2/09/2006

கைப்புள்ள கேட்ட கேள்விக்கு பதிலை உள்ளடக்கி

கைப்புள்ள அவர்கள் தன்னுடைய இப்பதிவில் ஒரு கேள்வி வைத்துள்ளார். அதாவது ராமு என்னும் மாணவன் கிருஷ்ணாவதாரக் கதையைக் கூறிய வகுப்பாசிரியரிடம் ""சார்! எட்டாவது குழந்தை தான் தன்னை கொல்ல போகுதுன்னு தெரிஞ்ச கம்சன் தேவகியையும்,வசுதேவரையும் என் சார் ஒரே ஜெயிலில வச்சான்?" என்று கேட்டதாக.

இந்த விஷயம் பற்றி நானும் ராமு வயசில் இருக்கும்போதே யோசித்து, பலரைக் கேட்டு பலரிடம் உதையும் வாங்கியிருக்கிறேன். அது பற்றிப் பிறகு.

இப்போது சீரியசாகப் பேசுவோமா? இந்த இடத்தில் திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். உயிரினங்களின் முக்கிய நோக்கம் இனப்பெருக்கமே. அதுவும் பகுத்தறிவு உள்ள மானிட இனத்திற்கு அந்த நோக்கம் சிறுவயதிலிருந்தே நினைவில் புகுத்தப்படுகிறது. ஆகவேதான் எல்லா மதங்களிலும் இது முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கம்சனுடைய அருமைத் தங்கை தேவகி. அவளையும் வசுதேவரையும் ரதத்தில் வைத்து கம்சனே ரத சாரதியாக வர ஒரு அசரீரி ராபணா என்று தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றி அவனிடம் போட்டுக் கொடுக்க, கதை ஆரம்பிக்கிறது.

முதலில் தேவகியைக் கொல்லத் துணிந்த கம்சனை அவனுடையத் தோழனும் தங்கையின் கணவனுமான வசுதேவனின் சொல்லைக் கேட்டு அவளைச் சிறையில் அடைக்கிறான் வசுதேவரையும் சேர்த்து. ஏன் சேர்த்து அடைத்தான் என்றுதானே கேள்வி?

கம்சன் இந்தத் தருணத்தில் மிகக் குழப்பத்தில் இருக்கிறான். அதுவரை சாதாரண ஆசாபாசங்கள் உள்ள ஷத்திரியனாக இருந்தவன் மனதில் அதுவரை உறங்கிக் கிடந்த அசுரத்தன்மை விழித்தெழுகிறது. ஆகவேதான் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் அவன் மனதில் மாறி மாறி வருகின்றன. சிறையில் அடைப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அருமைத் தங்கையைத் தனியாக அடைத்து வைக்கவும் மனதில்லை. ஏனெனில் தங்கை கன்னி கழிய வேண்டும். அக்கடமையை நிறைவேற்றாது தடுப்பவருக்கு பெரும் பாவம் சம்பவிக்கும் என்று உறுதியாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே தனியாக அடைத்து வைப்பதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையென்றுதான் கூறவேண்டும்.

வசுதேவராவது சும்மா இருந்திருக்கலாம் என்று யோசித்தாலும் அங்கும் இடிக்கிறது. ருதுவான மனைவியுடன் கூடுவது அவர் கடமை. அக்காலச் சட்டத் திட்டங்கள் இந்த விஷயத்திலும் மிக்க உறுதியானவையே.

கம்சன் இவ்வாறுகூட யோசித்திருக்கலாம். அதாவது எட்டாவது குழந்தைதானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. நாம் சாதாரணமாக படிக்கும் பாரதக் கதைகளில் முதல் குழந்தை பிறந்ததுமே அதைக் கொன்று விடுகிறான் என்றும் இவ்வாறே முதல் 6 குழந்தைகள் கொல்லப்பட்டன என்றும் கூறப்படுகிறது. ஏழாவது குழந்தையாகிய பலராமர் தேவகியின் வயிற்றிக் கருவாக இருக்கும்போதே தெய்வ சக்தியால் வசுதேவரின் இன்னொரு மனைவி ரோஹிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டு விடுகிறார். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப் பிரசவத்திலேயே இறந்து விடுகிறது என்று கூறப்பட்டு விடுகிறது. பிறகு எட்டாவது குழந்தையாக விஷ்ணு ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலாகிறார். அது பின்னால் வருவது.

அப்படியானால் முதல் 6 குழந்தைகளைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி கேட்கலாம் - கேட்கலாம் என்ன நானே வாத்தியாரைக் கேட்டு அதற்காக, "ராகவையங்கார் பெஞ்சுமேல் ஏறும்" என்ற ஆணையை என்னுடைய இந்தப் பதிவில் வரும் அதே வாத்தியாரிடம் பெற்று பெஞ்சு மேல் ஏறி உதையும் வாங்க வேண்டியதாயிற்று. அது எதற்கு இப்போது. ஆனாலும் அக்கேள்வியும் முக்கியமே, அதற்கான விடை பின்னால் வேறொரு சந்தர்ப்பத்தில் (பெஞ்சு மேல் ஏறாமல், உதை வாங்காமல்) பெற்றேன். அதை இங்கே கூறுவேன்.

"யசோதா கிருஷ்ணா" எழுபதுகளில் ஓடிய, தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்குப் படம். அதில் ரங்காராவ் கம்சனாக நடித்தார். கம்சனிடம் தேவகியின் முதல் குழந்தையைக் கொண்டு வந்து வசுதேவர் கொடுக்கிறார். அக்குழந்தையைப் பார்த்த கம்சன் மனதில் மாமன் என்ற முறையில் பாசம் பொங்க, "முதல் குழந்தைதானே, இவன் என்னைக் கொல்லமாட்டான்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அக்குழந்தையைக் கொல்லாமல் தன்னிடம் வைத்து வளர்க்கிறான். அதே போல முதல் ஆறு குழந்தைகளும் அவனிடம் வந்து சேருகின்றன. தேவகிக்கும் நிம்மதி. அப்போதுதான் கம்சனைப் பார்க்க வருகிறார் தேவரிஷி நாரதர். கம்சனிடம் அக்கறையாகப் பேசுவது போல செந்தில் குரலில் பேசுகிறார்:

"கம்சனே, எட்டாவது குழந்தை என்று எவ்வாறு எண்ணிக்கை செய்யவேண்டும் என்று ஒன்றும் இருக்கிறது அல்லவா, ஆக கடைசியிலிருந்து எட்டாவது என்றால் முதல் குழந்தைதானே அந்த எட்டாவது" என்று பேசி அவனைக் குழப்பிவிடுகிறார். இருப்பினும் தான் பாசத்துடன் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் கொல்ல மனமில்லாது, "சரி அப்படியானால் முதல் குழந்தையை மட்டும் கொன்று, மற்றவர்களை விட்டுவிடுகிறேனே" என்று கவுண்டமணியின் குரலில் குழம்ப, "தங்கள் அண்ணனைக் கொன்ற உன்னை மீதி ஏழு பேர் எப்படி விட்டுவைப்பார்கள்?" என்று செந்தில் குரலில் நாரதர் கேட்கிறார். இப்போதுதான் கம்சன் அந்த ஆறுகுழந்தைகளையும் கொல்கிறான்.

அப்புறம்தான் அந்த ஆறுகுழந்தைகளும் அவன், தான் காலநேமி என்ற அரக்கனாக இருந்த முற்பிறவியில், அவனுடைய ஆறுபிள்ளைகள் என்றும் அவர்கள் தங்கள் தந்தை கையால் மரணமடைய வேண்டும் என்பது அவர்கள் பெற்ற சாபம் என்றும், ஆகவே இப்பிறவியில் அவன் தங்கை வயிற்றில் பிறந்தார்கள் என்பதை அறிந்து, "அடே கோபுரத்தலையா" என்ற ரேஞ்சில் கத்தி மேலும் நொந்து போகிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது இக்கால மெகாதொடர்கள் எல்லாம் ஜுஜுபிதான். ஆனால் ஒன்று, கைப்புள்ள கேட்ட, கேட்காத என்று இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்தாகிவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

U.P.Tharsan said...

அப்பாட.. இப்படித்தான் எங்களுடைய சரித்திர நூல்களை படித்துவிட்டு(மன்னனிக்கவும் நான் படித்து தொரிந்து கொண்டதைவிட படம்பார்த்து சரித்திரத்தை தெரிந்து கொண்டதுதான் அதிகம்)என்னடா இப்படி குழப்புகிறார்களே என்று குழம்பிப்போனதுதான் அதிகம். எனக்கும் இப்படி நிறைய கேள்விகள் சிறுவயதில் எழுந்ததுண்டு. எனினும் நான் கேள்விகேட்டாலும் அதை விளக்கக்கூடிய பக்குவத்தில் எனக்கு ஒரு பாட்டியில்லாததால் நான் அதைக்கேட்பதுவுமில்லை. இப்ப பாட்டிகூட மொடேன் ஆகிட்டாங்க போங்க... :-)) நீங்கள் சென்ன விளக்கம்போல் பல்வேறு தமிழ் அறிஞர்கள் அப்பப்போ இராமாயணம்,மகாபாரதத்துக்கு விளக்கம் தருவதை பார்த்திருக்கிறேன். கேட்க நன்றாகவேயிருக்கும். கேட்க மட்டும்தான் எனக்குத்தெரியும். அதில் விளக்கம் கேட்கவும், திருத்தவும் எனக்கு வயதுமில்லை,தகவலும் தெரியாது. :-)) பார்ப்போம் மற்றவர்கள் என்னசெல்கிறார்கள் என்று..

dondu(#11168674346665545885) said...

இப்பதிவின் தொடக்கத்தில் நான் சுட்டியிட்ட கைப்புள்ளயின் அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.

உங்களுக்கு பதிலாக நான் தனிப்பதிவே போட்டிருக்கேனே, பார்க்க:
"கைப்புள்ள கேட்ட கேள்விக்கு பதிலை உள்ளடக்கி" @ http://dondu.blogspot.com/2006/02/blog-post_09.html

இது உண்மை டோண்டு இட்டப் பதிவே என்பதை உணர்த்த இப்பின்னூட்டத்தையும் அதே பதிவில் பின்னூட்டமாக நகலிடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கைப்புள்ள said...

நன்றி டோண்டு சார்,
நான் எதோ தமாசுக்காகத் தான் எழுதினேன். படிப்பவர்கள் சிரித்து விட்டு போகட்டுமே என்று. உண்மையிலேயே எந்த விதமான ஒரு பதிலையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதன் பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கும் என்று தங்கள் பதிவினையும் செல்வன் அவர்களுடைய பின்னூட்டத்தையும்(என் பதிவில்) கண்டதும் தான் தெரிந்தது. விளக்கத்திற்கு மிக்க நன்றி சார்.

Geetha Sambasivam said...

Everytime there are logical questions asked about Mahabaratha and Ramayana.But till today nobody answered for those questions.It is senior scholars duty to clarify them.

dondu(#11168674346665545885) said...

கீதா, கேள்விகள் கேட்கவும், விடை தெரிந்தால் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

Is it true that Dasaratha had 60,000/-wives. Acatually it is a laughing matter for the Nasthikas.And about Droupathi also. Why she had 5 husbands?While other community people and the same community people who are not believing God asked those questions it is difficult for us to explain them about these matters. Only two examples came. others are yet to come

dondu(#11168674346665545885) said...

தசரதர் அறுபதாயிரம் மனைவிகளைப் பெற்றதற்கு முக்கியக் காரணமே பரசுராமரே. அவர் ஷத்திரிய குலத்தை அழிக்க புறப்பட்ட பார்ப்பனர். அது வேறு கதை.

ஆனால் அவர் ஒரே ஒரு காரணத்துக்கு மட்டும் ஷத்திரியர்களைத் தாக்காமல் இருந்தார். அவர் வரும் சமயம் சம்பந்தப்பட்ட மன்னர் திருமண வேலையில் ஈடுபட்டிருந்தால் அவர் அந்த நாட்டைத் தாக்காது விடுவார். அவர் அயோத்திக்கு பலமுறை வந்தும் ஒரு முறை கூட தாக்கவில்லை. இப்படி அப்படியென்று தசரதர் மனைவியர் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவ்வளவே.

பாஞ்சாலி தன் முற்பிறப்பில் ஐவகை உத்தம குணங்களுடைய ஒரு கணவனைக் கேட்க சிவபெருமான் அக்குணங்கள் ஒவ்வொன்றாக உள்ள ஐந்து ஆண்களை அவள் அடுத்தப் பிறவியில் மணப்பாள் என வரம் தருகிறார். மேலும் பஞ்ச பாண்டவர்கள் மனத்தால் ஒருவரே என்பது தத்துவம் கலந்த உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

There are romantic words in Andal's Thiruppavai. I am not a nasthigavathi. but my children are asking some typical questions about ourGods marrying two wives and other things. Even the politicians are criticising the Thiruppavai and it's holiness.Now the Paramacharya also was criticised by some famous politician.Why these types of stories are telling by our ancestors?

dondu(#11168674346665545885) said...

வணக்கம் கீதா அவர்களே. ஆண்டாளின் திருப்பாவையில் சிருங்கார ரசம் உள்ளது எனக் கூறுகிறீர்கள். உண்மைதான். சிருங்காரமும் நம் வாழ்வில் ஒரு பகுதிதான் என்று உணர்ந்தால் அது தவறாகத் தோன்றாது.

திருமால் ஒருவனே ஆண், அவனை பூசிப்பவர்கள் அனைவருமே பெண்களே என்பது வைணவத்தில் ஓர் அடிப்படை நாதமாக இருக்கிறது. பரமாத்மாவுடன் ஜீவாத்மாவைச் சேர்க்கும் முயற்சியில்தான் ஒரு பக்தனின் வாழ்க்கை கழிகிறது.

ஆண்டாள் தனக்கும் அரங்கநாதருக்கும் நடக்கப் போகும் திருமணத்தைப் பற்றிக் கனவு காணும் காவியமே "வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து" என்று ஆரம்பிக்கும் காவியம். அய்யங்கார் வீட்டுத் திருமணங்களில் மணமகனும் மணமகளும் தேங்காய் உருட்டி விளையாடும் விளையாட்டில் ஆண் புரோகிதர்கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து இப்பாடல்களை பாடுவதைக் கேட்காத செவியும் செவியோ!

ஆண்டாளுக்கு அலங்காரம் செய்ய அவர் நாத்தனார் பார்வதி தேவியே வருகிறார். தன் அருமை அண்ணனுக்குத் திருமணம் என்பதில் உமா அவர்களின் களிப்பை இப்பாடல்களில் உணரலாம். ஆனால் ஒன்று, இவற்றையெல்லாம் அனுபவிக்க முந்தையப் பிறவியில் நற்பயன் செய்திருக்க வேண்டும். இவ்வரிகளை எழுதும்போதே என் கண்களில் ஆனந்த கண்ணீர். அவற்றை எழுத எனக்கு சந்தர்ப்பம் அளித்த தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி.

அது சரி இவ்விடத்தில் பரமாச்சார்யர் எங்கிருந்து வந்தார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

labdab said...

Even in this case Kamsan could have separated the couple (Devaki and Vasudev) immmediately after the birth of first child. Devaki would have become a mother which fulfills the duties of Kamsan and Vasudev regarding offsprings
and ensures that the eighth child is never born.

By this Kamsan could still avoid death.
:-)

dondu(#11168674346665545885) said...

வணக்கம் labdab அவர்களே? உங்கள் பெயரை எப்படி உச்சரிப்பது?

முதல் குழந்தையுடன் நிறுத்திவிட்டு என்ன செய்வதாம்? அக்காலக் கட்டத்தில் இந்த வழி யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. மேலும் கம்சன் கிருஷ்ணரால் கொல்லப்படவேண்டியது முதலிலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இது ஒருவித Greek tragedy. மற்றப்படி கேள்விகளுக்கெல்லாம் பதில் பதிவிலேயே உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் சதயம் அவர்களே. இதுதான் நான் ஜோச்ஃப் அவர்களிடம் வேறொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட "எங்களைப் போலப் பெரிசுகள் அடிக்கும் லூட்டி". ஹா ஹா ஹா ஹா.

வெடிச் சிரிப்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது