5/13/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 69 & 70

கடந்த பத்தாம் தேதியன்று டாக்டர்கள் ஷாலினி மற்றும் ருத்திரன் அவர்களுடன் கலந்துரையாடலுக்கு வந்த போது, ஒருவர் என்னை அணுகி நான் “எங்கே பிராமணன்” சீரியலை ஒட்டி எழுதிவரும் பதிவுகள் பற்றி பேசினார். சகவலைபதிவர்களது எதிர்ப்புகளையும் மீறி நான் இவ்வாறு செய்வதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். கவலை தோய்ந்த முகத்துடன் லக்கிலுக் “டோண்டு சார் எல்லா எபிசோடுகளையும் கவர் செய்யப் போகிறார் போல இருக்கு” என்று தனது அச்சத்தை வெளியிட, நான் அவ்வாறுதான் செய்யப் போவதாகக் கூறி அவரது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தினேன்.

பகுதி - 69 (11.05.2009):
அசோக், நாதன் மற்றும் நீலகண்டன் டாக்டர் ஹம்சாவின் மருத்துவ மனையில் காத்திருக்கின்றனர். வார்ட்பாய் வந்து அசோக்கை ஷாக் ட்ரீட்மெண்டுக்காக அழைத்து செல்கிறான். நாதன் கலங்குகிறார், நீலகண்டன் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். திடீரென நாரதர் தோன்றுகிறார். கீழே குறும்பு பார்வையோடு பார்க்கிறார். மின்சாரம் முழுக்க நின்று போகிறது. டாக்டர் ஹம்சா ஜெனெரேட்டரை ஸ்டார்ட் செய்யும்படி கூறுகிறார். ஆனால் டீசல் இல்லை, மேலும் அன்று பெட்ரோல் பங்குகளில் ஸ்ட்ரைக் வேறு. வேறு வழியின்றி டாக்டரே இன்னொரு நாளைக்கு அப்பாயிண்ட்மெண்ட் தருவதாகக் கூறி அசோக்கை அழைத்து போகுமாறு கூறுகிறார்.

“என்ன சார், நாரதரா மின்சாரத்தை நிறுத்தினார், அவர் என்ன மின்வாரியத்தில் வேலை செய்கிறாரா?” என சோவின் நண்பர் கேட்க, “அதாவது மின்வாரியத்தில் வேலை செய்பவர்களுக்கு மின்சாரத்தை நிறுத்துவதுதான் வேலை என சொல்கிறீர்களா” என சோ அவரை வெறுப்பேற்றுகிறார். ஏன் அச்சமயம் பார்த்து மின்சாரம் நிற்க வேண்டும், அன்றைக்கென டீசல் இல்லாது போய், பெட்ரோல் பங்குகளும் வேலை செய்யாது, ஜெனரேட்டரை இயக்க முடியாமல் ஏன் போக வேண்டும் என கேள்விகளை அடுக்கிய அவர், இதெல்லாம் அதிர்ஷ்டம் என்று கூறுகிறார். திர்ஷ்டம் என்றால் பார்க்க முடிவது, அதிர்ஷ்டம் என்றால் பார்க்க முடியாதது, அதாவது தெய்வச்செயல் என விவரிக்கிறார்.

நாதன் நீலகண்டனிடம் தனக்கு முந்தைய இரவு வந்த கனவு பற்றி கூறுகிறார். அதில் ஒரு பெரிய சரவிளக்கு எரிந்து கொண்டிருந்த ஒரு அறையில் முனிவர் ஒருவர் வந்து கமண்டலத்திலிருந்து நீர் எடுத்து விளக்கு மேல் அடிக்க, அது அணைகிறது. இதெல்லாம் தேவையற்ற கற்பனைகள் என நீலகண்டன் அதையெல்லாம் புறங்கையால் தள்ளுகிறார். இதெல்லாம் சயன்ஸ் கீழே வராது என அவர் கூற, நாதனோ, சயன்ஸ் என்பது எப்போதும் கேள்விகளையே எழுப்பி வந்திருக்கிறது, ஒரு செட் கேள்விகள் முடிந்ததும் அடுத்த செட் கேள்விகள் அந்த இடத்தைப் பிடிக்கின்றன என சொல்கிறார். அசோக் இஞ்செக்‌ஷன் போட்டதால் மயக்கமாக உணர்ந்த நிலையில் வெளியே வர, நாதன் அவனை தன்னுடன் அணைத்து அழைத்து செல்கிறார். அவரது வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் தனது காயத்ரி ஜபத்தை முடிக்கிறார்.

நீலகண்டன் வீட்டில் அவர் பேப்பரை பார்த்து போரூரில் நிலம் ஒன்று விலைக்கு வருகிறதென்றும், அதை வாங்கி ரிஜிஸ்டர் செய்யலாம் என்கிற தனது எண்ணத்தையும் தெரிவிக்கிறார். “இந்த நிலம் வாங்கி ரெஜிஸ்டர் செய்யறதெல்லாம் பழங்காலத்தில் இருந்திருக்காது அல்லவா” என சோவின் நண்பர் கேட்க, “யார் சொன்னது, கண்டிப்பாக அதெல்லாம் இருந்தன” என சோ பதிலளிக்கிறார். பிறகு நிர்வாகத்துக்கான கையேடு என உணரப்படும் சாணக்கியர் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சோ மேற்கோள்களாக காட்டுகிறார். உதாரணத்துக்கு பழைய கேஸ்கள் ஒரு வழியில் தீர்ப்பளிக்கப்பட்டால், அதே விஷயத்துடன் கூடிய புது வழக்குகளுக்கும் பழைய தீர்ப்புகளை சுட்டும் வாதங்கள், வருமானவரி கட்டாது ஏய்ப்பவர்களை போட்டு கொடுத்து அவர்களை வரிவிதிப்புக்கு உட்படுத்துபவர்களுக்கு அதிகமாக வசூலித்த வரியில் ஆறில் ஒரு பகுதியை தகவல் அளிப்பவருக்கு தருதல், வருவாய்க்கு மீறி சொத்து சேர்ப்பவர்களை கையாளும் முறை என எல்லாமே அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.

போரூரில் நிலம் வாங்கி உடனேயே ரிஜிஸ்டர் செய்ய நீலகண்டன் விரும்ப, அவன் மனைவியோ அது மார்கழி மாதம், ஆகவே அப்போது அதை செய்ய வேண்டாம் என அவர் மனைவி பர்வதம் கூற, நீலகண்டன் அதற்காகவே அதை இப்போதே செய்யப் போவதாகக் கூற, உமா தன் தந்தையிடம், மார்கழி மாதம் மிகச்சிறந்த மாதம் எனவும், மாதங்களில் தான் மார்கழி என கண்ணனே கூறியதுள்ளதாகவும், அது தேவர்களுக்குரிய மாதம் எனவும் பாயிண்டுகளை அடுக்குகிறாள். ஆகவே இது மிக நல்ல மாதம், கண்டிப்பாக ரிஜிஸ்ட்ரேஷனை வைத்து கொள்ளலாம் என உமா முடிக்கிறாள். அப்படியானால் அதற்காகவே இம்மாதம் அதை செய்யப்போவதில்லை, அடுத்த மாதம் பார்த்து கொள்ளலாம் என நீலக்ண்டன் கூறிவிடுகிறாள். அவர் அந்தண்டை போனதும் தாயும் மகளும் கைகுலுக்கி கொள்கின்றனர். ஒரு பெண்ணே தான் நினைத்தால் ஒரு ஆணை முட்டாளாக்க முடியும் என இருக்க, இரண்டு பெண்கள் சேர்ந்தால், நீலகண்டன் போன்றோருக்கு சான்ஸே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

“அது என்ன சார், மார்க்கழி மாதம் நல்ல மாதம் இல்லையா” என நண்பர் கேட்க, சோ “கிடையவே கிடையாது, உமா சொன்னது போல கடவுளுக்கும் பிடித்த மாதம் அது. பிறகும் அம்மாதத்தில் ஏன் காரியமாற்றக் கூடாது என்றால், அது தேவர்களுக்கான பூஜைகளில் ஈடுபட வேண்டிய மாதம், ஆகவே சொந்த வேலைகளுக்கு அதை உபயோகிக்கக் கூடாது என்ற நோக்கதினாலேயே இவ்வாறு உள்ளது” என விளக்குகிறார்.

சாம்புவும் செல்லம்மாவும் கிரியின் திருமணம் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, வேம்பு அங்கே வருகிறார். செல்லம்மா அவரிடம் கிரியின் தந்தை சிகாமணி முதலியார், இத்திருமணத்தில் ஜயந்தியின் அன்னைக்கு உடன்பாடு இல்லை என்பதை புரிந்து கொண்டு, வேண்டுமென்றே வரதட்சிணை அதிகமாகக் கேட்டு, வேம்புவே சம்பந்தம் பற்றிய பேச்சை நிறுத்துமாறு செய்தார் என கூறுகிறார். வேம்பு திகைக்கிறார். “அதாவது நாங்களா ஒதுங்கலை, ஒதுக்கப்பட்டோம் என்கிறீர்களா” என திகைக்கிறார்.

பகுதி - 70 (12.05.2009) (எபிசோடின் முதல் ஸ்லாட்டின் முடிவில்தான் வீடியோ ஆரம்பிக்கிறது)
நேற்றைய கடைசி காட்சியுடன் இன்றைய எபிசோட் ஆரம்பிக்கிறது. இவ்வாறு நிலைமையை புரிந்து கொண்டு தன் மேல் பழி வந்தாலும் பரவாயில்லை என தன் மேல் எல்லாவற்றையும் போட்டு கொண்டு முதலியார்வாள் செய்திருப்பது வேம்புவுக்கு அவர் மேல் உள்ள மதிப்பை பலமடங்கு அதிகரிக்கிறது. முதலியார்வாள் சந்தேகப்பட்டது சரியே, சம்பந்தம் முறிந்ததும் அதிகமாக சந்தோஷப்பட்டு அவர் மனைவி சுப்புதான் வடை பாயசத்துடன் விருந்து செய்து போட்டாள் என கூறுகிறார். இப்போது அவருக்கு மீண்டும் எப்படியாவது இந்த சம்பந்தத்தை முடித்துவிட வேண்டும் என்ற ஆசை மீண்டும் எழுகிறது. செல்லம்மா வந்து தன் மனைவி மற்றும் அக்காவுடன் பேச வேண்டும் என அவர் கேட்டு கொள்ள, செல்லம்மாவும் ஒத்து கொள்கிறாள்.

டாக்டர் ஹம்சாவை பார்க்க பாகவதர் வருகிறார். அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொல்கிறார். “ஓ நீங்கள்தானா அந்த ஃபேமஸ் பாகவதர்” எனக் கேட்கிறார் டாக்டர். பாகவதர் அசோக்குக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் எல்லாம் தர வேண்டாம் எனக் கூற, அது தனது தொழில் சம்பந்தப்பட்ட முடிவு, பாகவதர் அதில் தலையிடலாகாது என டாக்டர் உறுதியாகக் கூறுகீறார். தான் எழுதிக் கொடுத்த மருந்துகள் சரியானவையே என அவர் உறுதியாகக் கூற, ஆனால் அவை தரப்படுவது ஒரு தவறான பேர்வழிக்கு எனக் கூறி விட்டு பாகவதர் விடை பெறுகிறார்.

வெளியில் வரும் சமயம் நாதனும் அசோக்கும் அங்கு டாக்டருக்காக காத்திருக்கின்றனர். அவர்களிடம் பாகவதர் தான் டாக்டரை பார்க்க வந்த விவரத்தை கூறிவிட்டு, அசோக்கை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறிவிட்டு செல்கிறார்.

இப்போது டாக்டர் அசோக்குக்கு ட்ரீட்மெண்டை ஆரம்பிக்கிறார். அவனுக்கான இஞ்செக்‌ஷனை எடுத்து கொண்டு, “அசோக், நீ தயாரா” என கேட்க, அவனும் அதை ஆமோதிக்கிறன். மேலேயிருந்து நாரதர் குறும்பு புன்னகையுடன் நோக்குகிறர். திடீரென அசோக் பேச ஆரம்பிக்கிறான். “டாக்டர் உங்கள் மின்கருவிகள் நன்கு வேலை செய்கின்றனவா” என தெளிவாகக் கேட்கிறான். “ஏன் அவ்வாறு கேட்கிறாய்” என்பதுபோல டாக்டர் அவனைப் பார்க்க, ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் பீஹாரில் இதே டாக்டர் மித்ரா என்னும் நோயாளிக்கு சிகிச்சையளிக்கும்போது கம்பவுண்டரின் கவனக்குறைவால் நோயாளியின் மரணம் ஏற்படுகிறது. அப்போது அதன் முக்கிய காரணம் குறைந்த தரம் கொண்ட மின் கருவிகள்தானே எனக்கூறி, முழு கேஸ் ஹிஸ்டரியையும் புட்டுபுட்டு வைக்கிறான். டாக்டர் வெலவெலத்து போய் இஞ்செக்‌ஷன் சிரிஞ்சை கீழே தவற விடுகிறாள். “இதெல்லாம் உனக்கு - உங்களுக்கு - எப்படி தெரியும் அவர் தடுமாற்றத்துடன் கேட்க, மேலேயிருந்து ஏதோ செய்திகள் தன்னை நோக்கி வருவதாகவும், அவை சரியாக ரிசீவ் ஆகாவிடினும் சுமாராக அவை கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஓக்கே இப்போ நீங்கள் ஊசிபோடுங்கள் என அவன் தயாராக, டாக்டர் “No, I wont" என கதறிவிட்டு வெளியே செல்கிறார். திகைப்புடன் தன்னை பார்க்கும் நாதனிடம் அவர் அசோக் ஒரு ஜீனியஸ் என்றும், அவனுக்கெல்லாம் இம்மாதிரி மருந்துகளும் எலெக்டிகல் ஷாக் ட்ரீட்மெண்டெல்லாம் தோதுப்படாது எனக் கூறி, தன் வாழ்வில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் வேறு யாருக்குமே இங்கு தெரியாத நிகழ்வை அவன் கூறினான் எனவும், தானே அதை மறந்திருந்ததாகவும் கூறுகிறார். பிறகு தனது அறைக்குள் சென்று விடுகிறார்.

செல்லம்மா, சுப்புலட்சுமி மற்றும் அவளது நாத்தனார் ஜெயந்தி கல்யாண விஷயமாக பேசுகின்றனர். செல்லம்மா அவர்களிடம் சிகாமணி முதலியார் அதிக சீர் கேட்டதன் உண்மையான காரணத்தைக் கூறிவிட்டு, இந்த இடத்தையே ஜயந்திக்கு முடிக்குமாறு ஆலோசனை கூறுகிறார். அதை ஒத்துக் கொள்ளாத சுப்புவும் அவள் நாத்தனாரும் செல்லம்மாவிடம் கடுமையாகப் பேசி அவரை அனுப்புகின்றனர்.

பிறகு வேம்புவிடம் அவர்கள் செல்லம்மா வந்து போன விஷயத்தை கூறி அவரை வேம்புதான் அனுப்பியிருக்க வேண்டும் ர்ன்ற தங்களது சரியான ஊகத்தை தெரிவிக்கின்றனர். வேம்பு இந்த சம்பந்தத்துக்கு சாதகமாக பேச, அவ்ர் ஒரு வைதீக பிராம்மணனாக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் பேசுதல் தகாது என அவரை கண்டிக்கின்றனர். தான் ஒரு வைதீக பிராமணனே. ஆகவேதான் 1. மனசு விசாலமா இருக்கணும், 2. ம்னித நேயமே வேதம், 3. சமநோக்குடன் இருக்கவேண்டும், 4. மனுஷ ஜாதிங்கறது ஒண்ணுதான், 5. எல்லோருடைய ஆத்மாவும் ஒன்றுதான் என நான் கூறுகிறேன் என உணர்ச்சி பாவத்துடன் கூறுகிறார்.

“வைதீக பிராமணனின் லட்சியங்களா அவை” என நண்பர் கேட்க, சோ அவர்களோ, “இக்குணங்கள் எல்லாம் ஞானிகளுக்கு வித்திக்கப்பட்டவை. வேம்பு சாஸ்திரிகள் மெத்தப் படித்தவர். ஆகவே இம்மாதிரி குணங்களுக்காக விழைகிறார்” என்று விளக்குகிறார். பிறகு இக்குணங்களை மேலும் உதாரணங்களால் விளக்கிவிட்டு, ஆதிசங்கரருக்கு காசியில் சிவபெருமானே புலையன் வேடத்தில் வந்து இந்த உபதேசத்தை செய்ததாகக் கூறுகிறார். எபிசோடின் கடைசி ஆறு நிமிடங்களுக்கு சோ தரும் இந்த விளக்கங்களை வீடியோவிலிருந்து நேரே கேட்டு கொள்வதே உத்தமம். நான் என்ன எழுதினாலும் முழுமையானதாக இருக்காது.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Unknown said...

/* அவர் அந்தண்டை போனதும் தாயும் மகளும் கைகுலுக்கி கொள்கின்றனர். ஒரு பெண்ணே தான் நினைத்தால் ஒரு ஆணை முட்டாளாக்க முடியும் என இருக்க, இரண்டு பெண்கள் சேர்ந்தால், நீலகண்டன் போன்றோருக்கு சான்ஸே இல்லை என்றுதான் தோன்றுகிறது */

எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது - நாஸ்திகம் என்றும் பகுத்தறிவு என்றும் சொல்லிக் கொள்ளும் மக்கள் செய்யும் செயல்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைகிறதே தவிர பகுத்து அறியும் செயலாக இருப்பதில்லை.

Anonymous said...

கதை ரொம்ப நல்ல இருக்கு. இவ்வளவு பெரிய தலப்பை எப்படி திரைப்படத்துக்கு வைத்தார்கள். எங்கள் ஊருக்கு புது படம் எல்லாம் லேட்டா தான் வரும். வந்ததும் பார்கிறேன்.

நட்டு நலங்கிள்ளி.

மணிஜி said...

வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ..அது போல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம் என்று தெரிந்து கொண்டேன்..இருந்தாலும் சும்மா இருக்க வில்லை..ஒரு சுற்று போய் வந்தேன்..நான் பார்த்த வரை "அதிர்ஷடபார்வை"சூரியனுக்கு கம்மிதான்..தென் சென்னை தொகுதியில் இருக்கும் சொந்தங்களுக்கு (100 நபர்கள்)பேசினேன்...இல...இல்லை..இலைக்கே..பம்மல்,,பல்லாவாரம் பிரியாணி கடைகள் மிக பிஸி..ஆனால் ஒன்று..வெட்டுபவன் அய்யாவாக இருந்தாலும் அவை "அம்மா" என்றே கத்தியது.மதுரையில் சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் அழகிரியும்.
தஞ்சையில் சுமார் 25000 வாக்கு வித்தியாசத்தில் பழனியும் ஜெயிக்க கூடும்..துரை,பாலகிருஷ்ணன்..மோகன் ஜெயித்தாலும் அதே வித்தியாசம் தான்..நீலகிரி(நண்பர் சொன்னபடி ராசா நிச்சயம் தோற்கிறார்(18000 - 25000)..மதுரை,மத்திய சென்னையில் கேபிள் கட்டணம் 2 வருடம் இலவசமாம்..

மணிகண்டன் said...

**
கடந்த பத்தாம் தேதியன்று டாக்டர்கள் ஷாலினி மற்றும் ருத்திரன் அவர்களுடன் கலந்துரையாடலுக்கு வந்த போது, ஒருவர் என்னை அணுகி நான் “எங்கே பிராமணன்” சீரியலை ஒட்டி எழுதிவரும் பதிவுகள் பற்றி பேசினார்
***

யார் அந்த புண்ணியவான் ?

dondu(#11168674346665545885) said...

அவர் பெயர் சொன்னார், ஆனால் மறந்து விட்டேன். ஒரு வேளை லக்கிக்கு தெரிந்திருக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது