5/26/2008

சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன?

எனது பாண்டவர் பூமியும் டோண்டு ராகவனும் பதிவு கிளப்பிய எண்ணங்கள் இப்பதிவின் விஷயம். அப்பதிவில் குறிப்பிட்ட விஷயங்களால் அப்படத்தை நான் எப்போதுமே மறக்கக் கூடியவன் அல்ல. அதே போல வேறு சில படங்களும் என் மனதில் எப்போதும் நிலைத்துள்ளன. முதலில் பாண்டவர் பூமி.

இதில் ஒரு அதிசய விஷயம் ஆனால் உண்மை. அப்படத்தை நான் முதலிலிருந்து கடைசி வரை ஒரேயடியாக ஒருமுறையும் பார்த்ததில்லை என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். கதையை முதலில் அவுட்லைனாகக் கேள்விப்பட்டேன். சரி நம்ப ஊர் ரங்காவுக்கு வந்தால் பார்த்து விடவேண்டியதுதான் என்று தீர்மானமும் செய்தேன். படமும் ரங்காவுக்கு வந்தது. ஆனால் பார்க்க நேரம் வரவில்லை. ஏனெனில் அவ்வளவு வேலை, தில்லி வாடிக்கையாளரிடமிருந்து. படத்துக்காக 3 மணி நேரம் கூட ஒதுக்க இயலவில்லை. சரி, தொலைக்காட்சியில் பார்த்து கொள்ளலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை. எப்போதெல்லாம் அது வந்ததோ, ஏதாவது நடந்து என்னை பார்க்கவே விடவில்லை. கேபிள் கட், மின்சாரம் கட் என்று படுத்தியது.

இருந்தாலும் ஒரு வழியாக பகுதி பகுதியாகப் பார்த்தேன் என வைத்து கொள்ளுங்கள். மற்ற படங்களை பற்றி பேசுமுன் சில வார்த்தைகள் இப்படத்தைப் பற்றி.

எல்லா காட்சிகளுமே காவிய ரேஞ்சுக்கு உள்ளன. ராஜ்கிரண்தான் கதையின் உண்மையான கதாநாயகன். அருண்குமார் செகண்ட் ஹீரோ என்று வேண்டுமானால் கூறலாம். அப்படி பின்னிபெடலெடுத்து விட்டார் ராஜ்கிரண். ரஞ்சித் சிறையிலிருந்து திரும்பி வந்து தனக்காக காத்திருக்கும் தன் அக்கா மகளை பார்த்து காட்டும் ரியேக்‌ஷன் சூப்பர். தான் வெட்டி சாய்த்த சகோதரியே திரும்பவும் அவள் ரூபத்தில் வந்துள்ள அப்பெண்ணை தான் எப்படி மணம் முடிப்பது என்று கேட்கும் காட்சியில் கவிதையே ஓடுகிறது.
(ரஞ்சித் என்று சரியான பெயரை தந்து உதவியதற்கு நன்றி ஸ்ரீதர் நாராயணன் அவர்களே).

ஓக்கே என்னை பாதித்த மற்ற திரைப்படங்களை பற்றி.

காதலிக்க நேரமில்லை: சமீபத்தில் 1964-ல் வெளிவந்த இப்படத்தை பார்க்கும்போதெல்லாம் விடுமுறை மூட் வந்து விடுகிறது. கதையிலும் ராஜஸ்ரீயும் காஞ்சனா கோடை விடுமுறைக்குத்தானே வீட்டுக்கு வருகிறார்கள். நான் கூட அப்படத்தை எனது முதல் ஆண்டு தேர்வுகள் முடிந்து கடை நாள் மாலை காட்சியில்தான் அப்படம் பார்த்தேன். ஸ்ரீதர் கூறியிருந்தது போல ஒருவரும் அப்படத்தில் அழவில்லை. சோகக் காட்சியே லேது. எல்லாமே ஜாலியாகப் போயிற்று. "என்னப் பார்வை இந்தப் பார்வை, இந்தப் பார்வை" பாடல் படமாக்கப்பட்டதுதான் அப்படத்தின் கடைசி ஷூட்டிங் என கேள்விப்பட்டேன்.

கலங்கரை விளக்கம்: இப்படத்தை நான் பார்க்கவில்லை. எனது முரட்டு வைத்தியம் - 1 பாதிப்பில் நான்கு ஆண்டுகள் படம் பார்க்காது இருந்தேன். அதில் மிஸ் செய்த படங்களில் இதுவும் ஒன்று. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் Vertigo (starring James Stewart, kim Novak) படத்தின் தழுவல் இப்படம். படம் ரொம்ப சுமார்தான். ஆனால் அதன் பாடல்கள் என்னை மிகவும் பாதித்தன. "பொன்னெழில் பூத்தது"என்ற பாடல் மனத்துள் இன்னும் ஒலிக்கிறது. இதனுடைய இன்னொரு பாடல் "காற்று வாங்கப் போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கிப் போனாள் அந்த கன்னி என்னவானாள்" பாட்டு நான் மாலை நேரத்தில் பரீட்சையில் தோல்வியடைந்த வெறுப்பில் கடற்கரையில் பைத்தியம் போல உலவும்போது ட்ரான்ஸிஸ்டர்களிலிருந்து நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தது. அப்பாட்டைக் கேட்கும் போது சமீபத்திய 1965 இன்னும் சமீபத்தில் வருகிறது.

காக்கும் கரங்கள்:
நான் மேலே சொன்ன முரட்டு வைத்தியத்துக்கு முன்னால் கடைசியாகப் பார்த்த படம். அதன் பாடல்கள் எல்லாமே என்னைக் கவர்ந்தன, முக்கியமாக "ஞாயிறு என்பது பெண்ணாக" என்ற பாடல். அப்படம் ஜூன் 1965-ல் வந்த போதே பேசும்படத்தில் எழுதி விட்டார்கள், இந்த ஆண்டின் சிறந்த நடிகர் எஸ்.எஸ்.ஆர். என்று. உண்மை வாழ்க்கையில் கணவன் மனைவியே இப்படத்திலும் அதே ரோலில் நடித்தது எனக்கு பிடித்தது. அந்த விஷயத்தில் நான் சற்று செண்டிமெண்ட் பேர்வழி. இதனாலேயே எனக்கு ஜெமினி-சாவித்திரி ஜோடி பிடிக்கும்.

பார் மகளே பார்:
முரட்டு வைத்தியம் -1 முடிந்து நான் பார்த்த முதல் படம். பிடித்த பாடல்கள் "என்னைத் தொட்டு சென்றன கண்கள்" "நீரோடும் வைகையிலே" "அவள் பறந்து போனாளே".

புதிய பூமி:
என்னைப் புரட்டிப் போட்ட அந்த ஞாயிற்று கிழமையன்று பார்த்த படம் அல்லவா. அதற்காகவே அந்தப் படம் அந்தப் படம் என் மனதில் நிற்கும். வேறு காரணங்களே இல்லை.

எனது வாழ்வில் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வருவதே நான் மேலே குறித்த படங்கள் என் மனதில் நிற்பதற்கு காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Anonymous said...

இதையெல்லம் தூக்கி சப்பிட்டு விடும் படம் "சந்தோஷ் சுப்பிரமணியம்".அப்பா மகன் உறவை புதிய கோணத்தில் காட்டும் கண்ணாடி.(தங்களின் எல்லா முன்னேற்றதிற்கும்,வாழ்வுக்கும் வசதிக்கும் தந்தை தான் மூலகாரணம் எனும் கருத்து உள்ள உங்களை நிச்சயம் ஒரு முழு பதிவை போடுவதற்கு தூண்டும்)

dondu(#11168674346665545885) said...

அப்படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள். பார்க்க முயற்சி செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

puduvaisiva said...

Mr.டோண்டு,

ஜகன் மோகினி பற்றி எதும் சொல்ல வில்லை!!!

புதுவை சிவா.

dondu(#11168674346665545885) said...

ஜகன் மோகினி ஒரு ஜாலி பேய்ப்படம். விரும்பிப் பார்த்தேன். ஆனால் இப்பதிவில் நான் குறிப்பிட்ட படங்கள் என் வாழ்வின் பல கட்டங்களை ஞாபகப்படுத்தியது போல அது ஒன்றும் செய்யவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கூடுதுறை said...

நக்மா நடித்த படங்களை பற்றி எதுவும் எழுதவில்லையே? வீட்டும்மா பக்கத்தில் இருந்தார்களா?

கூடுதுறை

dondu(#11168674346665545885) said...

நக்மாவை எனக்கு பிடிக்கும் என்பது எனக்கு முன்னாலேயே என் வீட்டம்மாவுக்கு தெரிந்திருக்கிறது. தூர்தர்ஷனில் காவேரி முகர்ஜீ என்னும் ஆங்கில செய்தி வாசிப்பாளரை அவர் கண்ணழகுக்காகவே எனக்கு பிடிக்கும். அதே அழகுடன் நக்மா இருப்பதால் அவரையும் எனக்கு பிடித்ததில் அவருக்கு ஆச்சரியமாகவே இல்லை.

காதலன் படத்தில் "என்னவளே, என்னவளே" பாட்டுக்கு நக்மா தந்த நடன அசைவுகள் பிரமாதம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1.மனித உறவுகளில் (ரத்த சம்பந்த)பொருளாதர ரீதியாக மோதல்கள் அதிகரித்ததன் காரணம் யாது?
2.தென் மாவட்டங்களில் சைவ வேளாளர் குடும்பங்களில் பெண்களின் திருமண செலவுக்காக குடும்ப நிலங்களை விற்பது வாடிக்கை.( ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ரொக்கம்,30 பவுண் நகை,வெள்ளிப் பாத்திரங்கள்,பிற பாத்திரங்கள்,துணிமணிகள்,சீர்வரிசைகள்.... ஒரு பெரும் தொகை தேவைபடுவது வாடிக்கை).2 ,3 மகள்களின் திருமணத்திற்கு பிறகு மீதமாகும் வீட்டில் பங்கு கேட்டு சகோதரனுடன் கோர்ட் படிகளில் ஏறும் பெண்கள் பற்றி தங்கள் கருத்து யாது?
3.தாய் தந்தையரை வயதான காலத்தில் காப்பதில் பிராமணர்( ஐயர்,ஐயங்கார்)சமுதாயம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் திகழ்வது எப்படி?
4.பிற தெய்வ பக்தி யுள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் வேறு மாதிரி இருப்பது ஏன்?
5.முதியோர் இல்லங்கள் பெருக்கம் பண்புள்ள பாரதத்துக்கு ஏற்புடையதா?

Sridhar V said...

'பாண்டவர் பூமி' ஒரு சிறந்த படம். முற்றிலும் மாறுபட்ட கதைக் களன். கதையின் treatment-ல பெரிதாக வித்தியாசமில்லை என்றாலும் நடிகர்களின் பங்களிப்பு நன்றாக இருக்கும்.

//பசுபதி சிறையிலிருந்து திரும்பி வந்து தனக்காக காத்திருக்கும் தன் அக்கா மகளை //

பசுபதி என்று அந்த பாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டீர்களா என்று தெரியவில்லை... அந்த பாத்திரத்தில் நடித்தது நடிகர் ரஞ்சித்.

'தோழா! தோழா! தோள் கொடு தோழா' பாடல் அருமையாக இருக்கும்.

Anonymous said...

1.தமிழ் சினிமா உலகம் இன்று பெரிய பெரிய கார்பொரேட் கைகளுக்கு போய் விட்டது போல் தெரிகிறதே?

2.உச்ச நடிகர்களின் சம்ம்பளம் 3-4 கோடிகள் என்பது உன்மையா?

3.ரஜினிக்கு அடுத்த நிலை விஜய்க்கு என்பது உறுதியாகிவிட்டதா?

4.விஜயின் தற்சமய படங்கள் (தமிழ் மகன்,குருவி) சரியில்லையே?

5.விஜயின் இந்த உச்ச நிலையிலும் எளிமை எப்படி அவருக்கு ஏதுவாகிறது?

6.காமெடி நடிகர்கள்
(நாகேஸ்,சுருளிராஜன்,கவுண்டமணி....)
பலர் உச்ச நிலையில் இருக்கும் பொது அவர்கள் செய்யும் அலம்பல்களால் மார்கட் போய்விட்டதை கண்ணால் பார்த்த் பிரகும் அடுத்த தலைமுறை கலைஞர்கள் அதே அலம்பலை செய்கின்றனரே?

7.தியேட்டர்களில் அரசு அனுமதிக்கும் கட்டணங்களை விட சாதரணமாக 10 ருபாய் அதிகமக வசூலிக்கும் போக்கு சினிமா டிக்கட் ஐ "on line trading" க்குள் கொண்டுவந்து விடும் போல் உள்ளதே?

8.எவையெல்லம்(உடைகள்,ஆபாசநடன அசைவுகள்,இரட்டை அர்த்த வசனங்கள்,பாடலகள்) முன்பு சென்சாரின் கத்திரிக்கு பலியானதோ அவையெல்லம் இப்போது கொக்கறிக்கின்றனவே? திடிர் மாற்றம் யார் கொடுத்த தைரியம்?(கோடிகள் கை மாறுகிறதா?)

9.மல்டிபிளக்ஸ் தியேட்டர்காலங்களிலும்
சகாதாரக் குறைவுள்ள திரை அரங்குகள் பற்றி அதிகாரிகளின் கண்டு கொள்ளா நிலை ஏன்?(அழுக்குடனும்,துர்நாற்றத்துடனும்,மூட்டப் பூச்சிகளின் வாசஸ்தலமகாவும் உள்ள இருக்கைகள்- இப்போ அரசின்கேளிக்கை வரிகூட கிடையாதே!))
10.முன்னணி நடிகைகளில் சிலர் கூட மிக குறைந்த ஆடையுடன் ( பிக்னி ஆடை-உள்ளாடை தெரிவது போல்)நடிபதை பார்க்கும் போது அந்தக்கால நடிகை பானுமதி,சாவித்திரி அவர்களின் ஆடை கண்ணியம் பாரட்டடத் தக்கதல்லாவா?

Sri Srinivasan V said...

Anbulla Dondu Sir,
Vanakkam & Namaskaram.
Thanks a LOT for writing about these IMPORTANT pictures.
As you say, a Picture has a LASTING personal IMPACT on us based on the circumstances of our Personal Life.
That IMPACT stays for the rest of our Life.
Thanks for writing and I salute your efforts.
Please, do not yield to the STUPID distractors who deviate you into wasteful diversions.
Your noble thoughts, automatically, REFLECT in your writing.
God Bless you and Good wishes.
I am also a NANGANALLUR resident like you.
Presently I am in Perth.
But I miss my old Nanganallur.
Vanakkam.
Anbudan
Srinivasan.

Anonymous said...

வ‌ண‌க்க‌ம் டோண்டு சார்,

ப‌திவின் த‌லைப்பிலேயே கேள்வி வ‌ச்சுருக்கீங்க‌.

// சினிமா படங்கள் சில ஏன் இன்னும் மனதில் நிற்கின்றன? //

யோசிச்சு பார்த்ததுல‌ நீங்க‌ உங்க‌ ம‌ன‌சுல‌ ந‌க்மாவை நாற்காலி போட்டு உட்கார‌வைத்திருப்ப‌தால்தான் சினிமா ப‌ட‌ங்க‌ள் எல்லாம் நின்றுகொண்டிருக்கின்ற‌ன‌ என‌ நினைக்கிறேன். :-) // .. விடுங்க‌ எங்க‌ளுக்கும் ஒரு ஞாயிறு வ‌‍ராதா புர‌ட்டிபோட‌..அதுவ‌ரைக்கும் அறுத்துக்கறோம் ம‌ன்னிச்சுடுங்க‌.

ச‌ர‌வ‌ண‌ன்

Athisha said...

சார் எல்லாமே சமீபத்துல பார்த்தது போல இருக்கே , ரொம்ப சமீபத்துல எந்த படமும் பாக்கலிங்களா

கிரி said...

பாண்டவர் பூமி அருமையான படம் அதில் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கும். ரஞ்சித் கோபத்தில் தன் தங்கையின் தலையை வெட்டிய பிறகு கோபத்தில் தவறு செய்து விட்டோமே என்று கதறுவதும், அதை பார்த்த ராஜ்கிரண் அதிர்ச்சியில் உறைந்து நிற்பதும் அட்டகாசமான் நடிப்பு. அருண் குமார் மிக அருமையாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல். இந்த படத்தில் எனக்கு சகிக்கவே முடியாதது, அருண் குமார் எப்போதும் ரகசியமான் குரல் போலவே படம் முழுவது பேசுவார். அது தான் கேட்பதற்கு எரிச்சலாக இருக்கும். மற்ற படி நல்ல படம்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது