2/07/2009

பரீட்சைக் கனவும் ஒரு ஹைப்பர்லிங்கும்

இது ஒரு மீள்பதிவு. காரணத்தை பிறகு கூறுகிறேன். இப்பதிவை முதலில் போட்டது ஏப்ரல் 2005-ல் என்பதை மட்டும் நினவில் கொள்ளுங்கள். பழைய பதிவில் சில மாறுதல்களும் செய்துள்ளேன்.

எனக்கு அடிக்கடி ஒரு கனவு வரும்.

அதாகப்பட்டது, நான் இன்னும் பொறியியல் பரீட்சைகள் அதனையும் பாஸ் செய்யவில்லை என்று திடீரென்று கல்லூரியிலிருந்துக் கார்டு வரும். நீங்கள் நான்காம் வருடக் கணக்குப் பேப்பர் இன்னும் க்ளியர் செய்ய வேண்டியுள்ளது. தவறுதலாக உங்களுக்கு டிகிரி கொடுத்து விட்டோம் என்று அதில் குறிப்பிட்டிருக்கும்.

நான்காம் வருடக் கணிதமா? அதில் என்னக் கற்றுக் கொண்டேன் என்பது அப்போது நினைவுக்கு வராது. அந்த நிலையில் பரீட்சை எழுதுவதாவது? சுழிதான். இதன் வேரியேஷனாக எங்கள் தமிழ் வாத்தியார் நரசிம்மாச்சாரியார் வேறு கனவில் வந்து, தமிழ் பரீட்சைக்கு தயாரா என்றுக் கேட்க, பொறியியல் கல்லூரியில் தமிழ்ப் பாடம் கிடையாது என்பது கூட அந்த பதட்டத்தில் மறந்து விடும்.

முழித்துக் கொண்ட பிறகு சிறிது நேரம் கழித்துத்தான் யதார்த்த நிலைக்கு வர இயலும். மறுபடி பரீட்சை எழுதியப் பிறகுதான் இக்கனவு நிற்குமோ?

இப்போது (ஏப்ரல் 2005) 11-ஆம் வகுப்புத் தேர்வை எழுதி விடுமுறையில் சென்றிருக்கும் மாணவர்களுக்கு தாக்கீது அனுப்பியிருக்கிறார்கள், இன்னும் ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்று. ஏனெனில் சுற்றுப்புறச்சூழல் பரீட்சை வைக்க மறந்து விட்டார்களாம். அதற்கும் மேலாக அப்பாடத்தையே நடத்த மறந்து விட்டார்களாம்.

இதில் ஹைப்பர்லிங்க் எங்கிருந்து வந்தது? கூறுகிறேன்.

வருடம் 1987. என் மனைவி அப்போது இந்தியன் வங்கியில் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். அவர் பணிபுரியும் வங்கிக்கிளையின் மேலாளர் திரு ஜகந்நாதன் அவர்கள். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறினார்: "புகுமுக வகுப்பு படிக்கும்போது எங்கள் கல்லூரியில் தர்க்கச்சஸ்திரம் மற்றும் மனோதத்துவப் பாடங்களை ஒன்றாக வைத்து பேஜார் செய்தனர்". நான் உடனே அவரிடம் "உங்களுக்கு தர்க்கசாஸ்திரம் பாடம் எடுத்தது முகம்மது காசிம் அவர்கள்தானே என்று கேட்க என்னைத் திகைப்புடன் பார்த்தார். மேலும் அவரிடம் அவ்ருக்குப் பாடம் எடுத்த மற்ற ஆசிரியர்களைப் பற்றிக் கேட்க அவர் திகைப்பு இன்னும் அதிகரித்தது. பிறகு அவரிடம் சமீபத்தில் 1962 - 63 கல்வியாண்டில் புதுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் ஏழாவது பேட்சில் படித்தாரா என்றும் கேட்டதில் மேலும் திகைப்படைந்தார்.

பிறகு நான் அவரிடம் அதே கல்லூரியில் இரண்டாம் பேட்சில் படித்ததைக் கூறினேன். 1963-ல் புதுக்கல்லூரியின் இப்பிரச்சினை மிகப் பிரபலம் அடைந்தது என்றும் கூறினேன். இரண்டு பரிட்சைகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டதில் நிர்வாகம் முழிபிதுங்கியது. அச்சமயம் கல்லூரி முதல்வர் மதிப்புக்குரிய அல் ஹஜ் அஃப்சல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் வாஹப் புகாரி அவர்கள். நிர்வாகத்தினர் செய்தத் தவறுக்கு நேரடியாகத் துணைவேந்தரிடம் சென்று மன்னிப்பு கேட்டார். அவரைப் பொறுத்தவரை மாணவர்களின் நலம்தான் முக்கியம். சம்பந்தப்பட்ட மாணவர்களை அவ்விரண்டுப் பரீட்சைகளும் நடந்த அன்று தனியாக கோட்டையில் வைத்து அவர்கள் பரீட்சை எழுத வகை செய்யப்பட்டது. இம்மாதிரி நட்ந்தது இதுவே முதல் மற்றும் கடைசித் தடவை என்று அறிகிறேன்.

ஆனால் ஒன்று, இம்மாதிரி கனவுகள் எனக்கு எப்போதுமே பொறியியல் சம்பந்தமான படிப்பு சம்பந்தமாகத்தான் வரும். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் சம்பந்தமாக வராது. அது அப்படித்தான் என்பதை நேற்றுதான் கண்டு கொண்டேன்.

நேற்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது ஜெர்மன் மொழிக்கான ஆன்லைன் தேர்வு க்விஸ் பாணியில் இருந்த ஒரு பக்கத்துக்கு எதேச்சையாக வந்தேன். அத்தனையும் இலக்கணம், வாக்கிய அமைப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கேட்கப்படும் கேள்விகள். மொத்தம் ஐம்பது கேள்விகள் பல கோணத்தில். Advanced தேர்வு லெவல். பரீட்சைக்கு நேரம் வேறு 30 நிமிடங்கள் என குறித்திருந்தனர். நான் பாட்டுக்கு விளையாட்டாக கேள்விகளுக்கான சரியான விடைகளை (மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள்) டிக் செய்து கொண்டே போய் கடைசியில் தேர்வு முடிவை அடைய அதற்கான பெட்டியில் சொடுக்கினேன். 29 நிமிடங்களில் தேர்வு முடிந்திருந்தது. ஐம்பதுக்கு நாற்பத்தெட்டு மதிப்பெண்கள், Sehr gut (மிக நன்று) என்னும் கிரேட் கிடைத்தது.

சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என பிரெஞ்சுக்கும் அதையே செய்து பார்த்தல் ஐம்பதுக்கு நாற்பத்தி ஏழு மதிப்பெண்கள் (28 நிமிடம்) Très honorable (மிகவும் மதிப்புக்குரிய) என்னும் கிரேட் கிடைத்தது. அப்போதுதான் ஏன் இந்த மொழிகளுக்கான தேர்வுகள் பற்றி மட்டும் கனவு வருவதில்லை என புரிந்தது.

அதெல்லாம் இருக்கட்டும் பெரிசு, தமிழ் மொழிக்கான தேர்வு மட்டும் எப்படி கனவில் வந்தது எனக் கேட்கும் முரளி மனோகருக்கு நான் ஊகத்தில் கூறும் பதில் இப்படித்தான் இருக்க வேண்டும்.

தமிழிலும் வெறும் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்புகள் பற்றி மட்டும் கேட்டிருந்தால் ஊதித் தள்ளியிருப்பேனாக இருந்திருக்கும். தமிழ்ப் பாடத்தில் என்னென்னவோ விஷயங்கள் எல்லாம் பாடமாக வைப்பார்களே. அவற்றில் பல நெட்டுரு அல்லவா செய்ய வேண்டியிருக்கும்? அதெல்லாம் தயாரிப்பு இல்லாமல் திடீரென தேர்வு எழுத முடியாதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

வெண்பூ said...

நல்லா எழுதியிருக்கீங்க சார்.. எல்லாருக்குமே அடிமனசில இருக்குற பயம் இப்படி கனவா வரும்னு நெனக்கிறேன். இப்போதைக்கு ஐடில இருக்கிற எல்லாருக்கும் கனவுல வர்றது பிங்க் ஸ்லிப்பாத்தான் இருக்கும்..

Anonymous said...

1."ஸ்வீட் ட்ரீம்ஸ்" "வெட் ட்ரீம்ஸ் " விளக்கவும்?
2.உங்கள் அனுபவம் எப்படி?
3.எத்தனை வயது வரை மருத்துவ ரீதிரியாக இந்த வகை கனவுகள் சாத்யம்?
4.இதற்கு ஏதாவது ஹைபெர் லிங் உண்டா?
5.அதிகாலை காணும் கன‌வுகளுக்கு நடக்கும் என பலன் சொல்வது உண்மையா?
6.வானில் பறப்பது போல் கனவு காண்பவர் பொருளாதார உச்சிக்கு செல்லும் செய்தி சொல்வதாக உள்ளது மிகைபடுத்தும் செயலா?
7.கன்வுகளை கூட பதிவு செய்து பின் பார்க்கும் வசதி செய்யப்பட்டுவிட்டது பற்றி?
8.கன்வுகள் ஆழ்ந்த தூக்கமா?இல்லையா?
9.பகலில் காணும் கனவுக்கும் இரவுக் கனவுக்கும் விதியாசம் என்ன?
10.சிலசமயம் கனவுகள் தடை பெற்ற பிறகும் சீரியல் போல் தொடர்வது எப்படி?

வால்பையன் said...

//அல் ஹஜ் அஃப்சல் அல் உலேமா சையத் அப்துல் சாஹேப் வாஹப் புகாரி//

எவ்வளவு அருமையான பெயர்
(புகாரி ஹோட்டல் இவருடயது தானா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது