1/10/2006

ஆண் பெண் கற்பு நிலை - 4

மே மாதம் 1981. நான் ஐ.டி.பி.எல்.-ல் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு சென்றிருந்தேன். அது பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். நான் இங்கு பேச வந்த விஷயமே வேறு.

எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் வாசந்தி. அவர் டில்லியில் சாணக்கியபுரியில் இருக்கிறார் என்று என் மனைவியின் அத்தை கூற நான் அவருடன் வாசந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அப்போது பல விஷயங்களைக் குறித்து பேசினோம். அவரிடம் அவர் எழுத்து சம்பந்தமாக சில கேள்விகள் வைத்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றித்தான் இப்பதிவு.

வெகு நாட்களாக என் மனதை ஒரு கேள்வி அரித்து வந்தது. கற்பழிப்பு காட்சிகளில் கதாநாயகியைக் காப்பது கதாநாயகன் மட்டுமே. அவன் இல்லையென்றால் பூனை பாலை உருட்டும் காட்சியை வைத்து டைரெக்டோரியல் டச் எல்லாம் கொடுத்து விடுவார்கள். கதாநாயகி தனியாக மாட்டிக் கொண்டால் அதோகதிதான். புன்னகை என்னும் படத்தில் ராம்தாஸ் வழக்கம்போல கற்பழிக்க வர, ஜெயந்தி "ஆணையிட்டேன் நெருங்காதே" என்று ஒரு பாட்டை சாவகாசமாகப் பாட பாட்டு முடிந்ததும் ராமதாஸ் தன் கடைமையைச் செய்து விட்டு செல்வார். ஜயந்தியும் கர்ப்பமடைந்து, ஜெமினி கணேசன் வாழ்வு கொடுத்து, என்னத்த, கதையை, எழுதி, என்று நம்மையெல்லாம் என்னத்த கன்னையாவைப் போல சலிப்புடன் கூற வைத்துவிடுவார்கள்.

நான் கேட்கிறேன், ஜயந்தி திடகாத்திரமானப் பெண்தானே, ராமதாஸ் தனியாகத்தானே இருந்தார், அதுவும் குடிபோதையில்? குறிபார்த்து ஒரு உதை விட்டால் ஆட்டம் க்ளோஸ்தானே? அவ்வாறு செய்து ராமதாஸிற்கு பிறகு பெண்ணாசையே வரவிடாமல் செய்திருக்க முடியாதா? அது என்ன எப்போதும் பெண்ணை இந்த ரேஞ்சுக்கு அபலையாக காட்டுவது? காந்தியடிகள் கூறினாரே, "உன் கைநகங்கள் பற்கள் ஆகியவை உன் ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்து" என்று? இந்த கூறுகெட்ட திரைகதையாசிரியர்கள் என்ன கிழிக்கிறார்கள்?

இந்தக் கேள்வியைத்தான் நான் வாசந்தி அவர்கள் முன்னால் வைத்தேன். அவர் மென்றுவிழுங்கினார். பிறகு மிருதுவாக கூறினார். அவ்வாறெல்லாம் எழுதினால் பத்திரிகையில் போடுவது கஷ்டம் என்று கூறினார்.

தாதா கோண்ட்கே என்னும் மராட்டிய நடிகர் பல படங்களும் எடுத்தார். எல்லாம் சாஃப்ட் போர்ணோ வகையைச் சார்ந்தது. இருந்தாலும் அவருடைய ஒரு படம் "ஆகே கீ ஸோச்" நிச்சயம் பார்க்க வேண்டியதே. கதாநாயகியை வில்லன் கற்பழிக்கவர, அவள் ஓர் உதைவிட, அடுத்தக் காட்சியில் வில்லன் தன் கூட்டாளிகளுடன் "ஜய் ஜகதீஷ்கரே" என்று பாடி பஜனை செய்யும் காட்சி. தியேட்டரே சிரிப்பால் அதிர்ந்தது. தாதாவுக்கு இருக்கும் சமூக உணர்வு நம்மூர் இயக்குன சிகரத்துக்கு இல்லையே, எங்கு போய் முட்டிக் கொள்வது?

இந்தத் தருணத்தில் விகடன் தயாரித்துவரும் கோலங்கள் மெகாசீரியலை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. ஆண் கதாபாத்திரங்கள் டைவர்ஸ் எல்லாம் செய்து வேறுகல்யாணம் எல்லாம் செய்வார்களாம். பெண்கள் மட்டும் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம். பாஸ்கர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள அபி ஒப்புதல் கடிதம் கொடுப்பாளாம் ஆனால் அதே மாதிரி தான் மறுகல்யாணம் செய்து கொள்ள எதிர் ஒப்புதல் கடிதத்தை அவர் கேட்க மாட்டாளாம். என்ன ஐயா பேசுகிறீர்கள். அபி பாத்திரத்தை பிறகு பாஸ்கருடன் சேர்த்துவைக்கத்தானே அவளைப் புனிதமாக வைக்கும் ஏற்பாடுகள்? இம்மாதிரி எத்தனை நாட்களுக்குத்தான் கேவலன்களுக்காக (இதில் ஸ்பெல்லிங் தவறில்லை) கண்ணகிகளை இவ்வாறு அடக்கி ஆளப் போகிறீர்கள்? இப்படித்தான் பெண் இருக்கவேண்டும் என்று எவ்வளவு நாட்கள் ஜல்லியடிக்கப் போகிறீர்கள்?

நிற்க. நான் கேட்ட குறிபார்த்து உதை சம்பந்தமான கேள்விக்கு உங்கள் பதில்(கள்) என்ன?

பகுதி மூன்றின் பக்கத்திலேயே முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

30 comments:

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,

குறி பாக்கறதுக்கு முதல்ல நாம டென்ஷன் இல்லாம இருக்கணும். ஒருத்தன் கற்பழிக்க வரான்னு தெரிஞ்சாலே நம்ம வீட்லருக்கறவங்க டென்ஷன் ஆயிருவாங்க, கதறுவாங்க. இந்த நேரத்துல குறி எங்க பாக்கறது உதைக்கறதுக்கு.

சரி இப்படி கேக்கறேன். உங்க கழுத்துல ஒருத்தன் கத்திய வச்சி மிரட்டறான்னு வச்சிக்குவம். அந்த நேரத்துல அவன குறி பாத்து உதைக்கணும்னா பார்ப்பீங்க? கைல இருக்கறது குடுத்துட்டு ஓட மாட்டீங்க? நான் அப்படித்தான் செய்வேன்.

அப்புறம் வாஸந்திய பத்தி. அவங்க எழுத்துல மயங்கியவங்கள்ல நானும் ஒருத்தன். அவங்க சொன்னது நூத்துக்கு நூறு சரி. பத்திரிகை, சினிமா, தொலக்காட்சி இதுலல்லாம் வர்றவங்க ஆதர்ஷ பெண்கள். அவங்களையெல்லாம் நாம நிஜ உலகத்துல பாக்கற புத்திசாலி பெண்களா சித்தரிக்க முடியாது. ஒருத்தி ஒன்னுக்கு மேல ஆண்களோட தொடர்பு வச்சிருக்கறவளா காட்டுனா அவ்வளவுதான் தொடப்பமும், முறமும்தான் பேசும். அவங்கள அழுவாச்சியா, கோழையா, கற்புள்ளவளா, கணவன் என்ன செஞ்சாலும் பொறுத்து போறவளாத்தான் காட்ட முடியும். அது இந்த சமுதாயம் பெண்கள் தலைமேல வச்சிருக்கற பாரம்.

அப்புறம் பாலசந்தர் பற்றி. இங்க நான் அவரைப் பத்தி ஏதாச்சும் எழுதுனா யாராச்சும் சண்டைக்கு வந்துருவாங்களோன்னு தோனுது. அவர் ஒரு சராசரி இயக்குனர். அவ்வளவுதான். இத்தனை வருஷத்துக்கப்புறமும் நாடகத்தனமா சினிமா எடுக்கறதுக்கு அவரால மட்டும்தான் முடியும். இன்னைக்கும் பாருங்களேன்.. அவர் கம்பெனி தயாரிக்கற டிவி சீரியல்ல வர்ற நாயகிகள் கூட ஒரே மாதிரி முழிப்பாங்க, பேசுவாங்க, நடப்பாங்க. அவரும் அவர் டைரக்ஷனும். சும்மா வயித்தெரிச்சல கிளப்பாதீங்க.

பின்னூட்டமே ஒரு பதிவு சைசுக்கு வந்திருச்சி. இத்தோட நிறுத்திக்கறேன்.

சாரி டோண்டு சார். கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ..

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது மிகவும் கசப்பான உண்மையே. நான் கூற வருவது என்னவென்றால் யாராவது ஒரு எழுத்தாளராவது பூனைக்கு மணி கட்ட வேண்டாமா என்பதுதான்.

கற்பு என்ன கைல இருக்கறத குடுத்துட்டு ஓடறதா?

நம் வீட்டு பெண்களுக்காவது இந்த ஐடியாவை கொடுத்து பார்க்க வேண்டியதுதான். ஏதோ என்னால் ஆனது, இப்பதிவில் போட்டு விட்டேன். ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

//அப்புறம் பாலசந்தர் பற்றி. இங்க நான் அவரைப் பத்தி ஏதாச்சும் எழுதுனா யாராச்சும் சண்டைக்கு வந்துருவாங்களோன்னு தோனுது. அவர் ஒரு சராசரி இயக்குனர். அவ்வளவுதான். //

என்ன ஜோசப் சார்,

நட்சத்திர வாரத்தில சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்ல துணிஞ்சுட்டீங்க போல...

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் முத்து. கேட்க மறந்து விட்டேன். ஸிரோ டிகிரி புத்தகம் உங்களுக்காக பாரா கொண்டு வந்தாரே. அவரிடமிருந்து பெற்று கொண்டீர்களா? நான் அடுத்த நாளும் வந்திருந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

புக் கிடைத்தது..நன்றிகள்...

நீஙக வந்திருந்ததாக பா.ரா சொன்னார்...நான் ஏ.டி.பி டென்னிஸ் பார்க்க போய்விட்டேன்.நைட் எட்டு மணிக்கு மேல் வந்து புக் வாங்கிக்கொண்டேன்.

பூங்குழலி said...

ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே உள்ளது
பொங்கலுக்குப் பிறகு கொடுக்கவா?

(ஆண்பெண் கற்பு நிலை பகுதி - 2 எழுதாமல் என்னை விடமாட்டீர் போல் இருக்கிறது :))
3,4 பகுதிகளுக்கு மேல் போகும்போல் உள்ளது

சும்மா...)

நன்றி,
பூங்குழலி

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க முத்து,

நட்சத்திர வாரத்தில சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்ல துணிஞ்சுட்டீங்க போல...//

அதான் கடைசியில ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோன்னு ஒரு டிஸ்க்ளெய்மர் வச்சிட்டேனே. நமக்கும் சர்ச்சைக்கும் ஒத்து வராது.

டிபிஆர்.ஜோசப் said...

கற்பு என்ன கைல இருக்கறத குடுத்துட்டு ஓடறதா? //

இல்லதான். ஒத்துக்கறேன். ஆனா அதவிட உசந்தது உசிரில்லையா? அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா? அப்படீன்னு கூட நினைக்கலாம் இல்லையா?

என்ன சார் கற்பு உங்களுக்கு அவ்வளவு சீப்பா போயிருச்சா? அப்படீன்னும் கேட்டு சண்டைக்கு வருவாங்களோ. சரி நான் ஒன்னுமே சொல்லலை.. விட்டுருங்க.

dondu(#11168674346665545885) said...

நல்லது முத்து அவர்களே.

ஜோசஃப் சார் ரொம்ப பயப்படுகிறீர்கள் போல இருக்கே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஐயா இது சார்ந்த பதில்/எண்ணங்கள் என்னிடம் ஏற்கனவே உள்ளது
பொங்கலுக்குப் பிறகு கொடுக்கவா?

அவசரம் ஒன்றும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஏனோ இன்னும் என் பதிவு சரியாக இணையவில்லை.நந்தவனத்தில் வருகிறது,தமிழ்மணத்தில் வரவில்லை."

பொங்கலுக்கப்புறம் நந்தவனம்தான் புது தமிழ்மணம். ஆகவே கவலை வேண்டாம்.

நான் கூற வந்தது என்னவென்றால் பெண்கள் இம்மாதிரி தங்களைக் காத்து கொள்ளும் காட்சிகளை அதிகம் வைக்க வேண்டும். வன்புணர்தல் காட்சியில் சாவகாசமான பாட்டு போடுவதல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Karthik Jayanth said...

May be bcose of such scenes cinema would be in theatres for 5 more days. bcose we know just for few scenes like this cinema has seen good collections. I dont want to point out such cinema's.ppl know them well.

BTW i really liked u r interacting with customer u r 2 cents articles.

T.P.R Joseph

I expect joseph sir too to give away his 2 cents in his current article,be it about dealing with people or about living life..

Experience is a good teacher.

dondu(#11168674346665545885) said...

நன்றி கார்த்திக் அவர்களே. தமிழில் படிக்க முடியும்போது எழுதவும் செய்யலாமே. சுரதா பெட்டியை பாவிக்கவும். அதன் உரல் இங்கே: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இதன் மேல் பெட்டியின் உள்ளே தமிழை அதன் உச்சரிப்புக்கேற்ப ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சு செய்தால். கீழ்ப்பெட்டியில் யூனிகோட் தமிழில் வரும். கீழ்ப்பெட்டியின் கீழே உள்ள பட்டனில் சொடுக்கி நகலெடுத்து இங்கு பின்னூட்டப் பெட்டியில் ஒட்டினால் தீர்ந்தது விஷயம். முயற்சிக்கவும்.

உதாரணம்: ammaa -> அம்மா
ண(N), ற(R), ஞ்(X), நங்கை(wanggai)

"BTW i really liked u r interacting with customer u r 2 cents articles."
ஆங்கிலத்திலா தமிழிலா? தமிழில் "வாடிக்கையாளரை அணுகும் முறைகள்" என்பது குறித்து பத்து பதிவுகள் போட்டுள்ளேன். பதிவு தலைப்பை காண்பிக்கும் என்னுடைய பட்டியலில் பின்னோக்கி சொடுக்கிக் கொண்டே போனால் அவை ஒவ்வொன்றாகப் படிக்கக் கிடைக்கும். அவ்வளவு சிரமம் கூடப் படவேண்டாம். பத்தாவது பதிவில் முதல் ஒன்பதுகளின் ஹைப்பர்லிங்குகள் உள்ளன. பத்தாவது பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/10.html

ஆங்கிலத்தில் இப்போதுதான் இந்த விஷயத்தைத் தொட ஆரம்பித்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நவீன் ப்ரகாஷ் said...

டோண்டு சார்,
எப்படி மெட்டிஒலி - ஒப்பாரிஒலி ஆனதோ அதைபோலவே கோலங்களும் ' ஓலங்கள் ' ஆகிவிட்டது ! ஏன் பெண்கள் அழுகையை மிகவும் காதலிக்கிறார்கள்?

dondu(#11168674346665545885) said...

"ஏன் பெண்கள் அழுகையை மிகவும் காதலிக்கிறார்கள்?"
வரும் பதிவுகளில் இது பற்றியும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அதிலும் உஷா என்பவள் ஆதி தன்னை வெறுத்தாலும்....."

சரியாகப் பாருங்கள், உஷா கூட தனக்குத் தேவையில்லை என்றுதான் கூறி விட்டாள். அபிதான் "புரிஞ்சுக்கோ உஷா" என்றெல்லாம் கூறி அவளை இக்கல்யாணத்துக்கே சம்மதிக்க வைக்கிறாள். அபி பாத்திரம் மிகவும் எரிச்சல் மூட்டுகிறது.

அலைகள் சீரியலில் விகடன் செய்தது போல இங்கும் கடைசி அரை எபிஸோடில் எல்லோரும் திருந்தி, அது வரை அக்கிரமம செய்த வில்லன்களும் சந்தோஷமாக தண்டனை இன்றி வாழ்வார்கள். கேட்டால், அப்போதுதான் டி.ஆர்.பி. ரேட்டிங் கிடைக்குமாம்.

அது வேறு இன்னொரு மூடு மந்திரமான ரேட்டிங் முறை. அதைப் பற்றி எழுத இன்னொரு தனிப்பதிவு போட வேண்டியிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"நான் சில எபிசோடுகள் மிஸ் பண்ணிட்டேன் போல... ;)"

நானே சில எபிசோடுகளை மிஸ் பண்ணினவன்தான். இதில் கஷ்டம் என்னவென்றால், அசட்டுத்தனமானக் கதையைத் தவிர்த்துப் பார்த்தால் மீதி தயாரிப்பு விஷயங்கள் நன்றாகவே உள்ளன. நல்ல நடிப்பு, எடிட்டிங், ஆகியவை.

எல்லாமே அபிதான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் காய்களை நகர்த்துவதால் மட்டும் பிரச்சினையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆனா அதவிட உசந்தது உசிரில்லையா? அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா?"

ஜோசஃப் அவர்களே,

உங்களது இப்பின்னூட்டம் எப்படியோ மட்டுறுத்தப்படாமல் நின்று விட்டது. இப்போதுதான் அதைப் பார்த்தேன்.

கற்பழித்துவிட்டு கொலையும் செய்வதைப் பற்றிப் படித்ததில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"அவங்க பாத்து உதைக்க தெரியாம உதச்சிட்டு அவன் கற்பை விட்டுட்டு உசிர எடுத்துட்டா?"

அல்டிமேட் நிலையில் முழங்காலை வேகமாக மேல் நோக்கி நகர்ந்தாலே வில்லனின் ஆட்டம் க்ளோஸ், அதாவது அவனும் தனியாக இருக்கும் பட்சத்தில். அதிலும் அவன் மது அருந்தியிருந்தால் வேலை இன்னும் சுலபம்.

அவனுக்கும் இரண்டு கைகள்தான் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பெண்ணின் இரு கைகளையும் பற்றினால் முழங்கால்களால் வேகமான இடி, ஒரு கை ஃப்ரீயாக இருந்தால் testicles-யை நோக்கி ஒரு குத்து, அல்லது கை முஷ்டிக்குள் வைத்து பிசைந்து விடுதல் முடிந்தால் பற்களால் கடித்து துப்பிவிடுதல் ஆகியவை.

வெளிப்படையாக எழுதியதற்கு மன்னிப்பு கோருகிறேன். வன்புணர்தலைத் தடுக்கும் எந்த முயற்சியையும் வெளிப்படையாகத்தான் கூறமுடியும்.

"Carpet baggers" என்னும் அமெரிக்க நாவலில் கதாநாயகி முழங்காலை உபயோகித்து சம்பந்தப்பட்ட ஆணின் பெண்ணாசையை நிரந்தரமாக அழிக்கிறாள். ஜாவர் சீதாராமன் அவர்கள் எழுதிய "மின்னல் மழை மோகினியில்" மோகினி தன்னை வன்புணர வந்தவனை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை விலாவாரியாகக் கூறியிருப்பார். இதையெல்லாம் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். நாசுக்கு பார்த்து நிறுத்திக் கொள்வது தீமையில்தான் முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"சே, திருந்தவே மாட்டீங்க போல இருக்கு. உங்களையெல்லாம் திருத்த யார் வரணுமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்."

கூற வந்ததை விள்க்கிக் கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மனக்குமுறல் அவர்களே,

தவறுதலாக இப்பதிவில் இட்ட உங்கள் பின்னூட்டத்தை நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீக்கி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஒரு வேளை இப்படி முட்டாள்தனமாக இருப்பது தான் 'பெண்ணின் கற்பு நிலையோ, என்னவோ...."

அதே அதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மதுரா அவர்களின் இந்தப் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

இது சம்பந்தமாகத்தான் ஆண் பெண் கற்பு நிலை பற்றி 4 பதிவுகள் போட்டேன். பார்க்க

பதிவு 4
பதிவு 3
பகுதி 2
பகுதி 1

நீங்கள் அக்காலக்கட்டத்தில் அவற்றைப் படித்தீர்களா என்று தெரியவில்லை.

இப்பின்னூட்டத்தை நீங்கள் போடுவீர்களோ மாட்டீரகளோ என்பதை நான் அறியாததால் இதன் நகலை எனது நான்காம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

இந்த வாரம் நான் அடிச்ச கூத்துக்கு, வாங்கன குத்துக்கு, எது போலி எது நிஜம்னே தெரிய மாட்டேங்குது. நீங்க வேற படு ஃபேமஸான ஆளு. ஏதோ அதே பின்னூட்டத்தை இங்க போட்டதுனால அதைப் போட்டது போலி இல்லன்ற ஒரு உண்மையாவது தெரிஞ்சுது. நான் ஊருக்கு புதுசு; அரைகிறுக்கு. கத்திக் குத்துக்கு நடுவுல கவசமில்லாம நுழைஞ்சு பீஸ் பீஸ் ஆக்கிறப் போறாங்க என்ன எல்லா ஸைடும்! :) இப்போதைக்கு அவ்வளவு தான் விஷேஷம்! ...

உங்க பேரைச் சொன்னாலே காத்தாடிக்கிட்டிருக்க என் பதிவு கூத்தாடிக்கு கொண்டாட்டம் பதிவாய்ப் போயிரும். எனக்கு இருக்கிற அரை இஞ்ச் மூளையில எத எப்படி பாக்கதுன்னு தெரிஞ்சிக்கிற திராணி இல்ல. தெரிஞ்சப்புரம் வாயத் துறந்து வாங்கிகட்டிக்கிறேன். இப்போதைக்கு சொந்த செலவில சூன்யம் வச்சிக்கிறேன்.

Bajji(#07096154083685964097) said...

என்ன மதுரா? அதுதான் எலிக்குட்டி சோதனை இருக்கிறதே. டோண்டு சார் விரல்கள் தேய அதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் அளித்தாலும் புரிந்து கொள்ள மாட்டீர்களா? ஒரிஜினல் டோண்டுவின் ்்் போட்டோ மற்றும் பிளாக்கர் எண் ஒன்றாக மேட்ச் ஆனால் பின்னூட்டம் அவருடையதுதானே. மேலும் பின்னூட்டத்தின் நகலை வேறு தனது பதிவில் போட்டுள்ளார். அப்புறம் என்ன பிரச்சினை?

டோண்டு சார், உங்கள் ஆண் பெண் கற்புநிலை பதிவுகள் மிக அருமை. எதிர்த்துப் பின்னூட்டமிட்ட ஆண்கள் தங்கள் ஆணியப் புத்தியைக் காட்டினர். பெண்களோ எதிர்த்துப் பின்னூட்டமிடாவிட்டால் தங்களையும் முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து விட்டனர் என்றுதான் தோன்றுகிறது. மதுராவையே எடுத்துக் கொள்ளுங்களேன், பயந்துவிட்டாற்போலத்தானே தோன்றுகிறது?

முக்கியமாக, "புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வந்தால் அவன் மனைவி என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்விக்கு யாருமே நேர்மையான பதிலை வைக்கவில்லையே. எனது பதில்? உங்கள் கருத்தே எனது கருத்து.

நான் மேலே குறிப்பிட்ட எனது அப்பதிவின் உரல்: http://pongal2006.blogspot.com/2006/10/blog-post_29.html

கிருஷ்ணன்

dondu(#11168674346665545885) said...

நன்றி செர்வாண்டஸ். மதுரா அவர்களின் நிலை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் மதுரா அவர்களே, துணிந்து களம் இறங்கி விட்டீர்கள். பின்வாங்காதீர்கள் என்றுதான் என்னால் கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் பார்த்தேன் செர்வாண்டஸ் அவர்களே. நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி. ஆனால் அதை நீங்கள் முன்னால் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே? ஏதாவது வரிகளை விட்டு விட்டீர்களா?

எது எப்படியாயினும் அங்கும் போய் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

PPattian said...

Agree 100% percent. Would really like to watch a movie with a scene like that and the scene should be a serious one.. shouldn't be seen as a comedy...

வாழவந்தான் said...

//
ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?
//
அதற்கு கற்பு என்பது hymen சம்பந்தப்பட்டதா இல்லாம மனசு சம்பந்தப்பட்டதா இருக்கணும்.
வாடிக்கையாளராக போகாத நீதிபதிகளும், கற்பழிப்பு கேஸ்களில் இங்க தொட்டானா அங்க தொட்டானானு விசரனைங்கற பேர்ல இன்னொரு முறை வார்த்தைகளால் காயப்படுத்தாத சட்டங்களும், rapist க்கு அரபு நாடுகளில் தரப்படும் தண்டனைகளும் வேணும்..

வாழவந்தான் said...

இங்க 'நல்லவன்' தப்பு செய்யாதவன்னு சொல்றதைவிட மாட்டிக்காம தப்பு செய்யறவன் தான். எந்த ஒரு செயலும் தவறாகுவது அதை செய்பவன் கையும் களவுமாக மாட்டினால் மட்டுமே. எந்த செயலையும் நான் செஞ்சா சரி அடுத்தவன் செஞ்சா தப்புன்னு பார்க்ககூடாது.

கத்தி மேல் நடப்பது போன்ற விவாதம். இதன் முடிவு அவர் அவர் புரிதலை பொறுத்தது

சமீபத்தில் சென்னை காவல்துறை விபச்சார வழக்கில் வாடிக்கையாளரையும் தண்டித்தது என நினைக்கிறன். மேலும் விவரங்களை தேடித்தர முயல்கிறேன்.

என்னுடைய நிலைப்பாடு: ஒருவனுக்கு ஒருத்தி-இந்த ஒருவனோ, ஒருத்தியோ உயிருடனோ/ஒன்றாகவோ இருக்கும் வரை.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது