11/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4

இதன் முந்தையப் பதிவு இங்கே.

காமராஜ் அவர்களைப் பற்றி மேலே பதிவுகள் போட ஏதுவாக நூலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் கைதவறுதலாக என் வீட்டில் எங்கோ வைத்திருந்த “காமராஜை சந்தித்தேன்” என்னும் புத்தகம் – சோ அவர்கள் எழுதியது – கைக்குக் கிட்டியது. இது போதுமே அடுத்த சில பதிவுகள் போட, ஆகவே இப்போதே இந்த வேலையை தொடர்கிறேன்.

சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர். நேர்மையான ஒருவரைக் குறித்து இன்னொரு நேர்மையானவர் எழுதும் போதுதான் உண்மையான செய்திகள் வரும் என்பது பதிப்பகத்தாரின் கருத்து. எனது கருத்தும் அதுவே.

காமராஜர் அவர்களுடன் அவ்வளவு நெருங்கிப் பழகியவர் சோ அவர்கள். ஆனால் அவர்களது முதல் சந்திப்பு மோதலில்தான் ஆரம்பித்தது என்று கூறினால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அறுபதுகளின் ஆரம்பம். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் அப்போது. சோ குழுவின் நாடகம் “பால மந்திர்”க்காக சென்னை ஆர்.ஆர். சபாவில் நடந்து கொண்டிருந்தது. நாடகத்தின் பெயர் இப்புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும் அது “சம்பவாமி யுகே யுகே” என்னும் விஷயத்தை நான் வேறொரு இடத்தில் படித்துள்ளேன். கிருஷ்ண பரமாத்மாவே அவதரித்து இந்தியாவில் ஊழலை ஒழிக்க முயலுவதாகவும், அதில் அவர் தோல்வியடைவதாகவும் எழுதப்பட்ட கிண்டல் நாடகம் அது. அந்த நாடகத்துக்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு எப்படியோ சமாளித்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாடகத்துக்கு காமராஜ் அவர்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டிருக்கிறார். யார் அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றி அவரிடம் என்ன போட்டுக் கொடுத்தார்களோ, அது பற்றி மேடையிலேயே சோவுக்கும் அவருக்குமிடையில் வாத-பிரதிவாதம் எழுந்து, காமராஜ் அவர்கள் மேடையை விட்டு நீங்கினார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி வருத்தப்பட்டு சோ அவர்கள் பலமுறை பிறகு வெவ்வேறு தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். (என்னால் சோ அவர்கள் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது, அவர் இடத்தில் நானும் அவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் – அடேய் அடங்குடா டோண்டு ராகவா) ஆனாலும் சோ அவர்கள் உண்மையாகவே வருத்தப்பட்டிருக்கிறார். காமராஜ் அவர்களோ இந்த நிகழ்ச்சியைப் பற்றி பிறகு சோ அவர்களிடம் பிரஸ்தாபிக்கவேயில்லை. அதில்தான் அவரது பெருந்தன்மை வெளிப்படுகிறது. நடந்ததை மறைக்காமல் எழுதியதில் சோ அவர்களும் பெருந்தன்மையில் குறைவில்லாதவர் என்பதைக் காட்டுகிறது. (அடேய் டோண்டு!!! சாரி, பாஸ், நான் விடு ஜூட்).

கோணலாக முடிந்த முதல் சந்திப்புக்குப் பிறகு சோ அவர்கள் காமராஜரை 1968-ல் சந்தித்திருக்கிறார். பிறகு 1971-ல், பொதுத் தேர்தல்களுக்குப் பிறகுதான் அடுத்த சந்திப்பு. அதன் பிறகு நடக்கும் நிகழ்ச்சிகள்தான் இப்புத்தகத்தில் வருகின்றன. இதில் சோ அவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார். தான் கேட்டறிந்த ஒரு விஷயம் தவிர புத்தகத்தில் வருவன எல்லாம் அவரே நேரில் கண்டறிந்தவை என்று கூறியுள்ளார்.

கேட்டறிந்த விஷயம் சோ அவர்கள் தனது சித்தப்பாவிடமிருந்து கேட்டது. ரிசர்வ் பேங்க் எதிரே உள்ள சப்வேயை பற்றி. அது பற்றி சிறிய ஆலோசனைக் கூட்டம் ஒன்று. அதில் சோவினுடைய சித்தப்பாவும் ரயில்வேயின் சார்பில் கலந்து கொண்டார். சப்வே பற்றிய டெக்னிகல் விவரங்களைக் கூற வேண்டிய பொறுப்பு அவருக்கு. ஆங்கிலத்தில் கூறினால் காமராஜ் அவர்களுக்கு புரியுமோ புரியாதோ என்ற எண்ணத்தில் தட்டுத் தடுமாறித் தமிழில் அவற்றைக் கூற முயன்றிருக்கிறார். காமராஜ் அவர்கள் அவரை ஆங்கிலத்திலேயே கூறுமாறு பணித்து, எங்காவது சந்தேகம் ஏற்பட்டால் தான் கேள்வி கேட்டுக்கொள்வதாகக் கூற மீட்டிங் தொடர்ந்திருக்கிறது. அதே மாதிரி கூர்மையாக கவனித்து தேவையான விளக்கங்களையும் காமராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அப்போது மத்திய அரசு சார்பில் வந்திருந்த ரயில்வே ராஜாங்க மந்திரி திட்டத்துக்கு அதிகச் செலவாகும் ஆகவே அதைக் கைவிட வேண்டும் என்று பொருள்படக் கூற, காமராஜ் அவர்கள் ஆவேசத்துடன் “சப்வே வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அதை எப்படி நிறைவேற்றுவது” என்று மட்டும் பார்த்தால் போதும் என்றும், இது பற்றி பிரதம மந்திரியிடம் தாமே பேசப் போவதாகக் கூறி மீட்டிங்கை சரியான திசையில் போக வைத்திருக்கிறார்.

இதில் பல விஷயங்கள் தெரிய வருகின்றன.
1. தனக்கு ஆங்கிலம் புரியாது என்ற நினைப்பில் செயல்பட்ட அதிகாரியைக் கடுமையாகப் பேசாது அவரை ஆங்கிலத்திலேயே பேச ஊக்குவித்தப் பெருந்தன்மை,
2. தனக்குப் புரியாத இடத்தில் தயங்காது கேட்டு தெளிவுபடுத்திக் கொண்ட போலித்தனம் கலக்காத எளிமை,
3. முட்டுக்கட்டை போட முயன்ற மத்திய மந்திரியை சமாளித்து, மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் துடிப்பு,
4. பிரதம மந்திரியிடம் பேசுவேன் என்று கூறிய தன்னம்பிக்கை, அதாவது பிரதம மந்திரியை சம்மதிக்கச் செய்ய முடியும் என்ற நிச்சயமும் இதில் அடங்கும்,
5. சப்வேயை கட்டி முடித்த சாதனை.

காமராஜருடன் சோ நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது 1971 தேர்தலுக்கு முந்தைய மற்றும் அடுத்தக் காலக் கட்டம்தான். அது அடுத்தப் பதிவுகளில். அவற்றில் வரும் எல்லாமே சோ அவர்கள் கண்டறிந்தவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

fhygfhghg said...

//சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர். நேர்மையான ஒருவரைக் குறித்து இன்னொரு நேர்மையானவர் எழுதும் போதுதான் உண்மையான செய்திகள் வரும் என்பது பதிப்பகத்தாரின் கருத்து. எனது கருத்தும் அதுவே //


எல்லாஞ்சரி, வழக்கம்போல நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறதே!!

dondu(#11168674346665545885) said...

நகைச்சுவை? விளக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

fhygfhghg said...

விளக்க என்ன இருக்கிறது. சோவை காமராசருக்கு இணையாக நேர்மையானவர்னு சொல்லியிருப்பதைச் சொன்னேன்.

dondu(#11168674346665545885) said...

தீவிரவாத இயக்கங்களை பயங்கரமாய் எதிர்ப்பவர். அவற்றைப் பற்றி தனது கருத்துக்களை மிக தைரியமாய் எழுதியும் வருபவர். தீவிரவாதிகளும், கொள்ளையர்களும் …அவர்களின் தர்க்கங்களில் எள்ளளவு நியாயமிருந்தாலும், பாதை மோசமானது என்று சொல்லி துளியும் இரக்கம் காட்டாமல் எதிர்த்து வருபவர்.

பி.ஜே.பி தலைவர்கள், அந்தக் கட்சி மற்றும் த.மா.கா, மூப்பனார் போன்றோரிடம் மிகப் பரிவு கொண்டிருப்பவர். இருப்பினும் அவர்களை எங்கெங்கு திட்ட வேண்டுமோ அல்லது கிண்டல் செய்ய வேண்டுமோ அங்கே தயங்காமல் அவற்றையெல்லாம் செய்து, நார் நாராய் கிழிப்பவர்.

வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்.

எந்த ஒரு தலைவரின் தனிப் படத்தையும் அட்டையில் போட்டு கௌரவிக்காத துக்ளக் மூலம், நல்லகண்ணுவின் புகைப்படத்தைப் போட்டு, அவரின் நேர்மையான அரசியலைப் பற்றி ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்து எழுதியவர். நேர்மையான அரசியல் தலைவர்களை, அவர்களின் திறமைகளை பாராட்டத் தயங்காதவர். தனக்குக் கருத்து ரீதியாகப் பிடிக்காத தலைவர்களிடம் கூட, பாராட்டத்தக்க அம்சங்கள் இருந்தால்…சமயம் கிடைக்கும் போது, அதை வெளியே சொல்லத் தயங்காதவர்.

இட ஒதுக்கீட்டை வைத்துத் தற்போதைய அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டு வங்கி அரசியலை எல்லாம் புள்ளி விவரங்களோடும், ஒரு வக்கீலின் வாதாடும் திறமையோடும் விவாதிப்பவர்.

அசத்தலான நகைச்சுவை உணர்வும்,புத்தி கூர்மையும் கொண்டவர். அவர் இயக்கிய அரசியல் நகைச்சுவைப் படமான முகம்மது பின் துக்ளக், மற்றும் திரைப்படங்களைக் கிண்டலடித்து எடுத்த தொலைக்காட்சித் தொடரான சரஸ்வதியின் செல்வன் போன்றவற்றை இன்று பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்குமளவுக்கு தீர்க்கதரிசனப் பார்வையோடு எழுதி,இயக்கியவர்.

இது எல்லாவற்றையும் விட, சமீபத்திய குஷ்பு பிரச்சினை என்று மட்டுமல்ல, பெண்ணியம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் எப்போதும் நக்கலும், கிண்டலும் அடிக்கக் கூடியவர். குஷ்பு சொன்ன கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், ஆனால் அவரை எதிர்த்து நடத்தப்படும் போராட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அப்துல்கலாம் எது செய்தாலும் ‘ஆஹா ஓஹோ’ என்று பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுத ஆரம்பிக்கவும், எப்படி அப்துல் கலாம் எது சொன்னாலும் வியாபாரமாக்கப்படுகிறது என்று அதையும் கிண்டலடித்துத் தள்ளியவர். தமிழில் நையாண்டி, கண்ணியமான அரசியல் நகைச்சுவை போன்றவற்றில் தனி இடம் பிடித்து வைத்திருப்பவர்.

அவரது பல கருத்துக்களில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் அரசியலுக்கென்றே நடந்து வரும் பத்திரிக்கையில் கண்ணியமாகவும், வியாபார நோக்கத்திற்காக சமரசங்கள் செய்யாமலும் நடந்து வரும் ஒரே தரமான பத்திரிக்கை ‘துக்ளக்’ என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சோவும் சில இடங்களில் இடறியிருக்கலாம், அவரது கருத்துக்கள் சிலவற்றில் உடன்பாடு இல்லாமல் போகலாம்…ஆனால், தமிழகப் பத்திரிக்கையுலகிலும் இன்ன பிற கலைத்துறைகளிலும் அவருக்கென்று இருக்கும் இடம் அலாதியானது, அசைக்க முடியாதது! எல்லோருக்கும் பிடித்தமான விதமாக எந்த ஒரு மனிதராலும் இருந்து விட முடியாது…சோ மட்டும் விதிவிலக்கா என்ன?

முக்கியமாக தனது எம்.பி. தொகுதி நிதியை நேர்மையான முறையில் செலவழித்து, ஒழுங்காகக் கணக்கு காட்டுபவர். அவரைப் போன்று மற்ற எம்.பி.க்கள் இருந்தாலே போதுமே.

தனிமனிதர் தாக்குதல் செய்யாதவர். 1976-பிப்ரவரியில் கருணாநிதி அவர்களைக் கண்டாலே காத தூரம் மற்றவர் ஓடியபோது இவர் அவர் வீட்டுக்குச் சென்று தனது தார்மிக ஆதரவைத் தெரிவித்தவர்.

தன் நேர்மையான நடத்தையால் காமராஜ் அவர்கள் மனதைக் கவர்ந்தவர். இவர் நேர்மையில்லாதவர் என்றால் வேறு எவர் நேர்மையானவர் சாமி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சொலல்வல்லன் சோர்விலான், அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குறளுக்கு இலக்கணமானவ்ர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அக்குறள் காமராஜ் மற்றும் சோ இருவருக்குமே பொருந்தும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//சோ அவர்கள் காமராஜருடன் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர். அவரைப் போலவே நேர்மை, நாணயம் மிக்கவர்.//

:-))))))))))))))))))

Kodees said...

சோ அவர்கள் அவரது கருத்துக்கு நேர்மையானவர், ஒருத்தரை பிடிக்கலைனா அவரைப்பற்றி அவர் செய்த தவறுகளை எல்லாம் நேர்மையா சொல்லுவார், ஒருத்தரை பிடிச்சுதுன்னா அவரைப்பற்றி அவர் செய்த சிறப்புகளை எல்லாம் நேர்மையா சொல்லுவார்.

ஏங்க, இந்தப் பதிவு சோ-வைப் பற்றியா? காமராஜரைப் பற்றியா?

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டமிட்டதற்கு நன்றி லக்கிலுக் மற்றும் யாரோ ஒருவன்.

ஒரு நேர்மையானவர் பற்றி இன்னொரு நேர்மையானவர் எழுதியுள்ளார். அதைக் கூறுவதில் தவறு என்ன?

இந்த வரிசையில் அடுத்து வரும் ஒரு பதிவில் மாமனிதர் ராஜாஜி கூட வரப்ப்போகிறார். அதை எழுதுவதை விட இந்த டோண்டு ராகவனுக்கு வேறு என்ன வேலை இருக்கப் போகிறது?

சரி, இப்போதாவது காமராஜ் அவர்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கஞ்சா கருப்பு said...

சோவை பற்றி நான் கேள்விப்பட்டது அவ்வளவு உற்சாகமானதாய் இல்லையே. நீங்கள்தான் அவரை மெச்சிக் கொள்கிறீர்கள்.

காமராஜர் இறந்த பிறகுதான் நான் பிறந்தேன். நல்ல மனிதராகத்தான் தோற்றமளிக்கிறார். அவரைப் புகழும் நீங்கள் ராஜாஜியையும் புகழ்வது விந்தையாகத்தான் உள்ளது. இருவரும் அரசியலில் எதிர் துருவங்கன்னு சொல்றாங்களே?

அன்பன்,
முகம்மது யூனுஸ்

dondu(#11168674346665545885) said...

முகம்மது யூனுஸ் அவர்களே,

நான் சோ அவர்களை பற்றியும் மாமனிதர் ராஜாஜி அவர்களைப் பற்றியும் எழுதிய பதிவுகளில் போய் படிக்கவும். அங்கு பின்னூட்டமிடுதல் அதிகப் பொருத்தமாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கட்டபொம்மன் போட்ட கமெண்டை என்ன செய்தாலும் பப்ளிஷ் செய்ய இயலவில்லை. ஆகவே அப்படியே நகலெடுத்துப் போடுகிறேன். நன்றி கட்டபொம்மன்.

கட்டபொம்மன் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4":

My opinions generally differ from Cho's. Yet I agree he is quite honest journalist. This cannot be said of others.

His writings are pungent but sincere. His views about Kamaraj are one of the few things I share with him. Difficult to believe that a person like Kamaraj was Tamil Nadu's chief minister.

Kattabomman

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Natrajan said...

Perunthalavarippatri innum innum arinthukolla : Thiru Veerapandian (SUN TV) thoguttha "agattum parkkalam" oru murai pattithuvidugal. Pathiputthgam paddithuvitte palamurai azhuthuvitten

natrajan

dondu(#11168674346665545885) said...

"agattum parkkalam"
ஆகட்டும் பார்க்கலாம்.:))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது