5/28/2009

எங்கே பிராமணன் - பகுதி - 81

பகுதி - 81 (27.05.2009):
தாழ்ந்த சாதி என கருதப்பட்ட ஒருவன் மரணமடைய அந்திம சடங்கு செய்ய யாரும் கிடைக்காத நிலையில் ஒரு வைணவர் துணிந்து முன் வந்து அவனுக்கான அந்திமச் சடங்குகளை செய்ததை சாரி எடுத்துரைக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு சாதி முக்கியமாக படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“யார் சார் இந்த திருமலை நல்லான் சக்கரவர்த்தி? ஒண்ணும் புரியல்லியே” என சோவின் நண்பர் கேட்கிறார். சோ பதிலளிக்கிறார். “இதிலே புரிஞ்சுக்க என்ன இருக்கு? சாதி வேறுபாடு கூடாது என்பதுதான் உயர்ந்த நிலை. ஆளவந்தார் ஸ்வாமிகளின் சீடர்கள் இருவர், ஒருவர் மாறநேரி நம்பி என்பவர், தாழ்ந்த சாதி என வரையறுக்கப்பட்டவர். இன்னொருவர் பெரிய நம்பி, உயர்ந்த சாதி என கூறப்படுபவர். முன்னவர் இறக்க பெரிய நம்பி அவருக்கான அந்திமச் சடங்குகளை செய்து அதனால் சக சாதியினரால் சாதி விலக்கு செய்யப்படுகிறார். அவர் விட்டை சுற்றி முட்புதர்கள் போடப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவில் உற்சவத்தில் அன்று தேரோட்டம். இவர் வீட்டை தாண்டி செல்ல வேண்டிய தேரை அவரது புதல்வி ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என பெயர் வந்ததற்கு காரணமாக அமைந்த அத்துழாய் அம்மை தேரின் முன்னால் நமஸ்காரம் செய்து “திரு நின் ஆணை! நின் ஆணை கண்டாய்”! என ஆணையிட்டு தேரை நிறுத்தி, தனது தந்தை செய்த குற்றம் என்ன என்பது பற்றி சரியான பதில் வரும்வரையில் தேர் மேலே செல்லாது, எனக் கூறி, திருப்பாணாழ்வார் வரலாற்றையும் மேற்கோள் காட்ட, தேரும் மேலே செல்லவியலாது நிற்கிறது. பிறகு பெரிய பட்டர் வந்து பெரிய நம்பிக்கான ஊர்விலக்கை நிறுத்திவைத்த பிறகே தேர் நகருகிறது. இதை கூறிய சோ அவர்கள் அதே சமயம் எப்போதுமே ஆசாரங்களை மாற்றிக் கொண்டு வந்தால் கடைசியில் மிச்சம் ஒன்றுமிராது என நடேச முதலியார் சொன்னதையும் ஆமோதிக்கிறார். இதற்கு உதாரணமாக காஞ்சி பெரியவர் ஒரு குறிப்பிட்ட தவச மந்திரத்தை மாற்றுவதற்கான தனது இயலாமை மற்றும் எதிர்ப்பை தெரிவித்தது பற்றிக் கூறுகிறார். எல்லோரும் சமம் என எல்லோராலும் இருக்கவியலாது என்றும் அதே சமயம் அதுதான் ஆதர்ச நிலை என்பதில் ஐயமில்லை என்றும் சோ கூறுகிறார்.

சாரி, நடேச முதலியாரின் பேச்சு தொடர்கிறது. அந்த நல்லான் சக்கரவர்த்தியின் பரம்பரையை சேர்ந்தவரே ராஜாஜி எனவும் அவர் கூறுகிறார். தன்னுடன் 25 ஆண்டுகளாக பாவிக்கும் நட்பு ஒரு புறமிருக்க, நடேச முதலியார் தனது சொந்தத் தம்பியை ஒதுக்கி வைப்பதன் காரணத்தையும் கேட்கிறார். “நீங்கள் சொல்வது எனது நன்மைக்கே என்பதை நான் உணர்ந்துள்ளேன்” எனக் கூறிவிட்டு நடேச முதலியார் விடைபெறுகிறார்.

நாதன் தனது குடும்ப டாக்டரிடம் செக்கப் செய்து கொள்கிறார். ரத்த அழுத்தம் 150/100 என காணப்படுகிறது. 150 ஓக்கே, ஆனால் 100 என்பது கவலை அளிக்கும் விஷயம் என டாக்டர் கூறிவிட்டு அவரது மருந்தை மாற்றுகிறார். அசோக் பற்றி தேவைக்கதிகமாக கவலை கொள்ளலாகாது என்றும் கூறுகிறார்.

டாக்டரை பார்க்க சாரியார் வருகிறார். அவரை வரவேற்கும் நர்ஸ் பார்வதி, சோஃபாவில் அமரச் செய்து விட்டு டாக்டரிடம் கூறுகிறாள். டாக்டர் வெளிநாடு போகவிருப்பதால் அவருக்காக சாரியார் கேசவ பெருமாள் கோவில் பிரசாதம் கொண்டு வந்திருக்கிறார். பாவம் செய்தவர்களை கடவுள் ஏன் மன்னிக்கிறார் என டாக்டர் கேட்க, பாவம் செய்தவரைத்தான் மன்னிக்க வேண்டும், பாவம் செய்யாதவர்களை மன்னிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறதே என சாரியார் பதிலளிக்கிறார். பாவமே செய்யாதவர்களை பிறகு ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும் என கேட்க, அது அவரது கர்மபலன் என சாரியார் விடை தந்து அப்படி யாரை கடவுள் தண்டித்து விட்டார் என கேட்கிறார். “உங்களைத்தான் சொல்கிறேன்” என்னும் டாக்டர், சாரியாருக்கு அம்மாதிரி மூளைவளர்ச்சி குறைந்த பிள்ளை பிறந்தது பற்றி வருந்துகிறார். அவனுக்கு ஒரு குறையும் இல்லை, அவன் ஜாதகப்படி அவன் ஓகோ என இருப்பான் என சாரியார் கூற, நர்ஸ் பார்வதி சாரியாருக்கு இருக்கும் சொத்துக்களுக்கு அவர் பையனுக்கு சாப்பாட்டுக்கு குறையிருக்காது என கூறுகிறாள். “அதற்காக சும்மா உட்கார்ந்து சாப்பிடுவது என்பது ஆண்பிள்ளைக்கு அழகில்லை” என குறிப்பிடும் சாரியார் நர்ஸ் பார்வதியின் உதாரணத்தையே எடுத்து பேசுகிறார். அவள் தந்தை நடேச முதலியார் பெரிய காண்ட்ராக்டர், பணத்துக்கு குறைவில்லை, இருப்ப்னும் அவள் நர்ஸ் வேலை செய்யவில்லையா என அவர் கேட்கிறார்.

தனக்கு 15 வயதிலேயே சோஷல் சர்வீஸில் ஆர்வம் வந்ததாகவும், அப்போதிலிருந்தே இந்த வேலையில் இருப்பதாகக் கூறும் அவள் 25 ஆண்டுகள் இதிலேயே அவ்வாண்டு முடிக்கப் போவதையும் குறிப்பிடுகிறாள். கல்யாணத்தில் எல்லாம் இண்டெரஸ்ட் இல்லை என அவள் இருப்பது அவள் தந்தைக்கு பெரும் சோகத்தைத் தருகிறது என குறிப்பிடும் சாரியார் அவளது தங்கை சோபனாவுக்காவது சீக்கிரம் திருமணம் நடக்கட்டும் என தனது எண்ணத்தை கூறுகிறார். அச்சமயம் அங்கு வந்து சேருகிறார் ஹிந்தி பேசும் ஃபினான்சியர். கேரக்டர் பெயரை எங்குமே கூறவில்லை. வரும் எபிசோடுகளில் பார்க்க வேண்டும். அவருக்கு நர்ஸ் பார்வதி மேல் ஒரு அபிப்பிராயம் இருப்பது போல காட்சி செல்கிறது என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கிறேன்.

நாதன் வீட்டில் அசோக் அரக்கப் பரக்க கீழே ஓடி வந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு வேளியே செல்ல யத்தனிக்கிறான். வசுமதி அவனை பிடித்து வைத்து விளக்கம் கேட்க, உமாவுக்கு ஏதோ ஆபத்து என்றும் தான் உடனே அவள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் தனக்கு உள்ளிருந்து ஒரு குரல் கட்டளையிட்டதாகக் கூறுகிறான். வசுமதி அவனிடம் நைச்சியமாகப் பேசி அவனை ரூமுக்குள் தள்ளி கதவை பூட்டுகிறாள். “ஏதோ இன்னர் வாய்ஸாம், ஒரு வெளி சக்தி இயக்குகிறதாம். இப்போது அதெல்லாம் என்ன செய்கிறது என்பதையும் பார்க்கிறேன்” என வசுமதி கறுவுகிறாள்.

சமையற்கார மாமி குப்பையை வெளியே கொட்ட வரும்போது, அசோக் ரோட்டோரமாகச் செல்வதைப் பார்க்கிறாள். உள்ளே வந்து வசுமதியிடம் கூற, அவள் அவனை அசோக்கின் ரூமுக்கு அழைத்து சென்று வெளியிலிருந்து காட்டுகிறாள். உள்ளே அசோக் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருக்கிறான். கோமதி மாமிக்கு தலை சுற்றுகிறது. அப்போ ரோட்டில் பார்த்தது யார் என குழம்புகிறாள்.

நீலகண்டன் வீட்டில் அசோக்கும் உமாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக் உமாவிடம் தான் யாரையுமே மணக்க இருப்பதாக இல்லை என அவளிடம் திட்டவட்டமாகக் கூறுகிறான். அது தனக்கும் தெரியும் என கூறும் உமா, அவன் மனதை எப்படியாவது தன்னால் மாற்றவியலும் என தனது நம்பிக்கையை தெரிவிக்கிறாள். வாழ்நாள் முழுக்க தான் பிரும்மச்சாரியாகவே இருக்கபோவதாக கூறும் அசோக், உமா தன் பிடிவாதத்தை விட வேண்டும் என்றும், தனிப்பட்டவரின் விருப்பத்தை விட தெய்வத்தின் விருப்பம்தான் நிறைவேறும் என கூறுகிறான். உமா அவன் சொல்வதை கவனமாகக் கேட்ட வண்ணம் இருக்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

Anonymous said...

I know you are an Iyengar. Have you ever seen anyone wearing the Thenkalai namam like the one on Delhi Ganesh's forehead. The thiruman is drawn as a single line. Genrally the thirumnan's base " mookku" is solid.

The serial is meticulously planned, written and shot and edited. That is why I am surprised at this slip.
-- Dilli Palli

dondu(#11168674346665545885) said...

@Dilli Palli
நீங்கள் சொன்னதை என் வீட்டம்மா டில்லி கணேஷ் டைட்டில்ஸ் பாடல்களில் தோன்ற ஆரம்பித்த முதலிலேயே கூறிவிட்டார். நீங்கள் சொல்வது உண்மைதான்.

இருப்பினும் அந்த பாத்திரம் கூறும் கனமான விஷயங்களை கவனமாகக் கேட்டு ஜீரணிக்க முயலும்போது இவையெல்லாம் எனக்கு பெரிய குறைகளாகப் படவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஓரு சந்தேகம். கேள்வி பதில் பகுதியில் உங்கள் கருத்தை கொடுத்தால் நலம்.
எங்கே பிராமணன் தொடரில் உமாவாக வரும் பெண்மணி இன்னும் திருமணம் ஆகாதவர் என்று தோன்றுகி்றது. தன் காதலுக்காக அவர் பெற்றோரிடம் பேசும் வாதங்கள் நன்றாகத் தான் உள்ளன.,

பின்னால் அவர் சொந்த வாழ்க்கையிலும் இப்படி பேசும் சந்தர்ப்பம் வரக்கூடும்.அப்போது அவருடைய பெற்றோர் ஏண்டா பணத்துக்காக ஆசைப்பட்டு நம் பெண்ணை நடிக்க அனுப்பினோம் என்று நொந்து கொள்ள மாட்டார்களா?

திருமணம் ஆன ஒரு பெண்ணை இந்த கேரக்டரில் நடிக்க வைத்திருந்தால் இது மாதிரி பிரச்னை வர வாய்ப்பில்லையே?

-டில்லி பல்லி

Anonymous said...

ஸ்வாமி, உங்கள் பதிலைப் பார்த்தேன். உங்கள் பையன் வாயில் சிகரெட்டுடன் வந்து ”அப்பா, நான் தான் காலேஜில் முதல் ரேங்க்” என்று சொன்னால், முதலில் பாராட்டுவீர்களா அல்லது “என்னடடா இது வாயில் சிகரெட்?’ என்று கேட்பீர்களா?முதல் ரேங்க்கிற்கு முன் இது பெரிய குறையாகப் படாதா?.

-டில்லி பல்லி

mokrish said...

எங்கே பிராமணன் தொடரில் வரும் சாரி, அவர் மகன் பாச்சா, டாக்டர், நர்ஸ் மற்றும் அந்த தமிழ் சரியாக வராத பினன்சியர் கதாபத்திரங்கள் எல்லாம் சோவின் 'சாத்திரம் சொன்னதில்லை' நாடகத்தில் இருந்து எடுத்த இடைசெருகல்களே.
I think he will have a strong reason for doing this.

dondu(#11168674346665545885) said...

//எங்கே பிராமணன் தொடரில் உமாவாக வரும் பெண்மணி இன்னும் திருமணம் ஆகாதவர் என்று தோன்றுகி்றது. தன் காதலுக்காக அவர் பெற்றோரிடம் பேசும் வாதங்கள் நன்றாகத் தான் உள்ளன.//
அவர் திறமையான நடிகை. நீங்கள் சொல்வது போல நடந்தாலும் அதற்க்ககவேல்லாம் அவரது பெற்றோர்கள் இப்படியெல்லாம் பேசுவார்கள் என நினைக்கவில்லை.

கோலங்களில் வில்லியாகக் கூட வந்தார். நடிப்பு வேறு வாழ்க்கை வேறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது