4/01/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 41, 42

பகுதி - 41 (30.03.2009):
கிருபாவிடம் பிரியா தனது தந்தை சொல்லும் சுதர்சன மந்திரத்தின் மகிமை பற்றி பேசுகிறாள். அவர் தீர்ப்பு சொல்லும் சமயம் மனம் சஞ்சலத்துடன் இருக்கலாகாது. ஆகவே மனத்தெளிவை பெறவே அவர் அவ்வாறு செய்கிறார். பிறகு நல்ல தீர்ப்பு கூறும் வலிமை பெறுகிறார். மேலும் அவள் கிருபாவிடம் அவன் கணினியில் வைரஸ் புகுந்தால் என்ன செய்வான் எனக் கேட்க, தான் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உபயோகிப்பதாகக் கூற, அதே போலத்தான் மனதுக்கு தேவையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருளே சுதர்சன மந்திரம் எனக் கூறுகிறாள். மேலும் டிஸ்கஷன் நடக்கிறது. இதைத் தங்களாத்தில் நடத்திக் கொடுக்க சாம்பு சாஸ்திரிகளை விட்டால் தகுந்த நபர் கிடைக்க மாட்டார் எனவும், அவரையே ஏற்பாடு செய்யுமாறும் அவள் வலியுறுத்துகிறாள். கிருபாவும் ஒத்துக் கொண்டு அலுவலகம் புறப்பட, எப்படியோ தனது மைத்துனன் சந்துரு காலேஜ் ஃபீஸ் கட்ட ஒரு வழி பிறந்தது என அவள் திருப்தியடைகிறாள்.

நாதன் வீட்டில் சமையற்கார மாமியிடம் அவள் கணவர் அவளிடமிருந்து பெற்றுக் கொண்ட தங்க வளையல்களைத் திருப்பித்தர, அவற்றை திரும்ப வைக்கும்போது நாதனிடம் கையும் களவுமாக பிடிபடுகிறாள். சமயோசிதமாகப் பேசி வசுமதி அவளைக் காப்பாற்ற, இந்தக் கருணையான செயலுக்கு தான் அருகதை இல்லை என சமையற்கார மாமி மனம் கூசுகிறாள். மாமியிடம் சற்றே கடுமையாகவும், கூடவே கனிவாகவும் பேசி வசுமதி அவரைத் தேற்றுகிறாள்.

சோவின் நண்பர் இம்மாதிரி திருட்டை வசுமதி மறைக்கலாமா என கேட்க, சோ அதற்கு பதில் அளிக்கிறார். அதாகப்பட்டது, மன்னித்தல் என்பது பெரிய விஷயம், ஆனால் சரியான முறையில் செய்தால் சங்கடங்களைத் தவிர்க்கும் எனக்கூறி, மகாபாரதத்திலிருந்து உதாரணம் தருகிறார். உதவி நாடி துரோணர் துருபத மகாராஜனிடம் அவன் தன்னுடன் குருகுலத்தில் படித்தவன் என்னும் ஹோதாவில் அவனிடம் உதவி கேட்டு போகிறார். அவனோ இவரை அவமரியாதை செய்த்து துரத்தி விடுகிறான். அவர் தன் அவமானத்துக்கு பழிவாங்க அருச்சுனனை தனக்கு குருதட்சணையாக அவன் மீது ஏவி விடுகிறார். அவனும் துருபதனை கைது செய்து வருகிறான். தன் முன்னால் தலைகுனிந்து நின்ற துருபதனை துரோணர் தன் பங்குக்கு அவமானம் செய்கிறார். அதை மனதில் வைத்து அவன் பின்னால் யாகம் ஒன்று செய்கிறான். அருச்சுனனை மணக்கும் நிலையில் உள்ள ஒரு பெண்ணையும் (துரோபதை) துரோணரைக் கொல்லக்கூடியவனாக ஒரு மகனையும் (திருட்டினத்துய்மன்) பெறுகிறான். பிற்காலத்தில் யுத்தத்தில் அசுவத்தாமன் இறந்தான், ஆனால் அது ஒரு யானை என்றெல்லாம் கூறப்பட்டு துரோணர் யுத்தம் செய்வதை கைவிட்டு தேர்த்தட்டில் அமர்ந்திருக்க அவர் தலையை திருட்டினத்துய்மன் கொய்கிறான். அதற்கு பழி வாங்க அசுவத்தாமன் யுத்தத்தின் கடைசி தினம் முடிந்த இரவில் பாண்டவர் பாசறையில் போய் எல்லோரையும் கொல்லும்போது முதலில் பலியாவது திருட்டினத்துய்மனே. ஆக, இந்தப் பழிவாங்கல் ஒரு முடிவில்லா சங்கிலி போல செல்கிறது. அதை வசுமதி இந்த சீரியலில் முதலிலேயே உடைக்கிறாள் என சோ எடுத்து காட்டுகிறார்.

சாம்பு வீட்டில் சுதர்சன் ஹோமத்துக்கு 5000 போதும் என சாம்பு சாஸ்திரிகள் தெரிவிக்க கிருபாவோ 7000 தருவதாகக் கூற அவர் அதை மறுத்துவிடுகிறார். சரி என ஒத்து கொண்டு கிருபா அட்வான்ஸ் தருகிறான். பிறகு தன் அன்னையிடம் சென்று அவர் எவ்வளவு மறுத்தும் கேளாது அவர் கையில் 2000-த்தைத் திணிக்கிறான்.

நாதன் வீட்டிலோ சமையற்கார மாமி தான் மன்னிக்கப்பட்டாலும் குற்றவுணர்ச்சியை தாங்க முடியாது, நாதன் அவர்களுக்கு ஒரு குறிப்பு எழுதி, தன் குற்றத்தை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு, வீட்டைவிட்டு விலகுகிறாள். நாதன் விஷயம் அறிந்து பல வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறார். சமையற்கார மாமியை எப்படியாவது தேட வேண்டும் என வசுமதி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறாள்.

கிருபா வீட்டில் அவன் பிரியாவிடம் தான் அதிகப்பணம் தந்தது பற்றி தெரிவிக்க, அவள் மகிழ்கிறாள். ஆனால் அவர்கள் பேசுவதை அப்பக்கமாக வரும் சாம்பு சாஸ்திரி கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

பகுதி - 42 (31.03.2009):
சாம்பு சாஸ்திரி தன் மனைவியிடம் இம்மாதிரி கிருபாவிடம் அதிகப் பணம் பெற்று கொண்டதை கண்டிக்கிறார். அவர் மனைவியும் குடும்ப கஷ்டங்களை எல்லாம் சொல்லி வாதிடுகிறார். ஆனாலும் அவர் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். இம்மாதிரி எல்லாம் சமரசம் செய்து கொண்டால் அதற்கு முடிவே கிடையாது. ஏற்கனவேயே வைதிக விஷயங்களில் அக்கறை குறைந்து கொண்டு வருகிறது. ஏனோதானோ என்ற ரீதியில் அவை நடைபெறுகின்றன. கிருஹஸ்தர்கள் நேரமில்லை, இண்டரஸ்ட் இல்லை என்ற காரணங்களெல்லாம் சொல்லி அவற்றை சுருக்கமாக செய்ய சொல்லும் அதே நேரத்தில் பல வைதிகர்களும் சொல்ல வேண்டிய மந்திரங்களை சரியாகச் சொல்லாது முழுங்கி விடுகின்றனர். அதற்கெல்லாம் தன்னால் துணைபோகவியலாது என அவர் திட்டவட்டமாக கூறுகிறார். அதிகப் பணத்தை கிருபாவிடமே கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதே சமயம் இதில் தனது மருமகளின் நல்லெண்ணம் மிக வெள்ளிடைமலையாகத் தெரிகிறது என்றும், அந்தக் குழந்தை நலத்துடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று இருக்க வேண்டும் என அவர் மனப்பூர்வமாக அசீர்வதிக்கிறார்.

ஏன் இந்த சாம்பு இப்படி இருக்கிறார் என அலுத்துக் கொள்ளும் நண்பரிடம் சோ அவர் அப்படித்தான் என விளக்குகிறார். இங்கும் அவருக்கு விதுரநீதி துணைக்கு வருகிறது. பெண்கள், அரசன், பாம்பு, மிகப்படித்தவர்கள், பணக்காரர்கள் ஆகியோர் என்ன நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் மனம் மாறுவார்கள் என்றும் ஆகவே நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதன்படியே சாம்பு சாஸ்திரிகள் நடக்கிறார் என்றும், எப்போதுமே சமரசத்துக்கு அதனால்தான் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் சோ கூறுகிறார்.

நாதன் வீட்டில் சமையற்கார மாமி திரும்ப வருகிறார். வசுமதி தான் இல்லாமல் சமைக்க கஷ்டப்படுவார் என்று தான் எண்ணியபடியால் திரும்ப வந்ததாகக் கூறுகிறார். இம்முறை நாதன் அந்த வளையல்களை அவருக்கே தரும்படி வசுமதியிடம் கூற, அவளும் மனமுவந்து அவற்றை மாமிக்கு அளிக்கிறாள். நன்றி உணர்ச்சியால் மாமி தத்தளிக்க, அவரை நாதன் வசுமதி என இருவருமே தேற்றுகின்றனர். மாமி அந்த வளையல்களைத் தன் கணவரிடமே திரும்பத் தந்து அவர் பெண்ணுக்கு திருமணப்பரிசு எனக்கூற அவரும் நன்றி உணர்ச்சியில் பேச்சின்றி போகிறார்.

நாதன் வீட்டில் பூணல் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. உடையாளூர் விசாலம், வசுமதி, சமையற்கார மாமி ஆகியோர் போட்டி போட்டு கொண்டு பட்ஜெட் போடுகின்றனர். நாதனும் உற்சாகமாக எல்லா செலவுகளுக்கும் சாங்ஷன் தருகிறார்.

சோவின் நண்பர் பூணல் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாமா எனக் கேட்கிறார். கூடாதுதான் என சோ ஒத்து கொள்கிறார். இக்கல்யாணத்தில் வைதீகக் காரியங்கள்தான் முக்கியம். ஆனால் பல தருணங்களில் மற்ற விஷயங்களில் தாராளமாக இருப்பவர்கள் வைதீகர்களுக்கு கொடுக்கும் தட்சணையில் மட்டும் அநியாயத்துக்கு சிக்கனம் பார்க்கிறார்கள் எனக் கூறுகிறார். சொல்லப்போனால் கல்யாணமே வைதீகக் காரியம்தான் எனவும், ஆகவே அதிகப் படாடோபம் கூடாது என்றும் பரமாச்சாரியாளே கூறியதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இங்கு டோண்டு ராகவன் தரப்பில் சில வார்த்தைகள். எங்கே பிராமணன் புத்தகத்திலிருந்து பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. எல்லா மாறுதல்களும் இதுவரை சீரியலுக்கு அதிக மேன்மையையே அளித்துள்ளன. முக்கிய மாற்றமாக இந்த இரு பகுதிகளிலும் வரும் மன்னிப்பு கான்சப்ட் அருமையான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஆர்டிஸ்டுகளும் தத்தம் பாத்திரம் உணர்ந்து நன்றாகவே செய்துள்ளனர். அதே சமயம் அதீத அளவில் ஃபிலிம் காட்டுவது என்பது அறவே இல்லை என்பதே மனதுக்கு நிறைவாக உள்ளது. ஒரு மெகா சீரியல் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு சோ அவர்கள் நல்ல வழிகாட்டியுள்ளார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Anonymous said...

what is your view on this ?
http://www.livemint.com/2009/04/01011609/BoP-data-for-Q3-sounds-a-new-w.html?h=A1

Can you summarise in tamil ?

thanks
Kumar

dondu(#11168674346665545885) said...

@அனானி
படித்தேன். தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. மேலும் பல முறை படிக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sethu Raman said...

கேள்விகள்

1. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை
நல்லது தான் - வருண் மாதிரி வரும்போதே சூறாவளியாக
வந்து தான் கெட்டதுமல்லாமல், கட்சிக்கும் கெட்ட பெயர்
சேர்க்க வேண்டுமா?

2. கிழங்களுக்கெல்லாம் இன்னம் அரசியல் ஆசை போகவில்லை
போலிருக்கிறதே? ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஷெகாவத், இன்னமும் போட்டியிட ஆசைப் படுகிறார்களே - இது தேவைதானா?
இன்னொன்று நேரு குடும்பத்தினருக்கு தாசானுதாசனாய் என் வாழ் நாள் பூராவும் உழைத்தேனே என்று புலம்புகிறாரே?

3. ஐக்கிய முன்னணிக்குள்ளேயே புரசல் வந்திருக்கிறதே -
ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டி போடுவாரா?
இவர் பிரதமராக வருவது நல்லதா?

4. தமிழ் நாட்டிலும், கூட்டணிகள் இன்னமும் பேரம் பேசுவதிலேயே இருக்கின்றனரே - விட்டுக் டுக்கும் மனப்பான்மையே இல்லை போலிருக்கிறதே?

5. சஞ்சய் தத் போட்டியிடக்கூடாதென்று, உச்ச நீதி
மன்றம் தீர்ப்பளித்தது உங்கள் கருத்து?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது