6/15/2008

சோ அவர்கள் எழுதிய 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' - 3

சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் -2 எழுதியதற்கு பிறகு வேறு பதிவுகள் கவனத்தை ஈர்த்ததால் இங்கு சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது.

போன பதிவில் சொன்னதைப் போல இந்த பதிவிலிருந்து அடுத்த சில பதிவுகள் அவரது நாடகங்களை மையமாக வைத்துத்தான் வரும். இருப்பினும் இன்னும் ஒரு கொசுறு தகவல் அவர் வழக்கறிஞர் என்ற ஹோதாவில் செய்ததைக் கூறியே ஆக வேண்டும். அதுவும் அவர் நாடக அனுபவத்துடனேயே சேர்ந்துள்ளது.

அவரது முக்கியமான நாடகங்களில் ஒன்றுதான் "சம்பவாமி யுகே யுகே". எப்போதெல்லாம் பாபங்கள் இப்பூவலகில் அதிகரிக்கின்றனவோ அப்போதெல்லாம் தான் அவதரிக்கப் போவதாக கிருஷ்ணன் கீதோபதேசத்தில் அருச்சனனை நோக்கிக் கூறியதை மையமாக வைத்து சோ அவர்கள் இந்த நாடகத்தை எழுதினார். சாதாரணமாக எல்லா அவதாரங்களிலும் வெற்றி பெறும் பகவான் இதில் ரொம்பவும் கஷ்டப்படுவதாகவே நகைச்சுவையுடன் கூறியிருந்தார். இந்த நாடகத்துக்கு அப்போதைய பக்தவத்சலனார் அரசு போலீஸ் அனுமதி அளிக்க மறுத்தது. இந்த நாடகம் அரசியல்வாதிகளை ரொம்பவே கிண்டல் செய்வதால் அதை மேடையேற்றினால் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதே போலீசின் கூற்று.

அரசின் போதாத காலம் சோ அவர்களே வழக்கறிஞர். அவர் ஒரு ரிட் மனு தயார் செய்து போலீசுக்கும் அரசுக்கும் அனுப்பியிருக்கிறார்.ரிட் மனு வலுவானது என்பது பற்றி அவருக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அன்றைய அட்வகேட் ஜெனரல் அரசால் கலந்தாலோசிக்கப்பட்ட நிலையில் பத்திரிகைகளில் இது பற்றி செய்திகள் வர ஆரம்பித்தன. தாமதத்துக்குப் பின்னால் சில வசனங்களை நீக்குமாறு போலீஸ் கேட்டது. சோ சுத்தமாக மறுத்து விட்டார். அட்வகேட் ஜெனெரல் வேறு சோவின் ரிட் மனு வலுவானது எனக்கூறிவிட அரசு வேறு வழியின்றி நாடகத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியதாயிற்று. இவாறாக சோ அவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பெறுமான அளவுக்கு அரசு தரப்பிலிருந்து இலவசமாக விளம்பரம் கிடைத்தது. (போலீசின் ஆட்சேபணைக்கு முக்கியக் காரணமே வில்லனுக்கு பெயர் முதலில் பக்தவத்சலம் என வைக்கப்பட்டதே என்று சில வட்டாரங்களில் செய்தி உலவியது எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை).

இந்த நாடகம் பலமுறை அரங்கேறியது. பாலமந்திர் என்னும் குழந்தைகள் அமைப்பின் நிதிக்காக இது ஒரு முறை நடத்தப் பட்டது. அந்த அமைப்பின் தலைவர் காமராஜர் அவர்கள். அவர் நாடகம் பார்க்க வந்திருந்தார். காமராஜரை வரவேற்று பேசிய ஜெமினி கணேசன் அவர்கள் யதார்த்தமாக மேலே சொன்ன பிரச்சினையை தொடப்போக அது என்ன விஷயம் என காமராஜ் அவர்கள் சோவை கேட்க அவரும் அரசு லைசன்ஸ் கொடுக்க மறுத்த விவகாரத்தை சொன்னார். இருவருக்குமிடையே ஒருவித தகவல் இடைவெளி ஏற்பட்டு மேடையிலேயே வாக்குவாதம் நடக்க, காமராஜ் அவர்கள் கோபித்து கொண்டு நாடகத்தை பார்க்காது வெளியில் சென்றார். இதைப் பற்றி சோ அவர்கள் இப்புத்தகத்தில் எழுதும்போது தன் மேலேயே அத்தனை குற்றமும் என்பது போல எழுதுகிறார். ஆனால் இந்த நிகழ்ச்சி நடந்த அறுபதுகளின் துவக்கத்திலேயே இது பற்றி செய்திகளை படித்த நான் இப்போது கூறுவது என்னவென்றால் சோ மற்றும் காமராஜ் ஆகிய இருவரின் அன்றைய மனோபாவ வேற்றுமைகள் இவ்விதமான நிகழ்ச்சியைத் தவிர வேறு எதையும் தந்திருக்க முடியாது என்பதே.

இந்த நிகழ்ச்சியால் சோ அவர்களுக்கு வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி பல தொல்லைகள் ஏற்பட்டன. டி.டி.கே. அவர்கள் தன் மகனிடம் சத்தம் போட காமராஜரிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் அலுவலகத்திலேயே வேலையில் தொடர முடியாத நிலை வந்தது. வீட்டிலோ அவர்து தந்தையே அவரை உதைக்க காத்திருந்தார். கடைசியில் காமராஜரே அதையெல்லாம் கேள்விப்பட்டு "இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அந்தப் பையன் கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக இருக்கான். அவ்வளவுதான், நடந்த நிகழ்ச்சியை நான் ஒண்ணும் தப்பா எடுத்துக்கலை" என்ற வகையில் கூறிவிட சோவும் 'பிழைத்தார்'. அதற்கு பிறகும் வாசு அவர்கள் வெகு நாளைக்கு அவரை அதிகப் பிரசங்கி என்றே அழைத்து வந்தார்.

இதற்கு சில வருடங்கள் கழித்து, துக்ளக் ஆரம்பித்த காலக்கட்டத்தில் அவர் சாவி வீட்டில் வைத்து காமராஜர் அவர்களுக்கு சாவியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். காமராஜ் சிரித்துக் கொண்டே, "தெரியுமே. அதிகப் பிரசங்கியாச்சே" என்றார். சோ அசடு வழிந்தார்.

"என்ன? அந்த அதிகப் பிரசங்கித்தனம் அப்படியே இருக்குதா? அதை உட்டுற வேண்டாம். நல்லதுதான் அது" என்றார் பெருந்தன்மையுடன் காமராஜ். அதுதான் காமராஜ். அதன் பிறகு பல முறை சந்தித்தனர் அவ்விருவரும். காமராஜ் அவர்கள் அவருக்கு அளித்த முக்கியத்துவமும் உரிமையும் அவரது திறமைக்கும் அனுபவத்துக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதது எனக் கூறுவது சோ. அப்படியெல்லாம் இல்லை ரொம்பவுமே தகுதியானவருக்குத்தான் காமராஜ் இந்த மரியாதைகளை அளித்துள்ளார் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவது இந்த டோண்டு ராகவன்.

அடுத்தப் பதிவுகளில் நிஜமாகவே அவரது நாடகங்களைப் பற்றி எழுதப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

வடுவூர் குமார் said...

சமயம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை உயர்த்திக்காட்ட இவர் தயங்குவதில்லை.

dondu(#11168674346665545885) said...

//சமயம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை உயர்த்திக்காட்ட இவர் தயங்குவதில்லை.//
உண்மைதான். காமராஜ் அவர்களும் அதற்கு முற்றிலும் தகுதியானவரே.

அதே மாதிரி காரணங்களினால்தான் இந்த டோண்டு ராகவனும் சோ அவர்களை உயர்த்திக் காட்டும் சந்தர்ப்பங்களைத் தவிர்ப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kanchana Radhakrishnan said...

சோ வின் முன் கோபம் பற்றிய என் பதிவு படித்தீர்களா?
tvrk.blogspot.com

dondu(#11168674346665545885) said...

படித்தேன் ராதாகிருஷ்ணன் அவர்களே. அவருக்கு முன்கோபம் அதிகம் என்பதை நான் துக்ளக் மீட்டிங்குகளில் பார்த்திருக்கிறேன். அதுவும் சில வாசகர்கள் பேச வரும்போது எல்லோருக்கும் நன்றி கூற ஆரம்பிப்பதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிவார்.

அதே போல நீங்கள் அப்பதிவில் குறிப்பிட்ட பெருந்தன்மை பற்றியும் அறிவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சமயம் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரை உயர்த்திக்காட்ட இவர் தயங்குவதில்லை//

கருமவீரர் காமராஜ் தன் மன‌தில் பட்டதை பட்டென சொல்லிவிடும் சுபாவம் உள்ளவர்.ஒளிவு மறைவு அற்ற வெள்ளை மனம் படைத்த அரசியல் ஞானி.ஒரு சமய்ம் தென்காசி தேர்தல் கூட்டத்தில் நெல்ல மாவட்ட காங்கிரஸில் பெரும் பேர் பெற்ற‌ திருவாளர் skt.r. அவர்கள் தொண்டர்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.அது சமயம் காமராஜ் அவர்கள் பேசிகொண்டிருப்பதற்கு இடயுறாக இருப்பதாக கோபாப்பட்டு "நீ பேசனும்னா வந்து பேசு நான் இற‌ங்கி போறேன்னே" சொல்லவும் sktr அமைதிகாத்தார்.பெரிய தலவரையே அவரது ஆதரவாள‌மக்கள் கூடியுள்ள கூட்டத்தில் கடிந்து சொல்லும் தைரியம் யாருக்கும் வருமா?

Anonymous said...

""அந்தப் பையன் கொஞ்சம் அதிகப் பிரசங்கியாக இருக்கான்"""

no comments

ரமணா said...

1.பொதுத்துறை பெட்ரோல் பல்க்களில் திட்டம் பொட்டு "பிரிமியம் பெட்ரோல்" தான் விற்கின்ன்றனர்? இது பகல் கொள்ளைஇல்லையா?

2.அவர்கள் விற்பது சாதரனமா அல்லது செறிவிட்டிய ஸ்பீடா எப்படி தெரிந்து கொள்வது?

3. எல்லா பெட்ரோல் பல்க்க்களிலும் அளவு குறைகிறதே? ஒரு லிட்டர் பெட்ரொலுக்கு 50 டூ 100 மில்லி ஆட்டயை போட்டு விடுகிறார்களே?

4.சில புத்திசாலிகள் கலப்படம் வேறு செய்து விடுகிறார்கலள்?

5.பெட்ரோல் பல்க்களில் பெரிய யோக்கிய சிகாமணி மாதிரி நுகர்வர் நலன் கப்பது போல் எழுதி வைதுள்ளதை பார்த்தால்?
படிப்பது ராமயனம் இடிப்ப்பது?

6.இடது சாரிக் கட்சிகளின் பெட்ரோல் எதிர்ப்பு ஆர்பாட்டம்,ஹர்த்தால் ,அனல் பறக்கும் பேட்டிகள் எல்லாம் அவ்வள்வுதானா?சாயம் வெளுக்கிறதா?

7.அடுத்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்பதை இப்போதே காங்கிரஸ் சொல்ல ஆரம்பித்துவிட்டதே?

8.வழ்க்கமாக விலை யேற்றிய பிறகு கொஞ்சம் விலை குறைப்பு நாடகம் உண்டே?குளிர் விட்டு போச்சா?

9.மத்து அரசை குறைகூறும் எதிகட்சிகளின் அரசுகள் விற்பனை வரியை குறக்க தயக்கம் காட்டும் இரட்டை வேஸம்?( சில அரசு களின் கருணை பரவாயில்லை)

10.எதிலும் சட்டங்களை தனக்கு சாதகமாக வளைத்து உல்க கோடீஸ்வரா வரிசையில் நம்பர் 1 க்கு ஓடும் அம்பாணியார் இதில் தோற்று பல்க்களை மூடி எதற்கு பாவ்லா காடுகிறார்? பெட்ரோல் விலை கட்டுப்பபாட்டிற்கு விடுதலை பெற முஸ்தீபா?ஆதயம் இல்லாமல் அண்ணாச்சி ஆத்தோட போகமாட்டாரே?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது