11/18/2007

நம்பிக்கை நட்சத்திரம் ரஜனி

ஒரு வேலைக்கான நேர்க்காணலுக்காக பலர் வந்துள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நேர்க்காணல் 11 ஆகியும் துவங்கவில்லை. அதற்கான அதிகாரி இன்னும் வரவில்லை. அவர் வருகிறார் ஆடி அசைந்து கொண்டு 12 மணிக்கு. கூடவே ஒரு பெண்ணும் வருகிறார். உள்ளே போய் பேசுகின்றனர் இருவரும். எந்த வேலைக்கான நேர்க்காணல் நடக்கவுள்ளதோ அதே வேலைக்காக சிபாரிசுடன் வந்திருக்கிறார் அப்பெண்.

"கவலை வேண்டாம் பிரீத்தி, உனக்குத்தான் அந்த வேலை" என்று சொன்ன அதிகாரி, பியூனை அழைத்து நேர்க்காணல கேன்சல் என்று வெளியில் காத்திருப்பவர்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். எல்லோரும் நொந்து கொண்டே அங்கிருந்து கிளம்ப, அவர்களில் ஒரே ஒரு பெண்மணி யாரையும் போக வேண்டாம் எனக் கூறுகிறார். இவ்வளவு நேரம் எல்லோருடைய நேரத்தையும் வீணடித்ததற்கு கம்பெனி பொறுப்பேற்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு எல்லோரையும் அப்படியே அமரச் செய்கிறார். வெளியில் அந்த அதிகாரியும் அவருடன் உள்ளே சென்ற அப்பெண்ணும் வெளியில் வருகின்றனர். இந்தப் பெண்மணி நேரடியாகவே அப்பெண்ணிடம் "நாங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்க, நோகாமல் வந்த உனக்கு வேலை, இது நியாயமா" எனக்கேட்க, அப்பெண் பேய்முழி முழிக்கிறார்.

இதற்குள் அந்த அதிகாரிக்கு வேண்டாத இன்னொரு ஊழியர் ஓசைப்படாது தலைமை நிர்வாகிக்கு ஃபோன் போட்டு அவரைப் போட்டுக் கொடுக்க, அவரும் துரிதமாக அந்த இடத்துக்கு வருகிறார். அவரிடமும் நியாயம் கேட்கிறார் இப்பெண்மணி. சம்பந்தப்பட்ட அதிகாரி முகத்தில் டன் டன்னாக அசட்டுக்களை. தலைமை நிர்வாகியிடம் அப்பெண்மணி "முறையான நேர்க்காணல்" நடத்துமாறு கேட்டுக் கொள்கிறார். இத்தருணத்தில் தான் வேலை பெறுவது பிரச்சினையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தன்னைத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை என கூறி விடுகிறார். பிறகு நடக்க வேண்டியவை நடந்து சரியான தேர்வு நடக்கிறது.

இதைக் கண்ட பொது மக்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அடுத்து வந்த வாரங்களில் இதே பெண்மணி பல அவதாரங்கள் எடுக்கிறார். அடாவடி செய்யும் டாக்சிக்காரருக்கு பாடம் கற்பிக்கிறார். கேஸ் சிலிண்டர் அளிப்பதில் இருக்கும் நிர்வாகக் கோளாறுகளை சரி செய்கிறார். போலிச் சாமியாரை பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை அவள் விருப்பத்துக்கு மாறாக அவள் தந்தையை வற்புறுத்தி மணம் செய்ய நினைத்தவன் பக்கத்தில் அவனை விட 20 வயது அதிகம் உள்ள பெண்மணியை உட்கார வைத்து அவனை அவமானப்படுத்துகிறார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் டொனேஷன் கெடுபிடிகளை அம்பலமாக்குகிறார். வெறும் மலச்சிக்கலுக்கு இல்லாத டெஸ்டுகளையெல்லாம் இவரது மாமியாருக்கு செய்வித்து சம்பந்தப்பட்ட சோதனைச் சாலைகளிடம் கமிஷன் அடித்த டாக்டரை பதம் பார்க்கிறார்.

பிறகு சில மாதங்கள் ஓய்வு. இம்முறை திரும்பவரும்போது அவர் சமாளிக்கும் பிரச்சினைகள் அதிக சிக்கல்களாக ஆகின்றன. அப்போதைக்கப்போது தீர்த்துவைக்க இயலாத அவற்றை தீர்க்க சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். உதாரணத்துக்கு தங்கள் காருக்கு முன்னால் சென்ற கார் ஒருவனை மோதித் தள்ளிவிட்டு விரைவாக சென்றுவிட, இவரும் இவர் கணவரும் அடிப்பட்டவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க படும் கஷ்டங்கள். போலீஸ் வந்து அவரது கணவனையே சந்தேகத்தின் பெயரில் கைது செய்து தெரியாத்தனமாக போயும் போயும் இவரிடம் லஞ்சம் கேட்க, அவர் பொங்கியெழுந்து ருத்ரதாண்டவம் ஆடி சம்பந்தப்பட்ட போலீஸ்காரனுக்கு பாடம் கற்பிக்கிறார். ஆனால் இதை செய்ய மூன்று வாரங்கள் ஆகின்றன. ஆனால் மொத்தமாக நிகழ்ச்சிகள் நடக்கும் காலக்கட்டமோ சில மணிகளே.

சற்று குழப்பமாகத் தோன்றுகிறதா? நான் இத்தனை நேரம் குறிப்பிட்டது சமீபத்தில் 1985-ல் தொலைக்காட்சியில் வந்த "ரஜனி" என்னும் ஹிந்தி சீரியலே. ரஜனியாக வந்து போடுபோடென்று போட்டவர் ப்ரியா டெண்டுல்கர். அவரது கணவராக நடித்தவர் கரண் ராஜ்தான் என்பவர். உண்மை வாழ்க்கையிலும் அவரது கணவர் அவர். இந்த சீரியல் அமோக வெற்றி பெற்றது. ப்ரியாவை எல்லோரும் ரஜனி என்றே அழைத்தனர்.

இந்த சீரியலை எடுத்தவர் பாசு சாட்டர்ஜி என்பவர். இந்த சீரியல் பலரை வேவ்வ்று முறையில் பாதித்தது. அதற்கு ஒரு உதாரணம் நசீருத்தின் ஷா நடித்த ஜல்வா என்னும் திரைப்படம். நசீருத்தின் ஷாவும் அவர் நண்பரும் ஒரு டாக்சியில் ஏறுகிறார்கள். டிரைவருக்கு முன்னால் ஒருவருடைய புகைப்படம். அது யாருடையது என்று யதார்த்தமாகக் கேட்க டாக்சி ட்ரைவர் பொங்கி எழுகிறார். "அது பாசு சாட்டர்ஜியின் படம். ரஜனி சீரியல் எடுத்தவர். டாக்சி டிரைவர்களை ரொம்பவே தாக்கி அதில் ஒரு எபிசோட் வருகிறது. டாக்சி டிரைவர்களின் கஷ்டங்களைப் பற்றி அதில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆகவே அவரை நேரில் பார்த்தால் செருப்பால் அடிக்க வேண்டும்" என்றெல்லாம் அவர் உணர்ச்சி வசப்படுகிறார். இப்போதுதான் வேடிக்கை. இவர்கள் சேர வேண்டிய இடம் வர இறங்கிக் கொள்கின்றனர். அப்போது அப்பக்கம் வந்து டாக்சியில் இன்னொருவர் ஏற யார் என்று பார்த்தால் நிஜமாகவே பாசு சாட்டர்ஜிதான் அது. ஒரு நிமிடம் டாக்ஸி டிரைவர் திகைக்கிறார். நசிருத்தீன்ஷாவும் அவரது நண்பனும் பேச்சு வராமல் தவிக்கின்றனர். அடுத்த காட்சியில் டாக்சி டிரைவர் கையில் செருப்பை எடுத்து கொண்டு பாசு சாட்டர்ஜியைத் துரத்துகிறார். அவர் குதிகால் பிடரியில் பட ஓடுகிறார். அதை நினைத்து நினைத்து நண்பர்கள் சிரிக்கின்றனர்.

இந்த சீரியல் பல விஷயங்களைக் கூறுகிறது. நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. கேளுங்கள் தரப்படும், புகார் எப்படி செய்வது என்பதையெல்லாம் சுருக்கமாகக் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக நான் போட்ட பதிவுகள்:
1
2
3

ரஜனி அவர்களோ, நேரடி நடவடிக்கைதான்.

ப்ரியா டெண்டுல்கர் 2002-ல் மாரடைப்பில் காலமானார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

பல்லு பிச்சை said...

10 அணிக்கு ஆரம்பிக்க வேண்டியது 12 அணிக்கு ஆரம்பிச்சா தான் தப்பு. 12 மணிக்கு ஆரம்பிச்சா தப்பு இல்ல :).

dondu(#11168674346665545885) said...

எழுத்துபிழையைக் காட்டியதற்கு நன்றி. சரி செய்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகளை வைத்து கேலி செய்பவர்களை இகழ்ந்தும், அறிவுரைகள் வழங்கியும் நீங்கள் போடுகிற பதிவுகள் சூப்பர்.

M Poovannan said...

சபாஷ் அடுத்து என்ன 'மனாளனே மங்கையின் பாக்கியம்' பட விமர்சனமா ?

Anonymous said...

இந்தத் தொடரை தொடர்ந்து பார்த்ததன் பின்னரும் உங்களுக்கு புத்தி தெளிவாக இருக்கிறது என நீங்கள் நம்புவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

புள்ளிராஜா

enRenRum-anbudan.BALA said...

Rajini was a good serial, I used to see that.

Your recap is very good !

Actually I came here thinking that this posting was about SUPER STAR :)

Anonymous said...

//// ரஜனி போன்றவர்களைப் பாராட்டியும், வேலைக்காரிகளை வைத்து கேலி செய்பவர்களை இகழ்ந்தும், அறிவுரைகள் வழங்கியும் நீங்கள் போடுகிற பதிவுகள் சூப்பர்.////

அட்வைஸ் எல்லாம் அடுத்தவர்களுக்குத்தான்.

அவர் போட்ட பதிவிலிருந்த வாக்கியங்களை தொடர்புடைய காண்டெக்ஸ்ட்டில் பொருத்தி பின்னூட்டமாகப் போட்டால், அதை போடக்கூட தைரியமில்லாத ஆள்தான் இந்த டோண்டு.

போடப்பட்ட காமெண்ட் ஆபாசமாக இல்லையென்றால் போடவேண்டியதுதானே. அல்லது, தவறு என்றால் அது தவறு ஏற்றுக்கொள்ள முடியாது பின்னூட்டம் போட்டவரின் கற்பனை என்று சொல்லிவிடவேண்டியதுதானே.

ஆனால், இந்த அதெல்லாம் செய்யமாட்டார். அப்படி ஒரு பின்னூட்டம் வந்ததே தெரியாமல் மறைத்துவிடுவார். இதுதான் டோண்டுவின் லச்சனம். இந்த லச்சனத்தில் ஊருக்கு உபதேசம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது