11/01/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 01.11.2010

அலாரம் படுத்தும்பாடு
நான் வழக்கமாக பேப்பர் வாங்கும் கடை முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் தினமும் விடியற்காலை 4 மணியளவில் எழுந்தால்தான் பேப்பர்களை விநியோக பூத்திலிருந்து பெற்றுக் கொண்டு எல்லோருக்கும் வீட்டில் போட ஏலும். கூடவே பால் வியாபாரம் வேறு, பால் பாக்கெட்டுகளை கடைக்கு முன்னால் க்ரேட்டில் வைத்துவிட்டு போய் விடுவார்கள்.

வழக்கமாக உற்சாகத்துடன் வேலை செய்யும் அவர் இன்று சற்றே சோர்வுடன் இருந்தார். உடம்பு சரியில்லையா என விசாரிக்க அவர் இன்று விடியற்காலை வழக்கம் போல நான்கு மணிக்கு அலாரம் அடிக்க, சிறிது நேரம் கோழித்தூக்கம் போடலாம் என நினைத்து, அலாரத்தை நிறுத்தி விட்டு தூக்கத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். மறுபடியும் முழிப்பு வந்தது காலை 6 மணிக்கு! பதறி அடித்து ஓடி எல்லாவற்றையும் கிரமமாக செய்து முடித்து விட்டு நான் அவர் கடைக்கு சென்றபோது சோர்வுடன் இருந்தார்.

அவரை உற்சாகப்படுத்த எண்ணி நான் சமீபத்தில் 1966-ல் கல்கியில் படித்த ஒரு துணுக்கு பற்றி பேசினேன். அதாவது கல்லூரி ஹாஸ்டலில் வசித்த பொறியியல் கல்லூரிப்பெண் விடுமுறை தினங்களிலும் காலை 5 மணிக்கு அலாரம் வைப்பாளாம். அவள் தோழி கேட்கிறாள், “ஏண்டி தினமும்தான் காலையில் சர்வே ப்ராக்டிகலுக்காக எழுந்து தொலைக்கணும். நாளைக்குத்தான் விடுமுறை ஆச்சே, ஏன் அலாரம் வைக்கறே? எங்காவது வெளியில் போகப் போறயா என கேட்க, அப்பெண்ணோ, “சீச்சீ அதெல்லாம் ஒண்ணுமில்லை. கால்யில் அலாரம் அடிச்சதும், ஆசை தீர அதன் தலையில் தட்டிட்டு இன்னும் 3 மணி நேரமாவது குற்ற உணர்ச்சி இல்லாமல் கோழித் தூக்கம் போடணும், அதுக்குத்தான்”.

இதைக் கேட்டது கடைக்காரர் கண்களில் பிரகாசம். தீபாவளிக்கு அடுத்த நாள் பேப்பர்கள் ஏதும் வெளிவராது ஆகையால் அன்னிக்கு இந்த வேலையை தான் ஆசை தீர செய்யப் போவதாகக் கூறினார்.

முத்துராமன் - எந்த பாத்திரத்தையும் ஏற்கும் பெருந்தன்மை
இன்று காலை, பொதிகை சேனலில் நடிகர் முத்துராமன் பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாகப்பட்டது, முத்துராமன் நடிப்பில் மிகுந்த அக்கறை உடையவர். தன் இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாது பிடித்த ரோல் என்றால் மிகச் சிறியதானாலும் தயங்காமல் செய்வார் என்று சொல்லப்பட்டது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் 1962-ல் வெளியான நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அவர் தேவிகாவின் கணவன் வேணுவாக வருவதையும் “நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்” என்னும் பாடல் காட்சியையும் காட்டினார்கள். அதைப் பார்த்து நான் ஆலோசனையில் ஆழ்ந்தேன். அப்படம் வந்த போது முத்துராமன் புதுமுகமே. அதாவது, அதுவரை பிட் ரோல்கள் பல செய்தாலும் (பூலோக ரம்பை, படிக்காத மேதை ஆகிய படங்கள்) இப்படத்தில் அவருக்கு பிரமோஷன் என்றே கூற வேண்டும். ஏனெனில் கல்யாண்குமார் அளவுக்கு அவருக்கும் எக்ஸ்போஷர் கிடைத்தது. ஆகவே இது ஒன்றும் நிகழ்ச்சியில் கூறப்பட்டதை நிரூபிக்கவில்லை.

வேண்டுமானால் இதற்கு உதாரணமாக சமீபத்தில் 1969-ல் வெளியான் சிவந்த மண் படத்தில் ஆனந்த் ரோலில் வந்து முதலிலேயே இறப்பதை குறிப்பிடலாம் (பை தி வே, சிவந்த மண்ணின் ஹிந்தி ரீமேக் தர்த்தி-யில் சிவாஜி அதே ரோலில் நடித்தார்).

பொதிகை டீம் சற்றே ஹோம் வொர்க் செய்வது நலம்.

Das doppelte Lottchen
சமீபத்தில் 1970-ல் Das doppelte Lottchen என்னும் தலைப்பில் பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் Erich Kaestner எழுதிய புத்தகத்தை படித்தேன். முதல் சேப்டரை படிக்கும்போதே அடேடே இது ஏற்கனவே ஆங்கிலத்தில் Parent Trap என்னும் தலைப்பில் சினிமாவாக வந்து நானும் அதை சமீபத்தில் 1964-ல் பார்த்தேனே என நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதே ஆங்கிலப் படம் தமிழில் சமீபத்தில் 1965-ல் குழந்தையும் தெய்வமும் என்னும் தலைப்பிலும், அதன் பிறகு ஹிந்தியில் தோ கலியான் என்னும் தலைப்பிலும் வந்ததும் நினைவுக்கு வந்தது.

தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்களை நான் அவை முதன் முதலாக வந்த சமயம் பார்க்கவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் வெர்ஷன்களில் சம்பந்தப்பட்ட குழந்தை நடிகைகள் இரட்டை பாத்திரத்தில் வந்தனர். ஆனால் சமீபத்தில் 1950-ல் Erich Kaestner-ராலேயே திரைக்கதை எழுதப்பட்ட Das doppelte Lottchen படத்தில் நிஜ இரட்டையரே நடித்தனர். இப்போது அந்த சகோதரிகளின் வயது 72-க்கு மேல் இருக்கும்.

ராமானந்த் சாகரின் உத்தர ராமாயணத்தில் வந்த லவன் குசனும் இரட்டை பிறவிகள். அப்படி இருந்தால் பல ட்ரிக் ஷாட்டுகள் மிச்சம்தானே.

டப்பிங் அபத்தங்கள்
Odessa file (பிரெடெரிக் ஃபோர்சைத்தின் நாவல்), Liberation (யூகோஸ்லேவிய படம்) ஆகிய படங்களில் ஒரு வேடிக்கையான அம்சம் பார்த்தேன். முதல் படத்தையே எடுத்து கொள்ளுங்கள். கதை ஜெர்மனியில் கென்னெடி சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தில் ஆரம்பிக்கிறது. சம்பவங்கள் விறுவிறென நகர்கின்றன. இது ஆங்கிலப் படமாதலால் வசனங்கள் ஆங்கிலத்தில்தான், ஆனால் தெருவில் உள்ள விளம்பர பலகைகள் ஆகியவை ஜெர்மனில். ஓக்கே. ஆனால் இதென்ன, அவ்வப்போது நாஜிகளின் காலகட்டத்து நிகழ்வுகள் ஃப்ளாஷ் பாக்குகளாக வரும்போது மட்டும் வசனங்கள் ஜெர்மனி, கீழே சப் டைட்டில்கள். இது மட்டும் ஏன் அப்படி? யோசித்தால் ஒன்று புலப்பட்டது நாஜியினர் நம்மவர் இல்லை என்னும் கருத்தை வலியுறுத்த வேண்டும் அல்லவா அதானால்தான்.

அதே போல இரண்டாவது படத்தில் யூகோஸ்லேவியரும் சரி ஆங்கிலேயரும் சரி அவர்கள் தோன்றும் காட்சிகள் எல்லாம் ஆங்கிலத்தில். ஆனால் நாஜி ஜெர்மானியர் வரும்போது மட்டும் அவர்கள் ஜெர்மனில் பேசுவதாக காண்பிக்கின்றனர். மேலே சொன்ன காரணமே இங்கும் செல்லுபடியாகும் என நினைக்கிறேன்.

அது இருக்கட்டும், நம்ம ஊரில் என்ன செய்கிறார்கள்? ஒரு தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கில் கதை கோதவரி கரையில் உள்ள திருச்சியிலும், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள நாகப்பட்டினத்திலும் நடக்கிறது? ஏதேனும் புரிகிறதா? புரியவில்லை என்றால் விட்டுத் தொலையுங்கள். எனக்கும்தான் புரியவில்லை.

ஹைதராபாத்தில் நடக்கும் கமலஹாசனின் இந்த்ருடு சந்த்ருடு படத்தின் தமிழ் டப்பிங்கில் ஹைதராபாத்தில் ராயப்பேட்டையையும் அண்ணா நகரையும் காட்டுகிறார்கள். டெக்னாலஜி ஈஸ் இம்ப்ரூவிங் யூ நோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

எந்த பால் பூத், செய்தி தாள் கடை , எம் ஜி ஆர் சாலையா

dondu(#11168674346665545885) said...

பால் பூத் என்றால் பால் பாக்கெட்டுகள் விற்கும் கடை. ஆவின் பட்டன் போட்டு எடுக்கும் பால் பூத் அல்ல. அது சுதந்திரதின பூங்கா அருகே ஆறாம் மெயின் ரோடில் அமைந்துள்ளது.

நான் சொல்வது எம்.ஜி.ஆர். ரோடில் ஸ்டேட் பாங்க் காலனி பழைய பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது. கடைக்காரரின் மகள் தென்றல் பற்றி நான் எனது “தொலைந்துபோன திறமைகள் பதிவில் எழுதியுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2010/08/blog-post_1448.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அஸ்குபிஸ்கு said...

சமீபத்தில் 1966, சமீபத்தில் 1962 என கூறுவது உங்களுக்கு வியாதியாகிவிட்டதா என்ன? நீங்கள் மிகுந்த நினைவாளர் என்பதில் ஐயமில்லை. ஆனால் சமீபத்தில் என்று கூறி ரொம்ப வருசத்துக்கு முந்தைய நிகழ்விற்கு பின்னோக்கிச் செல்வது சற்று விகற்பமாக இருக்கிறது. இதைச் சொல்வதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்.

dondu(#11168674346665545885) said...

@அஸ்குபிஸ்கு
அவ்வாறு எழுவதற்கான காரணத்தை நான் பலமுறை எனது பதிவுகளில் கூறியாயிற்று.

அவற்றை பார்த்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அப்படி பார்த்திருக்கும் பட்சத்தில் அவை உங்களுக்கு நினைவில்லை என்றால் உங்களுக்கு நினைவாற்றல் போதாது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

D. Chandramouli said...

"Nenjil Ore Alayam" - This was released in Casino and for 15 days, there wasn't much of a crowd. But, later, by word of mouth, the film got a boost and ran to packed house for weeks. I remember seeing the movie with my dad and my brother's family, ten of us occupying a row! A new comedian Nagesh got an important role and he went to on to make history. The songs were superb. I was told the movie was taken in a single set, with a low budget and in a short time. Directors like Sridhar and KB broke new grounds, while Bhimsingh relied on family sentimental values and APN on mythological movies, both utilizing Sivaji's memorable acting talents. Inspite of advanced technology available today, I still feel the sixties were the golden era of Tamil cinema - acting, direction, music -you name anything.

வஜ்ரா said...

1998 ல் லின்சி லோஹன் நடித்து அதே குழந்தையும் தெய்வமும்/Parent trap ரீமேக் கூட செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் மூலக்கதை ஜெர்மன் மொழியில் இருந்து வந்தது நீங்கள் இப்பொழுது சொல்லித் தான் தெரிந்துகொண்டேன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது