9/17/2007

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்

பதிவுலகில் மற்றவர்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம் நியாயஸ்தர்கள் மாதிரி பேசி பொறுமையை கடைபிடிக்குமாறு உபதேசம் செய்பவர்கள், விட்டேற்றியாக பேசுபவர்கள் ஆகியோர் தங்களுக்கும் அவ்வாறே துன்பம் வரும்போது பொறுமையை மிகத் துடிப்புடன் பொறுமையைத் தொலைப்பது வேடிக்கையாக உள்ளது. அப்போதும் அழுவாச்சிப் பதிவுகள், பார்ப்பனக் கூத்து என்றெல்லாம் திட்டிப் பதிவுகள் போடுவதில் மட்டும் குறைவில்லை.

ஐடிபிஎல்-லில் இருந்தபோது ஒரு தமாஷ் நடந்தது. ஒவ்வொரு மாதமும் 22-ஆம் தேதி வாக்கில் ஒரு அறிக்கை ஒவ்வொரு துறையிடமிருந்தும் கணக்காளர் பிரிவுக்கு செல்ல வேண்டும். அதில் துறைத்தலைவர் தன் மேற்பார்வையில் இருக்கும் ஊழியர்கள் அம்மாதம் ஒழுங்காக வேலைக்கு வந்தார்களா என்பதை தெரிவிக்க வேண்டும். யாரேனும் லீவில் (முழு சம்பள, பாதி சம்பள அல்லது சம்பளமில்லாத) இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். மற்றப்படி எல்லாம் நல்லபடியாக இருந்தால் அதை ஒரே வரியிலும் குறிப்பிடலாம். அப்போதுதான் அத்துறைக்கான சம்பளமே போடுவார்கள். அடுத்த மாதம் முதல் தேதி அது கிடைக்கும்.

நான் இருந்த பொறியாளர் பிரிவுக்கு தலைவர் மேனேஜர் இஞ்ஜினியரிங் என்னும் பதவியில் உள்ளவர். அந்தக் குறிப்பிட்ட மாதம் இந்த அறிக்கை செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது, ஏதோ ஒரு காரணத்தால். 28-ஆம் தேதிதான் போய் சேர்ந்தது. எல்லோருக்கும் அடுத்த மாதம் கொடுத்த பே ஸ்லிப்பில் சம்பளம் எல்லாம் குறிக்கப்பட்டு, கீழே ஒரு வரி எழுதியிருந்தார்கள். அதாவது சம்பந்தப்பட்டவருக்கு சம்பளம் கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறித்திருந்தார்கள். இஞ்சினியரிங் துறையில் உள்ள எல்லோருக்கும் இது காணப்பட்டது. எனது ஸ்லிப்பிலும் அவ்வாறே இருந்தது. சம்பளம் எப்போதுமே எங்களது பேங்க் கணக்கில் ஏற்றப்பட்டு விடும். அதற்காகவே இந்தியன் வங்கியின் ஒரு extension counter எங்கள் வளாகத்திலேயே இருந்தது. இப்போது என்ன ஆயிற்றென்றால் இந்த ஸ்லிப்புக்குரிய மாத சம்பளம் கணக்கில் ஏற்றப்படவில்லை.

நான் உடனே கணக்குப் பிரிவின் தலைவரிடம் சென்று விளக்கம் கேட்க அவர் இதற்காக கவலை கொள்ள வேண்டாம் என்றும், கடைசி நிமிடத்தில் கணக்கில் சம்பளத்தை ஏற்றி விட்டதாகவும் கூறினார். நான் இதை தெரிவிக்க மேனேஜர் இஞ்சினியரிடம் சென்றேன். சற்று விவரமாக ஆரம்பித்தேன்.

நான்: சார், இந்த மாத ஸ்லிப்பில் எனது கணக்கில் சம்பளம் ஏற்றவில்லை என குறித்துள்ளார்கள்.
மேனேஜர் (மோகனப் புன்னகையுடன்): சில சமயம் அம்மாதிரி ஆகி விடும் ராகவன். பேசினால் சரியாகி விடும். என்ன கொஞ்ச நாள் பிடிக்கும். உங்களுக்கு பணத்துக்கென்ன குறைச்சல். சற்றே பொறுமையாயிருங்கள். எப்போதும் பணம் பணம் என அலையாதீர்கள். கம்பெனி வேலைகளைப் பாருங்கள்.

ஆக இவருக்கு ஒரு விவரமும் தெரியாது. அவர் இன்னும் தனது பே ஸ்லிப்பை பார்க்கவில்லை.

நான்: (சற்றே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு): ஓக்கே சார். எனக்கென்ன வருத்தம் என்றால் நம்ம துறையில் எல்லோருக்கும் அப்படியே செய்து விட்டார்கள், உங்களையும் சேர்த்து.
மேனேஜர் (தன் மோகனப் புன்னகையை உடனே தொலைத்தார்): ஆ, என்ன அப்படியா? மேடம் (அவரது க்ளார்க்), என்ன இது? என்ன அக்கிரமம்? என்ன செஞ்சீங்க?

இவ்வாறு கத்திக் கொண்டே, அவர் க்ளார்க் மற்றும் சில இஞ்சினியர்கள் புடை சூழ கணக்குப் பிரிவின் தலைவரை அணுகினார். அவரோ என்னிடம் கூறியதையே கூறி, இதை ராகவனிடம் ஏற்கனவே தெரிவித்ததாகக் கூறினார்.

முகத்தைத் துடைத்து கொண்ட மேனேஜர் அப்படியே தொழிற்சாலையின் வேறு பிரிவுக்கு மேற்பார்வை செய்யப் போவது போல பைய நழுவினார். என்னை பிறகு ஏண்டா பாவி இம்மாதிரி பயமுறுத்தினே என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எனக்கும் அவரிடம் தலைப்பில் இருக்கும் பழமொழியை கூறி அதற்கு பொழிப்புரை, பதவுரை எல்லாம் உரைக்க வாய்ப்பு இல்லாமல் போயிற்று. :).

அன்புடன்,
டோண்டு ராகவன்

16 comments:

Anonymous said...

:)))))))
தமிழ் வலைபூவிற்க்கு தற்போது தேவையான கருத்து இந்த பதிவில் இருக்கிறது.

Anonymous said...

டோண்டு சார்,

சரியான நெத்தியடி!

என்ன டிஸ்கி போடவில்லை? Any resemblence to current events in thamizmanam is purely intentional என்று ;)

கதிர் said...

ஹி ஹி ஹி தலைவலி தெரியும் திருகுவலின்னா என்னன்னுதான் தெரியல.

dondu(#11168674346665545885) said...

//என்ன டிஸ்கி போடவில்லை? Any resemblence to current events in thamizmanam is purely intentional என்று ;)//
டிஸ்கி எதுக்கு? முதல் பாராவே பத்தாதா? :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//திருகுவலின்னா என்னன்னுதான் தெரியல.//
அதான் சொன்னேனே, அதுவும் வரச்சே தெரிந்து விடும்னு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கதிர் said...

//அதான் சொன்னேனே, அதுவும் வரச்சே தெரிந்து விடும்னு.//

வரணும்னு வேண்டிக்குங்க வருதான்னு பக்கலாம். :)

dondu(#11168674346665545885) said...

//வரணும்னு வேண்டிக்குங்க வருதான்னு பக்கலாம். :)//

ஏன் அம்மாதிரி வேண்டிக்கணும்? எனக்கு வந்த கஷ்டம் யாருக்குமே வராமல் போகட்டும்னுதான் வேண்டிக்கறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
நான்: (சற்றே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு): ஓக்கே சார். எனக்கென்ன வருத்தம் என்றால் ....
==>
குசும்பு!

dondu(#11168674346665545885) said...

சிவா அவர்களே,

என்ன செய்வது குசும்புதான், :))

மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பத்து ஆண்டுகள் இளநிலை மின் பொறியாளராக இருந்தேன். கடைசி 7 ஆண்டுகள் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் போஸ்டிங். கட்டிடங்களுக்கு மின்சார வையரிங் செய்தல், தெரு விளக்கு போடுதல், நிலத்தடி கேபிள் இடுதல் ஆகிய பணிகள். எல்லா வேலைகளையும் ஒப்பந்தப் புள்ளிக்காரர்கள் செய்ய நாங்கள் செய்த வேலைகளை அளந்து அளவை புத்தகத்திலிட்டு, பில்கள் தயார் செய்து மேலே அனுப்ப வேண்டும். செம வேலை. கட்டிடங்கள் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. என் மேற்பார்வையில் 10 கட்டிடங்களுக்கு மேல். கேம்பஸ் முழுக்க ஒவ்வொரு கட்டிடமாகச் சுற்ற வேண்டியது.

விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கான பாயின்டுகள் short, medium & long என்று பிரிக்கப்படும். மூன்று மீட்டர்கள் நீளத்துக்கு குறைவானவை ஷார்ட் பாயிண்டுகள், 3-6 வரை மீடியம் மற்றும் 6 மீட்டர்களுக்கு மேல் லாங்க் பாயிண்டுகள். இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள இந்த தகவல் அவசியம், ஆகவே கூறினேன்.

120 போலீஸ்காரர்களை தங்க வைக்க வசதி உடைய 7 பேரக்ஸ்கள் கட்ட வேண்டும். அதில் பல ஹால்கள் உண்டு. ஹாலின் நடு வரிசையில் வரும் விளக்குகள் லாங்க் பாயிண்டுகள். அவற்றின் நீளம் 6.35 மீட்டர்கள்.ஆனால் ட்ராயிங்கில் அவை மீடியம் பாயிண்டாகக் குறிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் என்ன அளவு நேரடியாக எடுக்கப்படுகிறதோ அதைத்தான் அளவைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். அந்த முறையில் நான் லாங்க் என்றே அவற்றைக் குறிப்பிட்டேன். திடீரென பொருளாதார நெருக்கடியால் இரண்டு பேரக்ஸ்களுடன் அப்போதைக்கு வேலையை நிறுத்தி விட்டனர். ஆகவே அவற்றுக்கான பில் மட்டும் போட்டு கணக்கை முடிக்க வேண்டியிருந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு மீதி ஐந்து பேரக்ஸுகள் கட்டுவதற்கு க்ளியரன்ஸ் வர அவற்றுக்கான வேலைகள் ஆரம்பித்தன. இங்குதான் விதி விளையாடியது. சிவில் தரப்பில் திடீரென ஒவ்வொரு மாடிக்கும் ஒரு அடி உயரத்தைக் குறைத்து விட்டனர். அது எங்களுக்குத் முதலில் தெரியாது. மீதி எல்லாம் ரிபீட் ஆகவே நான் முதல் இரண்டு பேரக்ஸ்கள் போலவே இங்கும் பாயிண்டுகளை வகைப் படுத்தி விட்டேன். ஆனால் இந்த லாங்க் பாயிண்டுகள் நீளம் 30 செ.மீ. அளவில் குறைந்து 6.05-லிருந்து 5.95 வரை வந்து விட்டன. அவற்றை பார்டர்லைன் பாயிண்டுகள் என்போம். சாதாரணமாக மீடியம் என்றே குறிப்பிடுவோம். எனக்கு உயரம் குறைத்த விஷயம் தெரிந்திருந்தால் அவ்வாறே எல்லாவற்றையும் மீடியமாக அளந்திருப்பேன். எல்லாவற்றையும் போட்டு இரண்டு பில்கள் வந்தவுடந்தான் எனக்கு உயரம் குறைந்த விஷயம் தெரிந்தது. இப்போது அளவை புத்தகத்தில் போட்டதை மாற்றவும் முடியாது. அதற்குள் இந்த விஷயத்தை மேலிடத்திற்கு யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

எதிர்ப்பாராத வகையில் இந்த பாயிண்டுகளை செக் செய்ய E.E. அவர்களே வருவதாகக் கூறி விட்டார். எங்கள் A.E. அவர்கள் என்னிடம் இது பற்றிக் கூறி, "என்ன ராகவன், உங்களைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே" என்றார். இந்த அழகில் முகத்தில் ஒரு புன்முறுவல் வேறு. எனக்கு எரிச்சலான எரிச்சல். இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் கூறினேன். "ஆமாம் சார், நாம் இருவருமே கஷ்டத்தில் இருக்கிறோம்" என்றேன். ஸ்விட்சை அணைத்தது போல புன்னகை மறைந்தது. "துரதிர்ஷ்டவசமாக நீங்களும் அதே பாயிண்டுகளை செக் செய்து கையெழுத்திட்டிருக்கிறீர்கள்" என்று அவரிடம் அன்புடன் எடுத்துரைத்தேன்.

அப்புறம் என்ன, இ.இ. வந்த போது, இவரே டேப்பைப் பிடித்து சார் 6.12 மீட்டர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூற இ.இ. யும் திரும்பிச் சென்றார். ஆக என் ஞாபகசக்தி என்னைக் காப்பாற்றியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//பதிவுலகில் மற்றவர்களுக்கு துன்பம் வரும்போதெல்லாம் நியாயஸ்தர்கள் மாதிரி பேசி பொறுமையை கடைபிடிக்குமாறு உபதேசம் செய்பவர்கள், விட்டேற்றியாக பேசுபவர்கள் ஆகியோர் தங்களுக்கும் அவ்வாறே துன்பம் வரும்போது பொறுமையை மிகத் துடிப்புடன் பொறுமையைத் தொலைப்பது வேடிக்கையாக உள்ளது. அப்போதும் அழுவாச்சிப் பதிவுகள், பார்ப்பனக் கூத்து என்றெல்லாம் திட்டிப் பதிவுகள் போடுவதில் மட்டும் குறைவில்லை.

//

dondu என்னதான் புலம்புனாலும் யாரும் உங்களை ஏத்துக்க மாட்டாங்க
ஏனெனில் தாங்க அந்தளவு ஜாதி துவேசமாக பேசி விட்டீர்.

dondu(#11168674346665545885) said...

//dondu என்னதான் புலம்புனாலும் யாரும் உங்களை ஏத்துக்க மாட்டாங்க
ஏனெனில் தாங்க அந்தளவு ஜாதி துவேசமாக பேசி விட்டீர்.//
அடப் போம் ஐயா போக்கத்தவரே. யார் இங்கு புலம்புவது? டோண்டு ராகவனா? அதை சொல்லறதுக்கு உண்மையான பெயரில் வரத் துப்பு இல்லாமல் அதர் ஆப்ஷன்ல என் நண்பர் அதியமான் பெயரை வேறு வைத்து வந்திருக்கும் உங்களோட அங்கீகாரத்துக்கா நான் நிற்கிறேன்? போய்யா ஜாட்டான்.

நான் சாதாரணமா அதர் ஆப்ஷ்ன்ல வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க மாட்டேன். இப்ப உம்மைத் திட்டறதுக்காகவே அதை போடறேன்

டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் அனானி அவர்களே,

இப்பதிவு ஜவஹர்லால நேரு அவர்களை பற்றி அல்ல. ஆகவே பின்னூட்டத்தை போடவில்லை. அதற்கென்று நான் இட்ட நேரு லெகசி பதிவுகள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

டோண்டு ராகவன் அவர்களே

நீங்க ஐ.டி.பி.எல் நினைவுகள், பி.இ.எம்.எல் கனவுகள், போன்ற பதிவுகள் போடாமல் தடுக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அரசானை பிறப்பிக்கவேண்டும்...

முடியல...முடியல...

dondu(#11168674346665545885) said...

செந்தழல் ரவி அவர்களே, IDPL & CPWD நினைவுகள் இன்னும் சில பகுதிகள் பாக்கி உள்ளனவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

< முடியல...முடியல... >
இது <..>th Reprint Edition 2007 !

Anonymous said...

Senthazhil Ravi Sir,
Neenga mokkaiyilum mokkaiyaga ulaga kadiyaga pathivugal podratha "Aai.Naa sabai"la than thadai vanga vendum.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது