11/26/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5

இதன் முந்தையப் பதிவில் குறிப்பிட்டபடி சோ அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்தே தொடர்கிறேன்.

இக்கால அரசியலை நேரில் கண்டுவரும் நாம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் விரோதம் பாராட்டுவதையும் பார்க்கிறோம். ஆனால் ஒரு ஆறுதல் இந்த அநாகரிகப் போக்கு தமிழகத்தில் மட்டும்தான், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அவ்வளவாக இல்லை. இன்னும் கூறிக் கொண்டே போகலாம், ஆனால் இப்பதிவுக்குத் தேவையானது இவ்வளவுதான்.

தமிழக அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் இரு துருவங்கள் என்பது தெரிந்ததே. ராஜாஜி அவர்களும் சத்தியமூர்த்தி அவர்களும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். சத்தியமூர்த்தி அவர்களைத் தன் குருவாக எண்ணியவர் காமராஜர் அவர்கள். ஆக ராஜாஜிக்கும் காமராஜருக்கும் கருத்து வேற்றுமைகள் அனேகம். ஆயினும் தனிப்பட்ட முறையில் இருவருமே ஒருவரை ஒருவர் மதித்தனர் என்பதையே இப்பதிவில் வலியுறுத்த விரும்புகிறேன்.

சோ அவர்கள் இது பற்றி குறிப்பிட்டது இதுதான்.

கடுமையான மோதல்கள், அவற்றால் ஏற்பட்ட மனகசப்புகளை மறுப்பதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சி ராஜாஜியின் அரசியல் ஞானத்தையும் அவரது அறிவையும் மனதில் நிறுத்தி காமராஜர் அவரை வெகுவாக மதித்தார். ராஜாஜி ஒரு அறிவாளி என்பதை விட அவர் ஒரு மேதாவி என்பதே பொருந்தும். அரசியல் அறிவில் அவரை மிஞ்சக் கூடியவர்கள் வெகு சிலரே இருக்க முடியும். நிர்வாகத் திறமையிலும் அவ்வாறே. ஆனால், அறிவாளிகளுக்கெ உரித்தானப் பிடிவாதமும் ராஜாஜியிடம் உண்டு. அவர் ஒரு போதும் தனது கொள்கைகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆகவே வளைந்து கொடுத்து, எதிராளியைத் தட்டி வேலைவாங்குவதில் அவர் அவ்வளவாக ஈடுபாடு செலுத்தவில்லை. ஆனால் காமராஜரோ விட்டுப் பிடித்து காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்.

ஆகவே 1971 தேர்தலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் காமராஜரின் பழைய காங்கிரஸும் சேர்ந்து கூட்டமைத்ததுதான் அத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக இருந்திருக்குமா என்பது சோ அவர்களின் ஐயம். ஆகவே இந்த நிலையிலாவது ராஜாஜியுடனான கூட்டை முறிச்சிக்கலாமே என்ற மெல்லிய எண்ணம். இதை அவர் மெதுவாக காமராஜ் அவர்களிடமே கேட்டு வைக்க, சீறி எழுந்தார் அவர். சோ அவர்களது வார்த்தைகளில்:

"காமராஜின் பெரிய மனது திறந்தது. காமராஜ் என்ற அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டு நின்ற காமராஜ் என்ற மனிதர் விஸ்வரூபம் எடுத்து நின்றார். பெருந்தன்மை வார்த்தைகளாக உருவெடுத்து என் முன்னே நர்த்தனமாடியது. 'தோத்துட்டோம்கிறதுக்காக எல்லாத்தையும் மறந்துடறதா? நம்ம தோத்ததுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல்லே கையிலே பணம் இல்லெ. ஏமாத்தறவங்களைத்தான் ஜனங்க நம்புறாங்கன்னு ஆயிடுச்சு. எல்லாத்துக்கும் சேத்து ராஜாஜி தலை மேலே பழியைப் போடச் சொல்லறீங்களா? ஜெயிப்போம்னு நெனச்சு தானே அவரோட சேந்தோம்னேன்! ஜெயிக்கணும்னா வேண்டியவரு; ஜெயிக்காட்டி வேண்டாதவரா? அவர் என்ன கெடுதல் செய்துப்புட்டாரு? அவரும் நானும் நிறைய விஷயங்கள்லே ஒத்துப் போறதிலலே. ஆனா தேசம் நல்லா இருக்கணும், மக்கள் நல்லா இருக்கணும்னு அவருந்தானே விரும்பறாருன்னேன்? அதை ஒத்துக்கிட்டுத்தானே கூட்டு சேர்ந்தோம்?"

"இது எல்லாத்துக்குமா சேர்த்து ராஜாஜியாலேதான் தோத்துட்டோம்னு நினைச்சிக்கிட்டா யாரை ஏமாத்தப் போறோம்? அவரு நம்ம கூட இருக்காருங்கறத்துக்காவே, அந்த மரியாதைக்காகவேகூட நமக்கு அதிகமா ஓட்டு வந்திருக்கலாம் இல்லியா?"

"...காமராஜின் பரந்த உள்ளம் அலைகடல் போல் அங்கு பரந்து விரிந்து கிடந்தது. அந்தக் கடலோரத்தில் நின்று அரசியல் விமரிசகன் என்ற முறையில் நான் குறுகிய நோக்கோடு கூறிய வார்த்தைகளை நினைத்து வெட்கித் தலை குனிந்து அந்தக் கடலின் அலைகளில் என் கால்களை நனைத்து, பாவத்தைக் கழுவிக் கொண்டேன்."

1967 தேர்தலில் காமராஜர் தோல்வி கண்டார். தி.மு.க.வைச் சேர்ந்த பெ.ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் அல்லவா. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்னமோ தான் பெரிய சாதனை படைத்ததைப் போல எண்ணிக் கொண்டு பீற்றிக் கொண்டு காமராஜரது நடவடிக்கைகளியெல்லாம் தரக்குறைவாக விமசரித்து வந்தார். அவரைத் தனியாகக் கூப்பிட்டு அண்ணா அவர்கள் கண்டித்தார். பிறகு அவர் தயாரித்த அமைச்சரவைப் பட்டியலில் அந்த வேட்பாளரின் பெயர் இல்லை. அந்த வேட்பாளர் ராஜாஜி அவர்களிடம் போய் தனக்காக அண்ணா அவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மூதறிஞர் ராஜாஜி தெரிவித்தக் கருத்து இது:

"கென்னடி ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன்தான. ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டு அந்த ஆளை கீழே சாய்ச்சுடுச்சு. அதுக்காக அந்த புல்லட்டை எடுத்து வெச்சி அங்கே எவனாவது கொண்டாடினானா என்ன?"

மேலும் இப்புத்தகத்திலிருந்து எடுத்து வரும் பகுதிகளில் பேசுவேன்.

சோ அவர்களது புத்தக விவரம்:
காமராஜை சந்தித்தேன்
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
நான்காம் பதிப்பு மார்ச் 2002.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

dondu(#11168674346665545885) said...

பீட்டா பிளாக்கர் வைத்திருக்கும் இப்பதிவரின் பின்னூட்டம் பிளாக்கரில் ஏறாமல் மக்கர் செய்கிறது. ஆகவே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கட்டபொம்மன் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5":

Good posting. Had a nice insight.

Kattabomman
http://kattabomman.blogspot.com/

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by கட்டபொம்மன் to Dondus dos and donts at 11/28/2006 10:01:36 AM

dondu(#11168674346665545885) said...

இந்தப் பதிவரும் பீட்டா பிளாக்கர்தான் வைத்திருக்கிறார். அவருக்கும் இதே பிராப்ளம்தான். இங்கும் அதே காப்பி பேஸ்ட்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Bajji(#07096154083685964097) has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 5":

காமராஜ் அவங்களைப் பத்தி நீங்க போடும் பதிவுங்களை என்னோட நாயினா ரொம்ப விரும்பிப் படிக்கச் சொல்லி கேப்பாரு. அவருக்கு காடராக்ட் ஆப்பரேசன் அதனால் ஒண்ணும் படிக்க இயலாது. நாந்தேன் அவருக்கு எல்லாம் படிச்சுட்டு சொல்றது.

நீங்க 1971 தேர்தல் தோல்வி பத்தி எழுதியிருப்பதைப் பார்த்து ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆயிட்டாரு. அதுவும் ராஜாஜியை விட்டுக் கொடுக்காம பேசினது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அடுத்து ராஜாஜி காமராஜை பத்தி பெ.சீனுவாசன்கிட்ட சொன்னதும் அவருக்கு பிடிச்சிருந்தது.

உண்மை சொல்லனும்னா அவருக்கு ராஜாஜி மேல் வருத்தம் உண்டு. ஆனாலும் இதைப் படிக்கக் கேட்டுட்டு பெரியமனுசங்க ரெண்டு பேருமேதான். ஆனா என்ன செய்ய, அரசியல்லெ இப்படி எதிரெதிர் கட்சில்லேன்னா இருந்தாங்கன்னு வருத்தப்பட்டாரு.

பஜ்ஜி

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Bajji(#07096154083685964097) to Dondus dos and donts at 11/28/2006 09:56:59 AM

Bajji(#07096154083685964097) said...

காமராஜ் பற்றி நீங்கள் எழுதுவது எங்களைப் போன்ற இந்தத் தலைமுறையினருக்கு நிச்சயம் உப்யோகமாக இருக்கும். நன்றி டோண்டு சார்.

கிருஷ்ணன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

திண்டுக்கல் பெ.சீ பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கு மிக்க நன்றி.
எங்கள் அலுவலகத்தில் ப்லொக்கையெல்லம் blockகி விடுகிறார்கள். அவ்வப்போது ரேஷன் மாதிரி படிக்க விடுகிறார்கள். எங்கே நிறைய எழுதியிருபீர்களோ, படிக்காமல் விட்டு விட்டேனோ என்று நினைதிருந்தேன்

dondu(#11168674346665545885) said...

நன்றி கிருஷ்ணன் அவர்களே. இன்னும் எழுதுவேன்.

அன்புள்ள,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

" எங்கே நிறைய எழுதியிருபீர்களோ, படிக்காமல் விட்டு விட்டேனோ என்று நினைதிருந்தேன்."

அதாவது இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களா சிவப்பிரகாசம் அவர்களே. எழுதினால் போச்சு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கஞ்சா கருப்பு said...

"அதாவது இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறீர்களா சிவப்பிரகாசம் அவர்களே. எழுதினால் போச்சு."

ரொம்ப நன்றி டோண்டு சார்.

முகம்மது யூனுஸ்

D. Chandramouli said...

Dear Mr. Raghavan
Wow! Kamaraj's rejoinder to Cho about Rajaji was very touching. Kamaraj was large-hearted to accept the greatness of Rajaji, despite differences. I have heard such sentiments between Periar and Rajaji also. Golden age of decency and mutual respect among leaders then.
Chandramouli

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது