11/28/2008

டோண்டு பதில்கள் 28.11.2008

AnonyM/AnonyT (November 22, 2008 1:14 PM - 1:33 PM):
1. உங்களாலோ அல்லது நீங்கள் சொல்லி உங்கள் வீட்டாரே கேட்காததையோ ஊருக்கு உபதேசம் என்ற பெயரில் சொல்லுவீர்களா?
பதில்: எனக்கு வேறு வேலை இல்லையா? நான் என்ன கருத்து கந்தசாமியா?

2. 1.மனைவி 2.துணைவி. 3.______?
பதில்: ஜெமினி கணேசனை கேட்க வேண்டிய கேள்வி. ஆனால் அதற்கும் டூ லேட்.

3. கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மட்டும் சாதிக் கலவரங்கள் அதிகமாக நடக்கிறதே, ஏன்?
பதில்: இது பற்றி ஓரிடத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்கள். அதாகப்பட்டது, அதிமுக தேவர்கள் வசம் இருப்பதால், அக்கட்சி பதவியில் இருக்கும் காலத்தில் தேவர்கள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது என அடக்கி வாசிக்கின்றனர். ஆகவேதான் அந்த ஆட்சியில் கலவரம் குறைவாகவே உள்ளது எனவும் படித்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

4. காமராசர் முதல்வராக இருந்த போது தானே (சமீபத்தில்) தேர்தலில் சீனிவாசனிடம் தோற்றுப் போனார்? கிழக்குப் பதிப்பக மு.க. புத்தகத்தில் முதல்வராக இருந்தவர் தேர்தலில் தோற்றுப் போனது ஜெ. மட்டும் தான் என்று எழுதியிருக்கிறார்களே?
பதில்: தவறு. 1963-ல் காமராஜ் கட்சிப் பணிகளை ஏற்க முதன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பக்தவசலம் முதல் மந்திரியானார். ஆக 1967-ல் காமராஜ் தோற்றபோது அவர் முதல் மந்திரியாக இல்லை. இதில் மேலும் ஒரு சுவையான விஷயம் உள்ளது. காமராஜ் தோற்றதற்கு அண்ணா நிஜமாகவே வருந்தினர். அவர் தோற்பார் என எதிர்பார்க்கவில்லையாதலால் அதிகம் பலம் இல்லாத வேட்பாளரையே நிறுத்தினார். இது பற்றி நான் எழுதிய பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் என்னும் பதிவிலிருந்து சில வரிகள்:
“1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமரிசனம் செய்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:
"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

5. கையாலாகாதவருக்குத்தானே கோபம் அதிகம் வரும்? (இதற்கும் கருணாநிதி அடிக்கடி பார்ப்பனர்கள் மீது கோபப்படுவதற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல)
பதில்: “நீதாண்டா கொலைகாரன்” என்று கோபப்பட்டது அதனால்தானோ. நல்லது.

6. சோ நேரடி அரசியலில் குதித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பாரா?
பதில்: கண்டிப்பாக மாட்டார். அதை அவரே பலமுறை கூறிவிட்டார். அதேபோல மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும் தெரிந்திருந்தது, தான் தேர்தலில் நின்றால் வெற்றி பெற முடியாது என்று.

7. சோவுக்கு கொம்பு முளைத்தால் விகடன் லோகோவைப் போலத்தான் இருப்பார். சரியா?
பதில்: இது சோவுக்கு நல்ல காம்ப்ளிமெண்ட் என்றுதான் நான் பார்க்கிறேன்.

8. ஐ.டி. மோகம் குறைகிறதா?
பதில்: இன்னும் நிலைமை அவ்வளவு மோசமில்லையென்றாலும் முன்போல் கண்மூடித்தனமான மோகம் இருக்காது.

AnonyL (November 22, 2008 5:27 PM):
1. வீரப்பன் இருந்திருந்தால் யாருக்கு ரொம்பவே லாபமாக இருந்திருக்கும்?
பதில்: பல அரசியல்வாதிகளுக்கு.

2. நயந்தாராவைப் பிடிக்குமா, த்ரிஷாவைப் பிடிக்குமா, இலியானாவைப் பிடிக்குமா?
பதில்: சொல்ல காசா, பணமா என்ன? மூவரையுமே பிடிக்கும்.

கம்யூனிசம் பிடிக்காதவர் (பெயர் திருத்தம் செய்தது டோண்டு ராகவன்):
1. தா. பாண்டியன் என்பவர் தமிழகத்திலிருந்து வெங்காயம் போகவில்லை என்றால் ஸ்ரீலங்காவில் சாம்பார் இல்லை, என்றும் ஆவடியிலிருந்துதான் பீரங்கிகள் ஸ்ரீலங்காவிற்குப் போவதாகவும் பிதற்றுகிறாரே...இதைப் பற்றிய தங்கள் மேலான கருத்து? சாம்பார் இல்லை என்றால் வத்தக்குழம்பு சாப்பிட்டுக் கொள்வார்கள் என்று சமாளிக்கவேண்டாம்.
பதில்: வெங்காயத்தை விடுங்கள். துவரம் பருப்பே இங்கிருந்துதான் போகிறது என்று படித்திருக்கிறேன். ஆவடியிலிருந்த்கு பீரங்கிகள் போவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

2. சோ சொல்வது போல் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் காணாமல் போய்க் கொண்டிருப்பதால் இப்படி லூசுத்தனமாக எதையாவது எடுத்துக் கொண்டு பேசுகிறார்களா?
பதில்: ஐம்பதுகள், அறுபதுகளுக்கு பிறகு கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் சோபிக்க இயலவில்லை. இப்போது அவர்கள் செய்வது ஒரு desperate measure.

3. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 1992 முதல் நடந்த எல்லா குண்டு வெடிப்புகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுகிறது பற்றி?
பதில்: செய்ய வேண்டும்தான். அண்டை நாட்டுக்கு இங்கிருந்து கொண்டு விசுவாசமாக இருப்பவர்களை இன்னும் நன்றாக இனம் காணவேண்டும்.


குப்புக்குட்டி:
1. "சமீபத்தில்"என்பதை உங்கள் brand- ஆக வைத்திருக்கிறீர்கள் சரி! அது என்ன முரளி மனோகர் உங்கள் மனசாட்சியா?
பதில்: ம்ரளி மனோகர் வேறு நான் வேறு அல்ல. என்ன அவ்வப்போது அவன் என்னை கிண்டலடிப்பான். மனசாட்சி என்றும் வச்சுக்கலாமே. கேட்க நல்லாத்தான் இருக்கு.

2. தென்காசி படத்தில் வருகிற மாடு காமெடிக்கு இணையாக இப்போதைய விவேக் காமெடிகள் இருப்பதில்லையே ஏன்?
பதில்: இந்தக் காட்சியையா கூறுகிறீர்கள்? சமீபத்தில் 1969-ல் ஹிந்தி நடிகர் ராஜேந்திரநாத் இந்த காமெடியை “ப்யார் கா மவுசம்” என்னும் படத்தில் செய்து விட்டாரே. என்ன, அதில் அவர் பசுவாக வர, நிஜக் காளையிடம் மாட்டிக் கொள்கிறார்.

3. ஹிந்தி கஜினி பாடல்கள் கேட்டீர்களா?
பதில்: இல்லை. தமிழ் கஜினியும் பார்த்ததில்லை.

4. அவுட்லுக்-ல் வெளியான ஹிந்து தீவிரவாதம் கட்டுரை படித்தீர்களா?
பதில்: படிக்கவில்லை. ஆகவே கருத்து ஏதும் இல்லை.

5. ஊர் சுற்றப பிடிக்குமா ? சமீபத்தில் சுற்றிய ஊர் பற்றிய தகவல், 1978 என்ற சமீபமாக இருந்தாலும் பரவாயில்லை
பதில்: எனக்கு இருக்குமிடமே சொர்க்கம். Wanderlust எல்லாம் கிடையாது. என் வீட்டம்மாதான் நான் கதறக் கதற என்னை வைணவத் தலங்களுக்கு இழுத்து செல்வார். எப்போதடா திரும்ப கணினிக்கு வருவோம் என காத்திருப்பேன்.

6. வாரணம் ஆயிரத்தில் யார் நிலை ரொம்ப பரிதாபம்?
பதில்: தயாரிப்பாளர் நிலை என கேள்விப்படுகிறேன்.

7. தி.ஜா.ரா கதைகள் படித்திருக்கிறீர்களா?
பதில்: தி. ஜானகிராமனைத்தானே சொல்கிறீர்கள். நிறைய படித்திருக்கிறேன். எனக்கு பிடித்த கதை “அன்பே ஆருயிரே”. சமீபத்தில் 1961-ல் கல்கியில் தொடர்கதையாக வந்தது.

8. எக்ஸ்பிரஸ் குருமூர்த்தியின் அலசல்கள் "சோ"அளவுக்கு சரியானதாக இருக்கிறதா?
பதில்: சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் (அணுசக்தி ஒப்பந்தம், 123 சட்டம்) ஒட்டுமொத்தமாக இருவருக்கும் ஒரே அலைவரிசை.

9. ஒருகாலத்தில் வங்காளம் வரிசையாக புரட்சிக்காரர்களையும் சிந்தனவாதிகளையும் தந்தது (சுவாமி விவேகானந்தர், போஸ், தாகூர், அரவிந்தர் இப்படி...) ஆனால் இபோது ஏன் மம்தா போல ஆட்களைத் தருகிறது, ஏதேனும் manufacturing defect- ஆகிப் போச்சா?
பதில்: அந்த ஆட்கள் திரும்ப வந்தால் அவர்களை யார் ஆதரிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

10. சுவாமி விவேகானந்தர் மற்ற துறவிகள் போல ஆன்மிக வழிபாடுகளில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை (அந்த நிலையையும் கடந்தவர்) என்று நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
பதில்: பரமஹம்சரிடம் யோகா செய்யும் முறையை கற்று ஆழ்நிலைக்கு போனார் விவேகானந்தர். அதில் மயங்கி அதிலேயே ஆழ்ந்துவிடப் போவதாக கூற, பதறிப்போன பரமஹம்சர் விவேகானந்தர் மக்களுக்கு அதிக சேவை செய்ய வேண்டும் என அவருக்கு வழிகாட்டினார். ஆகவே நீங்கள் சொல்வது போல அவர் ஆன்மீகத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொள்ளவில்லைதான்.

11. கருப்பு வெள்ளை சபாபதி படம் பார்த்திருக்கிறீர்களா? சமீபத்தில்தான் சன் டி.வியில் போட்டார்கள்.
பதில்: சில ஸ்கிட்டுகள் பார்த்துள்ளேன். முழுக்கப் பார்த்ததில்லை. அதிலிருந்து சில காட்சிகளை எங்கள் சாரணர் இயக்க முகாம்களில் கேம்ப்ஃபைர் சமயத்தில் போட்டுள்ளோம். ஒரு படத்தில் ஒருவர் தாயார் இறக்க, கவுண்டமணி அவரிடம் “வருத்தப்படாதே அப்பா, உன் அன்னை ஊருக்கே அன்னையாக இருந்தார்” என ஆறுதல் கூற அதை அப்படியே எடுத்து கொண்ட செந்தில் மனைவியை இழந்த வடிவேலுவிடம் அன்னைக்கு பதிலாக மனைவியை கூறி உதை வாங்குவார். அந்த ஐடியா சபாபதியில்ருந்துதான் வந்தது.

12. டி எஸ் பாலையா, டி ஆர் ராமசந்திரனுக்கு இணையாக இப்போது யாரைச் சொல்லலாம்.
பதில்: மக்கள் ரசனை மாறி விட்டதே. இருப்பினும் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இருக்கிறார்தானே. ஆனால் அவர் அதுஇகம் சோபிக்க இயலவில்லை. இப்போதிருக்கும் விவேக், கருணாஸ் ஆகியோருக்கு என்ன குறைச்சல்?


AnonyX:
1. 'உண்மை' கண்டறியும் குழுன்னா என்னங்க?
பதில்: யாருக்கு சாதகமான உண்மை என உணர்ந்தால் பொது மக்கள் இதை கண்டு கொள்ள மாட்டார்கள்.

2. வீராணம் குழாயில கொள்ளையடிச்சு நாறிடுச்சே. இன்னும் எதுக்காக அதையெல்லாம் அப்புறப்படுத்தாம ரோட்டோரத்திலே போட்டு வெச்சிருக்காங்க?
பதில்: வீராணம் குழாயின் தவறான கான்சப்டே தலைநகர் சென்னையின் நலனை வீராணம் ஏரியாவில் உள்ள மக்களது நலனுக்கும் மேலாக பாவித்ததுதான். அவனவன் அங்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் இல்லாது தத்தளிக்கும் நிலையில் இவ்வளவு பணம் செலவழித்து சென்னைக்கு ந்நுற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்து பைப் போட்டு தண்ணீர் வரவழைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றினால் இந்த குழாய்களுக்கெல்லாம் அவ்வளவு தேவை இல்லை. இப்போது கட்டப்படும் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களில் அது பொருத்தப்படுகிறதா என கண்குத்தி பாம்பாக பார்த்தாலே போதுமே. ஆனால் அதை செய்ய அரசியல் வியாதிகளுக்கு மனம் வராது.

3. எந்த வெளிநாட்டுக்கு போக ஆசை? ஏன்?
பதில்: எனக்கு இந்தியாவே போதும். என்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை. அப்படியே போக வேண்டும் என்றால் இஸ்ரேல் போக ஆசை. முடிந்தால் பாகிஸ்தானுக்கும் செல்ல வேண்டும்.

4. இவ்வளவு பெரிய கோயில்களை அந்தக் காலத்திலேயே எப்படி கட்டினார்கள்?
பதில்: பாலகுமாரனின் உடையார் நாவலின் எல்லா பகுதிகளையும் படித்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம். தஞ்சை பெரிய கோவில் கட்டப்படும்போது நடந்த அரசாங்க காரியங்களை பற்றியும் அதில் எழுதப்பட்டுள்ளது. அரசு நடவடிக்கைகளில் பொதுமக்கள் பட்ட அவதிகள், அதனால் விளைந்த அவர்தம் அதிருப்திகள் பற்றியும் அதில் எழுதியுள்ளார்.

5. பார்க்க நினைத்து கடைசி வரை பார்க்க முடியாமலேயே போன பிரபலம்?
பதில்: அப்படி யாரும் இல்லையே. சுஜாதா அவர்களை சமீபத்தில் 1971 ஜனவரியில் பார்த்து பேசினேன்.

6. இந்திய தேர்தல் முறை சரியானதுதானா?
பதில்: சரியானதுதான். பல நாட்டு தேர்தல்களில் நமது தேர்தல் கமிஷனின் ஆலோசனைகளை கேட்கிறார்களே. நமது மின்னணு ஓட்டளிக்கும் பொறி அமெரிக்காவில் உள்ளதை விட அதிக அனுகூலமானது. இப்போதைக்கு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் அகற்ற இது ஒன்றுதான் வழியாக இருந்து வந்திருக்கிறது.

7. ஜு.வி. - நக்கீரன், விகடன் - குமுதம், சன் டி.வி. - கருணாநிதி டி.வி, ஜெயலலிதா - கருணாநிதி, அத்வானி - சோனியா
பதில்: நக்கீரன் அதிகம் படிப்பதில்லையாதலால் சரியாக ஒப்பிட இயலாது. விகடன், குமுதம் இரண்டின் அட்டைகளையும் பிய்த்து எரிந்து விட்டால் வித்தியாசம் காண்பது கடினம். சன் டி.வி.யின் மிக வெளிறிய நகல் கலைஞர் டி.வி. திமுக ஆட்சியை இழந்தால் அது காலி. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஊழலில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஜெயலலிதாவின் ரிகார்ட் பிரகாசமாகவே உள்ளது. அதவானி தன் சொந்த முயற்சியால் அரசியலில் முன்னுக்கு வந்தவர். சோனியாவோ நேரு குடுமப்த்தின் மருமகள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே வந்தவர்.

8. ஏண்டா பதிவெழுத வந்தோம் என்று யோசித்தது உண்டா>?
பதில்: கிடையவே கிடையாது. நான் பல இடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல எனது தமிழ் சொல்லாட்சியை மேம்படுத்தவே இங்கு வந்தேன். அதன் மூலம் எனது ஆங்கிலம் < > தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகளில் எனக்கு அபார வெற்றி. ஏண்டா பதிவு எழுத வந்தேன் என நான் யோசிப்பதை விடுங்கள். டோண்டு ராகவன் ஏண்டா பதிவு எழுத வந்தான், யார் அவனுக்கு இன்ஸ்பிரேஷன் என யோசித்து கோபப்படுபவர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன். இது விஷயமாக அவர்கள் இந்தப் பதிவரிடம் கோபப்படுகிறார்கள் என அப்பதிவரே என்னிடம் கூறியுள்ளார். :)))))))

9. ஜாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு தினமும் 'பார்ப்பான், பாப்பாத்தி' என்று எதிர்ப்பவர் எல்லோரையும் திட்டும் கருணாநிதியின் செயல்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: “நான் சூத்திரன், அதனால்தான் இப்படி எல்லோரும் என்னை சாடுகின்றனர்” என்று அழுவாச்சியாக பேசும் இவரின் செயல்பாடு குறித்து பேச என்ன இருக்கிறது?

10. யாராவது தவறை சுட்டிக் காட்டினால் 'ஜெயலலிதா ஆட்சியில் நீ இந்தக் கேள்வியை கேட்டாயா?' என்று எதிர் கேள்வி கேட்கிறாரே? இவ்வாறு கூறத்தான் இவரை நாற்காலியில் உட்கார வைத்தார்களா?
பதில்: “அது மட்டும்தான் கூறுவாரா? நிருபரை நீதாண்டா கொலைகாரன் என்றுகூடத்தான் கூறுவார். மேலும் இவரை யார் உட்கார வைத்தது? இது மைனாரிட்டி அரசு என்பதை மறந்து விடாதீர்கள். பல்வேறு காகுலேஷன்களில் கூட்டணிக் கட்சியினர் இவரை உட்கார வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

அனானி (24.11.2008 மாலை 04.19-க்கு கேட்டவர்):
1. கேள்விகளை எடிட் செய்வது ஏன்? ஆட்டோ வரும் என்ற பயமா? ('அனானியாக' கேள்வி கேட்பதற்கு அதான் காரணம்!)
பதில்: வேறொரு இடத்தில் நான் கூறியதையே இங்கும் கூறுவேன்.
கருணாநிதி/ஜயலலிதா/பெரியார்/சோ/ராஜாஜி ஆகியோரைப் பற்றி பலர் பலவிதமான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிப்படையாகவும் கூறுகின்றனர். பிரச்சினை இல்லை. ஆனால் சில சமயங்களில் வரம்பு மீறுகின்றனர். உதாரணத்துக்கு கருணாநிதி அவர்களது பெயரை சிதைத்து எழுதி அசிங்கமான பொருள் வருவதுபோல எழுதுகின்றனர். அவரது நடத்தையை கொச்சையாக எழுதி விமரிசனம் செய்கின்றனர்.
ஆனால் அவ்வாறு செய்யும்போது பிளாக்கராக வராமல் (அப்படியே வந்தாலும் ப்ரொஃபைல் பகிர்ந்து கொள்ளாத பிளாக்கர்கர்களாக) வருகின்றனர். உதாரணத்துக்கு கலைஞர் அவர்களது சபையறிந்து பேசுதல் பற்றிய பதிவையே எடுத்து கொள்ளலாம். அனானி ஒருவர் அவரை எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருந்தார். ஐயா அனானி உமக்கு அவர் மேல் விமரிசனம் இருக்கலாம், ஆனால் அதற்காக இப்படியா? அதுவும் அனானியாக வந்து அசிங்கம் செய்கிறீர்? டோண்டு என்ன காதில் பூவைத்து கொண்டுள்ளானா? இந்த அழகில் அவரது பின்னூட்டத்தை சென்சார் செய்து விட்டேனாம். அதற்க்காக 'தார்மீக' கோபம் வேறு படுகிறார்”.
இங்கு ஒரே ஆறுதல் ஏடாகூடமாக கேள்வி கேட்ட அனானி தான் பயந்திருப்பதையும் ஒத்து கொள்கிறார்.
அனானிகளாக வருபவர்கள் எல்லோரையுமே நான் குறை சொல்லவில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயரில் கூறினால் வேறுவிதமாக திசை திருப்பல்கள் நடக்கலாம் என்று கூட அனானிகளாக வரும் வாய்ப்பு உண்டு.
ஆகவே பாயிண்ட் எதுவும் இல்லாத வசை சொற்களை கொண்ட கேள்விகளை மொத்தமாக நிராகரிப்பது, அதில் பாயிண்ட் ஏதேனும் இருந்தால் வசையை நீக்கி (எழுத்தே தொழிலான எனக்கு இது என்ன பிரும்மவித்தையா) கருத்தை குலைக்காது கேள்வியை மட்டும் வெளியிடுவது என்று செயல்படுகிறேன்.

2. ரத்னா கபே இட்லி பிடிக்குமா, சாம்பார் பிடிக்குமா?
பதில்: ஒரு mug நிறைய சாம்பாரை பிளேட்டில் விட்டு, அதில் இட்லிகள் தோய்ந்து அன்னப்பட்சிகள் போல மிதப்பது. இரண்டு ஸ்பூன்களை இரு கைகளிலும் பிடித்து கொண்டு இட்லியை விண்டு உண்பது அவசியம். அதை விட முக்கியம் அடிக்கடி வெறும் சாம்பாரை ஸ்பூன்களில் எடுத்து உண்பது. அப்படியே சாம்பார் தீர்ந்து விட்டாலும் செர்வர் உடனே இன்னும் சாம்பாரால் இட்லிகளை முழுக அடித்து விடுவார். இரண்டு இட்லிகள் போதாது. இன்னும் இரண்டு இட்லிகளாவது அதே பிளேட்டில் போடச் செய்வது எனது பழக்கம். சாம்பார் பாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் ஊற்றப்படும்.


AnonyL:
1. ஜாங்கிரி, ஜிலேபி ரெண்டுக்கு என்ன வித்தியாசம்? ரொம்பப் பேரு ரெண்டையும் ஒன்றாக குழப்பிக் கொள்கிறார்களே?
பதில்: ஜிலேபி என்பது வட இந்தியர்களிடம் பிரபலம். மொறுக் மொறுக்கென பற்களில் அறைபடும். தேன்குழல் பக்குவத்தில் இருப்பதை சர்க்கரை பாகில் தோய்த்து வைக்கிறார்கள். ஜாங்கிரி செய்யும் முறை சரியாகத் தெரியாவிட்டாலும், அதன் எண்ட் ரிசல்ட் மிருதுவான பண்டம், வாயில் போடும்போதே கரையும் தன்மையுடையது. பல் உடைந்த பெரிசுகளுக்கு பிடிக்கும்.

2. சமையலில் நீங்கள் எப்படி? உங்கள் கேள்வி பதில்களை தொகுத்து புத்தகமாக வெளிக் கொணரும் ஐடியா ஏதாவது இருக்கிறதா?
பதில்: நான் சமையல் செய்த அனுபவத்தை எழுதிய பதிவு ஒன்றிலிருந்து: “அதற்கு முன்னால் எனக்கு சமையல் கலையை சொல்லிக் கொடுத்த திரு. W.P.K. ஐயங்காருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் நாங்கள் குடியிருந்தப்போது அந்த வீட்டின் சொந்தக்காரர். சமீபத்தில் 1968-ல் எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.

சமையலைச் சொல்லிக் கொடுத்ததில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.

முதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.

இரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.

மூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயையும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.

அக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.

எல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.

இப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா”.

மற்றப்படி எனது கேள்வி பதில்களை புத்தகமாக போடும் அளவுக்கு அவை ஒரு விசேஷமும் கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.

3. ஐயர், ஐயங்கார் - ஆறு வித்தியாசம் ப்ளீஸ்.
பதில்:1. ஐயர் சாம்பல் (விபூதி) அய்யங்கார் மண் (திருமண்); 2. ஐயர் பரமசிவனை வழிபடுபவர், ஐயங்கார் திருமால் பக்தர்; 3. ஐயர் தன் பெயராக வைணவப் பெயர்களையும் வைத்து கொள்வார், ஐயங்கார் சைவப் பெயரை சாதாரணமாக வைத்து கொள்வதே இல்லை; 4. ஐயர் பூணூல் மெல்லியதாக இருக்கும், ஐயங்கார் பூணல் தடிமனாக இருக்கும்; 5. ஐயர் சங்கரரை பின்பற்றுபவர், ஐயங்கார் ராமானுஜரை; 6. பிராமணர்களில் ஐயர்கள் எண்ணிக்கை அதிகம்.


அனானி (26.11.2008, காலை 05.36-க்கு கேட்டவர்):
1. பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது பதிவர் வினவு தொடுக்கும் குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவரவருக்கு அவரவர் பார்வை கோணம். சமீபத்தில் 1978-ல் சாவித்திரி என்ற படம் வந்தது. அதில் குருக்கள் மனைவி சோரம் போவதாக காட்டியிருப்பார்கள். அதாவது பார்ப்பனரின் மனைவி. அதுவே கதாநாயகனின் தாய் விபசாரி என்றும் கதையில் வரும். ஆனால் அவன் சாதி சொல்ல மாட்டார்கள். இப்படம் பற்றிய வாசகர் கருத்துரையாடல் நடந்தபோது இதே விகடன் இம்மாதிரி படத்தில் ஒரு தரப்பின் சாதி மட்டும் கூறியதை இவ்வாறு ஞாயப்படுத்தியது, அதாவது ஒரு பார்ப்பனர் ஒரு பார்ப்பனரில்லாதவர் என்ற முறையில் இரு தரப்பையுமே கூறியிருக்கிறார்கள் என்று. கதையில் கோவில் குருக்கள் என சித்தரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவரையும் சாதி குறிப்பிடாது விட்டிருக்கலாம். அதை விடுங்கள், ஆனால் விகடனின் சப்பைக்கட்டு கேவலத்திலும் கேவலம்.
வினவுவின் பதிவுக்கு இப்போது வருவோம். அதில் வந்துள்ள ஒரு பின்னூட்டத்தைப் பாருங்கள்.
“இப்போது ‘பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு’ என்று
கூறுகிறார்கள். இனி எந்தப் பத்திரிகையாளர், எந்தப் பத்திரிகை, எந்த சாதி என்று பட்டியல் வரும் என்று நினைக்கிறேன். பார்பனர்கள் எதற்கு தேவர் சாதி விகடனில் அத்தனை பொறுப்புகளை பெற அனுமதித்தார்கள்.விகடன் அம்பேதக்ர் வாழ்க்கையை தொடராக வெளியிட்டதே அது ஏன்.அ.மார்க்ஸ் உட்பட இடதுசாரிகளை அடிக்கடி கருத்து கேட்கிறதே அது ஏன்.முன்பு ஒருமுறை மருதையனிடம் கட்டுரை கேட்டு வாங்கிப் போட்டதே அது ஏன். இதெல்லாம் பார்ப்பனர்-தேவர் கூட்டு சதியா?
‘வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா’. இதிலும் குறை கண்டுபிடிக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை வார்த்தை பிசகாமல் சொன்னால்தான் சரி என்று நினைக்கிறீர்கள். அல்லது குறைந்த பட்சம் ஒரு குறிப்பிட்ட சாதியை திட்டி ஏதாவது சொல்லவேண்டும் என்பது உங்கள் விருப்பம்.அது அவர்களுக்குத் தெரியவில்லை. ஊடகங்கள் உங்களிடம் பத்து நிமிடம் பேசினால் அதிலிருந்து சிலவற்றைத்தான் வெளியிடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?. நீங்கள் நூறு வாக்கியங்கள் சொன்னால் அச்சில் பத்து கூட முழுதாக வராது. இது கூடத் தெரியாதா? நல்லக்கண்ணு,அஜிதா போன்றவர்கள் வினவுகளிடம் சான்றிதழ் பெற்றுத்தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இல்லை”. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நக்கீரன் பாண்டியன்:
இவர்களுக்கிடையே நேற்றைய/இன்றைய /நாளைய உறவுகளில் இணக்கமான நல்லுணர்வு /இறுக்கமான சூழ்நிலை/முழு மோதல் காரணங்களை பட்டியலிடவும்.
1. தாத்தா -பேரன்கள்(DMK-FAMILY-BUSINESS)

பதில்: அதிகப் பணம் வந்தாலே எல்லா குடும்பங்களிலும் வரும் பிரச்சினைகள்தான் இங்கும் வந்துள்ளன. அவை தவிர்க்க முடியாதவை. பெண் கொடுத்து பெண்ணெடுத்து எல்லாம் செயல்படும் குடும்பமாக இருந்தாலும் அதைத் தவிர்க்க இயலாது.

2. அண்ணா-தம்பி(DMK-POLITICAL- HEIR)
பதில்: திமுகவே ஒரு குடும்பத்தில் அடங்கும் விபரீத நிலை வந்தபிறகு அக்கட்சியில் இருந்த பழைய தலைவர் தொண்டர் உறவை எதிர்ப்பார்ப்பது வீண் ஆசை.

3. தோழிகள்(ADMK)
பதில்: இதைத்தான் என்னால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. மன்னார்குடிகாரர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான சமன்பாடு என்ன என்பதை நான் அறிய இயலவில்லை.

4. ரஜினி-ரசிகர்கள்(FANS ASSOCIATION- entry in politics)
பதில்: விசிறிகள் பாவம். ரொம்பவே காத்திருந்து பார்த்து விட்டார்கள், ரஜனி கட்சி ஆரம்பிப்பார், தாங்கள் ஏதேனும் ஆதாயம் தேடலாம் என்று. தமிழகத்தின் சாபக்கேடு இங்குள்ளவர்களின் சினிமா மோகம்.

5. வலது-இடது பொது உடைமைக் கட்சி.(ALLAIANCE FOR NEXT ELECTION- sri lankan issue)
பதில்: கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் ரொம்பவுமே பாவம். அவர்களை விட்டு விடுங்கள்.

6. தமிழக காங்கிரஸ் தலைவர்கள்( TO FORM KAMARAJ RAJ IN TAMIL NADU)
பதில்: 1967-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் நிலை இப்படி காமெடியாகி விட்டது. அக்கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் 1971-ல் வெற்றி பெற்றிருக்கலாம்தான். ஆனால் என்ன செய்வது, இந்திரா அம்மையார் கட்சியை பிளந்து கருணாநிதியிடம் அடிமை ஒப்பந்தம் போட்டதுமே காங்கிரசின் கதி தமிழகத்தில் அதோகதியே.

7. வை.கோ-இலங்கைப் பிரச்சனை (விடுதலைப் போராளிகள்)
பதில்: Vaiko is just taken for granted by the LTTE. The Tamilnadu people now see him as joker. LTTE will like to concentrate on others to get their support. Vaiko is already in their bag.

8. பணவீக்கமும்-gdp வளர்ச்சியும் (இந்தியாவில்)
பதில்: பணவீக்கம் குறைகிறது என இன்று படித்தேன், அதாவது 9 சதவிகிதத்துக்கும் குறைவாக. ஜிடிபி-ஐ பொருத்தவரை இங்கு இவ்வாறு கூறுகிறார்கள். 21-07-2007 நிலவரத்தின்படி “India's GDP recently crossed the trillion-dollar mark for the first time and with this India has joined the elite club of 12 countries with a trillion dollar economy. Countries that have breached trillion-dollar GDP level in the past are he US, Japan, Germany, China, UK, France, Italy, Spain, Canada, Brazil and Russia”. மீதியை அப்பக்கத்துக்கு சென்று பார்த்து கொள்ளவும்.

9. பங்கு வணிகத் தரகர்களும் - முதலீட்டாளர்களும்.(ஹர்சத் மேத்தாக்கள்)
பதில்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு இருக்காது.

10. டோண்டு ராகவன் ஐயாவும்- எதிர்ப்பாளர்களும் (அரசியல், உலக நடப்பு, பொருளாதாரம், ஜாதி மதம் சார்ந்த கருத்துக்கள்)
பதில் (முரளி மனோஹர் தருகிறான்) அப்படியெல்லாம் பேசி இந்தப் பெரிசை தூக்கி விடாதீர்கள் என நான், முரளி மனோஹர், கேட்டு கொள்கிறேன்.

ரமணா:
அ. சந்தைப் பொருளாதார பிதாமகரான அமெரிக்கா வீட்டுக் கடன், கடன் அட்டை, முறையற்ற பங்கு வர்த்தகம் ஆகிய காரணிகளாலும் பேராசையாலும் பெரும் நஷ்டத்தில் முழி பிதுங்கும் பெரிய வங்கிகளை காப்பாற்றி கரை சேர்க்க மக்களின் வரிப் பணத்தை வாரி இறைக்கப்படுவது இந்தியாவில் தேசியமயமாக்கப் பட்ட வங்கி விசயம் போலா?
பதில்: இல்லை. இந்தியாவில் வங்கிகள் தேசீயமயம் இந்திரா காந்தி தனது அரசியல் ஆதாயத்துக்கு செய்தது. அமெரிக்காவில் நிலைமை இன்னமும் சீரியஸ். முட்டாள்தனமாக மக்கள் பணத்தை ரூட் விட்டவர்களுக்கு அரசு முட்டு கொடுக்கிறது.

ஆ) 700-800 பில்லியன் டாலர் பண உதவிக்கும் பிறகும் நிலமை சரியானதாய் தெரியவில்லையே? ஏன்?
பதில்: கோமணத்தால் மலத்தை அடக்கும் முயற்சியாகத்தான் இது எனக்கு படுகிறது.

இ)முறைகேடு செய்து நஷ்டம் ஏற்பட்டால் அரசு காப்பாற்றும் என்ற எண்ணம் வந்துவிடாதா?
பதில்: மிகவும் உண்மையான கவலை. நமக்கு புரிகிறது. அமெரிக்க முட்டாள்களுக்கு புரியவில்லையே.

ஈ)தனியார் நிறுவனங்களில் செலவீனக் கட்டுப்பாடுகள், சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, உற்பத்தி குறைப்பு என நடவடிக்கைகள் தொடங்கிய பிறகும் அரசின் செல்லக் குழந்தைகளாம் பொதுத் துறை நிறுவன பணியாளர்களுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு. தேவையா?
பதில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்தால் மற்றவருக்கும் கொடுக்கும் நிர்ப்பந்தம் தானே வருகிறது. அதற்கும் பொது நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கும் ஒரு தொடர்பும் இல்லையே.

உ) கச்சா எண்ணெய் விலை 147 லிருந்து 48 டாலருக்கு வந்த பிறகும் பெட்ரோல் விலை குறைப்பு பற்றி சாக்கு போக்கு சொல்லுவது? அடுக்குமா?
பதில்: இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரும் தருணம் இதை கொடுத்தால் சில ஓட்டுகள் அதிகம் கிடைக்காதா என்ற நப்பாசைதான் காரணம் என நினைக்கிறேன்.

ஊ) தொலை தொடர்பு அமைச்சர் சொல்வது போல் செல்பேசி கட்டணங்கள் 20-40 பைசா என குறையுமானால் நல்லது தானே? பின் ஏன் அலைவரிசை ஏல விற்பனைபற்றி விவாதம்?
பதில்: 2001-ல் நிர்ணயித்த விலைக்கு விற்ற புத்திசாலிகள் சைடில் காசு பார்க்காமல் இருந்திருப்பார்களா என்பதுதான் இங்கு கேள்வி. அதுவும் இத்துறையில் முன் அனுபவம் இல்லாது முதலில் வந்தவருக்கு தருவதென்பது என்ன சுண்டல் வினியோகமா? அரசு இந்த லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும். முதலில் வந்தவர்களா அல்லது ரகசியமாக முதலில் சொல்லப்பட்டு வந்தவர்களா என்பதையும் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் செல்பேசி கட்டணங்கள் குறைகிறதே என அல்ப சந்தோஷம் படுவது சரியல்ல.


சேதுராமன்:
1. After the Mumbai terrorists attack, resulting in many deaths including ATS cops, should Shivraj Patil continue in office?
பதில்: அப்படியெல்லாம் தட்டையாகக் கூறிவிட இயலாது. தீவிரவாதிகள் தாக்குதல் எங்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டுமென்றால் ஒரு அரசும் நிலைக்காது. ஆனால் ஒன்று, தாக்குதல் வந்தால் எப்படி அதை கையாள்கிறார்கள் என்பதைப் பார்த்து வேண்டுமானால் ஏதேனும் கூறலாம். அப்படியே தீவிரவாதிகளைப் பிடித்தாலும் அஃப்சலுக்கு சப்பை கட்டும் அறிவில்லாஜீவிகள் இங்கும் வந்து அவர்களுக்காக ஒப்பாரி வைத்தாலும் அதற்கும் கலங்காது இருக்கும் அரசே நமக்கு தேவை. அந்தவகையில் பார்த்தால் போக வேண்டியவை மத்திய அரசும் தமிழக அரசும். மகாராஷ்டிர அரசு என்ன செய்கிறதென்று பார்ப்போம்.

இது சம்பந்தமாக நான் என்றென்றும் அன்புடன் பாலாவின் இது பற்றிய பதிவில் போட்ட பின்னூட்டத்தை இங்கும் தருகிறேன்.
“நான் கூற நினைத்ததை இட்லிவடை கூறிவிட்டார். அதையே எனது பின்னூட்டமாக வைக்கிறேன்.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 அன்று நடந்த தீவீரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இன்று வரை ஒரு தாக்குதல் கூட அதே இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்த முடிவதில்லை. காரணம் என்ன? உறுதியான தலமை. உளவுத் துறையின் திறமை. அர்ப்பணிப்பு உணர்வு மிக்க அதிகாரிகள், தலைவர்கள். புஷ் மீது நாம் வேறு என்ன குறை வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் இன்று வரை அமெரிக்கா தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பித்ததன் காரணம் புஷ்ஷின் உறுதியான தலைமையும், துணிவான சட்டங்களுமேயாகும். அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்களை வாங்கித்தான் ஜெயிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அதே நிலமை இந்தியாவிலும் வர வேண்டும். அமைதியை விரும்பும் இந்திய தேசியத்தின் மீதும் சகோதரத்துவம் மீதும் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு முஸ்லீம்களும் இதை உணர்ந்து அரசின் கடுமையான சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஒரு உறுதியான தலைமை இன்று இந்தியாவில் நரேந்திர மோடியைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. ஒன்று நரேந்திர மோடியைப் பிரதமராக்க வேண்டும் அல்லது இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதை செய்து முடித்த பிறகு இந்தியாவுக்கு மீண்டும் ஜனநாயகம் திரும்பினால் போதுமானது. இப்பொழுது தேவை ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் இல்லாத உறுதியான துணிவான தலமை ஒன்று. அது மோடியிடமும் ராணுவத்திடமும் மட்டுமே உள்ளது. இரண்டு பேர்களில் ஒருவரிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கா விட்டால் இந்தியாவை முப்பது முக்கோடி தேவர்களாலும் கடவுள்களாலும் கூடக் காப்பாற்ற முடியாது. என்ன செய்யப் போகிறது இந்தியா? என்ன செய்யப் போகிறார்கள் இந்திய வாக்காளர்கள். இந்தியக் குடிமக்களின் உயிர் அவர்கள் கையில் உள்ள வாக்குச் சீட்டுக்களில் மட்டுமே உள்ளது அதை உணர்ந்து உரிய துணிவான திறமையான தலமையைத் தேர்ந்தெடுக்கா விட்டால் இப்படி அனு தினமும் அநாதையாகச் செத்து செத்து மடிய வேண்டியதுதான்.
இப்போது டோண்டு ராகவன் இன்னும் ஒன்று கூற ஆசைப்படுவான். இஸ்ரவேலர்களை நமது அதிகாரிகள் கலந்தாலோசிப்பது நலம். அவர்களைவிட அதிகத் திறமைசாலிகள் இந்த விஷயத்தில் வேறு யாரும் இல்லை”.


குப்புக்குட்டி
1. மும்பை சம்பவத்திற்கு பிறகாவது பொடா தேவை என்று ஒத்துக் கொள்வார்களா? இல்லை மனித உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது என்று கிரிமினல் சட்டங்களையே தூக்கி விடுவார்களா?
பதில்: அரசியல் விரோதங்களுக்காகவெல்லாம் அதை பயன்படுத்திய ஜெயலலிதா போன்றவர்களும் பொடா நீக்கப்பட்ட நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும். மற்றப்படி அதனால் எல்லாம் சட்டமே இருக்கக் கூடாது என்றால் எல்லா சட்டங்களையும் தூக்க வேண்டியிருக்கும்.

2. புல்லட் ப்ரூப் அணிந்த பிறக்கும் எப்படி ஏ.டி.எஸ் தலைவருக்கு குண்டு பாய்ந்தது?
பதில்: உடலில் எல்லா பாகங்களுக்கும் புல்லட் ப்ரூஃப் போட இயலுமா என்ன? மகாபாரதத்தில் ஒரு காட்சி. துரோணரின் கவசத்தை துரியன் போட்டு கொண்டு வர, அருச்சுனன் அதை அறிந்து துரியனின் நகக்கணுக்களிலெல்லாம் அம்பு செலுத்தி அவனை பீடித்தான் என வியாசர் எழுதியுள்ளார்.

3. இத்தனை அதிகாரிகள், கமேண்டோக்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள், இந்நிலையில் பிடிபட்டவர்களுக்கு மரண தண்டனை (நம்ம கோர்ட் இதை விசாரிச்சு, முடிச்சு பெரியமனது பண்ணி) கிடைத்தால், அதை நிறைவேற்றுவார்களா? இல்ல அப்சல் குருவுக்கு துணைக்கு வைப்பார்களா?
பதில்: சேதுராமன் அவர்களுக்கு நான் மேலே தந்த பதில்தான் இங்கும்.

4. அப்பாவிகளை இப்படி கொல்வதில் என்ன சாதிக்கிறார்கள் இந்த அறிவிலிகள்?
பதில்: யுத்தத்தில் அப்பாவிகளும் கொல்லப்படுவது துரதிர்ஷ்டவசமாகத்தான் என்றாலும், அது அனாதிகாலமாக நடக்கிறதே.

5. எத்தனை பேருடைய வாழ்க்கை ஒரு சில நிமிடத்தில் சூன்யமாகி விடுகிறது? பொடா வேண்டாம் என்றவர்கள் இப்போது எங்கே போய்விடார்கள்?
பதில்: சப்பைக்கட்டு பதிவுகளை தயார் செய்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

ரமணா said...

அரசின் சட்ட திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சாதுர்யமாய் பயன்படுத்தி பெரும் லாபம் அடைந்து பின்னர் வசமாய் மாட்டிக் கொண்ட பிறகும் ,வக்கீல்களின் வாதத் திறமையால் ,குற்றம் செய்ததற்கு தகுந்த ஆதாரம் இல்லை என விடுவிக்கப் பட்டவர்களில் முதல் 10பேர்களின் பட்டியலையும் அதில் முதல் பரிசை தட்டிச் செல்லும் நபரின் வழக்கு (case history and details) பற்றிய வரலாற்றையும்
விவரிக்கவும்.

Anonymous said...

27 % பிற்பட்டோருக்கான ஒதுக்கீடு சலுகை அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை துணிச்சலாய் செயல்படுத்திய
வி.பி.சிங்.

1.அரசியலில் பிரகாசிக்க முடியாதது ஏன்?
2.அவர் முற்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் என்பதாலா?
3.அவரது இந்த செயல்( மண்டல் புகழ்) அச்சமயத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கா அல்லது பிற்பட்டோரின்மீது உண்மையிலே பரிவுடனா?
4.பிற்பட்ட சமுகத் தலைவர்களில் கலைஞரைத் தவிர வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையே காரணம்?
5.காங்கிரசைவிட்டு விலக முக்கிய காரணம்?
6.காங்கிரஸிலே இருந்திருந்தால் நல்ல இருந்திருக்குமே என சிங் நினைத்திருப்பாரா?
7.மண்டல் நாயகரின் மறைவு சமுகநீதி காக்கும் முயற்சிக்கு பெரும் இழப்பாகுமா?
8.அவரது அரசியல் செயல் பாடு பற்றிய தங்களின்/முரளியின் கருத்து ஒன்றா?
9.அவரது பதவிக் காலத்தில் (2.12.1989 to 10.11.1990) பிற சாதனைகள்?
10.மண்டல் அறிக்கையை தவிர்த்திருந்தால் அவரது ஆட்சி பி.ஜே.பி ஆதரவுடன் தொடர்ந்திருக்குமா?

Anonymous said...

//நரேந்திர மோடியைப் பிரதமராக்க வேண்டும் அல்லது இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்து விட வேண்டும். அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு கொடுக்கிறார்களோ அதை செய்து முடித்த பிறகு இந்தியாவுக்கு மீண்டும் ஜனநாயகம் திரும்பினால் போதுமானது. //

என்ன சார் திராவிட தலைவர்களைப் போல ஒரு அந்தர் பல்டி அடிச்சிடீங்க ?
நேத்து தான் சொன்னீங்க சர்வாதிகாரி வந்தா பிளாக் எழுத முடியாததுன்னு . ஆனா இன்னிக்கு இராணுவம் வந்தா கூட நல்லதுன்றேங்க. நீங்க நேற்று கொடுத்த ரிப்ளை
பின்நவீனம்னு சொல்லி மாரடிக்கிறவங்களுக்கு நான் ரொம்பா நல்லவேன்னு சொல்றதுக்கா ? ஒவ்வொரு தனிப்பட்ட இந்தியன் கிட்டயும் ஒழுக்க குறைவு இருக்கு அது தான் அரசியலில் பிரதிபலிக்கிறது.(மீண்டும் சோவின் கருத்து) அதனால கொஞ்ச நாளைக்கு உரிமைகளை இழந்தாலும் நல்லது நடக்கணும்னா சர்வாதிகாரம் ரைட் தான் என்கிறார் என் நண்பர்.
ஆனால் என்னை பொறுத்தவரை ஜனநாயம் வித் லிமிட்டடு ரைட்ஸ் தான் சரி . மோடி மாதிரி ஆட்களெல்லாம் அதிகம் இல்லையே ! அதனால நம்ம நீதிஷ் குமார் மாதிரி ஆட்களாவது நாட்டுக்கு நிறைய கிடைத்தல் நல்லது.
குப்புக் குட்டி

Anonymous said...

நீங்க எழுத்துலகில் நீண்ட நெடிய அனுபவம் உள்ளவர். ஆனா நீங்க தருகிற பதில்கள் ரொம்ப நீண்டதா போய்கிட்டே இருக்கு சார். சின்னதா சுருக்கமா இருந்தால்தானே நறுக் என்று இருக்கும். தேவைப் படும் இடங்களுக்கு தனிப் பதிவு தந்துவிடல்லாம் அல்லவா. சரியான கோணத்தில் இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளவும். -குப்புக் குட்டி

dondu(#11168674346665545885) said...

@குப்புக்குட்டி
முரண்பாடு போல தோற்றமளிக்கிறது தவிர்க்க முடியாதது. அந்தந்த சமயத்துக்கு ஏற்ப அங்கலாய்ப்புகள் என வைத்து கொள்ள வேண்டியதுதான்.

எல்லா பதில்களுமே நீளமானது அல்ல. தேவைப்படும் இடங்களில் மட்டுமே. அவ்வப்போது சுட்டிகளாகவும் தந்து விடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வெற்றியை வைத்து மோடி நல்லவர், திறமைசாலி என்றால், நம்ம ஜெயலலிதா , கருணாநிதி ???., எப்பொழுதும் ஒரு தலை பட்சமாகவே பார்ப்பது சரியா? மனித நேயமட்ட்ற மிருகத்துக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் ?? .

Arun Kumar said...

இந்த வார கேள்வி பதில் பதிவுகள் மிக அருமை. மிக நாளாக தேடி கொண்டு இருந்த தென்காசி பட்டணத்தின் சூப்பர் காமேடி காட்சியை இணைத்தற்க்கு நிஷா புயல் ஸ்பெஷல் நன்றி :)

வால்பையன் said...

சமையல் குறிப்பு அருமை,
எனக்கும் பயனுள்ளதாக இருந்தது

Anonymous said...

பாம்பாயில் குண்டுகள் வெடிக்கக் "கோவிந்தா-கோவிந்தா"க் கூப்பாடுகள் வலுவாகக் கேட்கின்றன.

இலங்கையில் இத்தகையக் குண்டுகளை இலங்கை அரசே தமிழர்கள்மீது கொட்டும்போது அது,தேச ஒருமைப்பாட்டுக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான குண்டுகளெனச் சொல்லும் அக்கரகாரம் இங்கே நொந்து நூலாகிறது.

முற்பல் செய்தால் பிற்பகல் விளையுமென்றபடி...

மும்பையில் புகுந்த குண்டுதாரிகளோ,
இந்தியத் தேசத்தின் சமகால அரசியலுக்குக்கான அறுவடையாக
இந்திய மக்களுக்குக் கிடைத்தவர்கள்.

அவர்களின் வரவுடனேயே இந்த அமைதிப் பூங்கா குருதியாற்றில் மூழ்க,அதன் உரிமையாளர்கள் திருவாளர் டோண்டு மாமாவின் ஆலோசனைப்படி காரியமாற்றியதன் விளைவாகப் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட"அப்பாவி மக்களை"இஸ்ரேலியக் கமாண்டோப்படையின் உதவியுடன் பாரதம் விடுவித்துள்ளது.

இஸ்ரவேலர்கள் மிகவுந் திறமையோடு இந்திய இராணுவத்தைப் பின்வாங்க வைத்துத் தமது தலைமையில் மும்பாய் நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார்கள். இஸ்ரவேலர்களின் இந்த வெற்றிகரமான தியாகத்துக்கு நன்றியைத் தெரிவிக்க, திரு.டோண்டு மாமா (இஸ்ரேவேலர்களின் பாதங்களைத் தொட்டு வணங்க) தனது குடும்பத்தோடு மும்பாய் நோக்கி நாளை விரைகிறார். கூடவே,துக்ளக் சோவும் டோண்டு மாமாவோடு பயணிக்க முடிவாகியுள்ளது.

மும்பாயில் திரு மோடியைச் சந்திப்பதும் இவர்களது பயணத்தில் முக்கியமான திட்டமாக இருப்பதால்,வரும் தமிழகத்தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைத் தமிழகத்தின் முதல்வர் ஆக்கியபடி,டெல்லியில் மோடி தலைமையில் ஆட்சியைக் கையளிக்க இத்தாலிய அரசுக்கு டோண்டு-சோ கமிஷன் ஆலோசனை கூறுகிறதாக இன்று ஜெயா டி.வி. தெரிவித்திருக்கிறது! இதையிட்டு அக்கரகாரத்தில் பெரும் ஆரவாரம் பொங்க,பட்சிகள்-போண்டாக்கள் பொரித்து பில்டர்க் காப்பியோடு பரிமாறப்பட்டதாகத் தோழர் இட்லிவடை தெரிவித்துள்ளார்.

வரும் புதிய ஆண்டில் இந்திய இராணுவத்துக்கான இராணுவப் பயிற்சிகளை இஸ்ரவேலர்களின் இராணுவத் தளபதிகள் வழங்கவுள்ளார்கள்.

இலங்கை அரசுக்கும்-இராணுவத்துக்கும் இத்தகைய தளபதிகளின்மூலம் பயிற்சியை வழங்க இந்தியா இலங்கைக்கு ஆலோசனை செய்துள்ளதாக இன்று ஆகாசவாணீ அறிவித்துள்ளது.

எது,எப்படியாயினும்,திரு டோண்டு ராகவனின் காலத்துக்கேற்ற ஆலோசனையைக் குறித்து இந்திய நாடாளுமன்றதில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடவே, திரு.மோடியவர்களை இனிவரும் தேர்தலில் பிரதமராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பாரத மக்களுக்கு இருப்பதாக தி இந்து ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருப்பதை நாம் கவனப்படுத்தித் திரு.டோண்டு அவர்களைப் பாராட்டுகிறோம்

Anonymous said...

எனது கேள்விகள்


1) உங்களுக்கு வரும் பின்னூட்டத்தில் கேள்விக் குறி இருந்தாலே அதை பிடித்துப் போட்டு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கையை ஆரம்பித்து விடுகிறீகளாமே?

2) பதிவெழுத வராவிட்டால் என்ன செய்து பொழுதைப் போக்கியிருப்பீர்கள்?

3) ஏன் சொல்லி வைத்ததைப் போல் எல்லா பிராமணர்களும் இலங்கைப் பிரச்சினையில் புலி எதிர்ப்பு நிலை எடுக்கிறீர்கள்?

4) இடஒதுக்கீடு=திறமையின்மைக்கு முன்னுரிமை என்கிற உங்கள் குரூப்பின் வாதம் புரூணோ அவர்களின் சில பதிவுகளின் மூலம் அடிபட்டுப் போய் உள்ளதே - இப்போ என்ன சொல்கிறீர்கள்?

5) இப்படி திராபையான போரடிக்கும் நடையில் பதிவெழுதி வந்தும் எப்படி இத்தனை இத்தனை வருடம் தாக்குப் பிடிக்க முடிந்தது? மூர்த்தி ஒருவேளை உங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் கி.அ.அ அனானி போல் நீங்களும் சீந்துவாரின்றி இருந்திருப்பீர்கள் தானே?

- புரளி மனோகர்

Anonymous said...

//இடஒதுக்கீடு=திறமையின்மைக்கு முன்னுரிமை என்கிற உங்கள் குரூப்பின் வாதம் புரூணோ அவர்களின் சில பதிவுகளின் மூலம் அடிபட்டுப் போய் உள்ளதே - இப்போ என்ன சொல்கிறீர்கள்?//

தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை 100 % வெற்றிபெற்றது போல் மற்ற மாநிலங்களில் வெற்றி பெறாததற்கு உண்மையான காரணம் ?இட ஒதுக்கீட்டு சலுகையினை ஒரு குறிப்பிட்ட பகுதியினர் தொடர்ந்து மொத்தமாய் அனுபவித்து வருகிறார்கள் என்ற குற்றச் சாட்டு பற்றி?
ஆண்டு வருமானம் 4.5 லட்சம் என்ற வருமான இலக்கு தின வருமானம் 100 கூட இல்லாத பிற்படுத்த பட்ட மக்களின் குடும்பங்களை பாதிக்காதா?
டாக்டர் புருனோ மாதிரி மருத்துவர்களின் பிள்ளைகள்கூட இந்த சலுகையை ஏழை எளியோருக்கு விட்டுத்தர மனமில்லையே?
பொது உடைமை பேசும் அரசியல் வாதிகளிடம் கூட இதில் நியாயம் இல்லையே?
இன்னல் படும் பிற்பட்டோரை உண்மையிலே முன்னேற்ற வேண்டு மென்றால்
குறைந்த வருமானம் உள்ளோருக்கு உள் ஒதுக்கீடு செய்து ,பின்னர் நிரப்பமுடியாவிட்டல்
உள்ள காலியிடங்களை வசதி படைதோருக்கு( புருனோ போன்ற முன்னேறிய பாக்யவான்கள்) அளிப்பதே உண்மையான சமுகநீதி ஆகாதா?
தலித் தலைவர்கள்கூட இதில் பிற்பட்ட சமுகத் தலைவர்களை பின்பற்றுவது சரியா?
குடும்பத்தில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறைகளுக்கு மட்டும் சலுகை அளிக்கும் சுழற்சிமுறை நன்மைபயக்குமா வறியோருக்கு?
தங்களை போன்ற பெரியவர்கள் இந்த நற்பணியை தொடங்கலாமே?

Anonymous said...

பதில்: நக்கீரன் அதிகம் படிப்பதில்லையாதலால் சரியாக ஒப்பிட இயலாது. விகடன், குமுதம் இரண்டின் அட்டைகளையும் பிய்த்து எரிந்து விட்டால் வித்தியாசம் காண்பது கடினம். சன் டி.வி.யின் மிக வெளிறிய நகல் கலைஞர் டி.வி. திமுக ஆட்சியை இழந்தால் அது காலி. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஊழலில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றாலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஜெயலலிதாவின் ரிகார்ட் பிரகாசமாகவே உள்ளது. அதவானி தன் சொந்த முயற்சியால் அரசியலில் முன்னுக்கு வந்தவர். சோனியாவோ நேரு குடுமப்த்தின் மருமகள் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே வந்தவர்.
///

சோனியா நேரு குடும்பத்தின் மருமகள் என்ற ஒரே காரணத்தால் வந்தவர் ,

ஜெயலலிதா ?????

எம்.ஜி.ஆர் கூட ஆடியவர் என்பதைத் தவிர என்ன தகுதி உண்டு????

அதை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள்????

புரிகிறதா உங்கள் பார்வையில் உள்ள கோளாறு????

dondu(#11168674346665545885) said...

//எம்.ஜி.ஆர் கூட ஆடியவர் என்பதைத் தவிர என்ன தகுதி உண்டு????//
இதில் மறைக்க என்ன இருக்கிறது? எம்ஜிஆரை பொருத்தவரை அவர் இறந்ததும் ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே அவரது அரசியல் வாரிசாக போட்டி போட்டனர். அதனால் தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது. அதன் சார்பாக சட்டசபைக்கு வந்தவர்களில் ஜெ பிரிவினர்தான் அதிகம். ஜானகி சார்பாக வெறுமனே பழைய சபாநாயகர் பாண்டியன் மட்டுமே வந்ததாக ஞாபகம். பிறகு ஜானகியால் அரசியலில் தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.

ஆக, ஜெயலலிதா இந்த விஷயத்தில் சோனியாவை விட அதிகம் தகுதி வாய்ய்ந்தவர்தான். இப்போது கூட ஜெயலலிதாவின் வார்த்தைக்கு மீறி அதிமுகாவில் யாரும் பேசுவதில்லை. சோனியாவுக்கு முதலில் இருந்தே போட்டி ஏதும் இல்லை, அதற்கு காரணம் அவர் ராஜீவின் விதவை என்பதால் மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது