆவணங்களின் மூலம் மற்றும் நகல்களுடன் வர வேண்டும். அவர்கள் 24 டோக்கன்கள் தருவார்கள். ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்காக புக் செய்து பெறும்போதும் ஒரு டோக்கனை ரசீதுடன் சேர்த்து சிலிண்டரை கொண்டுவரும் ஆளிடம் கையெழுத்திட்டு ஒப்படைக்க வேண்டும். அவை 24 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டியது. சற்று முன்னாலேயே (உதாரணத்துக்கு 20 மாதங்களில்) தீர்ந்து விட்டால், மிகுதி காலக்கட்டத்துக்கு துந்தனாதான்.

இப்போதே இது எப்படியெல்லாம் திரிதல் உபயோகத்துக்கு வரப்போகிறது என்பதை யாருமே ஊகிக்க இயலும். சிலருக்கு ஒன்றரை மாதங்கள் சிலிண்டர்கள் வரலாம். 24 மாத முடிவில் அவரிடம் சில டோக்கன்கள் மிஞ்சலாம். அவை இப்போது எந்த ரேட்டில் மற்றவர்களிடம் போகும் என்பதை ஊகியுங்களேன்? இதுவரை இருந்த நிலை என்னவென்றால், 30 நாளுக்கு ஒருமுறைதான் புக்கிங்கே அமுலுக்கு வரும். அதாவது, ஒருவர் 25 நாளில் புக் செய்தால் அதை பதிவு செய்வார்கள், ஆனால் அதன் வெயிட்டிங் முறை எண் 30 நாட்கள் முடிந்த பிறகுதான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இதே மாதிரி டோக்கன் முறைதான், ஆனால் அதில் உள்ளது போல இங்கு பிளாக்கில் எல்லாம் விற்க முடியாது. இப்போது வேண்டுமென்றே பிளாக் வியாபாரத்தை ஊக்குவிப்பது போல இந்த டோக்கன் முறை வந்துள்ளது.

இண்டேன் தரப்பில் சொல்லப்படுவது என்னவென்றால், உண்மையான நுகர்வோருக்கு சிலிண்டர் செல்ல வேண்டும், ஆகவே இந்த டோக்கன்கள் எனக் கூறுகின்றனர். யதார்த்த நிலையோ நான் மேலே சொன்னது போலத்தான் இருக்கும் என அஞ்சுகிறேன். டோக்கன்கள் விற்பனைக்கு சென்றால் அப்போது என்ன செய்வார்களாம்?

இத்தனை கெடுபிடிகளுக்கும் காரணம் என்னவென்று பார்த்தால், சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் சப்சிடிதான். வீடுகளுக்கு கொடுக்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை 315 ரூபாய்கள். ஆனால் உண்மையாகவே அதன் விலை 700 ரூபாய்களுக்கும் மேல். என்ன நடக்கிறதென்னவென்றால், துண்டு விழும் ரூபாய்கள் சப்சிடி ஆகும். அவ்வாறு சப்சிடி பெறுபவர்கள் எல்லோருமே தினக்கூலிகள் அல்ல. இது முற்றிலுமே ஓட்டு பொறுக்கும் பிரச்சினை. மேலும், இண்டேன் கம்பெனி சிலிண்டருக்கு அரசு நிர்ணயித்த விலையோ 700க்கும் மிகக்குறைவே (கிட்டட்தட்ட 550 ரூபாய்கள் என அறிகிறேன்). ஆகவே இந்த சிலிண்டர்களை நிரப்புவதில் இண்டேனுக்கும் அக்கறை இல்லாமலிருப்பது புரிந்து கொள்ள்ளக் கூடியதே. சுதந்திர சந்தையில் உள்ளே புகுந்து அரசு குளறுபடி செய்வதற்கான உதாரணமாகவே இதை எடுத்து கொள்ளலாம்.

இந்த அழகில் திமுக அரசு ஏழைகளுக்கு இலவச அடுப்பு, வாயு சிலிண்டர்கள் தருகிறேன் பேர்வழி எனச் செயல்பட்டு நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது. மேலும், வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ சிலிண்டர்களை வினியோகம் செய்யும் பையன்களை சரிக்கட்டி, ஹோட்டல்கள், கார்கள் ஆகியவற்றில் பயன்படுத்துகின்றனர். பிறகு ஏன் தட்டுப்பாடு ஏற்படாது?

இதற்கு என்ன வழி? எனக்கு தோன்றுவதை கூறுகிறேன். பேசாமல் இந்த சப்சிடியை ஒழியுங்கள், அல்லது கணிசமாக குறையுங்கள். இண்டேன் கம்பெனிக்கு தரும் விலையும் யதார்த்தத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு பாருங்கள், இந்த கோட்டா முறையெல்லாம் ஒழிந்து மக்களும் தேவையின்றி பதுக்க மாட்டார்கள்.

1949-ல் ஜெர்மன் ஃபெடெரல் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு, Reichmark விலக்கப்பட்டு Deutschmark வந்து, ரேஷன் முறையும் ஒழிக்கப்பட்டது. அதுவரை காலியாக இருந்த கடைகளில் எங்கிருந்தோ பொருட்கள் வந்து ஷெல்ஃப்களை அலங்கரித்தன. அதுவரை அரசு சப்சிடி சார்ந்த குறைந்த விலையால் பொருட்களை விற்பவருக்கு ஊக்கம் இல்லாமல் இருந்ததே முந்தைய நிலைக்கு காரணம் என்பது பின்னால் புலப்பட்டது.

வடுவூர் குமாருக்கு ஒரு கேள்வி
பொது கட்டிடங்களில் ஒரு விஷயம் நீங்கள் கவனித்திருக்கலாம். வாட்டர் கூலர்கள் எல்லாமே டாய்லட்டுகளுக்கு அருகில்தான் அமைந்திருக்கும். சாஸ்திரி பவனில் இதை நான் எழுபதுகளிலேயே கவனித்துள்ளேன். ஆக வாட்டர் கூலர் இருக்கும் இடம் பயங்கர நாற்றமாக இருக்கும். மத்தியப் பொதுப்பணித் துறையில் உள்ள எனது சக சிவில் இஞ்சினியர்களை விசாரித்தபோது, அவர்கள் கூறியதென்னவென்றால், தண்ணீர் பைப் கனெக்‌ஷன்கள் காரணமே இது என்பார்கள். அதாவது கக்கூசுக்கு செல்லும் தண்ணீர்தான் வாட்டர் கூலர்களுக்கும் என்றாகிறது. வாட்டர் கூலருக்கும் டாய்லட்டுகளுக்கும் இடையில் ஒரு குறைந்தபட்ச இடைவெளி ஸ்பெசிஃபிகேஷனில் உண்டு என்றும் கூறப்பட்டது.

ஆனால், நடைமுறையில் அந்த குறைந்தபட்ச இடைவெளியை அவர்கள் அதிகப்பட்சமாக எண்ணியே செயல்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு நீண்ட காரிடாரில் ஒரு மூலையில் டாய்லட்டும், இன்னொரு மூலையில் வாட்டர் கூலர் அமைத்தல் பிரச்சினை கணிசமான அளவில் குறையும். ஆனால் அவ்வாறு செய்ய மாட்டார்கள், ஏனெனில் வாட்டர் பைப் நீளம் அதிகமாகி விடுமாம். இங்குதான் நம்ம வடுவூர் குமாருக்கு ஒரு கேள்வி. வாட்டர் பைப் மீட்டருக்கு என்ன ரேட். ஒரு ஐம்பது மீட்டர் அதிகமாகுமா, ஒரு கூலருக்கு? மொத்த கட்டிடத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் செல்லும்போது, இந்த அதிக விலை சுண்டைக்காய்தானே. ஆனால் பலன் அனேகம் அல்லவா? சுகாதார பாதுகாப்பு, வாட்டர் கூலருக்கருகில் நாற்றமின்மை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் கட்டிடங்கள் அறுபது ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கப் போகின்றன. (சாஸ்திரி பவன் கட்டியே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று). இத்தனை ஆண்டுகளூம் அந்த நாற்றம் விடாமல் இருந்து வந்திருக்கிறது, இன்னும் இருக்கப் போகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/02/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 61, 62 & 63

பகுதி - 61 (29.04.2009):
தான் வாக்களித்தப்படி உமா அசோக்கை அவன் வீட்டில் சந்தித்து பேசுகிறாள். மாதா, பிதா, குரு, தெய்வம் என ஏன் இந்த வரிசைக்கிரமம் என முதலில் கேட்கிறாள். மாதா, பிதாவின் அருமைகளை அசோக்கை விட்டே கூறச்செய்து, பிறகு அப்படிப்பட்ட மாதா பிதாவுக்காக அவன் ஏன் சிறிது விட்டுக் கொடுத்து, மனநல நிபுணரை பார்க்க செல்லக்கூடாது என கேட்கிறாள். அவளை எதிர்வாதம் புரியும் அசோக்கை அவன் வழியிலேயே பொறுமையாக சென்று அவனை மெதுவாக கன்வின்ஸ் செய்கிறாள். அக்குழந்தையின் முகத்தில் தேஜஸ், கருணை எல்லாம் அப்படியே வெளிப்படையாக தெரிகின்றன. அந்த நடிகை அற்புதமாக இந்த சீன் செய்கிறார். அசோக்கும் கன்வின்ஸ் ஆகிறான். அதை உமா நாதனிடமும் உமாவிடமும் தெரிவிக்கிறாள்.

பாகவதர் வீட்டுக்கு நீலகண்டன் வருகிறார். நாதன் விரும்பியபடி அசோக்குடன் பாகவதர் ஏன் பேசவில்லை என கேட்கிறார். அது அசோக்கின் நலனுக்கு ஏற்றதாக இல்லை என தான் நம்பியதாலேயே அவ்வாறு செய்யவில்லை என பாகவதர் கூறுகிறார். ஆனால் அசோக் டாக்டரை பார்க்க போகிறான் என்றும், தனது மகள் உமாதான் கன்வின்ஸ் செய்தாள் எனவும் கூறுகிறார். “போக மாட்டான் என நினைத்தேன். போகிறானா? விநாசகாலே விபரீத புத்தி” என பாகவதர் கூறுகிறார்.

“இதை நான் நிறைய கேட்டிருக்கேன். இதை எந்த காண்டக்ஸ்டில் எங்கு கூறியுள்ளார்கள்” என நண்பர் கேட்க, “கெட்டகாலத்தில் முதலில் புத்தி பேதலிக்கும்” எனக் கூறிவிட்டு, சோ மேலும் பேசுகிறார். இது சாணக்ய நீதியில் வருகிறது. அதுவும் ராமருக்கு. அவ்வளவு புத்திமானாகிய அவரே பொன்மானைப் பார்த்து மயங்கிய கதையை கூறுகிறார்.

“இதானே உம்மகிட்ட பிரச்சினை, இனிமே நாதனாத்துலே உங்க ஜம்பம் சாயாது” என்று கூறிவிட்டு நீலக்ண்டன் அப்பால் செல்கிறார்.

அசோக்கும் நாதனும் டாக்டரும் டாக்டர் வீட்டிற்கு செல்லும் ஆயத்தங்களில் இருக்கின்றனர். காரில் ஏறும் சமயம் அசோக் திடீரென எதையோ நினைத்து கொண்டு உள்ளே சென்று “The power of now" என்னும் புத்தகத்தை எடுத்து வருகிறான்.

டாக்டர் வீட்டில் முதலில் நாதனை உள்ளே கூப்பிடுகிறார்கள். அசோக்கை அங்கேயே அமரும்படி கூறிவிட்டு நாதன் உள்ளே விரைகிறார். டாக்டர் அவரிடம் நீலகண்டன் சொல்லியதை முதலில் பட்டியலிடுகிறார். நாதனும் அவற்றை ஊர்ஜிதம் செய்கிறார். சற்றுமுன்னால் டாக்டர் வீட்டுக்கு கிளம்பும்போது சட்டென்று வீட்டுக்குள் திரும்பப் போய் ஒரு புத்தகம் எடுத்து வந்ததையும் கூறுகிறார். அதன் தலைப்பு The power of now என கூறி, “உங்களுக்கு இந்த தலைப்பு புரிகிறதா” என கேட்க, டாக்டர் ஆச்சரியத்துடன் தான் இந்தப் புத்தகத்தை ரொம்ப நாட்களாகத் தேடியதைக் கூறுகிறார்.

டாக்டர் நாதனிடம் அசோக்கை அனுப்புமாறு கூற, அவரும் அசோக்கிடம் வந்து அவனை உள்ளே அனுப்புகிறார். அசோக் புத்தகத்துடன் உள்ளே செல்ல முயல, நாதன் புத்தகத்தை தன்னிடம் கொடுத்துவிட்டு போகுமாறு கூறுகிறார். அசோக்கோ அதை டாக்டருக்காகவே எடுத்து வந்ததாகக் கூறி விட்டு டாக்டரிடம் செல்கிறான். அவருக்கு இந்தப் புத்தகத்தை அளிக்கிறான். டாக்டருக்கு ஒரே சந்தோஷம். “என்னமோ இது உங்களுக்கு தேவைப்படும்னு தோணித்து அதனால்தான் கொண்டு வந்தேன் என்றும் கூறுகிறான்.

பிறகு டாக்டர் அவனிடம் பிரச்சினை பற்றி கேட்க, தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனத் தெளிவாகக் கூறுகிறான். அவன் தந்தை வேறுமாதிரியாகக் கூறுகிறாரே என டாக்டர் வினவ, அப்போ அது அவரது பிரச்சினை எனவும் சொல்கிறான். தூக்கம் எல்லாம் நன்றாக அசோக்குக்கு வருகிறதா என டாக்டர் கேட்க, அவர் எந்த நித்திரையை கேட்கிறார், யோக நித்திரையா என பதிலுக்கு கேட்கிறான். யோக நித்திரை என்பது விழிப்பு நிலைக்கும் மேற்பட்டது எனவும் கூறுகிறான். வெளியில் அவன் தந்தை உட்கார்ந்த வண்ணம் தூங்குவதை காட்டி அவர் தன்னை மறந்து தூங்குகிறார் என்றும் ஆனால் யோகநித்திரை என்பது விழிப்புடன் கூடிய தூக்கம், அது ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியம் எனக் கூறுகிறான்.

“இது என்ன சார், வெறுமனே தூக்கம்னு சொல்லிட்டு போகாம, என்னமோ யோக நித்திரைங்கறாங்களே” என்று நண்பர் அங்கலாய்க்கிறார். சோ அவர்கள் விழிப்பு நிலை, சொப்பன நிலை, சுஷுப்தி என்னும் ஆழ்ந்த தூக்கம், துரீயம் என்னும் யோக நித்திரை ஆகியவை பற்றி பேசுகிறார்.


பகுதி - 62 (30.04.2009):
“நீ சொல்வதைத்தான் நாங்கள் சப் கான்ஷியஸ் என்கிறோம்” என டாக்டர் கூற, “அது ஃப்ராய்டின் டெஃபினிஷன், ஆனால் தான் குறிப்பிடுவதோ சூப்பர் கான்ஷியஸ்” என அசோக் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறான். ஆழ்மனம், சொப்பன நிலை, விழிப்பு நிலை என்று இருக்கின்றன. அவற்றுக்கும் மேலான தளத்தில்தான் யோக நித்திரை இருக்கிறது எனவும் அசோக் விளக்குகிறான். விலங்குக்கும் கடவுளுக்கும் இடையில் மனிதன் ஒரு பாலமே என்றும் அவன் கூறுகிறான். திக்குமுக்காடிப் போகும் டாக்டர், அசோக்கிடம் அவனது தந்தையை அனுப்புமாறு கூறுகிறார். அசோக்கும் வெளியே சென்று தந்தையை உள்ளே அனுப்புகிறான்.

உள்ளே வந்த நாதனிடம் டாக்டர் அவரது பிள்ளைக்கு ஒரு பிரச்சினையும் இல்லை எனக் கூற அவர் அதை நம்ப மறுக்கிறார். டாக்டர் தன்னை கிண்டல் செய்கிறாரோ என்ற தனது ஐயத்தையும் வெளிப்படையாக வைக்கிறார். டாக்டரோ தனக்கு தேவையான புத்தகத்தை சொல்லி வைத்தாற்போல அவன் ஏன் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு விட்டு, அசோக் ஒரு தெய்வக்குழந்தை என்றும், அவனுக்கு மருந்தெல்லாம் கொடுத்து துன்பப்படுத்த தான் விரும்பவில்லை எனக் கூறி நாதனை அனுப்புகிறார்.

வீட்டில் வசுமதி நாதன் சொன்னதைக் கேட்டு திகைக்கிறாள். நீகண்டனும் அப்பக்கம் வந்து சேருகிறார். அவரிடமும் நாதன் நடந்ததைக் கூற, “இது என்ன, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிப்போச்சே” என அவர் அங்கலாய்க்கிறார். சமையற்கார மாமியோ, “ஏன், குரங்கு பிடிக்கப் போய் பிள்ளையாரா மாறிப்போச்சுன்னு சொல்லலாமே” என கேட்க, நீலகண்டன் அவளிடம் கோபப்படுகிறார். இப்போது வசுமதி செகண்ட் ஒப்பீனியன் பற்றி கேட்கிறாள்.

“இப்போல்லாம் இது ரொம்ப காமனா போச்சு” என நண்பர் கூற, சோ அவர்கள் வைத்தியர் தனது மனசாட்சிப்படி நடந்து கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பல வைத்தியர்கள் வியாபார நோக்கத்தில் செயல்படுவது கவலையளிக்கிறது என கூறுகிறார். இது சம்பந்தமாக வடமொழியில் ஒரு சுலோகம் கூறுகிறார். அதன் பொருள்: “வைத்தியராஜரே வணக்கம்/நீங்கள் யமனது சகோதரர்/அவன் உயிரை மட்டும்தான் எடுப்பான்/நீங்களோ உயிருடன் சேர்த்து பணத்தையும் பறிக்கிறீர்கள்”.

அசோக்கும் கிரியும் பள்ளித் தோழர்கள். எதேச்சையாக தெருவில் சந்திக்கின்றனர். கிரி தனது தந்தை பிராமணர் இல்லாதபடியால் ஒரு பிராமண குடும்பத்தில் சம்பந்தம் வைத்து கொள்ள பிராமண குலத்தில் பிறந்த தனது தாயின் விருப்பம் நிறைவேறாது போனது குறித்து அசோக்கிடம் கூறுகிறான். தன்னையும் தன் அன்னை ஒரு பிராமணனாகவே வளர்த்திருப்பதையும் சொல்கிறான். அசோக் கிரியின் சார்பில் வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு சென்று வாதிடுகிறான். கடைசியில் முத்தாய்ப்பாக ஒரு வாதத்தை முன்வைக்கிறான். அதாவது, வேம்பு அவர்கள் குலம் பார்த்து பிராமணன் ஒருவனுக்கு ஜெயந்தியை மணமுடித்து தந்தாலும், அவன் கெட்டவானகப் போனால் என்ன செய்வது? அதே சமயம் கிரி ரொம்பவும் நல்லவன். தெரியாத பிராமணன் ஒருவனை விட பிராமணனாகவே நடந்து கொள்ளும், இவர்கள் அறிந்த கிரி மேல் என அசோக் கூறுகிறான்.

திருச்சியில் நீலகண்டனும் பாகவதரின் மாட்டுப்பெண் ராஜியும் அவள் வீட்டை நோக்கி நடக்கின்றனர். அவர்கள் ஒரே வங்கியில் வேலை செய்பவர்கள். திருச்சியில் நடைபெற்ற வங்கி செமினார் ஒன்றில் இருவரும் சந்தித்திருக்கின்றனர். வீட்டில் பாகவதரின் மகன் சிவராமன் இருக்கிறார். நீலகண்டனை வரவேற்று உட்கார வைக்கிறார். தனது அலுவலகத்துக்கு நேரம் ஆகிவிட்டதால் அவர் செல்கிறார். நீலகண்டனும் ராஜியும் பேசுகின்றனர். அப்போது விசாரிக்கும்போது அவள் பாகவதரின் மருமகள் என்பதை அறிந்ததும் நீலகண்டன் பாகவதரை பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படையாகக் கூற, அப்பெண்மணியும் தனக்கும் தனது மாமனார் பற்றி அதே எண்ணமே எனக் கூறுகிறாள். பாகவதர் தனது பேரனை அச்சோக்கை கெடுத்தது போல கெடுக்கக் கூடும், ஆகவே அவர் பேரனை நெருங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி விட்டு நீலகண்டன் விடைபெற்று செல்கிறார்.


பகுதி - 63 (01.05.2009):
பாகவதரின் பேரன் ராமசுப்புவின் ஹாஸ்டல் வார்டனிடம் பாகவதரின் மருமகள் ராஜி பேசுகிறாள். தனது பிள்ளையை விடுமுறை தினங்களில் ஹாஸ்டலை விட்டு வெளியில் போகலாகாது என அவள் வார்டனிடம் கூறுகிறாள். அதே போல பாகவதரையும் ஹாஸ்டல் பக்கம் வரவிடக்கூடாது எனவும் கேட்டு கொள்கிறாள். எல்லாவற்றையும் எழுத்து ரூபத்தில் அளித்து கணவன் மனைவி இருவருமே அதில் கையெழுத்திட வேண்டும் என வார்டன் கூறிவிடுகிறார்.

நாதன் வீட்டில் அந்த மனோதத்துவ நிபுணர் வந்து அசோக்கிடம் பகவத் கீதை உபதேசம் பெற்று கொள்கிறார். அசோக் கூறுகிறான், “மனிதன் தனக்குத் தானே நண்பனுமாகலாம், விரோதியும் ஆகலாம். பாதிக்கு மேல் மனிதர்கள் தமக்குத் தாமே விரோதிகள்தான் ஆகிறார்கள். பிறருக்கு கெடுதல் நினைப்பவன் தானே கெடுதலைத் தேடிக்கொண்டு தன்னையே விரோதிக்கிறான்”. கிருஷ்ணரை விட சிறந்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் இருக்கவியலாது எனவும், தான் வீட்டிற்கு போவதற்கு முன்னால் பகவத் கீதை ஒரு பிரதி வாங்கிப் போகப்போவதாகவும் கூறி விட்டு டாக்டர் விடை பெறுகிறார். நாதனுக்கும் வசுமதிக்கும் ஒன்றும் புரியவில்லை. வசுமதி இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் போகலாமென ஆலோசனை தருகிறாள்.

கிருபா வீட்டில் சாம்புவும் வேம்புவும் கிரி ஜெயந்தி திருமணம் பற்றி பேசுகின்றனர். அசோக் வந்து, கிரிக்காகப் பேசியதை வேம்பு கூறுகிறார். சாம்பு தெளிவாகவே கூறுகிறார், கடைசி முடிவு வேம்பு குடும்பத்தினரின் கைகளில்தான் உண்டென. ஆகவே, திருமணத்தை நிச்சயம் செய்ய எண்ணினால் அது ஜெயந்தியின் நலனுக்கு உகந்ததாக இருப்பதுதான் முக்கியம் என கூறி, மீதியெல்லாம் இரண்டாம் பட்சமே என சொல்கிறார். வேம்புவும் இப்போது இறுதியாக ஜெயந்தி-கிரி திருமணத்துக்கு சாதகமான முடிவை தெரிவிக்கிறார்.

திருச்சியில் பாகவதரின் மருமகள் ராஜி வார்டனுக்கு தர வேண்டிய கடித்தத்தில் தன் கணவனின் கையெழுத்தையும் தானே போடுகிறாள். அதற்கு முன்னால் கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

“அப்பெண்மணி செய்தது ஃபோர்ஜரி இல்லையா” என நண்பர் கேட்க, நல்லது செய்வதாக நினைத்து சிலர் இவ்வாறு செய்வது ஏற்கனவே நடந்துள்ளது எனக் கூறுகிறார். இதை சிவபெருமானே செய்துள்ளார் என்பதையும் பெரிய புராணத்தில் சுந்தரரின் வரலாற்றிலிருந்து மேற்கோள் காட்டிக் கூறுகிறார். ஆனால் பரமசிவன் செய்தது நிஜமாகவே சுந்தரரை தவறு செய்து விடாமல் தடுத்தாட்கொண்ட செயல் என்பதையும் கூறுகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது