3/05/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 21, 22 & 23

பகுதி 21 (02.03.2009)
தில்லானா மோகனாம்பாள் நாவலை எடுத்து படித்தால் ஒன்று புரிகிறது. அவ்வளவு பெரிய நாவலை எப்படி சுவையாக திரைக்கதை ஆக்கினார்கள் என்பது வியக்கத்தக்கது. அதிலே மூலக்கதை ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்புவும் ஈடுபட்டவர் என்பது இதை விளக்குகிறது. இம்மாதிரி அமைவது ரொம்ப அபூர்வம்.

ஆனால் எங்கே பிராமணன் கதை விஷயம் அப்படியே நேர் எதிராக அமைந்துள்ளது. கச்சிதமாக எழுதப்பட்ட நாவல் இங்கு மெகா சீரியலாக உருவாகிறது. ஆகவே நிகழ்ச்சிகள் சேர்க்கப்படுகின்றன. மேலே உள்ள பத்தியில் சொன்னதை விட இது அதிகக் கடினமான வேலைதான். எப்போதுமே இருப்பதை வெட்டி செதுக்கிவிடலாம். ஆனால் புதிதாக சேர்த்து, அவையும் ஏற்கனவே இருப்பதுடன் நன்றாக பொருந்த வேண்டும் அல்லவா.

இந்த சீரியலில் நான் பார்த்தவரை இது நன்றாகவே நடந்து வருகிறது. அசோக் காணாமல் போகும் சீன் மூல நாவலில் இல்லைதான். இருப்பினும் அது கடந்த பல எபிசோடுகளில் வருகிறது. அசோக் மட்டுமல்ல, மற்ற பாத்திரங்களின் எதிர்வினைகளும் அவ்வாறே இயல்பாகவே சேர்க்கப் பட்டுள்ளன. திரைக்கதை வெங்கட்டாயிற்றே, மேலும் சோ வேறு இருக்கிறார். எழுபதுகளில் எழுதப்பட்டது இம்மாதிரி 30 ஆண்டுகளுக்கு பிந்தைய சூழ்நிலையிலும் பொருந்துவதே அந்த நிகழ்ச்சிகள் எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்பதையே காட்டுகிறது.

இப்போது சீரியலுக்கு செல்வோமா?

திருவண்ணாமலைக்கு போனால் அசோக் மறுபடியும் காணாமல் போயிருக்கிறான். நீலகண்டனும் பாகவதரும் திகைக்கின்றனர். நீலகண்டன் முதலில் சாம்பு சாஸ்திரிகள், அவர் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோரை சந்தேகப்பட்டு சில ரசாபாசமான வார்த்தைகளை உதிர்க்கிறார். பிறகு சாம்பு சாஸ்திரிகளின் ஆலோசனையை ஏற்று கோவில் பக்கம் தேடச் செல்லும் இடத்தில் அசோக் கிடைக்கிறார்.

சீன் இப்போது சென்னைக்கு போகிறது. அசோக் வீட்டில் அவனுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். தங்களையெல்லாம் விட்டு ஏன் திருவண்ணாமலைக்கு போக வேண்டும் என வசுமதி ஆதங்கத்துடன் கேட்க, ஏதோ போகணுனு தோணித்து என்று ஆரம்பித்து ரமண மகரிஷி, எது பரிபூரணமோ அதை ஆராய்ந்தால் மீதி எல்லாம் தானே வரும் என்றெல்லாம் பேசி எல்லோரையும் மிரள வைக்கிறான். இப்படியெல்லாம் பேசினால் பேசாமல் மனோதத்துவ நிபுணரிடம்தான் அசோக்கை கொண்டு செல்ல வேண்டியிருக்கும் என நீலகண்டன் கூற, யாருமே நார்மல் இல்லை என அசோக் விளக்குகிறான். மனோதத்துவ நிபுணரும் ஸ்கிசோப்ரினிக்தான் என்றும் கூற, திக்குமுக்காடிப் போகும் நீலகண்டன் விடைபெற்று செல்கிறார். பாகவதரை இரண்டு நாள் தங்கிவிட்டு போகச் சொல்ல அவரும் தங்குகிறார்.

நீலகண்டன் வீட்டில் அவரும் அவர் மனைவியும் அசோக் பற்றி விவாதிக்கிறார்கள். நீலகண்டன் மனோதத்துவ நிபுணர்களை நம்ப, அவர் மனைவி பேசாமல் அசோக்கின் ஜாதகத்தை பாகவதரிடம் கொடுத்து அவர் கருத்து கேட்கலாம் எனக் கூறுகிறார்.

சீனில் சோவும் அவர் நண்பரும் வருகின்றனர்.

ஜோசியம் பற்றிய தனது அவநம்பிக்கையை நண்பர் வெளிப்படுத்த சோ அவர்கள் நல்ல ஜோசியர்கள் துல்லியமான முறையில் கணிப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். பரிகாரங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் ஆற்றும் பங்கையும் விளக்குகிறார். இதை மிகுதியான அளவில் வியாபாரமாக்கியதே (ஒரு கேள்விக்கு ஒரு ரூபாய், ஒரு மணி நேர கன்சல்டேஷனுக்கு இத்தனை ரூபாய் கெடுபிடி செய்வது) அதன் மேல் அவநம்பிக்கை கொள்ள காரணம் என்றும் கூறுகிறார். அதே போல மருத்துவத் துறையிலும் சேவை மனப்பான்மை குறைந்து காசு பண்னுவதே காரியம் என ஆனதில் பலருக்கு மருத்துவர்கள் மேல் உள்ள நம்பிக்கை குறைவதை பற்றியும் அவர் பேசுகிறார். ஆக, as a field of study, there is nothing wrong in astrology என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

பகுதி 22 (03.03.2009):
அசோக் வழக்கம்போல கல்லூரி கிளம்ப, நாதனும் அனுமதிக்கிறார். அவர் மனைவிக்கு மன்மேயில்லை. எங்காவது பையன் ஓடிப் போய்விடுவானோ என அஞ்சுகிறாள். ஆனால் நாதன் ஒரு துப்பறியும் நிபுணர் மூலம் அசோக்கை பின்தொடர ஏற்பாடு செய்துள்ளார். உண்மையில் என்ன நடக்கிறதென்றால், திடீரென அப்பக்கம் வந்த ஒருகாரில் அசோக் ஏறிச் சென்றுவிடுகிறான்.

“ஆகா ஜாலி, கிட்நாப்பிங்” என சோவின் நண்பர் குதூகலிக்க சோ அவருக்கு சாவகாசமாக விளக்குகிறார். யார் அசோக்கை கிட்நேப் செய்தாலும் அவர்களை பேசிப் பேசியே அசோக் டரியல் ஆக்கிவிடுவான் என்பதை அசோக் போலவே பேசிக் காட்டி நண்பரை டரியல் ஆக்குகிறார். இந்த காட்சி சோ அவர்களூடைய ஒரு புத்தகத்தில் வீரப்பனால் (கதியில் அவனுக்கு மாரப்பன் என பெயர்) சோ அவர்களே கடத்தப்பட்ட காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறது. அதில் அவர் தினமும் வீரப்பனிடம் கிருஷ்ண பரமாத்மா மற்றும் பகவத் கீதை பற்றி பேசியே வெறுப்பேற்றுகிறார் என்றும், அவனே நொந்து போய் “யோவ் இந்தாள் இன்னொருநாள் இந்தக் கிஸ்னன் பற்றிப் பேசினால் அவனவன் பைத்தியம் பிடித்து ஓட வேண்டியதுதான்” எனக்கூறி அவரை விட்டு விடுகிறான். அதே போல டோண்டு ராகவனை கடத்தினால் என்ன செய்வது? பேசாமல் இஸ்ரேல் பற்றி பேசி விடுவது. அவனவன் துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடிடுவான்.

இங்கு கதையில் நாதன் திகைக்க நீலகண்டன் தன் காரில் அசோக்கை கொண்டு வருகிறார். தேவையற்ற குழப்பம். அவரிடம் பிறகு சி.ஐ.டி. பற்றிக் கூறி சமாதானப்படுத்துகிறார் நாதன். நீலகண்டன் வீட்டில் அவர் மனைவி அவர் இம்மாதிரி முந்திரிக்கொட்டை வேலை எல்லாம் செய்யாமலிருக்குமாறு அன்புடன் கூறுகிறாள்.

அடுத்த காட்சியில் சாம்பு சாஸ்திரியின் மனைவி வேம்பு சாஸ்திரியின் அக்காவைப் பார்த்து குசலம் விசாரிக்கிறார். பின்னால் அது பற்றி வேம்பு சாஸ்திரி, அவர் மனைவி மற்றும் அக்கா ஆகியோர் பேசும்போது வேம்புவின் மகளை சாம்புவின் பிள்ளைக்கு பார்க்கும் ஐடியா வர, வேம்பு, அவர் அக்காவுக்கு ஓக்கே ஆனால் வேம்புவின் மனைவிக்கு அது ஓக்கே இல்லை. ஏனெனில் தன் பெண்ணை வைதிகர் வீட்டில் மணம் செய்து கொடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை. பெண் ஜயந்தியின் அபிப்பிராயத்தைக் கேட்க அவளுக்கு ஓக்கே போலத்தான் படுகிறது.

ஒரு டிபிக்கல் பார்ப்பனர் வீட்டு மனிதருடைய மனோபாவத்தை இந்த சீன் காட்டுகிறது. நாவலில் இல்லாவிட்டாலும் மெகா சீரியலாதலால் இந்த விரிவாக்க முயற்சி புலப்படுகிறது.

கடைசி சீனில் அசோக் தன் அன்னையிடம் சன்னியாசம் பெறுவது பற்றி பிரஸ்தாபிக்கிரான். அதாவது தான் சன்னியாசம் பெற அவள் சம்மதம் தருவாளா என்பதுதான் அது. எதிர்ப்பார்த்ததைப் போலவே வசுமதி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஆதி சங்கரர் சன்னியாசம் பெற்ற சூழ்நிலை பிரஸ்தாபிக்கப்படுகிறது.

சோவும் நண்பரும் மீண்டும் சீனில் சன்னியாசங்கள் பெறுவதில் இருக்கும் வழிமுறைகளை சோ அவர்க்ள் அவருக்கே உரித்தான தெளிவான அழுத்தமான வகையில் வர்ணிக்கிறார். நான் அவற்றைக் கூறுவதை விட இந்த எபிசோடின் லிங்கை க்ளிக் செய்து பார்ப்பது அதிகம் பலனளிக்கும்.

பகுதி 23 (04.03.2009):
பாகவதரும் அவர் மனைவி ஜானகியும் பேசுகின்றனர். அசோக்கின் விஷயத்தை அவர்களும் பேசுகின்றனர். அப்போது அவரது பேரன் ராமசுப்பு ஹாஸ்டலிலிருந்து வருகிறான். தன் தாத்தாவிடம் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கும் சக்தி இருப்பதாக தான் கேள்விப்பட்டதை அவன் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என பாகவதர் விளக்கி அது அசோக்கின் அனுபவமே, ஆனால் தன்னால் அதை விளக்க இயலவில்லை என்றும் கூறுகிறார். அதே போல பலவிஷயங்கள் விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளன எனக் கூறி மேலும் பேசுகிறார். “விட்டால் உன் தாத்தா இம்மாதிரித்தான் பேசுவார்” என பேரனிடம் பேசி தன் கணவரை கலாய்க்கிறார் அவர் மனைவி.

அடுத்த காட்சியில் நீலகண்டன் கந்தன் சாவடிக்கருகில் உள்ள அம்பாள் கோவில்லுக்கு போகப் போவதாக வீட்டில் கூற, எல்லோருக்கும் ஆச்சரியம். பிறகுதான் அங்கு ஆஃபீஸ் வேலையாக போகவிருப்பதை கூறுகிறார். ஆகவே தன் மனைவி மகள் கூறுவதுபோல விபூதி எல்லாம் போட்டு கொண்டு பண்டாரம் போல போக இயலாது எனவும் கூறுகிறார். சரி அப்படியானால் கோட்டு, சூட்டு, டை எல்லாம் போட்டு தொப்பியும் போட்டு செல்லுமாறு நீலகண்டனின் மனைவி அவரிடம் கேலியாகக் கூற அதாவது சார்லி சாப்ளின் மாதிரி என நீலகண்டன் தெளிவு செய்கிறார்.

இங்கு மீண்டும் சோவும் அவர் நண்பரும். உண்மையான பண்டாரங்கள் நிஜமாகவே நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் என்பதை சோ விளக்குகிறார். அவர்கள் சோழ நாட்டு வேளாளர் மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்.

இப்போது அரசியல்வாதி வையாபுரியும் அவர் கையாள் சிங்காரமும் வருகின்றனர். சிங்காரம் தன் மனைவி தனது செயல்பாடுகளால் வெறுப்புற்று தன்னை மதிப்பதேயில்லை என குறைபடுகிறான். வையாபுரி அவனுக்கு ஆறுதல் கூறுகிறார். தான் ரொம்ப பாவம் செய்தாலும் தனக்கு நல்ல மனைவி கிடைத்ததையும் அவள் புண்ணியம் செய்தாலும் தன்னைப் போன்ற உதவாக்கரை கணவனாக அமைந்ததையும் கூறி ஆச்சரியப்படுகிறான்.

நாதன் தனது வீட்டுக் கணக்குகளை பார்க்க ஒரு அக்கவுண்டண்ட் ஏற்பாடு செய்து வீட்டுக்கு அழைத்து வர, சுப்புணி என்ற பெயருடைய அந்த அக்கவுண்டண்ட் சமையற்கார மாமியின் கணவன் என தெரிய வருகிறது. அவருக்கு குழந்தை இல்லாததால் கணவன் வேறு திருமணம் செய்து கொண்டது வெளி வருகிறது.

மீண்டும் சோ மற்றும் நண்பர். இந்து சமுதாயத்தில் டைவர்ஸ், இருதார மணம் ஆகியவற்றை கண்ட்ரோல் செய்யும் ஷரத்துகள் பற்றி சோ விளக்குகிறார். இருபாலரும் ஒப்பி டைவர்ஸ் செய்து கொள்வது இந்து லாவுக்கு புதிது இல்லை என்பதையும் விளக்குகிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Anonymous said...

//மீண்டும் சோ மற்றும் நண்பர். இந்து சமுதாயத்தில் டைவர்ஸ், இருதார மணம் ஆகியவற்றை கண்ட்ரோல் செய்யும் ஷரத்துகள் பற்றி சோ விளக்குகிறார். இருபாலரும் ஒப்பி டைவர்ஸ் செய்து கொள்வது இந்து லாவுக்கு புதிது இல்லை என்பதையும் விளக்குகிறார்.


puradsikaramaaa karuththukal

pakuththarivu
sithaaikal

Anonymous said...

இரு தார மணம், விவாகரத்து போன்றவை, சாப்பாடு, உடை, போன்ற சமுதாய அத்த்ியாவசியங்களில் ஒன்று.

அதைப் பற்றிய ஷரத்துக்கள் கவுடில்யரின் அர்தசாஸ்திரத்தில் உள்ளது. சோ அதைத் தான் சொல்லியிருக்கவேண்டும்.

பட்டாம்பூச்சி said...

தொடரட்டும் உங்கள் தொடர் எழுத்துப்பணி :)).

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது