2/28/2006

IDPL நினைவுகள் - 3

CPWD-யை விட்டு IDPL-க்கு வந்த போது. நான் வேலையை ராஜினாமா செய்யவில்லை. Lien என்பதை தக்க வைத்துக் கொண்டிருந்தேன். அதாவது இரண்டு வருடத்துக்குள் நான் விருப்பப்பட்டால் CPWD-க்கு திரும்ப செல்ல முடியும். அதை முழுவதும் பிரயோகம் செய்து IDPL-லிலேயே இருந்து விடுகிறேன் என 1983-ல் எழுதிக் கொடுத்தேன். CPWD வேலைக்கு பென்ஷன் பெற்றது பற்றி இன்னொரு பதிவில்.

இதை எல்லாம் செய்வதற்கும் அல்ஜீரிய வேலை கையை விட்டுப் போவதற்கும் சரியாக இருந்தது.

இப்போது சில பொதுப்படையான வார்த்தைகள் கூறுவேன். எழுபதுகளை அரசு நிறுவனங்களின் பொற்காலம் என்றே கூறலாம். மத்திய அரசின் முழு பட்ஜெட் ஆதரவு அவ்வகை நிறுவனங்களுக்குத் தரப்பட்டன. ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதிலும் அவற்றுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. லாப நோக்கு என்பது கெட்டவார்த்தையாக இருந்தது. சமூக நோக்கு என்ற மாயையை சிருஷ்டித்து மக்கள் வரிப்பணம் பாழாக்கப்பட்டது.

இதையெல்லாம் நான் இங்கே கூறுவது காரணமாகத்தான். இந்த பின்புலனில் ஐ.டி.பி.எல்லை பல அரசியல்வாதிகள் தவறாகப் பயன்படுத்தினர். வேண்டியவர்களுக்கு வேலை போட்டுக் கொடுப்பதில் யூனியன்கள் போட்டி போட்டன. விளைவு என்னவாயிற்றென்றால் தேவைக்கதிமாக ஆட்கள் வேலையில் அமர்ந்து குண்டுசட்டியில் குதிரை ஓட்டினர். சம்பளம் கொடுக்கத்தான் அரசு பட்ஜெட் என்ற ஊன்றுகோல் இருந்ததே. ஆனால் எவ்வளவு நாட்களுக்குத்தான் வெறும்கையால் முழம்போடுவது? பொருளாதார விதிகள் செயல்பட ஆரம்பித்தன. மெதுவாக ஐ.டி.பி.எல்லுக்கு வந்த ஆர்டர்கள் குறைய ஆரம்பித்தன. தான் வாங்கிய பொருட்களுக்கு உடனடியாக பில்களை செட்டில் செய்யமுடியாமல் ஐ.டி.பி.எல் திணற ஆரம்பித்தது. இந்த நிலையில்தான் அல்ஜீரிய வேலையும் கையை விட்டுப் போயிற்று. அது ஒன்றுதான் நல்லவிஷயம் என்பது பிறகுதான் எல்லோருக்கும் புரிந்தது என்பதை இங்கே போகிறபோக்கில் கூறி விடுகிறேன்.

இதனால் நான் அடைந்த பாதிப்புகளை மட்டும் இங்கு கூறுவேன், ஏனெனில் அவை எனக்குத் தெரிந்த முழு உண்மைகள். அல்ஜீரிய வேலை சென்றாலும் அவ்வப்போது ஏதாவது பிரெஞ்சு டெலக்ஸுகள் வந்து கொண்டிருந்தன. அவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. நான் ஐ.டி.பி.எல்லில் சேர்ந்தபோது என்னை DDPE (Design Development and Process Engineering) துறையில் போஸ்ட் செய்தார்கள். நான் வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடமே அது ஹைதராபாத் மற்றும் ரிஷிகேஷ் தொழிற்சாலைகள் நடுவில் பங்கு பிரிக்கப்பட்டு விட்டது. நான் ஹைதராபாத் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னை என் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக Gurgaon-லேயே (corporate office) (அதாவது தில்லியிலேயே) நிறுத்திக் கொண்டனர். அடுத்த வருடமே அல்ஜீரிய வேலைகள் இல்லையென்று போனாலும் நான் தில்லியிலேயே இருக்க முடிந்தது. அதுதான் நான் தில்லியில் பல நல்ல வாட்டிக்கையாளர்களை பெற உதவியது.

நல்ல வேளையாக ஜலானி அவர்களின் சமயோசிதத்தால் நான் தப்பித்தேன். என்னிடம் இப்போது மின் பொறியியல் வேலைகளும் வரத் துவங்கின. உதாரணத்துக்கு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு டீஸல் ஜெனெரேட்டர் போட வேண்டியிருந்தது. என்னை அந்த வேலையை செய்யுமாறு பணித்தனர். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அலுவலகம் முழுவதும் சென்று மின்சார லோட் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து ஜெனெரேட்டரின் அளவை நிர்ணயிக்க வேண்டியது முதல் வேலை. CPWD-யில் பெற்ற பயிற்சி மிகவும் கைகொடுத்தது. அளவை நிர்ணயம் செய்தபின் ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதற்கான கடிதம் வடிவமைத்து, பல கம்பெனிகளுக்கு அனுப்பிக்க வைத்து அவற்றின் கொட்டேஷன்களைப் பெற்று ஆராய்ந்து ஒரு ஒப்பந்தக்காரரை தேர்ந்தெடுத்து என்றெல்லாம் வேலைகள் செய்ய முடிந்தது. என்னை மானிட்டர் செய்த ஜலானி அவர்கள் என்னைக் கூப்பிட்டனுப்பி "என் பெயரைக் காப்பாற்றினாய்" என்று பாராட்டியதே எனக்குக் கிடைத்த பாராட்டுகளில் மிகப்பெரியதாக நான் இன்றும் மதிக்கிறேன்.

அது வரை என்னை நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் மட்டுமே, இஞ்சினியர் என்பது பெயரளவில்தான் எனப் பலர் கணித்திருந்தனர். ஜெனெரேட்டரை செயல்படுத்தி எல்லோரிடமும் சப்ளை அச்சமயம் ஜெனெரேட்டரிலிருந்தே வருகிறது என்று கூறும்போது எல்லோருமே பாராட்டினர். அப்போதுதான் நான் பொறியாளனும்கூட என்பதை அவர்களால் நேரடியாக உணர முடிந்தது.

மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பெற்ற அனுபவம் பின்னால் வரப்போகும் சிக்கல்களையும் எதிர்பார்த்து செயல்பட உதவியது. உதாரணத்துக்கு எங்கள் கார்பரேட் அலுவலகத்தின் ஒரு பகுதியை ஸ்டேட் பேங்க் ஸ்டாஃப் காலேஜுக்கு வாடகைக்கு விட்டனர். அவர்களுக்கான சப்ப்ளையும் எங்கள் மெயின் போர்டிலிருந்தே சென்றது. ஆகவே ஜெனெரேட்டர் போட்டபோது அவர்களுக்கு தவறுதலாகக்கூட ஜெனெரேட்டர் சப்ப்ளை போகக்கூடாது என்று செயல்பட்டேன். அது பல சிக்கல்களை பின்னால் தவிர்க்க உதவியது. அவை இன்னொரு பதிவில்.

என்ன செய்து என்ன பயன். என்னை 1986-ஆம் ஆண்டு பக்கத்தில் உள்ள குர்காவுன் தொழிற்சாலைக்கு மாற்றம் செய்த்து விட்டனர். அதையும் சமாளித்தேன். அது பற்றி அடுத்தப் பதிவில்.

ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மிக துரதிர்ஷ்டவசமானது. மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அதை பதிவு செய்வது என் கடமை எனக் கருதுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது