இந்த சீரியலை பற்றி நான் எழுதிய அறிமுகப் பதிவைப் பார்த்து நண்பர் பினாத்தல் சுரேஷ் திகைப்புடன் என்னுடன் சேட்டில் வந்தார். அவர் கேட்டதின் சாராம்சம் என்னவென்றால், இந்த அறுவை சீரியலுக்கு இவ்வளவு பில்ட் அப் ஏன் என்பதுதான். அதே சமயம் புத்தகத்தை படித்துள்ளதாகவும், அது தனக்கு பிடிக்கும் எனவும் கூறினார்.
சீரியல் வந்து சில நாட்களே ஆன நிலையில் இவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வருவது சற்றே அவசரமான முடிவு என்பதே என் துணிபு.
என்ன, வெள்ளிக்கிழமை மாலை விளக்கு வைத்தவுடன் வரும் பல சீரியல்களில் “இந்தக் குடும்பத்தை அழிக்காமல் ஓய மாட்டேன்” என கண்ணை உருட்டிக் கொண்டே பேசும் வில்லி நடிகைகள் (புவனேஸ்வரி, வடிவுக்கரசி, நளினி ஆகியோர்) இந்த சீரியலில் இருக்க மாட்டார்கள். மிகைபடுத்த்தப்பட்ட காட்சிகள் இல்லாது போகலாம். தேவையற்ற சோகத்தைப் பிழைந்து படகோட்டியில் எம்ஜிஆர் வாயசைக்கும் கரை மேல் பிறக்க வைத்தான் என்னும் பாடலின் ராகத்தில் பின்னணி வாத்திய இசையெல்லாம் போட மாட்டார்கள் (கஸ்தூரி சீரியல்).
திங்கள் இரவு எபிசோடில் உதார் விடும் ஆட்டோ டிரைவரை பார்த்து அசோக் ஒரு விஷயம் சொன்னதுமே நான் ஆடிப்போய் விட்டேன். அந்த ஆட்டோ டிரைவர் உதார் விட்டு, “நாளைக்கு வாம்மா உன்னைக் கீசுடறேன்” எனக் கூற. அசோக் அவனை பரிதாபத்துடன் பார்த்த வண்ணம் “நாளையை யார் பார்த்துள்ளார்கள்” என்ற டயலாக் வரும்போதே நான் தீர்மானித்து விட்டேன், ஆட்டோ டிரைவர் காலி என்று. நேற்றைய எபிசோடில் அது ஊர்ஜிதமானது.
பூஜ்யர் நிஜாமுத்தீனை தான் தில்லி திரும்பியதும் கொன்று விடப்போவதாக தில்லி சுல்தான் Qutb ud din Mubarak Shah கூறுகிறான். அச்சமயம் தில்லிக்கு வெளியே ஒரு ஊரில் படை இறக்கியிருக்கிறான். அடுத்த நாள் தில்லி பிரவேசம். நிஜாமுத்தீனின் பக்தர் கவி அமீர் குஸ்ரு பூஜ்யரிடம் தப்பித்து ஓடுமாறு மன்றாடுகிறார். சுல்தான் தில்லிக்கு மிக அருகில் வந்து விட்டதாக மற்ற சிஷ்யர்கள் பதறுகின்றனர். நிஜாமுத்தீன் அப்போது பதறாமல் கூறுகிறார், "dilli door asth (தில்லி இன்னும் தூரத்தில்தான் உள்ளது)". அடுத்த நாள் சுல்தானின் மரணச் செய்திதான் வருகிறது. அமீர் குஸ்ரு பற்றிய ஒரு ஹிந்தி சீரியலில் இந்தக் காட்சி வருகிறது.
அப்போது அந்த சீரியலை பார்க்கும் போது இருந்த மனநிலையில்தான் சோ அவர்களது இந்த சீரியலில் இந்த காட்சியை காணும்போது இருந்தேன். அதுவும் அசோக் என்பவர் கதைப்படி வசிஷ்ட முனிவர். அவர் கூறியது பலிக்காமல் போகுமா என்பதும் நிஜம்தானே.
இந்த சீன் முடிந்ததுமே சோ மற்றும் அவரை கேள்வி கேட்கும் நண்பர் திரைக்கு வந்தனர். நண்பர் இந்த அசோக் சொல்வது எல்லாமே பலிக்கும் என சோ சொல்லுகிறாரா என கேட்க, சோ தனக்கே உரித்தான பெரிய விழிப்பார்வையுடன் “அப்படியும் சொல்லலாம்” எனக்கூறிவிட்டு மேலே பேசியது சுவாரசியமாக இருந்தது. அதாவது இதெல்லாம் பலிப்பதற்கு மகானாகவெல்லாம் இருக்கத் தேவையில்லை. ஆகவேதான் பெரியவர்கள் எப்போதுமே கூறுவார்கள், அசுபமாக பேசாதே என. அவ்வாறு பேசும்போது மேலே சஞ்சரித்து கொண்டிருக்கும் துர்தேவதைகள் “அப்படியே ஆகட்டும் (ததாஸ்து)” என்று கூறிவிடுவார்களாம்.
அமரர் டணால் தங்கவேலு அவர்களும் இதையே பலமுறை கூறியுள்ளார். ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணன் அவர்களிடம் இவர் கடன் கேட்க, அவரும் தந்தாராம். அப்போது “எனது லட்சுமியையே உனக்கு தருகிறேன்” என்றாராம். அதிலிருந்து அவர் பொருளாதார நிலை மோசமாகி வறுமையில் வாடினார் என தங்கவேலு அடிக்கடி கூறியுள்ளார். “பாட மாட்டேன்” என்னும் பல்லவியில் பாடிய பாடகர் சுந்தரம் (மணமகள் படத்தில் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பாடியவர்) பிறகு தொழிலில் சோபிக்கவில்லை என்பதயும் அவரே கூறியுள்ளார்.
நேற்றைய (10.02.2009) எபிசோடில் நான் ரசித்த காட்சி. அமாவாசை தர்ப்பணம் செய்விக்க செல்ல வேண்டிய சாஸ்திரிகள் (கம்பர் ஜெயராமன்) ஜுரத்தில் படுத்திருக்கிறார். நல்ல வேலையில் இருக்கும் அவர் மகன் (கோல்டன் சுரேஷ்) சாஸ்திரிகளுக்கு இந்த வேலையை ஒதுக்கிய வேணு சாஸ்திரிகளுக்கு ஃபோன் செய்து, தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, ஆகவே வேறு ஏற்பாடு செய்யுமாறு கேட்க, அவர் அது இயலாது எனக் கூறிவிடுகிறார். கம்பர் ஜெயராமனும் தானே சென்று விடுவதாகக் கூற, மகன் அவரை அமர்ந்திருக்குமாறு கூறிவிட்டு தானே சாஸ்திரிகளுக்கான உடை அணிந்து சாமக்கிரியைகளுடன் செல்கிறான். அக்காட்சி மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. தாய் தந்தையிடம் ஆசி வாங்கி அவன் புறப்பட, பெற்றோர்களின் முகத்தில் பெருமையை மிக நன்றாகவே காட்டியிருந்தார்கள். அந்த பெருமை நிச்சயமாகவே அவன் பெரிய வேலையில் கைநிறைய சம்பாதிப்பதில் இருக்கும் பெருமையை விட அதிகமே என்றும் எனக்கு உறுதியாகப் பட்டது.
அமாவாசை தர்ப்பணம் பற்றி பிறகு சோ அதே எபிசோடில் விளக்கினார். அதில் வரும் ஒரு மந்திரத்தில் தான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் தனது பித்ருக்களுக்கும் மட்டுமின்றி தங்களுக்கு தர்ப்பணம் செய்யக்கூடியவர்கள் இல்லாது இறந்தவர்களுக்கும், அவர் யாராயிருந்தாலும், எந்த சாதியாக இருந்தாலும் அவர்களுக்கும் பலனளிக்கக் கடவது என்ற செய்தியும் உள்ளது என்பதை அவர் விளக்கினார். அதே போல ஆவணி அவிட்டத்தில் சொல்லும் காயத்ரி மந்திரத்தால் நாட்டுக்கே நன்மை விளையும் என்ற நம்பிக்கை இந்து சமுதாயத்தில் உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.
இப்பதிவை முடிக்கும் முன்னால், பினாத்தல் சுரேஷ் சேட்டில் கூறிய இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். அதாகப்பட்டது சோ மேல் எனக்கு உள்ள முரட்டு அபிமானமே என்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கிறது என்றார் அவர். உண்மைதான், சோ மேல் எனக்கு முரட்டு அபிமானம் உண்டு என்பது நிஜம்தான்.
சமீபத்தில் 1941-ல் கல்கி அவர்கள் கல்கி பத்திரிகை ஆரம்பித்தபோது தனது ராஜாஜி ஆதரவு நிலையைப் பற்றி எழுதினார். அவர் சொன்னது, “எனக்கு ராஜாஜி அவர்கள் மேல் மிகுந்த அபிமானம் இருப்பதால் அவர் சொல்வதையெல்லாம் நான் ஆமோதிக்கிறேன் என்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்வேன். எனக்கு ராஜாஜி மேல் மிகுந்த அபிமானம் உண்டு என்பது உண்மையே. அதற்காக அவர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நான் ஆதரிக்கக் கூடாதா என்ன”
நானும் அதைத்தான் கூறுகிறேன். சோ மேல் அபிமானம் எனக்கு இருக்கிறது என்பதற்காக அவர் செய்வதையெல்லாம் எதிர்க்க வேண்டும் என்பதா? இதற்கு ஆங்கிலத்தில் bending backwards என கூறுவார்கள். அதாவது உருப்படாத சில இணைய தாசில்தார்களின் சான்றிதழுக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனர்களே பார்ப்பனர்களைத் திட்டுவது போல என வைத்து கொள்ளலாம். நான் bending backwards எல்லாம் செய்யும் ஆள் அல்ல.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲
𝐫𝐮𝐥𝐞
-
பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக
இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம்
சுவடுகள...
2 days ago
