4/01/2010

ஏப்ரல் - 1 மொக்கை

சமீபத்தில் ஐம்பதுகளின் இறுதி மற்றும் அறுபதுகளின் துவக்கத்தில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலையில் படித்தபோது இந்த ஏப்ரல் முதல் தேதியன்று பசங்கள் செய்வதெல்லாம் வெட்டிய உருளைக்கிழங்கில் AF என்னும் எழுத்துக்களின் கண்ணாடி பிரதியை செதுக்கி, மையில் தோய்த்து ஏமாந்தவன் சட்டை முதுகில் [பசக் என அடித்து விட்டு ஓடுவதுதான். ஆனால் இச்செயல் முறை முரட்டுப் பசங்களால் மட்டுமே செய்ய முடிந்தது. என்னை மாதிரி நோஞ்சான்கள் அதையெல்லாம் செய்தால் மைதானம் முழுக்கத் துரத்தப்பட்டு முதுகில் டின் கட்டப்படுவதுதான் நடக்கும்.

ஆகவே ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்னும் வகையில் இங்க் பேனா மூலம் தூரத்திலிருந்து மையைத் தெளித்து விட்டு ஓடுவதுதான். ஆனால் இங்க் அடையாளம் பெற்றவன் அப்போதைக்கு அதை உணராது இருப்பது முக்கியம். இவ்வாறாக ஒரு ஏப்ரல் ஒன்றாம் தேதி பலருக்கு அவர்களறியாமல் இங்க் அபிஷேகம் செய்து விட்டு வீட்டுக்கு வெற்றியுடன் சென்றேன். என்னையறியாமல் பலர் எனக்கும் இங்க் அடித்திருக்கிறார்கள் என்பதை வீட்டுக்கு போய்த்தான் உணர முடிந்ததும், அதுவும் நான் உணரும் முன்னரே என் அம்மா அதை கண்டுபிடித்து உதைத்ததும் தனி சோகம். அது இங்கே வேண்டாமே.

1962 ஏப்ரல் 1 தேதியிட்ட ஆனந்தவிகடனில் அட்டைப்படத்தில் ஒரு படம் போடப்பட்டு, புது தொடர்கதை விவரத்துக்கு பலான எண்ணிட்ட பக்கத்துக்கு போகவும் என குறிப்பிட்டிருந்தனர். அங்கு போய் பார்த்தால் இன்றைய தேதி என்ன என்பதை மறந்து விட்டீர்களா என்று அறிவிப்பு? அப்போதுதான் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் வெறுமனே AF அடிப்பதல்ல என்பதை புரிந்து கொண்டேன். முட்டாள்கள் தினத்தின் மூலம் என்ன என்பதற்கு பல வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்றை இங்கே பார்க்கலாம்.

பதிவுலகில் எனக்கு தெரிந்து இரு பதிவர்கள் ஏப்ரல் ஒன்று தினத்துக்கான பதிவு போட்டு முட்டாளாக்கியிருக்கிறார்கள்.

அவர்களில் ஒரு டிசே தமிழன். மனிதர் பாவம் 2005-ல் நான் எனது வழமையான இஸ்ரேலிய ஆதரவு பதிவு ஒன்றை படித்ததில் டென்ஷனாகி தனக்கு 30.03.2005-ல் கல்யாணம் ஆகிவிட்டதாக பதிவு போட்டு எல்லோரிடமும் வாழ்த்து பெற்றார். பிறகு சாவகாசமாக அப்பதிவு டோண்டு ராகவனின் இஸ்ரேலிய மோகம் கண்டு எரிச்சல் அடைந்து டென்ஷன் ஆனதால் இட்டதாக கூறினார். அதை இங்கே பார்க்கலாம். பை திவே நான் குறிப்பிட்ட இஸ்ரேல் ஆதரவு பதிவு மீள்பதிவு செய்யப்பட்டதால் ஏப்ரல் 2006 தேதியிடப்பட்டுள்ளது.

டிசேயின் அப்பதிவை மறுபடியும் ரீகால் செய்து பார்க்கையில் அவர் பின்னூட்டத்தில் இம்மாதிரி புலம்பியிருக்கிறார்.

நேற்றுப்பின்னிரவு வலைப்பதிவுகளை மேய்ந்துகொண்டிருக்கும்போது, டோண்டுவினது, ‘நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன்’ வாசிக்கவேண்டியதாயிற்று. அநேகமாய் நான் டோண்டுவினது பதிவுகள் முழுதாய் வாசிப்பதில்லை. அவரது பதிவுகளின் தலையங்கள் தமிழ்மணத்தில் வரும்போது பார்த்துவிட்டாலே அவரென்ன உள்ளே சொல்லியிருப்பார் என்று விளங்கிவிடும். சோ பற்றிய அவரது பதிவும், பின்னூட்டங்களில் அவரைப் புரிந்துகொண்டதால் (நல்ல மாட்டுக்கு ஓர் சூடு என்ற சொலவடை தெரிந்து கொஞ்சம் நான் திருந்தியதால்), ஏன் வீணாய் அவரின் பதிவுகளை வாசித்து இரத்த அழுத்தத்தை அதிகரிப்பான் என்ற ஒரு நோக்கம் மட்டுமே இதற்குக் காரணம். நேற்று என்னுடைய கெட்டகாலம், விதி இந்தப்பதிவை வாசிக்க வைத்து, என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது. அவரின் பதிவில் போய், நான் ஓர் தீவிர நாசி ஆதரவாளன், யூதர்களா, நாசிகளா அதிகம் கொலைகள் புரிந்தது என்று கணக்கிடத்தொடங்குவோமா என கிண்டலாய் பின்னூட்டம் இட நினைத்திருந்தேன். ஆனால் அப்படி ஒரு பின்னூட்டம் இட்டாலும், டோண்டுவை ஏதோ ஒருவகையில் ஆதரிக்கின்றோம் என்று நினைத்துவிட்டு, முந்தி கார்த்திக் சிலரது பதிவுகளை நகைச்சுவையுடன் மாற்றியெழுதியதுபோல, நான் ஒர் தீவிர ஹிட்லர் ஆதரவாளன் என்று பிளேட்டை மாற்றி ஒரு பதிவாய் என் தளத்தில் எழுதுவோமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன் (அப்படி எழுதுவது கூட பிழையென்று பெயரிலி அவரது பதிவில் புரியவைத்ததற்கு என் நன்றி). இப்படி இரத்த அழுத்தம் கூடி யோசித்துக்கொண்டிருக்கையில், டோண்டு இது குறித்த இரண்டாவது பதிவையும் எழுதியிருப்பது தமிழ்மணத்தின் முகப்பில் தெரிந்தது. (இப்போது வந்து பார்த்தால், ரோசாவசந்த், பெயரிலி இது குறித்து எழுதியிருக்கின்றனர். எனது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவிபுரிந்த ரோசாவசந்த் மற்றும் பெயரிலியின் பதிவுகளுக்கு மிகவும் நன்றி). சரி இந்தாள், நான் இப்படியேதாவது எழுதினால், ‘நான் ஓர் அதீதீதீ தீதீதீவிர இஸ்ரேலிய ஆதரவாளன்’ என்ற மூன்றாவது பதிவையும் எழுதக்கூடும் என்று மண்டையைப் போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கும்போதுதான் நினைவுக்கு வந்தது. இன்றென்னைப்போன்றவர்களுக்கான தினம் என்று.

நிற்க, நண்பர்கள் அனைவருக்கும் April Fools Day வாழ்த்துக்கள். என்னைபோன்றவர்களும் கொண்டாட ஒரு நாளைக்கண்டுபிடித்த எந்த மகராசனோ அல்லது மகராசியோ வாழ்க. சரி எனக்குத்தெரியும் எனது நிலை. ஆனால் வலைப்பதிவு நண்பர்களும் இந்த நாளைத் தங்கள் நாளாக கொண்டாடுகின்றார்களோ இல்லையோ என்று பார்க்கும் ஆசையில் உதிர்த்துதான் மேலே இட்ட பதிவு. ஆஹா, உலகத்தில் என்னைவிடவும் மிகவும் அப்பாவியான பல நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பார்க்கப் ‘பெருமிதமாய்’தான் இருக்கிறது. அதுவும் எல்லோருக்கும் அல்வா கொடுக்கின்ற ஊரிலிருந்த வந்திருந்த இரண்டுபேருக்கு என் பதிவு ‘அல்வா’ கொடுத்ததில் இன்னும் கூட மகிழ்ச்சிதான் (shame, shame :-)).

உங்களது அனைத்து வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்கின்றேன். முட்டாளுக்கான வாழ்த்தை இப்போதும், திருமணத்திற்கான வாழ்த்தை advanced வாழ்த்தாய் பத்திரப்படுத்தியும் கொள்கின்றேன். நண்பர்களுக்கு கோபமில்லைத்தானே? அப்படி, இருந்தாலும் இங்கே வந்து இரண்டு வரிகளில் எதையாவது திட்டிவிட்டுப்போனாலும் பிரச்சினையில்லை. வாழ்த்திய உங்களுக்கு என்னைத் திட்டவும் நிச்சயமாக உரிமையிருக்கிறது.
……..
இந்தப் பதிவை இட்டபின் சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. வசந்தனும் (எனக்கு காதலுக்கு மரியாதை ஷாலினியைத்தான் தெரியும், மாலினியைத் தெரியாது), நரேனும் என்னுடைய பதிவைச் சாட்டாக கொண்டு முறையே அவர்களது தேடல்களில் இருக்கின்ற மாலினிக்கும், சாந்திக்கும் தூது அனுப்பிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. எனது புண்ணியத்தில் நீங்கள் இருவரும் உங்களது துணையைத் தேடிக்கண்டுபிடித்தால், எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.
……
இப்படி ஒரு பதிவை (?) எழுதியவுடனேயே ஓடிவந்து வாழ்த்துச் சொன்னவர்கள் மாதிரி எனது பெற்றோர்களுக்கு எனது நிலை புரியவில்லை என்பதில் எனக்குச் சற்றுக்கவலைதான். ஒரு குமர்ப்பெடியன் (குமர்ப்பெட்டை என்பதற்கு எதிர்ப்பால் இதுதானே?) வீட்டில் இருக்கின்றான் என்ற எந்தக்கவலையுமில்லாது, அவர்கள் ‘மெட்டிஒலி’யையும் ‘அண்ணாமலை’யையும் எந்தநேரம் பார்த்தாலும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதைக்கூடச்சகித்துக்கொள்ளலாம். ஆனால் அத்திபூத்தாற்போல எப்போதாவது உறவினர்கள் வந்து, ‘உங்கட பெடியன் என்ன செய்கின்றான்?’ (விருந்தாளியாகப் போகின்ற வீட்டில் இரண்டு கதையாவது பிடுங்கிப்போகாட்டி எங்கட சனங்களுக்கு அன்றிரவு நித்திரையே வராது) என்று கேட்கின்றபோதெல்லாம், ‘அவன் காலமை வேலைக்கென்று சொல்லிப்போட்டு எங்கையோ போறான், பிறகு பின்னேரம் வந்து கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்துகொண்டு, சடக்கு புடக்கென்டு கீபோட்டில் எதையோ தட்டிக்கொண்டு நள்ளிரவு வரை இருக்கிறான். அதற்குப்பிறகு அந்தமாதிரி நித்திரை கொள்கின்றான்’ என்று சொல்கின்றார்களே தவிர, ‘அய்யோ ஒரு குமர்ப்பெடியனை மடியில நெருப்பைக்கட்டியிருக்கின்ற மாதிரி வீட்டில் வைத்திருக்கின்றோமே’ என்று கூறிவிட்டு ஆகக்குறைந்தது ஒரு பெருமூச்சு….ம்ஹம்.


ஆக அவரது வீட்டில் கன்னிப்பையன் கல்யாணத்தைப் பற்றி கவலையின்றி மெட்டி ஒலியும் அண்ணாமலையும் பார்ப்பதும் பிரச்சினையாக இருந்திருக்கிறது. இப்பவாச்சும் மனுசனுக்கு கல்யாணம் ஆச்சான்னு ஆராவது சொல்லுங்கப்பூ.

இன்று ஜெயமோகனின் தூள் பதிவு வந்து எனது ஏப்ரல் ஒன்று நினைவுகளை தூண்டிவிட்டது. ஆகவே இந்த மொக்கை பதிவுக்கு ஜெயமோகனே காரணம் என கூறிவிட்டு அவரது மனிதராகி வந்த பரம்பொருள் என்னும் பதிவுக்கு செல்கிறேன்.

அதிலிருந்து சில வரிகள்.

இந்நிலையில் விதி என் வாழ்க்கையில் அற்புதமான ஒரு விளையாட்டை நடத்தியது. நான் சிலநாட்களுக்கு முன்பு ஒரு தனிப்பட்ட விஷயமாக சங்கரன்கோயிலுக்குச் சென்றிருந்தேன். சங்கர நயினார் கோயிலைப் பார்க்கலாம் என்று சென்றேன். கூட்டம் இல்லை. வாசலில் செருப்பைக் கழற்றிப்போடலாம் என்று போனேன். அங்கே ஒரு சாமியார் திருவோட்டை நீட்டியபடி நின்றிருந்தார். நான் அவரிடம் ஒரு ரூபாய் காசை நீட்டினேன். அவர் சிரித்துக்கொண்டே ”ஜெயமோகன், ஒரு ரூபாய் மதிப்புதானா எனக்கு?” என்று கேட்டார்.

என்னடா இது நம்மை தெரிந்த சாமியாராக இருக்கிறாரே என்று நான் ஆச்சரியம் கொண்டு ”என்னை தெரியுமா?” என்று கேட்டேன். ”எனக்கு எல்லாரையுமே தெரியும்” என்றார். பீலா விடுகிறாரே என்று நினைத்து நான் அப்படியானால் ”அதோ போகும் அந்த சுடிதார் அணிந்த பெண்ணின் பெயர் என்ன?” என்று கேட்டேன். ”சுனிதா” என்றார். நான் உடனே ”சுனிதா” என்று கூப்பிட்டேன். அந்தப் பெண் திரும்பிப் பார்த்தாள். ”ஸாரி நான் வேறு யாரோ என்று நினைத்தேன்” என்று சொல்லி சமாதானம் செய்து விட்டேன்.

எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. இவரை எப்படியாவது சோதனை செய்துவிடவேண்டும் என்று நினைத்தேன். ”நான் என்ன வேலை பார்க்கிறேன்?” என்றேன். ”பிஎஸ்என்எல்லிலே கிளார்க். இதுகூடவா தெரியாது?” என்றார். ஆச்சரியத்துடன் ”சரி, என்னுடைய ஆபீசர் பெயர் என்ன?” என்ரேன். அதையும் சரியாகச் சொல்லிவிட்டார். கடைசியாக ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்து ”சரி நேற்று காலை பத்துமணிக்கு என்னை வந்து பார்த்தது யார்?” என்றேன். ”அருமனையைச் சேர்ந்த ஒரு பெண்மணி நீ எழுதிய நூல்களில் பிஎச்டி செய்ய வேண்டும் என்று வந்தாள்”

எனக்கு வேர்த்துவிட்டது. ”சரி அவள் பெயர்?” என்றேன். அதையும் சரியாகச் சொல்லிவிட்டார். எனக்கு மூத்திரமே முட்டிவிட்டது. ”கடைசியாக நீ இங்கே வரும்போது அந்த ஆயிரத்தில் ஒருவன் போஸ்டரைப்பார்த்தாய். எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் சாண்டில்யனின் கடல்புறாவை நினைத்து எடுத்தது என்று நினைத்து சாண்டில்யனைப்பற்றி நினைத்துக்கொண்டே வந்தாய்”

நான் மூச்சுத்திணறி ”இதெல்லாம் எப்படி தெரிகிறது?” என்று கேட்டேன். ”எனக்கு எல்லாமே தெரியும். இந்த தெருவிலே போகும் எல்லாருடைய வாழ்க்கையும் தெரியும். இந்த நகரத்தில் உள்ள எல்லாரையும் தெரியும். ஏன் உலகத்தில் உள்ள எல்லாருடைய வாழ்க்கையும் நினைப்புகளும் தெரியும். நான் மூக்காலமும் அறிந்தவன்” என்றார். என்னுடைய எல்லா நூல்களின் பெயரையும் சொல்லி ”வேண்டுமென்றால் முழு விஷ்ணுபுரத்தையும் மனப்பாடமாகச் சொல்கிறேன்” என்றார்.

இதெல்லாம் கொஞ்சம்கூட பொய் கிடையாது. கற்பனை கிடையாது. நான் பிரமித்து செயலிழந்து போய்விட்டேன். அப்படியே அவரது காலிலே விழுந்து விட்டேன். ”என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றேன். ”சரி, அதற்காகத்தான் நான் உன்னை தடுத்தாட்கொண்டிருக்கிறேன். உள்ளே போய் சாமி கும்பிட்டுவிட்டு வா” என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், உள்ளே அதே சாமியார் சுற்றி வந்து சாமி கும்பிடுவதைக் கண்டேன்!

சாமியாருடன் சென்றேன். அவரது பெயர் சுவாமி சிவானந்தலகரி மகராஜ். அருகே ஒரு வீட்டிலே அவர் தங்கியிருக்கிறார். அவர் சாப்பிடுவதே கிடையாது. பசிக்கும்போது கீழே கிடக்கும் ஒரு கூழாங்கல்லை எடுத்து வாயிலே போட்டு தின்கிறார். நான் அதை எப்படி தின்பது என்று கேட்டேன். அவர் எனக்கும் ஒரு கல்லை எடுத்து கொடுத்தார். அதை வாயிலிட்டு சாப்பிட்டேன். கற்கண்டு மாதிரி இருந்தது.

சுவாமி சிவானந்தலகரி மகராஜ் நடக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அவரது நிழல் தரையிலே விழுவதில்லை. . என்னால் ஆச்சரியம் தாள முடியாமல் கேட்டுவிட்டேன். சிரித்துக்கொண்டு ”நீ அறிந்துகொள்ள இன்னும் நிறைய இருக்கிறது” என்று சொன்னார். நாம் பிரமிக்கும் விஷயங்களாகவே செய்துகொன்டிருக்கிறார். அவரது முச்சுக்காற்றில் எப்போதுமே ஒரு சுகந்தம் இருக்கிறது. அவர் கண்களை இமைப்பதே இல்லை என்று கண்டபோது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.

அங்கே அமர்ந்ததும் அவர் எனக்கு ஞான தீட்சை கொடுத்தார். அதற்கு முன்னால் என்னுடைய தோளிலே அவர் கையை வைத்ததும் என் நெடுநாள் தோள்வலி பறந்து போய்விட்டது. என்னை அமரச் செய்து என்னுடைய நெற்றியிலே கையை வைத்தார். எனக்கு உலகமே சுழல்வது போல இருந்தது. நான் நட்சத்திரங்கள் நடுவே பறந்து செல்வதைப்போல உணர்ந்தேன். என்னுடைய ஏழு பிறப்பையும் நான் அப்போது புரிந்துகொண்டேன். அதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது.


கடைசி பத்திகளை படிக்கும் போதுதான் மனிதர் சாரு நிவேதிதாவை பகடி செய்திருக்கிறார் என சந்தேகம் வந்தது. ஜெயமோகன் நிஜமாகவே தூள் எழுத்தாளர்தான். பிறகு தமிழ்மணத்தை மேய்ந்ததில் சுகுணா திவாகரும் இது பற்றி பதிவு போட்டார் என பார்த்தேன். அதை பார்த்ததும் எனது சந்தேகம் ஊர்ஜிதம் ஆயிற்று. ஆனால் ஏனோ தெரியவில்லை அப்பதிவை சுகுணா திவாகர் எடுத்து விட்டார்.

மீண்டும் எல்லா ஏப்ரல் முட்டாள்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்கே ஏப்ரல் ஒண்ணாந்தேதி மட்டும் முட்டாளாகிற, மத்தவங்களை முட்டாளாக்கிப் பாக்கறவங்கன்னு யாருமே கெடையாது!

இருப்பதெல்லாம், வருடம் முன்னூத்தி அறுபத்தஞ்சு நாட்களும், வாழ் நாள் முழுவதும் முட்டாளாகவே இருக்கறவங்களும், அப்படி முட்டாளாக்கிப் பாக்கறவங்களும் என்று ரெண்டே ரகம் தான்!

வாழ்த்துச் சொல்வதானால், தினந்தினம் தான் சொல்லிட்டே இருக்கணும்!

:-))

Dr.Rudhran said...

dondu have you read moral science?

dondu(#11168674346665545885) said...

Explain yourself Rudhran. I think you came to the wrong blog post.

Dondu N. Raghavan

வால்பையன் said...

அப்போ இதுவும் ஏப்ரல் ஃபூல் பதிவா!?

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
ஆம், ஏப்ரல் ஃபூல் என்னும் கான்சப்டை உதாரணங்களுடன் விளக்கும் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஏப்ரல் 1ந்தேதி மட்டுமே முட்டாள் தினம் என சொல்வது சரியல்லா.

நாங்கள் வருடம் 365 நாட்களும் உங்கள் பதிவிற்கு வருகிறோமே.

Shankar said...

what is your email id?
Iam a student of Hindu high school. 1968 batch. Is there any forum where we can re unite old studentsof my batch?

Shankar
mahashank@gmail.com

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது